கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 8,637 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

தேவதேவி அக்கினிக்கு மத்தியில் கரம் குவித்துக் கொண்டு நின்றபொழுது மூன்று ஆள் உயரத்துக்கு குபீரென்று கிளம்பிய நீல நிற ஜுவாலைக்கு மத்தியில் அவளுடைய சௌந்தர்யம் கோடி சூரியப் பிரகாசத்துடன் பொலிவுற்று விளங்குவதைப் போல ஜோதிவர்மனுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியது. இந்தக் காட்சியை இவர்களும் உக்கிரசேனர் முனிசாமி ஆகியவர்களும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றார்கள். தேவியின் நிலைமை என்ன ஆகுமோ என்ற கவலை அந்நால்வர் மனதிலும் குடிகொண்டிருந்ததை திகில் நிறைந்த அவர்களுடைய தோற்றம் எடுத்துக்காட்டுவதாயிருந்தது. 

அக்கினியில் நின்ற தேவியோ சிறிது கூட அசையவில்லை. ஸ்வர்ணச் சிலையைப்போல அவள் பன் மடங்கு அதிக சோபையுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு அங்கத்தையும் அக்கினி ஜுவாலை தழுவிக்கொண்டும் அவளைப் பரிபூரணமாகச் சுற்றி வளைத்துக் கொண்டும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஜுவாலை தணிந்து வெடிப்பினுள் சென்றபொழுது தேவதேவி சிறிதும் காயமின்றி மறுமுறை ஜீவஜோதியின் வருகைக்காக மந்தகாசத்துடன் அதே இடத்தில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். இப்பொழுதுதான் எல்லா நெருப்புகளையும் போல இந்த நெருப்புச் சுட்டுப் பொசுக்கமாட்டா தென்பதை ஜோதிவர்மனும் மற்றவர்களும் சந்தேகமின்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அதிசயக்காட்சி, ஒரு சில வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அதிபயங்கரமானதும் ஆச்சரியமானதுமான காட்சி ஜோதிவர்மனையும் அவனுடனிருந்த மற்றவர்களையும் கிட்டத்தட்ட சுய நினைவையே இழக்கச் செய்திருந்ததென்று கூடச் சொல்லலாம். 

ஒளிமயமாக நின்ற தேவதேவியின் மீது ஜீவஜோதி இரண்டாவது முறையாக குபீரென்று கிளம்பி வந்து அவளைச் சூழ்ந்துகொண்டது. அப்பொழுதும் தேவியின் முகம் வாட்டமின்றி மந்தகாசத்துடனிருந்தது. அவளுடைய வாய் மாத்திரம் புருஷஸுக்தத்தைக் கிணீரென்று ஒலித்துக்கொண்டிருந்ததே தவிர மற்ற அவயவங்கள் சிலை போலச் சிறிதும் அசைவின்றி அமைதியாயிருந்தன. மூன்றாவது தடவையாக அக்கினி ஜுவாலை எழுந்தபொழுது ஒரு அதிபயங்கரமான கூக்குரல் ஜுவாலையின் மத்தியிலிருந்து கேட்டது. இடியோசையை விடப் பலமாகக் கேட்ட அந்தக்கூக்குரல் ஒரு கணம் எதிரில் நின்றவர்களின் ரத்தத்தைச் சில்லிட்டு உறைந்து போகச் செய்து விட்டது. என்ன நடந்துவிட்டதென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளுவதற்குள் மூன்றாவது முறையாகக் கிளம்பிய அக்கினி ஜுவாலை கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பின் கீழே போய் விட்டது. தேவதேவி சில வினாடிகளுக்கு முன்பு வரை நின்று கொண்டிருந்த இடம் சூன்யமாகக் கிடந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் ஜோதிவர்மனுக்கும் மற்றவர்களுக்கும் பகீரென்றது. ‘ஐயோ தேவி!’ என்று அலறிய வண்ணம் ஜோதிவர்மன் சுற்றுமுற்றிலும் பார்த்தான். அவனைப் போலவே மற்றவர்களும் திடீரென்று மறைந்த தேவியை பரபரப்புடன் நாற்றிசையிலும் தேடவாரம்பித்தார்கள். 

இதற்குள் வெடிப்பின் அருகில் போய்ப்பார்த்த பாலாஜி “தேவி நிச்சயம் வெடிப்பிற்குள் விழுந்திருக்க முடியாது. மூன்று நான்கு அங்குல அகலம்கூட இல்லாத வெடிப்பில் தேவி எப்படி விழுந்திருக்க முடியும்?” என்று ஒன்றும் புரியாமல் சொன்னார். 

“இல்லை! தேவி பொசுங்கிச் சாம்பலாகிப் பூமிக்குள் மறைந்துவிட்டாள். ஆயிரமாயிரமாண்டுகளாக எனக்காகக் காத்திருந்த உத்தமி, என்னைத் திருப்திசெய்து என் பயத்தைப் போக்குவதற்காக தன்னையே அக்கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டுவிட்டாள். தேவி! ஐயோ தேவி! நீ எங்கே போய்விட்டாய்? ஏன் திடீரென்று இப்படி அந்தர்த் யாமியாகி விட்டாய்! நம்பியவர்களை யெல்லாம் நாசமடையச் செய்யும் மகாபாவியான நான் ஏன் இந்நாட்டுக்கு வந்தேன்? என்னோடு வந்த வில்லியம் இறந்தான்! என்னிடம் வாஞ்சை காட்டிய சித்ரா மரித்தாள்! எனக்காக கடுந்தவம் புரிந்த நீயும் இப்பொழுது என் பொருட்டு மகத்தான உயிர்த்தியாகம் செய்துவிட்டாய்! தேவி! ஐயோ தேவி!'” என்று வெறி பிடித்தவனைப் போல ஜோதிவர்மன் வாய் விட்டுப் புலம்பலானான். 

அந்த நிலைமையில் அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று புரியாமல் பாலாஜியும் உக்கிரசேனரும் தவித்துக் கொண்டிருந்தார்கள். 

தேவியின் தன்னலமற்ற தியாகச் சிந்தையையும், காதல் வைராக்கியத்தையும் அமரத்துவமளிக்க ஆசையோடு தன்னை அங்கு அழைத்து வந்ததையும் ஜோதிவர்மன் சொல்லிச் சொல்லி அலறினான். அந்த அலறலின் நடுவே “அழாதீர்கள் பிரபு!” என்று தேவதேவி சொல்லும் வார்த்தைகள் அவர்களுக்குக் கிணீரென்று கேட்டன. 

தேவியின் குரலைக் கேட்டதும் ஜோதிவர்மன் சட் டென்று அழுகையை நிறுத்தி, ”தேவி! தேவி! அழாதே யென்று நீயா சொன்னாய்? நிஜமாக நீயா பேசினாய்? நான் கனவு காண்கிறேனா? பிரமையில் நீ பேசுவதைப் போலக் கேட்கிறதா? சொல்லு தேவி!” என்று பரபரப்போடு நாற்றிசையும் சுற்றிப்பார்த்துக் கொண்டு கேட்டான். 

“நான்தான் பேசுகிறேன் பிரபு! என்னை நினைத்து நீங்கள் அழுவதில் இனிப் பயனில்லை! தயவு செய்து இந்த இடத்தைவிட்டு உடனே போய் விடுங்கள். திரும்பிப் பார்க்காமல் போய் விடுங்கள். ஏனென்று மட்டும் கேட்காதீர்கள். போய் விடுங்கள் பிரபு!” இவ்வாறு சொன்னாள் தேவி. இப்படிப் பேசியது தேவதேவி தானென்பதில் ஜோதிவர்மனுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சந்தேகமில்லை. வழக்கமான கம்பீரமும், இனிமையும் இல்லாமல் சோகத்துடன் துக்கமும், துயரமும் தொனித்த அந்தக் குரல் தேவியின் குரலேதான். 

ஆனால், தேவி எங்கிருக்கிறாள்? எங்கேயிருந்து பேசுகிறாள்? பூதவுடலைவிட்டுக் காற்றில் கலந்துவிட்டாளா? அகக் கண்களுக்குப் புலப்படாமல் அந்தர்தயாமியாக இருந்து கொண்டு அசரீரியைப்போலப் பேசுகிறாளா? தேவி எங்கிருந்து பேசுகிறாள்? 

அவள் இருக்குமிடம் தெரியாமல் பரிதவித்த ஜோதிவர்மன், “நீ எங்கிருந்து பேசுகிறாய் தேவி? ஏன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கொண்டு பேசுகிறாய்? நான் உன் ஜோதியில்லையா? உன் காவியக் காதலன் விஜயகேசரி யில்லையா? என்னையா உன்னை விட்டு விட்டு ஓடச் சொல்கிறாய்? மாட்டேன்! மாட்டேன்! என்னைக் கொன்றாலும் இந்த இடத்தில் தன்னந் தனிமையாக உருவமற்ற அருவமாயிருக்கும் உன்னை விட்டுப் போகமாட்டேன். எனக்காக இருபத்தைந்து நூற்றாண்டுகள் வரையில் நீ காத்திருந்தாய். உனக்காக என் உயிருள்ள வரையில் இதே இடத்தில் பட்டினி விரதமிருந்து படிப்படியாக உடலையும் உயிரையும் ஒடுக்கி உன்னை வந்தடைவேன்!” என்று புலம்பினான் ஜோதிவர்மன். அவன் சொல்வதைக் கேட்டு எதற்கும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதறியாத தேவதேவி 2500 ஆண்டுகளுக்கு முன்னால் முன்கோபத்தில் விஜயகேசரியைக் குத்திக் கொன்றுவிட்டு எவ்விதம் பிறகு கதறியழுதாளோ அதேபோல மண்ணிலும் விண்ணிலும் எதிரொலித்துக் கேட்கும்படி குமுறியழுதாள். 

அழுகுரலைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த முனிசாமி திடீரென்று முன்னால் போய், “தேவதேவி அதோ அங்கிருக்கிறாள் எஜமான்!” என்றான். அவன் சுட்டிக் காட்டிய திசையில் பாய்ந்து ஓடினான் ஜோதிவர்மன். 

ஜோதிவர்மன் ஓடிவரும் சப்தம் தேவதேவிக்குக் கேட்டிருக்கவேண்டும். “வராதீர்கள்! என் அருகில் வராதீர்கள்! அப்படியே நில்லுங்கள்!” என்று அவள் அலறினாள். அவள் தொனியில் ஒரு பரபரப்பும் நடுக்கமும் தென்பட்டன. 

சட்டென்று நின்ற ஜோதிவர்மன், “நான் ஏன் உன் அருகில் வரக்கூடாது? ஏன் உன்னைப் பார்க்கக் கூடாது? காரணம் சொல்லு தேவி! நீ எங்கேயிருந்து பேசுகிறாய் என்பது கூட எனக்குத் தெரியவில்லையே!” என்றான். 

தேவதேவி விக்கி விக்கி அழுதுகொண்டே, “நான் இப்பொழுதிருக்கும் நிலைமையில் என்னைப் பார்ப்பதை விடப் பாராமலிருப்பதே நல்லது பிரபு! என் அழகும் யௌவனமும் கம்பீரமும் அழிந்துவிட்டன. என் அந்தஸ்தும் அதிகாரமும் அஸ்தமித்துவிட்டன. என் வாழ்வே அதி விரைவாக ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகத்திலுள்ள மிக மிகக் கோரமான உருவங்களை விடப் பன் மடங்கு கோரமான அருவருக்கத் தகுந்த உருவத்தை நான் அடைந்திருக்கிறேன். அழகின் சிகரமாக என்னைப் பார்த்து ரசித்த என் பிரபு இப்பொழுது அவமானத்தின் சின்னமாக நான் இருப்பதைப் பார்க்கவே கூடாது. இப்பொழுதே இவ்விடத்தை விட்டுப் போய்விட்டால் கம்பீரமான என் சௌந்தர்யம் எப்பொழுதும் உங்கள் நெஞ்சத்தை விட்டு அகலாமலிருக்கும். அதில் என் ஆத்மா சாந்தியையும் சந்தோஷத்தையும் காணும். இப்போ திருக்கும் அருவருக்கத் தகுந்த என் தோற்றத்தைக் கண்டு அதற்கு உங்கள் மனதில் இடம் கொடுத்து விடாதீர்கள் பிரபு! சாவிலும் எனக்குச் சாந்தியில்லாமல் செய்து விடாதீர்கள்! தயவு செய்து உடனே போய் விட மாட்டீர்களா?” என்று கெஞ்சி மன்றாடினாள். 

”போகவா? உன்னை இங்கு இந்த நிலைமையில் தனித்து விட்டுப்போகவா? ஒருக்காலும் இல்லை. ஒருக்காலும் உன்னை விட்டுப் போகமாட்டேன். நீ எந்த உருவத்தில் எவ்வளவு கோரமாக இருந்தாலும் உன் பதி பக்தியையும் வைராக்கி யத்தையும் எண்ணி என்றென்றும் உன்னை என் இதயத்தில் வைத்துப் பூஜிப்பேன். அழகும் இளமையும் அநித்திய மானவை. அழியாத அன்பு உன்னிடமிருக்கிறது. அந்த அன்புக்கு உரியவளை ஒரு போதும் நான் விட்டுப்போகச் சம்மதிக்க மாட்டேன்!” என்று சொல்லிய வண்ணம் தேவியின் குரல் பிறந்த இடத்தையடைந்தான் ஜோதிவர்மன். 

அருகில் சென்றதும் தேவியின் அழுகுரல் தரையில் தனது காலடியிலிருந்து வருவது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. காலடியில் தேவி அணிந்திருந்த பட்டாடைகளும் முகத்திரையும் குவியலாகத் தரையில் கிடந்தன. அவைகளுக்கு உள்ளேயிருந்துதான் சப்தம் பிறக்கிறதென்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட ஜோதிவர்மன் அந்த கையிலெடுத்தான். அவற்றின் ஆடைகளை மெதுவாகக் கீழே தரையில் ஐந்தாறு அங்குல உயரத்துக்கு திருப்பதி மரப்பாச்சி பொம்மையைப் போல ஒரு உருவம் தென்பட்டது. கன்னங்கரேலென்று கறுத்து கையிலடங்கும் அளவிற்கு இருந்த அந்த உருவத்தினிடமிருந்துதான் தேவியின் குரல் வந்தது. 

அந்த உருவத்தை ஜோதிவர்மன் தன்னிரு கைகளாலும் எடுத்துப் பார்த்தபொழுது அதில் தேவதேவியின் சாயலை காண முடிந்தது. அவன் தெளிவாகக் “தேவி! நீயா இதுவா நீ? என் தேவதேவியா நீ?” என்றான் ஜோதிவர்மன். 

“ஆமாம் பிரபு! உங்கள் தேவதேவியேதான் இப்பொழுது கறுப்புக் கட்டையாக, சித்திரக்குள்ளர்களை விடச் சிறிய கரிப் பொம்மையைப் போல உங்கள் கையிலிருப்பது. இந்த அசங்கிலித் தோற்றத்தைப் பார்க்க வேண்டாமென்று எவ்வளவோ மன்றாடினேன். என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. என் அந்தஸ்தும் அகங்காரமும் அழகும் அமரத்துவமும் அழிந்து ஒழிந்து உலகத்தில் மிக மிக அருவருப்பான உருவத்துடன் நான் இருப்பதைப் பிடிவாதமாகப் பார்க்க ஆசைப்பட்டு விட்டீர்கள் போகட்டும். இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் நிலைக்கப் போகிறேன். இதோ மரண தேவனே என்னை அழைத்துப் போக வந்து விட்டான். வைராக்கியமும் மனதின் உறுதியும்தான் கடைசி நேரத்தில் கூட எனக்குச் சுயநினைவையும் பேசும் சக்தியையும் அளித்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக இதயத்தில் கொலு ஏற்றிப் பூஜித்து வந்த என் ஸ்வாமியிடம் நான் கடைசியாக விடைபெற்றுக்கொள்ள இறைவன் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தையளித்தார். அவர் கருணையே கருணை! இன்னும் சொற்ப நேரம்தான் பாக்கியிருக்கிறது. அதற்குள் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லி முடித்து விடுகிறேன், கேளுங்கள். உங்களுக்காகவே இவ்வளவு காலமும் நான் உயிரைச் சுமந்து கொண்டிருந்தேன். அமரத்துவம் அடைந்திருந்தும் ரசனையின்றி சப்பென்று போன வாழ்க்கையில் உங்களுக்காகக் கடும் விரதம் அனுஷ்டித்து காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தேன். இப்பொழுது கடைசியாக உங்களுக்குத் தைரியமும் நம்பிக்கையும் ஊட்டி உங்களையும் அமரனாக்க வேண்டுமென்ற ஒரு ஆசையுடன் தான் ஜீவஜோதியில் மூழ்கி இந்த அவலநிலைமையை அடைந்தேன்! 

இத்துடன் நம் உறவு அற்றுப்போய்விட்டதாக எண்ணாதீர்கள். எவ்விதம் பல நூறு ஜென்மங்கள் எடுத்தும் கடைசியாக நீங்கள் என்னை வந்தடைந்தீர்களோ அதே போல அடுத்தடுத்துப் பல ஜன்மங்கள் எடுத்தாலும் எப்படியும் ஏதாவது ஒரு காலத்தில் உங்களை நிச்சயம் பதியாகப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். உங்களிடம் நான் வைத்திருந்த அன்பும் பக்தியும் பரிசுத்தமானதா யிருக்கும் பட்சத்தில் இறைவன் இந்த வரத்தை எனக்கு ஒரு போதும் மறுக்க மாட்டார். இப்பொழுது நான் போய் வருகிறேன். ஆனால், விரைவில் உங்களிடம் திரும்பி வருவே னென்று உறுதி கூறிவிட்டுப் போகிறேன் பிரபு! ஜீவஜோதியில் தயவு செய்து நீங்கள் ஸ்நானம் செய்யாதீர்கள். அதன் தன்மை காலப்போக்கில் மாறினாலும் மாறியிருக்கலாம். அல்லது ஒரு முறை ஸ்நானம் செய்தவர் மறுமுறை ஸ்நானம் செய்தால் நான் அடைந்த அவல நிலைமையை அடைவதாகவுமிருக்கும். என் சரீரத்தைப் பாருங்கள்! 2500 ஆண்டுகள் வரை ஒரு மனிதப் பிறவி ஜீவித்திருக்க முடியுமானால் அதனிடம் எவ்வளவு சுருக்கமும் தொய்வும் முதுமையும் ஏற்படுமோ அவை ஒரு கணத்தில் என்னிடம் ஏற்பட்டுவிட்டன. என் ஆடைகள் அவிழ்ந்து விழுந்து அவற்றினிடையில் நான் புதைந்து போய் விட்ட பரிதாபத்தைப் பாருங்கள். இயற்கையை வென்றுவிட்டதாக நினைப்பவர்களெல்லாம் கடைசியில் அடையும் கதி இதுதான்! இயற்கையை நான் முதலில் வென்றேன். இப்பொழுது எதிர்பாராத விதமாக அதே இயற்கை என்னை வென்று என் செருக்கை அரைக் கணத்தில் சிதறடித்துவிட்டது. இயற்கையின் சக்திக்கு எதிரில் நாம் எம்மாத்திரம்? 

எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள்! நான் கேட்கும் வரத்தைத் தருகிறேனென்று உறுதி கூறுங்கள்!” என்றாள் தேவி. 

“என்ன செய்யவேண்டும்? சொல்லு தேவி! எது வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றான் ஜோதிவர்மன். 

தேவி சொன்னாள்: “இன்னும் சில விநாடிகளுக்குள் நான் சவமாகிவிடுவேன். எனக்கு எந்தப் பூமிமாதா இருபத்தாறு நூற்றாண்டுகள் வரையில் ஜீவித்திருக்கும் பாக்கியத்தை அளித்தாளோ, அவளுடைய மடியிலேயே என் பூதவுடலைச் சேர்த்துவிடவேண்டும். ஜகன் மாதாவின் பாதார விந்தங்களில் போய் இருந்து கொண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தையும் சகல சௌபாக்கியங்களையும் அருளுமாறு அவளிடம் சதா சர்வதா நான் மன்றாடிக் கொண்டிருப்பேன். மீண்டும் ஜீவஜோதி கிளம்பி வரும்பொழுது என் பூதவுடலை அந்த அக்னிதேவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள் பிரபு…… உக்கிரசேனா! இப்படி என் முன்னால் வா! உன் ராணி அடைந்திருக்கும் அலங்கோலத்தைப் பார் அப்பா! பாவம் என் வெற்றிக்காக உன் பெண்ணைப் பறிகொடுத்தாய். பெண் இறந்ததையும் பொருட்படுத்தாமல் என்னிடம் உறுதியான பத்தி செலுத்தினாய். அதற்கு வெகுமதியாக உனக்கு அமரத்துவமளிக்க விரும்பினேன். வரம் அளிக்கும் சர்வ வல்லமை பொருந்திய இறைவனைப் போல என்னை எண்ணிக்கொண்டு உன்னையும் இங்கு இழுத்து வந்தேன். என் செருக்கு இதோ சீரழிந்து நிற்பதைப் பார் உக்கிரசேனா!” என்றாள். 

“தயவுசெய்து இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் கன்னி மாதா! கடல் போன்ற விசாலமான உங்கள் இதயத்தை நான் அறிவேன்” என்றார் உக்கிரசேனர். 

“உன்னைப் போலொத்த ராஜபக்தன் இந்த உலகில் என்றுமே பிறந்ததில்லை உக்கிரசேனா! என் பிரபுவுக்கு அமரத்துவமளித்து அவரோடு பாரத நாட்டுக்குப் போய்விடவும், இந்நாட்டுக்கு உன்னை அரசனாக்கவும் நான் திட்டமிட்டிருந்தேன். இதை மகா மந்திரியிடமும் சொல்லியிருக்கிறேன். அதோ கிடக்கும் என் திரிசூலத்தின் பின் புறத்தி லிருக்கும் கைப்பிடியைத் திறந்து பார் உக்கிரசேனா! அதற்குள் வைத்திருக்கும் சுவடியை எடுத்துக்கொண்டு வா!” என்றாள் தேவி.

தேவி சொல்லியபடியே சூலத்தின் பின்புறத்தில் திருகு போலிருந்த மூடியைக் கழற்றி அதற்குள்ளேயிருந்த சுவடியை உக்கிரசேனர் எடுத்து வந்தார். 

“அந்தச் சுவடியில் உன்னை செம்பவளத்தீவின் மன்னனாக நான் பிரகடனம் செய்திருக்கிறேன். ஒரு சமயம் திடீரென்று இங்கிருந்து பாரத நாட்டுக்கு நாங்கள் புறப்பட்டு விடக் கூடுமென்று எண்ணியே முன் யோசனையுடன் பிரகடனத்தை எழுதி என் முத்திரையையும் வைத்திருக்கிறேன். அதை மகா மந்திரியிடம் கொண்டுபோய்க் கொடு. கீழே கிடக்கும் என் முத்திரை மோதிரத்தை என் பிரபு எனது சின்னமாகத் தாய்நாட்டுக்குக் கொண்டு போகட்டும். என் மணிமுடியையும் திரிசூலத்தையும் என் அதிகாரத்தின் சின்னமாக நீ எடுத்துக் கொண்டு போ! இன்னொன்றையும் கவனமாகக் கேள் உக்கிரசேனா! நான் அழிந்து விட்ட விவரம் எவருக்கும் தெரிய வேண்டாம். என் பிரபுவுடன் நான் பாரத நாட்டுக்குப் போயிருப்பதாக மகாமந்திரியிடம் சொல்லு. உன் ஆட்சியை எவராவது எதிர்த்தால் அவர்களை இந்த நிமிடமும் நான் திரும்ப வந்து ஹதம் செய்து விடுவேனென்று கடுமையாக எச்சரித்ததாகவும் மகாமந்திரியிடம் சொல்லு”. 

இதற்குப் பின் தேவதேவி பாலாஜியிடம் விடைபெற் றுக் கொள்ளுவதற்காக “ஐயா பெரியவரே! உங்கள்…!” என்று பேசிக் கொண்டிருக்கையில் வலிப்பு ஏற்பட்டதைப் போல ஜோதியின் கரத்தில் அவள் நெளிந்து நெளிந்து துடித்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் ஆவி பிரிந்துவிட்டதற்கு அடையாளமாக அவள் செயலற்றுப் போய்விட்டாள். 

தேவி இறந்துவிட்டாளென்பதை ஜோதிவர்மன் உணர்ந்தவுடன் பிரேதத்தை மெதுவாகக் கீழே வைத்து விட்டு வாய்விட்டு அலறினான். துடித்தான். வானத்தில் எதிரொலிக்கும்படி கூக்குரலிட்டான். பாலாஜியும், உக்கிரசேனரும், முனிசாமியும் எவ்வளவு சமாதானப்படுத்தியும் கூட அவன் சுயநினைவை இழந்து கதறினான். 

“தேவி! உன்னை விட்டு என்னால் இனி வாழ முடியாது. எனக்காகவே நீ இவ்வளவு காலம் வாழ்ந்தாய். கடைசியில் எனக்காகவே என் முன்னிலையில் பிராணத் தியாகம் செய்தாய். உன் முடிவைப் பார்த்த பிறகு கூட என் இதயம் இன்னும் வெடிக்காமலிருக்கிறது. ரத்தக் குழாய்கள் உடைந்து நான் இன்னும் சாகாமலிருக்கிறேன். நீ போன பிறகு இவ்வுலகம் எனக்குச் சூன்யமாகிவிட்டது. இதோ நானும் உன்னோடு வருகிறேன். இந்த மண்ணுலகில் வேண்டுமானால் விதி நமக்குச் சதி செய்யலாம். விண்ணுலகிலே எவரும் நம்மைப் பிரிக்க முடியாது. இதோ ஜீவஜோதியில் உன்னைப் போல நானும் இருமுறை தீக்குளித்து உன்னைப் பின்பற்றி விண்ணுலகுக்கு ஓடிவருகிறேன். தேவி, முதலில் நீ போகிறாய். பிறகு நான் வருகிறேன். நம் இருவருக்கும் அவ்வளவு தான் வித்தியாசம். சரித்திரமறியாத தெய்வீகக் காதலியை, தியாகத்தின் சிகரத்தைத் துடித்துச் சாகவிட்டு உயிருடனிருக்கும் உன்மத்தனென்ற பெயர் எனக்கு வேண்டாம். நான் அவ்வளவு பண்பு கெட்டவனில்லை தேவி! உன் பின்னால் இதோ வந்துவிட்டேன்!” 

இவ்விதம் புலம்பிய வண்ணம் ஜோதிவர்மன் தேவதேவியின் பூதவுடலை எடுத்துக் கொண்டு உயரக் கிளம்பியிருந்த ஜீவஜோதியை நோக்கி அம்புபோலப் பாய்ந்து ஓடினான். 

தேவியின் சடலத்தை அக்கினியில் அர்ப்பணித்துவிட்டு அதைத் தொடர்ந்து தானும் தீக்குளிக்க ஜோதிவர்மன் முயற்சிக்கையில் அவனைபாலாஜியும் உக்கிரசேனரும் கட்டிப் பிடித்துப் பலாத்காரமாக இழுத்து வரவும் அவர்களிடம் இருந்து திமிறிக் கொண்டு தீயில் போய் விழ அவன் துவண்டு துவண்டு துடித்தான். 

தளபதி உக்கிரசேனரும் பாலாஜியும் முனிசாமியும் சேர்ந்து ஜோதியை ஒருவாறு கட்டுப்படுத்திக் கீழே உட்கார வைத்தார்கள். 

”ஜோதி! என்ன முட்டாள்தனமான காரியம் செய்யப் பார்க்கிறாய்? தேவி உன்னிடம் என்ன சொல்லிவிட்டுப் போனாளென்பதை மறந்து விட்டாயா? எப்படியும் அதிவிரைவில் மறுபடி உன்னிடம் வந்து சேருவேனென்று தேவி உறுதி கூறவில்லையா? அவள் எப்படித் தெய்வீகமான சக்தியுடன் இவ்வளவு காலம் ஜீவித்தாளோ அதே தெய்வீக சக்தியின் உதவியினால் அவள் திரும்பி வரும் பட்சத்தில் நீ தற்கொலை செய்து கொண்டு விட்டதைக் கேட்டு எவ்வளவு துன்பப்படுவாள். இதுதான் போகட்டும். தேவி இறந்துவிட்டாலும் அவள் ஆன்மா செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். உன் சுகத்துக்காகப் பரலோகத்திலும் ஜகன் மாதாவிடம் இடைவிடாமல் மன்றாடுவேன் என்று சொல்லி விட்டுப்போன தேவிக்கு நீ தற்கொலை செய்து கொள்ளுவது சாவிலும் நிம்மதியைக் கொடுக்குமென்று நினைக்கிறாயா? பரலோகத்திலும் அவள் ஆன்மா சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டால் உன் இஷ்டம்போல் செய். அல்லும் பகலும் உன்னை நினைத்து உனக்காகவே உயிர் விட்ட ஒரு உத்தமிக்கு நீ செய்யும் கைம்மாறு இதுதான் போலிருக்கிறது. சித்தரின் வாக்குப் பொய்க்காமல் தேவியிடம் நீ வந்து சேர்ந்ததைப் போல் தேவியின் வாக்கும் பொய்க்காமல் ஒரு சமயம் உன்னுடைய இந்த ஜன்மத்திலேயே அவள் உன்னை வந்து அடைந்தாலும் அடையலாம். அவள் வரும்பொழுது நீ தற்கொலை செய்து கொண்டு பிசாசாக அலைவதைத் தான் அவள் காண வேண்டுமென்று விரும்புகிறாயா? நன்றாக யோசித்துப் பார் ஜோதி. உன்னிடம் அவள் வைத்திருந்த வாஞ்சையில் ஆயிரத்தில் ஒரு மடங்கு வாஞ்சையாவது அவளிடத்தில் உனக்கு இருக்குமானால் அவளுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்று. அவள் சொல்லியபடி நாம் பேசாமல் பாரத நாட்டுக்குத் திரும்புவோம். நம் ஆயுள் இருக்கும் வரையில் அவள் திரும்பி வருவாளென்ற நம்பிக்கை யோடு காத்திருப்போம். அவள் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் மனம் கசிந்து பிரார்த்தித்து முறையிடுவோம். இதுதான் தேவதேவிக்கு நாம் நன்றி செலுத்த நேரான வழி! இந்த நேரான வழியை விட்டு விபரீதமான குறுக்கு வழியில் போய் தேவியின் ஆன்மாவுக்கு நிம்மதி யில்லாமல் செய்துவிடாதே”. 

இவ்வாறு பாலாஜி உணர்ச்சி வேகத்துடனும் ஜோதியின் மனதில் ஆழமாகப் பதியும் படியும் சொல்லிய பிறகு தான் அவன் கொஞ்சம் சாந்தமடைந்தான். 

“இருட்டும் நேரமாகிவிட்டது. இருட்டுக்கு முன் நாம் மலைச்சிகரத்திலிருந்து கீழே இறங்காவிட்டால் இரவு குளிரில் நாம் விறைத்துப் போய்விடுவோம்!” என்று எச்சரித்தார் உக்கிரசேனர். 

“ஆம்! நாம் உடனே கீழிறங்கிவிட வேண்டியது தான்!” என்று சொல்லிய பாலாஜி ஜோதியைப் பிடித்துத் தூக்கி நிறுத்திக் கொண்டு எழுந்தான். அவர்கள் வெடிப்பின் அருகில் போய் பார்த்த பொழுது தேவதேவியின் சாம்பல் கூட அங்கில்லை அவளுடைய அஸ்தி காற்றிலே அஷ்டதிக்குகளிலும் பறந்து போய் விட்டது. அம்மூவரிலும் அதி பலசாலியான உக்கிரசேனர் தரையில் கிடந்த திரிசூலத்தையும் முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டார். தேவியின் மணி முடியையும் ஆடைகளையும் ஜோதிவர்மன் எடுத்துக் கொள்ள அவர்கள் மலையிலிருந்து மெதுவாகக் கீழே இறங்க ஆரம்பித்தார்கள். தேவியைத் திடீரென்று இழந்த துக்கத்தில் ஜோதிவர்மன் எவருடனும் பேசாமல் மௌனமாக இறங்கினான். அவர்கள் மலையடிவாரத்தில் குதிரைகளைக் கட்டியிருந்த இடத்தை அடைந்ததும் “நீங்கள் அமரகிரிக்கு வருவது அவ்வளவு நல்லதென்று எனக்குத் தோன்றவில்லை!” என்றார் உக்கிரசேனர். 

“ஏன்?” என்று பாலாஜி கேட்டபொழுது “என்னை இந்நாட்டின் மன்னனாகக் கன்னிமாதா பிரகடனப்படுத்தி ஓலை எழுதிக் கொடுத்திருப்பது வாஸ்தவம்தான். இதைப் பற்றி ஏற்கனவே மகாமந்திரியிடமும் சொல்லியிருப்பதாகக் கன்னிமாதா தெரிவித்தார். மகாமந்திரியும் படைத் தலைவர்களும் எனக்கு விரோதமாகச் சதி செய்யாமலிருப்பதற்காகக் கன்னிமாதா எந்த நிமிடமும் பாரதநாட்டிலிருந்து செம்பவளத் தீவுக்குத் திரும்பலா மென்று சொல்லிப் பயமுறுத்தி வைக்கும்படியும் சொல்லி விட்டுப் போயிருக்கிறாள். ஆயினும் படைத் தலைவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுச் சதிசெய்யக் கிளம்பினால் அது உங்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். சந்தேகமேற்பட்டால் அந்த முரடர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆகையால் காட்டுப் பாதையில் குறுக்கு வழியாகத் தென்திசைப் பிராந்தியத்துக்குப் போவோம். உங்களைக் கப்பலில் ஏற்றிவிட்டு நான் என் பாசறைக்குப் போய் எனது வீரர்களின் பக்கபலத்தோடு அமரகிரிக்குப் போவதுதான் நல்லது. தனியாகப்போய் அவர்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. என் பாசறையில் இருந்து ஒலிபெருக்கியின் மூலம் அமரகிரியிலுள்ள மகா மந்திரியுடன் பேசிவிட்டு அரண்மனைக்குப் போவதுதான் உசிதமானது” என்றார் உக்கிரசேனர். 

தேவியின் வாசஸ்தலமான அமரகிரியை இன்னொரு தடவை பார்க்காமல் திரும்புவது ஜோதிவர்மனுக்குச் சமாதானமா யில்லாவிட்டாலும் அமரகிரிக்கு அவன் வருவது ஆபத்தானதென்று உக்கிரசேனர் பல காரணங்களையும் எடுத்துக் காட்டி வற்புறுத்திய படியினால் அவர் பேச்சுக்கு அவன் இணங்க வேண்டியதாயிற்று. ஆகவே அவர்கள் குதிரைகளில் ஏறி காட்டுக்குள் குறுக்குப் பாதை வழியாக தென்திசைப் பிராந்தியத்தை நோக்கி விரைந்தார்கள். 

போகும் பொழுது “நீங்கள் வந்த இயந்திரப் படகு விட்டு வந்த இடத்திலேயே இன்னும் இருக்குமென்று நிச்சயமாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டார் உக்கிரசேனர். 

“ஆம்! அதில் சந்தேகமேயில்லை. நாங்கள் இத்தீவுக்கு வந்து இத்துடன் சரியாக பதின்நான்கு தினங்களாகின்றன. பதினைந்து தினங்கள் வரையில் காத்திருந்து பார்த்து விட்டு நாங்கள் திரும்பி வராவிட்டால் அதன் பிறகு மற்றும் இருவர் கரைக்கு இறங்கி வந்து பார்க்க வேண்டும் என்பது ஏற்பாடு. படகு நாங்கள் விட்டு வந்த இடத்தில் நிற்குமென்பதில் சந்தேகமேயில்லை” என்றார் பாலாஜி. 

“தேவி சொல்லிவிட்டுப் போனதைப் போல அவள் இறந்துவிட்டா ளென்பதைக் கொஞ்சக் காலத்துக்கு வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது. அவள் இறந்து விட்டா ளென்பது தெரிந்தால் நாட்டில் பெரிய பரபரப்பும், கொந்தளிப்பும் உருவாகிச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். முன் யோசனையுடன் தேவி பிரகடனம் எழுதி வைத்திருந்ததைக் கவனித்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சென்ற பத்துத் தினங்களுக்குள் எவ்வளவு ஆச்சர்யமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன!” என்றார் உக்கிரசேனர். 

“ஆச்சர்யமான இந்தச் சம்பவங்கள் எவ்வளவோ அரிய தத்துவார்த்த உண்மைகளையும் நமக்கு அறிவுறுத்தி யிருக்கின்றன. இயற்கை என்ற மகா சக்தியின் கையில் நாமெல்லாம் விளையாட்டுப் பொம்மைக ளென்பதற்குத் தேவியின் முடிவைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?” என்றார் பாலாஜி. 

அவர்கள் இவ்விதம் பேசிக் கொண்டே தீவின் தென் பிராந்தியத்தின் கடற்கரையோரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். கடலிலிருந்து தீவுக்குள் இட்டுச் செல்லும் நதியை இடையில் சந்தியாமலே கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டது பாலாஜிக்கு ஆச்சர்யமாயிருந்தது. தாங்கள் வந்தது குறுக்குப் பாதையென்றும், பவானியின் மண்டபம் இருந்த திறந்து வெளிப் பிரதேசத்துக்குப் போகாமலே காட்டு வழியாகக் கடலோரத்துக்கு வந்து விட்டதாயும் உக்கிரசேனர் சொன்னார். 

கடற்கரையில் அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்த்த பொழுது கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் ஜோதிவர்மன் கடலில் விட்டு வந்த கடற்படையின் இயந்திரப் படகு விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிற்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. 

“அதோ எங்கள் படகு நிற்கிறது பாருங்கள். படகு நிச்சயம் காத்திருக்குமென்று நான் சொல்லவில்லையா?” என்றான் பாலாஜி. 

இதற்குள் அவர்களுடைய பேச்சுக் குரலைக் கேட்டு அக்கம் பக்கங்களிலிருந்து சிலர் அங்கு ஓடிவந்தார்கள். வந்தவர்கள் கையில் கொண்டு வந்திருந்த தீவட்டி வெளிச்சத்தில் தங்களுடைய தளபதி உக்கிரசேனரைக் கண்டவுடன் தலைகுனிந்து வணங்கிவிட்டு உக்கிரசேனர் கையில் திரிசூலமும், ஜோதிவர்மன் கையில் மணி முடியும் இருப்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவியை நேரில் பார்த்திராத அவர்களுக்கு அவை தேவியினுடைய தென்பது தெரிந்திருக்க நியாயமில்லை என்றாலும் நடு நிசி நேரத்தில் அந்தச் சாமான்களுடன் அவர்களைக் கடற்கரை யோரத்தில் கண்டதே அந்த மனிதர்கள் ஆச்சரியம் அடைந்ததற்குக் காரணமாயிருக்க வேண்டும். 

அவர்களில் ஒருவனைப் பார்த்து “ஒரு படகு கொண்டு வா!” என்று உக்கிரசேனர் உத்தரவிட்டார்! 

“படகு கரையில் தயாராயிருக்கிறது எஜமான்!” என்றான் அம்மனிதன். 

பிறகு உக்கிரசேனர் ஜோதிவர்மனைப் பார்த்து “அய்யா! தேவியின் பிரியத்துக்கும் பக்திக்கும் பாத்திரமாகிய நீங்களே எங்கள் கன்னிமாதாவின் வாரிசு. எங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் உங்கள் வாக்கு கன்னிமாதாவின் வாக்கு. தேவியின் விருப்பத்தை உங்கள் கையினால் தயவு செய்து நிறைவேற்றி வையுங்கள்!” என்றார். 

இவ்விதம் சொல்லிவிட்டு உக்கிரசேனர் ஜோதிவர்மன் முன்னிலையில் மண்டியிட்டு அமரவும் ஜோதிவர்மன் தனது கையிலிருந்த மணி முடியை உக்கிரசேனர் தலையில் வைத்து, “தேவதேவியின் ஆணைப்படி உங்களை இந்நாட்டின் மன்னராக முடிசூட்டிப் பிரகடனம் செய்கிறேன். முடிசூட்டு வைபவத்தின் பொழுது அதற்குச் சாட்சியாக உங்கள் நாட்டுப் பிரஜைகளில் சிலரே நம்பக்கத்திலிருப்பது நல்ல சகுனம். மகா மந்திரிக்கும் படைத் தலைவர்களுக்கும் தேவியின் பிரகடனத்தை வாசித்துக் காட்டி அவள் பெயரால் நல்லாட்சி நடத்தி மக்களின் அன்பையும் பிரியத்தையும் பெறுவீர்களாக! வாழ்க உக்கிரசேன மகாராஜா!” என்றான் ஜோதிவர்மன். 

அதைத் தொடர்ந்து பாலாஜியும் முனிசாமியும், “வாழ்க! உக்கிரசேன மகாராஜா!” என்று கோஷிக்கவும் ஈட்டி வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து விஷயம் புரியாமலே வாழ்த்து ஒலியை முழங்கினார்கள். 

இதன் பின்னர் கரையில் கட்டியிருந்த ஒரு படகில் அவர்கள் புறப்பட்டனர். அந்நாட்டு வீரர்களில் ஒருவன் படகைச் செலுத்திக் கொண்டு வந்தான். 

இயந்திரப் படகை நெருங்கியதும் ஜோதி, பாலாஜி, முனிசாமி ஆகிய மூவரும் இயந்திரப் படகில் ஏறிக்கொள்ள மணி முடியைத் தரித்த உக்கிரசேனருடன் நாட்டுப் படகு மெதுவாகத் திரும்பியது. 

இயந்திரப் படகில் ஜோதியும், பாலாஜியும் ஏறியவுடன் காப்டன் வில்லியம் எங்கே என்று படகிலிருந்தவர்கள் சரமாரியான கேள்விகளை அடுக்கினார்கள். 

“முதலில் படகைக் கிளப்புங்கள்! பிறகு மற்றதைப் பேசுவோம்!” என்று பாலாஜி அவசரப்படுத்தவே அவ்விதம் அவசரப்படுத்துவதில் ஏதோ ஒரு காரணமிருக்க வேண்டுமென்று நினைத்து மாலுமிகள் படகைக் கிளப்பினார்கள். அவர்களுக்கு செம்பவளத்தீவில் நடந்த அதி பயங்கரமான சம்பவங்களைப் பற்றி பாலாஜி கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஜோதிவர்மன் மட் டும் அவர்களுடைய சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் அரைப் பிறைச் சந்திரனின் மங்கிய வெளிச்சத்தில் செம்பவளத் தீவின் இரு நிரந்தர சின்னங்களான ரிஷபம் படுத்திருப்பதைப் போன்ற பிரமாண்டமான மலைச் சிகரத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடிவானத்துக்கப்பால் போய் மறைந்து விடவே ஒரு நீண்ட பெருமூச்சுடன் கையிலிருந்த தேவியின் ஆடைகளைத் தன் இதயத்துடன் அணைத்துக் கொண்டு இடிந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்தான். 

“தேவி கடைசியில் சொல்லிவிட்டுப் போனதைப் போல திரும்பவும் என்னிடம் வருவாளா எப்பொழுது வருவாள்? சீக்கிரம் வருவாளா? அம்மாதிரி ரதியின் வருகைக்காக இன்னும் எவ்வளவு காலம் நான் இப்படியே பெருமூச்சு விட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டும்?” 

கீழே படகின் மீது மோதிக் கொண்டிருந்த கடல் அலைகளைப் போல அவன் நெஞ்சத்தில் இப்படியான எண்ணங்கள் அலை மோதி நெஞ்சிலிருந்த பாரம் பெருமூச்சாக வெளியே வந்து கொண்டிருந்தது. 

(முற்றும்)

– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *