கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 4,404 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7. மணியக்காரர் மகள்

குமாரலிங்கம் கண்ணை மூடிக்கொண்ட பிறகு அவனுடைய செவிகள் மிகவும் கூர்மையாயின. குயில்கள் ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று கூவும் சத்தமும், அணில்கள் ‘கிச்’ ‘கிச்’ என்று இசைக்கும் சத்தமும், வேறு பலவகைப் பறவைகள் ‘கிளக்’ ‘கிளக்’ என்றும், ‘கிளிங்’ ‘கிளிங்’ என்றும் ‘கிறீச்’ ‘கிறீச்’ என்றும் கத்தும் சத்தமும் கேட்டன. இவ் வளவு சத்தங்களுக்கு மத்தியில் ‘கலின்’ ‘கலின்’ என்று கேட்ட மெட்டிகளின் சத்தத்திலேதான் அவனுடைய கவனம் நின்றது. சீக்கிரத்தில் அந்தச் சத்தம் நின்று விட்டது. எவ்வளவு காதுகொடுத்துக் கவனமாகக் கேட்டும் கேட்கவில்லை. அந்தப் பெண் போய் விட்டாளா? – அடாடா! – போயே போய் விட்டாளா? – அவள் தலையிலே இருந்த கூடையில் மோரோ, தயிரோ, அல்லது சோறோ இருந்திருக்க வேண்டும். வயிற்றுப் பசி கொல்லுகிறதே? வந்தது வரட்டும் என்று அவளைப் பார்த்துப் பேசாமல் போனோமே? நிஜமாகவே போய் விட்டாளா? அல்லது, ஒரு வேளை…

குமாரலிங்கம் இலேசாகக் கண்ணிமைகளைச் சிறிது திறந்து பார்த்தான். அந்தப் பெண் போகவில்லை. தன் எதிரிலே அருகில் நின்றுகொண்டிருக்கிறாள் என்று தெரிந்துகொண்டான். உடனே தன்னை மீறி வந்த சங்கோசத்தினால் மீண்டும் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

குன்றிலிருந்து குகித்தோடும் அருவியின் சலசல சத்தத்தைப் போன்ற சிரிப்பின் ஒலி கேட்டது.

அந்த ஒலி செவியில் விழுந்ததும், ஸ்வீட்ச்சை அமுக்கியதும் இயங்கும் மின்சார இயந்திரத்தைப் போல் குமாரலிங்கம் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். தன் முன்னால் நின்ற பெண்ணின் முகத்தை ஏறிட்டு உற்றுப் பார்த்தான். ஆச்சரியம் எல்லை மீறியது. அவள்தான்; சந்தேகமில்லை! சோலைமலை இளவரசியேதான். உடுத்தி விருந்த உடையிலும் அணிந்திருந்த ஆபரணங்களிலுந்தான் வித்தியாசமே தவிர, முகத்திலும் தோற்றத்திலும் யாதொரு வேற்றுமையும் இல்லை.

குமாரலிங்கத்தின் தலை சுழன்றது.

நல்ல வேளையாக, அந்தப் பெண் அடுத்தாற்போல் சொன்ன வார்த்தை அவன் மயங்கிக் கீழே விழாமல் தடுத்தது.

“இந்த மண்டபத்தில் உச்சி வேளையில் படுத்துத் தூங்கக் கூடாது, ஐயா! இங்கே மோகினிப் பிசாசு உலாவுது என்று சொல்கிறாங்க!”

இதைக் கேட்டதும் குமாரலிங்கம் குபீர் என்று சிரித்தான். ஆனால் சிரிப்பின் சத்தம் அவ்வளவு கணிரென்று கேட்கவில்லை. அதன் காரணத்தை அந்தப் பெண்ணே கூறினாள்.

“பாவம் சிரிக்கக்கூடச் சக்தி இல்லை. வயிற்றுக்குச் சாப்பிட்டு ஒரு மாதம் ஆனாற்போலே யிருக்கு, ஆளைப் பார்த்தால்! உடம்புக்கு ஏதாவது அசெளக்கியமா, ஐயா!” என்று கூறியது குமாரலிங்கத்தின் செவியில் இன்பகீதமாகப் பாய்ந்தது.

“அதெல்லாம் எனக்கு உடம்பு அசௌக்யம் ஒன்றுமில்லை. நீ யார், அம்மா?” என்று குமாரலிங்கம் கேட்ட வார்த்தை ஈன ஸ்வரத்திலே தான் வெளி வந்தது.

“நான் இந்த ஊர் மணியக்காரர் மகள். உனக்கு உடம்பு அசெளக்யம் இல்லாவிட்டால், பசியாய்த்தான் இருக்கவேணும். அப்படி நீ சுருண்டு படுத்துக்கிட்டிருப்பதைப் பார்த்த போதே தெரிந்தது. சோறு கொஞ்சம் மிச்சம் இருக்கு; சாப்பிடுகிறாயா, ஐயா!”

குமாரலிங்கத்தின் வயிறு “கொண்டு வா! கொண்டு வா!” என்று முறை யிட்டது. ஆனால் சுய கௌரவ உணர்ச்சி குறுக்கே வந்து நின்றது.

“அதென்ன அப்படிக் கேட்டாய்? என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமா யிருக்கிறதா? பிச்சைக்காரன் மாதிரி தோன்றுகிறதா?” என்றான் குமாரலிங்கம்.

“பிச்சைக்காரன் என்று யார் சொன்னாங்க? பார்த்தால் மவராஜன் வீட்டுப் பிள்ளை மாதிரிதான் இருக்கு. ஆனால், எப்பேர்ப்பட்ட பிரபுக்களுக்கும் சிலசமயம் கஷ்டம் வருகிறது சகஜந்தானே? அதிலும் நல்லவங்களுக்குத்தான் உலகத்திலே கஷ்டம் அதிகமாய் வருகிறது. இராமர், சீதை, அரிச்சந்திரன், சந்திரமதி, தர்ம புத்திரர் – இவர்கள் எல்லாரும் எவ்வளவோ கஷ்டப்பட வில்லையா?”

இந்தப் பட்டிக்காட்டுப் பெண் விவாதத்தில் எவ்வளவு கெட்டிக்காரியா யிருக்கிறாள் என்று குமாரலிங்கம் மனதிற்குள்ளே வியந்தான். எனினும், விவாதத்தில் தோற்க மனமில்லாமல், “அவர்களை யெல்லாம் போல நான் நல்லவனு மில்லை; எனக்குக் கஷ்டம் ஒன்றும் வந்து விடவும் இல்லை” என்றான்.

“அப்படி யென்றால் ரொம்ப சந்தோசம்; நான் போய் வாரேன்! உன்னோடு வெறும் பேச்சுப் பேசிக்கிட்டிருக்க எனக்கு நேரம் இல்லை. ஆயாள் கோபித்துக் கொள்வாள்” என்று சொல்லி விட்டு அந்தப் பெண் மேலே போகத் தொடங்கினாள். குமாரலிங்கத்துக்குத் தன் பிராணனே தன்னை விட்டுப் போவது போலிருந்தது. அவள் பத்து அடி போவதற்குள், “அம்மா! அம்மா! வா! பசி காதை அடைக்கிறது. இங்கே கொஞ்சம் சோறு போட்டு விட்டுப் போ!” என்றான்.

போகும்போது கொஞ்சம் சிடுசிடுப் போடு போனவன், மலர்ந்த முகத்தோடு திரும்பி வந்தாள்.

“இதற்கு என்னத்திற்கு இவ்வளவு வறட்டு ஜம்பம்? ஆளைப் பார்த்தால் தான் தெரிகிறதே, மூன்று நாளாய்ப் பட்டினி என்று? இந்தா!” என்று சொல்லி, ஒரு மலை வாழை இலையை எடுத்துக் கொடுத்தாள்.

“ஜம்பம் ஒன்றும் இல்லை, அம்மா! நீ யாரோ, என்னமோ என்று கொஞ்சம் யோசித்தேன்.”

“இதை முதலிலேயே கேட்டிருக்கக் கூடாதா? நாங்கள் நல்ல சாதிதான். முக்குலத்தோர் குலம். எங்கள் ஐயா பெயர் சிங்கார பாண்டியத் தேவர்.”

“சாதியைப் பற்றி நான் கேட்க வில்லை. நான் தேசத் தொண்டன். முக்குலத்தோரானாலும் எக்குலத்தோரானாலும் எனக்கு ஒன்றுதான்.”

இலையில் சோற்றைப் படைத்துக் கொண்டே மணியக்காரர் மகள், ” தேசத் தொண்டன் என்றால் என்ன? அது ஒரு சாதியா?” என்று கேட்டாள்.

குமாரலிங்கம் அப்போது தன் மனதிற்குள் “அடாடா! நம்முடைய பெண் குலத்தை நாம் எப்படிப் படிப்பில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம்?” என்று எண்ணிப் பரிதாபப் பட்டான். பிறகு, “தேசத் தொண்டன் என்பது ஒரு சாதியல்ல. தேசத் தொண்டர்களுக்குச் சாதி என்பதே கிடையாது” என்றான்.

“அது எப்படி சாதியே இல்லாமல் இருக்கும்? ஏதாவது ஒரு சாதியில் பிறந்துதானே ஆக வேண்டும்?’ தேசத் தொண்டர் என்றால் சாதி கெட்டவர்கள் என்று சொல்கிறாயா?”

“ராம ராமா! சாதியே இல்லை என்றால், சாதி எப்படிக் கெடும்? இருக்கட்டும்; ‘தேசம்’ என்றால் இன்னதென்று உனக்குத் தெரியுமா?”

“தெரியாமல் என்ன? இந்த மலைக்கு அப்பாலே மலையாள தேசம் இருக்கிறது. கொலை, கிலை பண்ணறவங்களை தேசாந்தரம் அனுப்பறாங்களே!”

“அது போகட்டும்; காந்தி என்று கேட்டிருக்கிறாயா?”

“காந்தி மவாத்துமா என்று சொல்லிக்கிறாக! நேரே பார்த்ததில்லை.”

“சரி: காங்கிரஸ் மகாசபை என்றால் தெரியுமா?”

“எல்லாம் துெ ரியும். முன்னே யெல்லாம் காங்கிரஸ் என்று சொல்லி மஞ்சப் பெட்டியிலே வோட்டுப் போடு என்று சொன்னாங்க. இப்போது, காங்கிரஸ்காரனுங்க அங்கே கொள்ளை யடிச்சாங்க, இங்கே கொள்ளை யடிச்சாங்க என்று சொல்லிக்கிறாக!”

“கடவுளே! கடவுளே! காங்கிரஸ் காரர்கள் கொள்ளை யடிக்க மாட்டார்கள், அம்மா! வெள்ளைக்காரர்களாகிய கொள்ளைக்காரர்களை இந்தப் பாரத தேசத்திலிருந்து துரத்துவது தான் காங்கிரஸ் மகாசபையின் நோக்கம். இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ வீரப் பெண்மணிகள் இன்றைக்குச் சுதந்திரக் கொடியை நாட்டக் கிளம்பி யிருக்கிறார்கள்..”

“கொடி போடுகிறவர்கள் போடட்டும். அதெல்லாம் எனக்கு என்னத்திற்கு? எங்க ஐயாவுக்கு என்னமோ இப்போதெல்லாம் காங்கிரஸ்காரங்க என்றால் ரொம்பக் கோவம்…”

“அடாடா! அப்படியா? அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால், உண்மையை எடுத்துச் சொல்லி அவர் மனதை மாற்றி விடுவேன்…”

“எங்க ஐயாவை உனக்குத் தெரியாது. தெரிந்தால் இப்படிப் பேச மாட்டாய். ரொம்பக் கோவக்காரர். ‘காங்கிரஸ்காரனுங்க யாராவது இந்த ஊரில் கால் எடுத்து வைக்கட்டும்: காலை ஒடித்து விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நீ காங்கிரஸ் கட்சிக்காரன் என்றால், எங்க அப்பா ஊருக்குத் திரும்பி வரதுக்குள்ளே போய் விடு!”

இந்த வார்த்தைகள் குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லை. இன்னதென்று விவரமாகாத ஒரு திகில் அவன் மனதில் உண்டாயிற்று. எல்லாம் காலையில் கண்ட கனவில் நடந்த மாதிரியே நடக்கிறதே என்ற எண்ணமும் தோன்றியது.

“சரி; அந்தப் பேச்சை விட்டு விடலாம். உன் பெயர் என்ன?”

“என் பெயர் பொன்னம்மா. எதற்காகக் கேட்கிறாய்?”

“இவ்வளவு உபகாரம் எனக்குச் செய்தாயே? உன் பெயரையாவது நான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டாமா?”

“உபகாரம் செய்கிறவர்களை இந்த நாளில் யார் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார்கள்? அதெல்லாம் வெட்டிப்பேச்சு. காரியம் ஆகவேண்டி யிருந்தால் சிநேகிதம், உறவு எல்லாம் கொண்டாடுவார்கள். காரியம் ஆகி விட்டால், நீ யாரோ? நான் யாரோ?”

“அப்படிப்பட்ட மனிதன் அல்ல நான். ஒரு தடவை உதவி செய்தவர்களை ஒரு நாளும் மறக்க மாட்டேன். அதிலும் உன்னை நிச்சயமாக மறக்க மாட்டேன். – ஆமாம்; மணியக்காரர் மகள் என்கிறாயே? யாருக்குச் சாப்பாடு கொண்டு போனாய்? வேறு யாரும் வேலைக்காரர் இல்லையா?”

“வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். கரும்பு வெட்டி இப்போது வெல்லம் காய்ச்சியாகிறது. அப்பா ஊரில் இல்லாத தால், ஆயாளும் அண்ணனும் ஆலை அடியில் இருக்கிறார்கள். வெறுமனே வீட்டிலே குந்தி இருப்பானேன் என்று அவர்களுக்குச் சோறு கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வருகிறேன்.”

“அப்படியானால், நாளைக்கும் இந்த வழி வருவாயா?”

“வந்தாலும் வருவேன்; ஆனால் நாளைக்குக்கூட நீ இங்கேயே இருப்பாயா? உனக்கு வீடு வாசல், வேலை வெட்டி ஒன்றும் கிடையாதா?”

“நான்தான் அப்போதே சொன்னேனே, தேசத் தொண்டுதான் எனக்கு வேலை என்று.”

“அதென்னமோ எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. நான் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் புறப்பட்டாள்.

“நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் போகிறாயே? நாளைக்கும் இந்த மாதிரி ஒரு பிடி சோறு போட்டு விட்டுப் போனாயானால் தேவலை. இன்னும் இரண்டு மூன்று நாளைக்கு நான் இந்தப் பாழும் கோட்டையிலே இருந்து தீர வேண்டும். சாப்பிட்ட பிறகுதான் களைப்பு இன்னும் அதிகமாய்த் தெரிகிறது. இரண்டு மூன்று நாளைக்கு ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது போலிருக்கிறது… ஊருக்குள் வரலாம் என்று பார்த்தால் உன் தகப்பனார் காங்கிரஸ்காரன் என்றால் காலை ஒடித்து விடுவார் என்கிறாய்.”

“அதில் என்னமோ சந்தேகமில்லை. உனக்கு நான் சோறு போட்டதாகத் தெரிந்தால் என்னையே அவர் காள வாயில் வைத்து விடுவார்!”

“அப்படியானால் நீதான் இரண்டு மூன்று நாளைக்கு எனக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.”

“நல்ல காரியம். முதலில் நாளை ஒரு நாளைக்கு என்றாய். அப்புறம் மூன்று நாளைக்கு என்கிறாய். வழிப் போக்கர்களுக்குச் சோறு கொண்டு வந்து படைப்பதுதான் எனக்கு வேலை என்று நினைத்தாயா?”

“சரி ! அப்படி யென்றால் நான் பட்டினி கிடந்து சாகிறேன். இங்கே பறந்து திரியும் கழுகுகளுக்கு நல்ல இரை கிடைக்கும். இன்றைக்குக்கூட உன்பாட்டுக்குப் பேசாமல் போயிருக்கலாமே! தூங்கினவனை எழுப்பிச் சோறு போட்டிருக்க வேண்டாமே?”

பொன்னம்மாள் கலகல வென்று சிரித்தாள். அவள் சிரித்தபோது குமாரலிங்கத்துக்குக் குன்றும் மரமும் கொடியும் செடியும் சகல ஜீவராசிகளும் கலகல வென்று சிரிப்பது போலத் தோன்றியது. அவனுடைய சோர்வடைந்த முகத்திலும் புன்னகை பூத்தது.

பொன்னம்மாளை முன்னைவிட ஆர்வத்தோடு பார்த்து, “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான்.

“தூங்கினவனை எழுப்பியதாகச் சொன்னதற்குத்தான் சிரித்தேன். நிஜமாக நீ தூங்கினாயா?”

“இல்லை பொய்த் தூக்கந்தான். ஆனால் நான் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தபோது நீ சிரித்தாயே, அது எதற்காக?”

“நீ எழுந்து உட்கார்ந்து என்னைப் பார்த்ததும் சிரிக்க முடியாமல் சிரித்தாயே, அது எதற்காக?”

“நீ முதலில் சொன்னால் நானும் சொல்கிறேன்.”

“நிச்சயமாகச் சொல்வாயா?”

”சத்தியமாய்ச் சொல்கிறேன்.”

“நேற்றைக்கு நான் சந்திரஹாஸன் கதை படித்துக் கொண்டிருந்தேன்!”

“ஓஹோ! உனக்குப் படிக்கக்கூடத் தெரியுமா?”

“ஏன் தெரியாது? நாலாவது வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அப்புறம் வீட்டிலேயே கதைப் புத்தகங்கள் படிப்பதுண்டு.”

“சரி; மேலே சொல்லு!”

“சந்திரஹாஸன் கதையில் இப்படித்தான் ஒரு ராஜகுமாரன் நந்தவனத்தில் வந்து படுத்துத் தூங்குகிறான். மந்திரி குமாரி அங்கே வந்து அவனைப் பார்த்துவிட்டு, தன் ஐயா தான் தனக்கு மாப்பிள்ளை தேடி அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போது எங்க ஐயாவும் ஊரில், இல்லாதபடியால் அவர் தான் ஒரு வேளை மாப்பிள்ளை தேடி அனுப்பி யிருக்கிறாரோ என்று நினைத்தேன். அது என்ன பைத்தியக்கார எண்ணம் என்று தோன்றியதும் சிரிப்பு வந்தது!”

“ஏன் அதைப் பைத்தியக்கார எண்ணம் என்கிறாய்? ஏன் உண்மையா யிருக்கக் கூடாது?”

“உன்னோடு வெறும் பேச்சுப் பேச நீ என்னைப் எனக்கு நேரமில்லை. பார்த்ததும் ஏன் சிரித்தாய் என்று சொல்வாயா, மாட்டாயா?”

“நான் எழுந்து உட்கார்ந்ததும், ‘இந்த மண்டபத்தில் உச்சிவேளையில் படுக்கக் கூடாது, மோகினிப் பிசாசு இங்கே இருக்கிறது’ என்று சொன்னா யல்லவா? உன்னைத் தவிர வேறு மோகினிப் பிசாசு எங்கே யிருந்து வரப்போகிறது என்று எண்ணிச் சிரித்தேன். எப்பேர்ப்பட்ட தேவலோகத்து மோகினியும் அழகுக்கு உன்னிடம் பிச்சை வாங்கவேண்டும்!”

“சே! நீ ரொம்பப் பொல்லாதவன், பொய்யும் புளுகும் சொல்லுகிறாய். நான் போய் வருகிறேன்.”

“உன்னைப் பற்றி ஒரு பாட்டு இட்டுக் கட்டி யிருக்கிறேன். கேட்டு விட்டுப் போ!”

“பாட்டா? எங்கே, சொல்லு!”

“பொன்னம்மாள் ரோம்பப் பொல்லாதவள்
பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்”

என்று குமாரலிங்கம் பாடியதைக் கேட்ட மணியக்காரர் மகள் தன் செவ் விதழ்களை மடித்து அழகு காட்டி விட்டுக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டாள். பிறகு ஒரு கையை வீசிக் கொண்டு காலை எட்டி வைத்து நடந்தாள்.

“நாளைக்குக் கட்டாயம் வருவா யல்லவா? இன்னும் இரண்டு மூன்று நாள் உயிர்ப் பிச்சை கொடுத்து நீதான் காப்பாற்ற வேண்டும்!” என்றான் குமாரலிங்கம்.

பொன்னம்மாள் திரும்பிப் பார்த்து இன்னும் ஒரு தடவை அவனுக்கு அழகு காட்டிவிட்டு விரைவாக நடந்தாள். அவள் நடையிலும் தோற்றத்திலும் என்று மில்லாத மிடுக்கும் கம்பீரமும் அன்று காணப்பட்டன.


பொன்னம்மாள் போன பிறகு குமாரலங்கம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்த்திருந்தான். அன்று அதிகாலை நேரத்தில் அங்கு தான் வந்து உட்கார்ந்ததும் கண்ட கனவுக் காட்சியில் நடந்தது போலவே ஏறக்குறைய இப்போது உண்மையாக நடப்பதை எண்ணி எண்ணி வியந்தான். சிறிது நேரத்துக் கெல்லாம் யாரோ குடியானவர்கள் அந்தப் பக்கம் நெருங்க வருவதாகத் தோன்றவே, எழுந்து சென்று சற்றுத் தூரத்தில் இடிந்து கிடந்த அரண்மனைக்குள்ளே புகுந்தான். அங்கு எவ்வித நோக்கமும் இன்றி அலைந்தான். மறுபடியும் அதே மாய உணர்ச்சி, அந்த இடங்களில் எல்லாம் ஏற்கெனவே ஒரு தடவை தான் சஞ்சரித்திருப்பது போன்ற உணர்ச்சி, அவனைக் கவர்ந்தது.

அதை உதறித் தள்ளிவிட்டு வெளி கோட்டையில் வந்து பாழடைந்த கொத்தவங்களிலும் அருகிலேயிருந்த காட்டுப் பிரதேசங்களிலும் சுற்றி அலைந்தான். அஸ்தமித்ததும் களைப்பு மேலீட்டு வந்தது. மறுபடியும வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்தான். அந்தக் கோட்டையிலும் அரண்மனையிலும் முற்காலத்தில் யார் யார் வசித்தார்களோ, என்னென்ன பேசினார்களோ, ஏதேது செய்தார்களோ என்றெல்லாம் அவனுடைய உள்ளம் கற்பனை செய்து கொண்டிருந்தது.

பகலில் வெகு நேரம் தூங்கிவிட்ட படியால் இரவில் சீக்கிரம் தூக்கம் வராதோ என்று முதலில் தோன்றியது. அந்த பயத்துக்குக் காரணமில்லை யென்று சற்று நேரத்துக் கெல்லாம் தெரிந்தது. அவனுடைய கண்கள் சுழன்றன; நித்திரா தேவியின் மெல்லிய பூப்போன்ற கரங்கள் அவனுடைய கண்ணிமைகளைத் தடவிக் கொடுக்கத் தொடங்கின.

அச் சமயம் கிழக்குத் திக்கில் குன்று முகட்டின் மேலே வெள்ளி நிறத்து நிலவின் ஒளி பரவிற்று. சிறிது நேரத்துக் கெல்லாம் ஏறக்குறைய முழு வட்ட வடிவமாயிருந்த சந்திரன் குன்றின் மேலே வந்தது. பால் போன்ற நிலவு அந்தப் பழைய கோட்டை கொத்தளங்களின் மேலே நன்றாய் விழுந்ததும் மறுபடியும் காலையில் நேர்ந்த அதிசய அநுபவம் குமாரலிங்கத்துக்கு ஏற்பட்டது.

பாழடைந்த கோட்டை கொத்தளங்கள் புதிய கோட்டை கொத்தளங்கள் ஆயின. இடிந்து கிடந்த அரண்மனை மேல் மச்சுகள் உள்படப் புதிய வனப்புப் பெற்றுத் திகழ்ந்தன. வஸந்த மண்டபமும் புதிய தோற்றம் அடைந்தது. சுற்றிலும் இருந்த நந்தவனத்திலிருந்து புது மலர்களின் நறுமணம் பரவி வந்து தலையைக் கிறு கிறுக்கச் செய்தது. குமாரலிங்கமும் மாறனேந்தல் இளவரசனாக மாறினான்.

8. கண்ணீர் கலந்தது!

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் “குமாரலிங்கம் மாறனேந்தல் இளவரசனாக மாறினான் ” என்று குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் “மாறனேந்தல் மகாராஜாவாக மாறினான்” என்று சொல்லியிருக்க வேண்டும்.

அன்றைய தினம் பகலில் மாறனேந்தல் கோட்டையில் நடந்த துயரகரமான சம்பவங்களின் காரணமாக இளவரசன் உலகநாதத் தேவனை இனி நாம் மகாராஜா உலககாதத் தேவர் என்று அழைப்பது அவசிய மாகிறது.

மாலை எப்போது வரும், மதியம் எப்போது உதயமாகும், மாணிக்கவல்லியின் பாதச் சதங்கை ஒலி எப்போது கேட்கும் என்று உலகநாதத் தேவர் பிற்பகல் எல்லாம் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். கடைசியாக மாலையும் வந்தது. பின்னர் உலகநாதத்தேவரின் ஆவல் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு வேளை தம்முடைய ஆவல் பூர்த்தி யாகாமலேயே போய் விடுமோ, எதிர்பாராத தடை ஏதேனும் நேர்த்து மாணிக்கவல்லி வராமலிருந்து விடு வாளோ என்ற பயமும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

ஆனால் அம்மாதிரி உலகநாத தேவர் ஏமாற்ற மடையும்படி நேரிட வில்லை. கீழ்த்திசைக் குன்றின்மேல் சந்திரன் தோன்றிய சிறிது நேரத்துக் கெல்லாம் அரண்மனைப் பக்கத்திலிருந்து ஒரு பெண்ணின் உருவம் வருவதை அவர் கண்டார்.

இளவரசி நெருங்கி வர வர அவளுடைய நடையிலே ஒரு வித்தியாசம் இருப்பது தெரிந்தது. முன்னே அவளுடைய நடையில் தோன்றிய மிடுக்கும் கம்பீரமும் இப்போது இல்லை. அது மட்டுந்தானா வித்தியாசம்? அன்று காலையும் மத்தியானமும் இளவரசி நடந்தபோதெல்லாம் அவளுடைய காற் சிலம்பு ‘கலீர்’ ‘கலீர்” என்று சப்தித்தது. அந்த ஒலி இப்போது ஏன் கேட்கவில்லை?


வஸந்த மண்டபத்தின் குறட்டில் உட்கார்த்திருந்த உலகநாதத் தேவர் விரைந்து எழுந்து இளவரசி மாணிக்கவல்லியை எதிர் கொள்ளுவதற்காகச் சென்றார். ஏதோ கெட்ட செய்தியைக் கேட்கப் போகிறோமென்ற உள்ளுணர்ச்சி அவருடைய நெஞ்சில் அலைமோதி எழுந்து மார்பை விம்மி வெடிக்கச் செய்தது.

மாலை நேரத்தில் மடலவிழ்ந்து மணம் விரித்த அழகிய மலர்கள் குலுங்கிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் மாணிக்கவல்லியின் முக மலரை உலகநாதத் தேவர் பார்த்தார்.

அவளுடைய விசாலமான கரிய விழிகள் இரண்டிலும் இரண்டு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று, வெண்ணிலவின் ஒளியில் நன்முத்துக்களைப் போல் பிரகாசித்தன.

அதைக் கண்ட உலககாதத் தேவர் தம்முடைய உள்ளத்தில் உதித்த உற்பாத உணர்ச்சி உண்மைதான் என்று எண்ணமிட்டார். ஏதோ ஒரு கெட்ட செய்தி, அதுவும் தம்மைப் பற்றிய கெட்ட செய்தி இளவரசியின் காதுக்கு எட்டியிருக்க வேண்டும்! – அதில் சந்தேகமில்லை.


இளவரசியை மறுபடி சந்தித்ததும் ஏதேதோ பரிகாசமாகப் பேச வேண்டுமென்று உலகநாதத் தேவர் யோசித்து வைத்திருந்தார். அவை யெல்லாம் இப்போது மறந்து போயின.

“உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது?” என்று கேட்பதற்குக் கூட அவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலவின் மோகன நிலவினாலும் பதின்மடங்கு அழகு பெற்று விளங்கிய மாணிக்கவல்லியின் முகத்தைப் பார்த்தது பார்த்தபடியே திகைத்துப் போய் நின்றார்.

எனவே, மாணிக்கவல்விதான் முதலில் பேசும்படியாக நேர்ந்தது. பெரு மூச்சுகளுக்கும் விம்மல்களுக்கு மிடையில் சோலைமலை இளவரசி, “ஐயா! தாங்கள் இன்றிரவு இந்தக் கோட்டையை விட்டுப் போக முடியாது. இங்கேதான் இருந்தாக வேண்டும்!” என்றாள்.

அவள் சொல்ல வந்த கெட்ட செய்தியை இன்னும் சொல்லவில்லை என்று ஊகித்துக்கொண்ட உலகநாதத் தேவர், “இன்றிரவு இங்கே நான் எப்படி இருக்க முடியும்? இரவு நேரத்தில் இங்கிருந்து தப்பிச் சென்றால்தானே செல்லலாம்? எனக்குத் தலைக்கு மேலே எத்தனையோ வேலை இருக்கிறதே!” என்றார்.

“அதெல்லாம் எனக்கும் தெரிந்தது தான். ஆனாலும் நீங்கள் இன்றிரவு போக முடியாது. இந்தக் கோட்டையைச் சுற்றிலும் உள்ள மலைகளிலும் காடுகளிலும் இன்று இரவெல்லாம் இருநூறு வீரர்கள் தொண்ணூறு நாய்களுடன் உங்களைத் தேடி வேட்டையாடப் போகிறார்கள்!” என்று இளவரசி சொன்னதும், அது வரையில் பயமென்பதையே அறியாத வீரர் உலககாதத் தேவரின் நெஞ்சில் பீதிப் பிசாசின் நீண்ட விரல் நகங்கள் தோண்டுவது போலிருந்தது.

விரைவிலேயே அந்த உணர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு, “தேடினால் தேடட்டுமே! அவர்களிடம் நான் அகப்பட்டுக் கொள்ள மாட்டேன். அப்படியே அகப்பட்டுக் கொண்டாலும் என்னதான் செய்து விடுவார்கள்? சாவுக்குப் பயப்படுகிறவன் நானல்ல!” என்றார் தேவர்.

“ஐயா! தாங்கள் சாவுக்குப் பயப்படாதவர் என்பதை அறிவேன். நானும் சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால், தங்களை உயிரோடு பிடிக்க வேண்டு மென்று தீர்மானித்திருக்கிறார்கள். தங்களைப் பிடித்த பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்தால், இப்படி அலட்சியமாகப் பேச மாட்டீர்கள்!” என்று மாணிக்கவல்லி சொன்னபோது அவளுடைய குரல் நடுங்கியது.


உலகநாதத் தேவர் பரிகாசம் தொணித்த குரலில், “என்னை உயிரோடு பிடித்து என்னதான் செய்யப் போகிறார்களாம்? பழைய காலத்துக் கதைகளில் செய்தது போல் பூமியில் குழிவெட்டிப் புதைத்து யானையின் காலால் இடரச் செய்யப் போகிறார்களோ?” என்று கேட்டார்.

“அப்படிச் செய்தால் கூடப் பாதகமில்லை. இன்னும் கொடுமையான காரியம் செய்யப் போகிறார்கள். அதைச் சொல்லுவதற்கே என்னால் முடியவில்லை. அவ்வளவு பயங்கரமான காரியம்!” என்றாள் மாணிக்கவல்லி.

இவ்விதம் சொல்லியபோதே அவளுடைய உடம்பு நடுங்குவதையும் அவள் முகத்திலே தோன்றிய பயங்கரத்தின் அறிகுறியையும் பார்த்து விட்டு உலகநாதத் தேவர் பரிகாசத்தையும் அலட்சிய பாவத்தையும் விட்டுவிடத் தீர்மானித்தார்.

“எந்தவிதப் பயங்கர தண்டனையாக இருந்தாலும் இருக்கட்டும். அதற்காக இப்படி மனம் கலங்க வேண்டாம். எல்லாம் சோலைமலை முருகன் சித்தப்படிகான் நடக்கும்…இதையெல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?” என்று தேவர் கேட்டார்.

“அரண்மனை அந்தப்புரத்தைத் தேடிவந்து வேறு யார் என்னிடம் சொல்லுவார்கள்? என் தகப்பனார் தான் சொன்னார்!” என்று இளவரசி கூறியபோது, அவளுடைய கண்களிலேயிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகிற்று.


அந்தக் காட்சியானது உலகநாதத் தேவரின் உள்ளத்தை உருக்கி விட்டது. தாம் இருந்த அபாயகரமான நிலைமையைக் கூட அவர் மறந்து, இளவரசியின் மீது இரக்கம் கொண்டார். அந்த இரக்க உணர்ச்சியே அழியாத காதலுக்கு விதையாக உருக் கொண்டது.

சட்டென்று தம்முடைய தாய் தந்தையரைப் பற்றிய நினைவு அவருடைய உள்ளத்தில் உதித்தது. மாறனேந்தல் கோட்டை பிடிபட்டதோ, என்னமோ? தம்முடைய பெற்றோர்களின் கதி என்னவாயிற்றோ? தம் அருமைத் தம்பியைப் பாவிகள் என்ன செய்தார்களோ?

இளவரசியின் விம்மலும் கண்ணீரும் நிற்கும் வரையில் சிறிது பொறுத்திருந்து விட்டு, “நீ கூறியதி லிருந்து உன் தந்தை திரும்பி வந்து விட்டார் என்று தெரிகிறது. மாறனேந்தல் கோட்டையைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லையா? என் தாய் தந்தையரைப் பற்றி ஒரு செய்தியும் கூறவில்லையா?” என்று கேட்டார்.

“ஐயோ! இந்தப் பாவியின் வாயினால் அதை யெல்லாம் எப்படிச் சொல்லுவேன்?” என்று கதறினாள் மாணிக்கவல்லி.

தாம் எதிர்பார்த்த கெட்ட செய்தி இப்போதுதான் வரப்போகிறது என்பதை உணர்ந்த மாறனேந்தல் மன்னர், “மாணிக்கவல்லி! எப்படிப் பட்ட கெட்ட செய்தியானாலும் தயங்காமல் சொல்லு! மாறனேந்தல் வம்சத்தினர் வீராதி வீரர்கள் என்று புகழ் பெற்றவர்கள். அந்தக் குலத்திலே பிறந்த இளவரசன் நான்! எதற்கும் மனங் கலங்க மாட்டேன். உண்மையை அறிந்து கொள்ள என் உள்ளம் தடிக்கிறது. ஏதோ என்னமோ என்ற சந்தேகம் என்னைக் கொல்லுகிறது!” என்றார்.

“ஐயா! தாங்கள் இப்போது மாறனேந்தல் இளவரசர் அல்ல. இன்று முதல் தாங்கள்தான் மாறனேந்தல் மகாராஜா!” என்று மாணிக்கவல்லி விம்மிக்கொண்டே கூறினாள்.


இளவரசி கூறியதன் பொருள் இன்னதென்று உலகநாதத் தேவருக்கு விளங்கச் சிறிது நேரம் பிடித்தது. விளங்கியவுடனே தேவரின் தலையில் ஒரு பெரிய மலையே விழுந்தது போல் ஆயிற்று. ஏதோ ஒரு துயரச் செய்தியை அவர் எதிர்பார்த்தவர் தான். என்றாலும், தந்தை இறந்தார் என்னும் செய்தி, தனயரை ஒரு ஆட்டம் ஆட்டி விட்டது! இதுவரையில் நின்று கொண்டே பேசியவர், திடீரென்று உடல் ஓய்ந்து தரையில் உட்கார்ந்தார். எவ்வளவு அடக்கப் பார்த்தும் முடியாமல் தேம்பலும் விம்மலும் பொங்கி வந்தன.

இளவரசியும் அவர் அருகில் உட்கார்ந்து அவரைத் தேற்றுவதற்கு முயன்றாள். அப்போது அவ்விருவருடைய கண்ணீரும் கலந்து ஒன்றாகும் படி நேர்ந்தது.

உலகநாதத்தேவர் சீக்கிரத்திலேயே தம்மைத் தேற்றிக் கொண்டார். கொஞ்சங் கொஞ்சமாக இளவரசியைத் தூண்டிக் கேட்டு, அவளுடைய தந்தையின் மூலம் அவள் அறிந்த எல்லா விவரங்களையும் தாமும் தெரிந்து கொண்டார்.

9. வெறி முற்றியது!

அன்று பிற்பகலில், அஸ்தமிக்க இன்னும் ஒரு ஜாமம் இருந்தபோது, சோலைமலை இளவரசி தன்னுடைய படுக்கை அறை மஞ்சத்தில் விரித்திருந்த பட்டு மெத்தையில் படுத்து அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். சூரியன் எப்போது மலைவாயில் விழுந்து தொலையும், எப்போது சந்திரன் குன்றின் மேலே உதயமாகும் என்று அவளுடைய இதயம் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது. இளம் பிராயம் முதல் மாணிக்கவல்லியை எடுத்து வளர்த்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி வந்த செவிலித் தாய் அப்போது அங்கு வந்தாள். மாணிக்கவல்லியின் நிலையைப் பார்த்துவிட்டு, “அம்மணி! ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா? முகம் ஒரு மாதிரி பள பள வென்று இருக்கிறதே? கண் சிவந்திருக்கிறதே?” என்று கேட்டாள்.

“ஆமாம், வீரம்மா! உடம்பு சரியாகத்தான் இல்லை. அதோடு மனதும் சரியாக இல்லை!” என்றாள் இளவரசி.

“உடம்பு சரியில்லா விட்டால், மகாராஜா வந்ததும் வைத்தியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாம். ஆனால், மனதிற்கு என்ன வந்தது? ஏதாவது கவலையா, கஷ்டமா? குறையா, குற்றமா? மகாராஜா அப்படி யெல்லாம் உனக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே? கண்ணுக்குக் கண்ணாய் வைத்து உன்னைக் காப்பாற்றி வருகிறாரே?” என்று வீரம்மா கேட்டாள்.

“அப்பா எனக்கு ஒரு குறைவும் வைக்கவில்லைதான். என்னைப் பற்றிய கவலை ஒன்றுமில்லை. சற்று முன்னால் மாறனேந்தல் சண்டையைப் பற்றி ஞாபகம் வந்தது. அதனால் வருத்தமா யிருக்கிறது!” என்றாள் இளவரசி.

“லட்சணந்தான், போ! மாறனேந்தல் சண்டைக்கும் உனக்கும் என்ன வந்தது? அதைப் பற்றி நீ ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று கேட்டாள் வீரம்மா.

“ஏன் என்று நீயே கேட்கிறாயே? மாறனேந்தல் மகாராஜா குடும்பத்தைப் பற்றி நீதானே அடிக்கடி எனக்குச் சொன்னாய்! அவர்களுக்கும் நமக்கும் விரோதம் வந்தது பற்றி நீதானே வருத்தப்பட்டாய்? மாறனேந்தல் கோட்டையை நம்முடைய வீரர்களும் வெள்ளைக்காரர்களும் சேர்ந்து முற்றுகை போட்டிருக்கிறார்களாமே? மாறனேந்தல் மகாராஜாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி நேர்ந்ததோ என்று நினைத்தால் வருத்தமா யிருக்கிறது!” என்றாள் மாணிக்கவல்லி.

“அதற்காக நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன செய்வது, கண்ணே! எல்லாம் விதியின்படி நடக்கும். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இரண்டு வம்சத்தாரும் எவ்வளவோ ஒற்றுமையா யிருந்தார்கள். அக்கரைச் சீமையிலிருந்து தலையிலே கூடையைக் கவிழ்த்துக் கொண்டு இந்த வெள்ளைக்காரச் சாதியார் வந்த பிறகுதான் இரண்டு வம்சங்களுக்கும் இப்படிப் பட்ட விரோதம் ஏற்பட்டது. மூன்று மாதத்துக்கு முன்னாலேகூட தங்கச்சியைப் பார்க்க மாறனேந்தல் போயிருந்தேன். அங்கே எல்லாரும் உலகநாதத் தேவரைப் பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள், தெரியுமா? மன்மதன் மாதிரி லட்சணமாம்! குணத்திலே தங்கக் கம்பியாம்! வாயைத் திறந்து இரண்டு வார்த்தை பேசினால் பசி தீர்த்துவிடுமாம்!…”

“போதும் வீரம்மா, போதும்! இப்படி யெல்லாம் பேசிப் பேசித்தான் என் மனதில் என்னவெல்லாமோ ஆசையை நீ கிளப்பிவிட்டாய்!”

“அதற்கென்ன செய்யலாம், கண்ணே! உலகமெல்லாம் தேடினாலும் உலகநாதத் தேவரைப் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது சிரமம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கைப்பட நீ கொடுத்து வைக்கவில்லை. இரண்டு ராஜ்யங்களுக்கும் ராணியாகும் பாக்கியம் உனக்குக் கிட்டவில்லை. வெள்ளம் தலைக்குமேலே போய்விட்டது. நான் சொன்னதை யெல்லாம் அடியோடு மறந்து விடு!….”

“சொல்லுவதை யெல்லாம் சொல்லி விட்டு மறந்து போய்விடு என்று சொன்னால் எப்படி மறக்க முடியும், வீரம்மா! அது போகட்டும், சண்டை சமாசாரம் ஏதாவது உனக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லு!” என்று இளவரசி கேட்டாள்.

“மாறனேந்தல் கோட்டை இன்று காலையே பிடிபட்டு விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். பாவம்! மாறனேந்தல் மகாராஜாவும் மகாராணியும் இரண்டு இராஜகுமாரர்களும் என்ன கதி அடைந்தார்களோ?” என்று வீரம்மா சொல்லிக் கொண்டிருந்த போது, சோலைமலை மகாராஜாவின் பாதரட்சை சத்தம் சமீபத்தில் ‘கிறீச்’ ‘கிறீச்’ என்று கேட்டது. உடனே வீரம்மா தன் வாயை முடி அதன்மேல் விரலை வைத்து ‘பேசாதே!’ எனறு சமிக்ஞை காட்டி விட்டு அங்கிருந்து சென்றாள்.


மகாராஜா அறைக்குள்ளே வந்ததும், இளவரசி எழுந்து நின்று வணங்கினாள். “மாணிக்கம்! ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது? உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்று மகாராஜா கேட்டார்.

மாணிக்கவல்லி உள்ளுக்குள் பயத்துடனே, ”ஒன்றுமில்லை, அப்பா!” என்று சொன்னாள்.

”ஒன்றுமில்லை யென்றால் முகம் ஏன் வாடி யிருக்கிறது? வீரம்மா எங்கே? அவள் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை போலிருக்கிறது!” என்று கோபக் குரவில் மகாராஜா கூறினார்.

“இல்லை, அப்பா! வீரம்மா எப்போதும் என்னுடனேதான் இருக்கிறாள். சற்று முன்கூட இங்கே இருந்தாள். நீங்கள் வரும் சத்தம் கேட்ட பிறகுதான் சமையற் கட்டுக்குச் சென்றாள். அப்பா! முன்னே யெல்லாம் நீங்கள் அடிக்கடி என்னைப் பார்க்க வருவீர்கள். என்னுடன் பேசிக்கொண்டிருப்பீர்கள். என்னைக் கதை வாசிக்கச் சொல்லிக் கேட்பீர்கள். அங்கே இங்கே அழைத்துப் போவீர்கள். இப்போ தெல்லாம் நீங்கள் என்னைப் பார்க்க வருவதே யில்லை. வந்தாலும் நின்றபடியே இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் போய் விடுகிறீர்கள். எனக்குப் பொழுது போகிறதே இல்லை. அதனாலேதான் உடம்பும் ஒரு மாதிரி இருக்கிறது” என்றாள் மாணிக்கவல்லி.

“ஆமாம், குழந்தை! நீ சொல்லுவது மெய்தான். இப்போது நான் எடுத்திருக்கும் காரியம் மட்டும் ஐயத்துடன் முடியட்டும். அப்புறம் முன் போல் அடிக்கடி இங்கே வந்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன். உனக்குத் தகுந்த மாப்பிள்ளை கூடிய சீக்கிரம் நான் பார்த்தாக வேண்டும். இந்தச் சண்டை முடிந்த உடனே அது தான் எனக்குக் காரியம்!” என்று மகாராஜா சொல்லி வீட்டுப் புன்னகை புரிந்தார்.

இளவரசி முகத்தைச் சுளுக்கிக் கொண்டு, “அதற்கு அவசரம் ஒன்று மில்லை, அப்பா! உங்களை விட்டுப் பிரிந்து எங்கேயாவது தொலை தூரத்துக்குப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால், சண்டை இன்னமும் முடியவில்லையா? மாறனேந்தல் கோட்டை இன்று காலை பிடிபட்டு விட்டதென்று வீரம்மா சொன்னாளே?” என்றாள்.

“ஆமாம்; கோட்டை பிடிபட்டு விட்டது. அந்த மடையன் மாறனேந்தல் மகாராஜாவும் கடைசியில் தன்னந் தனியாக வாளேந்திச் சண்டை போட்டுச் செத்தொழிந்தான். ஆனால் நான் எந்தக் களவாணித் திருட்டுப் பயலைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேனே, அவன் பிடிபடவில்லை! இரவுக் கிரவே தப்பி ஓடி விட்டான். ஆனாலும் எங்கே ஓடி விடப் போகிறான்? எப்படியும் அகப்பட்டுக் கொள்வான்! அவன் மட்டும் என் கையில் சிக்கும்போது…” என்று சொல்லிச் சோலைமலை மகாராஜா பற்களை நறநறவென்று கடித்தார்.


இளவரசி சகிக்க முடியாத மன வேதனை யடைந்தாள். அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாததனால் வேதனை அதிகமாயிற்று. பேச்சை மாற்ற விரும்பி, “மகாராணியும் இரண்டாவது பிள்ளையும் என்ன ஆனார்கள்?” என்று கேட்டாள். ”அவர்கள் இருவரையும் வெள்ளைக்காரத் தடியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சென்னைப் பட்டணத்துக் கோட்டைக்குப் பந்தோபஸ்துடன் அனுப்பிவைக்கப் போகிறார்களாம்! இல்லாவிட்டால் அங்கே யிருக்கும் பெரிய துரை கோபித்துக் கொள்ளுவாராம்! அவர்களை மட்டும் என்னிடம் ஒப்படைத்திருந்தால், அந்தத் திருட்டுப் பயல் உலகநாதத் தேவன் எங்கே போனான் என்பதை அவர்கள் வாய்மொழியாகவே கறந்திருப்பேன். இப்போது தான் என்ன? அவன் நேற்று இரவு நமது கோட்டைக்கு அருகாமையில் வந்தவரைக்கும் தடையம் கிடைத் திருக்கிறது. நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலேதான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் எப்படித் தப்புவான் என்று பார்க்கலாம்!”

இவ்விதம் சொல்லி மகாராஜா, “ஹா ஹா ஹா” என்று சிரித்தது, பேய்களின் சிரிப்பைப் போல் பயங்கரமாக ஒலித்தது. மாணிக்கவல்லியின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த வேதனை, கவலை இவற்றுடன் இப்போது ஆவலும் பரபரப்பும் சேர்ந்து கொண்டன.

“மாறனேந்தல் இளவரசர் அகப்பட்டால் அவரை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டாள்.

“நல்ல கேள்வி கேட்டாய், மாணிக்கம்! நல்ல கேள்வி! அதைப் பற்றித் தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்து ஒரு முடிவும் செய்துவிட்டேன். அவனை நமது கோட்டை வாசலுக்கு அப்பாலுள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்குப் போடப் போகிறேன். தூக்கில் மாட்டியவுடனே அவன் செத்து விடுவான். ஆனாலும் அவன் உடலை மரக் கிளையிலிருந்து இறக்க மாட்டேன். அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருப்பான். கழுகும் காக்கையும் அவன் சதையைக் கொத்திக் கொத்தித் தின்ற பிறகு எலும்புக் கூட்டைக் கூட எடுக்க மாட்டேன்! சோலைமலை மகாராஜாவை அவமதித்தவனுடைய கதி என்ன ஆகும் என்பதை உலகம் எல்லாம் அறியும்படி, அவனுடைய எலும்புக் கூடு ஒரு வருஷமாவது நமது கோட்டை வாசலில் தொங்க வேண்டும்!” என்றார் மகாராஜா.


சொல்ல முடியாத பயங்கரத்தையும் அருவருப்பையும் அடைந்த மாணிக்கவல்லி கம்மிய குரலில், “அப்பா! இது என்ன கோரமான பேச்சு!” என்றாள்.

“பேச்சு இல்லை, மாணிக்கம்! வெறும் பேச்சு இல்லை! நான் சொன்னபடியே செய்கிறேனா, இல்லையா என்று பார்த்துக் கொண்டிரு! இதோ, நான் போய் இராத்திரி வேட்டைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். நீ உன் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள். வீரம்மா உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளா விட்டால், அந்தக் கழுதையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறெருத்தியை வைக்கிறேன், தெரிகிறதா?” என்று சொல்லிவிட்டுச் சோலைமலை மகாராஜா மறுபடியும் பாதரட்சை ‘கிறீச்’ ‘கிறீச்’ என்று சப்திக்க வெளியேறினார்.


மகாராஜா போன பிறகு இளவரசி சிறிதுநேரம் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சங் கொஞ்சமாகப் பிரமை நீங்கிப் புத்தி தெளிவடைந்தது.

இன்று முதல் மாறனேந்தல் மகாராஜாவாகி விட்ட உலகநாதத் தேவருக்கு நேர்ந்துள்ள பெரிய அபாயத்தை நினைக்க நினைக்க அவரை அந்த அபாயத்திலிருந்து எப்படியாவது தப்புவிக்க வேண்டும் என்பதில் அவளுடைய உறுதி வலுவடைந்தது. அன்று காலையிலேயே அவளுடைய உள்ளத்தில் உதித்திருந்த காதல் வெறி வளர்ந்து முதிர்ந்தது. யோசித்து யோசித்துப் பார்த்து, உலகநாதத் தேவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழி தான் உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். அவரைச் சில நாள் வரையில் கோட்டைக்குள்ளேயே இருக்கும்படி செய்தாக வேண்டும். தந்தையின் கோபம் சிறிது தணிந்த பிறகு, அவருக்குத் தன்னிடம் உள்ள அன்பைப் பயன் படுத்தி, அவருடைய பழி வாங்கும் உத்தேசத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். இந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது என்று இளவரசி உறதி செய்து கொண்டாள். பிறகு முன்னைவிட அதிக ஆவலுடன் அவள் இரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

– தொடரும்…

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *