கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2024
பார்வையிட்டோர்: 762 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் தூங்கவே இல்லை. சும்மாதான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் அந்திப் பொழுதாவது, ரோட்டுப் புழுதியாவது தெரியுமா? ஒதிய மரத்துப் பொய் நிழலில் களிமண்ணைத் தோலுக்கு நடுவில் கொடுத்து உயர்ந்த இரட்டை அட்டைச் செருப்பு தைக்கும் சக்லிதான் தெரியுமா? அல்லது பிறர் பேசுவதுதான் காதில் விழுமா? சந்தேகமில்லை. நான் தூங்கவே இல்லை. நான் ஒரு பேச்சை சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருந்தேன், அவ்வளவு தான். ஆழ்ந்த கவனத்தின் காரணமாக ஒருகால் தியானத் திலிருப்பவனைப் போல் கண் நாசி முனையில் லயித்திருக்க லாம். நான் கேட்டதை, பார்த்ததைச் சொல்கிறேன். 

ஒண்ணு, இரண்டு, மூணு என்று கஜக்கோல் முழம் போட்டுக் கொண்டிருந்தது. ”ஏழு” என்றதும் கத்திரிக் கோல் கத்தரித்தது. துணி இரண்டு துண்டாக ஓடிற்று. கஜக் கோலுக்கு மட்டில்லாக் கோபம் வந்தது. 

“இதுதானா வேலை? எதை எடுத்தாலும் துண்டாக்கிப் பிரிவினை செய்வது! பிளவு உண்டாக்கும் நடத்தையைப் போல் மோசம் ஓன்றுமே இல்லை. உன்னைக் கடையை விட்டு ஒழித்தால்தால் தையற்காரன் உருப்படுவான். நீ அவன் காலில் “ண”கென்று விழுந்து நசுக்கிய போதோ, துணி பைக் குறுக்கே கிழித்த போதோ திட்டினானே ஒழிய உன்னுடைய உண்மையை அறியவில்லை. தையல்காரனுக்கும் அவன் அண்ணனுக்கும் சண்டை உண்டானது உன்னால். உனக்குப் பிரதிநிதிகள் எங்கும் உண்டு. அதனாலேதான் உன்னையும் உன் வர்க்கத்தையும் உலகினின்றே ஒழித்துவிட வேண்டுமென்கிறேன்.” 

“அட முட்டாளே! என்னை நம்பித்தான் உன்னை வைத் திருக்கிறான். கத்திரிக்கோல் இல்லாமல் கஜக்கோல் மட்டும் உள்ள தையற்காரன் கடையைக் காட்டு.-இல்லை ஜவுளிக் கடையைத்தான் காட்டு- பார்ப்போம், நான் துணியைப் பிரித்து உடுப்பாக்க உதவி செய்யாவிட்டால் உன் முதலாளி ஆள்வதற்கு முதல் இருக்குமா? யோசி. இதில் நீ மட்டும் என்ன? இந்த ஊசி கூடத்தான்.” 

ஒரு கம்பிக் குரல் எழுந்தது. பார்த்தேன்; ஊசி. “இந்தா, படுத்துக்கிடக்கிறவனை வம்புக்கு இழுக்குறீங்களே, எனக்கே உன்னைக் கண்டால் பிடிக்காது. உனக்கு நான் எதிர்க் கட்சி. என்னிடம் வலுவில்லையே என்று ஒடுங்கிக் கிடந்தேன். நீ வலுவில் வந்து தொல்லை செய்கிறாய். கஜக்கோல் சொன்னதில் ஒரு வார்த்தையாவது பிசகா? நண்டு வாக்கிளியைப் போல் இரண்டு கிடுக்கிகளை வைத்துக் கொண்டு நீ படுத்துகிற பாடு! பார்த்தால் எதிருக்கு எதிராகப் போவது போல் பாசாங்கு. ஆனால் துணியோ எதுவோ நடுவில் அகப்பட்டுக்கொண்டு விட்டால் போச்சு! “டக்’ கென்று இரண்டு வாயும் சேர்ந்து அகப்பட்டதை அழிந்து விடுகிறது. கடை முழுதும் துண்டு துணுக்குகள்.”

சுத்திரிக்கோல் தன் கனத்த குரலில் பேசிற்று. 

“முட்டாள் கட்சிக்கு முன்னூறு பேர்கள். நீ வேறு கஜக்கோல் கட்சியா? உண்மையைக் கவனி. நான் இல்லா விட்டால் உனக்குத் தொழில் ஏது? பிரிக்காவிட்டால் சேர்க் கிற அவசியம் உண்டா? அழிக்காவிட்டால் ஆக்கும் வேலை உண்டா? இரண்டு இல்லாவிட்டால் ஒன்று உண்டா? எல்லாம் இரட்டை; தத்துவம் தெரியாமல் பிதற்றுகிறாயே.” 

“சும்மா இரு. நான் ஒன்றே. கிளை இருக்கும் ஊசி உண்டா? ஒன்று தனித்து நிற்கும். ஒன்று கூடினாலொழியப் பல உண்டாகாது. பிரிவுக்குக்கூட ஒன்றுவதுதான் குறி. கிழிந்த துணிகளை, நீ வெட்டி அழித்த துணிகளைச் சேர்த்து உருக்கொடுத்து, ஒன்றாக்கும் மந்திரவாதி நான். நான் ஒன்று.” 

திரும்பக் கத்திரிக்கோல் கர்ஜித்தது. “அதைத்தான் நானும் சொன்னேன். இரண்டு இருப்பதனால் தான் ஒன்றுக்கு வேலை. உலகம் இருப்பதால் தான் கடவுள் இருக்கிறார். இரண்டு துணி இல்லாவிட்டால் ஊசி எதைத் தைக்கும்? இதையும் கவனி. எல்லோருக்கும் ஒரு வேலை, ஒரு உபயோகம் உண்டு. அளவு இல்லாவிட்டால் சொத்து என்பதே இல்லை. அளவின்றிய உலகு இங்கில்லை. கஜக் கோல் சொத்தின் அறிகுறி,பிரிவினையும், பிளவும் இன்றி தனிமையும் தனித்தன்மையும் ஏற்படா, நான் வளர்ச்சியின் அறிகுறி, வேறு விதமாய்ப் பார்த்தால் பிரிவினை ஒன்றுவதற் காகத்தான். பலவற்றை ஒன்றாக்குவது-காய், கறி, பிஸ்கோத், அணில், மயில், மாடு அவ்வளவையும் உடலுடன் ஒன்றாக்குவது-உயிர், ஊசி உயிரின் பட்டாக் கத்தி; ஒருமையின் பாவட்டா. இவ்வளவும் சேர்ந்தது தையல் உலகம். ஏன்? உலகம் முழுவதுந்தான். நீ நான் என்று விறைக்காதே. கடைசியாகச் சொன்னால் மூவரும் ஒரே பொருள். எஃகின் பல உருவங்கள். வெந்நீர்ப் பானைக்குத் தோசைக் கல்லைப் பழிக்கும் பவிசு இல்லை. இருவரும் உடுத்தியிருப்பது அடுப்புக்கரி ஒருவர் இல்லாவிட் டால் மற்றவர் இல்லை. அணு இல்லாவிட்டால் அகண்டமும் இல்லை, தெரியுமா? நான் இல்லாவிட்டால் நீயும் தையற் கடையும் இல்லை. அதை நம்பி வாழும் உலகமும் இல்லை. நீதான் உபயோகம், ஆதலால் உயர்வு என்றெல்லாம் பெருமை கொள்ளாதே. ஏ தடியா! கஜக்கோல்.”

‘புஸ்புஸ்’ என்று மூச்சு வாங்கிற்று. கத்திரிக்கோலின் கடல் மடைப்பேச்சு அதன் சுவாசப் பையிலே திரும்பி எதிரொலித்திருக்க வேண்டும். அதுமேலே பேசமுடியாமல் திக்குமுக்காடித் திணறித் தலை சுற்றிக் கீழேவிழுந்து ஆயிரம் சுக்கலாயிற்று! ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! ஓர் எஃகுத் தூள்கூடத் தரையில் காணவில்லை. எங்கும் நெல்லும் நெல்மணியும் இறைந்து கிடந்தன. மறு விநாடிக்குள் நெல்லெல்லாம் எழுந்து குவிந்து ஒருபுறம் நெல்மணியைப் பார்த்துச் சிரித்து ஏசின. 

“இங்கே கூடவா எழவெடுக்க வந்துவிட்டாய், சோம்பேறி! ரத்தத்தை உரமாக்கிக் குடியானவன் என்னை விதையிட்டு விட்டு மகசூலுக்காகத் தவம் கிடக்கிறான். நீயோ அவனையாவது என்னையாவது கேட்காமல், தானே முளைத்து விடுகிறாய்! அதுவும் எங்கள் மத்தியில், ஈட்டி, ஈட்டியாய் சடை சடையாய் எப்படிக் காய்க்கிறாய்! உன்னை யாராவது சீண்டுகிறார்களா? உன்னாலே என்ன உபயோகம்? நாக்குச் செத்துப் போனால் ஒரு கிராம்பைப் போலவாவது உபயோகப்படுகிறாயா? எட்டி பழுத்து என்ன? எங்களைப் போலவா நீ?”

நெல்லின் சலசலப்புக்கிடையில் கம்பீரமான அழகிய குரல் ஒன்று கேட்டது; நெல்மணியின் குரல்: “இந்தா, உபயோகம், உபயோகமற்றது என்றெல்லாம் உளறாதே. உபயோகப்படக் கூடிய பொருள்களெல்லாம் அழியக் கூடியன. அவைகள் அழிவதுடன் உபயோகப்படுத்துகிற வர்களையும் அழித்துவிடும். ஊன்றிப் பார்த்தாலொழிய இந்த நுட்பம் தெரியாது. வயலில் விளைந்த மகசூலைக் களத்தில் அடிஅடி என்று அடிக்கிறான். பிறகு மிஷினில் போட்டு அரைக்கிறான். அரிசியாகி வீட்டுக்கு வந்தாலோ சோறாக நெருப்பில் வேக வேண்டும். பட்சணமாக உரலில் மசிந்து மாவாகி சுடுகிற எண்ணெயில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். உபயோகப்படுகிற பொருளுக்கு இவ்வளவு விமரிசை. இப்பொழுது யோசித்துச் சொல்லு.’ 

“அதுதான் எங்கள் தியாகம். ஒவ்வொரு நிலைமையிலும் எங்களையே பலியிட்டுக்கொண்டு பிறரைப் போஷிக்கிறோம். அந்த உபயோகந்தான் எங்கள் சிறப்பு.” 

‘”என்ன பிதற்றல்! இவ்வளவு தொல்லையும் நீங்களாக ஏற்றுக்கொண்டதில்லையே. உங்கள் மீது அன்பு பூண்ட வேஷக்காரன், குடியானவன் அல்லவா சுமத்துகிறான்? உபயோகத்தின் இடைவிடா நிழல் துன்பம். ஏதேனும் ஒருவிதத்தில்…ஆனால் வேறு ஒரு நிலை உண்டு. புஷ்பத் தைப் பார்! உணவு உபயோகப்படுவதைப் போல் அது உபயோகப்படுகிறதா? அல்லது துயரத்திற்குத்தான் ஆளா கிறதா? புஷ்பத்தைக் குதூகலத்துடனே பெண்கள் வரவேற்றுத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறார்கள். பெண்கள் மட்டுமா? தெய்வங்கள் தலையிலும் இடம் பெறு கின்றன. நானும் அந்த கோஷ்டிதான். என்னை யாராவது தொல்லை செய்கிறார்களா? இல்லை. ஏனென்றால் நான் உபயோகப்படுவதில்லை. அழகுணர்ச்சி கொண்டவர்கள் என்னை நாடி எடுத்துக் கூடையாகக் கோத்து வழிபாட்டு மலரைத் தாங்கிச் செல்லும் கௌரவத்தை அளிக்கிறார்கள். அழகு தானே முளைப்பது; பிறர் பயிர் செய்வதல்ல. நானாய் முளைப்பதன் ரகசியம் இதுதான். நான் நடுவில் முளைக் கிறேன் என்று குற்றம் சாட்டுகிறாயே அது ஏன் தெரியுமா? வயிறு நிறைந்தால் திருப்தி ஏற்படுகிறது. இன்பம் உண்டா வதில்லை. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் என்றெல்லாம் ஒரு பாட்டி பாடினாளே, அது ஒரு பிலாக் கணமா, இன்பத்தின் குரலா? 

இன்பத்திற்கு எங்களைச் சரணடைய வேண்டும். இதை நினைப்பூட்டவே உபயோகத்தின் நடுவில் நான் முளைத்திருக் கிறேன். புரிந்ததா?” 

“அது இருக்கட்டும் நீ மட்டும் அழிவதில்லை என்றாயே, அதோ பார்; குடியானவன் வருகிறான். கருக்கரிவாள் வருகிறது. உன்னையும் என்னையும் சேர்த்து அறுவடை செய்யப் போகிறான் உன் கர்வம் நியாயமா?” 

“நாங்கள் அழியாத பொருள்களுடன் உறவு பூண்டிருக் கிறோம். அழகு அழிந்தாலன்றி எங்கள் இனம் அழியாது. அடுத்த வருஷம் குடியானவன் பயிர் செய்தாலன்றி உன் இடத்தில் புல் முளைத்துப் போகும். நீ முளைக்கமாட்டாய். ஆனால் நானே தானாக முளைப்பேன். தான் தோன்றிக்கு அழிவு உண்டா?'” 

‘சுருக்’ ‘சுருக்’ என்ற ஓசை கேட்டது. “கட்டு ஆறு மரக்கால் கூட நெல் காது போலிருக்கு. எழவெடுத்த மானம் செய்த வேலை” என்றான். ஒரு குடியானவன். 

“ஆனால் இதைப் பாரேன்; நெல்மணி சடைச்சிருப் பதை! செட்டிச்சி அம்மாகிட்ட இவ்வளவு நெல்மணியையும் கொடுத்தால் பத்துரூபாய் கிடைக்கும்” என்றாள் குடியானச்சி. 

நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுதே கருக்கரிவாள் நெற்கதிரில் புகுந்து எழும் ஒலியுடனே வேறு ஒலியும் கலந்து வந்தது. 

“எழுப்படா அந்த ஆளை. அந்திப் பொழுதிலே கடை விலே தூங்கிக்கிட்டு”. 

நான் தூங்கினேனாம்.

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *