சிதிலம் தாங்காத சிற்பிகள்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 2,269 
 
 

 (2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

‘நுாறு கோடி ரூபாய் மொத்தமாய் நஷ்டம்!’ சினிமாத் துறைக்கு வந்து வாழ் நாளில் இப்படி ஒரு சிக்கல், சறுக்கல் சிவாவிற்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு இயக்குநர் தன்னை வெகு சுலபமாக இப்படி ஏமாற்றி பழி வாங்கிவிட்டான் என்பதை இவனால் சுலபமாக ஜீரணிக்க முடியவில்லை.

‘ஏன்டா இப்படி?’ சட்டையைப் பிடித்தாலும் ஆபத்து. எதிரிக்கு எதிரி முரடன் மட்டுமில்லை. தனக்கு சமமான பக்க பலம் உள்ளவன். அதையும் தாண்டி நியாயம் கேட்டால் இதனால்தான் இப்படி என்று மொத்த வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றி…இதுவரையில் குருவி சேர்த்ததுபோல் சேர்த்து வந்த தன் புகழுக்கு ஆபத்து! – நினைக்க நினைக்க என்னவோ போலிருந்தது, இன்னும் ஒரு பக் வைத்தான்.

“வேணாம் நண்பா. அதிகமாய்ப் போறே!” உள் மனம் எச்சரித்தது.

“போவட்டும் அவனை அழிக்கனும். மொதல்ல அவன் புதுப்படத்தை நிறுத்தனும். அந்த தயாரிப்பாளருக்குப் போன் செய்து அவனுக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க. சொல்லி தடுக்கனும்.” சிவாவாய் நின்று இன்னொரு மனம் கூவியது.

“ஆத்திரத்துல அறிவிழந்து பைத்தியக்காரத்தனமா யோசிக்காதே! வாய்ப்புக் கொடுக்காதீங்கன்னு சொல்லி தடுத்து அந்த படத்தை இன்னொரு ஆளை வைச்சு எடுக்க முடியாது. பரத் விடமாட்டான் அது பெரிய சிக்கல். முடிகிற காரியம் இல்லே.”

“படத்தை மொத்தமாய்த் தடுக்கலாமில்லே?”

“செய்யலாம். அங்கேயும் சிக்கல்.”

“என்ன?”

“பூசை செலவு நடிகர் நடிகைகள் மற்றவர்களுக்குன்னு ஒரு குறிப்பிட்ட தொகை முன் பணமாய்ப் போயிருக்கும். இயக்குநர் என்கிற முறையில் பரத்தும் வாங்கி இருப்பான். இந்த நேரத்துல போய் தயாரிப்பாளர்கிட்ட ‘படத்தை ட்ராப் பண்ணு’ அவனைத் துாக்குன்னா சம்மதிக்க மாட்டார். அவர் சம்மதிச்சாலும் பரத் விடமாட்டான். கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஒப்பந்தப்படிவத்தை வைச்சு வழக்குப் போட்டு ஆளை உண்டு இல்லேன்னு ஆக்குவான். அதிலும் நீ தான் செய்தேன்னு தெரிஞ்சா பரத் இதைக் கண்டிப்பா செய்வான்.” முன் மனம் சொல்ல.. சிவா மனம் வாக்குவாதத்தில் இறங்கியது,

“எல்லாம் செய்யலாம் எனக்கு இருக்கிற செல்வாக்கை வைச்சு நான் உனக்கு கால்ஷீட் தர்றேன். இப்போ எடுக்கிற படத்தை நிறுத்துன்னு சொன்னா பணம் காய்ச்சி மரமே நம்மை தேடி வருது. எதுக்கு இந்த இயக்குநருக்காக எவனோ ஒருத்தனை வைச்சு படம் எடுத்து லாபமோ நஷ்டமோன்னு வீண் பரிசோதனையில இறங்கனும்ன்னு நெனைச்சு அவர் படத்தை ட்ராப் செய்வார். ஏன் படத்தை திடீர்ன்னு ட்ராப் பண்றீங்கன்னு பரத் கேட்டால் படம் எடுக்க பணம் கைவசமில்லே. கேட்ட இடத்துல கெடைக்கலை அதனால செய்யுறேன் நீ முன் பணத்தை திருப்பத் தேவை இல்லேன்னு சொல்லச் செய்யலாம்.“

“நடிகர் நடிகைகள் முன் பண நஷ்டத்தை தயாரிப்பாளர் எப்படி ஒத்துப்பார் சம்மதிப்பார்?”

“அவர் மொத்த செலவு தொகையையும் நாம கொடுக்கறேன்னு சொன்னா தயாரிப்பாளர் நமக்குச் சலாம் போட்டு ஒத்துப்பார். இல்லே கால்ஷீட் கெடையாது இந்த படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லி நடிகர் நடிகைகளை முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் செய்து படத்தை நிறுத்தலாம். நான் சொன்னா போதும் வம்பு வேணாம்ன்னு நடிகர்கள் திருப்பிடுவாங்க.”

“முன்னே சொன்னது சாத்தியம். பின்னே சொன்னது சாத்தியமில்லே. பரத் நடிகர் நடிகை மீது கேஸ் போட்டு கோர்ட் வரை போவான். யாரும் சம்மதிக்க மாட்டாங்க. கஷ்டம். படம் வெளியானால் இமேஜ் போயிடும். அதுக்குப் படத்தை நிறுத்தனும்ன்னா இதையெல்லாம் செய்துதானாகனும். நம்ம கிட்ட இருக்கிற சொத்து பணத்துக்கு இந்த நஷ்டம்ங்குறது சர்வ சாதாரணம். நம்ம காலை மிதிச்சவன் தலையை மிதிக்கனும்ன்னா இதெல்லாம் பெரிசு கெடையாது. அடுத்து நமக்கு இந்த பணத்தைச் சம்பாதிக்கிற வழியும் சுலபம். இருக்கிற எல்லா தயாரிப்பாளர்களுக்கும் போன் செய்து இல்லே நேரடியாய்ப் போய் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க நான் கால்ஷீட் தர்றேன்னு சொன்னால் எல்லாரும் இந்தப் பக்கம் சாய்ஞ்சு படமெடுப்பாங்க. சம்பாதிப்புக்குச் சம்பாதிப்பு பரத்துக்கு அடி. முரண்டுற தயாரிப்பாளர்களுக்கு அரசியல் செல்வாக்கை வைச்சு கொஞ்சம் தொந்தரவு கொடுத்தால் பரத் பிழைக்கவே வழி இல்லாம போகும். அடுத்து நடிகர் சங்கத் தலைவர்கிட்ட புகார் கொடுத்து அவன் கதை சொல்ல வந்தாலோ கால்ஷீட் கேட்டு வந்தாலோ எல்லாரும் திருப்பி அனுப்புங்கன்னு சொல்ல வைச்சால் பரத் சுத்தமா காணாமல் போவான். தமிழ் நாட்டு மக்கள் ரசிகர்கிட்ட செல்வாக்கு சரியாம இருக்கனும் திரை உலகத்துல நீதான் அசைக்க முடியாத புள்ளியாய் இருக்கனும்ன்னா இதை நீ செய்துதான் ஆகனும். மேலும் உன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள நீ எதுவும் செய்யாத ஆள் கிடையாது.” ஆணி அடித்துச் சொல்லி நிறுத்தியது,

மனம் சொல்வது சரி.

பத்தாண்டுகளுக்கு முன் சிவா சினிமாத்துறையில் புகழின் உச்சியை எட்டிவிட்ட நேரம். அப்போது இவனுக்கு ஒரு சிக்கலான ஒப்பனை. ஒப்பனை அறையிலிருந்து வர வெகு நேரமாகி விட்டது. காலை ஆறு மணியிலிருந்து அவனுடன் நடிக்க இருந்த குணச்சித்திர நடிகருக்கு காத்திருந்து காத்திருந்து கடுப்பு. சிவாவிற்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர். அவருக்கு அடுத்தப் படத்திற்கு நடிக்கப் போக வேண்டிய நிர்பந்தம் வேறு. ‘இவனுக்காகவெல்லாம் நான் காத்திருக்கவேண்டிய நிலை!’ வாய்விட்டுச் சொல்லி தன் நிலையை நொந்து கொண்டார். பக்கத்திலிருந்த சிவாவின் அடிவருடி அவன் ஒப்பனை அறையிலிருந்து வந்த அடுத்த விநாடி, ‘ சார்! உங்களை அந்த ஆள் அப்படிச் சொல்றார் சார்!’ போட்டுக் கொடுத்துவிட்டான்.

சிவாவிற்குக் கோபம் தலைக்கு மேல் எகிறியது.

இயக்குநர், தயாரிப்பாளரை அழைத்தான்.

“அவனோட நடிக்க மாட்டேன். அந்த ஆள் இந்த இடத்தை விட்டுப் போனால்தான் படப்பிடிப்பு!” என்று கண்டித்தான்.

அவர்கள் ஆடிப் போனார்கள்.

“சார்! அவரை வைச்சு வைச்சு ஏகப்பட்ட காட்சிகள் எடுத்தாச்சு. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டு மனசுல வைச்சுக்காம இருந்தீங்கன்னா படம் முடிஞ்சுடும்” சொன்னார்கள். அவர்கள் கெஞ்சல் இவன் காதில் விழவில்லை.

“அதெல்லாம் முடியவே முடியாது!” கறாராக சொன்னான். அவர்கள் தலையில் கைவைத்துக் கொண்டு விழிக்க… “அந்த ஆள் நடிச்ச காட்சிகளையெல்லாம் வேற ஆள் வைச்சு எடுங்க. அந்த மொத்த செலவுகளையும் நான் ஏத்துக்கிறேன்.” சொன்னான்.

அந்த நடிகர் காட்சிகளை வேறு ஆள் வைத்து எடுத்தாலும்..அவர் அளவிற்கு எடுபடாது என்று இயக்குநர், தயாரிப்பாளர்களுக்குத் தோன்றினாலும்…சிவாவின் முரண்டு அவர்களை மிரட்டியது. வேறு வழி இல்லாமல் பணிந்தார்கள்.

சிவா அந்த நடிகரை அன்றையப் படப்பிடிப்பை விட்டுத் துரத்தியோடு மட்டுமல்லாமல் அடுத்து அவரை தன் படங்களிலெல்லாம் நடிக்க விடாமல் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் தொலைபேசி செய்து வாய்ப்புக் கொடுக்காமல் செய்து படத்துறையை விட்டே துரத்தினான்.

அடுத்து தன்னோடு ஒத்துப் போகாத நடிகை ஒருத்தியையும் திரைத் துறையை விட்டுத் துரத்தி மாடி வீட்டு ஏழையாக்கினான்.

இதெல்லாம் அவனை எதிர்த்தவர்கள் கதி. இவனுக்குத் திரைத்துறையிலிருந்து…எள்ளளவு ஏச்சு, பேச்சு, இலைமறைவு காய் மறைவு எந்த விசயங்களும் பிடிக்காது. அந்த அளவிற்கு இவன் திரைத்துறையில் சீமை செல்வாக்கு. பணம் காய்ச்சி மரம். பாத்துக்கடா..! – சிவா தலையை சிலுப்பி நினைவைக் கலைத்தான்.

இப்படிப் பட்ட தனக்கு ‘பரத் எதிரி. விடக்கூடாது!’ முடிவிற்கு வந்தான்.

இன்டர்காம் எடுத்து, “செல்லதுரை!“ அழைத்தான்.

“இதோ வர்றேன்!” அலுவலக வேலையாய் இருந்த அவன் சிறிது நேரத்தில் சிவா அறைக்குள் நுழைந்தான்.

“பரத் எந்த கம்பெனிக்குப் படம் பண்றான். தயாரிப்பாளர் யார், அவர் வீடு எங்கே இருக்கு, போன், கைபேசி எண்கள் என்ன..? என்கிற மொத்த விபரங்களும் என் கைக்கு வேணும்.” சொன்னான்.

“சரி.” செல்லதுரை தலையாட்டினான்.

“நாம நேரடியாய் தயாரிப்பாளர் வீட்டுக்கேப் போய் விசயத்தைச் சொல்லி அவனைப் படத்திலேர்ந்து தூக்கச் சொல்வோம். போன்ல பேசுறதை விட நேரடியாய்ப் போய் பேசினால் ஆள் மறுக்க முடியாது. செய்வார் செய்துதானாகனும், செய்யலைன்னா அவன் கதி அதோகதி. இவன் மட்டுமில்லே. என்னை எதிர்த்தவன், மறுத்தவன் எல்லாருக்கும் இதே கதி!” தெளிவாய்ச் சொன்னான்.


மறுநாள் காலை அந்த தயாரிப்பாளருக்குப் போன் செய்து இருக்கச் செய்து விட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

பல ஏக்கர் பரப்பளவின் நடுவில் அந்த வீடு பிரமாதம் பிரமாண்டமாக இருந்தது. கேட்டின் முன் ஹாரன் அடித்ததுமே கூர்க்கா எந்த வித பேச்சும் பேசாமல் கேட்டைத் திறந்து விட்டான். கார் உள்ளே நுழைந்து போர்டிகோவில் நின்றது.

பணம் காய்ச்சி மரமே தன்னைத் தேடி வருதை நினைத்துப் புளகாங்கிதம் அடைந்த தயாரிப்பாளர் சண்முக சுந்தரம் ஓடி வந்து காரிலிருந்து இறங்கிய சிவா, செல்லதுரையை வரவேற்றார். மாடி ஏற்றி தன் பிரத்தியோக அறையில் அமர வைத்தார்.

“சொல்லுங்க சார்?“ நின்று கை கட்டி குனிந்து பணிவாக கேட்டார்.

“பரத் இயக்கத்தில் படம் எடுக்குறீங்களா?”

“ஆமாம் சார்!”

“படம் எத்தினி அடி வளர்ந்திருக்கு?”

“இன்னும் தொடங்கலை. படப்பிடிப்பு நடக்க இடம் தேடும் வேலையிலிருக்கோம்!”

“யார் யாருக்கு முன் பணம் கொடுத்திருக்கீங்க?”

“கதாநாயகன், கதாநாயகி படம் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் கொடுத்திருக்கோம்.”

“எவ்வளவு?“

“கிட்டத்தட்ட ஒரு கோடி!”

“எல்லா முன் பணத்தையும் திருப்பி வாங்க முடியுமா?”

அவர் விசயம் புரியாமல் ஏன் என்பது போல் ‘ஙே!’ விழித்தார்.

“இந்த இயக்குநர் இல்லாம வேற ஆள் வைச்சு செய்யலாமா?“

“ஏ….ன்?“

“பரத் படத்தை இயக்கக்கூடாது!”

சிவாவின் முகத்தைப் பார்த்தே “உங்ககிட்ட அவர் ஏதாவது தப்பு செய்துட்டாரா?” கேட்டார் சண்முக சுந்தரம்.

“ஆமாம்!” சிவா தலையாட்ட செல்லதுரை படம் பெட்டியில் இருக்கும் விசயத்தைச் சொன்னான்.

“உங்க படத்துல மட்டுமில்லே. இனி யாரும் அவனுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாதுங்குறது என் முடிவு. ஏறக்குறைய எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன். கடைசியாய் உங்க கிட்டேயும் சொல்றேன். மீறி வித்தா பெட்டி வெளியில போகாது. முடங்கிடும்!” சிவா கறாராக சொல்ல…

சண்முகசுந்தரத்திற்கு எதிர்த்துப் பேச தெம்பில்லை.

“கொடுத்த முன் பணத்தையெல்லாம் சரியாய்க் கணக்குப் பார்த்து என்கிட்ட வந்து வாங்கிக்கோங்க. வேணாம்ன்னா அந்தப்படத்துல என்னைக் கதாநாயகனாய்ப் போட்டு வேற இயக்குநரை வைச்சு படம் எடுங்க, கால்ஷீட் தர்றேன். பரத் என்ன தொந்தரவு கொடுத்தாலும் நான் சமாளிக்கிறேன்!” கூர்ந்து பார்த்தான்.

சண்முக சுந்தரத்திற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

அதே நேரம் …சண்முகசுந்தரத்துக்குச் சிவா கால்ஷீட் கிடைக்கும் மகிழ்ச்சி. படம் தனக்கு நஷ்டமில்லாமல் தொடர்வது குறித்து பூரிப்பு.

‘சாமியே வரம் கொடுத்தப் பிறகு பூசாரி எதற்கு..? அந்த படமே வேண்டாம்!’ முடிவிற்கு வந்தார்.

”ஓ.கே சார். உங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா அது எனக்கும் உண்டு. நீங்க சொன்னபடியே செய்து படத்தை டிராப் பண்ணிட்டு உங்க கால்ஷீட்டுல வேற படம் ஆரம்பிக்கிறேன்.” என்றார்.

சிவா, செல்லதுரைக்குச் சந்தோசமாக இருந்தது.

“நன்றி.” திருப்தியாய் எழுந்து சண்முகசுந்தரத்துடன் கை குலுக்கி விடை பெற்றார்கள்.

அவர்கள் சென்ற அடுத்த வினாடி சண்முகசுந்தரம் தன் கைபேசி எண்களை அழுத்தி, “லொகேசன் பார்த்தது போதும். நான் படம் எடுக்கிற முடிவுல இல்லே. நான் எதிர்பார்த்தபடி பணம் கெடைக்கலை. உடனே வந்துடுங்க” சொல்லி பரத்துக்கு இடியை இறக்கினார்.

அதே சமயம் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த சிவா, செல்லதுரை தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களுக்குப் போன் செய்து பரத்திற்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு ஒப்புதல் வாங்கி மொத்தமாக அவன் தலையில் மண்ணைப் போட்டார்கள்.

அத்தியாயம்-6

கோவா துறைமுகத்தில் எங்கு எப்படியெல்லாம் படப்பிடிப்பு நடத்தலாமென்று யோசித்து பரத்தும் கணேசும் நின்று நின்று இடம் பார்த்தார்கள். கோணம் பார்த்தார்கள்.

பரத் பாக்கெட்டில் உள்ள கை தொலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். சண்முக சுந்தரம்.

காதில் வைத்து “சொல்லுங்க சார் ?” என்றான்.

“வேலை முடிஞ்சுடுச்சா ?”

“இல்லே சார். இன்னும் ஒரு வாரம் இருக்கும்.”

“வேணாம். உடனே திரும்பிடுங்க.”

”ஏன் சார்?”

“வந்து… வந்து..படத்தை நிறுத்தறேன்.”

“சார்ர்……!”

“அதிர்ச்சி அடையாதே. சரியான சிக்கல்ல மாட்டி இருக்கேன்.”

“என்ன சார் பணப்பிரச்சனையா?”

“இல்லே வேற…”

“என்ன சார் சொல்றீங்க?”

“நீ மோதின இடம் அப்படி!” என்றவர் சிவா செல்லதுரை வந்து போன விசயத்தை ஒன்று விடாமல் சொன்னார்.

கேட்ட பரத்துக்குப் ஆத்திரம் வந்தது.

“நீங்க அவருக்குப் பயந்துகிட்டு படத்தை நிறுத்துறீங்களா?” அடக்கிக் கொண்டு கேட்டான்.

“ஏறக்குறைய அப்படித்தான்!”

‘என்ன ஆள் இவர்? பயமுறுத்தினால் பயப்படுவதற்கு? கொஞ்சம்கூட எதிர்ப்பு சக்தி இல்லாமல்? என் வேலையை நான் பார்க்கிறேன். உங்க வேலையை நீங்க பாருங்க. சொன்னால் என்ன தலையாய் இறங்கிவிடும்.?’ நினைத்த பரத்…

“பயப்படாதீங்க சார். என்ன பிரச்சனை வந்தாலும் உங்களுக்கு எந்த தொந்தரவுமில்லாம நான் இருந்து சமாளிச்சு முடிக்கிறேன்.” தைரியம் சொன்னான்.

“வேணாம் பரத். அந்த ஆளைப் பத்தி உன்னைவிட எனக்கு அதிகம் தெரியும். அரசியல் செல்வாக்கு உள்ளவன். சமயம் பார்த்து கழுத்தறுப்பான். தொழில் செய்ய முடியாத அளவுக்குச் செய்வான். ஏன்? இவன் வருமான வரி கட்டாம கறுப்புப்பணம் வைச்சிருக்கான். அதுல படம் எடுக்கிறான். அப்படி இப்படின்னு போட்டுவிட்டு ஜெயிலுக்கே அனுப்புவான்.” என்றார்.

‘சிவா திரைத்துறையில்…தான் பெரிய ஆளாய் இருக்க வேண்டும். மதிக்க வேண்டுமென்று ஆட்களை எப்படி எப்பயெல்லாம் மிரட்டி திரைப்படத்துறையைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான்!’ நினைக்க திகைப்பு வந்தது.

“என்ன பரத் பேச்சைக் காணோம். சிவா சொன்னா நாம் கேட்டுக்கிறதுதான் நல்லது. பிரச்சனை இல்லாம ஒதுங்கிடுறது புத்திசாலித்தனம்!” என்று சண்முகசுந்தரம் இவனுக்குப் புத்தி சொன்னார்.

“அதுக்கு இல்லே சார். வந்து…”

“உங்க பிரச்சனை முடியட்டும் அடுத்த படத்துக்கு நான் உனக்கு வாய்ப்பு தர்றேன்.”

“வந்து…”

“நீ எதுவும் பேச வேணாம். என்ன பேசுறதா இருந்தாலும் நேரடியாய் நாம் பேசிக்கலாம். எல்லார்கிட்டேயும் போன் பண்ணி விசயத்தைச் சொல்லாம எதிர்பாராத விதமா திடீர்ன்னு ஒரு கஷ்டம். இப்போ படம் எடுக்கலை. கொடுத்த முன்பணம் எனக்குத் திருப்ப வேணாம். உங்க கால்ஷீட் தேதியெல்லாம் அடுத்து படம் எடுக்கும்போது பயன்படுத்திக்கிறேன். தயவு செய்து ஒத்துழைப்புத் தரனும் சொன்னேன். எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க போனை வைச்சுடு.” அணைத்தார்.

பரத்தும் கைபேசியை அணைத்தான்.

‘சண்முகசுந்தரம் எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து படத்தை நிறுத்தி விட்டார்!’ நினைக்க இவனுக்குள் இடி இறங்கியதைப் போலிருந்தது.

‘முதுகெலும்பு ஒடிந்த ஆள்! என்ன சொல்லி எப்படி நிறுத்தினாலும் நிற்க மாட்டார்!’ – புரிந்தது, மேலும்… இவரை நொந்தும் பிரயோசனமில்லை. கோடி கோடியாய்க் கொட்டும் தொழில் கொஞ்சம் இடறல் வந்தாலும் முதலீட்டிற்கு யாரும் பொறுப்பு கிடையாது. அப்படி இருக்கும் போது எந்த தயாரிப்பாளருக்கும் பயம் வரத்தான் செய்யும்! என்றும் நினைத்தான்.

“என்ன பரத்?” நண்பனின் முகவாட்டம் அருகிலிருந்த கணேசைக் கலக்கியது கேட்டான்.

“சிவா… சண்முகசுந்தரம் படத்தை நிறுத்திய விசயத்தைச் சொன்னான்.

கணேசுக்கும் அது எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது,

“இந்த திடீர் ரத்திற்கு சண்முக சுந்தரம் பேரில் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் எடுத்துப் போகலாமா?” – பரத்திற்கு யோசனை ஓடியது.

“என்ன நடக்கும்? விசாரித்து படமே எடுக்க முடியாது என்று உறுதியாக இருந்தால் நஷ்ட ஈடு வாங்கித் தருவார்கள். அதுதான் செய்ய முடியும் வேற வழி?

அதுமட்டுமல்லாமல்…சிவாவோடு தகராறு. அடுத்து இவரோடு தகராறு. சண்டை மேல் சண்டை. பரத் சண்டைக்காரன்ய்யா! அடுத்து வாய்ப்புகள் வருவது கஷ்டம் புரிந்தது.

“என்ன பரத் யோசனை?” கணேசு நண்பனின் முகத்தைப் பார்த்தான்.

பரத்திற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“நாம நிழலை மிதிச்சா சிவா தலையை மிதிப்பான்னு எதிர்பார்த்தேன். நடந்துடுச்சு. இப்போ அடுத்து என்ன செய்யப் போறதா உத்தேசம் ..?” என்ற கணேசு, “தயாரிப்பாளர் மேல வழக்குப் போடலாமா?“ கேட்டான். பரத் அவனை யோசனையுடன் ஏறிட்டான்.

“வேணாம்.” மெல்ல சொன்னான்.

“ஏன்?“

“என்னன்னு வழக்குப் போடுவே?”

“படம் ஆரம்பிச்சு சண்முகசுந்தரம் நிறுத்திட்டார். எனக்கு நஷ்ட ஈடு வேணும்ன்னுதானே போடனும்.”

“ஆமா.”

“அப்படிப் போட்டால் யாருக்குக் கஷ்டம்?”

“சண்முகசுந்தரத்துக்கு.”

“எய்தவர் அவரில்லே. சிவா!“

“சிவா பேச்சைக் கேட்டவர் கஷ்டப்படட்டும்!”

“அவர் கஷ்டப்படமாட்டார். சிவா நஷ்டத்தைத் தாங்கிப்பான். நமக்கு சிவா கஷ்டப்படனும். சுண்முகசுந்தரமில்லே.”

“அதுக்கு என்ன செய்ய?“

இருவரும் யோசனையில் ஆழ்ந்தார்கள்.


சுபிட்சம் படக்கம்பெனி முதலாளி சுந்தரத்துக்குத் தொழிலில் எல்லாரும் சுபிட்சமாய் இருக்க வேண்டுமென்ற ஆசை. அவருக்குத் தெரிந்து யாரும் கெட்டுப் போகக் கூடாது. சிவா நேரில் வந்து சேதி சொன்னதிலிருந்தே இரண்டு திறமைசாலிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தங்களைத் தாமே அழித்துக் கொள்கிறார்களே! என்று அவருக்குள் ஆதங்கம், ஏகப்பட்ட வருத்தம். நீண்ட நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்து கைபேசி எடுத்து எண்களை அழுத்தினார்.

“யாரு … பரத்தா?”

“ஆமாம் சார்.”

“எங்கே இருக்கே?”

“இப்போதான் சார் கோவாவுலேர்ந்து வந்து சென்னையில நுழையறேன்.”

“கோவா போனீயா என்ன விசயம்?”

“என் அடுத்த படத்துக்கு லொக்கேசன் பார்க்க சார்.”

“அந்தப் படம்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சுந்தரம் நிறுத்தி “நேரா என் அலுவலகத்துக்கு வரமுடியுமா? ஒரு முக்கியமான விசயம்!” என்றார்.

பெரிய தயாரிப்பாளர் எதற்குத் தன்னை உடனே அழைக்கிறார்? தனக்கு அடுத்தப் படம் செய்து தரவேண்டும் ஏதாவது கோரிக்கை அல்லது வேண்டுகோள் வைக்கப் போகிறாரா? என்ன ஒரு பாக்கியம்! ஒன்றை இழக்க மற்றொன்னு கையில். விசயம் புரியாத அவனுக்குள் சந்தோசம் தலை துாக்கியது,

“சரி சார்!” அணைத்து காரை சுபிட்சம் ஸ்டுடியோ நோக்கி விட்டான். காரை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அவர் அலுவலக அறைக்குள் நுழைந்தான். பின்னாலேயே… கணேசும் சென்றான்.

அந்த மரியாதைக்குரிய பெரியவர் இவர்களை எதிர்பார்த்தே காத்திருந்தார்.

“வாங்க ரெட்டையர்களா?” வரவேற்றார்.

“உட்காருங்க” எதிர் நாற்காலியைக் காட்டினார். அமர்ந்தார்கள்.

“உங்களுக்கும் சிவாவுக்கும் என்னப்பா தகராறு?” அவர் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.

இவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. பரத் ஒரு கணம் திகைத்து இவருக்கும் விசயம் தெரிந்திருக்கிறது என்று புரிந்து, “ஏன் சார்?” மெல்ல கேட்டான்.

“விசயம் இருக்கு சொல்லு?”

“ஒ…ன்னுமில்லே சார்..”

“பின்னே ஏன் அவர் படத்தை அப்படி செய்தே?“

விழித்தார்கள்.

“சிவா போட்டுக் காட்டினார். நான் பார்த்தேன். படம் ஓடக்கூடாதுன்னே ரொம்ப மட்டமா பண்ணி இருக்கே. படத்தொகுப்பு கொத்து பரோட்டா போட்டிருக்கீங்க. உங்களுக்குள்ளே நல்லது கெட்டது மனவருத்தம்ன்னா பேசித் தீர்த்துக்கிறது நல்லது. அதை விட்டுட்டு இப்படி செய்யிறது எப்படி சரி?”

இவர் கேள்வி நியாயமாக இருந்தது.

“அ… அது வந்து சார்…” பரத் தடுமாறினான்.

“உங்களுக்குள்ளே என்ன மனவருத்தம் சொல்லு?”

“அவர் இன்டஸ்டரியில நடந்துக்கிற விதம் பிடிக்கலை சார்.”

சுந்தரம், சிவாவையும் வைத்து படமெடுத்தவர். அவருக்கும் அவன் சில்லுண்டி சில்மிசங்கள் தெரியும்.

இருந்தாலும், “என்ன செய்யிறார் சொல்லு?” கேட்டார்.

“இங்கே தனக்கு எதிரி இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறவர் சார்…” என்று அவன் நடத்தையெல்லாம் சொன்னான்.

“இதெல்லாம் தெரிஞ்ச விசயம்தானே?!”

“இந்த துறை நல்லா இருக்கனும் பின்னால வர்றவங்க மரியாதையாய் வரனும் என்கிறதுக்காக நான் இந்த பூனைக்கு மணி கட்டினேன் சார்?”

“சரி. ஒன்றிரண்டு பேர்களைத் தவிர இந்தத் துறையில மேல் மட்டத்திலேர்ந்து அடிமட்டம்வரை எல்லாரும் அப்படித்தானே இருக்காங்க? ஏன்… அனுபவிக்கனும்ன்னே கஷ்டப்பட்டு வர்றாங்க. அதுல இவரை மட்டும் குறை சொல்லறது, தண்டிக்கிறது எப்படி சரி?”

“இவர் இந்தத் துறையைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆள் சார். தலையை அடிச்சா மத்ததெல்லாம் நேராகிடும் சார்.”

சுந்தரத்திற்கு, ‘என்ன சொன்னாலும் இவன் சரிபட மாட்டான்…முரடன்!..’ என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.

“உன்னால அவனை ஜெயிக்க முடியுமா?” கூர்ந்து பார்த்தார்.

“முடியும்ங்குறது என் நம்பிக்கை சார்.”

“நீ அவனால பாதிக்கப்பட்டியா?”

“ஆமாம் சார். அது ஆரம்ப காலம். அந்த காயம் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அவர் இப்பவும் தன் குணம், சுபாவத்தை மாத்திக்கலை என்பதுதான் என் வருத்தம், ஆதங்கம். அதனால இவரை அடிச்சு திருத்தனும்ன்னு நெனைச்சேன். அதுதான் அந்த படம்.”

“அப்போ திட்டம் போட்டுத்தான் அப்படி செய்தியா?“

“ஆமாம் சார். என் முதல் படத்தால அவர் வாழலை. நான் வாழ்ந்தேன். என் கதைக்குப் பொருத்தமான ஆள் அவர் என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்தேன். ஆனா…. படத்துல அவர் பெயரைவிட என் பெயர்தான் நிலைச்சு நின்னுது. ஆனா அதுக்காக அவர்கிட்ட நான் பட்ட கஷ்டம், அவமானங்கள் நிறைய. பலசாலிதான் சார். பலசாலியோட மோத முடியும். இத்தனை நாள் என் பலத்தை வளர்த்தேன். இப்போ மோதறேன், மோதிட்டேன்!” தெளிவாய்ச் சொன்னான்

“இதுல வெற்றி யாருக்குக் கிடைக்கும்ன்னு நெனைக்கிறே?” சுந்தரம் இவனைத் திருப்பிக் கேட்டார்.

“எனக்கு. நான் நெனைச்ச மாதிரி படம் பெட்டிக்குள்ளே போயிடுச்சு. படம் வெளியானா தோல்வி. நஷ்டம்.”

“இந்த தோல்வி, நஷ்டத்தால் சிவா துவண்டு போவார்ன்னு நெனைக்கிறீயா?”

“துவண்டதால் தானே உங்க வரை புகார் வந்திருக்கு?”

“இந்த புகார் வேற விசயம். இந்த தோல்வியால் உனக்கும் அடி, சறுக்கல் இருக்கு”

மௌனமாய் இருந்தான்.

“அடுத்து நீ படம் செய்ய முடியாதபடி எல்லா தயாரிப்பாளர்களுக்கும் சிவா உனக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாதுன்னு தடை போட்டிருக்கார். எனக்கும் அப்படியொரு வேண்டுகோள்” நிறுத்தி நிதானமாக சொன்னார்.

பரத், கணேசு திகைத்தார்கள்.

“தெலுங்கு, கன்னடம், மலையாளம் போக முடியாது. அங்கேயும் அவருக்கு ஆட்கள் இருக்கு.”

“நீங்க நெனைக்கிறது தப்பு சார். தமிழ் திரையிலதான் அவர் பிரபலம், முக்கியம். எல்லாரும் அவர் சொல் பேச்சு கேட்பாங்க. சிவாவை எதிர்த்துக்கிட்டா வாழ முடியாதுன்னு கோழையாய் இருக்காங்க. மத்த மொழிகள்ல ஒரு சிலரைத் தவிர மத்தவங்க கேட்பாங்க.”

“இங்கே நீ பேர், புகழைத் தொலைச்சிட்டு அங்கே போய் கொடி கட்டி வாழ்ந்தாலும் அர்த்தமில்லையே!”

“அர்த்தமில்லேன்னாலும் என்னை அழிக்க முடியாததுதானே நிசம்”

“இல்லே. இங்கே தற்போதைக்கு நீ அழிஞ்சவன்! சிவா ஜெயிப்பு! யோசி புரியும்”

இன்றைய நிலமை. தான் அசைய முடியாத அளவிற்கு ஆப்பு. இந்த உண்மை பரத்திற்குள் சுட்டது.

“அந்த ஆள் அடுத்த படத்துல ஜெயிச்சுடுவான். எதிர்த்து தோத்தவன் நீ!“ சுந்தரம் உண்மையை ஒளிக்காமல் சொன்னார். கணேசுக்குள்ளும் இது வலியை ஏற்படுத்தியது.

“சமாதானமாய்ப் போயிடுங்க. அவனை எதிர்த்துக்கிட்டு இந்த தமிழ் சினிமாவுல வாழ்றது கஷ்டம். நான் சமாளிச்சு வழிக்குக் கொண்டு வர்றேன். சமாதானமாய்ப் போறதுன்னா நீ சிவாகிட்ட மன்னிப்பு கேட்கனும்.” பரத்திற்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

“வேணாம் சார்!” என்றான்.

“எனக்கு ரெண்டு திறமைசாலி ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து அழிஞ்சு போகாம வாழனும்ங்குறது ஆசை.”

ஒரு பெரிய மனிதன் தனக்கு மட்டுமில்லாது பொதுவாய் எப்படி ஆசை படுகிறார்?! பரத்திற்கு அவர் மேல் இன்னும் மதிப்பு மரியாதை கூடியது.

“அதனாலதான் ரெண்டு பேருக்கும் சண்டை வேணாம். யாராவது ஒருத்தர் சண்டைக்குக் காரணமான நீ தாழ்ந்து போறதுல தப்பில்லேன்னேன்.”

“நீங்க என்ன என்ன சமாதானம் கூறினாலும் சிவா சமரசத்துக்கு வரமாட்டார் சார். உங்களுக்கு மதிப்புக் கொடுத்து அப்படியே சமாதானம் சமரசத்துக்கு வந்தாலும் மனசுக்குள்ளே வஞ்சம் இருக்கும். சமயம் பார்த்து எப்படியும் எங்க காலை வாரி விடுவார். அப்போ உங்களுக்கு வலி எங்களுக்கு அடி. நாங்க நிரந்தரமா நிற்கனும்ன்னா எடுத்த வாளை உறையில வைக்கக்கூடாது.” கணேசு சொன்னான்.

சுந்தரத்திற்கு அவன் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது, பெருமூச்சு விட்டார்.

இவர்கள் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள்.

மறுநாள் தினசரிகளில்…

சிவா – பரத் உறவில் சிக்கல். சமாதானப்புறா சுபலட்சுமி ஸ்டுடியோ சுந்தரம் தோல்வி! – கொட்டை எழுத்துக்களாக வெளிவந்தது.

நாட்டில் வெளிச்சத்திற்குக் கொண்டுவர எவ்வளவோ நல்ல விசயங்களிருந்தாலும் சினிமா நடிகர், நடிகைகள் தும்மினாலும்…துாங்கினாலும் மோப்பம் பிடித்து செய்தியாக வெளியிடும் நிருபர்கள் இந்த கைங்கரியத்தைச் செய்திருந்தார்கள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *