கோவிந்தசாமி என்னும் இந்தியன்
உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது. செல்போனையும் என்னையும் காலையிலே எழுப்பியது பிரமோத்.

“குட் மார்னிங் பிரமோத், என்ன காலையிலே… மலேசியாவிலிருந்து வந்துட்டிங்களா”
“கொழும்புல இருந்து யாராவது உங்களுக்கு கால் பண்ணாங்களா?”
“இல்ல பிரமோத். ஏன் என்ன ஆச்சு?”
“உங்க ஐயா இறந்துட்டாரு சரண்”
“என்ன பிரமோத் சொல்லுறீங்க, எப்படி”
“காலையில உங்க ஐயா பூ பறிக்க போயிருக்காரு. எங்க டேவிட் மாமா எப்போதும் போல கடை திறக்க 6 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி போகும் போது, நம்ம லேன் வளைவுக்கிட்ட இருக்க பூ மரத்து பக்கத்துல ஐயா விழுந்து கிடந்தத பார்த்து உங்க நந்தா மாமாகிட்ட சொல்லியிருக்காரு. உங்க மாமா ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனதுக்கு, முன்னமே இறந்து போயிட்டாருனு டாக்டர் சொன்னராம். நெஞ்சுவலியாம் சரண்”
என் தாத்தா இறந்த செய்தி தொலைதூரத்திலிருக்கும் பிரமோத்திற்கு தெரிந்துள்ளது. இலங்கையிலிருக்கும் எனக்கு தெரியவில்லையே. அது சரி என்னைதான் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்களே. வெளியேறி விட்டால் என்ன? கோவிந்தசாமியின் மகள் பாமாவின் மகன் நான் தானே.
எப்போதும் சுருட்டும் கையுமாயிருக்கும் ஐயாவின் நினைவு வந்தது. நந்தா மாமாவின் மச்சான் சிவா தான் ஐயாவிடம் நான் குடிப்பதை சொன்னான்.
“ஏண்டா குடிக்க பழகியிட்டியா” என்று சுருட்டு புகையை விட்டு கொண்டே கேட்டார் ஐயா.
சிவாவை முறைத்தப்படியே “யாரு சொன்ன உங்களுக்கு அதெல்லாயில்ல” என்றேன்.
ஐயா பேக்கை பிடுங்கி சோதனை செய்ய ஆரம்பித்தார். பேக்கிலிருந்த பியர் டின்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கும், சிவாவிற்கும் ஒவ்வொரு டின் கொடுத்து ஒரு டின்னை திறந்து அவர் மடக் மடக்கென குடிக்க தொடங்கினார்.
அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வது எரிமலையின் அருகில் நின்று படம் பிடிக்க ஆசைப்படுவதும் ஒன்றே. என்னதான் நான் அவரது மகளின் மகன், பேரன் என்றாலும் எனக்கும் அவருக்கும் ஏழரை பொருத்தமே. அம்மம்மா, அம்மா,
மாமா முதற்கொண்டு எல்லோரும் அவரை ‘ஐயா’ என்று அழைப்பதால் சிறுவயதிலிருந்து நானும் அவரை அப்படியே அழைத்து பழகினேன். வீட்டு புரோக்கர் என்பதால் சிலர் அவரை ‘புரோக்கர் ஐயா’ என்றும் அழைப்பார்கள் திருமணத்திற்கு பிறகு எனது அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு அவரது சொந்த ஊரான ஹட்டனிலே நிரந்தரமாக தங்கி விட்டார். சிறு வயதில் பள்ளி விடுமுறைக்கு ஐயா, அம்மம்மா வீட்டிற்கு வருவேன். அப்பாவின் மறைவுக்கு பின் கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் ஐயா, அம்மம்மாவின் வீட்டில் தங்கினேன். அந்த சமயத்தில் தான் குடிக்கவும் பழகினேன்.
தினமும் ஐயாவிற்கு பியர் டின் வாங்கி வந்து கொடுக்க ஆரம்பித்தேன். அவருடன் நானும், சிவாவும் மற்றவர்களுக்கு தெரியாமல் அவரது அறையிலே குடித்தோம். அப்போது மறக்க முடியாத பல சம்பாக்ஷணைகள் நடந்தது.
ஐயாவின் சொந்த இடம் தமிழ்நாடு இராமேஸ்வரம். 1950இல் தனது 12 வயது வயதில் அவர் இராமேஸ்வரத்திலிருந்து படகில் இலங்கைக்கு வந்ததாக என் அம்மா அடிக்கடி சொல்லிக் கேட்டுள்ளேன். நேரடியாக அவரிடம் அதை பற்றி கேட்டால் “போடா அங்கிட்டு” என்பார். அதை பற்றி பேசுவது அவருக்கு விருப்பமில்லை. எனது அப்பாவும் பல தடவை “உங்க சொந்தத்த பார்த்துட்டு வாங்க ஐயா” என்று சொல்லிருக்கிறார். நானும் ஒரு முறை மாமாவிடம் இப்படியாக கேட்டேன்.
“ஏன் மாமா ஒரு தடவையாவது ஐயாவ அவரோட ஊருக்கு கூட்டிட்டு போகலாம் தானே?”
“நாங்க என்ன கூட்டிட்டு போகமாட்டமுனடா சொல்றோம். எத்தனையோ தடவ கேட்டுப் பார்த்துட்டோம். விவரம் சொல்லவே மாட்டேங்குறாரு. மத்தது இப்படிதானேடா, ஐயாவுக்கு இப்ப வயசு 70. இனி அவர் சொந்தத்த தேடி போய் மட்டும் என்ன ஆகப்போகுது” என்றார் மாமா.
ஒருாள் அவரது அறையில் நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் போது அவரது கதையை கேட்கலாம் என நான் நினைத்தது தான் ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்து விட்டார். என்னவென்று கேட்டதற்கு அவரது அம்மா சில வருடங்களுக்கு முன்பாக இறந்து போன செய்தி இன்றுதான் தனக்கு தெரிந்தது என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மறுநாள் காலை எழுந்ததும் சாமி படங்களை துணியால் மூடினார். அன்று அவர் செய்த செயல்கள் அனைத்தும் இழவு வீடு என்பதை எங்களுக்கு நினைவூட்டியது.
ஒருநாள் ஜெகன் மாமா வீட்டை சுத்தம் செய்யும் போது ஐயாவின் படுக்கைக்கு கீழே நாங்கள் குடித்து போட்டிருந்த பியர் டின், சாராய பாட்டில்கள் எல்லாம் அவர் கண்ணில் பட்டுவிட்டது. மாமா ஐயாவிடம் “என்ன ஐயா இப்படி குடிக்கிறீங்க. வீடு ஏதாவது கைமாத்துனீங்களா? பெரிய கமிக்ஷன் கிடைச்சிருக்கு போல” என்று கேட்டதற்கு ஐயா நிதானமாக “அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன் அக்கா பையன் சரண் பையலும், உன் அண்ணன் மச்சான் சிவாவும் பையலும் ஒண்ண தினமும் இந்த ரூம்ல தான் குடிப்போம். சரண்தான் வாங்கிட்டு வருவான்” என்றார்.
அப்பாவுக்கு குடிப்பழக்கம் இல்லாததால் எனக்கும் குடிப்பழக்கம் இருக்காது என்று நினைத்து கொண்டிருந்த என் குடும்பத்தாருக்கு நான் குடிப்பது சற்று அல்ல பெருத்த அதிர்ச்சியாக இருந்திருக்கும் போல. அவர்களின் கண்டிப்புகளுக்கு பிறகும் விடாமல் நான் குடித்ததால் கடைசியில் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட ஐயா அமைதியாக தான் உட்கார்ந்திருந்தார்.
ஒரு கட்டத்தில் குடிக்கே அடிமையான என்னை திருத்தி காட்டுவேன் என்று எல்லோரிடமும் சவால்விட்ட என் காதலிதான் பின்னாளில் குடி என்ற அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து என்னை கரம்பிடித்தாள். எழுத்தாளர் என்ற அந்தஸ்த்தை நான் அடைந்த பிறகு இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பித்தேன். ஐயாவின் ஞாபகமும் எப்போதாவது எனக்குள் வந்து போகும்.
இவ்வளவு வருடம் இலங்கையில் வாழ்ந்த ஐயாவுக்கு இலங்கை தமிழ் பேச வராது. சிங்களமும் தெரியாது. தமிழ்நாடு மக்கள் பேசும் வழக்கில் தான் பேசுவார். இந்தியா – இலங்கை கிரிக்கெட் மேட்சின் போது வீட்டிலுள்ளவர்கள் இலங்கைக்கு ஆதரவு அளித்தால் கண்ணிலே அவர்கள் மீது நெருப்பை கக்கி பொசுக்கி விடுவார். அதுபோல இந்தியா தோற்றுப்போனால் கட்டுக்கடங்காத காளையாகி எல்லோரையும் முட்டி விடுவார். இந்தியாவில் அவரின் குடும்பத்தை பற்றிய ஏதோ ஒரு சிந்தனைதான் அவரை ஆட்கொண்டதாக அம்மம்மா அடிக்கடி சொல்லுவார்.
ஆன்மீகத்தில் ஊறிப்போன ஐயா, சாமிக்கு படைப்பதற்காக தினமும் பூ பறிக்க விடியற்காலை 4 மணிக்கு வெளியே செல்வார். அக்கம்பக்கத்தினருக்கு, தான் பறித்த பூவில் கொஞ்சம் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் பூ பறிக்க போகும் போது கையில் கத்தியுடன் தான் செல்வார். ஒருநாள் அப்படியாக பூ பறிக்க போனவர் நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மாமா, பெரியம்மா, எல்லோரும் தேடியும் ஆள் கிடைக்கவில்லை. அம்மம்மா மாமாவிடம் “நந்தா எதுக்கும் கொஞ்சம் போலீஸ் ஸ்டேக்ஷன்ல போய் பாரு எனக்கென்னவோ… போய் பாரேன்”
அம்மம்மா சொன்னது போலவே போலீஸ் ஸ்டெக்ஷன் பெஞ்சில் ஐயா தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கையில் கத்தியோடு விடியற்காலை பூ பறித்து கொண்டிருந்தாராம். விசாரித்ததில் அடையாள அட்டை கையில் இல்லை, சிங்களமும் தெரியவில்லையாதலால் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்ததாக போலீசார் கூறியுள்ளார்கள். நல்லவேளையாக மாமா போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்த்தார். இல்லையென்றால் போலீசின் நிலைமை, அவர்களை நினைத்துதான் நாங்கள் வருத்தப்பட்டோம். ஐயாவை பற்றிதான் எங்களுக்கு தெரியுமே. இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
இன்று எப்போதும் போல தலையில் முண்டாசுடன் கடவுளுக்கு பூ பறிக்க சென்ற அவர் தன்னை படைத்த கடவுளிடமே சென்றும் விட்டார்.
சுடுகாட்டில் ஐயாவின் உடலுக்கு சடங்குகள் செய்த பிறகு கடைசியாக சில்லறை காசுகளை அவர் மீது போடுமாறு வெட்டியான் சொன்னதும், என் பர்ஸில் சில்லறைகளை எடுக்க விரலை நுழைத்தேன். இந்திய காசு ஒரு ரூபாய் சிக்கியது. எத்தனையோ தடவை நான் இந்தியாவுக்கு போய் வந்த பிறகும் அந்த ஒத்த ரூபாய் செலவாகாமல் இருந்தது ஏன் என்பதை இப்போது உணர்ந்தேன். ஒத்த ரூபாயை அவர் உடல் மீது போட்டபோது அவருக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பிரிக்க முடியாத ஒட்டுதலை புரிந்து கொண்டேன். ஐயாவோடு அவரின் இந்திய குடும்ப கதையும் முடிந்தது. எனக்குள் அவரின் குடும்பத்தை பற்றிய கற்பனைகள் தோன்றியது. பேனாவும் பேப்பரையும் எடுத்தேன். அறைக்குள் சுருட்டு புகை பரவியது.-