கைகள்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருட்டில் உள்ளே வந்தவன் இடம் பிடித்து உட்கார்ந்தான், சட்டென்று பெயர் சொல்ல முடியாத சில வாத்தியக் கருவிகளின் கதம்பமான கர்ஜனை ஓர் இடத்தில் மட்டும் வண்ண விளக்குகளின் குவியல்.
மதுவைப் போன்ற இளம் தொழிலதிபர்கள் இரவு நேரப் பொழுதுபோக்குக்காக வரக் கூடிய இடம்!
அரங்கில் குவிக்கப்பட்டிருந்த சிவப்பு வெளிச்சத்தில் பளிச்சென்று அவன் பார்வையைச் சுண்டி இழுத்தது ஒரு பெண்ணுருவம் மின்னல் வெட்டும் வேகத்தில் முகத்தை வெட்டி வெட்டித் திரும்பியபடி ஆடினாள். பாடினாள். என்ன பாட்டு! என்ன ஆட்டம்!
மது நிதானத்துக்கு வர முயன்று கொண்டிருந்தான். ஓட்டல் அறையில் அரை மயக்கத்தில் இருந்தவனை ‘எண்டர்டைன்மெண்ட்’ என்று ஆசை காட்டித் தரதரவென்று இந்த இடத்துக்கு இழுத்து வந்திருக்கிறான் ஆங். சிங்கப்பூரில் மதுவின் கம்பெனிக்கு அவன்தான் பிரதிநிதி.
தன்னுடையது விளம்பர ஏஜென்ஸியின் கிளையை சிங்கப்பூரில் விரிவுபடுத்துவது பற்றி முடிவு செய்வதற்காக மது வந்திருந்தான். கொஞ்சம் மதுவை விழுங்கிவிட்டுத் தூங்கி எழுந்திருந்து காலையில் வேலையைக் கவனிக்க நினைத்திருந்தவனை ஆங் விடவில்லை.
“புதிதாக, கொஞ்சம் நாளாக, ஒரு பெண் பாடகி!” என்று அவன் இழுத்தான்
“பெண்ணா? இப்போது எதற்கு அந்தப் பேச்சு?” என்று பார்வையினாலேயே மது கேட்டான்.
“ஆட்ட பாட்டமெல்லாம் அருமை. ஒரு விதத்தில் நம் தொழிலுக்குப் பயன்படுவாள். மாடலிங் மற்ற மற்ற விஷயங்கள்!”
ஆங் காட்டிய தொழில் பார்வை மதுவுக்குப் பிடித்திருந்தது.ஆனால் இவ்வளவு தாமதித்து அந்த இடத்துக் குப் போவதில் அர்த்தமில்லையே என்று நினைத்தான். மறு விநாடியே மனத்துக்குள் சமாதானம்..
ஆடல், பாடலைப் பார்க்கப் போவதில்லை, ஆளை மட்டும் பார்த்து விட்டு வரவேண்டியது தானே!’
இதோ வந்தாயிற்று
மறுபடியும் அந்தப் பெண்ணின் மீது வெளிச்சம் கொட்டப்பட்டது. மது ஆக்கிரமிப்பைத் தொடுத்தான். நம்ப முடியாத வியப்பு… பரபரப்பு. ‘யார் இந்தப் பெண்? பார்த்த முகம் அல்லவா?’
சந்தேகப் பொறி தட்டியது. ஆங்கிடம் முணு முணுப்பாகக் கேட்டான்.
“ரொம்ப அழகா இருக்காள் இல்லே?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
“அது சரி. இவ யார்? எந்தப் பக்கம்?”
தமிழ்நாட்டுப் பெண் என்றான். கொஞ்ச நாட்களாக இந்த விடுதியில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்றான். அவள் வந்த பிறகு கூட்டம் இருந்து கொண்டிருப்பதாகச் சொன்னான்.
“இவ பேரு தெரியுமா?”
“மீரா!” என்று பதில் வந்தது.
“மீராவா?” என்றான் மிளகாயைக் கடித்த மாதிரி, தாடையை உயர்த்திக் கொண்டு.
“மீராவை முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?”
ஆங் கேட்ட கேள்விக்கு மது பதில் சொல்லாமல், அவளையே வெறித்துப் பார்த்தான். அவள் முகம் உடல், அங்க அசைவுகள், அவளுடைய குரல்… இன்னுமா சந்தேகம்? இல்லை. நான்கு வருஷங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே இருக்கிறாள். அச்சுப் பிசகாமல், ஆனால் உடையில் மட்டுமே மாறுதல். அவளுக்குப் பொருந்தாத மாதிரி இருக்கிறது. தொழிலுக்குப் பொருத்தம்தான்!
‘மீரா இந்த வழிக்கு எப்படி வந்தாள்?”
ஆங்கிடம் மீண்டும் குறுக்குவிசாரணை.
“மீரா எங்கே தங்கியிருக்கா தெரியுமா?”
“தெரியாது. ஆனால் தெரிஞ்சுக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லே. விசாரிச்சிட்டு வரட்டுமா?”
வேண்டாம் என்று கையமர்த்தினான் மது.
ஆங்குக்குப் புரிந்து விட்டது. அவள் மீது அவனுடைய கண் விழுந்து விட்டது! அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்?”
ஆங் காத்திருந்தான்
சரியாக நான்கு வருஷங்களுக்கு முன்னால் கல்லூரி பைன் ஆர்ட்ஸ் கிளப் விழாக்களில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தாள் மீரா மாணவர் பட்டாளம் அவளுக்குச் சூட்டிய செல்லப் பெயர் மிஸ் மாதவி!
கோவலன் இல்லாமல் மாதவியா? மது சிக்கிக் கொண்டான். அவ்வப்போது அவளுடன் அவன்தான் பேசக் கூடிய நிலையில் இருந்தான். ‘கிளப்’ பின் செயலாளர் பெரிய இடத்துப் பையன். ‘ரோமியோ’ த்தனம் உண்டு.
ஒரு நாள் இசைவான, தனிமையான சூழ்நிலை கிடைத்தபோது அதிகப்படியதான உரிமை எடுத்துக் கொண்டவன் போல் மீராவின் கையைப் பற்றினான் மது. இதை எதிர் பார்த்திராதவள் நடுநடுங்கிப் போனாள்.
“மது, என்ன இது?”
“கோபமா மீரா? இதிலே என்ன தப்பு?”
“விடுங்க கையை!”
”மீரா, நிஜமாகவே கோபமா?” – அவன் பிடியை இறுக்கினான். விடுவித்துக் கொள்ள முயன்றாள். திடீரென்று ஆவேசம் வந்தவளாக அவன் கையை உதறித் தள்ளினாள்.
மதுவுக்கு அவமானம். ஆத்திரம்.
“ஓ! பெரிய கண்ணகின்னு நெனைப்போ?”
“ஏன், இருக்கக் கூடாதா?”
“கலை, ஆட்ட பாட்டம். கூத்துன்னு வந்த பிறகு கண்ணகித்தனம் வேண்டியிருக்கோ?”
சுட்டெரிப்பது போல் அவனைப் பார்த்தாள் மீரா.
“நீ கையை உதறிட்டாலும், இன்னொரு முறை உன்னைப் பிடிக்கத்தான் போகிறேன். நான் நெனைச்சபடி செய்யத்தான் போறேன்”
“தொட முடியாது.. வீணா எதுக்குச் சவால் விடறீங்க?” “சவாலா எடுத்துக்கறேன். சந்தர்ப்பம் வர்றப்ப உன்னைக் கவனிச்சிக்கிறேன்.’
மது அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது ஓர் ஏமாற்றம் சில மாதங்களில் படிப்பை நிறுத்திவிட்டு வெளியூருக்குப் போய்விட்டாள் மீரா. அவள் அப்பாவுக்குக் கிடைத்திருந்த ‘டிரான்ஸ்பர் தான் காரணம்.
நான்கு வருஷங்கள் நழுவியிருக்கின்றன. மது படிப்பை முடித்ததும் பொறுப்பு காத்திருந்தது. அப்பாவின் தொழிலான விளம்பர ஏஜென்ஸியில் எக்ஸிக்யூடிவ் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சில கிளைகளை ஏற்படுத்தியிருக்கிறான்.
இன்னொரு கிளையை விரிவுப்படுத்த வந்த இடத்தில், இதோ இப்பொழுது ஒரு சவாலைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
மதுவின் அனுபவத்தில், அவனைக் காகிதமாகக் கசக்கி வெகு தூரத்தில் வீசி எறிந்த ஒரே பெண் மீராதான். ‘விட்டு விடக்கூடாது’ மறுபடியும் அவள் கையைப் பிடித்து, தொட்டுக் கசக்கி முகர்ந்து வீச வேண்டும்.. எக்ஸிக்யூடிவ் மிடுக்குடன் அவளைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்!’
மதுவின் உடம்பில் வெப்பம் ஏறுகிறது. ‘இன்னும் கொஞ்ச நேரம்தான் மீராவின் ஆட்டம் முடியப் போகிறது. நாலு வருஷங்களுக்கு முன் அவனை உதாசீனப்படுத்தியவள். அவன் வீசி எறியப் போகிற காசுக்காகக் காலில் விழப் போகிறாள்.. அது நடக்க வேண்டும்.. ஆமாம் நடக்கப் போகிறது.’
எகத்தாளமாக சிரிப்பு மதுவின் நெஞ்சுக்குள்! திடீரென்று ஒரு சந்தேகம். ஆங்கிடம் கிசுகிசுத்தான்,
“மிஸ்.. மிஸ் மீராதான்!” என்றான் ஆங். ‘நல்ல வேளை’ அவள் யாருக்கும் இன்னும் பெண்டாட்டியாகவில்லை!”
“ஏன் அட்ரஸ் வேணுமா?” என்று ஆங் கேட்டான் “வேண்டாம், நானே பார்த்துக்கறேன்.”
கடைசிக் கட்டம். வாத்தியக் கருவிகளின் கதம்பமான காஜனை மதுவுக்குப் புதிய பலமும் வேகமும் வந்து விட்டன.
எழுந்து போனான். மீராவுக்கு அருகில். மிக அருகில்!
அவள் கையைப் பற்றி இழுத்தபோது திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“மீரா!”
“நீங்களா?”
“கையை எடுக்கச் சொல்றியா? நான் இப்ப ஆடணும்.”
“நான் ஆடப் போறதில்லே!”
“அவ்வளவு பேரும் கலாட்டா பண்ணுவாங்க… நான் கையை விடணும்னா ஒரு கண்டிஷன்… புரோகிராம் முடிஞ்சதும் தனியா வந்து என்னை ….”
சம்மதித்தாள்.
ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு அரங்கு காலியாகி விட்டது.
மீராவும் மதுவும் அருகருகே நின்றிருந்தார்கள் ஆங் விலகி நின்றான்.
“மீரா! நாலு வருஷமா உன்னை வலைபோட்டுத் தேடிக்கிட்டிருந்தேன். இப்ப நீயாவே அந்த வலைக்குள்ளே..”
அவள் கையைப் பற்றினான். மீரா எதிர்ப்புக் காட்டவில்லை.
“இப்ப ஆடிப் பாடி யார் யாருக்கோ விருந்துவைக்கிற நீ அன்னிக்கு என்னை உதறித் தள்ளினே இல்லே? கால வித்தியாசத்தைப் பார்த்தியா?” என்றான்.
மீரா பேசவில்லை.
“உனக்காக அனுதாபப்படறேன், மீரா. பெண் புத்தி பின் புத்திங்கிறதை இப்ப நீ புரிஞ்சிருப்பே. பல பேருக்கு முன்னாலே ஆடிப் பாடிச் சம்பாதிக்கிறே இல்லே? அன்னிக்கு என் கையை உதறாமே இருந்தா ஆடாமலேயே உனக்கு. அள்ளி அள்ளிக் குடுத்திருப்பேனே ! சரி… ஓட்டலுக்குப் போவோமா?”
“மது கையை விடுங்க!”
“ஓ! தாராளமாக!”
கையை விடுவித்துக் கொண்டவள் கைப்பையைத் திறந்து ஒரு உறையை எடுத்து நீட்டினாள்.
“என்னோட கல்யாணப் பத்திரிகை!”
“என்ன சொல்றே, மீரா?”
“நான் ஆடிப்பாடினாலும் நான் நெருப்புத் தான் என்பதைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறார். இங்கே தான் டாக்டரா இருக்கார்!” மது வாயடைத்து நின்றான்.
“மது! ‘கண்ணகியா நீ!’ன்னு ஒரு நாள் கேட்டீங்க இல்லையா? இந்த வார்த்தைதான் இன்னை வரைக்கும் என்னை வழிநடத்திக்கிட்டிருக்கு. இன்னிக்கு நான் ஆடினது தான் கடைசி ஆட்டம். இந்த நெருப்பை எந்த கறையானும் இதுவரைக்கும் அரிச்சதில்லை. முடிஞ்சா என் கல்யாணத்துக்கு வாங்க!”
மீரா போய்விட்டாள். தலை குனிந்து நின்றவனிடம் நெருங்கினான் ஆங்.
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.