குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 97 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

61 – 70 | 71 – 80 | 81 – 90

71. அன்பளிப்பு

அவன் கடமையில் சத்தியவந்தன், நேர்மையாளன், கறைபடாத கரங்கள் கொண்டவன். அவனை எவரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. 

அதனால் அவன் பதவிமேல் பதவியாக உயர்ந்து வந் தான். செல்வச் செழிப்பிலும் மிதந்து வந்தான். 

இது எப்படி? 

ஒருவருக்கும் இந்த மருமம் புரிபடவில்லை. 

ஆனால் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். ‘மூடர் களே! எங்கள் வீட்டில் மாதம் தவறாமல் மனைவி, பிள்ளை குட்டிகள், மாமன், மாமி, மைத்துனன், சித்தப்பா, பெரி யப்பா என்று பிறந்தநாள் கொண்டாடுவது என்ன அவர்கள் மீதுள்ள பாசத்தாலா… நீங்கள் கொண்டுவரும் அன்பளிப்பு களுக்காகவா..?” 

72. பெண்

அவர்கள் புதிதாக மணம் செய்து கொண்டவர்கள். 

ஒரு நாளின் மகிழ்ச்சிப் பொழுதில் அவள் கேட்டாள். 

‘நீங்கள் யாரையாவது முன்பு காதலித்ததுண்டா?…’ 

‘இல்லை… இல்லவேயில்லை’ அவன் அவசரமாக மறுத்தான். அவளுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. 

‘சரி போகட்டும்… உங்களை எந்தப் பெண்ணுவது விரும் பியதுண்டா?…’

அவன் தயங்கினான். அவள் விழிகளில் சந்தேகச் சாயல் படிவதைக் கண்டான். பிரச்சனையைத் தவிர்க்க விரும்பினான். 

‘ஒரு பெண்ணும் அப்படி என்னை விரும்பியதில்லை.’ 

அவள் விம்மினாள். 

‘போயும் போயும் பிற பெண்களால் பார்த்து பெருமூச்சு விடப்படாத ஒரு ஆண்மகனான உங்களைப்போய் மணமுடித் தேனே…எனக்கென்ன பெருமை….’

73. அந்நிய உதவி

நாட்டு நிலமையை அவதானித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க, அந்த சர்வதேச தாபனம் தன் அங்கத்தவர்களை அனுப்பியிருந்தது. 

வந்தவர்களுக்கு ‘இன்டர் கொன்டினென்டல் ஹோட்ட ‘லில்’ விருந்துபசாரம் நடத்தியது அரசாங்கம். 

வந்தவர்கள் திரும்பிச் சென்றதும், கணக்காய்வுப் பகுதி யிலிருந்து ஐந்தொகைக் கணக்குச் சபையால் சமர்ப்பிக்கப் பட்டது. அதில் – 

விருந்துச் செலவு வழங்கப்பட இருந்த நிதியில் பாதிக்கு மேலிருந்தது. 

74. பெருமை

வெளிநாட்டவர்களுக்கான ஒரு சுற்றுப்பயணம். 

‘கடைகள்.. தொழிற்சாலைகள்.. நீர்பாசனத் தி்ட்டங் கள்… கோயில்கள்… பயிர் நிலங்கள்… எல்லாமே அளவில் மெரியன’ என பெருமையடித்துக் கொண்டான் வழிகாட்டி. 

தூரத்தே தெரிந்த மக்கள் இயூ’வைக் காட்டினான் ஒரு பிரயாணி. 

‘ஆமாம் எங்கள் நாட்டில் எல்லாவற்றிற்கும் நீண்ட மெரிய மக்கள் வரிசைதான்’

என்று அவசரமாகக் கூறினான் வழிகாட்டி.

75. சுதேசிகள்

புதிய தேர்தல் நடந்து, புதிய ஆட்சி வந்தது. 

மக்களை மகிழ்விக்க ஏராளமான அந்நியப் பொருட்கள் இறக்குமதியாகின. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தாலும் 

மக்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. 

அப்பொருட்களை வாங்கக் கையில் காசு இல்லாவிட்டாலும் அவர்கள், நாட்டில் இவையெல்லாம் கிடைக்கிறதே, போதாதா? 

அந்நியச் செலாவணியைச் சீர்செய்ய அவசரம் அவசரமாக உண்ணாட்டு உற்பத்திப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலை யில் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது அரசாங்கம். 

மக்களுக்கு உண்ணாட்டுப் பொருட்கள் கூட வாங்க முடிய வில்லை. அதனால் என்ன ? 

‘மக்களாட்சி மலர்ந்துவிட்டது. ஒரு சாமானுக்கும் பஞ்ச மில்லை. ஆனால் வாங்கத்தான் எங்களிடம் காசில்லை எல்லாம் எங்கட விதி. கடவுள் எப்போதுதான் கண் திறப்பாரோ?’ என மக்கள் ஆலய வாசல்களில் தவம் கிடக்கலாயினர். 

76. மனைவி

அவன் மனைவியை அழகாக்கிப் பார்க்க ஆசை கொண்டவன். வகை வகையாகத் துணிமணிகள் வாங்கி வருவான். அவள் தன்னை அழகாகச் சிங்காரித்துக் கொண்டு தன் முன் தரிசனம் தருவாள் என எண்ணினால்…..

அவள் பழம் புடவையிலேயே வந்து நிற்பாள். 

கேட்டால், ‘பாவம் தங்கச்சி… கலியாணமாக வேண்டிய பெண் … நாளைக்கு கலியாணப் பேச்சு வந்தால் அப்ப துணி எடுக்க எங்க ஓடுறது… அதுதான் அவளிட்ட கொடுத்திட்டன்” என்பாள். 

அவனிற்கு ஆத்திரம் பற்றி வரும். 

அவளை அவனால் திருத்தவே முடியவிலலை. 

ஒரு நாள் அழகான சேலையொன்று வாங்கி வந்தான் மனைவி ஓடி வந்தாள். அவன் அதனை அவளிடம் கொடுக்காமல் அவள் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான். 

‘உமக்கு இந்தச் சேலை நன்றாயிருக்கும்…’

மனைவி முகம் கோணலாயிற்று 

அடுத்த நாள் அவள் சொன்னாள். ‘புதிய வீடு பாருங்கள் தனியாப்போக.’ 

77. இன்ரவியூ

கிராமத்து மாணவன் நகரத்திற்கு பல்கலைக்கழகப் படிப் பிற்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தான். கேள்விகள் ஒவ்வொன்றிலும் ஆளும் கட்சியின் புகழ்பாடிக் கொண்டிருந்தனர். 

‘இந்த ஆட்சியில் தான் கிராமத்து மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களை நாடி நகருக்கு வரமுடிகிறது. இல்லையா?’

‘ஆமாம். – மாணவன் பதில் சொல்லிவிட்டு தொடர்ந் தான்… ”உண்மையான ஆட்சியில் பல்கலைக்கூழகங்கள் கிரா மங்களிலேயே தோன்றும்.’ 

78. எச்சில் ரசனை

விழாக் கொண்டாடும் வீட்டிற்கு வெளியே ஏகக் கூட்டம். பிச்சைக்காரர் கும்பல்… தெரு நாய்கள்… 

எச்சில் இலைக்காகக் காத்திருக்க…. 

பல இலைகள் வந்து விழுந்தன. 

எல்லாமே காலி இலைகள்… சூப்பி எ றியப்பட்ட சில எலும்புத் துண்டங்கள்… 

எலும்பைக் கௌவிய நாய் ஒன்று சொல்லிற்று: 

அட இந்த மனிதனுக்கு கொஞ்சம்கூட சாப்பாட்டுரசனை கிடையாதா… அருமையான எலும்புகளை இப்படி எறிந்திருக் கிறானே” என ரத்தம் தன் வாயிலிருந்தே வடிவதை உணராத நிலையில் கூற, அதைக் கேட்ட மனிதன் சொன்னான். 

‘அந்த மட்டிலாவது அவன் இரசனை இருந்ததால் தான் உனக்கு எலும்பாவது கிடைத்தது. இல்லாவிட்டால் நீயும் எங்களைப்போல் பசியால் துடிக்க வேண்டியதுதான்.’ 

79. ‘காலணி’த்துவம்

‘குருவே!” என்று ஓடி வந்தனர் முனிபுத்திரர்கள்.

‘என்ன?’ – என்றார் வசிஷ்ட மாமுனி. 

‘பரதன் இராமனின் பாதுகையைத் தாங்கி வந்து, மாபெரும் பழியைத் துடைத்து மக்களின் அன்பைப் பெற்று மன்னனாகி விட்டானே’ 

வசிஷ்டர் நிஷ்டையிலாழ்ந்தார். நீண்ட பொழுதின் பின் விழித்தார். சொன்னார். 

‘ஆமாம். ரிஷிகுமாரர்களே! கலிகாலத்தில் தோன்றப் போகும் காலனித்துவ ஆட்சிக்கு பரதன் அடியெடுத்துக் கொடுத்து விட்டான்.’ 

சிஷ்ய கோடிகள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர். 

80. ‘சுய’ இச்சைகள்

தேசிய கட்சிகள் இரண்டு பலமாகப் போட்டியிட்டன. 

சுயேச்சை அங்கத்தவர்கள் பலர் திடீரெனத் தேர்தல் களத்தில் குதித்தனர். 

மக்களுக்கோ பெருவியப்பு. 

‘உங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் ஈடுபட்டீர்கள்?’

‘உங்களுக்காக.. எங்களுக்காக’ 

‘எப்படி’

‘நாங்கள் போட்டியிடுவதால் அவர்கள் ஏராளமாகத் தேர்தலுக்காகச் செலவு செய்வார்கள். நீங்கள் பயனடைவீர்கள். கடைசியில் எங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் செய்வதற்காகப் பேரம் பேசுவார்கள். கள்ளப் பணம் வெளியில் வரும். நாட்டிற்கும் நல்லது. நாங்களும் பணக்காரராவோம்’

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *