கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 146 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

காடு எல்லையற்ற பிரமிப்புக்களால்
நிரம்பிப்போயிருக்கிறது. 

எல்லாக்காலங்களிலும் காடு 
காடு எனும் ஒரு சொல்லாக நெருங்கி
வரும்போது 
நான் வேதனையடைவதாக
உணர்கிறேன் 
அந்தக் கணங்களில் 
காடு அங்கிருந்து விலகிப்போய்விடுகிறது. 

உலகின் கடைசி ஒளியை நீ
நிர்வாணமாக அடைகையில்
காடு சிறு கல் அல்ல
காடே காட்டுலகின் தேசம்
மௌனப் பெரும் வெளி 
அது அங்கேயே இருக்கும் ரகசியமாகிறது. 

வாழ்வு நீண்டதாகவும் மரணம்
குறுகியதாகவும் 
உனக்கும் எனக்கும் 
காட்டினுள்ளே தீர்ப்புக்கள் 
எழுதப்படுகின்றன. 

காட்டின் 
சுறுசுறுப்பான கனவுகளில்
அவர்கள் வாள் வீசுகிறார்கள்
அவர்கள் என் ஜீவன்களைக்
கொல்கிறார்கள் 
எனது தியானத்தால் என்னை
எரிக்கிறார்கள். 

வாள் வீரர்களின் வெற்றிக்கு
முந்தியோர் கணத்திலாவது 
நான் சாக வேண்டும் என்கிறது காடு. 

பெரும் காற்று 
உன்னிடம் கொண்டு வந்து தரும்
ஒரு பழுத்த இலை 
வழ வழப்பான முறிதண்டு 
கொஞ்சம் கொறிபட்ட சிற்ப 
நினைவுகள் 
மற்றும் இன்னும் சில. 

மறைவிடங்களை விட்டு நீங்காக் காடு
இவைகளல்ல 
அது எல்லையற்ற பிரமிப்புக்களால்
நிரம்பிப்போயிருக்கும். 

– ஜூலை 2010, ஜீவநதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *