கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2025
பார்வையிட்டோர்: 213 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மாவின் பார்வையில் ஆழம் தெரிந்தது.

அமுதாவை மட்டும் எதிர் பார்த்துதான் அவள் கதவைத் திறந்திருப்பாள். அவளுடன் அந்நிய இளைஞன், அதுவும் ஒரு சீன இளைஞன், வந்து நிற்பான் என்று அம்மா நிச்சயம் எதிர் பார்த்திருக்க மாட்டாள்.

கண்ணம்மாவின் மனவோட்டம் அமுதாவுக்குப் புரிகிறது.பார்வை அதைப் பளிச்சிடுகிறது. ஆனால் அந்தப் பரிமாணத்தை அளவிட அமுதா விரும்பவில்லை. அது; வேண்டாத ஆராய்ச்சி.

அம்மா வாய்விட்டு எதையும் கேட்க மாட்டாள். இவளாகவே சொல்ல வேண்டும்.

இப்பொழுது சொன்னாள்.

“அம்மா” இவர் லிம். என்னுடன் படிப்பவர்!” என்றாள்.

இமைக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு முறை அவனைக் கண்ணம்மா பார்த்தாள். வந்தவர் யாராக இருந்தாலும் வரவேற்பதுதான் நாகரிகம். அது அம்மாவுக்கு அத்து படி. இந்த வீட்டில் பழகிப் போன சடங்கு.

முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு லிம்மை வரவேற்றாள். எல்லாமே பாவனை தான். கண்ணம்மா பேசுவது சொற்பம்.

லிம் பதிலுக்கு மகிழ்ச்சியை முகத்தில் தேக்கியபடி அமுதாவைப் பின் தொடர்ந்து உள்ளே வந்தான். ஆரவார மில்லாவிட்டாலும் அந்த வரவேற்பும் இதமான சூழ்நிலையும் அவனுக்குப் பிடித்தன.

அவர்களை உட்காரச் சொன்னாள் அம்மா மிகத் தணிந்த குரலில்.

அவள் என்ன நினைப்பாள், இந்த நேரம் என்ற சிந்தனை அமுதாவுக்கு. என்றைக்கும் இல்லாத புதுமையாக அல்லது விசித்திரமாக ஓர் இளைஞனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாளே அமுதா, ஏன்? எதற்காக? எப்படி வந்தது இந்தத் துணிவு?

அம்மா அப்படித்தான் யோசிப்பாள் அவள் அதிகமாக யோசிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று அமுதா விரும்பினாள்.

“நம்ம வீட்டைப் பார்க்கணும்னு லிம் சொல்லிக் கிட்டிருந்தார். அழைச்சிட்டு வந்திட்டேன்.!..” என்றாள் அவள்.

ஒப்புக்காகத்தானா இல்லை உள்நோக்கத்துடனா என்ற எண்ணத்திற்கு இடமிருந்தாலும் கண்ணம்மா அதைக் கனமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை முகபாவத்தில் காட்டினாள்.

அதிசு நேரம் அம்மா அங்கே நிற்கவில்லை. உபசரிப்புக்கு ஆயத்தமாக உள்கட்டுக்குப் போய்விட்டாள்.

அவள் போகும் வரை லிம்மின் கவனம் அவள் மீதுதான் இருந்தது.

‘அம்மாவை வெறிச்சுப் பார்த்துக் கிட்டிருந்த மாதிரி தெரிஞ்சதே!’ என்று அமுதா கேட்டாள்.

லிம் ஒப்புக் கொண்டான். அதற்குப் பல காரணங்கள். முதலில் ஆச்சரியம் அவனுக்கு.

“நீயும் உன் அம்மாவும் ஒரே மாதிரியா இருக்கிறீங்க!” என்றான்

“எப்படி இருக்கிறோம்?”

“அக்கா தங்கை மாதிரி ஒரே சாயல். கொஞ்ச தூரத்திலேயிருந்து பார்த்தால் யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள் உருவத்தில் என்று லிம் வருணித்தான் நல்ல வேளை, அவர்களின் உள்ளத்தைப் பற்றி, உணர்ச்சிகளைப் பற்றி அவனால் அதிகம் சொல்ல முடியாது, இப்போதைக்கு.

தாய்க்கும் மகளுக்கும் இருபது வயதுக்கு மேல் வித்தியாசம். ஆனால் தொலைவிலிருந்து பார்த்தால் அம்மா யார் மகள் யார் என்பதைச் சொல்வது சிரமம்தான்.

“என்னைவிட அம்மா அழகு சிவப்பு,ஒல்லி,உயரம் இல்லையா?” என்றாள் அமுதா.

இருவரையும் ஒரே தராசில் நிறுத்திவைக்கலாம் என்று லிம் சிரித்தபடி சொன்னான்.

“சரி.. அம்மாவைப் பார்த்தாயிற்று, அப்பா எப்ப வருவார்?” என்று அவன் கேட்டான்.

“வருகிற போது தான் பார்க்கலாம். இன்றைக்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு நாள்.” இழுத்தாள் அவள். ஆனாலும் மறு நிமிடமே சுவரில் இடம் பிடித்திருந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டினாள்.

லிம் எழுந்து போய் பார்த்தான்.

அவள் அப்பாவும் எடுப்பாக இருக்கிறார் என்று விவரித்தான்.

பொருத்தமான ஜோடி – ஐடியல் கப்பிள் – போட்டிக்கு சென்றால் இப்போது கூட அவர்கள் வெற்றி பெற முடியும் என்று லிம் சொன்னான். அம்மாவும் அப்பாவும் அப்படிப் பட்டவர்கள் தான் தோற்றத்தில்… அமுதா அதை, பல ஆயிரம் முறை நினைத்துப் பார்த்திருப்பாள்.

இப்பொழுது அதையே சொல்கிறான் லிம். மற்றவர்களின் நினைப்பும் அப்படித்தான்.

நினைப்பும் நிஜமும் ஒன்றாக இருக்க வேண்டுமே! கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று முடிவு கட்டிவிட முடிகிறதா?

“அமுதா.. எனக்கு இன்னொரு நினைவு!” என்று லிம் ஆரம்பித்தான்.

சொல்லச் சொன்னாள் இவள்

”உன் அம்மா கண்ணகி மாதிரி இருக்கிறாங்க!” என்றான் அவன்.

அமுதாவுக்குச் சற்றே வியப்பு கண்ணகியைப் பற்றி அவனுக்குச் சொன்னவள் இவள்தான். அதை மனத்தில் பதிய வைத்து இப்பொழுது இவளிடம் சொல்கிறான் லிம்.

பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தாலும் அமுதாவுக்கு தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்று எல்லாக் காவியங்களையும் தொட்டுப் பார்த்திருக்கிறாள். பாரதியார் கவிதைகளில் அவளுக்கு அதிக மயக்கம்.

ஒரு நாள் சிலப்பதிகாரத்தைப் பல்கலைக் கழக வளாகத்தில் அவள் புரட்டிக் கொண்டிருந்த போது லிம் குறுக்கிட்டான். அதன் கதைச் சுருக்கத்தை அமுதாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அப்பொழுது தான் கண்ணகி, கோவலன், மாதவி எல்லோருமே பெயரளவில் லிம்முக்குப் பரிச்சயம்.

கண்ணகி பாத்திரம் அருமையான படைப்பு என்று அவன் வியந்தான்.

இப்பொழுது அந்தப் பாத்திரத்தை நேரில் சந்தித்தது. போல் இருக்கிறது என்கிறான். இவன் தாயைப் பார்த்த பிறகு, அப்பாவைப் பார்த்தால் ஒருவேளை கோவலன் என்று வருணிப்பானோ?

லிம்மின் சாதுர்யமும், தெளிவும் அமுதாவுக்குப் பிடிக்கும். அவனோடு அவள் பழகுவதற்கு அந்தப் பண்புகள்தான் காரணம்.

இருவரும் ஒன்றுபட்ட சிந்தனைப் போக்குடையவர் கள். அமுதாவைப் போலவே அவனும் யாரையும் துல்லியமாக எடைபோடக் கூடியவன்.

கண்ணகி ஆராய்ச்சியில் அவர்கள் லயித்திருந்த சமயம் அம்மா வந்தாள். உபசரிப்பு அவளுக்குக் கைவந்த கலை.

சிற்றுண்டித் தட்டுகளும் தேனீர்க் கோப்பைகளும் மேசையை அடைத்துக் கொண்டன.

சாப்பிடச் சொல்லிவிட்டு சந்தடியில்லாமல் விலகிக் கொண்டாள். அம்மா அது அவள் சுபாவம்.அமுதாவுக்குத் தெரிந்ததுதான். அப்பா சாப்பிடும் போதும் கூட அம்மா அருகில் நிற்பதில்லை. ஏதாவது தேவைப்பட்டால் அம்மா என்றுதான் அவர் அழைப்பார். அம்மாவின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. அதை புரிந்து கொண்டு வேண்டியதைச் செய்வாள் அம்மா.

இவையெல்லாம் அன்றாடம் வீட்டில் நடப்பவை. லிம்முக்குத் தெரிய நியாயம் இல்லை.

உரையாடலிலும் உபசரிப்பிலும் திக்கு முக்காடிய லிம் விடை பெற்றுக் கொண்டான்.

கையெடுத்துக் கும்பிடவில்லை என்றாலும் கனிவான நன்றியை கண்ணம்மாவிடம் தெரிவித்தபடி தான் அவன் புறப்பட்டான்.

அவன் போன பிறகு அம்மா ஏதாவது விசாரிப்பாள் என்று அமுதா எதிர் பார்த்தாள்.

அப்படி எதுவும் நடக்கவில்லை.

அம்மா பழகிப்போனவள். பல பேரை, குறிப்பாக அழகிய பெண்களை அப்பா வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் விருந்து அடிக்கடி நடந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அம்மாதான் சமையல் இயந்திரமாக மாறிவிடுவாள்.

பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் வேண்டும். அம்மாவிடம் அவை அளவுக்கு அதிகமாக இருந்தன. யார் யாருக்கெல்லாமோ சமைத்துக் களைத்தவள் மகள் அழைத்து வந்த ஓர் இளைஞனை உபசரிக்காமல் அனுப்பிவிடுவாளா?

அவன் யார் எதற்காக வந்தான் என்று ஒரு வேளை அம்மா தனியாக நினைத்துக் கொண்டிருப்பாளோ? இருக்கலாம். அப்பா வீட்டில் இருந்திருந்தால் இந்நேரம் லிம்மைப் பற்றி ஒரு பெரிய விசாரணையே நடத்தியிருப்பார் லிம் அவரைப் பார்க்க விரும்பியும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

கண்ணகி!

அமுதாவுக்கு அந்தப் பெயரைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கியிருந்தது.

அம்மாவுக்கு அந்தப் பெயரையே வைத்திருக்கலாம் எனத் தோன்றியது இவளுக்கு. எப்படியோ கண்ணம்மா என்ற பெயரை தாத்தாவும் பாட்டியும் அந்த நாளில் சூட்டி யிருக்கிறார்கள்.கண்ணகி பாத்திரத்தின் மறு உருவமாகத்தான் அம்மா இருக்கிறாள் பார்த்த மாத்திரத்தில் லிம்மும் அதையே சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அழகு, செல்வம். பண்பு எல்லாவற்றிலுமே கண்ணம்மா அந்தக் கண்ணகியைப் போலத்தான். செல்வச் செழிப்புள்ள வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அம்மாவை அப்பா எப்படி மணந்து கொண்டார் என்பதைச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறாள் அமுதா. அதெல்லாம் இருபத்தைந்து வருடத்துக்கு முந்திய கதை.

தாத்தா சண்முகசுந்தரம் கப்பல்களுக்குப் பொருள் வினியோகிக்கும் ஷிப் சாண்ட்லர்ஸ் – ஸ்டீவ்டோர்ஸ் கம்பெனியை நடத்திவந்தார். வர்த்தக வட்டாரத்தில் அவருக்கு அமோகமான செல்வாக்கு. சிங்கப்பூர்த் துறைமுக வட்டாரத்தில் எஸ்.எஸ் என்று சொன்னால் போதும். இந்த அளவுக்கு அவர் பிரபலம் தனிப்பட்ட மரியாதை.. பல லாரிகள், சரக்கு வேன்கள், படகுகள் அவருக்குச் சொந்தம். பணியாட்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இளைஞன் மதன கோபால் அந்த நிறுவனத்தில் கிராணியாகச் சேர்ந்தான். கம்பீரமான இளைஞன். வேலையிலும், நல்ல சுறுசுறுப்பு. முன்னுக்கு வரக்கூடியவன் என்று அடையாளம் சுண்டு கொண்டார் எஸ்.எஸ். அவனைக் கைதூக்கிவிட வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் அவருக்கு ஏற்பட்டது.

மதன கோபாலை உற்சாகப்படுத்தி வந்தார். வெகு விரைவில் பதவி உயர்வு கொடுத்தார். நிர்வாகப் பொறுப்புகளைத் தந்தார். அதற்குக் காரணமும் உள்நோக்கமும் இருந்தன செல்வ மகள் கண்ணம்மாவுக்கு அவனே பொருத்தமான கணவன் என்று வரித்துவிட்டார் சண்முக சுந்தரம். காலங்கடத்தாமல் அவனை விரைவிலேயே வீட்டு மாப்பிள்ளையாக்கிவிட்டார் எஸ்.எஸ்.

கண்ணம்மா மதன் கோபால் ஜோடிப் பொருத்தத்தை அப்பொழுது வருணிக்காதவர்களே இல்லை. மகளுக்குச் சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் எஸ்.எஸ் என்று எல்லாருமே புகழ்ந்தார்கள்.

இந்த இளந் தம்பதியின் வாழ்க்கைப் பயணம் வசந்த விழாவாகத் தொடங்கியது. ஆனால் மகளின் இல்லறக் கோலத்தைப் பார்த்து மகிழ பெரியவர் சண்முக சுந்தரத்திற்கு கொடுத்துவைக்கவில்லை. அவருடைய ஜீவியம் முடிந்து போயிற்று. மாமனாரின் தொழிலுக்கு மதன கோபாலே அதிபதி, சாதாரண எழுத்தராகத் தொழிலைத் தொடங்கிய அவன் குறுகிய காலத்தில் ஒரு நிறுவனத்தின் உரிமையாள ராகப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்ததில்லை,

முதலாளிக்குரிய தோரணையும் சும்பீரமும் கோபாலி டம் ஒட்டிக் கொண்டன. சமூக அந்தஸ்துக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டான். எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும் நிலைக்கு உயர்ந்த பிறகு, விருப்பம் போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தடையேது? குடும்பம், தொழில் எல்லாவற்றிலுமே கோபாலின் முடிவுதான் இறுதித் தீர்ப்பு.

இருபத்தைந்து வருடங்கள் போன சுவடு தெரிய வில்லை. திருமண வெள்ளிவிழாவைக் கொண்டாடா விட்டாலும் கோபாலுக்குப் பொன்விழா வயது. கல்யாண வயதில் மகள் அமுதா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு. அம்மாவின் ஒரே பிடிப்பு அவள்தான். கல்யாணப் பேச்சை இன்னும் யாரும் எடுக்கவில்லை.

கண்ணம்மாவுக்கு அந்தக் கவலை இருக்கிறது. ஒரு கை, ஓசையை எழுப்ப முடியாதல்லவா? மகளின் விருப்பத்தை அறிந்து கொள்ள அம்மாவோ, அப்பாவோ முயலவில்லை.

முதல் முறையாக ஓர் இளைஞனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள் எதற்காக?

அம்மா மௌனமாகத்தான் இருக்கிறாள்.

அந்த மௌனம் கலையுமா?

இன்னொரு பக்கம் அப்பா. அவரை ஒரு வட்டத்தி லிருந்து இன்னொரு வட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும். அது முடியுமா?

கண்ணம்மாவின் மனத்தில் பின்னல்,

சிக்கல் விழுந்த நூல்கண்டு போல் இழை பிரிக்க முடியாத உணர்ச்சிக் குவியல்.

அமுதாவைப் பற்றிய எண்ணவோட்டம் அலைபாய் கிறது. பல்கலைக் கழகத்திற்குப் புறப்படும் போது மகள் சொன்னது கண்ணம்மாவின் நெஞ்சில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

“ராத்திரி வீட்டுக்கு வர நேரமாகும். லிம் ஒரு பார்ட்டிக்கு அழைச்சிருக்கிறார். நான் கட்டாயம் வரணும்னு கட்டளை. மறுக்க முடியலே. ராத்திரி சாப்பாட்டுக்கு என்னை எதிர்பார்க்க வேண்டாம்மா.”

அமுதா இயல்பாகத்தான் சொன்னாள். ஆனால் சொன்ன விஷயம்தான் அம்மாவின் நெஞ்சில் சுமையை ஏற்றியது.

ஓர் இளைஞன் டின்னருக்கு அமுதாவை அழைக்கிறான் என்பதும், அந்த அழைப்பை அவள் ஏற்றுக்கொண்டிருக் கிறாள் என்பதும் கண்ணம்மாவைப் பொறுத்தவை கனத்த விஷயம்.

அசை போட்டு ஜீரணிக்க முடியவில்லை.

கண்ணம்மாவுக்கு இது இரண்டாவது சோதனை.

கசப்பான அனுபவங்களைச் சுமந்து மனம் மரத்துப் போய்விட்டாலும் அமுதாவின் பிடிப்புதான் அவளை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கும் ஆபத்தா?

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தின் ஒரே வாரிசாக வளர்ந்து வசந்த கால வர்ணஜாலம் போல் கவர்ச்சியான வாழ்க்கையைத் தொடங்கிய கண்ணம்மாவின் கால் நூற்றாண்டின் வரலாறு அமுதாவுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் இப்படி ஒரு புதிய பாதையில் நடைபோட ஆரம்பிப்பாளர்?

கண்ணம்மாவின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் தான்! அவளுடைய விரல் நொடிப்பு கூட வெளியே எட்டியதில்லை. அமுதா பிறந்த சில வருடங்களில் வாழ்க்கை திசைமாறும் என்று கண்ணம்மா எதிர்பார்க்கவில்லை.

கணவனின் போக்கில் வித்தியாசமான சுவடுகள் தட்டுப் பட்டதை கண்ணம்மா உணர்ந்தாள்.

நெருக்கம் குறைந்து வந்தது நீக்கம், இடைவெளி.

நெருஞ்சிமுள் போல் நெஞ்சில் வருடல்.

கண்ணம்மாவுக்குப் புலப்பட்டு விட்டது. வீட்டையே உலக மாக்கிக்கொண்டாலும் தன்னைச் சுற்றி என்ன நடக் கிறது என்பது புரியாமல் போய்விடுமோ? விலகல் என்பது ஒரு விதத்தில் விஷயத்தைத்துருவிப் பார்க்கச் சந்தர்ப்பம் தருவது தான்.

கோபால் “உல்லாச புருஷர்” ஆகிவிட்டார். கண்ணம்மாவிடம் பெற வேண்டியதை வெளியிலிருந்து பெறுகிறார்.

அவர் சிரிக்கும் போது சிரிக்க, இழையும் போது இழைய, சரிக்குச் சரியாகச் சரசம் புரிய சகவாசங்கள் கிடைத்திருக்கின்றன. வீட்டுக்கு வெளியே நடப்பதைப் பற்றி கண்ணம்மா கவலை கொள்ளவில்லை.

ஆனால், வீட்டிற்கும் வந்துவிட்டது. வினை.

விருந்துக்கு அழைத்து வந்தார் ஒருத்தியை.

விளம்பர மாடலைப் போல அழகாய் இருந்தாள் இருபத்தெட்டு அல்லது முப்பது வயதிருக்கலாம், சிரித்துச் சிரித்துப் பேசினார்கள் சாப்பிடுகிற பாவனையில் சீனப் பெண்ணா யூரேஷியப் பெண்ணா? கண்ணம்மாவுக்குத் தெரியவில்லை.

“கோபால் நீங்க குடுத்துவச்சவர்!” என்றாள் அவள். அவர் பெயரைச் சொல்ல இவளுடைய நாக்கு எழுந்ததில்லை. ஆனால் வந்தவளோ அடிக்கொரு முறை கோபால்… கோபால். கோபால்…

“தினந்தினம் இது மாதிரி சாப்பாடு எங்கே கிடைக்கும். அருமையான சமையல்!” என்றாள் அந்தப் பெண்.

விலகி நின்றாலும் கண்ணம்மாவின் காதில் எல்லாமே விழுந்தன. என் மனைவி எனக்கு மட்டுமல்ல, இனி உனக்கும் சமையல்காரிதான்” என்று சூசகமாகச் சொல்லிக்காட்ட அவளை அழைத்து வந்திருக்கிறாரா?

கண்ணம்மா உடைந்துவிடவில்லை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அந்தப் பெண்ணோடு அவர் நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரைக் கட்டுப்படுத்தவும், கடிவாளம் பூட்டவும் யார் இருக்கிறார்கள்.

கண்ணம்மாதான் கண்ணகியாகி விட்டாளே!

கோபால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆயிற்று இருபத்தைந்து ஆண்டுகள் அவர் இவளுக்குத் தாலிகட்டி! சொந்தக் கதை போதாது என்று இன்னொரு கிளைக் கதை.

புதிய அத்தியாயத்தை அமுதா ஆரம்பித்திருக்கிறாள்.

வாழையடி வாழை என்பது இதுதானா?

பெற்றோர் செய்வதைப் பிள்ளைகளும் தப்பாமல் செய்வார்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் விருப்பம் போல் ஓர் இளைஞனுடன் விருந்துக்குப் போகும் அளவுக்கு அமுதா மாறியிருப்பாளா?

நினைவுப் பின்னலில் சிக்கி உழல்கிறது பெற்றமனம். பெருமூச்சு விடுகிறாள் கண்ணம்மா.

என்று தணியும் இவளுடைய ஏக்கமும் சோகமும்?

பிரபலமான நட்சத்திர ஓட்டலின் விருந்து – கேளிக்கை மண்டபம். படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்த்த அனுபவம். இரவு நேரத்திற்கு இதம் சேர்க்கும் ஒளிஜாலம். இசை ஊற்று. இப்பொழுது நேர்முக அனுபவம் அமுதாவுக்கு.

லிம்முடன் வந்திருக்கிறாள். அதில் தயக்கமோ, நடுக்கமோ இல்லை. அதற்கு அவசியம் இல்லை. பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டத்திற்குப் படிக்கும் துணிவான ஓர் இளம் பெண் இங்கே வருவதற்கு ஏன் அஞ்ச வேண்டும்?

தனித்து வந்திருந்தால் ஒருவேளை தவிப்பாக இருக்கக்கூடும். அருகில் லிம், அவளைப் புரிந்து கொண்டவன். பிறகு என்ன?

யாருமே தனியாக வந்திருக்கவில்லை என்பதைப் பார்வை யால் அளந்து அறிந்து கொண்டாள். இணை இணையாக வந்து கொண்டிருக்கிறார்கள்., விருந்து மேசைகளைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

எல்லா முகங்களிலும் செழிப்பு, சிரிப்பு, வசதி படைத்த வர்கள். மகிழ்ச்சியைத் தேடி வருபவர்களுக்கு மையலும் மருட்சியும் இருக்காது. அல்லவா?

லிம்மும் அவளைப் போலவே சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

ஆவலோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.

விருந்துக்காகவா?

மின்னல் பூத்தது போல் அமுதாவின் பார்வையில் வியப்பு ஊடுருவியது.

“லிம் அதோ…அங்கே!” அமுதா முகபாவனையால் சுட்டிக் காட்டினாள்.

இமைக்காமல் பார்த்தான்.

ஆணும் பெண்ணுமாக இருவர்.

ஐம்பதைத் தாண்டிய ஆடவருடன் இழைந்தபடி வந்தாள் முப்பத்தைந்து மதிக்கத் தக்க எடுப்பான மாது.

“இவர்தானா?” என்று லிம் முணுமுணுத்தான்.

அமுதாவின் மௌனமே பதிலாக இருந்தது.

கோபால்-இவள் அப்பா – இரவு நேரத்தில் மகிழ்ச்சியை நாடிவரும் இடங்களில் இதுவும் ஒன்று.

எதிர்பாராமல் இரண்டு இரண்டு மேசைக்கு அப்பால், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் நெருக்கவாட்டில் அவரும் அந்தப் பெண்ணும் அமர்ந்தார்கள்.

சில நிமிடச் சிரிப்புக்கும் பேச்சுக்கும் பிறகு கோபாலின் பார்வை அமுதாவின் பக்கம் திரும்பிய போது, நம்பமுடியாத படி கண்ணை கசக்கிக்கொண்டு ஊடுருவினார்.

இன்னுமா சந்தேகம்?

அமுதாவைப் பார்த்தவர், அருகிலிருந்து இளைஞனையும் கவனித்தார், மெல்லிய அந்த வெளிச்சத்தில்.

அந்தப் பார்வையைச் சில முறை எதிர்கொண்ட பிறகு லிம்முடன் பேச ஆரம்பித்தாள் அமுதா. சன்னமான பார்வை வீச்சிலிருந்து அப்பாவின் முகத்தில் மண்டியிருந்த கருமேகத்திரளை அளந்துவிட்டாள்.

கோபால் விருந்து மேசையில் இருந்தாலும் அவர் மனம் கட்டவிழ்ந்து கால் நடையாக வேறெங்கோ திரியத் தொடங்கி விட்டது என்பதை அமுதா உணர்ந்தாள்.

அவ்வளவுதான். பின்னிரவு வரை அங்கே விருந்திலும் கேளிக்கையிலும் அவளும் லிம்மும் ஆழ்ந்துவிடத் தேவை இருக்கவில்லை.

புறப்பட்டுவிட்டார்கள்.

வெளியே வந்த போது லிம் “விருந்து அனுபவம் எப்படி?” என்று வினவினான்.

“மறக்க முடியாததுதான்!” என்றாள் அமுதா.

அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“எதற்காக இந்தச் சிரிப்பு?” என்று அமுதா வினவினாள்.

கண்ணகி கதையை நினைத்துக் கொண்டதாகச் சொன்னான். தற்செயலாகத் தன்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட கதையை தன் குடுமபக் கதையாகப் பார்க்கிறானே என்ற வியப்பு இவளுக்கு.

“ஆமாம்… உன் அம்மா கண்ணகி என்றால் அப்பா கோவலன் தான். அவருடன் பார்த்தோமே அவள்தான் மாதவி. இல்லையா?” என்றான்.

அமுதா பதில் சொல்லத் திணறினாள்.

“உன்னைப் புண்படுத்திவிட்டேனா, அமுதா?” என்று பரிவோடு அவளைக் கேட்டான்.

இல்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் புரிந்து கொண்டால் சரிதான் என்றாள் இவள். ஒரு மாதவியா, பலரா என்று கேட்கும் அளவுக்கு உரையாடல் போகவில்லை.

கோபால் அவனைச் சந்திக்க விரும்பக் கூடும் என்றாள்.

அழைத்தால் வரத் தயார் என்று சொல்லியபடி விடை பெற்றுக் கொண்டான் விம்.

அமுதா விசாரணையை எதிர்பார்த்திருந்தாள்.

எந்த நேரத்திலும் அப்பா தன்னை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தாள்.

பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பியதும் வீட்டில் வியப்பு காத்திருந்தது.

கோபால் வீட்டில் இருந்தார். விடுமுறை நாட்களில் கூட இதுபோன்ற மாலை வேளையில் வீட்டில் தங்காத அவருக்கு இன்றைக்கு என்ன ஆயிற்று? தனக்கு முன்பே வீட்டுக்கு வந்திருக்கிறாரே, காரணம் இருக்கும் என்று கணக்குப் போட்டது இவள் மனம்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் உண்ணவோ, பருகவோ நேரம் ஒதுக்காமல் உடை மாற்றிக்கொண்டு படுக்கையறையில் சுருண்டு விடுவது பல ஆண்டுகளாக அவருடைய பழக்கம். எல்லாத் தேவைகளும் வீட்டுக்கு வெளியே நிறைவேறி விடுகின்றன. பிறகு என்ன?

மாலை நேரத்தில் அப்பாவை வீட்டில் பார்ப்பது விந்தையாகத் தோன்றியது அமுதாவுக்கு.

“முன்னாடியே வந்திட்டீங்களா அப்பா?”

எவ்வித குறுகுறுப்பும் இல்லாமல் தெளிவாகவே அவரைக் கேட்டாள் மகள்.

“ஆமாம், ஆனா நீ.. நீ இந்த மாதிரி லேட்டாதான் வருவியா, எப்பவும்?”

“இன்னிக்கு யுனிவர்சிட்டியிலே ஒரு ஃபோரம். அதில் கலந்துகிட்டு வந்ததால் லேட்”

“சரி – உன் கிட்டே கொஞ்சம் பேசணும் அமுதா!”

நினைத்தப்படியே எல்லாம் நடக்கிறது என்ற பெருமிதம் இவளுக்கு.

உடைமாற்றிக் கொண்டு அப்பாவிடம் வந்து நின்றாள்.

உட்காரச் சொன்னார். அம்மா பார்வையில் தென் படுகிறாளா என்று பார்த்துக் கொண்டாள். இல்லை, அவள் எங்காவது ஒடுங்கிப் போய் நின்றிருப்பாள்.

லிம்மைப் பற்றிய விசாரணை. தாயும் காது கொடுத்துக் கேட்டாள் நன்றாக இருக்குமே என்று நினைத்தாள் அமுதா.

“அமுதா, உன் படிப்பு சில மாசத்திலேயே முடியப் போகுது இல்லையா?

“ஆமாம். அதை நினைச்சா வருத்தமா இருக்கு!”

“எனக்கும் ஒரு விதத்திலே வருத்தந்தான்!” என்றார் கோபால்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க, அப்பா?”

“இருக்காதா எனக்கு? படிப்பு முடியுதுன்னு நீ சங்கடப் படுறப்ப உன்னையே பிரிய வேண்டியிருக்குமேன்னு நினைச்சி நான் சங்கடப்படாம இருக்க முடியுமா?” என்றவாறு ஆழமாக அவளைப் பார்த்தார் கோபால்.

ஆச்சரியந்தான், மகளைப் பற்றிய சிந்தனையும் அக் கறையும் திடீரென்று வந்திருக்கிறதா? உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். சுற்றி வளைத்து அவர் எங்கே வருவார் என்பது இவளுக்குத் தெரியாதா? அதற்குரிய முன்னேற்பாட்டுடன் தானே உட்கார்ந்திருக்கிறாள்.

“நீங்க எதுக்குப்பா சங்கடப்படணும்? உங்களை விட்டு நான் வெளிநாட்டுக்கா போகப்போறேன்?”

“அமுதா, நான் சொல்ல வந்தது அது இல்லே.!”

“பின்னே, சொல்லுங்க…!”

“நீ இன்னொருத்தர் வீட்டுக்குப் போக வேண்டி யிருக்கே!”

“புரியும் படியா சொல்லுங்க, அப்பா! என்றாள் அமுதா. ‘

‘உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்துகிட்டிருக்கேன், அமுதா!”

“எனக்கா. இப்பவேயா?”

“ஆமாம், மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்”

இவள் வாய் திறக்கவில்லை.

மௌனத்தில் சில நிமிடங்கள் முறிந்தன.

“மாப்பிள்ளைப் பையன் கம்ப்யூட்டர், டெக்னாலஜி படிச்சவர். ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியிலே எக்ஸிக்யூடிவ் எஞ்ஜினீயர். வயது இருபத்தெட்டுதான். பெரிய திறமைசாலின்னு இப்பவே இவருக்கு நல்ல பெயராம்.

அவர் விவரித்தார் அமுதாவிடமிருந்து பதில் இல்லை. “உன்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு அவங்களை ஒரு நாள் வரச் சொல்லணும்னு திட்டம். சொல்லியாச்சு. ஒரு ஃபார்மாலிட்டிக்காக அவங்க வந்து பாத்திட்டுப் போகட்டுமே என்றார்!”

“அப்ப, அந்த இடம் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்றீங்களா?”

“ஆமாம், ஹான்ட்சம் பாய் நல்ல சம்பாத்தியம். இதுக்கு மேலே என்ன இருக்கு?” என்றார் கோபால்.

சில நிமிட சிந்தனைக்குப் பிறகு “கேரக்டர் எப்படிப்பா?” என்று கேட்டாள் இவள்.

இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. விக்கித் துப் போய், “என்ன இப்படி திடீர்னு ஒரு கேள்வி?” என்றார். “பையனோட ஒழுக்கத்தைப் பத்தி…”

“கேரக்டர் இல்லாதவனையா மாப்பிள்ளை பார்ப்பேன்?” கோபால் சற்று வேகமாகவே பேசினார்.

அவளும் தளர்ந்துவிடவில்லை.

“ஒரு அந்நியனை அவ்வளவு சீக்கிரத்திலே எப்படிப்பா எடை போடமுடியும்? நீங்க சொல்ற பையனைப் பார்த்திருக்கிறீங்களா? பேசிப் பழகியிருக்கிறீங்களா?” என்று கணை தொடுத்தாள்.

அமுதாவிடம் இந்தக் கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை.

“நீ கேக்கிற கேள்வி வினோதமாக இருக்கு. நீ படிச்ச பெண்!”

“கேள்வி கேட்கிறதிலே தப்பு இல்லேன்னு நான் நினைக்கிறேன். அப்பத்தான் தெளிவு கிடைக்கும்.”

“சரி உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்திட்டேன். அவன் கெட்ட பையன் இல்லே. ஏன்னா அவன் படிச்சவன். உயர்ந்த பதவியிலே இருக்கிறான். போதுமா?”

அவர் அழுத்தமாகச் சொன்னார்.

“அப்பா.. என் மேலே உங்களுக்கு அன்பு இருக்கு.. அக்கறை இருக்கு, பாசம் இருக்கு. அதை நான் மறுக்கலே. அதுக்காக கல்யாணம் விஷயத்திலே நீங்க சொல்றதை என்னாலே என்னாலே..”

இவள் குரலை இழுத்தாள்.. அவருக்குக் கொந்தளிப்பு.

“என்ன சொல்றே, நீ?”

“கல்யாணம் விஷயத்திலே என்னுடைய சுய விருப்பம் முக்கியம். அதுக்கு மத்தவங்க மதிப்புக் குடுக்கணும்னு எதிர் பார்க்கிறேன்!” என்றாள்.

அவர் மேலும் கொதிப்படைந்தார்.

“சுய விருப்பம்னா என்ன அர்த்தம்? நீ யாருடனாவது சுத்துவே. அவனை நான் மருமகனா ஏத்துக்கணும். அதைத் தானே சொல்ல வர்றே?” என்றார் சீற்றத்துடன்.

“இது அவசரப் பிரச்சனை இல்லேன்னு சொல்ல வர்றேன். ஆலோசனை ரொம்ப தேவையிருக்கு!”

“நீ என்ன சொல்லுவேன்னு எனக்குப் புரியும். ஒரு சீனப் பையனோட சுத்துறியே, அவனையே கல்யாணம் செய்து வைக்கணும்னு சொல்ல வர்றே,, இல்லையா? அந்த லட்சணத்தைத்தான் நேர்ல பார்த்தேனே!” என்றார்.

அமுதா அடக்கமாக இருந்தாள்.

“அவன் யார்? அட்ரஸைக் குடு உண்டு இல்லேன்னு ஒரு வழி பண்ணிடுறேன்” என்றார்.

உச்சமான ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினார்.

“அப்பா! எதுக்காக இவ்வளவு ஆத்திரப்படுறீங்க. அவசியம்னா அந்த லிம்மை வரச் சொல்றேன்..”

“இல்லே, அவன் இங்கே எதுக்கு வரணும்? அவன் யோக்கியன், லட்சிய புருஷன்னு உனக்கு நினைப்பு. சுய விருப்பம்னு நீ சொன்னப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன். நீ என்ன நினைச்சிருந்தாலும் சரி. நான் பார்த்திருக்கிற பையனை நீ எடுத்தெறிஞ்சிட முடியாது!” என்றார் கோபால்.

“என் உணர்ச்சிக்கும் மதிப்பு கொடுக்கிற கடமை உங்களுக்கு இருக்கு?

“திடீர்னு உனக்கு ஏதோ ஆகியிருக்கு. அதனாலேதான் இப்பவே அணைபோட நினைக்கிறேன்!” என்று அவர் சொன்னார்.

திடீர்னு எதுவும் ஆயிடலே எப்பவோ அந்த நிலைமை வந்தாச்சு.புதைஞ்சிக் கிடந்த பொறியை நீங்கதான் இப்ப ஊதி விட்டுட்டீங்க நெருப்பாட்டம் அது சுடுது!”

“நீ என்னதான் சொல்றே, இப்ப?” அவர் பொறுமை இழந்துவிட்டார்.

“அப்பா எனக்கு அடிமனசிலே ஒரு சந்தேகப் புயல், எனக்கு நீங்க பார்க்கிற மாப்பிள்ளை, உங்களை மாதிரி குணமுள்ளவரா, நடத்தை உள்ளவரா இருந்திட்டா, என்ன செய்வதுங்கிற பயம். பீதி எனக்கு.” என்றார் மகள்.

“என்ன சொன்னே, நீ?”

அமுதா தயங்கவில்லை.

“அப்பா! இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி அம்மா வைக் கலியாணம் செய்துக்கிட்டீங்க. அம்மா பணக்காரப் பெண். நீங்க தொழிலதிபரா மாறினீங்க. சில வருஷம் பிரியத்தோட வாழ்ந்து என்னைப் பெத்துப் போட்டப்புறம் உங்க பாதையை மாத்திக்கிட்டீங்க அம்மாவை ஒதுக்கி வச்சிட்டு இஷ்டம் போல் நீங்க.. நீங்க

இவள் நிறுத்தியதும் அவர் புழுங்கினார்.

“இதெல்லாம் தகப்பன் கிட்டே மகள் பேசற பேச்சா?” என்றார்.

“பேசற சந்தர்ப்பத்தை நீங்கதானே குடுத்தீங்க. சொல்ல வேண்டியதை சொல்லிவிடுறேன் அப்பா, அம்மாவை நீங்க ஒதுக்கிவச்ச மாதிரி நீங்க பார்க்கிற மாப்பிள்ளையும் என்னைப் புறக்கணிச்சிட்டு மாதவியைத் தேடுகிற கோவலனா இருக்க மாட்டான்கிறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு? அம்மாவைப் போல வெறும் சமையல்காரியாக என்னாலே இருக்க முடியாது. எனக்குக் கணவனா வருகிறவன் கண்டவளைத் தேடிப்போறவனா இருக்கக் கூடாது. அதுக்கு உங்களாலே உத்தரவாதம் தரமுடியாது. உபதேசிக்கிறவங்க அதுக்கு உதாரணமாக இருக்கணும்.”

மகளின் பேச்சு அவரைச் சுட்டுப் பொசுக்கியது.

ஆத்திரத்தில் பாய்வதா, அமைதியடைவதா என்பது புரியாமல் ஆடிப் போனார் கோபால்.

அமுதா தொடர்ந்தாள்.

“அப்பா… நான் உங்க மகள்தான். தந்தை சொல் மந்திரம்னு சொல்லுவாங்க. உங்க வார்த்தையை மதிச்சி நடக்கிற கடமை எனக்கு இருக்கு. ஆனா, இந்த வீட்டில் இவ்வளவு காலமாக என்ன நடந்திருக்கு? அம்மாவுக்கு இழைக்கப்பட்டிருக்கிற அநீதி எரிமலையா என் அடி மனசிலே உறைஞ்சிருக்கு.. அநியாயமா அம்மாவை ஒதுக்கித் தள்ளிட்டு நீங்… நீங்க. அவங்க எனக்கு கோயில் மாதிரி.”

கோபால் கூனிக் குறுகிவிட்டார்.

தான் மெளனமாக இருந்தாலும் தாய்க்கு நேர்ந்த அவலத்தை அன்றாடம் பார்த்துப் பார்த்துப் புழுங்கிப் போனதாகச் சொன்னாள் அமுதா.

பணக்காரப் பெண் என்றாலும் கணவனுக்குக் கட்டுப் பட்டு உடமைகள் அனைத்தையும் விட்டுக் கொடுத்த கண்ணகிதான் தாய் என்று சொன்னாள்.

அம்மா உள்ளுக்குள் அழுத அழுகை மகளான தனக்குத் தான் தெரியும் என்றாள் இவள்

படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் தன்னை வளர்த்து ஆளாக்கி படித்தவளாக்கி இருப்பது அம்மாதான் என்றாள்.

“இத்தனை வருஷமா நடந்துக்கிட்டிருக்கிற எல்லாமே எனக்குத் தெரியும். இனிமேலும் எதையும் என்னாலே பொறுத் துக்க முடியாது. கல்யாணம்னு எனக்கு நடக்கனும்னா அம்மாவின் யோசனை. சம்மதம் இல்லாம அது நடக்காது. அந்த சீனப் பையனைச் சுத்திக்கிட்டுருக்கேன்னு சொன்னீங்க… என்னைத் தவிர நம்ம குடும்பக் கதை அவன் ஒருத்தனுக்குத் தான் தெரியும். என் மேலே லிம்முக்கு அனுதாபம் சகோதர பாசத்தோடு பழகும் அவன் அம்மாவைப் பார்க்கணும்னு வீட்டுக்கு வந்தான். உங்களையும் பார்க்க முடிஞ்ச இடத்திலே பார்த்திருக்கிறான்.. உங்க மனமாற்றத்துக்கு தன்னாலே உதவ முடியம்னு சொன்னான். லிம் வீட்டுக்கு வந்ததும், நீங்க சிந்திக்கிற மாதிரி வெளியே உங்களை அவன் பார்த்ததும் அதுக்காகத்தான், காதல் வெறி பிடிச்சி அலைகிற வாலிபன் இல்லே அவன்!”

நிறுத்தினாள்.

பிறகு நிதானமாகச் சொன்னாள்.

“இவ்வளவுதான். இதுக்கு மேலே என்ன செய்ய நினைக் கிறீங்களோ, யோசிச்சி முடிவு செய்யுங்க அப்பா அம்மாவுக்கு மீட்சி கிடைக்கிறவரைக்கும் உங்க பெண்ணுக்கு கலியாணம். காட்சி எதுவும் இல்லே. அதுதான் என் தீர்மானம்!”

மகள் வைத்த முற்றுப்புள்ளி பேரிடியாகக் கோபாலின் தலையில் இறங்கியது.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *