ஒரு நாள்




(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அப்பா! ஏந்திரு. மணி ஏழரை ஆச்சு.’
‘என்னடி சனியன் ! தூங்கவிடமாட்டேன்கறேள்?
‘துப்பட்டியை இழுத்துப் போத்திக்கோ. நானா விட மாட்டேங்கறேன்? இந்தக் கடிகாரத்தைக் கேளு. அப் பறம் ஆபீசுக்கு நாழியாகிவிடும். சொல்லிப்பிட்டேன்.’
‘சனியன்! சனியன்! சுருட்டு மெத்தையை…நன்னா யிருக்கு’ மெத்தையும் தலைகாணியும், பஞசு பிதுங்கி விழறதே! ஒரு தையல் போடு இன்னு எத்தனை தரம் அடித்துக்கொண்டிருக்கிறேன்! ஒரு தையல் போட உங் களால் முடியவில்லை?”
‘நூல் இருக்கு. ஊசி வாங்கிண்டுவான்னு எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்?’
‘என் மேலே திரும்பு-சண்டைக் கிடா மாதிரி. ஊசி வாங்கத் துப்புக் கிடையாது. பொழுதிருந்தால் நானே வாங்கித் தைத்துவிடுவேன். நான் படுகிற அவஸ்தை யிலே ஒன்றும் ஞாபக மிருப்பதில்லை.’
‘நாளைக்குத் தெச்சு வச்சூடறேன் அப்பா.’
‘ரொம்பச் சரி, ஏண்டி! பல்லுப்பொடி எங்கே?’
‘பல்லுப்பொடி இல்லியே!’
‘இந்த வீட்டில் என்னதான் இருக்கும் ? எப்பவும் இல்லைப் பாட்டுத்தான். அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு இல்லை. சின்னமலை தகப்பன்சாமிக்கு இல்லை. கோயி லில் இல்லை. வயக்கரைத் தொந்தி வீரனுக்கும் இல்லை. விஞ்ஞானியின் அணுவில் இல்லை. பேச்சில் இல்லை. பாட்டில் இல்லை. வார்த்தையில் இல்லை. ஆனால், அப் பாலுக்கப்பாலாய் முப்பாலுக்கும் அப்பாலாய்மட்டும் உண்டாம்! இருக்கட்டும், இருக்கட்டும். இங்குமட்டும் இல்லைப் பாட்டுத்தான். வாங்கிக்கொண்டு வரச் சொல்றதுதானே?”
‘சொன்னேன். அதற்குப் பெரியவன் என்ன சொன் னான் தெரியுமா? பள்ளிக்கூடம் போகக்கூட வாடிக் கைக் கடை வீதி வழியே போறதில்லை இன்னான். ஏண் டான்னால் மளிகைக் கடைச் செட்டியார், மாசத்துக்கு ஒங்களுக்கு மட்டும் அறுபது நாளா இன்னு கேக்கறாராம். இவன் சாதுவோ இல்லியோ, அந்தப் பக்கம் போகப் பயப்படுகிறான். செட்டியார் கடையில், நூத்தி ஐம்பதாக ஏறிப் போச்சு.’
‘அப்பொ சரி…’
‘செட்டியார் திருட்டுப் பயலாச்சே! இந்தப் பணமில்லாமல் அவன் கப்பல் கவிழ்ந்து போகிறதோ! வருஷத்துக்கு வருஷம் புது மோட்டார் மாற்றுவதில் குறைவில்லை. அவனுக்குச் சரக்குக் கொடுக்கிற வியாபாரியைக் கேட்டால் செட்டியார் நாணயம் புரியும்!…’
‘வேண்டாம், இரண்டணாக் காசுகொடுத்து வாங்கப் படாதோ?’
‘காசில்லை. 13-ஆம் தேதி ஆயிடல்லியா? அந்தப் பக்கத்திலே குடி இருக்கிறவர்களைக் கேட்டேன் நகை பண்ணக் குடுத்தேன், கூலிக்குத் திண்டாட்டமாய் இருக்கு, முழி பிதுங்குகிறது இன்னார்.’
‘போறும், அழுகை. சாம்பல் இருக்கோ இல்லியோ?’
‘பட்ணத்திலே பசுமாடு ஏது? எல்லாம் எமவாகனம் தானே! தப்பித் தவறி வரட்டி வாங்கி எரிச்சால் வீட்டுக்கார அம்மா இடுப்பிலே கையை வச்சுண்டு வந்தூடறாள். சுண்ணாம்படிச்சு ஒரு அமாவாசைகூட ஆகல்லியே, கரிஅடுப்பு வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாதா என்கிறாள். அதிலேருந்து வரட்டி வாங்கறதில்லை ‘
‘ரொம்ப நல்லதாப் போச்சு. காப்பிப் பொடி கொண்டா?’
‘இப்பத்தான் காபிக்கொட்டை வறுத்திருக்கிறேன்.’
‘காபி உண்டா?’
‘பல் தேச்சு முடியறதுக்குள் ஆய்விடும்.’
‘அவ்வளவு பெரிய யானைப் பல் முப்பத்தி இரண்டா எனக்கு இருக்கு-அவ்வளவு நாழியாக?’
‘இதோ ஆயிடும். பல் தேய்ங்கோ-‘
எதாலே தேய்த்தால் என்ன ? செங்கல் பொடியைக் கண்டால் இளப்பமாக இருக்கிறது. ஆனால், அவர்களுக் கெல்லாம் இதுதானே அந்தக் காலத்திலே பணம் சேத் துக் கொடுத்தது! ஒரு மூட்டை அரிசிக்கு மூணு பட்ணம் படி கல் பொடின்னு அரிசி மண்டி சாஸ்திரம். மூணு படிக்கு மூணு ரூபாய் லாபம், அப்புறம் மூட்டை லாபம் வேறே…இந்த மாதிரி ஆபிரம் ஆயிரம் மூட்டையில் ஒளிந்துகொண்டு ஆஸ்தி சேர்த்துக் கொடுத்த பொருள் எனக்கு இளப்பமாக இருந்தால், யார் பேரில் குற்றம்? சிறப்பு பொருளில் இருக்கிறது என்று சொல்வதைவிட அதை உபயோகிக்கும் விதத்தில் இருக்கிறது என்று சொல்வது உண்மை. அதைச் சொல்வானேன் ? இந்தப் பல்பொடி காசு கொடுத்து வாங்கித் தேய்க்கிறேனே, அதிலே சலித்து எடுத்துக் கலந்த செங்கல் பொடி இல்லை என்றாவது நிச்சயமாகச் சொல்ல முடியுமா என்றால் முடி யாது தான் ! தில்லை வெளியிலே கலந்துவிட்டார் பின் னும் திரும்பியும் வருவாரோ ? பாக்கி சாமானோடு ஒன்ற றக் கலந்துபோன சாமானைச் செங்கற்பொடி என்று எப்படிச் சொல்லலாம்? வாஸ்தவம்தான். செங்கற்பொடி என்பதற்காகவா காசு கொடுத்து வாங்குகிறோம் ? இல்லை இல்லை; பல் பொடி என்பதற்காக விலை கொடுக் கிறோம். ஆகையினால், ஒரு பொருளின் உண்மையான தன்மையைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அத்துடன் நமக்கு என்ன சம்பந்தம்? அதனுடைய தோற்றத்தைக் கண்டுதான் நாம் மதிப்பிட முடியும்? தோற்றம் என்பதும் பொய் என்று தெரிந்தால் மாத்திரம் என்ன பிரமாத வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது? நேற்று அந்த விஞ்ஞான நிபுணர் உதாரணம் சொன்ன தைக் கேட்ட பிறகு, எனக்கு ஒரே குழப்பமாகப் போய் விட்டது. ஒரு டம்ளரில் தண்ணீர் இருக்கிறது. தண் ணீரின் மேல் மட்டத்தைப் பார்த்தால் அசைவற்றிருப் பது போல் தோன்றுகிறது. தோற்றத்தில் அமைதி 1 ஆனால், உண்மையில்-பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால் – சமுத்திரத்தைப் போல் அலை பொங்க மேடும் பள்ள முமாக இருக்கிறது ! தோற்றத்தில் அமைதி. ஆனால், உண்மையில் ஓய்வற்ற சலனம் ! தோற்றம் பொய்யா? அப்படியானால் உண்மையி லிருந்து பிறப்பது பொய்யா! அல்லது தோற்றமும் பொய், உண்மையும் பொய்…மாயை !… இருக்கலாம் பல் தேய்த்து வாய்கொப்பளித்தேனே, அந்தத் தண்ணீ ரில் வானவில்லின் ஏழு வர்ணமும் தெரிகிறது. வான வில்லாகவே தெரிகிறது; வானத்தில் பெரிதாகத் தெரிகிறது; கொப்பளித்து உமிழ்கிற தண்ணீரில சிறிதாகத் தெரிகிறது. என் வாய்க்குள் வானவில் இருக்கிற தென்று என்னால் நம்ப முடியாது. ஆனால், அப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது கங் காளத்தில் இருந்து எடுத்த தண்ணீர் தானே இது ‘ கங் காளத்தில் இந்த வானவில் இருந்தால் தெரியவேண் டாமா? தெரியவில்லையே! நான் துப்பிய தண்ணீரில் மட்டும் தோன்றுவதால், இந்த ஏழு வர்ணமும் என்னுள் இருக்கலாமோ? இந்த ஒளி தோற்றமோ? வர்ணங் கள்தான் உண்மையா? தோற்றத்திற்கும் உண்மைக் கும் என்ன உறவு ? உண்மையும் தோற்றமும் ஒத்துப் போய்விட்டால் செங்கல் பொடி பல்பொடி ஆகிவிடு கிறது… பல்லைச் சுத்தம் செய்தாகிவிட்ட ஆடுமாடு பல் தேய்ப்பதில்லையே! அதற்காக அவைகளுக்கு எந்த வியாதியும் வரக் காணோமே! பல் டாக்ட ரோடு பேசினால் ரொம்பப் பயங்கரமாக இருக்கிறது !…
காபி போட்டு ஆறிப் போகிறது. இன்னும் பல் தேய்த்து முடிந்தபாடில்லை…’
இந்தப் பாழும் காப்பியினாலே எவ்வளவு தொல்லை ! இதை நிறுத்திவிட்டால் குறைந்தது 30 ரூபாயாவது மிச்சம். ஒவ்வொரு மாதம் கடன் வாங்குகிற பணமும் ஏறக்குறைய இவ்வளவுதான் ஆகிறது ! மனசு வச்சால் நிறுத்திவிடலாம். யார் வைக்க வேண்டா மென்றார் கள் ? ஒருவருமில்லை. பாவம் ! இவர்களுக்காகப் பார்க்க வேண்டி இருக்கிறது! பழயதுன்னு சொன்னால் தாத்தா ஊருக்குப் பயணம் கட்டுகிறேன் என் கிறார்கள்…
‘காபிக்குக் கொஞ்சம் சர்க்கரை போடு. போறும் போறும் இதென்னடி டிகாக்ஷன் சரியாக இல்லை போலிருக்கே? காபிப் பொடியைக் குறைத்துப் போட்டு விட்டியா? செட்டுப் பிடிச்சியா?’
‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை. வழக்கம்போல கோபுரமாக இரண்டு கரண்டிதான் போட்டேன். அவசர மாக டிகாக்ஷன் இறங்கிவிட்டது. அதுக்குக்கூட உங் கள் ஆபீஸ் அவசரம் தெரிகிறதனால் ஒவ்வொரு நாள் இப்படி ஆகிவிடுகிறது…’
‘வரவர உனக்குக்கூடச் சலிப்பு ஏற்பட்டுப் போச்சு. நியாயந்தானே! எழுந்திருக்கிறது, காபி வைப்பது, குடிப்பது, சமைப்பது, எனக்குச் சோற்றைப் போட்டு ஆபீசுக்கு விரட்டுகிறது குழாய்த் தண்ணி நிற்பதற் குள்ளே துணிமணிகளைத் துவைக்கிறது, மத்யானம் படுத்துத் தூங்கப் பார்க்கிறது…வந்தால் தானே ! சந்தை இரைச்சலில் குடி இருந்து கெட்டேனே என்பது போல. அடுத்த வீட்டம்மா. எதிர்த்த வீட்டம்மா அவாள் அவாள் வீட்டு மூட்டையைக் கொண்டு வந்து போட்டு எல்லோருமா, பொதுவிலே வெளுக்கிறது! ! மத்யானம் இவாளெல்லாம் டிபன் டிபன் என்று ரகளை ! உன்மேலே என்ன வஞ்சனை ? சாமர்த்யமாக மோருஞ் சாதத்தைப் போட்டு விரட்டறது. பிறகு இரண்டாக் தரம் காபி, சடை போட்டுக் கொள்வது, ராத்திரி சமை யல்-எல்லாம் மிஷின் மாதிரி நீயே செய்யணும். மிஷின் என்றால் அலுப்பாகத்தான் இருக்கும். செய்கிற காரியத் தைத் திரும்பத் திரும்பச் செய்வதில் இன்பம் கண்டு பிடிக்கிறவர்கள் அறிவாளிகள் ஆகின்றனர் தேவரா கக் கூட இருக்கின்றனர். இந்தச் சூரியனுக்கு அலுப்புச் சலிப்பு உண்டா? மேகம் வந்து ஒளியை வேண்டுமானால் மூடலாமே ஒழிய, அவனாக அலுப்பிலோ சலிப்பிலோ ஒளியைக் குடைபோல மடக்கிக் கொண்டதில்லை. சூரியன் மாதிரி வேலை செய்வதற்கு உலகத்திலே ஆளுண்டா?…’
‘என்னை வேலை வாங்கறத்திலே புலி என்று எனக் குத் தெரியும். இந்தச் சலவை நேற்று வாங்கிக்கொண்டு வந்தது. கயிறு கட்டினபடியே பெட்டி மேலே உட் கார்ந்திருக்கிறது பாருங்கோ. உள்ளே எடுத்து வைக் கிறதற்கு இவர்களுக்குத் துப்பு இல்லை. அதைப் பாருங்கோ…சாமா ! அந்தத் தெருவிலே இருந்து பேப்பர் வாங்கிக்கொண்டு வந்தாயோ இல்லியோ?’
‘நான் போனேன் அம்மா. அந்த மாமா மார்க்கெட் டுக்குப் போயிட்டார். மாமிக்குப் பேப்பர் வச்சிருக்கிற இடம் தெரியல்லே. அவர் திரும்பி வந்த பிறகு வரச் சொன்னா!
‘ஆமாண்டா, அவர் திரும்பி வருகிற வரையில் கடி யாரம் நின்றுகொண்டிருக்க வேண்டும். மகாராஜா உத்தரவு!’…சனியன் பிழைப்பு ! கூட்டு வியாபாரமே மகா மோசம் ! வருகிற பேப்பரை ஒழுங்கா விற்றுக் கணக்கு வைத்துக் கொண்டால்—அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால். அப்படி நான் நினைக்கிறேன் என்று அவன் நினைக்கிறானென்று எனக்குத் தெரியும் ! இந்த மன சென்று ஒன்று இருக்கிறதே! ஆச்சர்யமான சாமான் ! ஒருவருடைய தயவும் இல்லாமல் உண்மை யைக் கண்டு பிடித்துக் கொண்டு விடுகிறது! நாளைக்கு நடக்கக் கூடியதை இன்றைய தினமே உணர்ந்து கொண்டு விடுகிறதே! உலகத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் யானைமாதிரிதான் யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே ! இந்த நிகழ்ச்சிகளை முன் கூட்டிச் சொல்லும் மணியோசை ஒன்று எப்படியோ இந்த மனசுக்கு எட்டி விடுகிறது. இந்தச் சக்திக்குப் பேர்தான் உணர்வோ? பிராணிகளுக்கெல்லாம் அடிப் படையாதாரம், இந்த உணர்வுதான்! ஆனால், அறிவு இருக்கிறதே, அது முற்றிலும் வேறு வகை. எறும்பு மரத்தின் மேலுள்ள பழத்தை எட்ட வேண்டுமென்றால் தரையிலிருந்து ஒவ்வொரு அங்குலமாக ஏறிப் போக வேண்டி இருக்கிறது. ஆனால், கிளிக்கு அந்தப் பிர யாசை எல்லாம் இல்லை. கரையையோ, மரத்தையோ தொடாமல் நேரே பழத்தின் அருகில் பறந்து போய் உட் கார்ந்துவிட முடியும் ! அறிவு எறும்பைப்போல் ஊர்ந்து தான் செல்ல முடியும். ஆனால், உணர்வு நேரே இலக் கைப் பிடிக்கிறது! அந்த உணர்வுதான் கூட்டு வியா பாரமே உருப்படாது என்று மொண மொணத்துக் கொண்டே இருக்கிறது ! எல்லாம் சரிதான். தனியாகப் பேப்பர் வாங்குவதற்கு யோக்யதை வேண்டாமா? எல்லாம் தெரிந்து போய்விட்டது; பணம் பண்ணத்தான் தெரியவில்லை. அது தெரியாவிட்டால் அரை ஆறு தாண்டின கதைதான். அதனால் தான் வாழ்வு இப்படித் தத்தளிக்கிறது. மணி என்னடா ! அந்தச் சலவையை . எடு. முழு உருப்படியாக இருக்கிறதா அல்லது ஜன் னல் வைத்திருக்கிறானா பார்ப்போம். ஒண்ணு, ரெண்டு…’
‘ஏண்டா 15 உருப்படி போட்டிருக்கிறோம், பதினாறு இருக்கிறதே…’
‘அதெப்படி இருக்கும் ? துணி என்ன குட்டி போடுமா?… எங்கே ஒவ்வொன்றாய்க் காட்டுங்கோ சொல்கிறேன்.’
‘சரி, இதோ!’
‘பச்சைக்கரை வேஷ்டி…’
‘சரி.’
‘மூன்று ஷர்ட்டு, ஒரு புஷ்கோட்டு…’
‘சரி.’
‘சாரி மூணு…’
‘சரி; அப்புறம் பிரிச்சுப் பார்க்கணும். குழம்புக்குத் தாளிச்சுக் கொட்டணும்’
‘இந்தப் பயல்கள் டிராயர், ஷர்ட்டு…’
‘சரி.’
‘பாவாடைகள்…’
‘சரி’
‘இதெல்லாம் என்ன?’
‘பாடி.’
‘இதென்ன சங்கிலிப் பூரான் மாதிரி இவ்வளவு இருக்கிறதே!’
‘சங்கிலிப் பூரானாவது, மண்ணாங் கட்டியாவது! எல்லாத்தையும் கிழிச்சுத் தொலைச்சுவிட்டான். பின்னே குட்டி போடாதோ? ஓரணா வேணுமின்னால் லாட்டிரி யாக இருக்கிறது ! இப்பொழுது யார் வாங்குகிறது? ஒருதரம் வாங்குகிறதற்குள்ளே ஒன்பது சண்டை ஆகிறது!’
‘இந்தச் சலவைக்காரன்க சமாசாரமே இப்படித்தான். நான் பார்த்திருக்கிறேனே-பொட்டியா போடுகிறான்? பெரிய செங்கல்லை வைத்துக்கொண்டு தேய்க்கிறான் ! திராபைத் துணி. குட்டி போடாமல் என்ன பண்ணும்?’
‘இந்த எழவுக்குத்தான் வண்ணானே வேண்டாம் என்று அடித்துக் கொள்கிறேன்.’
‘வண்ணான் வேண்டாமின்னால் யார் தோய்க்கிறது?’
‘நாம் தான்.’
‘நீயும் பேஷாகத் தோய்த்துவிடுவாய்-நானும் தோய்த்து விடுவேன். கடியாரத்திற்குப் போட்டியா உனக்குச் சமையல், எனக்கு ஆபீஸ். நன்றாகச் செய்து விடுவோம்.’
‘அவனைக் கண்டித்தாவது வைக்க வேண்டும். கூலியைப் பிடித்தால்தான் அவனுக்குப் புத்தி வரும்.’
‘அவனுக்கு வருமோ, நமக்கு வருமோ ! குழம்பைப் போய்ப் பார். அப்பறம் ஆபீஸ் கொம்பேறி மூக்கன் கிட்டப் போய்க் கெஞ்ச வேண்டும்.’
‘நம்மைப் போலொத்தவர்களுக்குப் புத்தி இருக் கிறது. பிழைக்க யுக்திதான் தெரியவில்லை. நல்ல ஜன்மம்! நல்ல ஜன்மம்!’
‘நாழியாச்சு. குளியுங்கோ. ஒரு வார்த்தை சலவைக் கம்பெனியிலே கேட்டுட்டு வரேனே?’
‘அப்புறம் அதைப் பார்க்கலாம். நாழி ஆச்சு. எட்டு மணிக்கு டாண்ணு முன் பக்கத்துக்காரர்கள் குளிக்கக் குழாய்க்கு வந்துவிடுவார்கள். அவா முகாம் கலைய 10 மணி ஆகிவிடும்.’
‘ஏசுவைச் சிலுவையில் அடித்தாப்போல இருக் கிறது பிழைப்பு. காலிலே ஆணி அடித்திருக்கிறது. கையில் அடித்திருக்கிறது. தலையிலே முள் முடி. இதோடெ இன்ப லோகத்தில் பறக்க வேண்டும். மணி பார்த்து இரைதேட இறங்கவேண்டும். இப்படிக் காலத் துக்கு அடிமைப்பட்டு அடிமைப்பட்டு… ஹும். வாளி எங்கே ? வாளி எங்கேடா? நாழியாகிறது…’
‘வாளியிலே ஓட்டை! பொறுத்தமாகத்தான் இருக்கிறது…’
குளிக்கிற சமயத்திலே வேஷ்டி துவைக்க வேண்டு மென்று தோன்றுகிறது. முடியவில்லையே! எவ்வளவு லாபம்! துணிமணி கிழியாது. வண்ணான் கூலி மிச் சம். வண்ணான் சொரி வராது. இவ்வளவும் தெரிகிறது. செய்யத்தான் முடியவில்லை. எண்ணத்துக்கும் செயலுக் கும் இடையில் ஏழு காத தூரமிருக்கிறது. எனக்கு மட் டும் அல்ல, என்னைப்போல உள்ளவர்களுக்கெல்லாம் தான் ! பெரியவர்கள், ஞானிகள் என்கிறோமே, அவர் கள் மட்டும் இப்படி இல்லை. நினைத்ததைச் சொல்லி, செய்தும் விடுகிறார்கள். நினைப்பது, சொல்வது, செய் வது—இவைகளுக்கிடையே இடைவெளியே இல்லை. சூழ்நிலையில் வித்யாசம் இருக்கிறது. ஆனால், அவர்கள் சூழ்நிலையைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. நினைப்பு மனத்திற்குள் எழுகிறது சொல்வது ஆகாயத்தில் ஒலிப் படகாகிறது. செயல் பிற மனிதர்களுடனோ, பொருளுடனோ உண்டாகிறது. இதைத் தவிர இவை எல்லாம் சேர்ந்து ஒரே நிகழ்ச்சிதான், ஒரே இயக்கந்தான். இந்த ஒருமைப்பாட்டை அடைந்தவர்கள்தான் ஞானிகள், பெரியோர்கள் ஆகின்றன. ஆனால், நமக்கு? போகட் டும். உலகத்திலே எல்லோரும் ஞானிகளாய் இருந்து விட்டால் பிறகு ஞானிகள் என்று யார் யாரைச் சொல்ல முடியும்? ஒளிக்குப் பெருமை இருட்டு இருப்பதனால் தானே!
வீட்டிலே பெரியவர்களுக்கு எப்படிப் பழக் கமோ அப்படித்தானே நமக்கும் பழக்கம் அமையும் ! அதுவும் பாலியத்தில் இந்தப்படழக்கமெல்லாம் படிந்தால் தான் உண்டு. பையனாக இருந்தபொழுது வீட்டிலே இருந்த ஆண்பிள்ளை ஒருவர்கூட வேஷ்டி துவைத்து நான் பார்த்ததில்லை. பெரியவர்கள்தான் சுருதி! சுரு தியை ஒட்டித்தானே பாட்டுக்குப் பெருமையும்?
அம்பலத்தில் ஆடுகின்றார்—
பாங்கிமாரே அவர்
ஆட்டம்கண்டு நாட்டம் கொண்டேன்-
பாங்கிமாரே……
‘நீங்க குளிக்கறேளா, பாட்டுக் கச்சேரி பண்றேளா?”
‘இதோ குளித்தாகி விட்டது. இலை போடல்லியா?’
‘குழாயை விட்டுச் சமையல் கட்டுக்கு வந்தால் தெரி கிறது!’
‘பாடவில்லை, பயப்படாதே! இந்தக் குரல் இருக் கிறதே, புண்யம் செய்திருந்தால்தான் தேன் மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் மசை இல்லாத கட்டை வண்டி அச்சோடெ கடையாணி பேசுவதுபோலத்தான் இருக்கும். இலை போட்டாகிவிட்டதோ இல்லையோ?’
‘பருப்புத் தொகையல், பேஷ். மிளகுக் குழம்பு ரொம்ப பேஷ்…நல்ல சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடக் கூடப் போவதில்லை. ஆபீசு அவசரத்துக்கா இந்தச் சமையல் பண்றது? லீவ் நாளாக இருந்தால் ஆற அமரச் சாப்பிடலாம்…’
‘உங்களுக்கெல்லாம் தலைகீழ்தான். ஞாயிற்றுக் கிழமை இந்தச் சமையலா செய்கிறது?’
‘ஏன், அதிலென்ன பிசகு?’
‘பருப்புத் தொகையலும் மிளகுக் குழம்பும் நீங்கள் சொன்னேளே என்று வைப்பேன். சோதனையாக நாலு பேர் விருந்தாளி வருவா. இதைப் போட்டால் மெச்சிக் கொள்வார்கள்!’
‘பிறத்தியார் மெச்சிக் கொள்ளாவிட்டால் என்ன மோசம்?’
‘நூறு காரியத்திலே தொண்ணூறு காரியம் பிறத்தியார் மெச்சிக் கொள்வதற்காகத்தான். நூற்றில் தொண்ணூற்றி ஒன்பது பேர் செய்வது போலத்தான் நாமும் செய்ய வேண்டும்.’
‘இல்லாவிட்டால்?’
‘பைத்யம் என்று முதுகுக்குப் பின்னால் சொல்வார்கள்.’
‘சொல்லட்டுமே!’
‘உங்களோடே தர்க்கம் பண்ண நான் படிச்சா வச்சிருக்கேன் ? நாழியாகிறது. அப்பறம் 8-45 பஸ் போய் விட்டால் அரை மணி காத்துக்கொண்டு இருக்க வேண்டும்…’
சாப்பிட்ட உடனே சற்று உட்கார வேண்டும் என்று வைத்ய சாஸ்திரம் சொல்லுகிறது. இராமலிங்க சுவாமிகள் நித்ய ஒழுக்க இயலில் இதைத்தான் சொல்கிறார். துறவிகளுக்கு வாழ்க்கையைப்பற்றி என்ன தெரிகிறது? ஐந்து நிமிஷம் இப்பொழுது உட்கார்ந்தால், அப்புறம் அரை மணி அங்கே நிற்க வேண்டும். அதற்குப் பிறகு மானேஜரண்டை நிற்கவேண்டுமே ! இந்த வேதனை எல்லாம் துறவிகளுக்கு என்ன தெரியும்? அடுக்காக வாழ்வை நடத்த விதிகள் அமைத்து விடு கிறார்கள் !
‘சாமா ! சட்டையைக் கொண்டா. டிபன் உண்டோ இல்லையோ ? இல்லையா? சரி, சரி. சாப்பிட்டுவிட்டு ஜாக் ரதையாகப் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டு வா.’
‘போறேன் அப்பா. வாத்யார் கோவிச்சுக்கிறார்.
‘ஏண்டா?’
‘இன்னும் புஸ்தகம் வாங்காமல் எத்தனை நாள் இருக்கப் போறெ என்று தினம் கேட்கிறார்.’
‘அடுத்த வாரம் வாங்கித் தருகிறேன் என்று அப்பா சொன்னார் என்று சொல்லு. கண்ணைக் கசக்காதே; வாங்கித் தரேன். இப்பொழுது ஆபீசுக்கு நாழியாகி விட்டது…நீ ஜாக்ரதையாய்ப் போய்விட்டு வா.’
வியாதி ஒன்றுதான். ஆனால், அதற்குப் பல பெயர்கள். அதே மாதிரிதான் பிடுங்கல்கள் பல. கார ணம் ஒன்றே. இந்த வியாதிக்கு – இந்தப் பிடுங்கலுக்கு – மருந்து யாரும் கண்டுபிடிக்கவில்லை. பிறக்காமல் இருக்க முயலவேண்டும் என்று வேதாந்தி சொல்வதும், புரட்சியைத் தோற்றுவிக்க வேண்டும் என்று தோழர் கள் கூறுவதும் ஒன்றுதான். இரண்டும் பருப்பை வேக வைக்காது.
‘…ஆபீசுக்குப் போய்விட்டு வருகிறேன்…’
‘எப்பொ வருவேள்?’
‘கழுதையை வண்ணான் அவிழ்த்து விடுகிற பொழுது.’
‘ரொம்பச் சரி’…
இந்தக் கூட்டத்திற்கு ஓய்ச்சல் ஒழிவு கிடையாது போலிருக்கிறது. பத்து பஸ் கூடப் போட்டால் சர்க்கா ருக்கு என்னவோ தெரியவில்லை !
‘இந்தப் பக்கம் வாங்க… முதல் கடைசி கூடவா தெரியவில்லை?’
‘தெரியுது.’
‘தெரிஞ்சுதான் முன்னாலே போறீங்களா… இங்கே இருக்கிறவர்கள் ஒருத்தரும் பொட்டை இல்லை.’
‘கோபிச்சுக்காதீங்க.’
‘நானா கோவிச்சுக்கிறேன்? திருட்டுத்தனமா வந்து…’
‘சண்டை அப்பறம் போட்டுக் கொள்ளலாம்…ஏறுங்க வண்டியிலே.’
‘அதென்னங்க அத்தனை பேரும் ஏறிட்டிங்க ? புட்போர்டு பிஞ்சு போயிடப் போவுதுங்க. இறங்குங்க, இறங்குங்க. சொன்னாக் கேளுங்க தயவு செய்து…’
நான் இறங்கி இருக்கக்கூடாது இறங்கினால்கூட அவன்கள்மாதிரி வண்டி புறப்பட்டவுடன் ஏறி இருக்க வேண்டும். இப்பொழுதுதான் வாழ்விலே தோல்விக்குக் காரணம் தெரிகிறது. காரியத்தை எப்படியானாலும் சாதித்துக் கொள்கிறது என்ற நினைப்பு வேண்டும். சொல்லுக்கும் சத்யத்திற்கும் பயந்து கொண்டால் அடுத்த பஸ்தான் கிடைக்கும். வாழ்வில் முன்னேறு வதற்கு முட்டுக்கட்டை என்ன என்பது விளங்கி விட் டது. எதற்கும் ஆசை வேண்டும். வெற்றி பெற்றே தீருவேன் என்ற தீவிரம் ! உண்மையில் மனத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே ! உண்மையில் அதற்கு எதிலும் பிடிப்பு இல்லை. காவிரியிலே மிதக்கிற ஒடிந்த கிளைபோல வாழ்விலே போய்க்கொண்டே. இருக்கிறது. பிடிப்பில்லையே கலங்காமலாவது இருக்க வேண் டாமா? அதுதான் தெரியவிலலை. தான் சம்பந்தப் படாதது போலக் காரியத்தைச் செய்துவிடுகிறது. பகவத் கீதையில் இப்படித்தான் சொல்லி யிருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. பகவத்கீதையில் இப்படித்தானா சொல்லியிருக்கிறது? சந்தோஷம் வந் தால் குதிக்காதே என்று சொல்கிறது. நான் எங்கே குதிக்கிறேன் ? துக்கம் வந்தால் குன்றிப் போகாதே என்று சொல்லி இருக்கிறது. வாஸ்தவம். அந்த வித்தை தான் தெரியவில்லை. நடுவு நிலை என்ற பக்குவம் ஒரே ஜன்மத்தில் வந்துவிடுமா? படிப்படியாகத்தான் இந்தத் தன்மை வரும்போலிருக்கிறது புல் பூண்டிலிருந்து மனிதனாவதற்கு எத்தனை லக்ஷம் வருஷமாகி இருக் கிறது? ஓரறிவு ஆற்றிவாகி, ஏழாம் நிலையாகிய ஜீவன் முக்தி பெற…
‘பஸ் வருது சார். இப்பொழுதே நாழியாகிவிட்டது’
அப்பாடா! இன்றைக்குப் பஸ்ஸைப் பிடித்தாகி விட்டது. திரும்பி வரும் பொழுது அரை மணி முந்திப் பிந்தி ஆனால் கூடப் பரவா இல்லை காரியாலயத்துக்குக் கிளம்புகிற நேரத்தில்தான் பஸ் நிற்கும் இடத்தில் நின்றுகொண்டிருக்கப் பிடிக்கவில்லையே ஒழிய சாயங் கால வேளையில் நிற்பதில் அவ்வளவு ஆக்ஷேபம் கிடை யாது. ஏனென்றால், அங்கே நின்றா கொண்டிருக்கிறோம்! பிற ஸ்திரீகளைப் பார்க்கக் கூடாதென்று நெறி இயல் கூறுகிறது. ஆனால் உடலில் ஒரு உணர்வு இருக்கிறது. அது நமக்கு அடங்கின தல்ல. அது தானாக இயங்கும் தன்மையுள்ள து. அதற்கு இயற்கை விதித்துள்ள கட்டளை அது. வேண்டுமானால், கண்ணிமைப்பதை மூன்று நிமிஷம் நிறுத்தி வைக்கலாம். அதே மாதிரி பல வேலைகளை இயற்கை உடலின் பல பகுதிகளுக்கு விதித்திருக்கிறது. ஆனால், இவ்வளவு கடமைகளும் அந்த உடலில் இருக்கும் உயிரைக் காப்பாற்றுவதற் காக. இந்த உடம்பிற்குள் இயற்கை அடைத்து வைத் திருக்கும் கருவிகளையும் சக்திகளையும் உணர்வுகளையும் ஒரு விநாடி ஆழ்ந்து சிந்தித்தாலே ஞானம் வந்துவிடும். தெரியாமலா திருமூலர், ஊணுடம்பாலயம் உள்ளம் திருக்கோயில்’ என்றார்? உயிரைச் சுற்றிலும் விரோதி கள் இருக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்வதே ஓர் உணர்வின் வேலை. கடமையைச் செய்ய அந்த உணர்வு ஏதாவது ஒரு புலனைத் தோழமை பூணாமல் இருக்கமுடியாது. எனவே, சுற்றிலும் உள்ள வர்ணங்களைக் கவனிக்க வேண்டியது இக் கண்ணின் கடமையாகிறது. எதிரி எந்த வர்ணத்தின் மறைவில் வருகிறான் என்று கவனிக்க வேண்டாமா? முழு வெள்ளை முழுக் காக்கி- இதெல்லாம் பெரிதாகப்படுவ தில்லை. பச்சை சிவப்பு இருக்கின் றனவே ! நம்மையும் மீறிக் கண்கள் அவைகளைப் பார்க்கத் துவங்கிவிடு கின்றன. நம்மால் தடுக்க முடிவதில்லையே! பஸ் ஸ்டாப்பில் பச்சையும் சிவப்பையும் பார்ப்பதில் பொழுது போய்விடுகிறது. இல்லாவிட்டால் வெற்றிலை பாக்குக் கடையில் தொங்கவிட்டிருக்கும் பத்திரிகைகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம் ? அடாடா! எவ்வளவு ரஸமான படங்கள் . இல்லா விட்டால் எவ்வளவு இனிய தலைப்புகள் தென்படு கின்றன! ‘மிராசுதாரின் மன்மத லீலைகள்’, ‘சரசாவின் சரசங்கள்.’ இந்தப் பத்திரிகை ஆசிரியர்களைப்போல் தர்மத்தை ஸ்தாபிப்பதில் கவலை கொண்டவர்கள் பிறந்ததே இல்லை…
‘ஆச்சா! ரைட்.’
‘இப்படி வாங்கோ.’
‘அடாடா, நீங்களா ? இதோ வரேன் என்ன சௌக்கியந்தானே ?’
‘சௌக்யம்தான்.’
‘ரொம்ப நாளாச்சுது பார்த்து.’
‘பட்டணக்கரைக்கு வந்துவிட்டால் வயிற்றைப் பார்க்கத்தான் போ திருக்கிறதே ஒழிய,சிநேகிதர்களைப் பார்க்கவோ, நல்லது பொல்லாததைக் கவனிக்கவோ பொழுதிருப்பதில்லை. நான் சொல்வது சரிதானே?’
‘நூற்றுக்கு நூறு சரி.’
‘அதோட, இந்த சின்னப் பயலுக்கு உடம்பு சரியில்லை.’
‘என்ன உடம்பு?’
‘அதுதான் தெரியவில்லை.’
‘டாக்டரிடத்தில் காட்டுவதுதானே?’
‘காட்டினேன். உலகத்திலே இப்பொழுது அறிவு வளர்ந்திருக்கிறதா, பிழைக்கிற தந்திரம் வளர்ந்திருக் கிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. அவர் ஒரு வாரம் மருந்து கொடுத்துவிட்டு, இவன் ரத்தத்தைப் பரிசோதித்துக் கொண்டு வாருங்கள என்று ஒரு விலா சத்தை எழுதிக் கொடுத்தார்.’
‘அப்புறம்?’
‘அது ஆகிவிட்டது ரத்தத்தில் ஒன்றுமில்லை.’
‘அப்புறம்?’
‘எக்ஸ்ரே பிடித்தால் நலமென்றார்.’
‘பிடித்தீர்களா ?’
‘பிடி,த்தேன். அதிலும் ஒன்றும் தெரியவில்லை.’
‘பிறகு?’
‘இதோடு நூற்றி ஐம்பது ரூபாயாகி விட்டது. நாட்டு வைத்யரிடம் போய்க் கொண்டிருக்கிறேன். இதுவே நல்லது என்று தோன்றுகிறது. பணச் செலவாவது குறைகிறது.’
‘அதுவரையில் லாபந்தானே?’
‘லாபமாவது மண்ணாங் கட்டியாவது! எட்டுப் பேரிடத்திலே இருந்து இந்தப் பணம் கடன் வாங்கி இருக்கிறேன். பெரிய பெண்ணுக்குக் காதில் சதா கீழ் வடிந்துகொண்டிருக்கிறது. பால்ய பார்ச வாயுவு வந்த வனைத்தான் உங்களுக்குத் தெரியும். குளிக்கவில்லை என்று இவள் வேறு பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள்.’
‘பின்னே சௌக்கியந்தான் என்றீர்களே?’
‘சௌக்கியம், அசௌக்கியம் எல்லாம் ஏறத்தாழச் சொல்வதுதானே! நம்மைவிட மோசமாக உலகத்தில் தவிக்கிறார்களே!’
‘அந்த வேதாந்தம் எனக்குப் பிடிபட வில்லை. எனக்கு விரல்சுற்றி தாங்கவில்லை என்றால், அவன் நொண்டியாக இருக்கிறானே என்பது சமாதானமாகுமா? என்னவோ, வாழ்வு பெருந் தொல்லையாகப் போய் விட்டது.’
‘ஒன்றும் கவலைப்பட வேண்டாம். புரட்சி உருவா கிக் கொண்டு வருகிறது.’
‘வரட்டும், வரட்டும்.’
‘இதிருக்கட்டும். ஒரு எட்டணா இருந்தால் கொடுங்களேன்.’
‘அதான் இருக்கிறது”
‘அப்பொழுது வேண்டாம்’
‘இல்லை, இல்லை, பரவாயில்லை. இதோ’
‘அப்புறம் உங்களுக்கு ?’
‘நான் பார்த்துக் கொள்கிறேன்.’
‘இங்கே இறங்குகிறேன்.’
‘சரி…’
எட்டணா இருந்தது போய்விட்டது, உண்மையில், வாழ்வில் தோல்விக்குக் காரணம் – சுயநலமின்மை தான்.
மத்யானம் சிற்றுண்டி சாப்பிட இன்னொருவரிடம் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். இந்தக் கை தாழும் படி விடக்கூடாதென்று மனசுக்குத் தெரியவில்லையே! சுயநலமே நினைப்பாயிருந்தால் இந்தக் கை எடுத்துக் கொடுக்குமா ? இல்லையே என்று சொல்ல வாய் பயப் படுமா? என்ன கஷ்டப்பட்டாலும் மனசிலே ஒரு நெகிழ்ச்சி இருக்கிறது. அதுதான் தெய்வாம்சம் என்று தெரிகிறது. ஆனால், சுயநலம் வளர்ந்து விரிவதற்கு அது இடம் தருவது இல்லை. கை தாழ விடக்கூடாதா? ஏன் விடக்கூடாது? சந்திரன் சூரியனிடமிருந்து கடன் வாங்கிக்கொள்கிறான். விதை மண்ணிடமிருந்தும், மழையினிடமிருந்தும், கடன் வாங்கிக் கொள்கிறது. உயிர் உணவிலிருந்து கடன் வாங்கிக் கொள்கிறது. உடல் ரத்தத்திலிருந்து கடன் வாங்கிக் கொள்கிறது. ஒலி காதைக் கடன் வாங்கிக் கொள்கிறது. எட்டணா சிற்றுண்டிக்கு வாங்கிக்கொண்டால், என்ன குடி முழுகிப் போய் விடும்?…
‘இறங்குங்க சார், பாரீஸ், எல்லாரும் இறங்கீட் டாங்க. இல்லாட்.டி வந்த பஸ்ஸிலேயே திரும்பிப் போகப் போறீங்களா ?’
‘இல்லை இல்லை, ஏதோ ஞாபகம். இதோ இறங்கி விட்டேன்.’
‘ஏறுங்க சாமி, ரிக்ஷாலே.’
‘இல்லை அப்பா, காரியாலயத்திற்குப் போகிறேன்.’ ‘நீங்க குடுக்கிறதைக் குடுங்க.’
‘இதோ இருக்கே, காரியாலயம்.’
‘மவராஜனாப் போங்க…’
நல்ல வேளை ! இவனாவது வாழ்த்துகிறானே!…
‘என்ன சார், பார்க்காமல் போகிறீர்களே! ஆபீஸ் அவசரமோ?’
‘அவசரம்தான். நீங்கள் நேற்றுச் சொன்னது’
‘நான் ஒன்றும் சொல்ல வில்லையே?’
‘உங்களுக்கு மறந்து போயிற்று. பிறகு நினைப்பு வரும். நாளைக்குச் சொல்லுங்கள் …’
உலகத்தில் பழகி எனக்குக்கூடச் சாமர்த்தியம் வரு கிறது! அவன் உண்மையில் ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தாலும் இந்த வாய் அவன் விஷயத்தில் ரொம்ப அக்கறை கொண்டிருப்பது போல் நாடக மாடிவிட்டதே! இல்லாவிட்டால் ஒருவரையும் பகைத்துக்கொள்ளக் கூடாதென்கிற நினைப்பிலே முன்கூட்டி அணை போட்டதோ?
இந்த மனத்தைக் கவனித்தாலே தமாஷாக இருக்கிறது. எதிர்பாராத சாதுர்யத்தை ஒரு சமயத்தில் மின்ன விடுகிறது. மற்றொரு சமயத்தில் பெரும் மழை யில் அடிபட்ட ஆடு போலக் குன்றி ஒடுங்குகிறது. இந்த மனம் அசைவதைக் கவனித்துக்கொண்டிருந் தாலே போதும் போலிருக்கிறது. அது சரி, கவனிப்பது யார் ? கவனிக்கப்படுவது எது?…
‘வணக்கம்.’
‘வணக்கம். மானேஜர் வந்து விட்டாரா?’
அவர்தான் நாள் தவறாமல் 8-45-க்கு வந்திடு றாரே…நீங்கள் கணக்காய் ஒன்பது மணிக்கு வர்றீங்க. அதோ மேஜை மேலே இருக்கு ஆஜர் புஸ்தகம். ஒங்க மாதிரி எல்லாரும் ஆபீசில் இருந்துவிட்டால் எனக்கு வம்பு இல்லிங்களே!’
‘ஏன்?’
‘உங்களுக்குத் தெரியாதுபோலக் கேக்கறீங்களே ! உங்களைப் போல ரெண்டொருத்தர் சரியா வராங்க. பாக்கிப் பேர் அரை மணி, நாட்பது நிமிஷம் கழிச்சு வராங்க. ஒன்பது அடிச்சுப் பதினைஞ்சு நிமிஷம் ஆயிட் டால் ரிஜிஸ்தரை மானேஜர் மேஜை மேலே கொண்டு போய் வச்சுடணும். இல்லேன்னா என்னைப் பிடிச்சுக் கிறாரு. நான் கொண்டுபோய் வச்சப்பறம் ஆபீசுக்கு வறவங்க என்மேலே பாயறாங்க. அதுக்குள்ளே என்ன தலை போகிற அவசரம்-மானேஜர் மேஜைமேலே கொண்டுபோய் ரிஜிஸ்தரைப் போட்டுட்டே, இங்கறாங்க? இல்லாட்டி, இப்போ என்ன மணியாவுது பாருன்னு கைக் கடியாரத்தைக் காட்றாங்க. அவுங்க கடியாரம் சரியா இருக்கு. ஆபீஸ் கடியாரம் பறக்குது. ரொம்பத் தரும சங்கடமா யிருக்கு. இந்தக் கோபத்தை எல்லாம் வச்சுக்கிட்டு அப்பப்பொ என்னைப்பத்தி மானேஜர் கிட்டே வத்தி வக்கறாங்க. நீங்க ஒரு வார்த்தை என் னைப்பத்திச் சொல்லிவையுங்க ஐயாவுக்கு ஒங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப நம்பிக்கை.’
‘போகட்டும்…!
இந்த அரை பர்லாங் தார் ரோடிலே நடந்து ஆபீ சுக்கு வருவதுக்குள் உடம்பு வேர்த்து விடுகிறது. கிராமத்தில் ஒரு மைல் நடந்தால்கூட இப்படி இருப்ப தில்லை. நல்ல வேளையாக மின்சார விசிறி இருக்கிறது! அப்பாடா!
பேர் தான் தலைமைக் குமாஸ்தா. எல்லாவற்றையும் எல்லோரும் தலையில் கட்டிவிடுகிறார்கள். எது நடந்தா லும் நடக்காவிட்டாலும் ஜவாப் நான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
‘ஏன் ஜோசப், அம்பாரமாக பைல் என் மேஜையிலே அடுக்கிக் கிடக்கிறதே?’
‘என்ன செய்யலாம் சார். நான் பாதி வைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு பாதி அங்கே வைத்திருக்கி றேன். ஆபீசிலே ஒருத்தரும் சரியா கவனிக்கி தில்லை கட்டை சரியாப் படிக்கிறதில்லை. படித்தாலும் புரிந்து கொள்ளுகிற சக்தி கிடையாது. தாறுமாறாக எழுதி வைக்கிறாங்க. நாம் ஒன்றையும் கை எழுத்துப் போட முடியவில்லை. ஏனய்யா இப்படி என்று கண்டித் துக் கேட்டால், கட்டையே கட்டிப் போட்டு விடுகிறார் கள். இதை எல்லாம் யோசித்து நாமே செய்துவிடலா மென்று தான் பார்க்கிறேன். எல்லாவற்றிற்கும் நீங்க ஜவாப்? நீங்க எவ்வளவுதான் பார்க்க முடியும்? அதனால் நான் ஒரு பாதி வைத்துக் கொண்டேன்.’
“கிறிஸ்தவ மதத்திலே புனர்ஜன்மம் என்ற கொள்கை உண்டோ?’
‘கிடையாது.’
‘எங்களுக்கு அது ஒரு முக்யமான கொள்கை.’
‘அதைப் பற்றி இப்பொழுது என்ன வந்தது?’
‘கடுதாசுகளுக்கிடையே மேய்கிற உத்தியோகம் நமக்குக் கிடைத்திருக்கிறதே-அதைப் பற்றித் தான் யோசிக்கிறேன். ஒவ்வொரு சமயத்திலே, முன் ஜன்மத் திலே கழுதையாக இருந்திருப்போமோ என்று தோன்று கிறது உயிர் இடை அறாத வெள்ளம் என்பது உயிரி யல் விஞ்ஞானத்தின் சித்தாந்தம். அதையேதான் வேறுவிதமாக முன்னோர்களும் எங்களுக்கு ரத்தத் தில் ஏற்றி இருக்கிறார்கள். அந்தக் கழுதை-ஜன்மத் தின் வாசனை போகவில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு தடவை பாத்திரத்தில் பெருங்காயத்தை வைத்து விட்டால், பிறகு பாத்திரத்தை விட்டு அதை எடுத்து விட்டால்கூட வாசனை போகாது.’
‘நீங்கள் சொல்வது தமாஷாகவும் உண்மையாகவு மிருக்கிறது.’
‘விஞ்ஞானம்கூட இதையேதான் சொல்கிறது. இந்த அணுக்கள் அண்டத்தில் சுழன்று ஒவ்வொருவித மான பொருள்களை உண்டாக்குகிறதென்பது உண்மை. ஆனால், எதற்காகச் சுழல்கிறதென்ற காரணத்தை யாரும் கண்டு பிடிக்கவில்லை ! உயிர் அணுக் கூட்டத் தின் லீலை. விளையாட்டுத்தான் இவ்வுலகம் என்கிறார் விஞ்ஞானி. வாழ்வின் பொருள் அவர்களுக்கும் தெரிய வில்லை. விளையாட்டு என்பதற்குப் பதில் தமாஷ் என்று சொல்கிறேன்.’
‘ஆமாம், மெய்தான்…சந்தானம் எட்டிப் பார்க்கிறாரே? என்ன சமாசாரம்?’
‘தத்வ ஆராய்ச்சி அப்புறம் வைத்துக்கொள்வோம்…என்ன சந்தானம் ?
‘இந்த வாசற்காப்பானை விசாரிக்க வேண்டும்.’
‘என்ன சமாசாரம்?’
‘நான் வருகிற போதெல்லாம் பதிவுப் புஸ்தகம் மானேஜர் அறைக்குப் போய்விட்ட தென்கிறான்?’
‘நீங்க கடியாரத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.’
‘வீட்டிலே இருந்து வழிநெடுகக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு கடியாரம் கூட அடுத்த கடியாரத்துடன் ஒத்திருக்கவில்லை. எதை நம்பி ஆபீசுக்கு வருகிறது?’
‘ஆனால் ஆபீசுக்கு நடந்தா வருகிறீர்?’
‘சம்பளம் தொண்ணூறு ரூபாய்தானே? வீட்டு வாடகை 20 ரூபாய். நானும் சம்சாரமும் மூன்று குழந்தைகளும் இருக்கிறோம். பஸ் சார்ஜுக்கு எங்கே போகிறது?’
‘நான் சொல்லிக் கொள்கிறேன் மானேஜரிடம். காவல்காரன் ; அவன் பிழைக்கப் பார்க்கிறான்! நீரும் பிழைக்கப் பார்க்கிறீர். இங்கென்ன வாழுது? நானும் தான் பிழைக்கப் பார்க்கிறேன். அதிருக்கட்டும். அந்த அறிக்கை தயாராகி விட்டதா ? சர்க்காருக்கு அனுப்ப வேண்டுமே! தந்தி அடிக்கிற கட்டத்திற்கு வந்து விட்டது. அர்ஜெண்டு தந்தி வந்து விடுமே!’
‘நான் அவசரப் படுகிறேன். அந்தக் கணக்குப் பிள்ளை புள்ளி விவரம் கொடுக்கவேண்டும். ஒரு மாதமா ஆபீசுக்கே வரவில்லை. நானும் தந்தி வரையில் எட்டி விட்டேன். கிராமத்திலே எதோ செஷன்ஸ் வழக்காம். வாதி தரப்புச் சாட்சிக்கு வந்தால், எதிரிகள் கொன்று விடுகிறேன் என்கிறார்களாம். எதிரிகள் தரப்பு சாட்சி யாக வந்தால் போலீசார் கவனித்துக் கொள்கிறேன் என்கிறார்கள். பயந்துகொண்டு வீட்டிலேயே இத்தனை நாள் ஒளிந்துகொண்டிருந்தேன் என்று நேற்று வந்து அழுதான்.’
‘வீட்டிலே இருந்தால் நன்றாகப் புள்ளி விவரம் எழுதலாமே!’
‘அவனிடத்தில் இருந்தால்தானே ? வயல்களுக்குப் போய் அளக்காமல் ஒன்றும் செய்ய முடியாதாம்.’
‘அப்படி என்றால் இன்னும் ஒரு மாசத்தில்கூடச் சர்க்காருக்கு அறிக்கை போகாது.’
‘ஏன் போகாது? நான் ஒன்று சொல்கிறேன். 1800 வருஷக் கணக்கொன்று இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எழுதி அனுப்பி விடுவோம்.’
‘அது தவறாக இருக்காதா ?’
‘அதெப்படி இருக்கமுடியும்? சரியானதென்று ஒன்று இருந்தால்தானே, மற்றொன்றைத் தவறு என்று சொல்லலாம்?’
‘ஆ! அப்படியா? நீ ஐன்ஸ்டீன் படித்திருக்கிறாயா?’
‘அது யார் தெரிய வில்லையே ! நான் உயர்நிலைப் பள்ளியோடு சரி. அதற்கப்புறம் பத்திரிகையையும் சினிமா விளம்பரத்தையும் தவிர, வேறு எதையும் பார்த்ததில்லை.’
‘நீர் ரொம்பக் கெட்டிக்காரர். எந்த எழவாவது ஒன் றைத் தயார் செய்துவிடும். இதென்ன தவறுதலாக இருக்கிறதே என்று மேலே இருந்து கேட்டால், வேறொன்று எழுதி அனுப்பிவிடுவோம். நான் மானே ஜரிடம் சொல்லிக்கொள்கிறேன். காவல்காரனுக்கு எப் பொழுதாவது ஒரு டிபனை வாங்கிக் கொடுத்துத் தொலை யும் அய்யா. சத்யமேவ ஜயதே எல்லாம் ஹரிச்சந்திர னோடு சரி.’
‘நாளைத் தபாலுக்கு அறிக்கையை அனுப்பிவிடலாம். ‘
‘சரி…’
இவன் என்ன ஐன்ஸ்டீன் போலப் பேசுகிறானே ! மெய், பொய், காலம் ஒன்றும் நிலையான விஷயங்கள் அல்ல என்கிறான்! கடியாரத்துக்குக் கடியாரம் மணி வித்தியாசப்படுகிறது என்று சொல்வது சுத்த விஞ்ஞா னம் மாதிரி ஒலிக்கிறதே! எல்லா இடத்திலும் எல்லாக் கடியாரத்திலும் மணி எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இடத்துக்குத் தகுந்தாற் போல் காலம் மாறுபடத்தான் படும்! ஐன்ஸ்டீன் போட்டுக் காட்டுகிற கணக்கு வழக் கும் வாதமும் புரியவில்லை. ஆனால், அவர் சொல்லும் தத்துவம் புரிகிறது. அவரவர்களுக்கு ஏற்ப ஒன்றைக் காண்கிறார்கள் அல்லது உண்மையை உணர்கிறார்கள். அதுவே பேருண்மை. முழு உண்மை என்று மற்றவ னிடம் சண்டை போடுகிறார்கள். குருடர்கள் யானை யைக் கண்ட கதை ரொம்ப விசித்திரமானது ; ஆயிரத் துக்காயிரம் உண்மை. இந்த உண்மைகளை வயிற்றுக் காக உபயோகிக்கிற போதுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனை கோயில் கட்டினவர்கள் வயிற்றுக்கு ஒரு கோயில் கட்டி இருக்கலாம்.
‘ஏய், என்னப்பா, மசி தண்ணியாக இருக்கிறதே?’
‘மசி ஆயிடுச்சு. அச்சு பாரம் ஆயிடுச்சு. பேப்பர் ஆயிடுச்சு.’
‘எல்லாம் ஆயிடுச்சு, அதற்காக?’
‘மசிக் கூட்டிலே மசி உறைஞ்சி கிடந்துதுங்க. எல் லாத்திலும் தண்ணியை ஊத்திக் கரைச்சிருக்கேனுங்க. ரெண்டு நாள் ஓடிப் போயிடும்.’
‘அந்தக் குமாஸ்தா காலாகாலத்தில் எழுதிப் போட வில்லையா?”
‘அவரைக் கேட்டால் ராமாயணம் படிக்கறாரு. எழுதிப்போட்டு ஆறு மாசமாச்சுங்கறாரு…கோவிச்சுக்கா திங்க. இப்பெல்லாம் முன்மாதிரி வேலை நடக்கிறதில்லே. கூடிக் கூடிப் பேசறாங்க. நாக்காலிலே உக்காந்திருக் கிறப்போ சினிமா அது இது இன்னும் அக்கப்போர் பேசறாங்க. களைச்சுப் போறது.வாதா மரத்தடிப் பெட்டிக் கடை க்காரரு புழைக்கிறாரு. அவ்வளவுதான் கதை.’
‘நீ பழங்காலத்து மனுஷன். முன்னேற்றத்தைப் பற்றி உனக்கோ எனக்கோ என்ன தெரிகிறது? போ போ…’
வெள்ளை மசியால் எழுதினால் நன்றாகவா இருக்கு? ஆபீஸில் எல்லாரிடத்திலும் பௌண்டன் பேனாத்தான் இருக்கிறது. ஆனால், பௌண்டன் பேனா மசி தான் சர்க்காரிலே வாங்கிக் கொடுப்பதில்லை. சொந்தக் காசு போட்டு வாங்கிக் கொண்டால் யாருக்கும் ஆட்சே பம் இல்லை. சர்க்கார் காசைப் போட்டு வாங்கிக் கணக் கில் காட்டி விட்டோமா, வந்தது மோசம் ! தணிக்கை யாளர் எண்பத்தி எட்டு ஆட்சேபங்களைக் கிளப்புவார்! தழையைப் போட்டு மாங்காயை மறைப்பது போல சர்க்கார் பணத்தைப் போட்டு வாங்கிக் கணக்கில் வேறு தினுசாகப் போக்குவரத்து செய்தால், தணிக்கையாளர் வாயடை டத்துப் போகிறது ! இந்த எழவை உத்தேசித்து எல்லோரும் ஸ்டீலையே உபயோகிக்கிறார்கள். இந்த ஆபீஸ் ஸ்டீல்கள் பரவா இல்லை. சில இடத்தில் கட்டையில் நிப்பை நூலால் கட்டி இருக்கிறதைப் பார்த் திருக்கிறேன். சர்க்கார் சிக்கனமாக நடக்க வேண்டாமா?
அப்பா! இந்த உண்மை இருக்கிறதே அதை உண்மையில் யாரும் விரும்புவதில்லை. பேச்சு மட்டும் -யாரைச் சொல்வது? யார் யாரைத் திருத்துவது? பூமி தோன்றின நாளாகத்தான் பெரியவர்கள் மனித னைச் சீர்திருத்த முயன்றிருக்கிறார்கள்! எத்தனை நூல்கள் எழுதி இருக்கிறார்கள் ! மனித வர்க்கம் மாறிக் கொண்டே வருகிறதென்று நான் சொல்லத் தயாரே ஒழிய, வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லத் தயாராக இல்லை. ஐந்தறிவுப் பிராணிக்கும் ஆறறி வுள்ள மனிதனுக்கும் வித்யாசம், தான் என்ற நினைப்பை மனிதன் பெற்றிருக்கிறான் என்பதைத் தவிர, வேறெதில் இருக்கிறது?… மனமே கொஞ்சம் சும்மா இரு. இந்தக் கடுதாசுகளை எல்லாம் தின்றுவிட்டு வருகிறேன்…
‘என்னாங்க சார், இன்னும் கடுதாசைக் கட்டிக் கிண்டு அழறேள்! டிபனுக்கு நாழியாயிட்டுதே. இப்போ மணி 1-5.’
‘என்ன எழவு பண்றது? வந்து உட்கார்ந்ததே பிடித்து, இந்தப் பொய் மனுக்களையும் நிஜக் குறைகளை யும் சோதிப்பதற்குள் பிராணனுக்கு வருகிறது. இன்னும் கால்வாசிகூட முடியவில்லை.’
‘நான் ஒன்று சொல்லட்டுமா?’
‘சொல்லுங்க.’
‘நாற்காலியை விட்டு முதல்லே எழுந்திருந்து வாங்கோ, கிளப்பிலே சொல்றேன். பகல்லே பக்கம் பாத்துப் பேசணு மில்லையா?’
‘உம்மைப் போல வருமுன் காப்போனைக் கண்டதே இல்லை. கெட்டிக்கார ஆசாமி!’
‘நீங்கதான் மெச்சிக் கொள்ளணும். நானே ஏமாந்து போய்விட்டேன்.’
‘நீங்க கூடவா?’
‘நான்கூட என்ன? கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா?- என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஆகி விட்டது.’
‘ஏன்?’
‘இதோ காலிலே போட்டுக் கொண்டிருக்கிறனே செருப்பு ?’
‘ஆமாம். நன்றாக இருக்கிறதே! என்ன விலையோ?’
‘அதுக்குத்தான் சொல்லுகிறேன். போன ஞாயிற் றுக் கிழமைக்கு முதல் ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் நாள் ஒரு ஜோடி புதுச் செருப்பு ஏழரை ரூபாய்க்கு வாங்கினேன்.’
‘ஏழரை ரூபாய் ஜாஸ்திதான்.’
‘இதில்லே; வேறே செருப்பு. கடையிலே இருந்து வீட்டுக்குப் போட்டுக் கொண்டு வந்தேன். ராத்திரியிலே செருப்புக்கு வேலை இல்லை. என்னோடு அதுவும் தூங் கிப் போய் விட்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். நாள் முழுக்க ஓய்வெடுத்துக் கொண்டால், என்னவோ போல் ஆய்விடுகிறது. ஆகையால், சாயங்காலமாக, நவயுக வாதிகள் சங்கத்தில் ஒரு கூட்டம். அதற்குச் சென்றேன். மதமென்னும் அபின் என்பது பற்றி அறிவாளர் பேசினார். பிரசங்க மண்டபத்திற்கு வெளியே செருப் பைக் கழட்டி வைத்து விட்டுப் போனேன். மதப் புரட்டுகளைச் சொற்பொழிவாளர் அக்கு அக்காக இரண்டு மணி நேரம் பிரித்துக் காட்டினார். ஒரே பிரமிப் பாக இருந்தது. இன்னும் சொற்பொழிவாளர் பேச மாட்டாரா என்று தோன்றிற்று நல்ல வேளையாக அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் இதே விஷயத்தைப் பற்றிக் கூட்டம் நடக்குமென்று காரியதரிசி தெரிவித் தார். வெளியே மகிழ்ச்சியுடன் வந்தேன். செருப்பை வைத்த இடத்தில் பார்த்தேன். காணோம். என்ன செய்யறது? அங்கேயும் இங்கேயும் பார்த்தேன். கிடைக்கல்லை. அடுத்த ஞாயிற்றுக் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். நேற்று ஞாயிற் றுக் கிழமை போனேன். கூட்டம் முடிவதற்குப் பத்து நிமிஷத்திற்கு முன்பு வெளியே வந்தேன். செருப்பு வைக்கும் இடத்தில் ஏராளமான செருப்புகள் இருந்தன. ஒரே கண்ணோட்டத்தில் என் செருப்பு அங்கில்லை என் பது தெரிந்து விட்டது. அதற்காக நான் தயங்கவில்லை. புது செருப்பாக ஒரு ஜோடியை மாட்டிக்கொண்டு வந்து விட்டேன். அந்த செருப்புதான் இது. உலகம் இருக்கிற இருப்பு-மகா மோசம்!’
‘திருடி விட்டேன் என்று கூசாமல் சொல்லிச் சந்தோஷப்படுகிறீர்களே?’
‘இது திருட்டா ! வைத்த இடத்தில் எதிர்பார்ப்பது தானே அறிவுக்கு ஒத்த செயல்! வைக்காத இடத்தில் எதிர்பார்ப்பது மத நூல்களில் அடிபடுவதைப் போன்ற அற்புதமாகிவிடாதா?…’
‘அப்பொழுது இது?’
‘இயற்கையில் ஒரு ஆழ்ந்த தத்வம் புதைந்து கிடக்கிறது. நஷ்ட ஈடு என்று அதற்குப் பெயர். குருடர்களைப் பார்த்தால் இந்தத் தத்வத்தின் உண்மை புலப் படும். அவர்களுக்குக் காதும், ஸ்பரிச இந்திரியமும் வியக்கத்தக்க கூர்மையுடன் இருக்கும். கண்ணுக்கு நஷ்டம், காதுக்கு லாபம் அந்த ஞாயிற்றுக் கிழமை நஷ்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை நஷ்ட ஈடு—அவ்வளவு தான்.’
‘இந்தத் தத்வமெல்லாம் என் மூளைக்கு எட்டாது.’
‘என்ன சார், எட்டாது எட்டாது என்று சொல்லிக் கொண்டு?… என்னப்பா போட்டிருக்கு?’
‘பகவடா, பஜ்ஜி, காராபூந்தி, மிக்சர், காரா சேவை, போண்டா, வடை, ஓமப்பொடி, முந்திரிப் பருப்பு கோல்மால்…’
‘சரி, தித்திப்பு?’
‘மைசூர்பாகு, ஹல்வா, ஜாங்கிரி, பாதுஷா, பாசந்தி, குலாப்ஜான், காசி ஹல்வா, பாதம் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, இலுப்பப் பூ ஹல்வா?’
‘அப்பறம்’
‘வடை, தோசை, இட்லி ராஸ், வந்தேமாதரம்.’
‘இட்லி ராஸா ?’
‘ஆமாங்க, சூடாக இருக்கு ‘
‘கொண்டாங்க ரெண்டு பிளேட்.’
‘சட்னியா, சாம்பாரா கொத்சா?’
‘சும்மா கொண்டாய்யா—எல்லாத்தையும், பார்ப்போம்.’
‘இதென்ன சார், சட்னி இவ்வளவு உரப்பாக இருக்கிறதே!’
‘நஷ்ட ஈடு என்கிற தத்வத்தின் அமுல்தான் இதி லும். தேங்காய் விலை ஏறிப்போச்சு. இட்லி விலையை ஏற்ற முடியவில்லை. வருகிறவர்கள் சட்னியைச் சாப் பிட்டுவிட்டு, இட்லியைத் தொட்டுக்கொண்டால் அவன் எப்படிப் பிழைக்க முடியும்? தேங்காய் நஷ்டம். பச்சை மிளகாய் லாபமாக முடிகிறது?’
‘சாம்பார்கூட மோசமாக இருக்கிறதே!’
‘நீங்கள் பழம்பசலியாகவே இருக்கிறீர்கள். கேசரி பருப்பு என்று ஒரு விஷம் வந்ததே அது முதல் சாம் பாரில் பருப்புப் போடுவதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். எது நல்லது எது விஷம் என்று கண்டு பிடிக்கக் கிளப்பிலே பரிசோதனை சாலையா இருக்கிறது?’
‘அப்பொ கொத்சு?’
‘அதிலே வெங்காயத்தைவிட வெங்காயத் தோலும் வேரும்தானே இருக்கிறது ?’
‘இதெல்லாம்-‘
‘இதைத்தான் அங்கே சொல்லணும் என்று நினைத் தேன். எதையும் ரொம்பப் பெரிய விஷயமாக நினைத் துக்கொள்ளக்கூடாது மலையை நாம்தான் தாங்கறோம் என்று நினைக்கப்படாது. ஹரிச்சந்திரன் நிஜம் பேசி னானே, நாம் எப்படிப் பொய் பேசலாம் என்று நினைக்கப் படாது நாம் பிழைத்தாக வேண்டும். சம்பளம் போறா துன்னா அதை எப்படியோ சரிக்கட்டிக்கொள்ள வேண் டும். கையை நீட்டாமல் கட்டிக்கொள்ளக் கூடாது. இந்த மனச்சாட்சி அது இது எல்லாம்-‘
‘இதெல்லாம் எனக்குப் புரிகிறது. பழக்கத்துக்குத் தான் கொண்டுவர முடியவில்லை.’
‘கொண்டுவர முடியவில்லை என்றால் ஒரு பெருமை என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. குறை என்று தெரிந்துவிட்டால் அதை உதறித் தள்ளுகிற உறுதி வேண்டும். பிழைக்கவேண்டும் என்ற நினைப்பிலே தடிப்பு இருக்கவேண்டும். நாளைஓட்டறது, பொழுதைக் கழிக்கிறது-இந்தக் கதை எல்லாம் சரிப்படாது… போரது: காபி பரவாயில்லை. பில போடப்பா’
‘நான் கொடுக்கிறேன்.’
‘இல்லை இல்லை; நான் கொடுக்கிறேன்.’
‘வந்த காரியத்தைச் சொல்லாமல் காபி சாப்பிட அழைத்துக்கொண்டு வந்துவிட்டீர்களே!’
‘அதுவா? அந்தக் கிணறு வெட்டின மனுவிருக்கிறதே…’
‘ஆமாம்.’
‘அதைப்பத்தி என்னென்னவோ ஆட்சேபம் எழுதி அனுப்பி இருக்கிறார்களாம்.’
‘நான் பார்த்தேன். இரும்புக் குண்டுபோல இருக்கு ஆட்சேபங்கள்’
‘எப்படியோ அதை இலவம் பஞ்சாக்கிவிட வேணும் இன்னு சொல்லத்தான் வந்தேன். எப்படியோ முடிச்சுத்தர வேண்டும்.’
‘பார்ப்போம்.’
‘பார்த்துக்கொண்டே இரும். அடுத்த வாரம் வருகிறேன்…’
நஷ்டஈடாமே! ஆனால், அதுவும் வாஸ்தவம்தானா என்னவோ! பஸ்ஸில் அவன் அரை ரூபாயைக் கடன் வாங்கிக்கொண்டு போய்விட்டான்; ஆனால், இவர் டிபன் வாங்கிக் கொடுத்துவிட்டார். செலவும் வரவும் நேர்! ஆனால். அதெப்படிப் போதும்? மிச்சம் ஏற்படவேண்டும். ஆக்கலும் அழித்தலும் நாள் தவறாமல் உடலில் நடக் கிறதே! இரண்டும் நேராகிவிட்டால் போதுமா ? உடம்பு என்று மிஞ்ச வேண்டாமா? ஏதாவதொன்று அதிகப் படியாக இருந்துதான் ஆக வேண்டும். அளவு, நெறி என்பதிலே குறி வைக்கப்படாது. அதிகப்படியில்தான் நாட்டம் இருக்கவேண்டும். அளவு, நெறி என்றால் சுய நலம் தலை எடுப்பதில்லை; சுயநலம் தலை எடுக்காவிட் டால் அந்த அதிகப்படி கிடைப்பதில்லை. பொழுதைக் கழிக்கிறது! ஓட்டுகிறது! இதுதான் பாடம்! உண்மை தான் தெரிகிறதே, மாறக் கூடாதோ? அதுதான் முடிய வில்லை. இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் காலத்தைக் குதிரை ஏறலாம். இல்லாவிட்டால் நொந்த புண்ணாகவே சாகலாம்…
‘சார், மானேஜர் கூப்பிட்டாங்கோ. டிபனுக்குப் போயிருக்காங்க இன்னேன்.’
‘எதாவது சொல்லுவாரோ ?”
ஆயிர ரூபாய் சம்பளக்காரர்! சும்மா இரு. அவர் காதில் விழுந்தால், குடிக்கிற கஞ்சிகூடத் தொலைந்து போய்விடும்.’
‘நான் ஏன் வாயைத் திறக்கிறேன்? கேட்டீங்கன்னு சொன்னேன்.’
‘கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். காதைப் ‘பொத்திக் கொள்ள வேண்டும். வாயைப் பூட்டிக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் போதைப் போக்கலாம். இல்லாவிட்டால் தனதந்தி நாதந்தித்தான-சம்போ- அஞ்சு கல்லாலொரு கோட்டை-அந்த ஆனந்தக் கோட் டைக்கு ஒன்பது வாசல் என்று ஒற்றைக் கொட்டை யைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட வேண்டியது தான்.’
‘என்ன சூபரெண்டு சார்?”
‘காபி ஆயிடுத்தா?’
‘ஆகிவிட்டது.’
‘மேலே இருந்து அறிக்கை வந்திருக்கிறதே-பார்த்தீர்களா?’
‘பார்த்தேன்.’
‘ஒரே இடி மின்னலாக இருக்கிறது. பள்ளிக்கூடத் துப் பிள்ளைகளைக் கண்டிக்கிறாப் போல இருக்கிறது.’
‘இப்பொ என்ன செய்யணும்?’
‘என்ன செய்கிறது?’
‘பதிவில்லாத சர்க்கார் உத்யோகஸ்தர்களைக் கட்டி மேய்ப்பதில் உள்ள கஷ்டங்கள் தான் இவ்வளவுக்கும் காரணம் என்ற உண்மையை எழுதி அனுப்பினால் போகிறது.’
‘நீ என்னய்யா- பழம் பசலி ! புத்திசாலித்தனம் இப் பொழுதெல்லாம் வேண்டியதே இல்லை. தந்திரம் தெரிய ணும். ஒரு நூறு பக்கம் பதில் எழுதும். நிறையப் புள்ளி விவரம் இருக்கட்டும். அனுபந்தம் இருக்கட்டும். இதைப் பார்த்தே பயந்து போய்விட வேண்டும்.இங்கே இருக்கிறாப் போலத் தான் அங்கேயும் இருப்பார்கள். இதைப் பார்த்தவுடனே கட்டிப்போட்டுவிடுவார்கள். பிறகு, அடுத்த வருஷம்தானே? பார்த்துக்கொள்ளலாம்! இரண்டு நாளில் தயாராகட்டும்.’
‘சரி..’
நான் வேலைக்கு லாயக்கில்லை என்றுதான் நினைக் கிறேன். இந்த ஆபீசை நான் தான் தூக்கிக்கொண் டிருக்கிறேன் என்ற நினைப்பு இருக்கிறது-அது மகா மோசம்! இவர்களுக்கெல்லாம் எந்த வேலையும் பெரி சாகத் தோன்றுவதே இல்லை. வண்ணான் சட்டையிலே இருக்கிற தூசியைத் தட்டுகிறாப்போல அலட்சியமாய்ப் பேசுகிறார்கள். ஆனால், தட்டுகிற சத்தம் மட்டும் நாணொலிமாதிரி உலகெல்லாம் கேட்கும்படிச் செய்கிறார் களே – அதுதான் எனக்குத் தெரியவில்லை. வேர்மாதிரி மண்ணுக்குள் மறையத் தெரிகிறது. பூமாதிரி ஆடத் தெரியவில்லை. சுமைதாங்கி என்ற அகம்பாவத்தை விட்டுவிட்டால்… இன்றைக்கு இன்னும் பத்துக் கடுதா சாவது ஐந்து மணிக்குள் பார்த்துவிட்டால், நாளைக்குத் தீர்ந்துபோகும். இந்தக் குப்பைத் தொட்டியை வீட்டுக் குக் கொண்டுபோ வோமென்றால், மணிப் பயல் படித்துக் கிழிக்கிறேன் என்கிறான்! ஹும், எதோ நாளைஎண்ணிக் கொண்டு போக வேண்டியதுதான்…
அடாடா! இந்த ஒரு கட்டை வரிசையாகத் தேதி வாரியாக வைக்கத் தெரியவேண்டாம்? எட்டு குமாஸ்தா கைமாறி இருக்கிறது! ஒருவருக்காவது அதைச் சரி செய்ய வேண்டுமென்று தோன்றக் கூடாது? போட்டோப் பிடித்தால் ஒவ்வொருவரும் முன்னால் நிற்க வேண்டும் என்று முயலுகிறார்கள்! அந்தப் போட்டோவில் சுவத்திடுக்கிலிருந்து ஆலங்கன்று நெளிந்து கொடுத்து முளைத்து வருவது போல் குமாரசாமி கழுத்தை நீட்டி இருக்கிறானே! ஒருவருக்காவது உணர்வு வேண்டாம்! பிறருக்காக அழகு, நெறி, ஒழுங்கு என்று இருக்கும் வரையில் உண்மைக்கும் வளர்ச்சிக்கும் இடமில்லை.பிறர்தான் சாட்சி என்ற நினைப்பு இருக்கும் வரையில் வேஷம் கட்டத்தான் தோன்றும். நம்மை நாமே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை புரிந்துவிட்டால், சூதும், வாதும், பகட்டும் ஒழிந்து விடும்… அடுக்கு சரியாக…ஆனால், நடந்துபோகிறவன் ரஸ்தாவைச் செப்பனிட வேண்டுமென்று எப்படிக் கேட்கலாம் ? நிலையாகக் கிடக்கிற ரஸ்தா அசையும் கால்களின் மிடுக்கைப்பற்றிக் குறைப்படவும் கூடாது, ஏங்கவும் கூடாது. நடப்பதற்கு ரஸ்தாவாக இருக்கி றோமே என்பதில் உள்ள உண்மையிலிருந்து இன்பத் தைப் பெறக் கற்றுக்கொண்டு விட்டால்-கொஞ்சம் இரு. அஞ்சு மணி வரையில் அடித்தளத்திற்குப் போய் விடு. போ போ…
டங் டங் டங்! அஞ்சு மணியா? போகிறது! ஒரு வழியாக எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இன்று வேலையாகிவிட்டது! கொஞ்சம் ஆறுதல் ! நெருப்பில் குளிர்ச்சி உண்டா ! ஏன் இல்லை ? ஐஸின் தத்துவத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும்.
‘வரலாமா?’
‘வாருங்கள் தோழரே.’
‘உட்காரலாமே.’
‘வேண்டாம். மணி அஞ்சாகிவிட்டால் ஆபீஸ் சாமான், காற்று அவ்வளவும் கசப்பாக இருக்கிறது. இன்று அங்கே ரகசியக் கூட்டம்.’
‘நான் வரவிலலை.’
‘ஏன்?’
‘இன்றைக்கு மனது சரியாக இல்லை ‘
‘மனத்தைச் சரி செய்கிறதென்ற காரியம் உலக சரித்திரத்திலே என்னிக்கும் ஜெயித்த தில்லை. பத்துப் பேராகச் சேர்ந்து நெட்டையோ குட்டையோ ஒரு செயல் செய்தால் உலகம் நடுங்கிப் போகிறது.’
‘நீங்கள் என்ன தீர்மானம் போட்டாலும் அதன்படி நடந்து விடுகிறேன். சந்தேகப்பட வேண்டாம்.
‘ஒரு ரகசியம் உங்களுக்குத் தெரியவேண்டும். மனசிலே இருந்தால் போதாது. செயல் அதைப் பறை சாற்ற வேண்டும். இந்தப் பிரசார ரகசியத்தைத் தெரிந்து கொண்டுதான் மதத் தலைவர்கள் விபூதி இடு, நாமம் போட்டுக்கொள், குங்குமம் வைத்துக்கொள் என்றெல்லாம் செயல்முறையை வகுத்து வைத்தார்கள். மனசுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள திரையை எடுத்தெறியத் தெரியவேண்டும். அதில் பயத்துக்கோ சூதுக்கோ இடமில்லை. இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.’
‘சொல்வதெல்லாம் சரிதான். மின்னல் ஆகாயத் தில்தான் பளிச்சென்றிருக்கும். இடியாகிப் பூமிக்கு வந்துவிட்டால், உருக்காகி விடவில்லையா ? பூமியும் குடும்பமும் ஒன்று… தத்துவம் இருக்கட்டும், என்ன தீர்மானம் செய்தாலும் கட்டுப்படுகிறேன். வேறென்ன வேண்டும்?’
‘சரி, நாழியாகிவிட்டது. நான் போகிறேன்.’
‘சரி,’
‘வீட்டுக்கா?’
‘இல்லை; காப்பிப் பொடிக் கடைக்கு.’
‘பொடி நன்றாக இல்லையே?’
‘நமக்குக் கடன் கட்டில் ஆகிறது. அவருக்கு வியா பாரம் ஆகிறது. இதுதான் சிதம்பர ரகசியம் !’
‘சரி போங்கோ, நான் வீட்டுக்குப் போகிறேன்.’
ஆச்சு- ஆபீஸ் காரியம், வீட்டுக்காரியம் எல்லாம் இப்பொழுதே வீட்டுக்குப் போய் என்ன செய்கிறது? இந்தக் கேள்வியைக் காக்கை, குருவிகள் கேட்கின்ற னவா ? அதேர் காக்கைகள் போகின்றன. கொக்குகள் கோடிழுத்தாற் போல் போகின்றன. அந்தப் புளிய மரம்தான் வீடு. பாதி ராத்திரியில் கத்துவதைக் கேட் டிருக்கிறேன். விழித்துக் கொண்டு காலையோ கிளை யையோ மாற்றும்பொழுது. இந்தச் சத்தமும் சிறகுக ளின்படபடப்பும் காதில் படுகின்றன ! பாதி ராத்திரியில் இந்தச் சத்தம் முரண்பட்டதாகத் தோன்றவில்லையே, ஏன்!…இந்தக் கொக்கு மட்டும் தனித்துப் போகிறதே! வழி தடுமாறும், தவறுமா? வானத்தில் ரஸ்தாவா போட்டிருக்கிறது? சற்றுக் குளத்தங்கரையில் தனிமையாக-
இந்த மீன்கொத்தி தனிமையாகத்தான் உட்கார்ந் திருக்கிறது! தனிமையாகவா? நல்ல கதை! தனக்குத் தானே பேசமுடிந்தால் அல்லவா தனிமை! தனக்குத் தானே பேசிக் கொண்டா இருக்கிறது? ஓவியம் தெரிந் திருந்தால், அதனுடைய வர்ண அமைப்பைக் காட்ட லாம். ஆகாயத் துணுக்கு கிளை நுனியில் வந்து தூங்கு கிறது. ஆனால், அந்த மூக்கு இருக்கிறதே, அதுதான் அவலக்ஷணம். அதன் வழியே குளத்துநீரைப் பார்த்துக கொண்டே இருக்கிறதே ! பொத் ! தண்ணீரில் விழுந்து எழுந்திருந்து மீனைக் கொத்திக்கொண்டு வந்துவிட்டது. தனிமை குளத்தில் இல்லை. உடலைக் காற்றாட வைத்துக் கொள்வது தனிமையாகுமா? மனதைக் காற்றாட வைத்துக்கொள்ளத் தெரியவேண்டும். அந்த ரகசியம் தெரிந்துவிட்டால், வாழ்வில் உதைப்பே இருக்காது வேலை சுமையாக இருக்காது. வயிற்றைக் கேலி செய்யத் தோன்றாது. வினையும் விளையாட்டும் ஒன்றாகி விடும்; அது தெரிந்துவிட்டால் துன்பம் ஒழிந்து போகுமே !
ஆனால், இந்த நினைப்பெல்லாம் வீட்டில் எங்கே வருகிறது! மாடி, குளத்தங்கரை, கோயில் பிரகாரம், காடு, அங்கேதான் இந்த நினைப்பெல்லாம் படுத்துக் கொண்டிருக்கின்றன. வீட்டிலே சீக்கு, தரித்திரம், அறியாமை வழிகின்றன ! நுரை ஈரல் இல்லா விட்டால் ரத்தத்தின் கதி என்னாகும் ?…
‘என்ன இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே ?’
‘சும்மாத்தான்.’
‘சும்மா இருக்குமா?”
‘என்னைப் பார்த்தால் குளத்தங்கரையில் வலைபோடு கிறவனாகவா தோணுகிறது?’
‘நான் தவறுதலாகச் சொல்லவில்லை. அபூர்வமாக இருக்கிறதே என்று சொன்னேன்.’
“முந்தி எல்லாம் ஏழு மணி வரையில் காரியாலயத் தில் வேலை செய்துகொண்டிருந்தேன். இப்பொழுது செய்ய முடியவில்லை. எங்களை எல்லாம் ஏனய்யா கெட்டவன் ஆக்குகிறீர்கள் என்று ஆபீஸில் மற்றவர் கள் சண்டை போடுகிறார்கள். நாம் பாட்டுக்கு நம் முடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போனால் கூட வம்பு வந்து விடுகிறது.’
அப்படிச் சொல்லக் கூடாது. எங்கள் வீட்டுக் கூடத்து மண்ணைத் தோண்டினால், அந்த வீட்டுக்கார னுக்கு என்னன்னு கேட்கலாமா? உம்முடைய பாட்டில் போனால் அவன் சுவரல்லவா காய்ந்துவிடும்?
‘உண்மைதான். இப்படி எல்லாம் யோசித்து யோசித்துப் பார்த்தால், யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.’
‘அதற்கு வேறு வழி இருக்கிறது. இது சில பேருக் குத் தெரிவதில்லை. பெருச்சாளித் தொல்லை சகிக்க வில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். மாட்டிக்கொண்டு விட்டால், இந்தப் பெருச்சாளி செய் கிற அக்ரமத்தைப் பாருங்க என்று தெளிவாகச் சொல்லத் தெரியவேண்டும்.
‘உண்மைதான். புதுப் பாடம் ரொம்ப கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், புதுப்பாடம் ‘படிக்கிற வயதுதான் தாண்டிப் போச்சு. எப்படியோ தட்டுத் தடுமாறிப் பொழுதை ஓட்டவேண்டியது. நீங்க எங்கே இங்கே வந்து சேர்ந்தீர்கள்?’
‘ஒரு பச்சிலை தேட வந்தேன்.’
‘இங்கே எல்லாம் க்ரோடன்ஸ்தானே இருக்கிறது?’
‘எங்கேயாவது இருக்காதான்னு வந்தேன். தேடினாத்தான் கிடைக்கும். கஷ்டப்பட்டால்தான் கிடைக்கும்.’
‘இருட்டுகிறதே, இனிமேல் தேட முடியாதே!’
‘ஆமாம் ஆமாம், வருகிறேன்.’
‘நானும் புறப்பட வேண்டியதுதான்…’
எனக்கு ஒன்றும் தெரியாது என்று உபதேசம் செய் கிறார் ! பச்சிலை தேட வந்தாராம்-எனக்கா தெரியாது! குளத்தங்கரைக்கு வந்தால், வலை போடுகிற வேலைதான் சிலருக்குத் தெரியும்! அதனால்தான் பாக்கிப் பேரும் அதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று நினைத்து விடு கிறார்கள். குளத்தை நல்ல குளமாகவோ கெட்ட குள மாகவோ பண்ணுவது நாம்தானே!
நம்ம தெரு ஆட்டுக்குட்டி இவ்வளவு தூரம் எங்கே வந்தது? காலில் கட்டு! நொண்டி நொண்டி இவ்வளவு கஷ்டப்பட்டு நடக்கிறதே! வீட்டுக்குப் போய்ச் சேருமா? ஆனால், அதற்கு யாராவது கதவைத் திறக்க வேண்டுமா? இல்லாவிட்டால் ஏன் இவ்வளவு நாழி என்று யாராவது கேட்கப் போகிறார்களா ?… என்ன படுத்துக்கொண்டு விட்டதே! கால்வலி நடக்க முடிய வில்லைபோல் இருக்கிறது. வயிற்றுக் கொடுமை இவ் வளவு தூரம் இதை இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. எப்படியோ வீட்டுக்கு வந்து சேராமலா போகும்? வந்து ‘மே’ இன்னு கத்தினால் போச்சு. தானே பெரிய ஆடு ஓடி வருகிறது! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலே காலொடிந்த ஆடுதான்!
ஊசி, ஆமாம்…ராத்திரி ஆச்சே, குடுப்பானோ குடுக்க மாட்டானோ? கேளேன். மாமரத்தில் கல்லெறிவதுதான் பிழைப்பு முறை. காய் விழலாம், கல் விழலாம், காயும் கல்லும் விழலாம். எப்படி இருந்தாலும் எறிந்த கல் நம் மேலே திரும்பி விழாமல் பார்த்துக் கொண் டாலே ஒரு சாமர்த்தியம்தான்…
‘என்னாங்க, இரண்டு ஊசி,’
‘இல்லீங்களே.’
‘இவ்வளவு பெரிய ஷாப்பிலே-ராத்திரியாச்சேன்னு பார்க்குறீங்களா ? அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது என்னய்யா ?’
‘இல்லிங்கன்னா, தத்வம் படிக்கிறீங்களே !’
‘சரி; அரிசிப் பெப்பர்மெட் குடு ஓரணாவுக்கு.’
‘என்னப்பா வாங்கிணு வந்தே?’
‘இந்தாடா பெப்பர்மெட்டு.’
‘எனக்கா?’
‘எல்லார்க்கும்தாண்டா.’
‘போப்பா, எனக்கொண்ணும் வேண்டாம்.’ ‘நாளைக்கு ஓனக்கு மாத்திரம் வாங்கிக்கிண்டு வரேன்.’
‘கட்டாயம் வாங்கிண்டு வரணும். ஒத்தருக்கும் தரமாட்டேன்.’
‘சரி.’
‘அப்பா, எனக்கு 10 மார்க்! இதோ பார் ஸ்லேட்டை !”
‘ஒரு சைபர் தானே போட்டிருக்கிறது!…கணக்கா.?” ‘போப்பா, உனக்குக் கண் தெரியல்லே. இதோ இருக்கு பார் ஒண்ணு.’
‘பேஷ்.’
‘இன்னிக்கு வாத்தியார் கிளாஸிலே ஒரு கேள்வி கேட்டார். ஒருத்தருக்கும் தெரியல்லே.’
‘ஒனக்கு?’
‘எனக்கு ஒண்டிக்குத்தான் தெரிஞ்சுது. மைசூர் மாட்டுக்கு எத்தனை கொம்புன்னு கேட்டார். எல்லாரும் முழிச்சா. மாட்டுக்கு மூணு கொம்பு கிடையாது சார் இன்னேன். என்னை முதல் இடத்துக்குப் போகச் சொல்லி விட்டார்.’
‘பேஷ்! காலை அலம்பிக்கொண்டு வருகிறேன்.’
‘தட்டும் போட்டிருக்கிறேன்.’
‘இந்தா காப்பிப் பொடி.’
‘நான்தான் காலம்பர வறுத்தேன் என்று சொன்னேனே!’
‘அது நினைப்பில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குப் பிடுங்கல் இல்லாதெ போறது…இப்பொழுது சமையல் உண்டோ?’
‘சாதம் மாத்திரம் வடித்திருக்கிறேன். பாக்கி மத்யானம் செஞ்சது.’
‘எதோ ஒண்ணு, போடு’
‘நானும் சாப்பிடுகிறேன் அப்பா.’
‘இன்னும் சாப்பிடல்லியா?’
‘குண்டோதரன், இரண்டாம் தரம் சாப்பிடுகிறான். அப்பாவோடெ சாப்பிடுகிற பெருமை!’
‘ஏம்பா இனிமே படுத்துக்க வேண்டியதுதானே?’
‘திருட்டுப் பயலே! சினிமாக்கு அடி போடுகிறாயா?’
‘கூப்பிட்டாக் கூட வல்லே அப்பா.’
‘சமத்து வாசல்லே போய் நொண்டி ஆடு ஒண்ணு வருதோ பாத்தூட்டு வா.’
‘ஆடு ஏது அப்பா?’
‘இந்தத் தெருக்கோடியிலே இருக்கு. ஆபீசுக்குப் போகிறப்போ வருகிறப்போ கண்ணிலே படும். அது நொண்டிக் காலோடே கஷ்டப்பட்டு வந்துகிண்டிருந்தது.’
ஆடு மாத்திரம்தான் கஷ்டப்படுகிறது. வெறெ ஒத்தரும் கஷ்டப்படல்ல. சாமா! போய்ப் படுத்துக் கோடா- ஆட்டைப் பார்க்கிறானாம்!’
‘நான் பாக்கத்தான் பாப்பேன். அப்பா சொல்கிறார்…’
தெருவிலே ஆட்டைக் காணும் அப்பா. அன்னக் காவடிப் பிச்சை இருக்கான் பாரு. அவன்தான் வரு கிறான்.’
‘சரி சரி; படுத்துக்கோ.’
‘நீ?’
‘இதோ… இதைப்பார் ஜமக்காளம் போடுகிறேன்…!’
‘நொண்டி நொண்டி நடந்துதானே ஆகவேண்டும்! வந்துவிடும் வந்துவிடும் வீட்டுக்கு…!’
‘முருகா சரணம்.’
– பிச்சமூர்த்தியின் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார் பிரசுரம், சென்னை.