ஒத்த ரூபாய்




சாலையோர குடிசை வாசலில் வலிகனைசிங் கடை. என்னையும், இன்னொரு ஆளையும் தவிர வேறு யாருமில்லை. என்றாலும் சாமுவேல் பிசியாக இருந்தான்.
பத்தடி தூரத்தில் பெரிய பெரிய இரும்பு குழாய்கள் ஏற்றிய லாரி ஒன்று ஜாக்கியில் நின்றது. அதன் பின் இரண்டு சக்கரங்களைக் கழற்றி சாமுவேல் பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றை ஓடிவிட்டான். இன்னொன்றிற்கு ஆயத்தமாகி விட்டான்.
இது முடிந்ததும் நான் அவனைக் கொத்திக்கொண்டு போக வேண்டும்.!
காலையில் நான் கிராமத்திற்குச் சென்றபோது என் அங்கு இரு சக்கர வாகனம் பஞ்சர். இவனை அழைத்துச் சென்று சக்கரத்தைக் கழற்றி வந்து, இங்கே பஞ்சர் ஒட்டி, திரும்ப போய் மாட்டி, நான் சாமுவேலைக் கடைக்கு அழைத்து வந்து விட வேண்டும். இதற்காக கிராமத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் இரவல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். மோட்டார் தொழில் தொடர்பாய் இருக்கும் சாமுவேலுவிற்கு ஆச்சரியமாய் சைக்கிளைத் தவிர வேறு வாகனங்ககள் ஓட்டத் தெரியாது.!!
தெரிந்திருந்தால் போதும். அவனே ஒட்டி எடுத்து வந்துவிடுவான். தெரியாததினால் வாடிக்கையாளர்களுக்கு கஷ்டம். பலர் அப்படிப்பட்டவர்களைத் தேடி போய் விடுவதால் இவனுக்கும் நஷ்டம்.
“ஏன் சாமுவேல் இப்படி..?” ஒருநாள் இரக்கப்பட்டு கேட்டேன்.
“சைக்கிளைத் தவிர வேற எதையும் ஓட்ட விருப்பமில்லை சார். விழுந்து கை, கால் முறிஞ்சு போச்சுன்னா குடும்பத்துக்கு யார் சம்பாதிச்சுப் போடுறது”. சொன்னான்.
அன்றிலிருந்து அந்தப் பேச்சை விட்டேன்.
சாமுவேலை எனக்குச் சிறு வயது முதலே தெரியும். அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்து போனார். இவன் தலையெடுப்பதற்கு முன்பாகவே விழுந்தது சுமை.!
ஒரு அக்காள், இரண்டு தங்கைகள் , தம்பி, அம்மா…. என்று பெருங்குடும்பம். எல்லோரையும் தாங்கும் சுமை இவன் தலையில். அதனால் படிப்பை விட்டு பக்கத்து நகரத்தில் வால்கனைசிங் கடைக்குச் சென்றான். கூடிய சீக்கிரமே ஊக்கமாய் வேலையைக் கற்றுக் கொண்டு ஒரு பழைய கம்பரசரை விலைக்கு வாங்கி வாசலிலேயே கடை வைத்துவிட்டான்.
ஆரம்பத்தில் நிறைய வேலை. மடமடவென்று பெண்களுக்கெல்லாம் திருமணம் முடித்தான். தானும் ஒரு பெண்ணைப் பார்த்து முடித்தான். கடை என்ன அமுதசுரபியா எடுக்க எடுக்க குறையாமலிருக்க.?!.. காலப்போக்கில் கைக்கு வந்த வருமானம் வாய்க்கும் வயிறுக்கும் சரியாகப் போனது .
போதாதற்கு. ..சுவற்றிலடித்த பந்தாய் அக்கா விதவையாக வந்தாள். ஒரு தங்கை வாழாவெட்டியாக திரும்பினாள். தாயும்… திடீரென்று படுக்கையில் விழுந்தாள். தம்பி கை கொடுப்பான் என்று எதிர்பார்த்த சாமுவேலுக்கு ஏமாற்றம். அவன் குடும்பத்தைப் பார்த்துக் குடியில் விழுந்தான். கஷ்டமோ…. ..கஷ்டம் !
தற்போது சாமுவேல் நேரம் காலமும் சரியில்லை போல. குடிசையைப் பார்த்து எந்த வண்டியும் காற்றடிக்கக்கூட நிறுத்துவதில்லை. இன்றைக்கு என்னவோ சுக்கிர திசை!.
நான் வரும்போது சாமுவேல் லாரி வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வேலைகளும் நிலுவையில் இல்லை.
நான் விபரம் சொல்ல….”லாரி முடித்து செல்வோம்!” சொன்னான்.
ஓட்டை நாற்காலியில் அமர்ந்தேன்.
ஐந்து நிமிடம் கழித்து அடுத்த ஆள் வந்துதான் எனக்கான வேலையைத் தள்ளி வைத்தான்.
“சாமுவேல் ! இதோ பக்கத்துலதான் என் மோட்டார் சைக்கிள் பஞ்சர்” என்றான்.
நாங்கள் கிராமம் சென்று திரும்ப ஒரு மணி நேரமாகும். இது பக்கமென்பதால் நான் அவனைப் பார்க்க அவன் என்னைப் பார்க்க. ..நான் ஒன்றும் சொல்லவில்லை. கடைசி ! தீர்மானித்து பேசாமலிருந்தேன். அவனும் என் பக்கத்தில் ஒரு உடைந்த நாற்காலியில் அமர்ந்தான்.
எங்களை இம்சிப்பது மாதிரி சாமுவேலுக்கு லாரி வேலையிலும் தொந்தரவு. ஒரு மாருதி, இரண்டு மாட்டு வண்டிகள், ஒரு ஸ்குட்டர், ஒரு டி . வி. எஸ். 50 என்று ஒன்று ஒன்றாக வர. .. இவன்தான் எழுந்து எழுந்து போய் அவைகளுக்குக் காற்றுப் பிடித்து கொடுத்து தன் வேலையைத் தொடர்ந்தான்.
அப்போது. ..
“அண்ணே ! அரிசி வாங்கனும்…” தங்கை குடிசையை விட்டு வெளியே வந்தாள்.
சாமுவேல் தன் அழுக்கு மேல் சட்டைப் பையைத் துழாவினான். கிடைத்த எல்லா சில்லறைகளையும் அள்ளினான். எண்ணாமல் அவளிடம் கொடுத்து. ..
“போ..!” சொன்னான்.
அவள் நின்று எண்ணி. ..
“அண்ணா ! பதினெட்டு ரூபாய் இருக்கு. ரெண்டு கிலோ அரிசிக்குச் சரியா இருக்கு.” சொன்னாள்.
“காய்கறிக்கு..ராத்திரி உன்கிட்ட கொடுத்ததை வைச்சுக்கோ” சொல்லி வேலையைப் பார்த்தான்.
அவள் அகன்றாள்.
வீட்டிலிருந்து மஞ்சள் துணிப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
அடுத்த நிமிடம் ஒரு யமஹா காற்றுக்காக ஒரு இரண்டு ரூபாய் துட்டைக் கொடுத்துச் சென்றான். அடுத்து வந்தவர்தான் டி. வி. எஸ். 50.
எனக்குத் தெரிந்த முகம். பெரிய பணக்காரர். பக்கத்துக்கு கிராமமே சொந்தம். அது இல்லாமல் அருகிலுள்ள நகரில் பெரிய ரைஸ் மில். அங்கு நெல் எப்போதும் கொள்முதல். அவியல், அறவை வேறு. கிராமம் சென்று திரும்பினார் போல.
என்ஜினை நிறுத்தி, இறங்கி ஸ்டான்ட் போட்டு. ..
“தம்பி ! காத்து !” என்றார்.
சாமுவேல் வழக்கம் போல தொட்ட வேலையை விட்டு ஓடிப்போய் இரண்டு சக்கரங்களுக்கு காற்றுப் பிடித்தான்.
அவர் மேல் சட்டைப்பையிலிருந்து பழந்தாட்களை போல கத்தையாய்ப் பணத்தை வெளியே எடுத்தார். எல்லாம் 50, 100, 10, 20 கலவை. காலியான பையை த் துழாவி ஒரு முழு ஐந்து ரூபாய்த் துட்டை காற்றுப்பிடித்து முடித்த சாமுவேலுவிடம் நீட்டினார்.
வாங்கிய சாமுவேல் தன் பையிலிருந்து இரண்டு ரூபாய் துட்டை எடுத்துக் கொடுத்தான்.
வாங்கிய அவர், துட்டை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்தார்.
“தம்பி ! வீலுக்கு ஒரு ரூபாய்தானே. .? ” கேட்டார்.
“ஆமாம் சார். !”
“மீதி. .?”
“ஒரு ரூபாய் தர்றேன் சார்.” சொன்னான்.
அவன் சொல்லி முடிக்கவும் ஒரு ஹீரோ ஹோண்டா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
சாமுவேல் உடனே. .
“காத்தா சார். .? ” என்றான்.
அவன் , “ஆமாம் ! ” சொல்ல. .. உடனே இரண்டு சக்கரங்களுக்கும் காற்றுப் பிடித்து முடிக்க. ..அவர் ஐந்து ரூபாய் தாளை நீட்டினான் .
“சில்லறை இல்லே சார் !”என்றான்.
“சரி. மாத்தி வர்றேன். !”உடனே அவன் வண்டியை கிளப்பிக் சென்றான் .
பணக்காரர் உடனே தன் வண்டியில் அமர்ந்துவிட்டார்.
‘அட நாயே. .! பையில் அவ்வளவு பணம் இருக்கும்போது ஒரு ரூபாய்க்காக உட்கார்ந்து இருக்கானே பிச்சைக்காரன் !’ எனக்குள் எரிந்தது.
‘பணக்காரராய் இருந்தாலென்ன ! ஒரு ரூபாய் அவருக்குப் பெரிசு. நிற்கட்டும் ! ‘ மனதைச் சமாதானப்படுத்தினேன்.
சாமுவேல் லாரியின் இரண்டாவது சக்கரத்தையும் முடித்தான். சில்லறை மாற்றச் சென்ற ஆள் திரும்பவில்லை. போய்விட்டான் போல. இல்லை, அடுத்தமுறை வரும்போது திரும்புவான். திருப்பாமலேயே போவான். எனக்குப்பட்டது.
பணக்காரர் சில்லறைத்தனமாய் அவன் சென்ற வழியையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அரிசி வாங்கச் சென்ற சாமுவேல் தங்கைதான் திரும்பினாள்.
“தங்கச்சி ! ஒரு ரூபாய் இருக்கா. .?” இவர் கடனை அடைக்க சாமுவேல்அவளிடம் கேட்டான்.
“இல்லேண்ணே. கருவாடு நான் கடன் ! ” சொன்னாள்.
“சரி போ” சாமுவேல் லாரி சக்கரங்களை உருட்டிச் சென்றான்.
அவன் அவைகளை மாட்டி முடிக்க அரைமணி நேரம் ஆனது.
பணக்காரர் இன்னும் எழவில்லைநகரவில்லை.
என்னிடம் சில்லறை ஒரு ரூபாய் இருந்தது.!
‘இந்த நாயே ! பிடிச்சுப் போ. பிச்சையாய்த் தூக்கிப் போட்டு ஆளை அனுப்பலாமா. .?’ யோசனை வந்தது.
‘அவருக்கு ஒரு ரூபாய் பெரிதென்றால் நமக்கும் பெரிசு. ஆள் விட்டுச் செல்லட்டும். இல்லை, அடுத்தமுறை வாங்கிக் கொள்கிறேன். கழித்துக் கொள்கிறேன்! கூறிச் சொல்லட்டும் ! ‘ இருந்தேன்.
ஒரு வழியாக ஹீரோ ஹோண்டா ஆள் ஏமாற்றாமல் திரும்பினான்.
பணக்காரனின் வாடிய விழுந்த முகம் பளிச் வெளிச்சம்.
அவனும் சோதனையாக ஒரு இரண்டு ரூபாய் துட்டைக் கொடுத்து தன் கடனை அடைத்துச் சென்றான்.
சாமுவேல் யோசிக்கவே இல்லை.
“இந்தாங்க சார். நீங்க ஒரு ரூபாய் தாங்க.” சொல்லி அந்த இரன்டு ரூபாய் துட்டை நீட்டினான்.
பெற்றுக்கொண்ட பணக்காரர் பேசவே இல்லை. வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டு பதில் பேசாமல் சென்றார்.
அவருக்கு ஒத்த ரூபாய் பெரிசென்றால் மற்றவர்களுக்கு??
சாமுவேல் உட்பட எங்கள் இரண்டு பேருக்கும் அதிர்ச்சி!!