கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,629 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

ஏகாம்பரத்துக்கு நம்பவே முடியவில்லை.

“நான் பொறந்து வளர்ந்த புழுதிக்காடா இது!’

அடியோடு மாறி இருந்தது அம்பலவாணர்புரம்.

இருபது வருஷம் கழிச்சு அமெரிக்காவிலிருந்து, தான் உருவான கிராமத்தைப் பார்க்க பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான் ஏகாம்பரம். சில்லாங்குச்சி
விளையாடிய இடத்தில் கம்பீரமாய் ஒரு கண்ணாடி மாளிகை. கல்யாண மண்டபமாய் நின்றது.

மண்ணை எடுத்து உப்புக்குத்தி விளையாடிய தெரு இப்போது சிமெண்ட் ரோடு போடப்பட்டு ஜம்மென்று இருந்தது.

குளத்தங்கரை எல்லாம் வீடுகளாகிப் போனது. பள்ளிக்கூடத்தில்தான் விளையாடிய நவ்வா மரமும், மாமரமும், பள்ளி விரிவாக்கத் திட்டத்தில் தூக்கி எறியப்பட்டு இரட்டை மாடிக் கட்டடம் ஒன்று முளைத்திருந்தது.

பழைய தடயங்கள் நாகரிக மயத்தில் நவீனமாகி மறைந்து போனது ஏகாம்பரத்துக்கு வருத்தமாக இருந்தாலும் தன்னைப் போல் தன் கிராமமும்
வளர்ந்திருப்பதைப் பார்த்து பெருமிதம் கொண்டான்.

மாட்டுவண்டி மட்டுமே போன அந்தத் தெருவில் பல்சர் பைக்கில் வந்தான் பரமசிவம். தன் கூட படித்த ஏகாம்பரத்தைப் பார்த்ததும் வியப்பில்
வண்டியை நிறுத்தினான்.

“வாடா பரமசிவம், கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோம்’ என்று பக்கத்திலுள்ள ஹோட்டலுக்குள் நுழைய முற்பட்டான் ஏகாம்பரம்.

சட்டென நிறுத்தினான் பரமசிவம்.

“இங்கே வேண்டாம் மக்கா. அடுத்த தெருவுல நம்மாளுங்க கடை இருக்கு. அங்கே போவோம்.’

அதிர்ந்து நின்றான் ஏகாம்பரம்.

அப்போ பிடித்திருந்த அந்த ஜாதிவெறி துளியும் மாறாமல் அப்படியே இருந்தது அத்தனை மாற்றத்தில்.

– ஆர். மனுநீதி (டிசம்பர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *