இளைய பாரதத்தினாய்…




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்தில் கடல் இருக்கிறது என்றுதான் பெயர்; புழுக்கம் அதிக மாகத்தான் இருக்கிறது. நாற்காலியில் உட்கார்ந்து மேசைமேல் கால் களைப் போட்டுக்கொண்டு உடம்பைச் சரித்து அண்ணாந்தபடி கண்ணை மூடி குருட்டுக்கனவில் ஆழ்ந்தான் பச்சையப்பன்
மேலே மின்விசிறி, அளவான காற்றை அவன்மேல் விசிறி, புழுக்கத் தைக் குறைக்கப் பார்த்தது. மர உத்திரங்களில் ஓட்டைப் போடும் சந்தனப்பொட்டு வைத்த கனமான ஒரு கருவண்டு, அடிநாதக் குரலில் எழுப்பிய ஒலியுடன் பறந்து வந்து, எந்த இடத்தில் ஓட்டை போடலாம் என்று இடம் தேடிக்கொண்டிருந்தது. அது எழுப்பிய ஒலி, யாரோ தூரத்தில் பெரிய எழுத்து அம்மானைப் புத்தகத்தை கனமான குரலில் ராகமிட்டு வாசிப்பதுபோலக் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படி யான ஓய்வு நேரத்தில் மர உத்திரங்களில் ஓட்டைப்போட்டு ‘நாசக் கோட்டை’ ஆக்குவது சகிக்க முடியாததுதான். பச்சையப்பன் அதோடு பலமுறை ‘சண்டை’ போட்டிருக்கிறான். வெற்றி கண்டதில்லை. எழுது கிற கனமான அட்டையை எடுத்து அதை ஒரே வீச்சில் தட்டி வீழ்த்த லாவகமாக விலகிக் முனைந்தபோதெல்லாம் அந்தச் சனியன் கொண்டுவிடும். இப்படி நாலைந்து முறை முயன்று அலுத்து, மின்விசிறி ஓட்டத்தை வேகமாக்கி மறுபடியும் நாற்காலியில் தலைசாய்த்து அமர்ந்து அதைக் குரோதத்தோடு பார்ப்பான். எப்படி அதைத் தந்திரமாக விழத்தட்டுவது என்று யோசிப்பான். பூப்பந்து விளையாட்டு மட்டை இருந்தால் வசதி.. ஒரே வீச்சில்; ஒரு தட்டு. இந்தக் கருவண்டு அவுட்! முருகையனிடம் ‘பேட்’ இருக்கிறது. கேட்டால் தருவான். வாங்கிக்கொண்டு வரணும் என்று நினைக்கிறதுதான்; வீட்டு வாசப்படி இறங்கியதும் மறந்துபோய் விடுகிறது. இந்த வண்டு வந்தபிறகுதான் ஞாபகத்துக்கே வருகிறது. பச்சையப்பனைத் தோற்கடித்த வண்டு தனது காரியத்தில் கவனத்தோடு முனைப்பாக செயல்பட்டுக்கொண்டி ருந்தது. மெல்லிய மரத்தூள் மேலேயிருந்து உதிர்ந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு தூள் அவன்பேரிலும் விழுந்தது.
கண்ணை மூடி பச்சையப்பன் ஒரு கோழித்தூக்கம் போட முனைந் தான். அதுக்கு இடைஞ்சலாக கொட்டாப்புளியின் ஓசை வந்து காதைக் தாக்கியது. அந்த வீட்டின் ஒரு பகுதியில் தச்சுவேலை நடந்து கொண்டிருந்தது. அவனுடைய ஆயா, அந்த வேலையை மேல்பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வயசிலும் அவளால் சும்மாகவே இருக்க முடியாது. எதையாவது செய்துகொண்டே இருப்பாள்.
இந்த வீடு நான் கட்டியது என்று சொல்லுவாள். வீடு சிறியதுதான். என்றாலும் வசதியானது. ஆயா வடிவமைத்துக் கட்டியது. உடம்பு நன்கு இருந்தால் இன்னும் பத்தோ, பதினைந்தோ ஆண்டுகள் இருப்பாள்; நிம்மதியாக சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் மாட்டாள். தக்காலம் வரப்போகுது (மழைக்காலம்); அதுக்கு முன்னெ அடுப்படியில் ஒழுகும் மரக்கூரையை செம்மை பண்ணிவிட வேணும் என்று ஒத்தைக்காலில் நின்றுகொண்டு தச்சனிடம் வேலை வாங்கிக்கொண்டிருக்கிறாள். அந்தச் தச்சாசாரியை அவள், “சரியான ஒரு நகட்டுமாறிப் பயல்” என்று தன்னிடம் பழித்துச் சொல்லியிருக் கிறாள். ஆனால் ஆசாரியைப் பார்த்தால் பச்சையப்பனுக்கு அப்படித் தோன்றவில்லை.
கொஞ்…சம் கண் அசருகிற நேரம்.
“பச்செ; ஏ பச்செ…..”
பாரசூட் விரிந்து, ஆகாய மார்க்கமாகப் பறந்துகொண்டே கீழே இறங்கும் வேளையில் மலையில் வந்து மோதியதுபோல் தெரிந்ததும் கண்விழித்தான் பச்சை.
“பச்செ; ஏ… பச்செ…”
என்னா ஆச்சி இவ; சை. அடுப்படியிலெ தீய. பிடிச்சிட்டது. ஒண்ணும் இருக்காது. எதுக்கு இந்தப் பேக்கூப்பாடு. அவள் சுபாவம்.
பகல் தூக்கத்துக்கென்றே இப்படி சொல்லிவச்சமாதிரி எதாவது ஒரு இடைஞ்சல் வரும். சில சமயம் ஒரு ஒற்றை ஈ வரும்! எப்படா கண் அசுருவான் என்று காத்திருந்து, கண் அசருகிற நேரம் பார்த்து. மேல்உதட்டில் வந்து உட்காரும். மேல்உதட்டில் அதுக்கு என்னதான் இருக்குமோ! எரிச்சலான எரிச்சல். அதையும் கொல்லமுடியாது. அந்தக் துக்குரி ஈயை ஓட்டுவதிலேயே தூக்கம் போயேவிடும்.
யாகம், தபசு இவைகளைக் கெடுக்க என்றே ராக்கதர்கள் வருவார் களாமே; அப்படித்தான் இந்த வண்டு, ஈ இதுகள்லாம். இப்பொ ஆயாவின் குரல்! நிம்மதிங்கிறதே கிடையாது வாழ்க்கையில் என்று தோன்றியது. சோறு போடுகிறாள் ஆயா, தங்க இடமும் தந்திருக்கிறாள். முதுகலைப்பட்டப் படிப்புவரை இங்கே இதே வீட்டில் தங்கித்தான் படித்து முடித்தது. அதுக்காக, நான் இவ வச்ச ஆளா?
“ஏ பச்செ……; பச்செயப்பா”
“தோ வந்துட்டேன் ஆயா.”
ரண்டுரூபா நோட்டை அவனிடம் நீட்டிக்கொண்டே ஆயா சொன்னாள் கணீர்க்குரலில்:
“ஓடு, ஒரே ஓட்டமாய் போயி ஒரு மூணு இஞ்ச் போல்ட் ஆணி வாங்கிட்டு ஓடியா.”
நோட்டை அவனிடம் தந்துகொண்டே அவளுடைய ‘புலப்பம்’ தொடங்கியது.
“பாடிப் பாடிச் சொன்னேம், இந்த ஆசாரியிட்டெ கூடக்கொஞ்சம் இருக்கட்டும், மிஞ்சுனாலும் குத்தமில்லை; அது என்ன அழுகிப்போற சாமானான்னுட்டு. கண்டுங்காங்காம வாங்கிட்டு வந்து இப்பொ ஒரே ஒரு போல்ட் ஆணி இல்லாம வேலையே தாயமாட்டு ஆயிட்டது. நேரம் சாயங்காலம் ஆகப்போகுது. இப்பொ முடியிற இந்த வேலைய நாளைக்கும் இழுக்கப் போறாம்….”
பேசிக்கொண்டேயிருந்தாள் ஆயா.
நோட்டை வாங்கி பச்சையப்பன் மேசை மேலுள்ள புத்தகங்க ளினுள் ஒன்றில் வைத்துவிட்டு முகத்தைக் கழுவ குளியல் அறைக்குள் போனான்.
அவன் இன்று மதியச்சாப்பாடு வந்து சாப்பிட்டதே மூன்று மணி. சரியான அலைச்சல். வேலைப்பதிவு அலுவலகம், நூலகம், தபாலாபீஸ், கடைகண்ணி அது இது என்று. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்க முடியலை. மதியத்தூக்கத்துக்கெல்லாம் அரசு உத்தியோகம்தான் சரி. தனியார் அலுவலகங்கள்லெ நெட்டிய முறிச்சுப்போடுவாம். ஆனா நமக்கு இப்பதைக்குள்ளெ எந்த வேலையும் கிடைக்கிறாப்லெ தெரியலெ.
எவனாவது ஒரு ஆளுங்கட்சியச் சேர்ந்த அரசியல் தலைவன் நமக்கு ஒரு பொண்ணையுங் கொடுத்து, ஒரு உத்தியோகத்தையும் வாங்கித்தந்தாதானுண்டு.
“கான்”னிலிருந்து வேகமாகக் கொட்டிய தண்ணீரை ரெண்டு கையாலயும் பிடித்துப் பிடித்து மூஞ்சியில் அறைந்து கழுவி சோப்புப் போட ஆரம்பித்தான். ஆயா இதுக்குள் வந்து இவன் என்ன செய்கிறான் என்று எட்டிப்பார்த்துவிட்டுப் போனாள்.
கொட்டாப்புளியின் சத்தமோ இழைப்புளியின் சத்தமோ நின்று போயிருந்தது. போல்ட் ஆணி வந்தால்தான் மேல்கொண்டு வேலை. ஆசாரியார், சிரித்த முகத்துடன் வெத்திலைப் பையை அவிழ்த்துக் வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
குட்டிப்போட்ட பூனையாய் ஆயா ஆசாரியின் பக்கத்துக்கும், பச்சையப்பன் பக்கத்துக்குமாக நடை ‘பயின்று’ கொண்டிருந்தாள்.
ஒரு பாக்கை எடுத்து ஒதுக்கிக்கொண்டு வெத்திலையின் முதுகில் பதனமாகச் சுண்ணாம்பை ஆசாரியார் தடவ ஆரம்பித்ததும் ஆயா அங்கிருந்தபடியே இடப்பில் கை வைத்துக்கொண்டு பச்சையப்பன் இருந்த பக்கமாகப் பார்த்தாள். அவன் முகத்தைக் துடைத்துக் கொண்டே வந்து, முகம் கழுவிய தகிப்பை ஆற்ற மின்விசிறியின்கீழ் நாற்காலியில் கொஞ்சம் உட்கார்ந்தான். முகத்தைக் துடைத்து முடித்துவிட்டு இப்போது கைகளைத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.
கைவிரல்களைத் துடைக்கும்போது நகங்களைக் கவனித்தான். நகங்கள் வளர்ந்து அழுக்கு சேர்ந்திருந்தன. பிரஷ் பண்ணியிருக்க வேண்டும் அல்லது வெட்டித் தொலைக்க வேண்டும். இவைகளுக் கெல்லாம் நேரம் இருக்கிறதுதான். நேரம் அதிகம் இருப்பதால்தான் நேரத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. உத்தியோகம், சம்பாத்தியம் என்று ஏற்பட்டுவிட்டால் நேரம் கிடைத்துவிடும் என்று சொல்லிக் கொண்டான்.
எழுந்து நிலைக்கண்ணாடியின் முன்னால் போய் நின்றான்.
‘இந்த மூஞ்சிக்கு என்ன குறை. என்னத்தைக் கண்டு தன்னை இந்த உலகம் ஒதுக்குகிறது. இந்த மண்டைக்குள் இருக்கிற விசயங்கள் வெளிப்படும்போது நாளை இந்த உலகமே மூக்கில் விரல் வைக்கப் போகிறது பார்.’
முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்துக்கொண்டான். தன்னைக் கண்ணாடியில் பார்த்து செல்லமாக ஒரு கெட்டவார்த்தை வசவால் வைது கொண்டான்.
தன்னையே ஆயா வைத்தகண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருப்பது ஒரு அசைப்பில் தெரிந்தது.
போல்ட் ஆணி வாங்கவேண்டிய இரும்புக்கடை தூரத்தில் இல்லை; இதோ அடுத்த தெருவில்தான். ஒரு அஞ்சலில் போய் வாங்கி வந்துவிடுவேன்.
பவுடர் போட்ட முகத்தை ‘டச்அப்’ செய்ய ஆரம்பித்தான்.
இந்த ஒரு வீட்டில் மோசம், ஒரே ஒரு மின்விசிறி இருப்பதுதான். தலைசீவுவதற்குள் வேர்த்து வடிந்துவிடும்.
கைலியை அவிழ்த்து எறிந்துவிட்டு பேண்ட் போட்டுக் கொண்டான். இதே இருக்கட்டுமா வேற போட்டுக்கொள்வோமா; ப்ச்சு, உள்ளூருக்கு இது போதும். சட்டை அணிந்துகொண்டான்.
திரும்பவும் வந்து கண்ணாடிக்கு முன்னால் நின்று, தன்னை வேற்றுக்கண்ணால் ஒரு பார்வை சரி பார்த்தான்.
அடுத்த தெருவில் – போற வழியில் – அந்த சன்னலில் தெரிகிற கண்கள் நினைவுக்கு வந்தது. எப்பவாவது அபூர்வமாகத்தான் அந்தக் கண்களை உடைய முகம் சன்னலில் தெரியும். அப்போது சன்னலின் அழகு நிறைவடையும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
இன்று அந்த முகம் தட்டுப்படுமா. தட்டுப்படும். சன்னல் எனும் சதுரவானம் தண்ணெனும் வட்டமதி நெஞ்சில் மூட்டு கனல் என்று தனக்குள் தானே ஒரு புதுக்கவிதைபோல் இயற்றிப் பார்த்தான் கொஞ்சம் வியர்வையை ஆற்றிக்கொள்ள திரும்பவும் விசிறிக்கடியில் வந்து உட்கார்ந்தான். ஆயா தன்னைப் பார்த்து இளக்காரமாக வாய்க் குள்ளேயே சிரிப்பது போலிருந்தது!
சொல்லமுடியாது: கோபப்படுவதற்கு முன் இப்படி ஒரு தோற்றம் தெரியும் அவள் மூஞ்சியில். அவள், கிட்டத்தில் வந்து இப்போது பார்த்தது இன்னும் என்ன பாக்கி இருக்கு சிங்காரித்துக்கொள்ள என்பதுபோல இருந்தது.
ரூபாநோட்டை எங்க வச்சென் என்று சுற்றுமுற்றும் அவசரமாகத் தேடினான். புத்தகத்துக்குள் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எந்தப் புத்தகம், எந்தப்பக்கம் என்று கொஞ்சம் தடுமாறி ஒரு மட்டுக்கும் கிடைத்துவிட்டது.
இதோ ஒரு நிமிட்டில் இப்பொ வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன்; அடுத்த தெருதானெ. சைக்கிளைத் தேடினான். ‘இந்த நாசமத்துப்போன பயல் இருக்கிறவரைக்கும் நமக்கு சைக்கிள் கெடைக்காது; நடந்தே சாக வேண்டியதாம்’ என்று தன் தம்பியை மனசுக்குள் வைதுகொண்டே படி இறங்கினான்.
கொஞ்சதூரம்தான் நடந்திருப்பான்; கால்கள் ஆணி அடித்தது. போல் அப்படியே நின்றுவிட்டன.
ஐயோ, அந்தப் பாட்டு.
அவனுக்குப் பிடித்த அந்த சினிமாப் பாட்டு! அந்த இசையில் அப்படியே சொக்கி நின்றான்.
அந்த முக்குக்கடை தையல்காரர் அப்படி ஒரு தர்மம் பண்ணு கிறார், இந்த உலகுக்கு.
புதுப்புது சினிமாப் பாடல்களைப் பதிவு பண்ணிக்கொண்டு வந்து, ஸ்டீரியோ ஒலிபெருக்கியில் போட்டு இந்த ஊரு ஒலகமெல்லாம் கேட்டுப் பயன் அடையட்டும் என்று சொல்லி, சத்தமாக வைத்து, அனுபவிங்கடா பயல்களா என்று அவரால் முடிந்த ஒலிதானம் பண்ணுகிறார்.
அந்தப் பாட்டு முடிந்துதான் பச்சையப்பன் அந்த இடத்தை விட்டே நகருவான் இனி.
ஆயாவின் முகமோ, போல்ட் ஆணியோ ஞாபகத்தில் இல்லை.
– மார்ச் 21-ஏப்ரல் 5 1991, இந்தியா டுடே.