கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எம்.ஆர்.டி.யின் சத்தம் காதைப் பிளக்கிறது. தண்டவாளத்துக்கு மிக அருகில் வீடு என்றாலும் அந்தச் சத்தம் சாமிநாதனுக்கு இதுவரை சங்கீதமாகத்தான் இருந்து வந்தது.

அந்த ஒலி அவருக்கு ஊஞ்சலாட்டம் போல் இருக்கும்; சுகமாக உறங்கி விடுவார்.

கடைசி ரயில் செல்லும் வரை சாமிநாதன் கண் விழித்திருப்பது அபூர்வம். இன்றைக்கு தலைகீழ் நிலவரம்..

நள்ளிரவு கடந்தும் இமைகள் அழுந்துவதாக இல்லை.

முற்பகலில் மனதில் ஏறிய சுமை இந்த நேரம் வரை இறங்கவில்லை. உணர்வுகளின் இறுக்கம் தணிந்தால் அல்லவா உறக்கம் வரும் ?

வீட்டின் கீழ்த்தளத்தில் தபால் பெட்டியைத் திறந்த போது கையில் கிடைத்த கடிதம் தான் கலவரத்துக்குக் காரணம். சாமிநாதனுக்குக் கடிதம் வருவது அபூர்வம். அன்றாடம் குவியும் விளம்பரத் தாள்களை அப்புறப்படுத்து வதற்காகவே அவர் அஞ்சல் பெட்டியைத் திறப்பார்.

விமலா…அருண்… இன்னும் சிலர் ! கடிதம் எழுதக் கூடியவர்கள் இருந்தும் தொடர்புகள் குறைந்துக் கொண்டே வருகின்றன.

இந்த நிலவரத்தில் இன்னார் என்று தெரியாதவரிடம் இருந்து அந்தக் கடிதம் வந்து சேர்ந்திருக்கிறது.

இவருடைய மூன்றாவது மாடி அடுக்கு வீட்டுக்கு நேர் எதிரில் ரயில் தடம். விடிகாலை ஐந்தரை மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டரை வரை தடத்தில் ரயில்கள் போவதும் வருவதும் சாமிநாதனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

பத்து வருடத்தில் இந்த ரயில் ஓட்டம் அனிச்சையான இயக்கமாகவே இவருக்கு ஆகிவிட்டது.

“இந்தச் சத்தத்தில் எப்படித் தூங்க முடிகிறது ?” என்று சீன நண்பர் ஆங்கும் மற்றவர்களும் எத்தனையோ முறை கேட்டிருக்கிறார்கள்.

“எல்லாம் பழக்கம் தான் இந்த சத்தத்தைக் கேட்காம என்னாலே தூங்க முடியாதுன்னு ஆயிட்டது…” என்று தான் சொல்லி வந்தார். உண்மையும் அதுதான்.

ஈஷுன் சென்ட்ரலில் இந்த நான்குமாடி புளோக்கின் மூன்றாவது மாடி வீட்டை சாமிநாதன் விரும்பியே தேர்ந்தெடுத்தார். அதற்குக் காரணம் அருண்.

“இங்க தான் எம்.ஆர்.டி ரயில் பாதை வரப்போகுது. எதிர்ல பஸ் இண்டர்சேஞ்ச் கட்டப் போறாங்க. பின் பக்கத்தில் ஜூனியர் காலேஜ். நீச்சல் குளம்.. தேக்கா, உட்லண்ட்ஸ், பிடோ எல்லா இடத்துக்கும் போக வசதியா இருக்கும்..” என்றான் அவன்.

“அப்ப இதையே எடுத்துடலாம்னு சொல்றியா ?”

“எதுக்கும் நீங்க விமலாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு” என்று இழுத்தான் அருண். சாமிநாதன் புரிந்து கொண்டார்.

மகள் விமலாவின் விருப்பமும் ரசனையும் அவருக்குத் தெரிந்தது தான். அருணுக்குப் பிடித்ததை அவள் நிராகரிக்க மாட்டாள் என்பது அவருள்ளே வேரூன்றிப் போனது.

செம்பவாங் கம்பத்தில் துள்ளித்திரிந்த பருவத்திலிருந்தே இருவரையும் இணைத்துப் பார்த்துப் பூரித்து வந்தவர் இவர். அருண் ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோது இவர் கையில் பிடித்துக் கொடுத்து விட்டாள் சாமிநாதனின் தங்கை சாரதா. அதற்குப் பிறகு அவனுக்குத் தந்தை, தாய், குரு எல்லாமே சாமிநாதன் தான்.

வீட்டைத் தேர்ந்தெடுப்பதில் விமலா தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதையும் வெளிக்காட்டவில்லை. அருணுக்குப்பிடித்தவை என்றால் அப்பா மறுக்க மாட்டார் என்பது விமலாவுக்கு நன்றாகவே தெரியும்.

செம்பவாங்கில் அவர்களுடைய கம்போங் மறையப்போவது உறுதியானது. ஈஷுன் சென்ட்ரலுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் மனைவி தனலட்சுமியின் மறைவு தேற்றிக் கொண்டார்.

விமலாவும் அருணும் தன்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைப் பிடிப்புடன் படிப்படியாக அந்தத் துயரத்தை சாமிநாதன் மறந்து வந்தார்.

புதிய இடத்திற்கு வந்த இரண்டு வருடத்தில் இரண்டு மூன்று சோதனைகள் : எல்லாமே எதிர்பாராதவை.

முதலில் விமலாவின் வெளியேற்றம். அதை அப்பட்டமான வெளியேற்றமாகத்தான் சாமிநாதன் நினைக்கிறார் மகளுக்கு நடந்தது திருமணம் என்ற நினைவு இன்று வரை அவருக்கு இல்லை.

அவர் மனதில் பதிந்த சித்திரம் மறைவதாக இல்லை.

விமலாவும் அருணும் துருவங்களாகி விடுவார்கள் என்பது சாமிநாதன் எண்ணிப் பார்த்திராத கற்பனை.

முதலில் விமலா விடைபெற்றுக் கொண்டாள். பிறகு அருண் ; ஆறு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டது.

எம்ஆர்.டி ரயில் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு இவர் மட்டும் இந்த வீட்டில் தவம் இருக்கிறார்.

விமலாவும் அருணும் தான் தன்னைக் கவனித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகி விட்டது. குருவிக்கூடு கலைந்தது போல் ஆகிவிட்டது.

வயது வந்தால் அவரவர் வழியும் பிரிவது தவிர்க்க முடியாதது என்பதை அனுபவித்த பிறகே சாமிநாதன் உணர்ந்து கொண்டார்.

அவருடைய தனிமையைப் பார்த்து சிலருக்கு அனுதாபம்.

“உங்க மகள் கலியாணத்துக்குப் பிறகு கணவனோட ஆஸ்திரேலியாவுக்குப் போயிட்டது.

அது முடிஞ்சு போன விஷயம் மாதிரிதான். மகளுக்குக் கட்டி வைக்க கனவு கண்ட தங்கச்சி மகனும் மலேசியாவுக்குப் போயிட்டான். இனி மேலும் எதுக்குத் தனியா இருக்கிறீங்க, சாமிநாதன் ? ஒரு அறையில் நீங்க தங்கிக்கிட்டு மத்ததை வாடகைக்கு விட்டுடுங்க. இது மாதிரி எம்.ஆர்.டி ரயில் வசதியும் பஸ் இண்டர்சேஞ்சும் உள்ள இடம் வாடகைக்குக் கிடைக்காதான்னு எவ்வளவு பேர் அலையறாங்க தெரியுமா?”

பலர் சொல்லிப் பார்த்தார்கள். முகவர்களும் படையெடுத்தார்கள். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கணிசமான வாடகைப் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள். சாமிநாதன் அசைந்து கொடுக்கவில்லை.

அது அருணுக்குரிய வீடு என்ற நினைப்பு அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே அவனிடம் வீட்டை ஒப்படைத்து விட்டால் நிம்மதி என்று காத்திருக்கும் வேளையில் மின்னல் முறிந்து இடி முழங்குவதுபோல் இவருக்கு அதிர்ச்சியான செய்தி.

மிகச்சுருக்கமான கடிதம்தான். நறுக்குத் தெறித்த மாதிரி வார்த்தைகள். அருணைப்பற்றி அவதூறான வாசகங்கள்!

விமலாவைப்பற்றி இப்படி யாராவது எழுதியிருந்தால் கூட அவர் ஆடிப்போக மாட்டார். அவரைப் பொறுத்த வரையில் அருண் சத்திய சீலன்.

தாறுமாறான செய்திகளைத் தாங்கி வந்திருக்கிறது கடிதம்.

வேறு வார்த்தையில் சொல்வதானால் இது மொட்டைக் கடிதம். எழுதியவரின் பெயர், முகவரி இல்லை.

கண்ணைக் குத்தியது போல் இருக்கிறது. அதனால் கசிவு கண்ணில் மட்டும் இல்லை. மனத்திலும் ரணம்.

சாமிநாதன் ஏற்கனவே பல ஏமாற்றங்களைச் சுமந்துக் கொண்டிருப்பவர். இந்தக் கடிதச் செய்தி மட்டும். உண்மையாக இருக்குமானால் இதயம் நொறுங்கி நிரந்தரமாகப் படுக்கையில் மூடங்கி விடுவார்.

இன்னொரு கண்ணையும் பறி கொடுக்க இவரால் முடியாது. விமலா என்ற கண்ணை இழந்தது போதும்.

அருண் விஷயத்திலும் அலங்கோலம், அசம்பாவிதம் என்று எதுவும் நடந்துவிடக்கூடாது என்று துடிப்பு.

ஆறப்போடக்கூடிய விவகாரம் அல்ல. தீர விசாரித்து தெளிவு படுத்திக் கொள்ளாத வரை நிம்மதி இல்லை.

வெள்ளம் பெருகுவதற்கு முன் அணைபோடா விட்டால் ஆபத்துதான் என்று அவருக்கு அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது கடிதத்தில்.

அருண் வசீகரமான வயசுப் பெண் ஒருத்தியுடன் பழகுகிறானாம்.

அருமையான காதல் ஜோடி என்று அவரவரும் வருணித்துப் பேசுகிறார்களாம்.. பலருக்கு அதில் புகைச்சல் என்றும் கடிதம் கூறுகிறது.

இவரால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பது வெறும் வாசகம் அல்ல.

விசாரணை அவசியம். அவசரமாகப்புறப்பட்டு வரச்சொல்லி அருணுக்குத் தந்தி கொடுக்கலாம். அல்லது டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம். அவன் உடனடியாக வராவிட்டால்..?

அது பொருத்தமாகப் படவில்லை. நேரில் சென்று நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நள்ளிரவுக்குப்பிறகும் சாமிநாதன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். ஒரு முடிவுக்கு வந்தார்.

விடிந்ததும் எம்.ஆர்டி ரயில் அல்லது பஸ்ஸை பிடிக்க வேண்டும். கிராஞ்சி அல்லது உட்லண்ட்சுக்குச் சென்று அக்கரைக்குப்போக வேண்டும். ஜோகூர் பாருவிலிருந்து சிரம்பானுக்குப் போய்விட வேண்டியதுதான்.

இமைகள் இலேசாக அழுந்தின.

சிரம்பானுக்கு பஸ் விரைந்து கொண்டிருந்தது. காதும் காதும் வைத்த மாதிரி இது திடீர்ப் பயணம். சாமிநாதனின் சிந்தனை ஓட்டம் அந்த வேகத்துடன் போட்டியிட்டது. “சாமி அண்ணே ! நம்ம கம்பத்திலே பொருத்தமான கல்யாண ஜோடின்னு ஒரு போட்டி வச்சா ஜெயிக்கிறவங்க யார்? சொல்லுங்க பார்ப்போம்…” கப்பல் பட்டறை கதிரேசன் சிரித்தபடி கேட்டான்.

“எதுக்கு இப்படி ஒரு கேள்வி ?” என்றார் சாமிநாதன்

“கம்பத்தில் இப்ப இதுதான் பேச்சு. உங்க மகள் விமலா ரதியாம்.. அருணாசலந்தான் மன்மதனாம்.

அவ்வளவு பொருத்தமான ஜோடின்னு ஆளுக்கு ஆள் பேசிக்கிறாங்க.

நீங்களும் கேட்டிருப்பீங்க. உங்க காதுல போட்டு வைக்கணும் பாருங்க..”

சாமிநாதன் தனக்குள் சிரித்துக் கொள்வார். அவருக்குத் தலைகால் புரியாத பெருமை. உள்ளதைத்தான் சொல்கிறார்கள் என்ற பூரிப்பு. விமலாவுக்கு அரு ணே கணவன் என்பது தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

அருண் அந்தக் கற்பனையில் மிதந்துகொண்டிருந்ததும் அவருக்குத் தெரியும். இன்னொரு நாள் கதிரேசன் ராக ஆலாபனை போல் ரசமாக விவரித்தான். “செம்பவாங்

பீச்சுப்பக்கம் போனேன் பாருங்க. அங்கே வயசுப் பிள்ளைங்க என்ன பேசினாங்க தெரியுமா? சொல்லக்கூசுது போங்க..”

சாமிநாதன் தூண்டாமலேயே கதிரேசன் விவரித்தான்

“ரதிமாதிரி ஒருத்தியை இவனுக்காக மாமா பெத்து வச்சிருக்கிறாரே – ஒரே வீட்டில் ரெண்டுபேரும் என்னென்ன பேசுவாங்க, எப்படில்லாம் நடந்துக்கு வாங்… நினைக்கவே இனிப்பா இருக்கு. அருண் அதிர்ஷ்டசாலிப்பா !… சாமி அண்ணே, அருணாசலத்தின் கூட்டாளிங்க என்ன மாதிரி பேசறாங்க தெரியுமா?”

நண்பர்களின் பேச்சை அருண் அசைபோட்டு அனுபவிப்பதை சாமிநாதன் அவ்வப்போது உணரத் தவறவில்லை.

“எப்ப பார்த்தாலும் ரம்புத்தான். டுரியான் மரத்தடிக்குப் படிக்கப் போயிடுறே விமலாவுக்குப் பாடம் சொல்லிக்குடுக்கக் கூடாதா

இடையிடையோ சாமிநாதன் அருணைக் கேட்பார்.

“விமலா படிப்பில் என்னைவிட கெட்டி, நான் அதுக்கு சொல்லித்தர என்ன இருக்கு மாமா?”

“என்ன இருந்தாலும் நீ மூத்தவன். பட்டம் வாங்கப் போறே ! விமலா படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு… எதுக்கு சொல்றேன்னா நீ கட்டிக்கப் போற பெண் அது…

அவனுடைய பொறுப்பை அவ்வப்போது சாமிநாதன் உணர்த்திக் கொண்டிருந்தார்.

அருண் கடைசித் தேர்வை எழுதி முடித்திருந்த சமயம்.

ரம்புத்தான் மரமேடையில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவன் மாமாவைப் பார்த்ததும் எழ முயன்றான். அவன் தோளை அழுத்தி அமர்த்தி விட்டு அருகில் உட்கார்ந்தார் சாமிநாதன்.

அவர் பேச விரும்புவதைப் புரிந்து கொண்டான்.

“எனக்கு ஒரு யோசனை அருண்… விமலா படிச்சது போதும். நிறுத்திடலாம்னு பாக்கறேன்.”

“ஏன் அப்படி நினைக்கிறீங்க?” – அவன் குரலில் அதிர்ச்சி..

“அது படிச்சிட்டு உத்தியோகமா பாக்கப் போகுது ? நீ கூடிய சீக்கிரம் பொறுப்பான வேலையில் உக்காரப்போற… அது போதாதா?”

“படிப்பை நிறுத்துறது நல்ல முடிவா எனக்குப் படலே மாமா!”

“பெண்டாட்டியும் பட்டதாரியா இருக்கணுங்கிற ஆசையா உனக்கு ?”

“நல்லா படிக்கிற பெண்ணை எதுக்காகப் பாதியில நிறுத்தணும் ? அதுக்கு என்ன அவசரம் இப்ப ?” என்றான் அருண்.

“மாப்பிள்ளையைக் காத்திருக்க வச்சிட்டு எவ்வளவு காலத்துக்குப் பெண்ணைப் படிக்க அனுப்புவே, அப்புடீன்னு பலரும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க, அருண்!”

“நான் அப்படிக் கேட்டேனா ? இந்த யோசனையை நீங்க முதல்ல விமலாகிட்ட கேட்டிருக்கணும், மாமா!”

அது சரியான அபிப்பிராயமாக அவருக்குப் பட்டது.

விமலா தொடர்ந்து படிக்க விரும்புவதாக சென்னாள்.

மறுநாள் அருணிடம் அவர் சொன்னார். ஆனால் மனதில் அச்சம் இருப்பதாகச் சொன்னார். அவன் விவரம் கேட்டான்.

“விமலாவின் படிப்பு முடியும் வரை நீ காத்துக் கிட்டிருக்கணுமே!”

உனக்கு நல்ல வேலை கிடைச்சி எங்கேயாவது வெளியிடத்துக்குப் போக வேண்டியிருந்தால்..

அப்படிப்போற இடத்தில வேற ஏதாவது ஆயிட்டா..” அருண் சிரித்தான்.

“மாமா நீங்க கிழிச்சக் கோட்டை நான் தாண்டுவேனா?’ உங்க ஆசையை நிறைவேத்துறதுதான் என்கடமை..’

சிங்கப்பூர் நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தாலும் அதன் மலேசியத் தொழிற்சாலைக்கு அனுப்பி விட்டார்கள்.

அந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உருகிவிட்டார் சாமிநாதன்.

கிளை முறிந்த வேகத்தில் சில வருடங்கள் உருண்டுவிட்டன.

விமலா படிப்பை முடித்திருந்த சமயத்தில் அவனை வரவழைத்தார் சாமிநாதன்.

அருணை தனியே அழைத்துப் பேசினார்.

அதிர்ச்சிதான் மிஞ்சியது.

விமலாவை மணந்து கொண்டு அவளுக்குத் தன்னால் வாழ்வுதர முடியாது என்றான்.

சாமிநாதன் அடக்க முடியாத ஆற்றாமையில் துருவித் துருவி விசாரித்தார்.

தனக்கு இதய நோய் என்று அவன் சொன்ன போது இவர் துடித்துப் போனார்.

“இதைச் சொல்றதுக்கு இப்பத்தான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, வேலையில சேர்ந்த கொஞ்ச நாள் கழிச்சித்தான் அது தெரிஞ்சது. ஒரு சோதனை. இதயம் நல்ல நிலையில இல்லாதப்ப கலியாணம், காட்சி தேவையில்லங்கிற முடிவுக்கு வர வேண்டியதாச்சு… ஆபத்தை விலைக்கு வாங்கக்கூடாது பாருங்க…”

சாமிநாதன் உடைந்து போனார்.

“வருத்தப்படாதீங்க, மாமா விமலாவுக்கு என்னைவிட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்!”

தனக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றார் அவர்.

“விமலா படித்த பெண். நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய அறிவும் திறமையும் அதுக்கு உண்டு. தனியே பேசிப் பார்க்கலாம். மாமா..’

சாமிநாதனை நிறுத்தி நிதானத்துக்குக் கொண்டு வந்தான் அருண்.

விமலா ஒரு பட்டதாரி இளைஞனுக்கு மனைவியானாள். அருணும் சாமிநாதனும் முன் நின்று அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

விமலாவைப் பற்றி அவருக்கு இனி கவலை வேண்டாம் தன்னுடன் வந்து தங்கி விடலாம் என்று சொல்லிப் பார்த்தான். அவர் கேட்க வில்லை.

விமலா கணவனுடன் ஆஸ்திரேலியாவுக்குப் போனவள்தான். தொடர்பில்லை. அவ்வப்போது அருணிடம் இருந்து மட்டும் தகவல்கள் வருவதுண்டு.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவரை அலைக்கழிக்கும் அனாமதேயக் கடிதம் வந்திருக்கிறது.

அருண் ஓர் இளம் பெண்ணுடன் பழகுகிறானாம். நம்பக்கூடிய விஷயமா ? நடக்கக்கூடிய காரியமா? நேரில் பார்க்கப்போகிறார்.

முன்னறிவிப்பு இல்லாமல் சாமிநாதன் எதிரில் வந்து நின்றது அருணை வியப்பில் ஆழ்த்தியது.

“நானே சிங்கப்பூருக்கு வரணும்னு நினைச்சிருந்தேன் மாமா!” என்றான்.

“ஏன், நான் உன்னைப் பாக்க வரக்கூடாதா ?”

“உங்க இடத்துக்கு வர நீங்க யாரை அனுமதி கேக்கணும்?

“அந்த நினைப்பு உனக்கு இருந்தாபோதும், அருண் எங்கே என்னை ஒதுக்கித் தள்ளிட்டியோன்னு ஒவ்வொரு நேரத்திலும் மனசு அடிச்சிக்கிது!’

“நானா அப்படிச் செய்வேன் ? உங்களுக்குத் தெரியாம நான் என்ன செய்திருக்கேன்?”

“அப்படிச் சொல்லி உன்னை ஏமாத்திக்கிறியா, இல்லே, என்னை ஏமாத்தறியா?

“என்ன மாமா இது? என்னென்னமோ பேசறீங்க?” திடுக்கிட்டு அருண் கேட்டான்.

“எல்லாத்தையும் பேசிடலாம்னு தான் வந்திருக்கேன்..”

அவருடைய விசாரணைக்குக் கட்டுப்பட எப்போதுமே தான் தயார் என்று அருண் சொன்னான்.

“விசாரணைக்கு எங்க இடம் இருக்கு ? இதுக்கு உன் பதில் என்ன?” சாமிநாதன் அந்தக் கடிதத்தை அவனிடம் நீட்டினார்.

அதைப் பார்த்ததும் அருண் தலைகுனிந்துவிட்டான்.

“சமாளிப்பு, சாக்குப் போக்கு எதுவும் வேண்டாம்” என்றார்.

“சுத்தி வளைச்சிப் பேசற அளவுக்கு நாம அந்நியர் இல்லே. இதுக்கு நேரடியா பதில் சொன்னா போதும்…”

அருண் மெல்லத் தலை தூக்கினான்.

“இது விலாசம் இல்லாத மொட்டைக் கடிதம் தான். ஆனா இதயம் இல்லாத யாரோ எழுதினதுன்னு நினைச்சி என்னாலே அலட்சியமா இருக்க முடியலே. இது பொய்யாவும் இருக்கலாம். ஆனால் மெய்யாக இருந்தா என்ன ஆகுமோங்கிற கவலையில் தான் ராத்திரி முழுக்க தூங்காம ஓடி வந்திருக்கேன்.”

அருண் பேச்சில்லாமல் அவரைப் பார்த்தான்.

“இதயம் பழுதடைஞ்ச நீ ஒரு பெண்ணுடைய சகவாசத்தினாலே உனக்கு நீயே ஆபத்தைத் தேடிக்கிட்டா என்னாலே தாங்கிக்க முடியாது, அருண்…”

சாமிநாதனின் தழுதழுப்பு அவனுடைய மனதைப் பிசைந்தது.

மூட்டத்தைக் கலைக்க முனைந்தார் அவர்.

இந்தக் கடித விஷயம் பொய்தானே? ‘

‘மாமா, நீங்க என்னை மன்னிக்கணும்?”

“மன்னிப்பா ? அப்படீன்னா ஒரு பெண் சகவாசம் உனக்கு உண்டா?”

அருண் இசைவாகத் தலை அசைத்தான்.

“ஆமாம். கொஞ்ச நாளா.. சந்திப்பு, பேச்சு வார்த்தை..”

“என்ன தீர்மானத்திலே இந்தப் பழக்க வழக்கம்?” என்று படபடப்போடு சாமிநாதன் வினவினார்.

“உங்க ஆலோசனைக்குப் பிறகு தான் அதை முடிவு செய்யணும்!”

அப்ப நான் சொன்ன அந்தப் பெண்ணைக் கல்யாணமே பண்ணிக்குவியா ?”

“உங்க அனுமதிதான் எனக்கு எல்லாம் !” அவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் பின்னலிட்டன.

“நீ இதய நோயாளி.. உன்னால அந்தப் பெண் சுகப்படமாட்டாளே ! அந்தக் கல்யாணம் உனக்கு எமனாயிடக் கூடாதே!”

அவர் வெகுநிதானமாகப் பேசினார்.

“மாமா, மறுபடியும் கேட்டுக்கிறேன்… என்னை நீங்க மன்னிக்கணும்.”

“தப்பு இல்லாதவனுக்கு எதுக்குப்பா மன்னிப்பு ?”

“ஒரு தப்பு நடந்திருக்… சந்தர்ப்ப சூழ்நிலையினால..”

“மறைக்காம சொல்லு, அருண்..” பதற்றத்தோடு அவர் கேட்டார்.

“மாமா, நான் இதயமுள்ளவன். அதனாலே தான் ஒரு பொய்யைச் சொல்லி விமலாவின் கல்யாணத்தை நடத்தி வச்சேன்_”

சாமிநாதன் குழம்பிப் போனார்.

‘”மாமா, எனக்கு எந்தக்குறையும் இல்லே.. அப்பவும், இப்பவும்!”

“அப்ப நீ வேணுமின்னே தான் பொய் சொல்லி விமலாவை நிராகரிச்சே. இல்லையா?”

“இல்லே விமலா தான் என்னை நிராகரிச்சிட்டா ! தன் வழியிலே குறுக்கிடவேண்டாம்னு சொன்ன பிறகு விமலாவை நான் எப்படி அடைய முடியும் ? தனக்கு விருப்பமானவனைத் தேடிக்கிட்டதை ஒரு நாள் விமலா சொன்னதும் நான் முடிவை மாத்திக்கிட்டேன்”.

சாமிநாதன் ஒடுங்கி விட்டார்.

திருமண ஏற்பாட்டுக்காக அவனை அவர் அழைத்திருந்த சமயத்தில் விமலா தனித்துப்பேசினாள். தன் எண்ணத்தை வெளியிட்டாள். அந்த அதிர்ச்சியை அருண் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதாவது காரணம் சொல்லி அப்பாவை நம்ப வைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள்… இதயமுள்ள அவனால் அதை நிராகரிக்கமுடியவில்லை.

எல்லாம் நடந்து போனவை.

“அப்ப இந்தக் கடிதத்தைப் பத்தி?”

“அதை எழுதினவள் தான் நீங்க பார்க்க வேண்டிய பெண்!” என்றான் தலை குனிந்தபடி

“அந்தப் பெண் தான் எனக்கு இனி விமலா.. புறப்படு இப்பவே நம்ம விமலாவைப் பார்க்கணும்…”

அவருடைய அவசரத்தைப் புரிந்துகொண்டு அருண் எழுந்தான்.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *