அழகு மனம்! – ஒரு பக்க கதை





ஓட்டலில் பின்கட்டு… சூப்பர்வைசர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
அண்டா தேய்ப்பது, கரண்ட் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று பெண்ட் நிமிர்த்திக் கொண்டிருந்தார்.
அந்நேரம் அங்கு வந்த சர்வர் பாபு கேட்டான்:
“ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’
அழகேசன் பதில் கூறினான்: “பாபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளமில்லாம சாப்பாடு மட்டும் குடுத்தாப் போதுமுன்னு இவனை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். வேலை எளிதா இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.
நான் எடுக்குற பெண்டுல “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’
அரக்கனாய் பாபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் பாபு.
– தூத்துக்குடி வி. சகிதாமுருகன் (மே 25, 2012)