அழகி
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிர்ச்சியாக இருந்தது. அப்பா, அம்மா எல்லோருக்குமே!
ஆனால் இன்பமான அதிர்ச்சி விஷயம் தெரிந்தால் விமலா அசந்து போய்விடுவாள்.
கல்லூரியிலிருந்து திரும்பியதும் அந்த மகிழ்ச்சியான அதிர்ச்சியை அவள் அனுபவிக்கப்போகிறாள்.
செய்தியை விமலாவிடம் எப்படி ஆரம்பித்து, எப்படியெல்லாம் விவரித்துச் சொல்லவேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் ஒத்திகை பார்க்கிறார்கள்…
ஒரு பெரிய அதிர்ஷ்டம் ஆரவாரம் இல்லாமல் வந்திருக்கிறது.
நேற்றுவரை நினைத்துப் பார்த்திராதது..
அதற்கு முதல் நாள் வரை பசுபதியும் வேதாவும் கவலையுடன் விவாதித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு திடீர் திருப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு மாசத்திலே விமலாவுக்குப் படிப்பு முடியப்போகுது இவ்வளவு காலமா சுவலைப்படாம இருந்தோம்.,பரீட்சை எழுதினப்புறம் நமக்கு பரீட்சை வரப்போகுது..” என்று வேதா முணு முணுத்தாள்.
“அதைப்பத்தி நானும் யோசனை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். வேதா.
விமலா பரீட்சை எழுதி பாஸ் பண்ணிடலாம். ஆனா அவளைக் கரையேத்தற பரீட்சையிலே நான் எங்கே பெயிலாயிடுவேனோ அப்படீன்னு பயந்து செத்துக் கிட்டிருக்கேன்!” என்றார் பசுபதி.
கல்லூரி அழகின்னு பேர். பத்திரிகையிலே பெரிசு பெரிசா படம் போட்டாங்க அழகு விலை போகுமா?
உண்மைதான். இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த கல்லூரி மாணவிகள் அழகிப் போட்டியில் விமலாவைக் கொண்டு போய் தள்ளிவிட்டார்கள் சிநேகிதிகள்.
முடியாது என்று எவ்வளவோ முரண்டு பண்ணினாள்.
“நீ மேடையிலே ஆடப் போறியா. இல்லே பாடப் போறியா? அதெல்லாம் இல்லை. சும்மா போய் நிக்கணும். அவ்வளவுதான், இயற்கையா சிரிச்சாலே போதும். பரிசு உனக்குத் தான் விமலா..!”
“அழகு ராணி கிரீடம் உன் தலைக்காகக் காத்திட்டிருக்கு – பிகு பண்ணாதே விமலா”-
தோழிகள் மாற்றி மாற்றி விமலாவைத் துளைத்து எடுத்துவிட்டார்கள்.
ஒத்துக்கொண்டாள்.
அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை.
விமலா அசாதாரணமான மாணவி. அழகிலும் சரி. படிப்பிலும் சரி. ஒன்றுக்கொன்று போட்டி போடுகிற மாதிரி இருந்தாள். ஒரு முறைக்கு நான்கு முறை பார்க்கத் தூண்டும் வசீகரம் இயற்கையாகவே அவளிடம் அமைந்திருந்தது.
போட்டி நடுவர்களில் ஒருவனான இளம் தொழிலதிபர் பாலகோபால் மேடைக்கு வந்த விமலாவைப் பாராட்டி நாலு வார்த்தை பேசிவிட்டு கிரீடத்தை அணிவித்தான் பரிசுப் பொருட்களை அவளிடம் கொடுத்தான்.
அரங்கில் இடைவிடாத கைதட்டல் புகைப்படக் காரர்கள் விடாமல் பிளாஷ் அடித்தார்கள்.
மறுநாள் சிங்கப்பூர் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமாகியிருந்தது.
அடுத்தடுத்து அவளுடைய பேட்டிகள்.
‘கல்லூரி அழகி விமலா டிவியில் நடிப்பாரா?’ என்ற கேள்வியுடன் ஒரு பேட்டிக் கட்டுரை.
‘விளம்பர மாடல் அழகியாக விமலா மாறக்கூடும்’ என்ற செய்தி.
“பெரிய தலைவலியா போச்சும்மா. தினம் யாராவது பத்திரிகை டி.வின்னு சொல்லிக்கிட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.. நான் பரீட்சைக்குப் படிக்கறதா இவங்க கேள்விக்குப்பதில் சொல்லிக்கிட்டிருக்கிறதான்னு தெரியலே” என்று விமலா அலுத்துக் கொண்டாள்,
வேதாவுக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை.
இத்தனை அழகான, அறிவான பெண்ணைப் பெற் றெடுத்ததை எண்ணி தனக்குள் பூரித்துக் கொண்டிருந்தாள் தாய். தன் மகளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளும் ஒரு அரிய சந்தர்ப்பமாக இந்த நிகழ்ச்சியைக் கருதினார்கள் அம்மாவும், அப்பாவும்.
ஒரு பெரிய திருப்பமாக இது அமையப்போகிறது என்றும் நினைத்தார்கள்.
சொல்லிவைத்த மாதிரி சம்பவங்கள் தொடர்ந்தன.
“நான் டி.வி. படத்தில் நடிக்கணுமாம். ரெண்டு பேர் இன்னிக்கு வந்தாங்க” என்று விமலா ஆரம்பித்தாள்.
“நீ என்னம்மா சொன்னே?”
“பதில் சொல்றதுக்கு முன்னாடி உன்னைத்தாம்மா நினைச்சுக்கிட்டேன் உங்க மகளை நடிக்க அனுப்புங்க அப்படீன்னு யாராச்சும் உங்ககிட்டே வந்து கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்களோ, அந்தப் பதிலைத் தான் சொல்லி அனுப்பினேன்!”
“அப்ப, முடியாதுன்னு சொல்லிட்டியா, விமலா?”
“ஏம்மா இப்படி ஆச்சரியத்தோட கேட்கறே? நான் மறுத்துச் சொல்லியிருக்கக்கூடாதுன்னு நினைக்கறியா? சம்பாத்தியத்தை அநியாயமா நம்ம பெண் எட்டி உதைச்சிட்டாளேன்னு வருத்தமா இருக்கா?”
வேதா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“எங்கே நீ சம்மதிச்சிருப்பியோன்னுதான் யோசிச்சேன்…” இப்படி தினமும் இரண்டொரு நிகழ்ச்சி வர்ணனை.
நேற்று
“அம்மா இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா?” சிரித்த முகத்துடன் விமலா ஆரம்பித்தாள்.
“நாலு மணிக்கு என்னைத் தேடி காலேஜூக்கு கார் வந்தது”.
“யார் அனுப்பினாங்க? எதுக்காகவாம்?”
“ஒரு பெரிய தொழிலதிபரிடமிருந்து.” என்று விமலா சிரித்தாள்.
“அப்ப நடிக்கச் சொல்லியிருக்க மாட்டாங்களே!”
“இதுவும் ஒருவிதத்திலே நடிப்பு மாதிரிதான்.!”
“யார் அந்தப் பெரிய மனிதர்?”
“பெரிய இடத்துப் பிள்ளை.. ஆனால் இளம் வயசுக் காரர்!” என்று மகள் நிறுத்தியபோது வேதா தூண்டினாள்.
“வண்டியனுப்பி தன் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆபீசுக்கு அழைச்சவர் வேறு யாருமில்லே.. பாலகோபால் யாருன்னு தெரியுதாம்மா.”
“பூ! உனக்குக் கிரீடம் சூட்டினவரா? அதான் பேப்பர்லே உங்க ரெண்டு பேர் படமும் வந்ததே! எதுக்காக உன்னை வரவழைச்சார், பாலகோபால்?”
“நீயே சொல்லும்மா பார்க்கலாம்!” என்றாள் அம்மாவிடம்.
வேதாவுக்கு ஒன்றும் புரிபடவில்லை. விழித்தபடி மகளைப் பார்த்தாள்.
“பெரிய வி.ஐ.பி. மரியாதையோட எனக்கு அவர் வரவேற்பு குடுத்தார். தன்னைப் பத்தி ரொம்ப நேரம் பேசினார். பிறகு என்னைப் பற்றிய விசாரணை…!”
“என்னென்ன கேட்டார், விமலா?”
“நான் விரும்பினா இன்னிலேருந்தே அவர் ஆபீஸ்லே வேலையில் சேர்ந்துக்கலாம் அப்படீன்னு சொன்னார்!”
“என்ன வேலை?”
“ஒரு வேலையும் இல்லே. அலங்காரமா ஆபீசுக்குப் போக வர இருக்கலாம். நிறைய சம்பளம் மட்டும் கிடைக்கும்!”
“நீ சொல்றது புதிரா இருக்கு, விமலா!”
“இல்லே.. பாலகோபால் விவரமாவே சொன்னார். அவருடைய கம்பெனி பொருள்களுக்கு ஏராளமா விளம்பரம் செய்யறாங்க.. நான் விளம்பர மாடலா நிரந்தரமாவே இருக்கலாமாம்.’”
“நீ என்னம்மா சொன்னே?”
“யோசிச்சுப்பார்த்தேன். பரீட்சை எழுதி டிகிரி வாங்கினப்புறம் வேலை தேடித்தான் ஆகணும். இல்லையா? வலிய வருகிற வாய்ப்பை ஏன் உதறித் தள்ளணும்னு நினைச்சேன். ஆனால்”
அம்மா மவுனமாக இருந்தாள்.
“வேலை வேண்டாம்னு சொல்லிட்டேன்., மாடலிங் தொழிலுக்கும் நடிப்புத் தொழிலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா. எனக்குத் தோணலை அதனாலேதான் பாலகோபாலுக்கு ‘டாட்டா’ சொல்லிட்டு வந்திட்டேன்.” சிரிப்பும் கலகலப்பும் மாறாமல் விமலா பேசியது வேதாவுக்கு வியப்பைத் தந்தது.
நேற்று நடந்தது அது.
இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.
முற்பகலில் எதிர் பாராத சூழ்நிலையில் பாலகோபால் அனுப்பிய ஆள் இவர்களைத் தேடிவந்தார். விமலா கல்லூரிக்குப் போயிருந்தாள்.
வந்தவரை பசுபதியும் வேதாவும் வரவேற்றார்கள் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கல்யாணத் தரகர்போல, ஆனால் அது தனக்குத் தொழில் அல்ல என்று சொல்லிவிட்டு வந்த விஷயத்தை விவரித்தார்.
இளம் தொழிலதிபரான பாலகோபால் விமலாவை விரும்புகிறாராம். திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாராம்.
வேதாவும் பசுபதியும் வியப்பில் வாயடைத்துப் போயிருந்தார்கள்.
வேலை தருவதாகச் சொல்லி விமலாவை அழைத்த பாலகோபால். அவளை மணந்து கொள்ள விரும்புவது ஆச்சரியந்தான். விமலாவின் அதிர்ஷ்டம் தான்.
யோசிக்க இடமிருந்தது. நேற்று பாலகோபாலைப் புறக்கணித்துவிட்டு வந்திருக்கிறாள் விமலா இன்றைக்கு அவரிடமிருந்து ஆள் வந்திருக்கிறது கல்யாணத் தூது அனுப்பியிருக்கிறார்.
முடிவு சொல்லும்படி கேட்டார் வந்தவர் “யோசிக்க வேண்டியிருக்கு எங்க வசதியைப் பத்தி.”
“அதைப்பத்தி யோசிக்க வேண்டாம்னு சொல்லி விட்டார்.. உங்க பெண்ணை நேத்து நேரில் வரவழைச்சி ஒரு பரீட்சை வெச்சார். அதில் விமலா தேறிட்டது. அப்புறமாத் தான் அவர் இந்த முடிவுக்கு வந்தார்..!
“கல்லூரி அழகிப் போட்டியில் விமலாவுக்குப் பரிசளித்த திலிருந்து பாலகோபாலுக்கு அவளுடைய நினைவுதான். விமலாவும் தானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பரிசளிப்பு நிகழ்ச்சிப் படம் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியை நினைவூட்டுவது போல் இருப்பதாக அவரிடம் பல பேர் சொன்னார்களாம்.
“அடுத்தடுத்த நாட்களில் விமலாவைப் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் பேட்டிகளையும் பாலகோபால் படித்தபோது சற்று சிந்தித்தார். இந்தப் பெண் சினிமா, டிராமா, மாடலிங் என்று தொழிலில் இறங்கி விடுவாளோ என்று கேட்டுக் கொள்ளத் தொடங்கினார். நேரில் அழைத்துப் பேசினால் அவளின் எண்ணத்தைத் தெரிந்து கொண்டு விடலாமே!
“தன் கம்பெனி விளம்பரங்களுக்கு அவள் மாடலாக இருந்து பணி புரிய விருப்பமா என்று கேட்டது வேலை கொடுப்பதற்காக அல்ல. பெரிய சம்பளம் என்றதும் அந்தத தொழிலை ஏற்றுக் கொண்டு விடுகிறாளா, அல்லது புறக்கணிக்கிறாளா என்பதைச் சோதித்துப் பார்த்துவிட விரும்பினார். கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வரும் போது அழகிய இளம் பெண்கள் அவற்றை நழுவ விடுவதில்லை. சில பெண்கள் அவற்றைத் தேடி அலைவதும் உண்டு. விமலா அந்த ரகத்தைச் சேர்ந்த பெண் அல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொண்டுவிட்டதால் அவளையே மணந்து கொள்ள பாலகோபால் விரும்புகிறார்.
விமலாவிடம் ஒரு வார்த்தை பேசி விட்டுத் தகவல் சொல்லி அனுப்புவதாகக் கூறி வந்தவரை அனுப்பி வைத்தார்கள்.
விமலா கல்லூரியிலிருந்து திரும்பும் நேரம்.
வேதாவும், பசுபதியும் மகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
விமலாவும் பாலகோபாலும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள். பத்திரிகையில் வந்த பரிசு அளிப்பு நிகழ்ச்சிப் படம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.
விமலா வந்து விட்டாள். உடை மாற்றிக் கொண்டதும் அம்மா தேனீர் கொடுத்தாள்.
அம்மாவும் அப்பாவும் தன்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது.
விமலாவே திரையை விலக்கினாள்.
“முக்கியமான விஷயம் விமலா..” ஐந்து நிமிஷத்தில் ஒத்திகை பார்த்து வைத்திருந்த விஷயத்தை அரங்கேற்றி விட்டார்கள்.
“எங்களுக்கு இதில் பூரண சம்மதம். விமலா நீ என்ன சொல்றே?”
மவுனமாக அப்பாவையும், அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா.
பிறகு சொன்னாள். “எனக்கு சம்மதம் இல்லே இஷ்டம் இல்லே!”
தூக்கிவாரிப் போட்டது இருவருக்கும்.
“என்னைப் பரீட்சை பண்ணின மாதிரி அவரை நான் எப்படி பரிசோதிக்க முடியும்!” என்றாள்.
“அதுக்கு என்ன அவசியம்? அவர் பெரிய தொழிலதிபர் அழகான இளைஞர்” அப்பா சொன்னார்.
“அதனாலேதான் என்னைப் பரிசோதிச்சுப் பார்க்க அவராலே முடிஞ்சது. அழகியா தேர்ந்தெடுக்கப்பட்ட நான் அடக்க ஒடுக்கமான பெண்ணா இருப்பேனா இல்லே கவர்ச்சியிலே சிக்கி கெட்டழிஞ்சி போவேனாங்கிறதை கண்டு பிடிக்க முயற்சி பண்ணியிருக்கார்”
“நீ சொல்றது புரியிலே”
“கட்டழகியா இருக்கிற ஒருத்தி கற்பையும் கட்டிக் காத்திருப்பாளா அப்படீன்னு பரீட்சை பண்ணிப் பார்த்திருக்கார்” என்றாள்.
“இதெல்லாம் வீண் கற்பனை. விமலா!” மறுபடியும் அப்பா சொன்னார்.
“இதுதான் நிஜம்! பெண்டாட்டியாக வரக்கூடியவள். பத்தினிப் பெண்ணா அழகியா இருக்கணும்னு விரும்பற ஆண். இன்னொருத்தியை நினைக்காதவனா. இன்னொருத்தி யோட பழகியிராதவனா இருக்கணும்னு ஒரு பெண் விரும்பக் கூடாதா? இதை எப்படிக் சோதிக்க முடியும் சொல்லுங்க!”
அப்பாவும் அம்மாவும் மவுனமாக மகளைப் பார்த்தார்கள். “ஒரு பணக்காரத் தொழிலதிபர் கிட்டே என் வாழ்க்கையைப் பணயம் வைக்க நான் விரும்பலே!” என்றாள் விமலா ஆரவாரமில்லாமல்!
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.