அப்பாக்கள் மட்டும் ஏன் இப்படி?





குடும்பம் ஒரு கதம்பம் என்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் அங்கத்தினர்கள் எல்லாரிலும் ஏக வித்தியாசமாய் எல்லா இடங்களிலும் அப்பாக்கள்!. அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?!

‘புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல்.,’ ‘பொறுமை சிறிதும் இல்லாமல்’ வில்லனைப் போலவே வீடு முழுக்க வலம் வருவதும் கஷ்டம் தருவதும் ஒன்றும் புரியவில்லை! காரணம் கண்டுபிடிக்கணும்…!
இது, ஒரே ஒரு ஆசைதான். உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியவில்லை! எனக்கு உள்ளுக்குள் ஓயாமல் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது அந்த ஆசை எனும் மன ஆழியின் அலை.
அம்மா என்பவள் சமைக்கிறாள், சமைப்பதோடு மட்டுமில்லாமல் ஆசையாய் ஊட்டியும் அழகு பார்க்கிறாள், அன்பைப் பொழிகிறாள்.
அட, நேரில் இல்லாட்டாலும் பரவாயில்லை., நிஜத்தில் இல்லாட்டாலும் பரவாயில்லை, விளம்பரங்களிலாவது ஒருவித்யாசமாகவாவது பெற்ற பிள்ளைகளுக்குச் சோறூட்டி நடித்தாவது இருக்கிறார்களா இந்த அப்பாக்கள்!?
மனசு ஏங்குகிறது!! என்றாவது எங்காவது ஒருநாள் ஒரு கைப்பிடி…
‘பருப்பு., நெய்., அப்பளம் ., காய், சாதம்னு சொல்லி பிசைந்து காக்காய்க்கு ஒரு உருண்டை, குருவிக்கு ஒரு உருண்டை, கோழிக்கு ஒரு உருண்டை, உனக்கு ஒரு உருண்டைன்னு சொல்லி, ஊருக்கெல்லாம் ஊட்டி உணவளித்து, மிச்சச் சோறைக் கட்டிக்கிட்டு போறவழி எந்த எந்த வழின்னு.. கிச்சுக்கிச்சாவது மூட்டிச் சிரிக்க வைத்ததாவதுண்டா?’ இல்லையே?! அதையும் அம்மாக்களே செய்கிறார்கள். இல்லை, பாவம் பாட்டிகள்தான் பகிர்ந்தளிக்கிறார்கள்.
ஏன் இப்படி..? அப்பாக்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது இலக்கியத்துலயும் இதயத்திலயும்?!
‘அருளது சகதியாகும் இல்லையா?’
எந்தக் குடும்பத்து மூலமாக இரக்கத்தைப் பரப்ப இறைவன் நினைக்கிறானோ அந்தக் குடும்பத்தில்தான் பெண் வாரீசுகள் அதிகம் இருக்கும். பொறக்கும்! இது ஆண்டவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம், ஆணுக்குக்கூடப் புரியாத புதிர்!
அப்படீன்னா ஆண்கள் இருக்கிற குடும்பம்?னு ஆதங்கமாய்க் கேட்கிறீர்களா?!
அருளப் பெண்கள், அதை அனுபவித்து உணர மட்டுமே ஆண்கள்!