தெரு நாயை துன்புறுத்த வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 7,023 
 

கோவிந்தாபுரம் என்னும் சிற்றூர், அந்த ஊரில் பெரும்பான்மையான மக்கள்

விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு ஏற்றவாறு அந்த ஊரில் பெரிய ஆறு ஒன்றும், நிறைய வாய்க்கால்களும் உண்டு. வாய்க்கால்களில் ஓடும் நீரில் விவசாய்மும், ஆற்றில் ஓடும் தண்ணீரில் குடிதண்ணீர், மற்றும் பல தேவைகளை அங்குள்ள மக்கள் பூர்த்தி செய்து கொள்வர்.

அந்த ஊரில் சிவனேசன் என்ன்னும் விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவியும், பூபதி என்னும் ஒரு பையனும், பூங்க்கொடி என்னும் பெண்ணும் உண்டு. பூங்கொடி இரண்டு வருட குழந்தை. பூபதி ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்தான். சிவனேசன்.

அவர்கள் ஊரில் குடியிருந்தாலும், காலை எழுந்தவுடன் தோட்டம் சென்று விடுவார். அவர் மனைவி பூபதியை பள்ளிக்கு அனுப்பி விட்டு, சிவனேசனுக்கு காலை சாப்பாடும், பாப்பாவான பூங்கொடியையும் கையில் எடுத்துக்கொண்டு அதன் பின் தோட்டம் செல்வார்.

பூபதி நல்ல பையன், ஒழுங்காக பள்ளிக்கு சென்று கொண்டிருப்பான். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. இவன் செல்லும் வழியில் தெரு நாயோ, பூனைகளோ இருந்தால் போதும், உடனே கல்லை எடுத்து வீசி அதனை காயப்படுத்துவான்.

ஒரு சில நாய்கள் எதிர்த்தாலும் இவன் எறியும் கல்லை கண்டு பயந்து போய் ஓடி விடும்.

இதனால் இவன் வருகிறான் என்றால் அந்த தெருவில் இருக்கும் நாய் பூனைகள் ஓடி ஒளிந்து கொள்ளும்.இவனுக்கு அதை பார்க்க ஒரே மகிழ்ச்சியாக இருக்கும்.

இவன் அம்மாவோ பூங்கொடிக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது அங்கு இருக்கும் ஒன்றிரண்டு நாய்களுக்கும் ஒரு கைப்பிடி சோறு போடுவாள். அதனால் தினமும் பூங்கொடிக்கு சாப்பாடு ஊட்டும்போது இரண்டு மூன்று நாய்கள் வந்து விடும். அம்மா ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பாடு போடுவாள். அதை பார்த்து பூங்க்கொடியும் கை கொட்டி சிரித்து அம்மாவிடம் சாப்பாடு வாங்கிக்கொள்வாள்.நாய்களுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கும் எங்கே பூபதி அங்கு வந்து விடுவானோ என்று. அவன் அங்கு வந்தால் முதலில் கல்லைத்தான் எடுப்பான். அவன் அம்மாவே ஒரு முறை இவனை கண்டித்துள்ளார். வேண்டாம், அதனை இம்சிக்காதே, அது பாட்டுக்கு அமைதியாக இருக்கும்போது அதனை ஏன் துன்புறுத்துகிறாய் என்று பல முறை சொல்லி விட்டார்கள்.இவன் அதை கேட்பதாக தெரியவில்லை.

இவர்கள் ஊரின் பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு சர்க்கஸ் கம்பெனி ஒன்று வந்தது.

பத்து நாள் சர்க்கஸ் நடக்கப்போவதாக அறிவித்தார்கள். அந்த ஊரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று சர்க்கஸை கண்டு களித்தனர். சிவனேசன் குடும்பமும் ஒரு நாள் மாலை, பூபதியுடனும், பூங்கொடியுடனும் அந்த சர்க்கஸை கண்டு களித்து வந்தனர். பூபதிக்கு ஒரே சந்தோசம், அங்குள்ள மிருகங்கள் செய்த சர்க்கஸ் வேலைகள்தான் அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு முதலை வாய்க்குள் தலையை விட்டு எடுக்கும் காட்சி அவனுக்கு பார்க்கவே திகிலாக இருந்தது. யானை சைக்கிள் ஓட்டியது அவனுக்கு வேடிக்கையாக இருந்த்து. வரும்போது அம்மாவிடமும், அப்பாவிடமும் அதை பற்றியே பேசிக்கொண்டு வந்தான்.

இரண்டு நாட்கள் ஓடியிருக்கும், பூபதிக்கு அன்று பள்ளி விடுமுறை, நண்பர்களுடன் விளையாட போய்விட்டான். அவன் அம்மா அப்பாவை தோட்டத்துக்கு அனுப்பிவிட்டு இவர்கள் துவைக்க போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டும், பூங்கொடியை இடுப்பில் வைத்துக்கொண்டும் துவைப்பதற்காக ஆற்றுக்கு சென்றாள்.இவளை இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றதை கண்ட ஒரு சில நாய்கள் இவர்களை தொடர்ந்து நடந்து வந்தன.

பூங்கொடியை வெட்ட வெளி இடத்தில் உட்கார வைத்து விட்டு ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடும் இடத்தில் நின்று கொண்டு, அங்குள்ள கல்லில் துணிகளை தோய்க்க ஆரம்பித்தாள். வேலை மும்முரத்தில் நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

ஏதோ நினைத்தவள் தலையை மேலே தூக்கி பார்க்க அவளுக்கு இதயமே நின்று விட்டது போல் இருந்தது. காரணம் முதலை ஒன்று கரையில் இருந்த பூங்கொடியின் அருகில் நின்று அவளை கவ்வி பிடிப்பதற்கு தயாராக இருந்தது.

“ஐயோ என் புள்ளை” என்று ஓலமிட்டு அழுதவாறு குழந்தையை நோக்கி ஓடி வரவும், முதலை பூங்க்கொடியை பிடிப்பதற்கு வாயை கொண்டு செல்லவும், எங்கிருந்தோ பாய்ந்து வந்த இரண்டு நாய்கள், முதலையின் முகத்திலேயே விழுந்தன. முதலை திடீரென வந்த இந்த தாக்குதலால் நிலை குலைந்தது. அதற்குள் சத்தம் கேட்டு ஓடி வந்த அங்குள்ளவர்கள், முதலில் குழந்தையை துக்கி ஓடி விட்டனர்.

அந்த இரு நாய்களுக்கும் முதலையால காயம் ஏற்பட்டாலும் முதலையை சுற்றி .

வளைத்து குலைக்க ஆரம்பித்து விட்டன. அதற்குள் மேலும் பல நாய்கள் வந்து விட முதலை எங்கும் நகர முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற ஆரம்பித்து விட்டது.

இதற்குள் சர்க்கஸில் இருந்த முதலை எங்கோ தப்பித்து விட்டது என்று, பக்கத்து டவுனில் தங்கியிருந்த சர்க்கஸ்க்கரார்கள் அங்கு வர முதலை பிடிபட்டு விட்டது.

அந்த ஊர்க்காரர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவர்கள் முதலையை தூக்கி சென்று விட்டனர்.

பூங்கொடியின் அம்மா குழந்தையை அணைத்துக்கொண்டு, அந்த நாய்களை நன்றியுடன் பார்த்தாள். நாய்களுக்கு முதலையின் பல் பட்டு ஒரு சில காயங்கள் ஆகியிருந்தன. இருந்தாலும் துணிச்சலுடன் சண்டையிட்டு தன் குழந்தையை காப்பாறியிருக்கிறதல்லவா.

இப்பொழுதெல்லாம் பூபதி அந்த தெருவில் இருக்கும் நாய்களை கல்லால் அடிப்பதோ துன்புறுத்துவதோ கிடையாது. காயம் பட்ட நாய்கள் இவன் அருகில் வந்து ஒட்டி உறவாடுகிறது. காரணம் டவுனில் இருந்த மிருக வைத்தியரிடம் அப்பாவுடன் சென்று இந்த நாய்களுக்கு மருந்து வாங்கி வந்து இவனே போட்டு குணப்படுத்தி இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *