கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 8,591 
 

‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’

பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்:

‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’

‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’

‘ஓ! நன்றாகத் தெரியும். உன்னோட கூடப் படித்தவன் தானே? இருவரும் எல்கேஜியிலிருந்து தோழர்கள் ஆயிற்றே!’

‘ஆமாம் பாட்டி! பத்தாம் வகுப்பு வரை நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம் தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போது நானும் அவனும் வேறு வேறு ஸ்கூலில் சேர்ந்துவிட்டோம். நடுவில் ஒரே ஒரு முறை அவனை ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் பார்த்தேன். பிறகு அவனுடன் தொடர்பு விட்டே போய்விட்டது. இப்போது சமூக வலைத்தளம் மூலம் அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தாலும், நேரில் பார்க்கும் சந்தோஷம் வருமா?’

அவனுடைய இந்த வயதில் நட்பு என்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றுதான். நானும் இந்த வயதினை தாண்டி வந்தவள் ஆகையால் எனக்கும் அவனது உற்சாகம் புரிந்தது. எனக்கும் பள்ளிப்பருவத்தில் நிறைய தோழிகள் உண்டு. ‘இவளைச் சுற்றி எப்பவும் பத்துபேர்! பைத்தியத்தை சுற்றி பத்துப்பேர் என்பார்களே, அதுபோல..!’ என்று என் அக்கா என் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார் கூறும் அளவிற்கு பள்ளியில் தோழிகள். எல்லாம் பள்ளிவரை தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பரைச் சுற்றிக் கொண்டு புரசைவாக்கம் ‘மீனா இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்’ போனேன் – டைப் ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் கற்றுக் கொள்ள. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்ஸி மற்றும் டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் தகுதி இருந்தால் ஸ்டெனோக்ராபர் வேலை எளிதாகக் கிடைத்துவிடும். எனக்கும் கிடைத்தது. பள்ளித் தோழிகள் எல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்தே போனார்கள்.

என்னுடைய பதின்மவயதுத் தோழிகள் என்று இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பேர்கள்தான். ஜெயா மற்றும் ஜெயந்தி. ஜெயா உடனான நட்பு மறைந்ததே இல்லை. இருவரும் ஒரே பள்ளி. என்னுடன் அவளும் மீ.இ.கா –விற்கு கையில் வெள்ளைப் பேப்பருடன் வந்தவள். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. அதனால் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது. எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஆழமான புரிதலினால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதில்லை என்றாலும் கூட மனதிற்குள் ஒரு நெருக்கம் இருந்தது. பல மாதங்கள் பேச மாட்டோம்; சந்தித்துக் கொள்ள மாட்டோம். ஆனாலும் எப்போது தொலைபேசியில் பேசினாலும், ஏதோ நேற்றுத்தான் பேசி முடித்தது போல இயல்பாக தொடரும் எங்கள் பேச்சு. ஒருவரையொருவர் குற்றம் சொல்லவே மாட்டோம். அவரவர் வீட்டு விசேஷங்களில் இருவரும் நிச்சயம் சந்தித்து கொள்வோம்.

ஜெயந்தி எனது பேருந்துத் தோழி. அவளது அலுவலகத்தைத் தாண்டி என் அலுவலகம். காலையில் நான் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். மாலை வேளைகளில் மட்டும் இருவரும் ஒரே பஸ்ஸில் வருவோம். இருவருக்குமே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம். நான் எந்த பேருந்தில் வருகிறேன் என்று பார்த்துவிட்டு அதில் ஏறுவாள் அவள். அவள் ஏறும் நொடியிலிருந்து பேச ஆரம்பிப்போம். புரசைவாக்கம் தாசப்ரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே அவரவர் இல்லங்களுக்குச் செல்வோம். முதலில் எங்கள் வீடு வரும். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். விடுமுறை நாட்களில் இருவரும் கங்காதரேச்வரர் கோவில், புரசைவாக்கம் டேங்க் என்று சுற்றிக் கொண்டே பேசுவோம்; பேசிக்கொண்டே சுற்றுவோம். எனது திருமணத்திற்குப் பிறகு நான் புரசைவாக்கத்திலிருந்து அசோக் நகர் போய்விட்டதால் ஜெயந்தியுடனான என் நட்பு புரசைவாக்கத்திலேயே தங்கி விட்டது.

ஆனால் என்ன அதிசயம் எங்கள் நட்பில் என்றால் 33 வருடங்களுக்குப் பிறகு எனது எழுத்தின் மூலம் அவளை மறுபடியும் சந்தித்தேன். எனது வலைத்தளத்திற்கு யதேச்சையாக வந்து படித்துவிட்டு, ‘புரசைவாக்கம் ரஞ்சனி தானே நீ?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். விட்டுப் போன நட்பை தொலைபேசி மூலம் தொடர்ந்தோம். நேரிலும் சந்தித்தோம்.

நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவள் அப்போது பெங்களூரில் இருந்தாள். அவளுக்கு சென்னை புதிதல்ல என்றாலும் அவள் என் வீடு வரும் வரை எனக்குப் பொறுமையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சென்றேன். அவள் வரும் சதாப்தி ரயில் சென்ட்ரலில் நுழைந்ததுமே என் பரபரப்பு அதிகமானது. அவள் இறங்கும் வரை காத்திருக்காமல் அவள் சொல்லியிருந்த கம்பார்ட்மெண்டில் நானே ஏறிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. கடைசி நிமிடத்தில் பிரயாணத்தை ரத்து செய்துவிட்டாளோ, இல்லை வேறு ஏதாவது காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டதோ என்று மனது அலைபாயத் தொடங்கியது.

ரயிலில் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது அவள் அடுத்த கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. ‘ஜெயந்தி!’ என்று கூவியவாறே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். அப்பா! அவளைப் பார்த்துவிட்டேன்! என்ன ஒரு ஆசுவாசம்! எங்களது 33 வருடப் பிரிவையும் அந்த ஒரே அணைப்பில் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பது போல இருவரும் அந்த அணைப்பின் இறுக்கத்தில் நெகிழ்ந்து போயிருந்தோம்.

‘என்ன பாட்டி! பழைய நினைவுகளா?’ பேரனின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். குளித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தான்.

சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்டா!’ என்றேன்.

‘கரணை அழைத்துக் கொண்டு மெரீனா பீச் போகவேண்டும்; கன்னிமாரா போக வேண்டும். அவனும் என்னை மாதிரி தான் நிறைய புத்தகங்கள் படிப்பான்……!’

என்னைப்போலவே பேரனும் தனது தோழனின் நினைவிலேயே திளைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.

‘டிபன் சாப்பிட வா முதலில். எப்போது அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாய்?’

‘அவன் அசோக் நகரில் இருக்கிறான். நான் மதிய உணவிற்கு அவனை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்….’

‘அசோக் நகரிலா?’

‘ஆமாம் பாட்டி? அசோக் நகர் பில்லர் அருகில் தான் அவனது அலுவலகம் இருக்கிறது……..’

நான் யோசனையுடன், ‘ஓ!……….’ என்றேன்.

‘என்ன பாட்டி! அசோக் நகரில் உன் தோழிகள் யாராவது இருக்கிறார்களா? மறுபடியும் பழைய நினைவுகளுக்குள் போய்விட்டாயா? சரி, சாயங்காலம் நான் வரும்வரை மலரும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிரு. நான் என் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வருகிறேன்…’ என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் உற்சாகத்துடன் வெளியேறினான் தேஜஸ்.

திருமணம் ஆகி நான் வந்து சேர்ந்த இடம் அசோக் நகர். அங்கு எதிர்பாராதவிதமாக அம்முடுவை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என் அக்காவின் மூலம் தான் விமலா மாமி, சதாசிவம் மாமா குடும்பம் அசோக்நகரில் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. மாமா இல்லை. மாமி மட்டும் அம்முடுவுடன் இருக்கிறாள் என்று என் அக்கா சொன்னாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சரியாக அக்காவிற்கும் தெரியவில்லை.

கணவருடன் வெளியே போகும்போதெல்லாம் என் கண்கள் என் பால்யகால சிநேகிதியைத் தேடும். திருமணத்திற்குப் பிறகு நான் நிறைய மாறிவிட்டேன். அது போலவே அவளும் மாறியிருக்கலாம், இல்லையா? இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நிச்சயம் தெரியும் என்று எனக்குள் ஒரு அசையாத நம்பிக்கை!

விமலா மாமியின் இரண்டாவது பெண் தான் அம்முடு என்கிற கல்யாணி. நாங்களும் அவர்களும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் பக்கத்துப் பக்கத்து போர்ஷனில் பல வருடங்கள் இருந்தோம். அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள் ஒரு பிள்ளை; நாங்களும் நால்வர் – இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நாங்கள் எல்லோருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் எட்டு பேரும் அடித்த லூட்டிகள் இப்போது நினைத்தாலும் இனிப்பவை.

அதுவும் அம்முடுவை யாராலும் மறக்க முடியாது. பிற்காலத்தில் சரிதாவின் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அம்முடு நினைவுதான் வரும். பெரிய கண்கள். குண்டுக் கன்னங்கள். படபடவென்று வாய் ஓயாத பேச்சு. சரிதா போலவே சற்று இரட்டைநாடி அம்முடுவும். சுருட்டைத் தலைமுடி. சுருட்டைத் தலைமுடி என்றால் பொதுவாக குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அம்முடுவிற்கு முழங்காலுக்குக் கீழ் தொங்கும். அவளுக்குத் தலைவாரிப் பின்னுவது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுவும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தால் என் அம்மா மணிக்கணக்கில் அவளது கூந்தலை நிதானமாக இழைய இழைய வாரி, வாரி சிக்கெடுத்து மணிமணியாகப் பின்னி விடுவாள்.

அந்தக் கூந்தலுக்காகவே சிலப்பதிகாரம் நாடகத்தில் அவள் கண்ணகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆ! இந்த நாடகம் நாங்கள் போட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. வருடாவருடம் கோடை விடுமுறையில் எங்களைக் கட்டி மேய்ப்பது எங்கள் பெற்றோர்களுக்குப் பெரும் சவால். அதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை சதாசிவம் மாமா வீட்டில் இருந்த சமயம். நாங்கள் போடும் சத்தம் அவரை சற்றுக்கூட ஓய்வு எடுக்கமுடியாமல் செய்துவிட்டது. வந்து ஒரு சத்தம் போட்டார் பாருங்கள். நாங்கள் எல்லோரும் சகல நாடியும் அடங்கி உட்கார்ந்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அவரே எங்களை அழைத்தார். ‘இப்படி நேரத்தை வீணாக்கலாமா? ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்களேன்’ என்றார். நாங்கள் எல்லோரும் அவரே ஒரு ஐடியா கொடுக்கட்டும் என்று பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தோம். இந்தக் காலம் போல சம்மர் கேம்ப், பாட்டு வகுப்பு, நடன வகுப்பு என்பதெல்லாம் அப்போது அபூர்வம். வீட்டிற்குள்ளேயே ரகளை செய்துகொண்டிருப்போம். மாமா சற்று நேர யோசனைக்குப் பிறகு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொன்னார். மாமாவே கலைத்துறையைச் சார்ந்தவர் தான். அதுவும் திரைப்படத்துறை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடகம் போடுங்களேன் என்று சொன்னதுதான் தாமதம் ‘ஓ’ என்று சந்தோஷக் கூச்சலிட்டோம்.

என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் இந்த நாடகம் இருந்தது தான். புதிதாக நாடகம் எழுதுவது என்பது எங்கள் யாருக்குமே கை வராத கலை! என் அக்காவும், அம்முடுவின் அக்கா லல்லு என்கிற லலிதாவும் அப்போது நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்கும் காட்சி மட்டும் இருந்தது பாடப்புத்தகத்தில்.

யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் நடிப்பது என்பதும் பெரிய சண்டையுடன் முடிவு செய்யப்பட்டது. எனக்கு கண்ணகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர். நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘ச்சே! நீ ரொம்ப சின்னவடி….!’ என்று ஒருமனதாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். எனக்கு ஒரே கோவம். என் அண்ணா என்னை சமாதானப்படுத்தினான். ‘நீ பாண்டிய ராணியாக நடி. ராணின்னா கிரீடம் வைச்சுக்கலாம்; கால்ல சிலம்பு போட்டுக்கலாம். அம்மாவோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம். கண்ணகி பாரு தலையை விரிச்சுப் போட்டுண்டு வரணும். நீ அழகா ராணியா நடி. சூப்பரா இருக்கும்’ என்றான். அந்த சமாதானத்தை என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அம்முடுவிடமிருந்து கண்ணகி பாத்திரத்தை வாங்க முடியாது என்று தெரிந்தது. கிடைத்த வேஷத்தை ஒத்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அன்றிலிருந்து அம்முடுவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். பேசுவதையும் நிறுத்தினேன். அந்தக் கோபதாபங்களை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. பாண்டிய ராஜாவாக அம்முடுவின் தம்பி குமார்.

எல்லோரும் வசனங்களை நெட்டுரு போடத்துவங்கினோம். புத்தகத்தைப் பார்த்து அவரவர் பகுதிகளை எழுதிக்கொண்டோம். அம்முடு என்னிடத்தில் வந்து ‘உன் கையெழுத்து நன்றாக இருக்குடி. எனக்கு என் வசனங்களை எழுதிக்கொடுடி’ என்று சமாதானக்கொடி காண்பித்தாள். நானும் என் கோபத்தை மறந்து அவளுக்காக இன்னும் அழகாக எழுதிக் கொடுத்தேன்.

என் அம்மா தான் இயக்குனர். எல்லோரும் வசனங்களை நெட்டுரு பண்ண ஒருவாரம் ஆயிற்று. அதிலும் அம்முடுவின் வசனங்கள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அவள் பேசுவதைப் பார்த்த போது அப்பாடி, நான் தப்பித்தேன் என்று நினைத்துக் கொள்வேன். என் அம்மாவிடம் எல்லோரும் வசனங்களை ஒப்பித்துக் காண்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா வசனங்களும் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. நடிப்பு தான் வரவில்லை. அதுவும் முகத்தில் கோபம் வரவேண்டும்; கையை இப்படி நீட்டிப் பேசவேண்டும். தலையை திருப்பி அவ்வப்போது பார்வையாளர்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அம்மா எங்களுக்குப் பயிற்சி கொடுத்த வண்ணம் இருந்தாள். முகத்தில் பாவம் வந்தால் வசனம் தடைப்பட்டுப் போகும். பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து செய்து பழகியதால், வசனங்களை மடமடவென்று சொல்லிக்கொண்டே போவது எல்லோருக்குமே எளிதாக இருந்தது பாவங்களுடன் பேசுவது கடினமாக இருந்தது.

எங்களில் அம்முடுவுக்குத்தான் கடுமையான ஒத்திகை. வாயில் நுழையாத வசனங்களை முகத்தில் பாவத்துடன் பேசுவதற்கு மறுபடி மறுபடி பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு கையில் சிலம்பை ஏந்தியிருப்பது போல கையை வைத்துக்கொண்டு பேசும்படி எங்கள் அம்மா சொன்னாள். கடைசி காட்சியில் சிலம்பை ஓங்கி தரையில் அடிக்க வேண்டும். ஒருநாள் அழுது கொண்டே ‘எனக்கு கண்ணகி பாத்திரம் வேண்டாம்……!’ என்று பின்வாங்கினாள். என் அம்மாவும், அவளது அம்மாவும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தைரியமூட்டி மறுபடியும் அவளைத் தயார் செய்தனர். வசனங்களைப் பேசிப்பேசி அம்முடுவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. சுக்குக் கஷாயம், அதைத்தவிர டாக்டரிடம் போய் மருந்து என்று வாங்கி வந்து வேளாவேளைக்கு மருந்துகளைக் கொடுத்து அவளைச் சரி செய்தார்கள் அம்மாவும் விமலா மாமியும். அவளுக்கு இரண்டு நாட்கள் முழு ஓய்வும் கொடுக்கப்பட்டது.

ஒருவழியாக அந்த நல்ல நாளும் வந்தது. எங்கள் வீட்டுக் கூடம் தான் அரங்கு. சதாசிவம் மாமா தலைமை வகித்தார். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா அழகாக ஒரு மேடையைத் தயாரித்தார். எங்களுக்கு ஒப்பனையும் செய்துவிட்டார். கிரீடம், சிலம்பு, ராஜாவின் உடைவாள் எல்லாம் மாமாவின் கைத்திறமையால் வெகு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. எந்தவிதத் தடங்கல்களும் இல்லாமல் எல்லோருமே அவரவர் பங்கைச் சரியாகச் செய்தோம். பாண்டிய ராஜா தான் நடுநடுவில் வசனங்களை மறந்து போனார். எனக்கும் அந்த வசனங்கள் தெரியுமாதலால் நான் அவ்வப்போது எடுத்துக் கொடுத்தேன். ராஜா சமாளித்தார்.

கண்ணகியாகவே மாறியிருந்தாள் அம்முடு. அபாரமாக நடித்தாள். கடைசி காட்சியில் அம்முடு நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டாள். அனைவரின் கைத்தட்டலும் அவளை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று சொல்லி கீழே விழுந்து உயிரை விட, ராணியும் அழுது கொண்டே உயிரை விட நாடகம் சுபமாக முடிந்தது.

இந்த நாடகத்தினால் இன்னொரு பலனும் கிடைத்தது. அத்தனை நாட்கள் ஒருவருடன் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த நானும் அம்முடுவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனோம். எங்களுக்கிடையே புதுவிதப் புரிதல் ஏற்பட்டிருந்தது. நாடகத்திற்காக உதவி செய்ததை அதன் பிறகும் தொடர்ந்தோம். அடுத்த ஆண்டு என்ன நாடகம் போடலாம் என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டை புரசைவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டு வந்துவிடவே, எங்கள் நட்பு திருவல்லிக்கேணியுடன் முடிந்துவிட்டது.

எத்தனை நேரம் இப்படியே பழைய நினைவுகளுடன் உட்கார்ந்திருந்தேனோ, வாசலில் மணி அடிக்கவே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். கூரியர் வந்திருந்தது. வாங்கி வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். மறுபடியும் அம்முடு மனதில் வந்து நின்றாள்.

அசோக்நகரில் அவளை எங்காவது பார்ப்பேன் என்ற என் எண்ணம் பலித்தே விட்டது. ஒருநாள் 11 வது அவென்யூவில் இருக்கும் பழமுதிர்சோலைக்கு கணவருடன் சென்றிருந்தேன். காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எங்கள் எதிரில் இரண்டு பெண்மணிகள் வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் வயது இருந்த பெண்ணைப் பார்த்ததும் மனதில் ஒரு மின்னல். அவளும் என்னைப் பார்த்தாள். நான் சட்டென்று, ‘ஏய்! நீ அம்முடு தானே?’ என்று கேட்ட அதே நொடி அவளும், ‘நீ ரஞ்சனி தானே?’ என்றாள்.

என் மனம் முழுக்க மகிழ்ச்சி பொங்க அவள் கைகளைப் பிடித்தேன். ‘எப்படி இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? நீ இங்கதான் இருக்கேன்னு என் அக்கா ரமா சொன்னாள். என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு நினைத்தேன். அதேபோல இப்போது பார்த்துவிட்டேன்’. பேசிக்கொண்டே போன என்னை ஏறஇறங்கப் பார்த்தாள். ‘என்ன நீ இப்படி குண்டாயிட்டே?’ என்றாள் முகத்தை சுளித்தபடியே. ஒரு கணம் மனம் சட்டென்று வாடியது. அம்முடு தன் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்து, ‘சித்தி! இவ ரஞ்சனி. திருவல்லிக்கேணி கானாபாக் லேனில் எங்களுடன் குடியிருந்தாளே கமலம் மாமி, நினைவிருக்கா? அந்த மாமியின் பெண்’.

அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது, அது விமலா மாமியின் தங்கை மாதவி என்று. ‘அட! மாதவி சித்தியா? அம்முடுவைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நீங்களும் அசோக் நகரில் தான் இருக்கிறீர்களா?’ என்றேன். அம்முடு என்னைப் பேசவிடாமல், ‘பாருங்களேன், எப்படிப் பெருத்துப் போயிருக்கிறாள்! சே! என்ன இப்படி ஆயிட்ட?’ என்றாள் மறுபடியும்.

‘அதைவிடு, நீ எப்படி இருக்கிறாய்? அம்மா சௌக்கியமா? அதையெல்லாம் சொல்லு’ என்றேன். அவளது பேச்சில் மனம் புண்பட்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வந்துவிடாமல் சமாளித்தேன்.

‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ஏன் இப்படி ஆயிட்ட? என்னால நம்பவே முடியல……அதுவும் இத்தனை குண்டா……!’

பக்கத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என் கையைப் பிடித்தார். ‘பேசுவதற்கு வேறு விஷயமில்லை என்றால் கிளம்பலாம், வா!’ அப்போதுதான் அவர் என்னுடன் இருந்ததே நினைவில் வந்தது. பேச்சை மாற்ற அம்முடுவை அவருக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

‘இவ…….இவ…….தான் என் சின்ன வயதுத் தோழி அம்முடு. நான் சொல்வேனே திருவல்லிக்கேணியில் நாடகம் எல்லாம் போடுவோம்னு…….’ என்றவளை மேலே பேசவிடாமல் தரதரவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

அம்முடு என்னைக் கூப்பிடுவாள் என்று அந்த நிலையிலும் ஒரு சின்ன ஆசை என் மனதில் தோன்றியதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

வீடு வரும் வரை இருவரும் மௌனமாகவே வந்தோம். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பலநாட்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். மிகுந்த ஆவலுடன், எத்தனை விஷயங்கள் அவளுடன் பேச வேண்டும் என்று இந்த சந்திப்பிற்காகக் காத்திருந்தேன்! அவளுக்கு என்னைப் போன்ற ஆவலாதிகள் இருந்திருக்காதோ?

ஏன் அவள் என் உருவத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்? நான் பெருத்துவிட்டது உண்மைதான். ஆனால் நட்பு என்பது இதையெல்லாம் கடந்தது இல்லையோ? ஜெயாவும், ஜெயந்தியும் என் உடல் பருமன் பற்றி பேசுவார்கள்.. ஆனால் உற்ற தோழிகளாக என் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக அறிவுரை கூறுவார்கள். சென்ற தடவை ஜெயந்தி சென்னை வந்திருந்த போது எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்குப் போய் ஒருமணி நேரம் நடந்துவிட்டு வந்தோம். ‘தினமும் இதுபோல நடைப்பயிற்சி செய். உடம்பிற்கு நல்லது’ என்று சொன்னாளே தவிர என் உருவத்தை பற்றி ஒருநாளும் என் மனம் புண்படப் பேசியதில்லை.

ஒருவரது உருவத்தைக் கேலிசெய்வது தவறு என்று அறியாதவளா அம்முடு? அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது இப்படிப் பேசுவார்களா? எனக்கு நினைக்க நினைக்க இன்றும் கூட மனம் ஆறவில்லை. சிலர் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன் என்று சொல்லுவார்கள். அம்முடுவும் பட்பட்டென்று பேசுபவள் தான். இருக்கட்டுமே. என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.

பலவருடங்கள் கழித்து சந்திக்கும்போது என் உருவம் தான் அவள் கண்ணுக்குத் தெரிந்ததோ? எங்களிடையே உண்மையான நட்பு இருப்பதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேனோ? எங்களிடையே அகநக நட்பு என்றைக்குமே இருக்கவில்லையோ? வெறும் முகநக நட்பு தான் நிலவி வந்ததோ?

என் அலைபேசி மணி என் நினைவுகளைக் கலைத்தது. என் பேரன் தேஜஸ் தான் கூப்பிடுகிறான். அவனக்கும் கரண் பரத்வாஜுக்கும் இடையேயான நட்பு எப்படிப் பட்டதாக இருக்கிறதோ, தெரியவில்லை. பாவம் மிகவும் சின்னவன். இருவரது நட்பும் அகநக நட்பாகவே இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் அலைபேசியை எடுத்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *