கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 4,153 
 

பூஜை அறையில் உட்கார்ந்திருக்கும்போது வாசலில் நிழலாடியதை உணர்ந்தி திரும்பி பார்த்த ஜெகநாதன் மனைவியை கண்டதும் குரலை காட்டாமல் புருவத்தை உயர்த்தினார்.

வெளியில் அந்த காண்ட்ராக்டர் பொன்னுசாமி வந்திருக்காரு.

உட்கார சொல்.

குரலில் மென்மையை காட்டி விட்டு மணியடிக்க ஆரம்பித்தார். அதற்குள் மனம் பொன்னுசாமியிடம் போய் விட்டது.

மறந்தே விட்டேன் காலையில் பொன்னுசாமியை வர சொன்னது. நான் சொன்ன தொகை கொண்டு வந்திருப்பானா? மனசு கணக்கு போட்டது. பானுவுக்கு காலேஜ் போக ஒரு மாருதி கேட்டாள், இந்த முறை வாங்கி கொடுத்து விட வேண்டும். இந்த பணம் எப்படி வந்தது என்று கேள்வி வருமே? யார் அந்த ஜூனியர் இஞ்சீனியர் ஏதாவது பெட்டிசன் போடுவான், சமாளித்துக்கொள்ளலாம், சட்டென்று தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஞாபகம் வரவும் கன்னத்தில் போட்டுக்கொண்டு கற்பூர ஆரத்தி தட்டை வைத்தார்.

தோளில் போட்டிருந்த துண்டை சரி செய்து கொண்டே வந்தவர், பொன்னுசாமி அப்பாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் மனசுக்குள் அதிர்ந்து போனார். இந்த ஆள் எதுக்கு அப்பாவுடன் பேசிக்கிட்டிருக்கான். நான் நேத்து மிரட்டுனதை சொல்லியிருப்பானோ, அவ்வளவுதான் பெரிசு என்னை பார்வையிலேயே கொன்னுடுமே. மனதுக்குள் பதட்டப்பட்டாலும், வெளிக்காட்டாமல் பொன்னுசாமி குரல் கொடுக்க ஐயா..வ்லுக்கென்று நிமிர்ந்த பொன்னுசாமி குடு குடுவென தனது உடம்பை தூக்க் முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.

வா என்று உள் அறைக்கு கூட்டிச்சென்றவர், நான் கேட்டது கொண்டு வந்திருக்கையா? அடித்தொண்டையில் முன் ஹாலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் காதில் விழாதவாறு கேட்டார். கிழவனுக்கு கூர்மையான செவி.

ஐயா கொண்டு வந்திருக்கேன், செக்கா கொடுத்திடலாமா? கேட்டவனை முறைத்தார் என்னைய மாட்டிவிடறதுன்னு முடிவு பண்ணிட்டியா? இந்த செக்கை பாங்கில மாத்தினா வேற வினையே வேண்டாம், அடிக்குரலில் கோபமாய் சீறினார்.

இல்லீங்க நான் பணமாவே இன்னைக்கு சாயங்காலம் கொண்டு வந்து கொடுத்திடறேன். சொன்னவனை அசூயையாய் பார்த்து சரி சரி இன்னைக்கு கொடுத்துட்டியின்னா நாளைக்கு மதியம் உன் பைலை குளோஸ் பண்ணி கொடுத்துடறேன்.

“சரிங்க” பவ்யமாய் கை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றான். அவனை அனுப்பி விட்டு வெளியே வந்த என்னை அப்பா உட்கார்ந்த நிலையிலேயே வெறித்து பார்ப்பது போல் தெரிந்தது. எதுக்கு இப்படி வெறிச்சுன்னு பாக்கறாரு?

மனதுக்குள் இந்த கேள்வி எழுந்தாலும், அவர் கிடக்கறாரு, அந்த காலத்து மனுசன் நியாயம் தர்மம் எல்லாம் பார்க்கறவரு, இதெல்லாம் இந்த காலத்துக்கு உதவுமா?

அவரின் பார்வையில் இருந்து தப்பிக்க மனைவியை கூப்பிடுவது போல உள்ளே நுழைந்து கொண்டார்.

ஜெகநாதன் உள்ளறைக்குள் நுழைந்ததை அறியாத மனைவி வெளியே வந்தவள் மாமனார் ஏதோ சொல்லிக்கொண்டிருந்த்தை காதில் வாங்கியவாறு மீண்டும் உள்ளே வந்தாள், ஜெகநாதனை கண்டவுடன் “என்னங்க உங்க அப்பா நீ செய்யறது நல்லாயில்லே” அப்படீன்னு புலம்பிகிட்டிருக்காரு.

அவர் கிடக்கறாரு, விடு, காபி கொடு, ஆபிசுக்கு நேரமாச்சு, அவளை சமையலறைக்கு அனுப்பி விட்டு தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். இன்றைக்கு போய் அந்த பொன்னுசாமி பைல்ல கையெழுத்து போட்டு வச்சிடணும், கையில பணம் வாங்கின பின்னாடி கையில கொடுத்துடலாம் முடிவு செய்து கொண்டவர் அலுவலக கார் வந்து நிற்கவும் அதில் ஏறினார்.

அப்பாவை நினைக்க நினைக்க அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது, அவர் அந்த காலத்தில் நீதி நேர்மையாய் அரசாங்கத்தில் வேலை செய்தார் என்றால் இந்த காலத்தில் அதெல்லாம் நடக்குமா? இப்பொழுது இந்தளவுக்கு சொந்த கார், பங்களா எல்லா வசதிகளும் எப்படி வந்தது. இவர் முப்பது வருசம் வேலை செய்து என்ன கிடைத்தது, ஒரு ஓட்டு வீடு, அதுவும் அவர் அப்பா சம்பாத்தித்து கட்டிய வீடு. நல்ல வேளை நான் அரசாங்க தேவு எழுதி பாஸ் பண்ணி இப்ப அதிகாரியாகவும் வந்த்துனால் ஓட்டு வீடு பங்களாவாச்சு, வீட்டு முன்னாடி கார் நின்னுச்சு, பையனுக்கு,புள்ளையையும் நல்ல காலேஜூல படிக்க வைக்க முடியுது. இதெல்லாம் எப்படி முடியும். இவருந்தான் என்னைய படிக்க வச்சாரு?எங்கே கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல, நான் நல்லா படிச்சதுனால முடிஞ்சுது. இல்லையினா?

கிரீச்…ச்பிரேக் பிடிக்கவும் சட்டென அப்பாவை பற்றிய நினைவுகள் கலைந்தது.

சாவு கிராக்கி, டிரைவர் யாரையோ திட்டிக்கொண்டு மீண்டும் வண்டியை எடுத்தார்.

ஆபிஸ் வாசலில் வண்டி நிற்கவும் இறங்கி உள்ளே சென்றார்.

டேபிளின் மேல் இருந்த பொண்ணுசாமியின் கட்டிட காண்ட் ராக்ட் பைலை எடுத்தவர் கையெழுத்தை போட்டார். செகரட்டரியை கூப்பிட்டு பைலை அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வை, சொல்லிக்கொண்டிருக்கும்போதே போன் மணி கிண் கிணிக்க போனை எடுத்தவர் மனைவியின் பதட்டமான குரலை கேட்டவர் அதிர்ந்தார். மாமாவுக்கு திடீருன்னு பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்துட்டாரு, சீக்கிரம் வாங்க. வந்துகிட்டே இருக்கேன், ராமுவை கூப்பிட்டு உடனே டாக்ஸியை பிடிக்க சொல்லு, பர பரவென சொல்லிக்கொண்டே ஆபிசை விட்டு வெளீயே வந்தார்.

சுவாரசியமாய் பீடி புகைத்துக்கொண்டிருந்த டிரைவர், இவர் வேகமாய் வருவதை பார்த்தவுடன் பீடியை வீசிவிட்டு ஓடி வந்தான். சீக்கிரம் வண்டியை வீட்டுக்கு எடுப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்.

இரண்டு நாட்களாகி விட்டன. இப்பொழுது பரவாயில்லை, தெளிவாகிவிட்டார்.

நாளை வீட்டுக்கு கூட்டிப்போகலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். நல்ல வேளை அப்பா பிழைத்துக்கொண்டார். மனதுக்குள் கடவுளை நினைத்துக்கொண்டவர், ஆபிசுக்கு போன் அடித்தார். நாளை வருவதாக சொன்னார்.

அங்கிருந்து வந்த செய்தி அவரை அதிர்ச்சியாக்கி விட்டது. சார் பொன்னுசாமி எல்லாத்தையும் மாட்டி விட்டு விட்டான். நல்ல வேளை அவனுடைய பைல்ல கையெழுத்து போட்டு அக்கவுண்ட்ஸ்சுக்கு அனுப்பிச்சுட்டீங்க, இல்லையின்னா அன்னைக்கு உங்களை மாட்ட வைக்கிறதுக்கு பணத்தோட ஆபிசுக்கு வந்திருக்கான். நீங்க இல்லை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லையின்னு போயிட்டீங்க. பைலை கையெழுத்து போடாம இழுத்தடிச்சு வச்சிருக்காரு அப்படீன்னு கம்பிளெயிண்ட் பண்ணியிருந்தான். இங்க பாத்தா அவன் பைல் அக்கவுண்ட்ஸ்சுல இருந்துச்சு.

ஏய்யா அவரு கையெழுத்து போட்டு அக்கவுண்ட்சுல இருக்குது, நீ என்னடான்னா அவரு டேபிளிலே வச்சிருக்காரு அப்படீன்னு கம்பிளெயிண்ட் பண்ணியிருக்கே.

அங்க வந்த விஜிலென்ஸ் இவனை சத்தம் போட்டாங்க.

இவருக்கு அப்பாவின் நினைவு சட்டென வந்தது. இதெல்லாம் நல்லதுக்கில்லை அவர் சொல்லிக்கொண்டிருந்தது இப்பொழுது தெய்வ குரலாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *