பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 6,108 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். – கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை . இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது போல் இருக்கிறதே தவிர நடந்ததாக தோன்றவில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மூங்கில் குத்துகள், புளிய மரங்கள், இருபுறமும் வழிந்தோடும் காவிரி, இந்தக் கிராமத்தை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? இந்த மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என்று கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தானா? தினமும் அவன் வருவான் என்று எதிர்பார்ப்பதில் நாள் முழுவதும் கழிந்து விடுகிறது. இரவு ஒரு மணி வரை வழி மேல் விழிவைப்பது அடர்ந்த தூக்கத்திற்கு காரணமாகி விடுகிறது. ஆனாலும் கத்தியால் குத்தி எழுப்பியது போல விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் விசாரங்களுக்காகவே திறந்து கொள்கிறது. ஆற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதில் சலிக்கிறதேயில்லை. அவன் வருவானா? என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. இந்த ஆற்றுக்கும், இந்த நீருக்கும் வேறு வேலையே இல்லை என்பது போல.

லோச்சனாவுக்கு அவனை எட்டு வயதிலிருந்தே பழக்கம். எட்டு வயதிலேயே தெரியும். இவனைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறோம், கலியாணம் தள்ளிக் கொண்டே போனது. யாரும் கவலைப்படவில்லை. கவலைப்பட என்ன இருக்கிறது. அவன் அவளை விரும்பி தேடித் தேடி அவளைச் சுற்றி வந்தபோது யாராவது தடுத்தார்களா? அப்பா, அம்மா, மாமா, மாமி யாராவது தப்பு என்று சொன்னார்களா? பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே அவன் கன்னத்தைப் பிடித்து நிமிண்டுவான். வாத்தியார்கள் கூட தடுத்ததில்லை. தெருவுக்கேத் தெரியும் இது ரெண்டும் தான் “இது” ஆகப் போகிறது என்று ஊருக்குத் தெரியும் லோச்சனா யார் என்று உலகத்துக்கே தெரியும் அவன் எப்படி என்று. எல்லாமே மங்களகரமாய் எப்போதும் போலத்தான் நடந்தது. கல்லூரியில் படிக்கும்போது கூட தஞ்சாவூருக்கு ரெட்டை மாட்டு வண்டியில் மோளை மாடுகள் குதிரைகளாய் பாய அவள் கல்லூரிக் கேட்டைத் தாண்டும் போது ராகவன் என்று மாணவர்கள் அவளுக்காகவே போடுகிற கூச்சல் வண்டிக்குள் அலையடிக்கும். பித்தளை கொப்பிகள் மினுங்க ரதம் போல் அவள் வண்டி, வரும்போது காலேஜு ஓரமாக கார்பார்க்கிங் செட்டில் நிற்கும். ராகவனின் நீல நிற அம்பாஸிடர் அவளைப் பார்த்து விழிக்கும். அவளுக்கு எத்தனை சுகமான நாட்கள் அது. எதையும் அவள் விரும்பியதேயில்லை. காரணம் அவளுக்கு எதுவும் வேண்டாம். அதனாலேயே அவள் எதையும் யாரிடமும் கேட்டதேயில்லை. ராணிக்கு யார் எதை தர முடியும்? அவள் எதை விரும்ப வேண்டும்? லோச்சனாவுக்கு என்ன இல்லை? அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் சுற்றிலும் பெண்கள் அடேயப்பா! என்று கண்களை அகல விரித்து வாய்மூடி கொள்வதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். லோச்சனாவுக்கு ஆரம்பத்தில் இது புரியாது. ஏன் இப்படி எல்லாரும் தன்னைக் கண்டு ஆச்சரியப்பட்டு காலில் விழுந்தும் விழாத குறையாக வணங்கி புரண்டு விழுகிறார்கள் என்பதும் லோச்சனாவுக்குப் புரிவதேயில்லை. வெள்ளைத்தோலும், சிவப்பு சர்மமும் மஞ்சுள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய் தெரியும் பட்டுப்புடவையின் சலசலப்பும், மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செறித்துப் போன விஷயம்.

காவிரியாற்றில் கொள்ளிடத்திற்கு மேற்கே வெகு தூரத்தில் ஒரு கண் திறந்ததுபோல ஒரு பசுமையான தீவுக் கிராமம்தான் இப்போது அவளுக்கு உறவு. அந்த கிராமம் அஞ்சினி. கிராமத்திலிருந்து பார்த்தால் இருபுறமும் கடல் போல் வழிவது புரியுது. அந்தக் காவிரி அவளைப் பார்த்து ஆசைப்படாது, கல்யாணம் செய்து கொள்ளாது. காலில் புரண்டு நக்காது, நகைப் பூட்டிக் கேட்காது. அலனைப் போல விட்டுவிட்டுப் போய் விடாது. போனாலும் வராது. வந்தாலும் போனது போல் இருக்காது. அவளும் இவற்றை எல்லாம் ஒத்துக் கொண்டுதானே இங்கு வந்தாள். இருபுறமும் மணல் மேடுகள், மணல் மேடுகளில் அவனை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய பெரிய புளியமரங்கள். திரும்பிப் பார்த்தால் தூரத்தில் புள்ளியாகத் தெரியும் அஞ்சினி கிராமம். புள்ளிப் புள்ளியாகத் தெரியும் நெட்லிங்க மரங்கள். இரவில் கோடிக்கணக்கில் கோடி கோடியாய் ஒளி கொட்டும் மின்மினிப் பூச்சிகள். அவளைத் தவிர அந்தக் காவிரித் தீவில் வேறு யாருமே இல்லையோ என்று எண்ண வைக்கும். அவள் காலையிலிருந்து என்னதான் செய்கிறாள்? என்னதான் செய்ய வேண்டும்? அந்த சின்னஞ்சிறு வீடு சுற்றிலும் பசுமையாக கிளுவை வேலி, வேலியில் படர்ந்து கிடக்கும் தூதுவளைக் கொடிகள். அவைகளைப் பின்னிக் கொண்டு கோவைக் கொடிகள், ஒரு பசுமையான சுவரையே உருவாக்கியிருந்த கொடி ரோஜா என்று அவளது உழைப்பை வாங்கிக் கொண்டு சுற்றிலும் தோட்டம் மண்டிக் கிடந்தது.

கொடிகள் காய்களை தொங்க விட்டிருந்தன. மாமரங்களில் மாங்கனிகள் மரத்திலேயே பழுத்து கனத்தன. வேர்ப் பலா சட்டி சட்டியாய் மலைமலையாய் காய்த்துக் கிடந்தன. அந்த வீட்டிற்கு அவளே வெள்ளையடித்தாள். திருவையாற்றுச் சந்தையில் வாங்கி வந்த இதமான டிஸ்டம்பர் கலர்களில் அவளே அந்த வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டினாள். ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜன்னல்களுக்கெல்லாம் அவளே வர்ணங்கள் பூசினாள். துணைக்கு கூட அவள் யாரையும் கூப்பிட்டுக் கொள்ளவில்லை…

ஒருமுறை அவன் வந்தான். “இன்னும் எவ்வளவு நாள் தான் இஞ்சயே இருக்கணும்” என்று கேட்டாள் லோச்சனா. அவன் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தான். பிறகு “உன்னப் பாத்தா எல்லாருக்கும் பயமாருக்கு! எல்லாரும் வாண்டாம் வாண்டாங்கிறாங்க! இப்படியே மூன்று வருஷம் ஆகிப்போச்சு. எனக்கு தெரியாது லோச்சனா? நீ வேற பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படீன்னு சொல்லிகிட்டு உடம்பெல்லாம் வர்ணத்தெ மாறி மாறிப் பூசிக்கிறெ! உங்கம்மாவே சொல்றா ‘அவளுக்கு குணமாயிட்டதா? இல்லையா?ன்னு எப்படிடா தெரியும்? ஒடம்பு, கை, காலு, மொகம் எல்லாம் தாமரைப் பூவாவும், எலையாவும், காயாவும் இப்படி வரைஞ்சு வச்சுக்குமா ஒரு பொண்ணு!??’ அப்படிங்கிறா. நீ என்னடான்னா அவா சொல்ற மாதிரி இருக்கவும் மாட்டேங்கிறே?’ ஒனக்குப் பிடிச்சிருந்தது போயிடுத்துன்னு எல்லாரும் நம்பினோம். அதுக்கு நாஞ் சொல்றபடியாவுது நீ கேட்கணும். இந்தப் படம் வரையிற சனியனை விட்டொழின்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. அஞ்சினியில் குடியானத் தெருவிலருந்து அக்ரஹாரம் வரைக்கும் எல்லாரும் ஒனக்குப் பைத்தியமங்கிறா. ‘யாராவது இப்டி ஊருக்கு வெளியே மூங்கித் தோப்புக்குள்ள சுடுகாட்டுக்குப் பக்கத்துல தனியாப் போய் ஒரு பொண்ணு தானே வீடு கட்டிண்டு இருப்பாளோ?!’ அப்படீன்னு பேசாதவளேயில்ல. எல்லாரும் என்னதான் பேசறா? நீயா தான் லெப்ரசி ஆஸ்பத்திரிலருந்து வந்து அஞ்சு வருஷமா இதே மாதிரிதான் இருக்கே. உனக்கு எல்லாரு மாதிரியும் இருக்கணும்னு ஆசையே கிடையாதுன்னு நல்லாவே தெரியும். ஏதோ பெரிய தியாகின்னு ஒனக்கு நெனப்பு! என்னையானும் நினைச்சுப் பாக்கிறியா? நீ ஓங் குழந்தையை என்னிக்காணும் பார்க்கணும்னு எங்கிட்ட கேட்டுருக்கியா? நானா அழைச்சுண்டு வந்தாக் கூட யாரோ அன்னியப் பெண்ணப் பார்க்கிற மாதிரி பாக்குற….” என்றெல்லாம் ராகவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். அவன் பேச்சுகூட அவளுக்கு கசந்தது. அவன் முகத்தைப் பார்த்துக் காறித் துப்பினால் என்ன, என்று கூடத் தோன்றியது. எட்டு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைப் போலத்தான் இப்பமும் ராஜா மாதிரி இருக்கிறான் ராகவன் – கை நிறைய சம்பாதிக்கிறான். ஜாக்கிரதையாய் சேமிக்கிறான். ஊர் மெச்ச, உலகம் மெச்ச குழந்தை வளர்க்கிறான். குழந்தை! அவள் பெற்றெடுத்தக் குழந்தையா அது!? பிறந்ததுமே அவளுக்குத் தோலெல்லாம் ஒரு நமைச்சலை உருவாக்கியது அந்தக் குழந்தைதான். அந்த அரிப்பு அவளைத் தொட்ட போதே அவளுக்கு இருந்ததுதான். குழந்தை காய்ச்சல் அனல் பறந்த போது டாக்டர்கள் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டாமென்று சொன்னார்கள். முதல் நாளிலேயே அவளுக்கும், அவள் குழந்தைக்கும் அரிப்பும், நமைச்சலும் உடம்பெல்லாம் பூரித்து விட்டது. சிவப்பு சிவப்பாய் தடிப்புகள் உடலெங்கும் பூரி இருந்தது. கோடு கோடாக வெட்டு விழுந்தது போல் தடிப்புகள், சினைப்புகள், தஞ்சை, மதராஸ், டெல்லி எல்லா டாக்டர்களும் “மதர் அலர்ஜி” என்றார்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே முதல் திரையாக விழுந்தது.

அவளுக்கு ‘மதர் அலர்ஜி’ என்று கேள்விப்பட்ட போது எல்லோரும் வியப்பால் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்! குழந்தைக்கு பேரு என்ன வைக்கிறதுன்னு கேட்டப்போ அவ சொன்னா ‘மைத்ரேயி’. ஆனால் பேரு யாருக்கும் புடிக்கல. அவா எல்லாரும் சுசீலான்னு கூப்பிட்டா. ராகவன் மகாலட்சுமின்னு சுப்பிட்டான். ஸ்கூல்ல அவளுக்குப் பேரு அஞ்சனா. எப்பவும் அம்மாகிட்ட வரமாட்டா. வரக்கூடாது. அம்மாவுக்கு உடம்பெல்லாம் தடிச்சு தடிச்சு போய்டும். புள்ளிப் புள்ளியா சினைப்பு தட்டிடும். ஆனாலும் குழந்தை அம்மான்னு கத்தின்டே ஓடி வந்து கட்டிக்காதோ? மைத்ரேயின்னு வாய் நிறைய கூப்பிடணும்’ன்னு லோச்சனாவுக்கு முன்னல்லாம் தவிக்கும். தப்பித் தவறி மேல் பட்டுட்டா என்னத் தொடாதடீ மா எனக்கு “மதர் அலர்ஜி” அப்புறம் செறுமி செறுமிண்டு மூச்சு வாங்கும் அப்படீன்னு சொல்லும் குழந்தை !

ராகவன் என்ன ப்ராடெக்ட்னு லோச்சனாவுக்கு எப்பவும் தெரிந்ததேயில்லை. எப்பப் பார்த்தாலும் கட்டில்ல போட்டு படுக்க வச்சு வியாதி, வியாதின்னு மூலையில் உக்காத்தி வச்சப்போதான் ராணிக்கு தான் ராணி இல்லைன்னு புரிஞ்சுது. பால் முத்து மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப்புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கலில் பிழிந்து விடும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ளிருந்து பயம் வெளியே போய்க் கொண்டிருந்தது. மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக்கட்டி பாலை முறித்த போது அவளுக்கு உயிரே போனது போல் ஆயிற்று. கொல்லைப்புறத்து இடிந்த சுவர் செங்கல்லைப் பார்க்கும் போதெல்லாம் அது கதறுவது கேட்டது. லோச்சனாவுக்கு மிச்சமிருந்தது வெட்கம் ஒன்றுதான். ராகவன் ஒரு நாள் கேட்டான், “உனக்கு எதுக்கடி கொழந்தை?” பேச முடியவில்லை அவளால். எப்போதும் சுவற்றோரமாகத் திரும்பிப் படுத்துக் கிடப்பாள். எவ்வளவு நேரம் தூங்க முடியும்! யாரும் அவளை வேலை செய்ய விடுவதில்லை. சுவற்றை நகத்தால் கீறி சுவற்றுக் காரையை உதிர்த்துக் கொண்டிருந்தாள் லோச்சனா. காரை உதிர்ந்த இடம் ராகவனைப் பயமுறுத்தியது.

“என்னடீது? செவுத்துல ரெண்டு கண்ணு வரைஞ்சு வச்சுருக்கிறே? எப்படி முழிக்குதுன்னு பாரேன்!” என்றான். அப்போது தான் லோச்சனம் தான் பண்ணிக் கொண்டிருந்த வேலை என்னவென்று பார்த்தாள். உண்மை தான்! சுவற்றிலிருந்து இரண்டு காளியின் கண்கள் அவளையே நோக்கி இமைச் சுடர் இரத்தம் சிந்த மூடி மூடி விழித்தன. அவளா இதை சுவற்றில் கீறினாள் !! ஆச்சரியம்! வர்ணங்கள் யார் பூசியது! அந்த இரண்டு விழிகளும் கண்ணீரில் நனைந்திருந்தன. இப்போது அந்த விழிகள் அவளையேப் பார்த்து மூடி மூடி, விழித்தன. அந்தக் கண்களுக்குள் அந்த உயிர் லோச்சனத்துக்கு வியப்பாய் இருந்தது. அன்றைக்குத் தான் லோச்சனத்துக்கு உயிர் வந்தது. படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள். உடலெங்கும் தடிப்பு தடிப்பாய் வரும் அலர்ஜி. வெள்ளையாய் திட்டுத் திட்டாய் ரோஸ் நிறத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தீவு தீவாக, படலம் படலமாக, கைகளிலும், கால்களிலும் தொழுநோய் அவளை சீராட்டத் தொடங்கியது. திருவையாற்றுக்குப் போய் குப்பி குப்பியாக கலர்கள் வாங்கி வந்தாள். உடல் முழுதும் ஃபிரஷை வர்ணத்தில் தோய்த்து கைகளிலும், கால்களிலும் இலைகளும், கனிகளுமாய் வரைந்து தள்ளினாள், நகங்களின் விளிம்புகளிலெல்லாம் பொன் வர்ணங்கள் தீட்டி மறைத்தாள். விரல்கள் நகங்களோடு சுருங்கத் தொடங்கின. அக்ரஹாரத்திலும், வெளியிலும் பரவத் தொடங்கியது. கையிலும், கால்களிலும் மட்டுமில்லாமல் நெற்றியிலும், தலைமுடிக்குள்ளும் வெள்ளையாக சிவந்த நிறத்தில் ‘குஷ்டம் பரவியபோது, எல்லோரும் அருவருப்பில் முகம் சுளித்தார்கள். ஊரும், உலகமும் அவளைத் தள்ளி வைக்கத் தொடங்கியது – மாமியாரும், மருமக்களும், நாத்தனாரும் மதனிகளும் வேறு வேறு வீடுகளைத் தேடி ஒதுங்கி ஓடிப்போனார்கள். அப்பாவும், அம்மாவும் அருவருத்து எட்டி நின்றார்கள். ராகவன் கிட்டே வராதது மட்டுமல்ல எட்டிக்கூட நிற்க மறுத்தான். சாப்பாட்டுக்கு அலுமினிய தட்டாயிற்று. குடிக்க இரும்புக் குவளை வந்தது. படுக்க பிரப்பம்பாயுமாயிற்று. கொல்லைக்கு வெளியே குடிசையுமாயிற்று. இதெல்லாம் கூட ராணி ஏற்பாடு தான். யாரும் அவளைத் தூர போகச் சொல்லவில்லை. அவர்கள் தான் தூரப் போனார்கள். ராணி அவர்களை விரட்டிக்கொண்டுதான் இருந்தாள். மைத்ரேயி மட்டும் “எப்போம்மா ஒனக்கு சரியாவும் ” என்று எப்போதாவது கேட்கும். அவளுக்கு இருந்தது கித்தான் துணி மட்டும் தான் மீதமாக. கொல்லைப்புறம் கிடந்த சாக்குகள் கித்தான்களா மாறின. கித்தான்களில் வெள்ளை , கருப்பு, நீல வர்ணங்களில் விபரீதமான காளியின் உருவங்களை லோச்சனத்திற்கு யாரும் வரையச்சொல்லித் தரவில்லை. டாக்டர்கள் ‘குஷ்டரோகம்’ தொற்று நோய் அல்ல என்றார்கள். கர்ம வியாதி இல்லை என்றார்கள். ஊசிகள் போட்டார்கள். தொடர்ந்து ராஜ வைத்தியம் ஆனாலும் லோச்சனம் தன் கை, கால்களில் வரைந்து கொண்டு, இலைகளும், பூக்களும், கனிகளுமாய் திரிவதை நிறுத்தவே இல்லை. அவள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்குள் போய் வந்து கொண்டிருந்தாள். தொடர்ந்து ராகவனோ , வேறு யாருமோ , துணையில்லாமல் அவள் மட்டும் தனியே போய் வர ஆரம்பித்தாள். இனம் காண முடியாத சுமையைத் தாங்கி அவள் கித்தான்களில் அவன் கற்பனைகளின் கசங்கலையும் ஒன்றாக இறக்கி வைத்தாள். உடலின் வண்ணங்கள், மினுமினுப்புகள், வீக்கங்கள், யாவும் படிப்படியாய் வடியத் தொடங்கின. அந்த ஆஸ்பத்திரியின் ‘மதர்ஸ் சுப்பீரியர் கேட்டார் “இன்னும் ஏம்மா ஒடம்பெல்லாம் வர்ணத்தைப் பூசிக்கிறே ? Don’t hide yourself behind the colours, its only an illusion ஓனக்கு நீ செய்றது புரியல்லியா?” “புரியலம்மா …” என்றாள் லோச்சனா. அவளது ஓவியங்கள் இரண்டை பார்த்த அந்த அம்மாள் அசந்து போனார்கள். oh! Now I understand you. Don’t hide yourself, Don’t hide yourself, behind yourself. come out and enjoy உனக்கு நேர்ந்திருக்கிறது அநீதி இல்லையம்மா, உன்னுடைய Society தான் உன்னை ஒதுக்கி இருக்கு. நீ தான் அதை ஒதுக்கிட்டீயே?” என்றார்கள். அன்றிலிருந்து அவள் கித்தான்கள் அவளோடு பேசத் தொடங்கின. லோச்சனாவின் காளிகள் கலகலவென்று சிரித்து அவளுடன் கைகோர்ந்து விளையாடிக் களித்தன. அவளது பிறக்காத குழந்தைகள் அவள் கர்ப்பப்பையை அறுத்துக் கொண்டு, அவளை ஓடி வந்து தழுவிக் கொண்டு, அவள் மார்புகளில் ரத்தத்தைப் பாய்ச்சின. நரம்புகளில் உயிரைப் பெய்தன.

லோச்சனா தன்னந்தனியே புறப்பட்டாள்! ராகவன் அம்மா, மாமியார், அப்பா, மன்னி, குழந்தை, மச்சினர்கள் எல்லாம் தடுத்துக்கூட புறப்பட்டுவிட்டாள். வானம், கனவு போல் சிரித்த கர்ஜித்த ஒரு மாலை வேளையில் அஞ்சினி என்னும் பூர்வீக அக்ரஹாரத்துக்கு காவிரியாற்றுக்கப்பாலிருந்த அந்தத் தீவுப் பிரதேசத்துக்குப் புறப்பட்டு விட்டாள். ராகவன் அவளைத் தடுக்க முயன்ற போதும் சிரித்தாள் ராணி!

தவளைகள் சப்தம் அலை அலையாய் கிளம்பிய அஞ்சினியின் காவிரியை அந்த ராத்திரி வேளையில், பரிசலில் தாண்டிப் போக, மூட்டையோடு அவள் இறங்கிய போது “அய்யிரு வூட்டுப் பொண்ணு இப்படி தனியா வந்திருக்குப் பாருங்கடா”ன்னு குசுகுசுத்துவிட்டு நின்னானுவ பரிசல்காரப் பயலுவோ!

“அஞ்சினிக்குப் போவணும்பா.”

“ஆத்துல இழுப்பு சாஸ்த்தியா இருக்குங்க! தண்ணி வேற ஏறுது”

“அக்கரைக்கி அக்ரஹாரத்துக்குப் போவணும்! எத்தனையானாலும் தாரேன்!”

“காசுக்கென்னம்மா?! வெள்ளைய்யர் வூட்டுப் பொண்ணு தானம்மா நீங்க!? தண்ணி சாஸ்த்தியா போய்கிட்டு இருக்கு! கொறையட்டும்! ராத்திரியெல்லாம் கோரையாத்து பரிசத் தொறையிலியே கொட்டு கொட்டுன்னு முழிச்சிட்டு ஒக்காந்திருந்ததுல நேரம் போனது தெரியவேல்லியா? கெழக்க செவப்பா பூதம் ஏந்திரிச்சிது! வெள்ளையா, ஆறு, கடல், மலையா உருண்டு உருண்டு வருது. அஞ்சினி புளியமரமெல்லாம் தண்ணீல நிக்கிதுவ. பரிசக்காரனுவ பரிசலை களத்தி போட்டு மேட்டுல உக்காந்திருக்கானுவோ? காலை வெய்யில்ல ஆத்து வெள்ளத்துலெ எங்கிருந்த குடிசை கூரையெல்லாம் பிச்சிகிட்டு மிதந்துகிட்டு வருது. சாமான்களையெல்லாம் தலையில தூக்கிகிட்டு எதையும் லட்சியம் பண்ணாமே அஞ்சினியை நோக்கி எறங்கப்போன அவளை பரிசக்காரனுவோ கூப்பாடு போட்டு தடுத்தானுவோ! ‘வெள்ளான அய்யரு வூட்டுப் பொண்ணு எங்கேடா’ன்னு நாளைக்கு அய்யர் கேட்டா நாங்க என்னா பதிலு சொல்றது?”ன்னு கத்திக்கிட்டே அவ கூடவே வந்து குதிச் சானுவ. ராணிக்கிட்டப் பேச முடியுமா? லோச்சனா நெனைச்சா நெனைச்சதுதான்! ராகவன் சொன்னான். “உன்னப் பாத்து எல்லாரும் பயப்படுறான்னு – பொறப்புட்டுட்டாள் லோச்சனா, அம்மா, அப்பா எல்லாம் போகாதடி போகாதடீன்னு பின்னாலேயே ஓடி வந்தார்கள். “மெட்ராசுக்குப் போய் Specialist கிட்ட போயி ஒசத்தி வைத்தியம் பாத்துக்கலாம். அஞ்சினிக்கல்லாம் போகவேண்டாம். என்ன இருக்குன்னு அங்கேப்போறே? யார் இருக்கா ஒன்னெ அங்கப் பாத்துக்க? தன்னந் தனியா பேய் மாதிரி அஞ்ச புளியமரத்துல ஏற வேண்டியது தான். சொல்றத கேளு”ன்னு அப்பாக்கூட சொன்னார். ராணிக்கு சொல்லச் சொல்ல மூர்க்கம் தான் ஏறித்து. அவளுக்கு மனசிலே தான் வியாதி. சொல்லப்போனால் எந்த வியாதியும் மனசுலதான் தொடங்குது. உடம்புல தான் முடியிறது. உடம்பு லோச்சனாகிட்ட பேசும்போது அவளால் என்ன பண்ணமுடியும்? அவள் நெஞ்செல்லாம் நோயாக நிரம்பியிருந்தவள் அவள் மகள் மைத்ரேயி! உள்ளுக்குள் மட்டுமில்லாமல் அவள் உடம்பெல்லாம் சிவப்பும், வெள்ளையுமாய் பரவியிருந்தன. அது நோய் இல்லையென்று யாருக்குப் புரியப்போவுது. தன்னந்தனியோ லோச்சனா மைத்ரேயிவுடன் தான் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு கரிய பரிசல்காரர்களிடையே தலையில், தோள்களில் மூட்டைகளுடன் நீந்துவது ஒரு சிரமமாகத் தான் இருந்தது. சென்னையிலோ, டெல்லியிலோ ஏதோ ஒரு சானிடோரியத்திலோ லெப்ரசிகேர்ஹோமிலோ தனிப்பட்ட டாக்டர்களிடமோ வசதியாக சிகிச்சை பெற முடியும். “மைத்ரேயி?” மனதெல்லாம் ஒரு அங்காரம். மூளையிலெல்லாம் ஏதோ ஒரு கனல், உடலெல்லாம் ஏதோ ஒரு தேவை. இதை மருந்து கொடுத்தோ, சிகிச்சை செய்தோ ஒடுக்க முடியாது. தன்னந்தனியே அவன் தன்னுடனேயே போராடினாள். ராகவன் அவளைப் புறக்கணிக்கவில்லை. அவளை விட்டு ஓடித்தான் போனான். அதனால் தான் ராணி எல்லோரையும் புறக்கணித்து விட்டு அஞ்சினிக்குப் புறப்பட்டு விட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம் தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. “ஏம்மோவ்? சுழி வருது சுழி! ஜாக்ரதை! அடிச்சு நின்னுங்க! காலை ஒதஞ்சு நின்னுங்க. அய்யிருவூட்டு ஆயி?!! இழுப்பு சொயட்டும்! அடிச்சு நின்னுங்க?”ன்னு கத்தினான் சாம்பனும், கலியனும். சலப்சலப்பென்று இரண்டு ஆளை வாய்ச் சுழிகள் பேய் வேகத்துடன் லோச்சனாவின் குறுக்கில் கடந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த மூட்டைகள் பற்சக்கரத்தில் சிக்கியது போல் சுழண்டு சிதறின. “அய்யோ ” என்று அலறல் சாம்பனிடம் இருந்து கிளம்பியது. கலியனைக் காணோம். நீர் யானை ஒன்று நீருக்குள்ளிருந்து வாய் பிளந்தது போல் ஆற்று வெள்ளம் சுழித்து திரண்டது. வெள்ளம் மூடிய போது லோச்சனாவையும் காணோம். எங்கப் பாத்தாலும் வெள்ளக்காடு, மாலை வரை அஞ்சினிக் கரையோரம் எல்லாம் ஜனங்கள் நின்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆத்தில் கோபுரம் கோபுரமாக நுரைகள் மிதந்தன. வீடுகளின் தகரக் கூரைகள் சப்பு சருவுகள் மனித சடலங்கள், செத்த நாய்கள், குப்பைக் கூளங்கள், வேறுடன் மரங்கள் எல்லாம் மிதந்தன. ஆ! எல்லாம் மிதந்தே ஒழிந்தன!

அஞ்சினி கிராமத்து ஜனங்கள் லோச்சனாவை நெருங்கவே பயப்பட்டார்கள். தொழுநோயின் வர்ணம் தெரியாமல் உடம்பெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு நிற்கும் அவளை யாரும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ரொம்ப பழக்கமான வெள்ளானை அய்யர் வூட்டுப் பொண்ணாச்சே அவள்?! அதற்காகவே அவர்கள் அவள் செய்த எதையும் தடுக்கவில்லை . ‘தன்னந்தனியாக மூங்கித் தோப்புக்குள்ள ஒரு பொண்ணு இருக்கவாவுது? ஏழு வாளுமுனி இருக்கு!! அடிச்சுடாது?!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஊர்ப் பெண்கள், “இதென்ன எளவு?! – ஒடம்பெல்லாம் பச்சையும், செவப்புமாக படமெல்லாம் வரைஞ்சுக்குது” அவர்களுக்கெல்லாம் தெரியாது. ராகவன் தான் இதுக்கு “மருந்து” என்று, ஒரு நாளாய், ரெண்டு நாளாய் இருந்தால் பரவாயில்லை . வருஷங்கள் கழிய ஆரம்பித்ததும் ஜனங்களுக்கு லோச்சனா புரிந்து போனாள். ஆளண்டாத மூங்கித் தோப்புக்குள் லோச் சனாவுக்காக பால்காரியும், தயிர்காரியும் போனார்கள். கீரைகள் புடுங்கிக் கொண்டுப் போகிற சாலியத் தெரு பெண்கள் அவளுக்கும் நாலு கீரைக்கட்டு கொண்டு போய் கொடுத்தார்கள். ஏகாலிகள் குடி பொண்ணுங்களும், குரும்பனும் வேலி அடைக்கிற முதலாளிகளும் அவளுக்காகவே போய் பேசிவிட்டுப் போனார்கள். அவளே மண்ணைக் குழைத்து சுவர் வைத்தபோது ஆசாரிகளும், கொல்லத்துக்காரர்களும் “அய்யருவூட்டுப் பொண்ணுக்கு வந்த கெதியப் பாத்திங்களா? எல்லா எளவையும் இழுத்துப் போட்டுகிட்டு, இப்டி அல்லாடுது. இதுக்கென்ன விதி வந்துடுச்சு? இந்த மாதிரி ஆள் அண்டாத எடத்துலெவந்து உக்காந்துகிறதுக்கு?!” – என்றார்கள்.

ராகவன் மிகவும் நல்லவன். எட்டு வருடங்களாக அவளை அண்டுவதே இல்லை! வியாதியாம்! அவளது அடங்கா தளத்தைப் பொறுத்துக் கொள்கிறானாம். ஜனங்களும், அவன் தியாகம் செய்கிறானென்று டாக்டர்களை அழைத்துக் கொண்டு, கார்களில் வந்து இறங்கி, அந்த மூங்கில் தோப்புக்குள் வந்து அவளை சிகிச்சைக்கு அழைக்கும் போதெல்லாம் அவள் கணவனுக்கு அடங்கிய அமெரிக்கையானப் பெண்ணாக இருக்கும்போது, யாருக்கும் ஆச்சரியமாய் இருக்கும். இவளையா, பைத்தியம், தொழுநோயாளி என்றெல்லாம் சொல்கிறார்களே?! என்று விபரீதமாய் இருக்கும். மெல்லிய கலர்களில் அவள் உடுத்தும் புடவைகள் ராகவனுக்குப் பிடிக்காது. அவளது ஓவியங்கள் அவனுக்குப் பயமுறுத்தல்களாக இருக்கும். இரண்டு பேரும் தனியாக இருந்தால் பேசுவதேயில்லை. ராகவனை ராணி ஏறெடுத்துப் பார்ப்பதுடன் சரி. ஒவ்வொன்றாய் ஐந்து வருடங்கள் கழிந்த போது ராகவனின் தியாகம் அவளுக்கு புரியிற மாதிரிதான் இருந்தது. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிற தியாகம் அந்த கிராமத்துக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது போல அவளுக்கு பயமாக இருந்தது. ராணி பயப்படுவாளது பயம் இப்படித் தான் ஆரம்பித்தது. பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான் கும்பகோணத்துக்குப் போனாள். முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்கு அவள் சிகிச்சைக்காக போவதாக அம்மா, அப்பா, மன்னிகள் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ராகவனைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்பட்டார்கள். அவன் வயதில் அவன் செல்வத்துக்கு, அவன் அழகுக்கு அவன் உத்யோகத்திற்கு அவன் செல்வாக்குக்கு அவன் இப்படியெல்லாம் ஏகாங்கியாய் இருக்க வேண்டியதில்லை . ஆனால் அவனது ரகசியம் முழுவதும் லோச்சனா மட்டுமே, அறிவாள். ஆனால் லோச்சனா சொல்லமாட்டாள். கை நீட்டி வாங்கமாட்டாள். கெஞ்சி நிற்கமாட்டாள்.

தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை . யாருக்கும் அவள் உறவில்லை . யாருக்கும் அவள் தமக்கையில்லை, தங்கையில்லை, மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி!? ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும், சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய்கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட்டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது? வீட்டைச் சுற்றிலும் திருகு கள்ளிச் செடிகளை வைத்து வளர்த்திருந்தாள் லோச்சனம். . மணல் மேடுகளில் உருண்டைக் கள்ளி பயிரினங்களை வளர்த்திருந்தாள். வினோதமான கேக்டஸ் இனங்கள் சிவப்பு, நீலம், பூக்கள் முள்ளுக்குள்ளிருந்து புஷ்பங்களை புதுப்பித்து வளர்த்திருந்தன.

வீடுகளின் வாசல்கள் எட்டு புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை . சுவர்களில்லை !! ஆலய வாசல்கள் போல் சிற்பச் சாதுரியாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும், பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? யாருக்குப் பிடிக்க வேண்டும்?!! ஆனால், அந்தப் பக்கத்து மீன் பிடிக்கும் வலையர்களுக்கும், ஆடு வளர்க்கும் கீதாரிகளுக்கும் லோச்சனாவை ரொம்பப் பிடித்தது. அவள் தரும் காரமான டீயும், உப்புச் சுவை மிகுந்த எலும்பிச் சபழ சாறும் பல காய்கறிகள், கீரைகள் மிதக்கும் சாம்பாரும், சோறும் அவர்கள் எங்கும் ருசித்ததேயில்லை. அந்தத் தொழு நோயாளிப் பெண்ணின், நோய் அவர்களுக்குத் தெரியவேயில்லை”. ஏகாலிப் பெண்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளைத் துணியிலும் அவள் மெழுகால் வரைந்து கொடுத்த , Batic (பேத்திக்) டிசைன்கள் அபாரமாய் இருந்தன.

அந்த வீட்டுச் கவர்கள் எங்கும் அவள் வரைந்த காளியின் உருவங்கள் சாந்தமாகிச் சிரித்தன. ஒரு தடவை அப்பா வந்தார். “என்னடீது பெண்ணே ?!! இந்த நல்ல எடத்தெக் குட்டிச்சுவர் ஆக்கி வச்சிருக்கே? சப்பாத்திக்கள்ளி குண்டு கள்ளி, திருகுகள்ளி, குச்சிக்கள்ளின்னு ஊருல இருக்குற எல்லா முள்ளுச் செடியும் கொண்டு வந்து நட்டு வச்சு, என்ன எழவு இதெல்லாம் ? ராகவன் ஒன்றுமே சொல்றது இல்லையா? ஒன் இஷ்டத்துக்கு விட்றான் பார்! He is Great அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒனக்கு ஒண்ணும் மனக்குறையில்லாம வச்சிருக்கானே? இத்தனை வியாதியிலும்…” என்றார்!

“யாருக்குப்பா வியாதி?” ராணி தலை நிமிர்ந்து சீறினாள்.

“ஒனக்குத்தான் – வேற யாருக்கு?” –

“எனக்கு வியாதியில்ல, உங்களுக்கும், உங்க மருமகனுக்கும் தான் வியாதி, எனக்கு இரண்டு வருடத்திற்கு முந்தியே சொஸ்த்தமாயிடுத்து.”

“இந்தா ரோஸ் பேட்ச் (patch) செல்லாம் அப்படியே தானே இருக்கு, குணமாயிடுத்துங்கிறயே?”

“நான் சொல்லலைப்பா? டாக்டர்ஸ் சொல்றா! எனக்கெல்லாம் சரியாப் போயிடுத்தாம். இனிமே நான் எல்லாரு மாதிரிதான் அப்படிங்கிறா.”

“இதையேதாள் எல்லாருஞ் சொல்றா! ஆனா யாரு நம்பறா!?”

“ராகவன் கூடச் சொல்றானே? ஆனா ஓம் மூஞ்சிலே இன்னும் நீ எலை, பூ, கொடியெல்லாம் வரைஞ்சுகிறியே? அதெல்லாம் எதுக்காம்? மறைக்கிறதுக்கா?! மூடுறதுக்கா?”

“நான் எதையும் மூடலைப்பா, நீங்களும் ஒங்க மருமகனும் தான் மறைக்கிறேள். பொதுவா உலகமே பூராவும் மறைச்சுக்கிறது மூடிக்கிறது, அப்படிங்கிறதுதான் உண்மை யாருக்கு, எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக்கூடாது, இல்லையா? எனக்கு நோய்குணமாயிட்டாக்கூட நீங்க ஒத்துக்க மாட்டேள். எட்டு வருசமா வேற ஒருத்தியா இருந்தா – இவ இருந்த எடத்துல – இப்போ புல்லு, மொளச்சிருக்கும். ஒங்களுக்கெல்லாம் ஒரு குடும்பம், வீடு, வாசல், உறவு எல்லாம் நீங்க விரும்புற மாதிரி இருக்கு. ஆனா எட்டு வருசமா நான் கனியா இல்ல. எனக்குன்னு ஒரு முழு உலகத்தையே உருவாக்கிகிட்டதால நான் இடிஞ்சு போயிடல. என்னுடைய வேலையெல்லாம் இன்னும் ஓர் முழு ஆயிசுக்குப் பாக்கியிருக்கு. நான் குமஞ்சு போய் மூலையில் உட்கார்ந்திருந்தா என்னா ஆகியிருந்திருக்கும்.”

“என்னமோ நீதான் சொல்றே? மனுஷா இல்லாம யாரையும் தண்டாம இப்படி ஒரு வாழ்க்கையா? இதைவிட டாக்டர்கிட்ட நர்ஸிங்ஹோம்லேயே நீ இருக்கலாம்…”

“ஆமாமா மூலையில் போட்டு மூடி வைக்கிறதுக்கு நல்ல இடம் அதுதான்.”

“ஆமா!? லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே? எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ?…”

“இருக்கக்கூடாதுன்னு தானேப்பா இஞ்சப் போட்டு வச்சருக்கேள்!”

வானம் இருண்டு வந்தது. மலை மலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும்போதெல்லாம் தொடமாட்டானா? என்று மனம் தவிக்கும். ராணியா வாய்தெறந்து தொடு என்று கேட்பாள்? அவனால் முடியாது. எப்போதாவது அவன் கைகளைப் பிடித்து வைத்துலோச்சனத்தின் சின்ன. ஆனால் தடித்த உதடுகளை கவ்வ மாட்டானா? என்றிருக்கும். ஆனால் ராகவன் நிச்சலனமாய், கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். லோச்சனத்தைப் பார்க்க வரும் அம்மா பொருமிப் பொருமி அழுவா. தங்கைகள் தூரத்திலிருந்து பரிதாபப் பார்வைப் பார்ப்பார்கள், மச்சினர்கள், மரியாதையோடு பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். ஆஹா! உலகம்தான் எத்தனை ஒழுக்கமாகவும், ஞாயமாகவும் நடந்து கொள்கிறது. அடடா! எங்குப் பார்த்தாலும் கருணை வடிவங்கள் எட்டு வருடத்து தனிமையையும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அமுதத்திலிருந்த விஷத்தை சாப்பிட்டது போல் லோச்சனம் சாப்பிட்டிருந்தாள். ‘லோச்சனா? இந்தா ஒரு ரோஜாப் பூ! கண்ணு? இந்தா ஒனக்கொரு ஜிலேபி! மகளே இந்தா ஒனக்கொரு வர்ணப்பெட்டி! டியர் மயர்! இதோ உனக்கொரு “கிஸ்” லோச்சனா ஒனக்கு குணமாயிடுத்தாடா, அவள் கால்களில் சொட்டும் இருதுளி கண்ணீர் இந்தப் பரிசுகளை யாராவது அவளுக்கு கொடுத்ததுண்டா? இது பரிசுகள் என்று அவர்களுக்காவுது, யாருக்காவுது தெரியுமா? அவர்களெல்லாம் தியாகிகள், ஞாயவான்கள் இந் உலகத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்.

மழைப் பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே கள்ளியும், முள்ளும் படர்ந்து கிடந்த அந்த தோட்டத்தில் மண்வெட்டியுடன் சேற்றில் நின்று ஒவ்வொரு செடியாக சுற்றிலும் மண் அணைத்துக் கொண்டிருந்தாள். மழையில் கள்ளிச் செடிகள் அசையாது நின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராகவனைக் காணவில்லை. அது என்னவோ ராணியானாலும் ராஜாவைத் தான் மனது தேடுகிறது. ராகவன் இல்லாவிட்டால் என்ன? இந்த எட்டு வருடங்களும் நோயில் படுத்து, போராடி அலையுண்ட காலமெல்லாம் எல்லாரும் தூரத்திலிருந்தே கருணையை பொழிந்தார்கள். பெற்றத் தாயிலிருந்து ஜாக்ரதையாக விலகிக் கொண்ட அசிங்கம். அவர்களுக்குப் புரியுமா? தினமும் அவளுடன் கஞ்சி குடிக்கும் கீதாரிகள் மறுபடி வர மாட்டார்கள். ஆற்றோரமாக வலயன் பிடிக்கப் போகும் குறவர்கள். வலை வீசி விறால் பிடிக்கும் வலையர்கள் யாரும் அவளைக் கண்டு விலகியதும் இல்லை. நெருங்கியதும் இல்லை!! தொழுநோயை வர்ணங்களால் பூசி மறைத்த போதும் அவர்கள் அவளுடன் அட்டகாசமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஊற்றும் கஞ்சியில் அவர்கள் யாரும் தொழுநோயின் அருவருப்பைக் காட்டவில்லை. எப்போதும் திறந்து கிடந்த அவளது வீட்டில் அவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் இஷ்டம் போல் பிரவேசித்து, எந்த நேரத்திலும், ஏதாவது தின்னக் கேட்டார்கள் அவள் குடிக்கக் கொடுத்தாள். ஒரு நாள் ஒரு கீதாரி கேட்டான்.

“ஒன் ஒடம்பெல்லாம் இருக்கே? இது குஷ்ட்டம் தானே?” அவள் சொன்னாள்

“ஆமா!” – அவன் முகம் வேறுபடவில்லை!

“ஆமா… ரொம்ப வலிக்குமோ ?…”

“ஏன் கேக்குறே?”

“இல்ல என்னோட பொண்டாட்டிக்கு கூட கை விரலெல்லாம் தேஞ்சு சுண்டிப் போச்சு. ஒனக்கும் அப்படி ஆயிடுமா?”

“இப்போ ஓம் பொண்சாதி எங்கேயிருக்கா?!”

“எனக்குத் தெரியாது”

“பொஞ்சாதின்னு சொல்றே எங்கேன்னு தெரியாதா?”

“நாங்க கீதாரிங்க, ஆடுங்கதான் எங்களுக்கு எல்லாம்.”

“ஏங் கெடையெ ஓட்டிக்கிட்டு நான் இங்க வந்திருக்கேன். அவ கெடையெ ஓட்டிக்கிட்டு அவ எங்கயோ தெக்க திரிஞ்சுக்கிட்டிருக்கா வருஷத்துல ஒம்பது மாசம் இப்படி பச்சையெ தேடிக்கிட்டு ஆடுங்களுக்காக ஊர் ஊரா திரிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்” அவள் அசந்து போனாள். லோச்சனத்துக்கு சுதந்திர காற்றின் வேகம் மூச்சை முட்டியது. பலிஷ்ட்டமான அந்த கீதாரி ஆண் மகனைப் பார்த்தாள். கரு கருவென்று கருங்காலியில் செய்த சிலை போல இருந்தான்.

“அவளுக்கு வியாதிங்கிறியே…? அத குணமாக்கலாம் தெரியுமா?

ஆஸ்பத்திரிக்கு அவளெக் கூட்டிகிட்டுப் போ ஓம் பொண்சாதி தானே?!”

“இப்போ அவளெ வேறொரு கீதாரி வெச்சுக்கிட்டான்” என்றான். அவள் தந்த காரமான டீயை உறிஞ்சியபடியே “டீ நல்லாருக்கு….” என்றான்.

“அவளுக்குக் குஷ்டம்ன்னு அவளுக்கேத் தெரியாதா? அவன் அவள் பிரியமா வச்சுக்குவானா?…” என்றாள் லோச்சனம்.

“பிரியமான்னா என்னங்க? புடிச்சு தானே வச்சுக்கிட்டான்” இடி இடித்தது. மழைக்குள்ளிலிருந்து மின்னல்கள் வெட்டி வாங்கின…

ஜே…வென்ற மழையில் எதிரே தெரிந்த காவிரி ஆறு. பின்னால் தெரிந்த கோரை ஆறு. யாவும் மழை திரையில் மூடுண்டன. இருட்டிக் கொண்டு வந்த ஓலத்தில் இடிகள் குலுங்கின. பெருமழையின் காற்றில் அங்கு வளர்ந்து கிடந்த குத்துக்கள்ளிகள் அசைவுற்றன. சுற்றிலும் தெப்பமாய் நெனைந்து போன லோச்சனா வாசலை நோக்கி, ராகவனை எதிர்பார்த்தாள். இன்னும் பைத்தியமாய் இனியும் முட்டாளாய் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கே அவளது உடலின் கேவலம் மனதின் அசிங்கம் தெரியத்தான் செய்தது. அவளது வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சொல்லக்கூட அவளுக்குத் தேவைப்பட்ட பலவீனம் ஆச்சரியமாய் இருந்தது! மழையில் அவள் மேனியில் வரைந்திருந்த ஓவியங்கள் யாவும் சுத்தமாய் கலைந்து ஓடியிருந்தன. சுத்தமாக அவள் விரல்கள் முகம் யாவும் குளிரீந்து மலர்ந்திருந்தன. அவளது உடல் முழுவதும் ஆரோக்கியத்தின் தாதுக்கள் முண்டி எழுந்து கொண்டிருந்தன. அவள் இனி தொழு நோயாளி இல்லை! மனதிற்குள் இருந்து அவள் சுதந்திர காற்றை மீண்டும் சுவாசித்தாள்? இனி அவளால் அஞ்சினியில் இருக்க முடியாது. மனதிலே ஒரு பேரொளி எழுப்பி வானத்தை ரெண்டாக கிழித்தது.

ஒரு இடி மின்னல். ஆற்றின் எதிர்கரையில் நின்ற ஒரு தென்னை மரத்தின் மீது அந்த இடி இறங்கியிருக்க வேண்டும்.

அந்தக் கொட்டும் மழையிலும் அந்த தென்னை மரம் இடி இறங்கியதால் தீப்பற்றி சடசடவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. பிசாசு போல் சடை விரித்து, நெருப்புக் கங்குகள் சிதறி தென்னை மரத்தின் இளநீர் காய்கள் நாலுபுறமும் வேட்டுகள் போட்டுச் சிதறின. “டம்! டம்! டம்! டம்!”

இனி லோச்சனம் தனி மனுஷி இல்லை. அவள் மனதிலிருந்து அந்த தென்னைமரம் திகுதிகுவென பற்றி எரிந்து அடங்கியது. இனி அங்கு புயலோ, மழையோ, சூறாவளியோ எதுவுமில்லை . காற்று அடங்கிவிட்டது. வழி திறந்துவிட்டது.

கட்டிய ஈரச் சேலையுடன் கையில் எதையும் எடுக்காமல் தான் கட்டிய அந்த வீட்டின் வாசலில் இருந்து இறங்கினாள் லோச்சனம். ஆற்றங்கரையை நோக்கி திடமாய் முடிவுக்கு வந்தவளாய் வேகமாய் நடந்தாள் ஆற்றுத் துறையில் பரிசல்காரர்களைக் காணோம். ஆற்றில் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெரு வெள்ளத்தில் சற்றும் அஞ்சாமல் ‘தொபீர்’ என்று குதித்து எதிர்கரையை நோக்கி நீந்தலானாள். சுழல் நீர் யானைகள் வாய் பிளந்து அவள் இருபுறமும் சுழன்றன. சுழல்களை கால்களால் உதைத்து இரு கைகளையும் வீசி நீந்தினாள் லோச்சனா! ஆற்றின் மேற்பரப்பு மழை முத்துக்களை வாரி இறைத்தன. சற்றும் குறையாத மழையில் ஏறத்தாழ முக்கால் மணி நேரத்துக்கு பின்னர் வெகுதூரம் எதிர்கரையில் அஞ்சினிக்கு மேற்கே கரையேறினாள் லோச்சனா.

இனி அவள் தன்னந்தனியவள் அல்ல. இந்த உலகில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிந்துக்களில் அவளும் ஒருத்தி, அண்டம் குலுங்கினாலும், அவள் குலுங்காமல் தொடர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, அவள் தன்னந்தனியளாய் இந்த உலகமாகி விடுவாள். மழை தன் வலிமையெல்லாம் சேர்த்து அவளை அடித்து துரத்தியது. அவள் – லோச்சனா எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லாமாகிப் போனாள்.

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *