“தொடரும்”…..
என்று இரவு 10.30 நாடகம் முடிந்ததும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது. மரம் செடி கொடிகள் மூலம் இயற்கை இரவோடு பேசிக்கொண்டிருக்க…என் மனம் உன்னையே அசைபோட்டுக்கொண்டிருந்தது.
“நீ வந்துவிடுவாய் ! ” என்பதால்,
போர்வை, தலையணை உதறி
படுக்கையை சரிசெய்து கொண்டேன்.
கொசுவோடு போர் செய்ய ஆல்அவுட்டும் வைத்துவிட்டேன்.
சன்னலை அடைத்து அறையை மேலும் இருட்டாக்கி கொண்டேன்.
உனக்குப் பிடித்த
“நீல நைட்லாம்ப்” மட்டும் போட்டுக்கொண்டேன்.
அம்மா அப்பா உறங்கிவிட்டார்கள் !.
உன் வருகைக்கான எல்லா ஏற்பாடையும் வழக்கம்போல் செய்து முடித்து விட்டேன்.
பகலெல்லாம் வேலைநேரங்களில் என்னை தொந்தரவு செய்யும் நீ இரவில் எங்குதான் போவாயோ? நான் உன்னை விரும்புவதில்லை ஆனாலும் சில மணி நேரம் இருந்தாலும் நீ தருகிற அந்த பரவச நிலைக்காகவே உன்னை தேடுகிறேன்.
நீ தான் எனக்கான சந்தோசம்…
நீ தான் என் புத்துணர்ச்சி…
நீ தான் என் நிம்மதி…
இன்னும் எத்தனை மணி நேரம் இந்த ஃபோனையே தடவிக்கொண்டிருப்பது?எவ்வளவுதான் இதில் விளையாடுவது?
“எப்போது வருவாயோ?”.
நேற்று ரொம்பவும் மோசம்,3 மணிக்குதான் வந்தாய்.இன்றாவது விரைந்து ‘வருவாய்’ என்று நம்புகிறேன்.
நள்ளிரவு 01.45 மணியாகிவிட்டது.இன்னும் நீ வருவதற்கான தடம் கூட அறிய முடியவில்லை.
தூரத்தில் குலைக்கும் நாய்கள் உன்னை வரவிடாமல் தடுக்கின்றனவோ?
அல்லது
வீட்டருகில் மிளிரும் தெருவிளக்கு உன்னை தொந்தரவு செய்கிறதோ?
அல்லது
வீட்டருகில் சீறிச் செல்லும் வாகனஓட்டிகளின் ‘ஹார்ன்’ னைப் பார்ந்து பயந்து திரும்பிவிட்டாயோ?
அம்மா எழுந்து வாசல்கூட்ட இன்னும் 4 மணி நேரம்தான் உள்ளது.இவ்வளவு தாமதித்து நீ வருவதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. இருப்பினும் நீ தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
நீ அருகில் வருவது போல உணர்கிறேன்…நீ வந்துவிட்டாய் !
நான் மெல்ல தலைசாய்கிறேன்!.
இதற்குதான் நான் தினமும் தவமிருக்கிறேன்!
இப்போது எனக்குள் ஏற்பட்டுள்ள கொண்டாட்ட நிலையை என்னால் விவரிக்க இயலவில்லை.நான் மிதப்பதாக உணர்கிறேன்.எனக்கும் உலகுக்குமான பந்தம் அறுபட்டு நிற்கிறது.நான் யாரென்று என்னால் உணர முடியவில்லை.
என் கோவம், தலைகணம், அதிகாரம், பேராசை, காமம், துரோகம் எல்லாவற்றையும் உன் காலடியில் வைத்துவிட்டேன்…
“நான் நிதானமிழக்கிறேன்”….
இனியும் காலம் தாழ்த்தாதே!…..இருப்பது சில மணி நேரங்களே, எந்த இடையூறுக்கும் இடமில்லாமல் என்னோடு விடியும் வரை பயணி.இந்த வாழ்வு உள்ள வரை நீ தான் என் கடவுள்.
நாள் முழுதும் அலைந்து மனஉளைச்சலோடு பணியாற்றும் என்னைப் போன்றோருக்கு நீ தான் ‘அருமருந்து’ !
என் கண்கள் தானாக தாழிட்டுக்கொள்கிறது.
இனி விடிந்தால்தான் இந்த உலகம் என்
நினைவுக்கு வ……..ர்….ரு………ம்.
ம்ஹோர்ர்ர்ரம்ம்ம்… ம்ஹோர்ர்ர்ரம்ம்ம்….
(குறட்டை)
– 03/02/2018