கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 17 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒளவைப் பிராட்டியார் என்பவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை முதலிய அற நூல்களை இயற்றியருளிய தவமூதாட்டியாவர். இவற் றைத் தவிர வேறு பல பாக்களும் இவர் இயற்றி யுள்ளார். இவர் ஆனை முகக் கடவுளிடத்திலே மிகுந்த அன்புடையவர். 

இளமைதொட்டே விநாயகக் கடவுளைப் பூசனை புரிந்து வழிபட்டுக் கொண்டிருந்தார். பூசையின்போது பால் தேன் பாகு பருப்பு இவற்றை ஒன்றுபடுத்திச் செய்த ஒருவகைச் சிற்றுண்டியைத்தான் பெரும்பாலும் நைவேத்தியமாக வைப்பார். இதனையே இவர் பாட லிலும் அமைத்துப் பாடினார். ஒளவையாரின் வேண்டு கோள் வீண் போகவில்லை. நாளடைவில் ஒளவையா ருக்குச் செந்தமிழறிவு மிகுதியாகப் பெருகி வந்தது. ஒளவையாருடைய தமிழறிவு மற்றைப் புலவர்களின் அறிவுக்கும் மேலோங்கி நின்றது. ஆகவே, கடவுளை வழிபடுதல் எத்தகையோருக்கும் மிகுந்த நன்மையை உண்டாக்கும். 

“பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.” 

(உரை.) கோலம் செய் – அழகினைச் செய்கின்ற, துங்கக் கரிமுகத்து தூமணியே – உயர்வாகிய யானை முகத்தையுடைய தூய்மை மிக்க மணியைப் போன்ற விநாயகக் கடவுளே !, பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பசும்பாலும் – தெளிவுடைய தேனும் வெல்லப்பாகும் பருப்பும், இவை – ஆகிய இவை, நாலுங் கலந்து – நான்கையும் ஒன்றுபடுத்தி, நான் உனக்குத் தருவேன் – அடியேன் நினக்குக் கொடுப்பேன், நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்னும் தா – தேவரீர் அடியேனுக்குத் தமிழ்ச் சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழ் அறிவையும். நன்கு கொடுத்தருள்வீராக. 

(கருத்து.) விநாயகக் கடவுளே ! நான் உனக்குப் பால் முதலியவற்றைத் தருவேன்; தேவரீர் எனக்கு முத்தமிழ் அறிவையுந் தந்தருள்வீராக. 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *