கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 128 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

காந்தி ரோடு, திரு.வி.க.பூங்காவில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து கொண்டு சுற்றிலும் உள்ள மனிதர்களை வழக்கம்போல் அவதானித்துக் கொண்டிருந்தார் எழுபது வயது விஜய்.

சாத்வீகம் ததும்பும் ஒரு மனிதனின் கோர முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பதையறியாமல்.

ரிடையர்ட் ஆகியும் இன்னும் இன்றும் அதே வாத்தியாரம்மா தோரணையில் பேசும், நடக்கும் முன்னாள் ஆசிரியை

‘ஆறுமாசம் அமெரிக்கா! ஆறுமாசம் இந்தியா!’ என்று காலம் தள்ளும் அறுபது வயது அருண்குமார்.

கையில் ஒரு பையுடன் தவறாது நூலகம் வந்து பத்திரிக்கைகள் வாசிக்கும் வளையாத முழங்காலில் பேண்டேஜ் போட்ட முத்துசாமி; என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்;

வலது பக்கம் ‘ஷியாமளா டவர்ஸ்’ அடுக்குமாடி வீடுகளில் இருந்து பரபரப்புடன் பைக்கில் பறக்கும் இன்போசிஸ் இளைஞன்.

வெய்யில், புழுதி மற்றும் காமக் கண்களிருந்து தப்பிக்க தீவிரவாதி போல உடலெல்லாம் உடையால் மறைத்துக் கொண்டு அவசரகதியில் ‘ஆக்டிவா’வில் அதிரடியாகக் கிளம்பும் மத்தியதரக் குடும்பப் பெண்மணி.

என்று மனிதர்களின் வாழ்க்கைத் தேடல்களை கவனித்துக் கொண்டிருந்தார் விஜய் உடற்பயிற்சியுடன்.

அரக்கு நிற ‘ஹ்யூண்டாய்’ கார் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கிலிருந்து வீதிக்கு வந்தவுடன், நெற்றியில் பளிச்சிடும் விபூதியுடன் இரண்டு பையன்கள் துள்ளிக் குதித்து ஏறிக் கொண்டவுடன் அவர்களது தந்தை அவர்களை ஸ்கூல்லில் டிராப் செய்துவிட்டு எங்கேயோ இருக்கும் அவரது அலுவலகம் செல்வது விஜய் அன்றாடம் கவனிக்கும் ஒரு நிகழ்வு.

பூஜை முடித்த கையோடு பளபளக்கும் சந்தனம், குங்குமம் அணிந்த அந்த நடுத்தர வயது எக்ஸிக்யூடிவ் அப்பாவின் நெற்றியில் விபூதியை விஞ்சும் கவலை ரேகைகள்.

இளைய மகன் வந்து காரின் முன்பக்கம் வழக்கம்போல் பிராம்ப்ட்டாக உட்கார்ந்து கொண்டாலும் பெரிய வகுப்பு படிக்கும் மூத்த பையன் இன்று லேட்.

இவர்களை பள்ளியில் விட்டு விட்டு ஆக்ஸிஜன் இல்லா ஆற்காடு ரோடு டிராஃபிக்கில் தட்டு தடுமாறி மேடு பள்ளங்களில் ஊர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற ‘கூகிள் மேப்’ கவலை அவர் முகத்தில்.

நேரம் ஆக ஆக, வெயிட்டிங் எரிமலை வெடிக்கத் தயாரானது.

அன்றைய தினம் ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் & ஒயிட் டிரஸ் கோடு என்பதாலோ என்னவோ மூத்த மகன் ஒரு ஒயிட் சாக்ஸ் கிடைத்து இன்னொரு சாக்ஸ் கண்டுபிடித்து போட்டுக் கொண்டு வருவதற்கு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

(அந்தக் காலத்தில் ‘சங்கர்லால் வந்து விட்டார்’ நாவல் ஆசிரியர் தமிழ்வாணன் ‘சாக்ஸ்’சை நடையன் என்று மொழி பெயர்த்திருப்பார்.)

‘ஆஹா! இந்நேரம் பசங்களை டிராப் செய்து விட்டு போரூர் ஜங்ஷன் தாண்டியிருக்கலாமே!’ என்று ஆபிசர் அப்பா கோபத்தின் எவரெஸ்ட்டில் ஏறிக் கொண்டிருந்தார்.

ஒருவழியாக மூத்த பையன் காரில் ஏறி பின்பக்க கதவை சாத்துவதற்குள், அவனுக்கு லட்சார்ச்சனை!’

விடலைப் பையனான அவன் எடக்கு மடக்காக ஏதோ பதிலளிக்க எரிமலை இன்னும் விஸ்வரூபம் எடுத்து, டிரைவர் இருக்கைக்கு கீழே இருந்த ஒரு ரப்பர் செருப்பை எடுத்து பின் சீட்டில் அமர்ந்திருந்த மூத்தவனை நோக்கி அடிக்க முயன்றார் ஆபிசர் அப்பா.

பையன் லாவகமாக பின் சீட்டில் இங்கும் அங்கும் நகர்ந்து தப்பித்துக் கொள்ள அவருடைய காலணி ஆதிக்கம் பலவீனம் அடைய ஆரம்பித்தது.

காருக்குள் நடப்பதை பொறுக்க முடியாமல் பார்க்கில் இருந்த விஜய் “சார்! சார்!” என்று அந்த ஆபிசர் அப்பாவை நோக்கி கத்தினார்.

‘யாரோ தன்னைக் கூப்பிடுகிறார்கள்!’ என்று உணர்ந்த அந்த ஆபிசர் ஓங்கிய செருப்புடன் டிரைவர் இருக்கையிலிருந்து சத்தம் வந்த திசையில் திரும்பியபோது விஜய், அவரை நோக்கி, “சார்! சார்! வாட் இஸ் திஸ்? கோ ஹாப்பிலி! சந்தோஷமா போய்ட்டு வாங்கோ!” என்று கூக்குரலிட்டார்.

சுதாரித்துக் கொண்ட அந்த ஆபிசர் செருப்பை காருக்குள் கீழே போட்டு விட்டு காரைக் கிளப்பிக் கொண்டு குற்ற உணர்வுடன் புறப்பட்டபோது மூத்த பையனின் கண்களில் புண்பட்ட அவனுடைய இதயம் தெரிந்தது.

‘அவன் மீது ஏன் இந்த வெறித்தனமான கோபம்? ஒருவேளை அவன் நன்றாகப் படிக்கவில்லையோ? இல்லை, நேரமே வாழ்க்கை என்னும் நெருக்கடியால் வந்த வன்மமா?

ஒரு நடுத்தர வர்க்கத்தின் அன்றாட நகர வாழ்க்கை இவ்வளவு அலைச்சல், உளைச்சல், உணர்ச்சி கொந்தளிப்பு நிறைந்ததாக ஆகி விட்டதே!’ என்று கவலையுடன் வீடு திரும்பினார் விஜய்.

காரை ஓட்டுபவர்கள் ‘ரோட் ரேஸ்!’ என்ற கோபத்தணலில் மாட்டிக்கொண்டு நிதானம் தவறுவது உண்டு. அது போலத்தான் இந்த மனிதரின் கார் கோபமா?

இது போன்ற விநாடித் தருணங்களில்தான் கொலை கூட நடக்கிறது போலும்!’ என்றெல்லாம் விஜய்யின் மனம் அலைபாய்ந்தது.

மறுநாள் அதே விஜய், அதே பார்க், அதே நேரம், அதே அரக்கு காரில் குழைத்து விபூதி அணிந்த அதே மூவர், இன்னொரு நாள் வாழ்க்கையோடு முட்டி மோதிப் போராடி ஜெயிக்க, கண்டும் காணாமலும் விஜய் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

காரில் இருந்த ஆபிசர் அப்பா, கண்ணாடியைத் தாழ்த்தி “சார்! சார்! என்று விஜய்யை கூவி அழைத்தார்.

“சாரி சார்! நேத்திக்கி ஒரு நிமிஷம் நான் மிருகம் ஆயிட்டேன்! “ஐ லாஸ்ட் மைசெல்ஃப் நல்ல வேளை! நீங்க என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க! டெர்ரிபிலி சாரி சார்! எக்ஸ்க்யூஸ் மீ; தாங்க்ஸ் சார்!“என்று விஜய்யிடம் சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினார்.

இப்போது அந்த மூவரும் பழைய அன்யோன்ய நிலமைக்கு வந்து விட்டிருந்தனர்.

விஜய், “இட்ஸ் ஓகே; அவன் மூத்த பையன் சார். அவனை இப்ப நீங்க நல்லா பாத்துகிட்டாத்தான் பிற்காலத்திலே நீங்க என் வயசுல இருக்கும்போது உங்களை அவன் நல்லா பாத்துப்பான்.

வாழ்க்கைங்கறது ஒரு நாள் இல்ல, ஒரு வருஷம் இல்ல, ஒரு ஜன்மம் சார்! எல்லோருக்குமே ‘தொட்டிலில் இருந்து காலில்லாக் கட்டில் வரைதான் வாழ்க்கை!’ன்னு கவிஞர் சுரதா சொல்லியிருக்கார் சார்!

சீயர்ஃபுல்லா போட்டு வாங்கோ! டைம் ஆகுது; ஆல் த பெஸ்ட்!” என்று விடை கொடுத்து விட்டு அவசரமாக திரும்பிக் கொண்டார் விஜய்.

அந்த ஆபிசர் அவ்வளவு தூரத்தில் இருந்தும் விஜய்யின் கண்களின் ஈரத்தைக் கவனிக்கத் தவறவில்லை அவருடைய கண்களே ஈரமாக இருந்த போதிலும்!

– இது  ஏற்கனவே  கல்கி, குவிகம் ,இனிது,மற்றும் வல்லமை இதழ்களில் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *