தீவுக்கு ஒரு பயணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 1,712 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

அடுத்த நாள்

இதற்கு மேலே செல்கிறார்கள், புளொமின்டன் ” லுக் அவுட் ” , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது, அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம், கண் கொள்ளாக் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன, அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும் இருக்க வேண்டும், சற்று செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை, ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள், மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும், நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும், மண்ணும் தான், அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள் இருக்கின்றன,

அவ்விடத்தில் தான் அதிகபட்ச உயர் அலைகள் அடிப்பதாகவும் கூறப்படுகிறது, அந்த தீவின் நில மட்ட உயரங்களைப் புரிந்து கொள்ள சிரமப் படுகிறான், நில அளவையியல் அறிவு அவசியம் தேவைப்படுகிறது, தில்லைக்கு தட்டுத் தடுமாறிய,.. நிலையிலே கிடக்கிறது,

கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கிற துண்டு நிலப்பரப்பில் இருக்கிற பசுமைக் காட்டினுள் ஐந்து கிலோ மீற்றர், பத்து ,..என அதிக தூரம் நடக்கிற சுற்றுக்கள் இருக்கின்றன, நானும் பிள்ளைகளும் நடந்திருக்கிறோம் ” என்கிறாள் பூமலர், ” பூச்சிகள்,..மலை ஏறுவது போல நடக்க முடியாது ” என ஜெயந்தி கூற அதை தவிர்த்து விடுகிறார்கள், ஆனால், கடற்கரை அழகாகவேக் கிடக்கிறது, ” கல்லை அலை அடித்து குகையை ஏற்படுத்தி இருக்கிறது எல்லாம் மேலே செல்ல தான் வருகிறது, நீருக்கு நடுவே சிற்பி போல செதுக்கிய உருவங்களும் கிடக்கின்றன ” என்று விபரிக்கிறாள் பூமலர் ,நீரும் லேசு பட்டதில்லை ,

மேலே ஏறி தேனீரையும்,..கொண்டு வந்ததையும் சாப்பிடுகிறார்கள், இவர்கள் நடந்த ஈர மண்ணை நீர் வந்து மூடி இருக்கிறது,,.நீர் வந்து அபகரித்து விடுகிறது, ஆனால் , திரும்ப விட்டு விட்டு போகிறதல்லவா, நிலையற்ற நிலவுரிமையை ஜனநாயக பண்புடன் பார்த்தால்,.. எவ்வளவு நல்லாயிருக்கும் , தீவுமகள் மகிழ்ந்தல்லவா போய் விடுவாள்,

‘கலோவீன்’ என்கிற ஒரு கொண்டாட்டம் இங்கே இருக்கிறது, அது உண்மையிலே கல்லறையிலே உள்ள முன்னோர்களுக்கு வைக்கிற (பார்டி ) விருந்து என்றே சொல்கிறார்கள், தீபாவளிக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதாக… தில்லை வாசிச்சிருக்கிறான், முன்னோருக்கு படைத்து ஒளியேற்றி சந்தோசப்படுத்துவது தான் அடிப்படை, முதல் மனிதர் கொண்டாடிய ஒரு நிகழ்வைத் தான்,..தத்தமது கற்பனைகளுடன் இன்று பலரும் கொண்டாடி வருகிறார்கள்,

ரஸ்யாவிலிருந்து….. தான் இதை ‘சோம்பி’யாக கற்பனை பண்ணிறது ஏற்பட்டிருக்கிறது போல இருக்கிறது, கடுங்குளிர், இருண்ட சதுப்புக் காடுகள், நம்மூரிலும் காடுகளில் ,..உருவங்கள் நடமாடுவதாக பிரமைகள் உண்டு, அமெரிக்க,.சினிமா இதை பிரபல்யப்படுத்தி இருக்கிறது, அதை உலகம் எடுத்துக் கொண்டு விட்டிருக்கிறது, கலிங்கத்துப்பரணி என்கிற இலக்கிய நூலிலும்,… இடம் பெறுகிறது ‘சோம்பி’யாகவே இருக்க வேண்டும், இன்றைய மனிதர்கள் அதில் உள்ள நன் நோக்கை விட்டு விட்டு கொடூர பார்வையைப் பார்க்கிறார்கள் போல படுகிறது, ஈழத்தில் , சிங்களவர் , தமிழரை சோம்பியாக அல்லவா அலைய விட்டிருக்கிறார்கள், மாற்றி விட்டார்கள், அது தான் வருத்தமளிக்கிறது,

அனபொலி கோட்டை

கடற் கொள்லையருடன் வந்த பிரெஞ்சுக்காரர்கள் , அனபொலியில் மிக்மக் பழங்குடியினர் வளப்பமாக வாழுவதை, விவசாயம் செய்கிறதைப் பார்த்தார்கள் , அனபொலி கணவாய் மண் நெல் போன்ற தானியங்களிற்கு வளமானதில்லை, பழமரங்களுக்கே ஏற்றது,பெருமளவில் அப்பிள் இங்கே இயற்கையாகவே விளையிறது, இராணுவம் நிச்சியமாக தன் நடத்தையைக் காட்டாமல் இருந்திருக்காது,அவர்களின் நிலத்தை பறித்து பிரெஞ்சு மக்களுக்கு கொடுத்திருக்கும், பிளேக் போன்ற நோய்களால் நிறைய பழங்குடி மக்கள் இறந்தனர் என்கின்றனர், எனவே பாலியல் தொடர்புகளுடாகவும் கொடுமைகள் நிகழ வாய்ப்பு இருக்கின்றன, எத்தனை கிரிசாந்தி , எத்தனை இசைப்பிரியாக்களோ ?, சரித்திரம் தணிக்கை செய்து தானே எழுதப்படுகிறது, குற்றவாளிகளையும் ” ஹீரோ” என்று தானே புகழ்கிறது, பிரெஞ்சுப்படையினரின் ஒரு தண்டனை முறையைப் பாருங்கள், பீரங்கியின் வாய் முனையில் ஒரு ஆளைக் கட்டி விட்டு சிதற சுடுறது, பிரிட்டன ,பொது வெளியில் துடி , துடிக்க ஆளை தூக்கில் போட்டு மகிழ்கிறது , பிரிட்டனின் முறையே சிறந்தது என்ற ஒரு பார்வை இருக்கிறது, நாகரிகம் மயக்குகிறது, ” நாலு நாள் ,..சட்டமாக வைத்திருந்தால் ஐந்தாம் நாள் இயல்பாகி விடுகிறது, ஏன் அதிகாரத்தை வழங்காதிருக்கிறார்கள் ?, ஜனநாயக உரிமை எல்லாம் பறிக்கப்படுகிறது ? புரிகிறதா ? ” என்று சொல்லி தில்லையின் நண்பன் கதிர் குறும்பு விடுவான், பிரிவினை பேசுறது ; பயங்கரவாதம் எல்லாம் அந்தக் கால ராஜதுரோகக் குற்றங்கள், இந்தக்கால தவ்வல்கள் கூட எல்லாம் தெரிந்தது மாதிரி பேசுகிறார்கள், இந்த நாட்டுக் குடிமகனுக்கு ஒரு மாகாணம் கூட கிடையாது, ஏன்? அது சிறு வெடிப்பு, கற்பனை செய்து பார். வெடிப்பு பரவி , பரவி,..இந்த கண்டம் முழுதுமே கடைசியில் சொந்தக்காரர் கையில் போய் விடுகிறது,… பீத்தல் பயம் ” கதிர் அடங்க மாட்டான், ” சூரியனை தலைவனாக கடவுளாக கொண்டாடுறதில் நியாயம் இருக்கிறது “,இப்படியே அலட்டிக் கொண்டு போவான், சிரிக்க , சிந்திக்க,.என எடுத்துக் கொள்ள வேண்டியது தான், இந்தச் சிங்கள இனமும் தமிழ் மண்ணில் குசாலாக குந்தி இருக்கிறது, எவ்வளவு காலம் இருக்கும் என்பதையும் தான் பார்ப்போம், ” நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள், உங்கள் ஆசை நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் ! “, புத்தர் இந்த கோதாரிப்பிடித்த ஆசையை தானே விடு என்று சொல்லி போராடியிருக்கிறார், யார் கேட்டார்கள் ?,

பிரெஞ்சுப் புரட்சியின் போது கில்லட் கத்தி (மருத்துவரின் சத்திரச்சிகிச்சை கத்தியைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது )வெட்டும் தண்டனை முறையைப் பார்த்து அரச குடும்பங்களே பதறிப் போயின, பிரெஞ்சு அரச குடும்பமும் இம்முறையாலே கொல்லப்பட்டனர், அரபுநாட்டினரின் தண்டனை முறை வேறு விதமானது ,அது இன்னும் பயங்கரமானது , அதை விடுவோம், நோவாகோர்ஸியா முழுதும் பிரெஞ்சு மக்கள் பரவி வவசாயப் பண்ணைகளை ஏற்படுத்திக் கொண்டனர், அனபொலி தான் பிரதான பகுதி, தலைநகர் பகுதி, ஃபண்டி வளைகுடாவில் , பழங்குடி மக்கள் அனபொலி பேசினிலும் , மினாஸ் பேசினிலும் அதிகளவில் சமண் மீன்களையும் வேறு பிடித்து வந்திருந்தார்கள், அதுவும் பிரெஞ்சுக்காரர் கைற்கு மாறின, ஒரு சமூகத்தின் சாவிலே இன்னொரு சமூகம் வாழ்கிறது,எழுகிறது, இந்த விதி மாற வேண்டும், மாற்றப் பட வேண்டும்.

சமண் மீனின் , வாழ்க்கை வட்டம் விநோதமானது , முட்டை இட நன்னீருக்குச் செல்கின்றன, இருவகை நீரிலும் வாழக் கூடிய மீன் இனம், கடலை நோக்கி ஓடி வரும் நதி திரும்பி ஓட முடியாதவை, எனவே நதி அகண்ட பெரிய நதியாக ஒன்றில் இருக்க வேண்டும், உயர் அலையின் போதே நதி ஓட்டம் திரும்பி ஓட வாய்ப்பு இருக்கிறது, பெற்றோர் மீன்கள் அங்கேயே இருந்து இறந்து விடுவதாகவும் கூறப்படுகிறது, பெருகிய குஞ்சுகள் நீந்தி தேக்கத்திற்கு வருகின்றன, முட்டை இடும் காலத்தில் இவையும்,.. நன்னீரிற்குச் சென்று முட்டைகளை இட்டு , அதே வட்டத்தைத் தொடர்கின்றன, தற்போது குடியிருப்புகளாலும் , தொழிற்சாலைகளாலும் இந்நதிகள் அசுத்தப்படுவதால்,…. சமணின் விளைச்சல் அரைவாசிக்கு மேலே குறைந்து போய்க் விட்டிருக்கிறது, எச்சரிக்கை சமிக்ஞைகள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன, கனடாவில் நிறைய சுத்திகரிப்பு நிலையங்கள் எழுந்தவாறிருக்கின்றன, இது பாறைத் தீவு, அமைத்து , செயல்பட வைப்பது எல்லாமே கஸ்டமாக இருக்கிறது, எப்படியோ சமாளிக்கிறார்கள் போல இருக்கிறது , இல்லை அழிய விட்டுக் கொண்டிருக்கிறார்களோ ? இயற்கையை காப்பாற்றுறோம் என்று அழித்து கொண்டு தானே இருக்கிறார்கள், பேசுவது ஒன்று ; செய்வது ஒன்று, இந்தக் குணம் இலங்கையருக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இருக்கின்றது,

இங்கே நதியில் உயர் , தாழ் மின்சாரப் பிறப்பி (நிலையம் ) ஒன்றையும் கூட அமைத்திருக்கிறார்கள்,

கியூபெக் மாநிலம் பிரிட்டனின் கையில் வீழ்ந்த பிறகு பிரெஞ்சுகாரர்களின் கை ஒடிந்து போய் விடுகிறது , அம்மினிசன்கள்(துவக்கு குண்டுகள் ) அத்திலாந்திக் கடல் மூலமாக பிரான்ஸ் அனுபுறதில் சிரமத்தை அடைகிறது, புயல்கள் வேறு, இத்தீவைச் சுற்றி நிறைய கப்பல்கள் சிதைவுகள் இன்னம் கூட எடுக்கப்படாது கடலுக்குள் கிடக்கின்றன,

அனபொலிக் கோட்டை பிரிட்டனின் கையில் வீழ்ந்து போனது, பிரெஞ்சுப் படையின் நெஞ்சில் அந்த தோல்வி கனன்று எரிந்து கொண்டேயிருந்தது, பின் வாங்கி மினாஸ் தேக்கத்தின் அயலில் ஆன் கோட்டையைக் கட்டிக் கொண்டு தரித்து நிற்கிறது, அனபொலி சுற்றயலில் பிரெஞ்சுக்குடிகள் இருந்தன , பிரெஞ்சுத் துருப்புகள் அவர்களுள் ஊடுருவி அதிகாரிகளைக் கடத்துறதும், கொலை செய்றதும் , கோட்டையைத் தாக்குறதுமாக நித்திய தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருந்தன, கடைசியில் ஆன் கோட்டையும் கைப்பற்றப்பட்டு விடுகிறது, இது நிகழ சுமார் ஏழாண்டுகள் வரையில் போர் நிகழ்ந்திருக்கிறது, கனடாச் சரித்திரம் ” ஏழாண்டுப் போர் ” என்று குறிப்பிடுகிறது, பிரெஞ்சுக் குடிகள் இருந்தால் மேலும் அபாயம், ஊடுருவி தாக்குவார்கள் என்ற அச்சத்தில் பிரிட்டன் நோவாகோர்ஸியாவிலிருந்த 6000 இற்கு மேற்பட்ட பிரெஞ்சு மக்களின் பிரஜாவுரிமையை உடனடியாக பறித்து ( சில நாள்களில் ) வெளியேறி விட வேண்டும் ” என்று கடுமையாக கட்டளை இட்டு விட்டது, இலங்கை மலையக மக்களின் பிரஜாவுரிமை பறித்திற்கு இது தான் முன் மாதிரி, ஒருவேளை மலையகத்திலும் பிரிட்டனே பின்னால் நிற்கிறதோ என்று தில்லை சந்தேகிக்கிறான், தமிழர் பிரச்சனை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது,

வெளியேற்றத்தில் மக்களுக்கு எந்த வித உதவிகளையும் செய்ய முன் வரவில்லை என்ற விமர்சனமும் இருக்கின்றது, அபாயகரமான அத்திலாந்திக் கடல் வழியே வெளியேற வேண்டியிருந்து, சுயமாக மூட்டை கட்டி நடந்து குழந்தைக் குட்டிகளுடன் மிகுந்த மனக்குமுறலுடன் பிரிய முடியாது பிணைக்கப்பட்ட விவசாயப் பண்ணைகளையும் விட்டு கண்ணீர் மல்க இடம் பெற்ற பிரெஞ்சு அகாடியரின் இடப்பெயர்வு பெரும் துயரகரமானது, இவர்களுடைய நிலத்தை கனடாவில் குடியேறி இருந்த ஸ்கொட்லாண்ட் வழி வந்த அகாடியர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, களவாக அங்கே நின்று தம் நிலத்திற்குப் போனவர்கள் நிலம் பறிபோய் இருப்பதை பார்த்து மனம் வெதும்பி இருக்கிறார்கள்,

வாகனத்தில் பல திருப்பங்களுடனான வீதிகளில் பயணித்து விவசாய நிலங்களைப் பார்த்து வருகிற போது பூமலர் , ” நாளை, இங்கே இருக்கிற காஸ்பி வைனரி வயலுக்கு போகலாம், அவ்வயலிலே இருக்கிற உணவகத்தில் சாப்பிட்டு பிறகு , அங்கேயே இறங்கி திராட்சை தோட்டத்தில் நடந்து பார்ப்போம்( விடுவார்கள் )” என்றாள், வெளிநாட்டுக்காரர்களே பெரிய வைன் குடியர், கஸ்பி என்ற இப்பகுதியில் பெருமளவு திராட்சையே வைத்திருக்கிறார்கள், சூரியக்காந்திப் பூ வயல்களும் இருக்கின்றன,

கயூன் நாடு

பிரெஞ்சு அகாடியர்கள் இடம் பெயர்ந்த லூசியான மாநிலத்தில் (அச்சமயம் பிரெஞ்சுக் காலனி ) கயூன் என்ற பெயரில் குட்டி நாட்டை (டவுணை ) ஏற்படுத்தி இருக்கிறார்கள், நாம் மாலைதீவில் ஒரு தீவை ஈழநாடு என ஏற்படுத்த விரும்பியது போல,..ஒரு கோபம் , ஒரு தளம், அங்கே நோவாகோற்சியாவிலிருந்து இடம் பெயர்ந்த சோகத்தை , வலிகளை சேகரித்த பிரமாண்டமான அரும்பொருட்காட்சியகம் ஒன்று இருக்கிறது, அங்கே இவாஞ்ஜிலின் , தேவதையாகவும் , ராணியாகவும் சிலைகளாக,… நிற்கிறாள் , ஆங்கிலேயர் ராணியை வழிபடுறவர்கள், அதனால் தான் ,.. ராணியாகவும் அவளுக்கு ஒரு சிலை, ஏழை ராணி, ( யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி போல அதிருஸ்டக்காரப் பெண் )’ கயூன் ‘ க்கு என்ன அர்த்தம் ?, நோவாகோர்ஸியாவை பிரெஞ்சுகாரர் அழைத்த பெயரோ ? தெரியவில்லை, அன்று, லூசியான மாநிலத்தை பிரெஞ்சுக் காலனியாக ஆங்கிலேயர் ஏற்றிருக்கவில்லை, ஆனால் , அவர்கள் கையில் தான் இருந்தது, இவர்களை யார் கேட்டார்கள் ?, காலத்திற்கு காலம் ஒவ்வொருவர் பொலிஸ்காரராக நிற்க முயல்கிறார்கள், யாழ்ப்பாணத்தில் சிங்கள பொலிஸ் நிற்கிறது,

பிறகு , அம்மாநிலத்தை நெப்போலியன் அமெரிக்காவிடம் கொடுத்து விட்டதாக ,வித்ததாக,..கேள்வி, பிரிட்டன் அங்கே , கனடிய பழங்குடியினருக்கு என்று ஒரு மாநிலத்தை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருந்தார்கள், அந்த சிந்தனையும் அதோடு மடிந்து விட்டது, கனடா , முதல் குடியினர் என அழைக்கத் தொடங்கியதுடன் அவர்கள் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டது, அதிகாரப் பரவலாக்கமற்ற, ஒப்பந்தங்களுடனான சலுகைகள் , வசதிகள்,..என்ற வகையில் தான் இன்றும் பழங்குடியினர் பிரச்சனைகளை அணுகுகிறார்கள், அப்படி இருக்கிறதாலே அக்குடியினரின் குழந்தைகள் , சிறுவர்கள் கொன்று புதைக்கப்பட்டது, நிறைய இளம் பெண்கள் குலையுண்டு போய் இருப்பது ,சீரழிவுகள் ஒப்பேறுகின்றன, இலங்கையில் இனப்படுகொலை,இது கலாச்சாரப் படுகொலை என அழைக்கப்படுகிறது, மனித உரிமைப் பிரச்சனையில் இந்நாடும் சிக்குப் பட்டே கிடக்கிறது,

இங்கே எவ்வளவு பெரிய நிலம் இருக்கிறது, ஒன்ரோரியா மாநிலமே பெரிய நாடு போன்றது, அதில் பல ஐரோப்பிய நாடுகளையே அடக்கி விடலாம், கொடுக்கிறதுக்கு மனமுமில்லை , பிரிட்டனில் ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் பேர் பெற்றது, இங்கே நிகழ்ந்த பெண்களின் தொடர்க் கொலைகளை கண்டறிய அவர்கள் உதவியை நாடலாம், வெளிக்கு கனடா, அவுஸ்ரேலியா என்று அழைக்கப்ப்பட்டாலும் இவை பிரிட்டனின் மாநிலங்கள் தாம், அந்த சிந்தனை இல்லை, இங்கிருப்பவை சிஸ்டம் பிழை , சிஸ்டம் பிழை என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றன, பிரிட்டன் , இந்தியாவையும் மாநிலமாக வைத்திருக்கவே விரும்பியது, அரசகுடும்பத்தால் தான் சுதந்திரம் வழங்கப்பட்டது, காந்தியும் நேரத்தை வீணடிக்காது பாகிஸ்தான் என்று துண்டாடிக் கொடுத்த போதிலும் ஏற்றுக் கொண்டார், அது ஜின்னாவால்,..பிரிக்கப்படவில்லை, பிரிட்டனாலே நடைபெற்றது, பிரிவினை இந்தியாவிற்கு இன்றும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது, இவர்களைப் பார்த்து இலங்கையும் ஈழப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க பல வழிகளை கையாண்டு வருகிறது, ரஸ்யா , உக்ரேன் பகுதிகளை தன்னோடு சர்வசன வாக்கெடுப்புடன் சேர்த்துக் கொண்டதுடன்,…பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டது, முட்டாள் உக்ரேன் அரசுக்கு தான் இன்னமும் புரியவில்லை, உலக விதிகள் விளங்கவில்லை, இனி எதைப் பற்றிக் கதைக்கப் போறார்கள் , இந்த விதிப்பிரகாரம் தான் போக்லாண்ட் தீவு , பிரிட்டனுக்கு சொந்தமானது , கரிபியன் தீவுகள் , மெக்சிகோப் பகுதிகள் அமெரிக்க மாநிலமானது , பல தீவுகள் பிரெஞ்சு மாகாணமானது, பெரிய நாடுகள் எப்பவும் சிறிய நாடுகளை முட்டாளாக்கிக் கொண்டு தானிருக்கிறது, இலங்கை , உக்ரேன் ,…போன்றன பலிக்கடாகள் ,

கனடாவில் பழங்குடியினருக்கு என கொடுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு அருகில் எல்லாம் ஆங்கிலேயருக்கான சிறிய டவுண் ஒன்றும் இருக்கிறது, அவர்களுக்கு தான் அரச அதிகாரங்கள், இவர்களுக்கு இல்லை, இவர்கள் அதில் சேரலாமா , இல்லையா ? தெரியவில்லை, மத்திய அரச பகுதியில் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகிறது இடம் பெற்று வருகிறது, கனடா , ( காந்திஜி ” ஹரிஜன்கள்” ( கடவுளின் குழந்தைகள் ) என அழைத்தது போல) இவர்ககளையும் அழைத்து வருகிறது , இவற்றை பாராட்டவே வேண்டும், இப்ப தான் இவர்களுக்கென தனித்துவமான பொலிஸ் ஸ்டேசன்களை திறக்க வேண்டுமென சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள், அடுத்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வருகிற போது இவர்களுடைய திட்டங்களை எல்லாம் குப்பைக் கூடைக்குள் எறிந்து விடும், எழுத்தாளர்கள் இவர்களைக் குறித்து மேலும் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வரல் வேண்டும், தமிழ்ப் பத்திரிகைகளிலுமிவர்களுக்கென தினகரனில் குறிஞ்சிப்பரல் பகுதி போல ஒரு தனி பகுதியையே , நிகழ்ச்சி நிரலையே,.ஏற்படுத்த வேண்டும், இவர்களின் அனுபவங்களும் எமது விடுதலைக்கு தேவை,

கஸ்பி திராட்ஸைத் தோட்டம்

யாழ்ப்பாணத்தில் பணப்பயிரான புகையிலை வைத்தது போல அனபொலி கணவாயில்கஸ்பி பகுதியில் திராட்சை அதிகமாக செய்கை பண்ணுகிறார்கள், பூமலரின் வீட்டிலிருந்து பத்து கிலோ மீற்றருக்குள் இருக்கும், அதிக தூரத்தில் இல்லை. விரைவாக திராட்சை தோட்டத்துடன் இருந்த உணவகத்தை அடைந்து விட்டார்கள், லொப்ஸ்டர் கடலுணவு போட்ட சவுடார் சூப் , சன்விச்,.என எடுத்து டிசெர்ட்டும் எடுத்து சாப்பிடுகிறார்கள், திராட்சை தோட்டத்தில் இறங்கி படங்களையும் எடுத்துக் கொண்டு நடக்கிறார்கள், சீமேந்து தூண்களிட்டு வரிசை , வரிசையாக பந்தலிடடிருக்கிறார்கள் , திராட்சை பச்சைக்காய்களுடன் கிடக்கின்றன, கீழே சரிந்து கொண்டு போகும் நிலக்காட்சிகளையும்…பார்க்க முடிகிறது,

ஈழத்தில் சுயமாக மாகாணவரசு நிலவுமானால் வடமராட்சி வைன்கள் இந்நேரம் இங்கிருக்கும் வைன்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும், சுழியர்கள் நிச்சியமாக செய்திருப்பார்கள் , வலிகாமம் , தென்மராட்சிப் பகுதிகளில் திராட்சை அவ்வளவாக செய்கை பண்ணப் படவில்லை, மண்தான் காரணமாக இருக்கும் என நம்புகிறான், படித்த மாணவர் திட்டத்தில் அவன் வயயொத்தவர்கள்,..வடமராட்சியில் திராட்சையில் ஈடுபட்டதை வியப்போடு பார்த்திருக்கிறான். அவர்கள் எப்பவும் துணிச்சல் மிக்கவர்கள் தான் என்று சொல்லப்படுகிறது,

இன்று , அநாகரிக அரசால் எல்லாமே அழித்து சிதைக்கப்பட்டிருக்கிறது, மீண்டும் அது உயிர் பெறுமா ?,..பட்ட மரம் தளிர்க்குமா, தழைக்குமா? ஏக்கமாக கிடக்கிறது, மழைக் குணமாக இருந்தது, அதோடு வீடு திரும்பி விட்டார்கள், அவனுக்குத் தான் பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்கிறதே, பூமலருக்கும் , ஜெயந்திக்கும் கதைக்க நிறைய விசயங்கள் இருந்தன,

தேவாலயங்கள்

அவர்கள் அடுத்த நாள் ‘ஹைவே ஒன்’னிலே (லோக்கல் கைவே இலக்கம் ஒன்று வீதீ ) ஓடி இயற்கைக் காட்சிகளையும் , சிறு டவுண் போன்ற குடியிருப்புகளையும் பார்த்துக் கொண்டு டிக்பியைத் தாண்ற போது , பூமலர் ” கடலில் இங்கேயும் திமிங்கிலங்களைப்( கடல் ராஜாக்களைப் ) பார்க்க கூட்டிச் செல்கிறது இருக்கிறது ” என்கிறாள் , தொடர்ந்து ” இதிலே மனிதச் செயற்பாடுகள் எதுவும் இல்லை, தூர தள்ளி நின்று பார்த்தால் பறவைகள் கூட நம்மை மரம் என்று நினைத்து வந்து எம்மேல் அமரும் அல்லவா,அது போல திமிங்கிலமும்,..மனிதர்களை பொருட் படுத்துவதில்லை, இயற்கை ஆர்வலர்களின் குரல்கள் இங்கே ஒன்றும் ஒலிப்பதில்லை, எப்படி அந்த உருப்படி உடலை தூக்கி நீருக்கு மேலாக பாய்ந்து குத்துக் கரணம் போட்டு உடலை புரட்டி விளையாடுகின்றன, ஆச்சரியமாக இருக்கும் ” என்கிறாள், ஆள்களைக் கொல்கிற திமிங்கிலம் பற்றி தான் அவன் கதை , கதையாகக் கேட்டிருக்கிறான், இங்கே அபாயமற்றவையாய் இருக்கின்றனவே, சுறாவையே பயங்கர கடல் மிருகமாக கூறப்படுகிறது, அதில் , முலையூட்டியும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறவையும் இருக்கின்றன, மொத்ததில் அவை எல்லாமே கெட்ட சுறா தான் , இயற்கை எத்தனை சுவாரசியமான பாடங்களை வைத்திருக்கின்றது,

அப்படியே சென்று ஒரு தேவாலயத்தை அடைந்தார்கள்,

பத்து வருடங்களாக பொறுமையுடன் ஒவ்வொரு கற்களாக கொண்டு வந்து கட்டிய சாதனை தேவாலயம் அது, ” கோயில் இல்லா ஊர் பாழ் ” என்கிற இந்து க்களைப் போல பிரெஞ்சுகாரர்களும் முதலில் ஒரு பெருங்கோவிலைக் கட்டி , பிறகு அதைச் சுற்றி க் குடியிருப்புகளை எழுப்புகிறார்கள், சொந்த நாட்டில் எழுப்புறது நல்ல விசயம், ஆனால், அன்னிய மண்ணைப் பிடிக்க எழுப்புறது நெஞ்சை நெருடுகிறது , நீளகாலம் எடுததிற்கு,..எதிர்ப்புக்கள் பலமாக இருந்ததே இருக்கலாம், குருக்கள் கொல்லப்பட்டால்,.அவ்விடத்திலேயே உடலை புதைத்து புனிதர்களாக்கி,..விட்டு பலமாக நிற்பதே தொடர்கிறது, ஜெயந்திக்கும், பூமலருக்கும் கோயில்களை பார்ப்பதில் கொள்ளை ஆசை, தில்லைக்கு அதன் கட்டிடக்கலையைப் பார்ப்பதில் விருப்பம், நேரம், திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தது, எனவே வெளிப்புறத்தில் நின்று கோயிலோடு,’.கிளிக்’குகளை தட்டினர், செல்போன் கமரா காவுறதை இல்லாமல் செய்திருக்கிறது, கத்தோலிக்கர்கள் அழகிய சிலைகளையும் கோவிலைச் சுற்றி நிறுத்தி விடுகிறவர்கள், யேசு நாதர் பேசுகிறார், அவருடைய மலைப் பிரசங்கம் தான் பிரபல்யம், அக்காட்சியாய் தான் இருக்கும், ” ஒரு கன்னத்தில் அறைந்தால் , மறு கன்னத்தையும் காட்டு “, யேசுநாதர் கூறியது தான், காந்திக்கும் பிடித்த வசனம், காந்தி கூறியதில்லை ,

“இன்னொன்று முழுக்க மரத்தால் கட்டப்பட்ட பெருங்கோவில் இருக்கிறது, அது திறந்திருக்கலாம்,உள்ளே என்ன அழகான ஓவியங்கள் எல்லாம் வரைந்திருக்கிறார்கள் , ஒரு தடவை பார்த்திருக்கிறேன் ” என்றாள் பூமலர், அதே வீதியில் மேலும் ஓடினோம், போற போதே ஜெயந்தி செல்லில் குகூகிளில் பார்க்க, அதுவும் திருத்த வேலையில் மூடப்பட்டிருக்கிறது, கனடாவிலே முதலில் மரத்தால் எழுந்த தேவாலயம் அது தான், ” இது , எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஐரோப்பியரின் தலைமையிலே பல ஆண்டு காலம் எடுத்து கட்டி முடிக்கபட்டிருக்கிறது ” என்கிறாள், பாடம் படியாத மேதைகளும் உண்டு , அதிலும் நின்று…பல ‘ கிளிக்’ குகள்,

திரும்பி வரும் போது ” இங்கே தமிழ்ச் சனம் குறைவு, சைவக்கோயில்கள் இல்லை என்றே கூறலாம், ஒரு குரோசரி கடை கலிபஸில் திறந்திருக்கிறார்கள், இங்கே இருப்பவர்கள் எப்பவும் குழுவாகச் சேர்ந்து பார்ட்டி போல ஒன்று கூடுகிறார்கள். பொட்லக் பார்ட்டி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கறிகளைச் சமைத்துக் கொண்டு வருவார்கள், கோடை காலத்தில் காய்கறி பயிரிடுகிறார்கள், விளையிறதை பகிர்ந்தும் கொடுக்கிறார்கள், அப்படித் தான் நாம் பழகிறோம் ” என்றாள் பூமலர், இங்கே பூமலருடன் படித்தவர்கள் சிலர் வீட்டிலே தோட்டமும் போட்டிருக்கிறார்கள், மிதவெப்பநிலை கொண்ட தீவு, வளமிக்கமண்ணைக் கொண்ட அனபொலிவலிப் பிரதேசம், மழை அதிகமாக பெய்கிறது, நல்லபடியாய் விளைகிறது, விவசாயம் செய்த அனுபவமுள்ளவர்கள் வெற்றிகரமாகவே இங்கே, என்ன….. , கனடாவில் எந்த பகுதியிலுமே ஜீவிக்கலாம், பூமலர் குளிர்பெட்டியில் , உறைப்பகுதியில் காய்கறிகளை கழுவிப் போட்டு வெட்டி சிறிய பைகளில் போட்டு வைத்திருக்கிறாள், எடுத்து , எடுத்து சமைக்கிறாள், ” சித்திராவும் சுமியும் ரொரொன்ரோவிற்கு போய் விட்டால் எனக்கு இப்படி இருக்கிறதே போதுமானதாக இருக்கிறது ” என்கிறாள், வாட்ஸப்பும், முகநூலும் அவளுக்கு பெரிதும் உதவுகின்றன,

கையோடு கொண்டு வந்த தேனீர்,சிப்ஸ் , சன்விச் எல்லாம் முடித்திருந்தார்கள்,

வீட்டிற்கு வந்த பின் பூமலர் தோசை சுட்டாள், ஜெயந்தி கறி ஒன்றைச் செய்தாள், குளித்து சாப்பிட்ட பிறகு, தில்லை ,தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கிற ஒபீஸ்ரூம்க்கு வந்தான்,அங்கே இருந்த பெரிய கவுச்சிலே(கதிரை) இருந்து கொண்டு பொக்ஸ் சனல்களை தட்டி , தட்டி பார்த்தான், ரொரொன்ரோ சனல்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தன, சலிக்க,..அதற்கொரு குட்பை, அறவே துண்டித்திருப்பது நல்லாயிருப்பது போலவும் தோன்றியது, ” கரபானா ” எல்லாம் முடிந்திருக்கும், அங்கத்தைய பரபரப்பு தலையிடிகள் , தினமும் சுட்டுச் செய்திகள்,…என ஒன்றும் இல்லை , வீடு எரிந்து அதில் சாகிற துயரச் செய்திகளும் இல்லை, பிரிட்டனில் ஒரு தமிழ்க் குடும்பம் எரிந்த பிறகு , ஒரு கிழமை வரையில் தொடர்ந்து கேட்டு வந்தான், ரொரொன்ரொ நகரிலே தினமும் ஒரு வீடு எரிந்தது, சிறுவர்களும் , கூட தாயோ , தந்தையோ,.. இறக்கிறார்கள், மனது பெரிதா வலித்தது, அரசுகளிற்கு,..சாக்களைக் குறித்து அக்கறை இல்லை, பழங்குடியினரின் சாக்களும் அப்படியே கரைந்து போய்க் கொண்டிருக்கிறது, இலங்கைச் சிங்களவர் கலவரத்தில் நிகழ்த்திய கொடுமைகளை மறுபடியும் பார்க்கிறோம், சபிக்கப்பட்டவர்கள் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள், நாம் போராட வேண்டியது ஒட்டுமொத்த மக்களுக்காவும் தான், எமது விடுதலைப் போராட்டத்தில் கால் வைக்கிற போதே எம்மில் உள்ள அத்தனை மிருகங்களும் வெளிய வந்து விடுகின்றன, இயக்க மோதல் வலி நெஞ்சில் கிடக்கிறது, இவர்களுக்காக எப்படி போராடப் போறோம் ?

சாப்பாட்டு அறையிலிருந்து ஜெயந்தியும் , பூமலரும் கதைத்துக் கொண்டிருக்க மேலே இருக்கிற ரூமுற்குப் போய் பொன்னியின் செல்வன் பாகங்ககளை அள்ளிக் கொண்டு வரப் போனான், பூமலர் ” உனக்கு தேனீர் வேண்டுமானால் வந்து போட்டு எடுத்துக் கொண்டு போ ” என்கிறாள், சின்ன வயசில் அவளுக்கு குட்டு குட்டி பல தடவைகள் அழ வைத்திருக்கிறான், அதை மறந்து விட்டு பாசமாக இருப்பாள், இப்பவும் இருக்கிறாள், படிகளில் ஏறியதில் அலுப்பு ஏற்பட,..மேல்தட்டு மூலையில் இருந்த சாமி அலுமாரியை , இதுவரை பெரிதாக கவனிக்கவில்லை நின்று பார்த்தான், குட்டி , குட்டி யாக பல்வேறு நிலையில் தும்பிக்கையுடன் பிள்ளயார் சிலைகள் , படையாக நிற்கிறார், பரம்பரை அலகு கோணல்மாணலாகிப் விகாரமாகிப் பிறந்தவர்களிற்கு வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த பிள்ளையார் கடவுளைக் கொண்டு வந்தார்களோ ? என்று அவன் நினைப்பவன், அவன் அப்படி பலரைப் பார்த்திருக்கிறான், பச்சாபப்பட்டிருக்கிறான், கொழும்பு கொட்டகேனாவில் ஒரு பிச்சைக்காரன் ” கடவுள் எல்லாருக்கும் சமமாகவே குறைகளை வைத்திருக்கிறான், உனக்கும் ஒரு பெரிய குறை கிடக்கும் அதை ஒரு காலத்தில் உணர்வாய்” என்று கூறியதும் அவன் சாபம் இடுகிறானா? நினைத்தும் ஞாபகம் வந்தது,

அவனுடைய குடும்பத்திலும் யாரோ ஒருவர் ஒவ்வொரு காலத்திலும் பிள்ளையார் விசிறிகளாகவே இருந்திருக்கிறார்கள்,

சின்ன வயசில் பெரியக்கா பிள்ளையார் பக்தை, வீட்டின் பக்கத்திலிருந்த பன்றிகொட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு நித்திய பூஜைக்கு தவறாமல் போய் வருவார்,” பிள்ளையார், பிள்ளையார்,..பெருமை வாய்ந்த பிள்ளையார் ” பாடலையும் பாடுவார், அதற்கு முந்தி சின்னம்மா,..இருந்தார், கோவிலே கங்கைவேணி நிற்பதும் நினைவில் வந்தது, இவன், தங்கச்சி போற போது மோதகம் , அவல் , பொங்கல்,.. இப்படி ஏதாவது ஒன்றை தருகிற அண்ணர், இப்ப தங்கச்சி, பிள்ளையார் அதிசயமான கடவுள் தான், வட இந்தியாவிலிருந்த சமணர்கள் தான் எல்லா தெய்வங்களையும் பிறக்க வைத்தவர்கள், வாதாபிக் கணபதி என அவர்கள் தொழ,..பிறகு சைவக்கடவுளாகவும் பீடமேறினார், இவனும் பிறகு தொழப் போறான், ரொரொன்ரோ திரும்பிய பிறகு , அண்மையில் , கங்கை அமரன் எழுதிய வாழ்வின் நினைவுகள் பற்றிய ஒரு நூலை வாசித்திருந்தான், அதிலே , ” அண்ணர் ஒவ்வொரு நாளும் காலையிலும் சாமிப்படத்திற்கு முன்னால் நின்று கும்பிட்டு விட்டே காரியங்களை ஆரம்பிப்பார், அவரைப் பார்த்து நானும் பழகி விட்டிருக்கிறேன், சிறிது பாதகமாக நடைபெற்றிருந்தாலும் மனசு உடைந்து போகாமல் ஏற்றுக் கொள்கிறது, நன்மையாய் தான் இருக்கிறது ” என்கிறார், அன்றிலிருந்து பூமலர் கும்பிடுற பிள்ளையாரை இவனும் ,( பூமலர், ஜெயந்திக்கு கொடுத்திருக்கிற பிள்ளையார் சிலையை) களவாக கும்பிட்டு வாரான், ஏதோ ஒரு சக்தி காப்பாற்றும் என்ற நம்பிக்கை, இல்லா விட்டாலும் பரவாயில்லை, அவன் கும்பிடுற புண்ணியம் தங்கச்சிக்கு போய்ச் சேரட்டும்,

புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரும்பினான்,

– தொடரும்…

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *