தாமதமான மன்னிப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 20, 2013
பார்வையிட்டோர்: 6,198 
 
 

டில்லிருந்து சுப்பு கிளம்பும் போது, சக ஊழியன் திலீப் கிண்டலடித்தான். “சேர்மன் கூட ஹெலிகாப்ரில் இது வரைக்கும் பயணித்திருப்பாரா என்பது சந்தேகம். உங்களுக்கு இந்தவாய்ப்பு கிடைத்திருக்கு”.

கௌகாத்தியில் இறங்கியவுடன், வட கிழக்கு மாநிலம் ஒன்றின் தலை நகருக்கு புறப்பட தயாராய் இருந்தது அந்த பனிரெண்டு இருக்கை கொண்ட ஹெலி காப்டர். பரிசோதனைக்காக வரிசையில் நின்ற போதுதான், சுப்பு கவனித்தான், தனக்கு முன்னால் நிற்பது தன்னுடைய காலேஜ் சீனியர் ஈஸ்வரன் என்று. உடனே அந்த கசப்பான அனுபவமும் கண் முன்னே தோன்றியது.

சுப்பு கோவையில் கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது, ஈஸ்வரன் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தான். ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும். விளக்கை அணைத்து விட்டு அப்போது தான் படுக்கைக்குச் சென்றான். திடீரென்று நிறையபேர் ஓடி வரும் சத்தம் கேட்டது. கதவு படபட வென்று தட்டப்படும் சத்தம்கேட்டது. தூக்கக் கலக்கத்தில் சுப்பு போய்க் கதவைத்திறந்தான். முகத்தை கூட பார்க்காமல் இரண்டு கைகள் சரமாரியாகத் தாக்கின. அது தான் இந்த ஈஸ்வரன்…… உதடுகள் கிழிந்து, மூக்கு உடைந்து- இரத்தம் கொட்டியது சுப்புவிற்கு. ஈஸ்வரன் ஓடிவிட்டான். அவனோடு நிறைய பேர் ஓடியது கேட்டது.

பிறகு, அந்த விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேவந்தனர். அனைவரின் முகத்திலும், சுப்புவைப்போலவே இரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது.

பிறகுதான் தெரிந்தது, அந்த கல்லூரியில் ஆண்டாண்டாய் வரும் வழக்கப்படி இது நடந்தது என்று- அதாவது இரண்டாமாண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் தாக்குவது.

பிறகு, இரண்டொரு முறை நேருக்கு நேர் சந்தித்தது உண்டு. ஈஸ்வரன் பேச விழைவதாகத் தோன்றும். ஆனால் இரத்த அடி வாங்கிய சுப்பு முகம் கொடுத்து பேசியதில்லை. முதலில் அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான். பிறகு ஈஸ்வரன் படிப்பு முடித்து கல்லூரியை விட்டுப் போய்விட்டான். இப்போதுதான், ஐந்து வருடங்களுக்கு பிறகு மறுபடியும் பார்க்கிறான்.

ஈஸ்வரன் தன்னை அடையாளம் கண்டு கொண்டது தெரிந்தது. அவன் பக்கத்து சீ்ட்டில் வந்து அமர்ந்தால் நிலைமையை எப்படி எதிர் கொள்வது என்று யோசித்துக் காத்திருந்தான். நல்ல வேளை வேறுசீட் ஒதுக்கப்பட்டிருந்து. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சுகொடுத்தான். அந்த மாநிலத்தின் முக்கிய நபர்களுக்கும், டில்லியிலிருந்து வரும் அதிகாரிகளுக்கும் தான் இந்த ஹெலி காப்டர் சர்வீஸ் என்றார். தன்னை ஒரு எம்.எல்.ஏ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஹெலி காப்டர் புறப்பட்டு ஒரு நதியை ஒட்டி போய்க்கொண்டிருந்தது- அது பிரம்மபுத்திரா நதி என்று எம்.எல்.ஏ சொன்னார்.

ஊரை விட்டுத்தள்ளிய ஒரு இடத்தில் ஹெலி காப்டர் தளம் அமைந்திருந்தது.

ஹெலி காப்டர் இறங்கியதும், ஈஸ்வரன் ஓரிரு முறை பேசுவதிற்கு திரும்பியது போலத்தோன்றியது.

ஒவ்வொருவருக்கும் ஒருகார் காத்துக் கொண்டிருக்க, தங்களுக்காக காத்துக் கொண்டிருந்த காரில் புறப்பட்டுச் சென்றார்கள் மற்ற பயணிகள். அப்பொழுதுதான், சுப்புவிற்கு தான் செய்த தவறு புரிந்தது. அது- தான் பயணித்த மற்ற விமான தளங்களுக்கும், இந்த ஹெலி காப்டர் தளத்திற்கும் உள்ள வித்தியாசம். பனிரெண்டு பேர்மட்டும் ஒரு நாளைக்கு வருவதால், அவர்களை நம்பி டாக்ஸி ஸ்டாண்டு என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவரும், தங்களுக்கு கார் முன்னேற்பாடு செய்து கொண்டு வர வேண்டும். மனதில் படவில்லை. தான் தங்கப்போகும் ஓட்டலில் இருந்து வரச்சொல்லி இருக்கலாம்.

ஒவ்வொருவரும் தங்களுக்காக வந்திருந்த காரில் புறப்பட்டுச் செல்ல, ஒரே ஒரு கார் புறப்படாமல் நின்று கொண்டிருந்தது. அது, ஈஸ்வரனின் கார்.

மற்ற பயணிகள், இரண்டு பைலட்டுகள், சிப்பந்திகள் –எல்லோரும் சென்று விட்டனர். குளிர் அடிக்க தொடங்கியது. சுற்று முற்றும் ஆளரவம் இல்லை. பயம் தொற்றிக் கொண்டது.

ஈஸ்வரனின் கார் திறந்தது. சுப்புவை நோக்கி வந்த ஈஸ்வரன், “ நான் உன்ன காலேஜ்ல…….ஐந்து வருஷத்துக்கு முன்னால அடிச்சதுக்கு…..என்ன மன்னச்சிடுப்பா……கார்ல வந்து ஏறிக்க…….”.

தாரமங்கலம் வளவன் தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பிப்பிலும் இடம் பெற்ற பல படைப்புகள் சிறுகதைகள்.காமில் பதிவிடப் பட்டு இருக்கிறது. இவ்விரண்டு தொகுப்புகளும்,…மேலும் படிக்க...

1 thought on “தாமதமான மன்னிப்பு

  1. பேய் கதை லாம்கொஞ்சம் மொக்கையா இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *