செ.யோகநாதன்

 

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் – எழுதியவர்: முல்லை அமுதன் – 05 February 2008

1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர்.

ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு செ.யோகநாதன் அவர்களின் ‘ஒளி நமக்கு வேண்டும்’ எனும் குறுநாவல்களின் தொகுதியை வாசித்தபோது ஏற்பட்டிருந்தது. இத்தொகுதி மலர்வெளியீடாக 1973ல் வெளியிடப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே ‘யோகநாதன் கதைகள்’ எனும் கதைத்தொகுதியை வெளியிட்டார். இவருடன் கல்வி கற்ற செ.கதிர்காமநாதன், செங்கையாழியான், செம்பியன் செல்வன், க.நவசோதி இவர்களுடன் ஒப்பிடும் போது செ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு. குறுநாவல் எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். இவரின் ‘காற்றும் சுழி மாறும்’ நல்ல உதாரணம். வாகரையிலும், பூநகரியிலும் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின் நாட்டு நிலைமை காரணமாக 1983ல் இந்தியாவிற்கு செல்ல நேரிட்டது.

joganathanஈழத்தில் இருந்த காலத்தில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் மூலம் 1976ல் ‘காவியத்தின் மறுபக்கம்’ எனும் நூலை வெளியிட்டும் இருந்தார். அப்போது ‘வசந்தம்’ எனும் சிறுசஞ்சிகையை நடத்தியும் இருக்கிறார். இந்தியா சென்ற பின் வாழ்தலுக்காக எழுத வேண்டியிருந்தது. இதனால் எழுதுவதற்காக நிறைய உழைக்கவும், வாசிக்கவும் அதனால் நிறையவே எழுதவும் எனத் தூண்டப்பட்டார்.

இவரின் திரையுலக நண்பராக பாலுமகேந்திரா திகழ்ந்தார். இதனால் பல திரைப்படக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. உலகின் அதிக மொழிகளில் இவரின் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டன. 1991ற்குப் பிறகு தேனீர், குடிசை போன்ற கலைப்படங்களை எடுத்த ஜெயபாரதியின் திரைப்பட முயற்சிக்கு ஆதரவு கேட்டு என்னுடன் தொடர்பு கொண்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

இவரின் அரசியல் தத்துவசித்தாத்தங்களால் இவருடன் பலரும் இணையவும், விலகிக் கொள்ளவும் நேரிட்டது. தமிழக அரசு, இலங்கை சாகித்தி மண்டலம், ம.தி.மு.க இலக்கிய அணி, சிரித்திரன் குறுநாவல் போட்டி, லில்லி தேசியவிநாயகம்பிள்ளை, கலை இலக்கியப் பெருமன்றம், தகவம், சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்ற இலங்கையர் இவரே எனலாம்.

கே.டானியல், டொமினிக்ஜீவா, என்.கே.ரகுநாதன், அகஸ்தியர், அ.ந.கந்தசாமி, யோ.பெனடிக்பாலன் எனப்பலருடன் தன் நட்பைப் பேணிவந்த இவர் 13 நாவல்களும், 15 குறுநாவல்களும், 17 சிறுகதைத்தொகுதிகளும், 11 சிறுவர்நூல்களும், சினிமா, வாழ்க்கைவரலாறு என இரு நூல்களையும் வெளியிட்டுள்ளளார். இவர் சஞ்சயன் எனும் புனைபெயாரிலும் எழுதிவந்துள்ளார்.

இவரது மணைவி பெயர் சுந்தரலட்சுமி. இவர்களுக்கு டாக்டர். சத்தியன், டாக்டர். ஜெயபாரதி என இரு பிள்ளைகள் உண்டு. அரசியல், வாழ்வியல் தனக்கு சாதகமான ஒரு சூழலில் மீண்டும் இலங்கை திரும்பினார். நோய்வாய்ப்பட்டிருந்த இவரை தமிழக எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து நிதிப்பங்களிப்பு செய்து உதவியமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை வந்த இவர் எம் டி குணசேனா நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவில் கடமையாற்றினார். அவர்களால் வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இயங்கினார். முன்னர் சாதிய வர்க்க எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றிய அனுபவம் கொண்ட இவர் பளிச்சென விமர்சனங்களை முன்வைப்பது இவரது குணமாகும்.

சிறுவர் இலக்கியத்தின் மீதான ஆர்வமே இவரது மகனையும் அந்தத் துறையில் எழுதத் தூண்ட வைத்தது. தமிழக, ஈழத்து பிரபல விமர்சகர்களின் நேசிப்புக்குள்ளான இவர் சுதாராஜின் சிறுகதைகளைத் தொகுத்ததுடன் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெள்ளிப்பாதசரம், ஒரு கூடைக் கொழுந்து எனும் பாரிய தொகுப்புகளை வெளியிட்டும் உள்ளார். பின்னாளில் யாழ்ப்பாணம் சென்று யாழ் அரசதிணைக்களத்தில் கடமையாற்றினார். இவர் பற்றி கைலாசபதி இப்படிக் கூறுகிறார். ‘யோகநாதனின் கதைகள் வாழ்வில் யதார்த்தத்தை சித்தரிக்கிற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவினையும் பெற்றிருக்கின்றன. கதைகளின் கலையழகு வெகுஇயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு, எழுத்தாளனின் சிந்தனைத்தெளிவு, பார்வை என்பனவே காரணம் என்பர் மேனாட்டு விமர்சகர். யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன என்று துணிந்து கூறலாம்.’

28.01.2008 ல் அமரரான அவரது பூதஉடல் 30.01.2008 ல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. எழுதுக்காய் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் கனவு மெய்பட எமது அஞ்சலியையும் உரமாக்கிக் கொள்வோம்.

செ.யோநாதனின் நூல்கள்:

நாவல்கள்

  1. ஜானகி
  2. தனியாக ஒருத்தி – 1992
  3. தஞ்சம் புகுந்தவர்கள் – 1993
  4. கிட்டி -1994 , 2006
  5. வனமலர்
  6. நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே – 1993
  7. நியாயப்படுத்தப்பட்ட கொலைகள்
  8. சிறுபொறி பெருந்தீ – 1993
  9. துன்பக்கேணியில்
  10. மீண்டும் வந்த சோளகம் – 1996
  11. அசுரவித்து
  12.  மிஸ். கமலா
  13.  அரசு – 1993

குறுநாவல்கள்

  1. கனவுகள் ஆயிரம்
  2. ஒளிநமக்கு வேண்டும் – 1973, 1997
  3. காவியத்தின் மறுபக்கம் – 1976
  4. இரவல் தாய்நாடு – 1982, 1986
  5. தலைவர்கள்
  6. சுந்தரியின் முகங்கள்
  7. இனிவரும் வசந்தங்கள்
  8. காணி நிலம் வேண்டும்
  9. அகதியின் முகம்
  10. காற்றும் சுழி மாறும் -2002
  11. இன்னும் இரண்டு நாட்கள்
  12. அசோக வனம் – 1998
  13. ஆகாயத்தாமரை
  14. கேட்டிருப்பாய் காற்றே
  15. மேலோர் வட்டம்

சிறுகதைகள்

  1. கண்ணீர் விட்டே வளர்த்தோம்
  2. தேடுதல்
  3. அந்திப்பொழுதும் அந்தாறு கதைகளும்
  4. காற்றில் ஏறி விண்ணையும் சாடலாம்
  5. ஒரு சொல்
  6. அவளுக்கு நிலவென்று பேர்
  7. வீழ்வேன் என்று நினைத்தாயோ?
  8. மூன்றாவது பெண்
  9. கண்ணில் தெரிகின்ற வானம்
  10. அன்னை வீடு
  11. மாசறு பொன்னே
  12. விநோதினி
  13. யோகநாதன் கதைகள்
  14. அண்மையில் ஒரு நட்சத்திரம்
  15. கனவு மெய்படும்
  16. இன்னும் இரண்டு நாட்கள்
  17. இத்தனையும் ஒரு கனவாக இருந்தால்

சிறுவர் இலக்கியம்

  1. சிறுவர் கதைக்களஞ்சியம்
  2. சூரியனைத் தேடியவன்
  3. சின்னஞ் சிறு கிளியே
  4. காற்றின் குழந்தைகள்
  5. தங்கத்தாமரை
  6. அதிசயக் கதைகள்
  7. அற்புதக் கதைகள்
  8. எல்லோரும் நண்பர்களே
  9. மந்திரமா? தந்திரமா?
  10. நான்கு கதைகள்
  11. வெண் புறா

வாழ்க்கை வரலாறு

  1. சுவாமி விபுலானந்தர்

சினிமா

  1. பெண்களும் சினிமாவும்

தொகுப்பு நூல்

  1. வெள்ளிப்பாதசரம் – 1993
  2. ஒரு கூடைக்கொழுந்து – 1994
  3. சுதாராஜின் சிறுகதைகள்

விருதுகள்

செ. யோக­நாதன் இந்­திய மத்­திய அரசின் பரிசு உட்­பட தமி­ழக அரசின் விரு­தினை நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார். உயர் இலக்­கிய விரு­தான இலக்­கியச் சிந்­தனை விரு­தி­னையும் நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார். இலங்கை சாகித்­திய விருது நான்கு தடவை கிடைத்­துள்­ளது.

முகவரி: 4/4,மூத்த விநாயகர் முதலாம் ஓழுங்கை
கச்சேரி நல்லூர் வீதி
யாழ்ப்பாணம், இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *