உருகிய வில்லன்
கதையாசிரியர்: என்.சொக்கன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 35,600
டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது.
ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250 சொற்களில் (ஆங்கிலக்) கதை எழுதவேண்டும். அந்தக் கதையின் நிறைவில் அந்த வில்லன் ஹீரோவாக மாறிவிடவேண்டும். இந்த மாத Theme “Make the world a better place” என்பதால், கதை அதற்குத் தகுந்தவிதமாகவும் அமையவேண்டும்.
இப்படி அவர்கள் தந்த ஐந்து வில்லன்களில் ராவணனை எடுத்துக்கொண்டு நானும் நங்கையும் ஒரு கதை செய்தோம். நங்கை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டிக்குச் சமர்ப்பித்துவிட்டாள். நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.
********************************************
உருகிய வில்லன்
********************************************
ராவணன் கோபத்தில் கொதித்தான்.
காரணம், ராமனும் அவனது குரங்குப் படையும் இலங்கைக்கு வந்துவிட்டார்கள். ராவணனோடு போரிடத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
பத்துத் தலை ராவணன், பார்ப்பவர்களெல்லாம் நடுங்கும் ராவணன், போயும் போயும் ஒரு மனிதனுடன், குரங்குக் கூட்டத்துடன் மோதுவதா? அவமானம்!
ராவணன் ஆத்திரத்தில் அவர்களை நசுக்கிவிட எண்ணினான். எல்லாரும் அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தார்கள்.
தன்னுடைய பெரிய தேரில் ஏறினான் ராவணன். சிறந்த ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்றான். அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய படை வந்தது. நடந்து வரும் வீரர்கள், குதிரையில் வருகிறவர்கள், தேர்மேல் வருகிறவர்கள், யானையில் வருகிறவர்கள்… எல்லாரும் ராவணனின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். அவன் தலையசைத்தால் எதிரிமீது பாய்ந்துவிடுவார்கள்.
ராவணன் போர்க்களத்துக்கு வந்தான். தன் எதிரிப் படையை அலட்சியமாகப் பார்த்தான். சட்டென்று அவன் முகம் மாறியது. ‘இவங்கல்லாம் போர்க்கு இன்னும் தயாராகலையா?’
’ஏன் அப்படிக் கேட்கறீங்க?’ ராவணனின் படைத் தளபதி விசாரித்தான்.
‘ஒருத்தர் கையிலயும் ஆயுதத்தைக் காணோமே!’
படைத் தளபதி சிரித்தான். ‘குரங்குகளுக்கு ஏது ஆயுதம்? அவங்களுக்கு வாளை எந்தப் பக்கம் பிடிக்கறதுன்னுகூட தெரியாது!’
‘அப்புறம் எப்படிச் சண்டை போடுவாங்க?’
‘சுத்தி ஏகப்பட்ட மரங்கள், பாறைகள்லாம் இருக்கே, அதைப் பிடுங்கி நம்ம மேல எறிவாங்க, அதுதான் அவங்களோட ஆயுதம்!’
ராவணன் சற்றே யோசித்தான். பிறகு ராமனைப் பார்த்து, ‘நமக்குள்ள சண்டை வேண்டாம், இந்தப் போரை நிறுத்திடுவோம், நீ என்ன கேட்டாலும் தந்துடறேன்’ என்றான்.
எல்லாரும் வியந்துபோனார்கள். போருக்கு வந்த ராவணன் இப்படித் திடீரென்று மனம் மாறியது ஏன்? இந்தக் குரங்குகளைப் பார்த்துப் பயந்துவிட்டானா?
‘இல்லை!’ என்றான் ராவணன். ‘ஏற்கெனவே நம்ம பூமியில மரங்கள் குறைஞ்சுகிட்டிருக்கு, சுற்றுச்சூழல் பாழாகிட்டிருக்குன்னு சொல்றாங்க, இந்த லட்சணத்துல இத்தனை குரங்குகளும் ஆளுக்கு நாலு மரத்தைப் பிடுங்கிச் சண்டை போட்டுச்சுன்னா இன்னும் பிரச்னை, நம்ம சண்டைக்காக உலகத்தைப் பாழாக்கணுமா? அதான் என் மனசை மாத்திக்கிட்டேன்!’
போரைப் பார்ப்பதற்காக வந்திருந்த தேவர்களும் ராவணனைப் பாராட்டிக் கை தட்டினார்கள்!
– 07 03 2015
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026