இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,698
சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான ஆற்றலும் செல்வமும் வந்து சேரும். சியமந்தக மணி இருக்கும் இடத்தில் மாதம் மும்மாரி பெய்யும். சுபிட்சம் நிலவும். பகைவர்களால் எந்தத் துன்பமும் உண்டாகாது. ஆனால், தூய்மையற்றவர்கள் அந்த மணியை அணிய நேர்ந்தால் கொடுந்துன்பம் நேரும்.
முதலில், சூரிய பகவானின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது இந்த மணி. சத்ராஜித் என்ற மன்னன் சூரிய வழிபாட்டிலும் பக்தியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். இதில் மகிழ்ந்த சூரியன், சியமந்தக மணியை சத்ராஜித்துக்கே வழங்கினார். சியமந்தக மணியின் பெருமை எங்கும் பரவியது. கொஞ்ச காலம் ஆனது. சத்ராஜித்துக்கு பயம் பிடித்துக் கொண்டது. ஏன்?
‘பகவான் கிருஷ்ணர், என்னிடம் ஏற்கெனவே இதைக் கேட்டார். என்னிடமுள்ள சியமந்தக மணியைப் பறித்து வேறு எவரிடமாவது கொடுத்து விட்டால் என்ன செய்வது ?’ என்று பயந்த சத்ராஜித், உடனே அதைத் தன் சகோதரன் பிரசேனன் கழுத்தில் அணிவித்தான்.
ஒரு நாள் பிரசேனன், காட்டில் வேட்டையாடி னான். அன்று ஏராளமான மிருகங்களைக் கொன்று குவித்தான். இந்தப் பாவச் செயலால் சியமந்தக மணியை அணியும் தகுதியை அவன் இழந்து விட்டான். அதனால் சிங்கம் ஒன்று, பிரசேனனைத் தாக்கிக் கொன்று தரதரவென இழுத்துச் சென்றது.
அப்போது தற்செயலாக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்த ஜாம்பவான் என்பவன், பிரசேனனை இழுத்துவரும் சிங்கத்தைக் கொன்றான். பிரசேன னின் கழுத்தில் கிடந்த மணியின் அருமை தெரி யாத அவன், தன் குழந்தைக்கு விளையாடப் பயன்படும் என்று அதைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். பிரசேனன் இறந்தது, சியமந்தக மணி களவு போனது ஆகிய இரண்டு பழிகளும் இப்போது பகவான் கிருஷ் ணர் மீது விழுந்தன. ‘கிருஷ்ணர்தான் பிர சேனனைக் கொன்று சியமந்தக மணியைத் திருடிவிட்டார்!’ என்ற பழி கிளம்பியது. அந்தப் பழியிலிருந்து விடுபடுவ தற்காக கிருஷ்ணர் சியமந் தக மணியைத் தேட ஆரம் பித்தார். அப்போதுதான் அது ஜாம்பவானிடம் இருப்பது கிருஷ் ணருக்குத் தெரிந்தது. எனவே, அவர் ஜாம்பவான் வசிக்கும் குகையை நோக்கிச் சென்றார் ஜாம்பவான் அந்த மணியை இழக்க விரும்பாததால், பகவானுடன் யுத்தம் செய்தான். அதில் ஜாம்பவான் தோற்றுக் கீழே விழுந்தான். கிருஷ்ணர் அவனைத் தொட்டு எழுப்பியபோதுதான், தான் போரிட்டது ஸ்ரீமந் நாராயணனுடன் என்பது ஜாம்பவானுக்கு விளங்கியது. பின்னர் கிருஷ்ணரை வணங்கி, மன்னிப்புக் கோரியதுடன் சியமந்தக மணியை அவருக்கு வழங்கி, தன் மகள் ஜாம்பவதி யையும் திருமணம் செய்து வைத்தான்.
உடனே, சியமந்தக மணியை மன்னன் சத்ராஜித்திடம் ஒப்படைத்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரைத் தவறாக நினைத் ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்ட சத்ராஜித், தன் அருமை மகள் சத்தியபாமாவை அவருக்கு கன்னிகா தானம் செய்து கொடுத்தான். சத்தியபாமாவின் மீது தீரா ஆசை கொண்ட கிருதவர்மா, சததனுவா போன்ற யாதவர்கள் கிருஷ்ணர் இல்லாத நேரத்தில், சத்ராஜித்தைக் கொன்று அந்த மணியைக் கைப்பற்றினர்.
இதை அறிந்த கிருஷ்ணர், சததனுவாவுடன் போர் தொடுக்கக் கிளம்பினார். அதற்குள் உஷாரான சததனுவா, சியமந்தக மணியை அக்ரூரரிடம் ஒப்படைத்து, பாதுகாக்கு மாறு கேட்டுக் கொண்டார். பகவான் தொடுத்த போரில் சததனுவா மாண்டு போனான். ஒரு சந்தர்ப்பத்தில் அனை வரும் கூடியிருக்கும் சபையில் அக்ரூரரை வரவழைத்த கிருஷ்ணர், அவர் வாயாலேயே சியமந்தக மணி இருக்கும் விஷயத்தை வரவழைத்து, அந்த மணி தகுதி படைத்த அக்ரூரரிடமே இருக்கட்டும் என்று அருளினார்.
தன் மீது விழுந்தது அவப் பழி என்பதை உணர்ந்ததும் அதை நீக்குவதில் கண்ணன் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பது நமக்கு எல்லாம் ஒரு பாடம்.
– ஆர். சுப்பிரமணியன், சென்னை-91
தொடர்புள்ள சிறுகதைகள்
சீதா பிராட்டியின் கடிதங்கள்
குமுதினி
May 4, 2026
ஆத்துமத் தச்சன்
ஆர்.எஸ்.ஜேக்கப்
March 22, 2026
அன்பிற்கும் உண்டோ…?
ஆர்.எஸ்.ஜேக்கப்
March 17, 2026