வேம்பும் அமுதமும்




பெருந்திருமாவளவன் அவையில் அமர்ந்திருந்தான். மாடலன் மதுரைக் குமரனார் வந்தார்.
“போய் வருகிறேன் மன்னா ” என்றார்.
“புலவரே, பரிசில் பெறாமல் போகிறீர்” என்றான் வளவன்.
“புறப்பட்டு விட்டேன். பக்கத்து நாட்டிற்குச் செல்கிறேன். அவன் ஒரு சிற்றரசன்தான். வறுமையால் வாடுகிறான். வரகஞ் சோறுதான் கொடுப்பான் அதுவே அமுதம் மாவேந்தரேயாயினும், மதியாதாரை நாங்கள் மதிப்பதில்லை. அவர் செல்வத்தை மதிப்பதில்லை. அது வேம்பு ” என்றார் புலவர்.
புலவரைத் தேற்றிப் பரிசளித்து அனுப்பினான் வளவன்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்