வித்தியாசமான விவாகரத்து





மதியம் மூன்று மணி இருக்கும். என் மனைவி விமலா காப்பித் தூள் வாங்கிக் கொண்டு வருமாறு என்னைப் பணித்தாள். வீட்டை வீட்டுக் கிளம்பி ஐந்து நிமிடங்கள் காரை ஓட்டிய பிறகு தான் தெரிந்தது நான் பர்ஸை எடுக்க மறந்து விட்டேன் என்று. சலித்துக் கொண்டே காரை திருப்பினேன். திரும்பிச் சென்று, விமலாவை தொந்திரவு செய்யக் கூடாது என்பதற்காக அமைதியாக வீட்டிற்குள் நுழைந்து, என் பர்ஸை எடுத்துக்கொண்டேன்.

விமலாவின் அறை மூடப்பட்டிருந்தது. தொலைபேசியில் அவள் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது.
“ஆம், நான் ஒப்பந்தத்தை முறிக்க விரும்புகிறேன்.”
“……”
“நீங்கள் அனுப்பிய சேகர் மீது எந்தத் தவறும் இல்லை. மறைந்த எனது கணவரின் நினைவுகள் அனைத்தும் சேகரிடம் உள்ளன. அவர் என் கணவரைப் போலவே செயல் படுகிறார்…”
“……”
“குறை ஒன்றும் இல்லை என்றாலும், சேகர் ஒரு இயந்திரம் என்பதை என்னால் மறக்க முடியவில்லை. அவரால் என் கணவரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியாது.”
என் கையிலிருந்த பர்ஸ் தொப்பென்று கீழே விழுந்தது.
அரை நிமிட மௌனத்திற்குப் பின் விமலா தன் குரலை உயர்த்தி, “சேகர், என்ன சத்தம் அங்கே? அதற்குள் கடையிலிருந்து வந்து விட்டீர்களா?” என்றாள்.