விடியல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 271 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தனுடைய குனிந்திருந்த தலை நிமிர்ந்தது. 

வேலை முடிந்தது. 

தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி முகத்து வியர்வையைத் துடைத்து விடுகின்றான். 

வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி உடலை வளைத்து நெளிவெடுத்து நாரிக் கொதிப்பை ஆற்றுகின்றான். 

மலையிலிருந்து இயற்கைத் தாயின் பால் அருவியாக வடிந்து ஓடுவது போல, அவனுடைய உருண்டு திரண்ட உடலிலிருந்து வியர்வை வழிந்து ஓடுகின்றது. 

வியர்வையை ஆற்றிக் கொண்டு, மேலில் வியர்வை யுடன் அப்பிக்கிடந்த செம்பாட்டுப் புழுதியை வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் கழுவிவிட்டு, மரவள்ளி மரக்கெட்டிற்குள் சுருட்டிவைத்திருந்த தனது நாலு முழக் கந்தையை எடுத்துக் கட்டுகின்றான். 

வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல, ‘கமக்காரன்’ செல்லையாவின் முகத்தை ஆவலுடன் நோக்குகின்றன கந்தனின் கண்கள். 

“என்னடா வேணும்?” 

கந்தனிலும் பார்க்க செல்லையா வயதில் குறைந்த வராயினும், அவருடைய குரலில் அதிகாரத் திமிர் தொனிக்கின்றது. 

“ஒண்டுமில்லைக் கமக்காறன்…. கூப்பன் வாங்க…..’ ஏக்கம் நிறைந்திருக்கின்றது அவன் குரலில். 

“இப்பொண்டுமில்லை. ஆறுதலாய்ப் பாப்பம், போ.” அலட்சியமாகக் கூறுகின்றார். 

கந்தன் தயங்கியபடியே நிற்கின்றான். 

“ஏனடா நிக்கிறாய்? ஒருக்காச் சொன்னாக் காணாதோ? போடா.” 

கோபத்தில் ஜனித்த சொற்கள் தெறித்து விழுகின்றன. பயமும் ஏமாற்றமும் முட்டி மோதுகின்றன கந்தனுடைய இதயத்தில். 

மண்வெட்டியைத் தூக்கித் தோளில் வைக்கின்றான். அவனுடைய சோர்ந்த கால்கள் தயக்கத்துடன் அசைகின்றன. 

ஏமாற்றம் எரிச்சலாக மாறுகின்றது. 

‘சீ, என்ன கடைகெட்ட சீவியம்? வேலை செய்து போட்டு மனிசன் காத்தைக் குடிக்கிறதெண்டு இனைக்கினை போலை கிடக்கு. இப்பென்னண்டு கூப்பன் வாங்கிறது? அவளும் புள்ளை வயித்தோடை……. இந்தக் கமக்காறருக்கு மனச்சாச்சி எண்டு ஓண்டு இருந்தால் இப்படிச் செய்வினையே? 

‘மனச்சாச்சி அவைக்கெங்காலை? நாங்கள் பாட்டடி அடிச்சுக் குடுக்கிறம். அவை சுவமாயிருந்து சாப்பிடீனை. கட்சி வேலை செய்தவரை கூலியாவது குடுத்தால்….. 

‘நாங்கள் என்ன அவேட்டைச் சும்மா புண்ணியத்துக்குக் கேக்கிறமே? வேலை செய்த கூலியைத்தானே கேக்கிறம். 

‘இந்த காசை நாங்கள் வாங்கி, அவையைப் போலை வட்டிக்குக் குடுக்கிறமே? இல்லாட்டி வரியம் வரியம் காணி வாங்கிறமே?அண்டண்டாடு எங்கடை வயித்தைக் கழுவத் தானே நாங்கள் கூலிப் பிழைப்புக்குப் போறம். அவை என்னண்டால், இப்ப இல்லை போடா, நாளைக்கு வா, பிறகு வா எண்டு சொல்லினை.’ 

வலது தோள் எரிகின்றது. வலது தோளிலிருந்து மண்வெட்டியை இடது தோளுக்கு மாற்றுகின்றான். 

‘அவை சொல்லுறதை நாங்களாராவது எதிர்த்துக் கதைச்சா முடிஞ்சுது காரியம்’ 

‘அண்டைக்கு அவன் வெள்ளையனுக்கு நடந்ததை இனைக்க……’ 

‘பாவம், அவனும் அஞ்சாறு பஞ்சானும் குஞ்சுகளு முள்ளவன். அவன் வெண்காயத்துக்குப் பாத்திகட்டிக் குடுத்த கூலியைக் குடாமல் பேந்துவா பின்னைவா, வாழைக்குலை வித்துத் தாறன், வெண்காயம் வித்துத்தாறன் எண்டு கந்தை யாக் கமக்காறன் ஏமாத்திக் கொண்டிருந்தார்.’ 

‘கமக்காரன், இல்லையெண்டால் இல்லையெண்டு சொல்லும். ஏன் இண்டைக்கு வா நாளைக்கு வா எண்டு என்னை அலக்களிக்கிறீர்? எண்டு வெள்ளையன் கேட்ட துக்கு, மரவள்ளிக் கட்டையாலை போட்டு வாட்டுவாட்டெண்டு வாட்டினார் கந்தையாக் கமக்காறன். கேக்க ஆளில்லை யெண்டு தானே இந்த அநியாயம்?’ 

‘ஏன் எனக்கெல்லாம் எத்தினை தரம், எத்தினை பேர் அடிச்சினம்? தோளாலை சால்வை எடுக்கேல்லை எண்டு. தம்பிராசாக் கமக்காரன் உழவு சவுக்காலை அடிச்சார். கோயிலுக்கு இளனி வெட்ட வரேல்லை எண்டு கதிரவேலுக் கமக்காறன் கலைச்சுக் கல்லாலை எறிஞ்சார். காசில்லாமல் கள்ளுத் தரேல்லை எண்டு முத்துவேலுக் கமக்காறனும் சண்ணுவக் கமக்காறனும் உதைச்சினை.’ 

இந்த அடிகள் எல்லாம் கந்தனுடைய இதயத்தில் மாறாத தளும்புகளாகிக் கிடக்கின்றன. 

அவனுடைய இதயத்தில் இருக்கின்ற இத் தளும்புகள் புரையோடி எரிமலையாகிக் குமுறி வெடிக்கும் தருவாயிலிருக்கின்றன. 

‘பொலிசிட்டைப் போனாலும் அவங்கள் கைக்கூலியை வாங்கிக் கொண்டு எங்களை அடிச்சுக் கலைக்கிறாங்கள்.’ செம்பாட்டு வெளியைக் கடந்து பனங்கூடலுக்குள் வருகின்றான் கந்தன். 

பாழ்வெளியில் அனல் கக்கும் வெய்யிலுக்குள் நடந்து வந்த அவனுக்குப் பனங்கூடல் நிழலின் குளுமை ஆறுதல் கொடுக்கின்றது. 

பனங்கூடலைக் கிழித்துக் கொண்டு வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப்பாதை வழியே சோர்ந்து போய் நடக்கின்றான். 

பாதையோரத்தில் அரைவாசி வெட்டப்பட்ட பாளையுடன் ஒரு கள்ளுமுட்டி உடைந்து சிதறிப் போய்க் கிடக்கின்றது. கள்ளுமுட்டி உடைந்து போய்க் கிடந்த இடத்தில் நிற்கும் பனையை அண்ணாந்து பார்க்கின்றான். 

அரைவாசி வெட்டப்பட்ட பாளையிலிருந்து பனையின் வேதனைக் கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிகின்றது. 

கந்தனுடைய உள்ளத்தில் குமுறல், கண்களில் கண்ணீர். முதல் நாள் நடந்த சம்பவம் அவனுடைய உள்ளத்தில் பளிச்சிடுகின்றது. 

சின்னான்ரை வாயிலை மண்போட வேலுப்பிள்ளைக் கமக்காறன்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேணும். 

‘நேற்று சின்னான் செல்லத்துரை கமக்காறனுக்கு இறச்சுப்போட்டு களைத்துப் போய் வந்தானாம். வாறவழியிலை வேலுப்பிள்ளைக் கமக்காறன் ஒரு பனை ஓலை வெட்டீடச் சொன்னாராம்.’ 

“களைச்சுப் போய் வாறன் கமக்காறன். காத்தாலை குடுத்தி ஓண்டும் தின்னேல்லை. கால்கை எல்லாம் பதறுது. பின்நேரம் ஓலை வெட்டிக் கொண்டந்து உங்கடை வீட்டிலை போடுறன்” எண்டு சின்னான் சொன்னானாம். 

“இல்லை இப்ப வெட்டித் தா.” 

“இப்ப என்னாலை பனேலை ஏறேலாது கமக்காறன். உம்மாணை கால்கை எல்லாம் சோருது. சத்தியமாய் பின் நேரம் வெட்டித்தாறன்.” 

“சரிபோடா. நீ வெட்ட வேண்டாம். உங்களுக்கு இப்ப புளிப் புடிச்சிட்டுது. உதெல்லாம் எடுத்துத்தாறம்” எண்டு நேத்து சொன்னாராம். 

‘இப்ப….. இந்த நாசமாய்ப் போன வேலை இவைக்கு ஏன்? இதை ஆர் கேக்கிறது?’ 

‘ஏழை எளியதுகள் சீவிக்க வழியில்லாமைக் கிடக்கு. எங்கடை ஆக்கள் ஒரு மாதிரித் தலையெடுக்க…. அவை மட்டம் தட்டப் பாக்கினை.’ 

‘அவன் சீனியன்அணிலைப் போலை அஞ்சாறு தென்னை மரத்திலை கள்ளுக்கட்டி, லீவான நேரம் கூலிக்கு பாட்டடி அடிச்சு, வாயை வயித்தைக் கட்டி, ஒரு மாதிரி ஒரு கல்வீடு கட்டினான். அதைத் தான் சும்மா விட்டினையே?’ 

‘கள்ளு வித்த காசிலை கல்வீடு கட்டிப் போட்டான்” எண்டு சில பேர் கேலிபண்ணினை.’ 

‘சீனியன்ரை வீடு குடிபூந்த அண்டிரவு, மந்துவிலார் வந்து பாட்டுக் கச்சேரி வைச்சுக் கொண்டிருக்கேக்கை ஐஞ்சாறு கல்லெறி விழுந்தது. வெளியாலை போய்ப் பாக்கேக்கை சண்முகக் கமக்காரன்ரை மோனும் வேறை நாலைஞ்சு பேரும் ஓடிப் போனதை டோச்சு லைட்டு வெளிச்சத்திலை கறுத்தானும் நானும் கண்டம்.’ 

‘இதுக்கு, நாங்கள் ஆரோடை என்னத்தைப் பேசிறது? பறஞ்சால் எங்கடை சீவியம் துலையவேண்டியதுதான்.’ 

‘அவேலை ஒரு அஞ்சாறு பேர் இருக்கினை. எங்கடை பெண்புரசு கூட மானம் மரியாதையோடை இருக்க வழியில்லை.’ 

அந்த நாசம்விழுவான் சீனியனிட்டைச் சொன்னனான் குமர்ப் பெட்டை இருக்கிற இடத்திலை கள்ளு யாவாரம் செய்யாதையெண்டு, அதை அவன் கேட்டானே?’ 

‘அவன்ரை மோளும் ஒரு மாதிரி. வத்தகப்பழம் மாதிரிச் சிவப்பாய் சதைப்பிடிப்பான தேகக்கட்டு பாளைக் கத்தியைப் போலை பளபளக்கும் செந்தளிப்பான முகம். எங்கடை பட்டணத்துப் பொம்புளையளைப் போலை உடுத்துக்கிடுத்து, அடிக்கடி முகத்துக்கு மாபூசிச் சோடிச்சு……. பாக்கிறவேன்ரை கண்ணுக்குப் பொறித்தட்டக் கூடிய இலச்சணம். அவளின்ரை சிரிப்பு பார்க்கிறவையை மயக்கித் தலைகிறுகிறுக்க வைக்கும்.’ 

அவளிலும், கள்ளுக் குடிக்கவாற கமக்காறரிலை ரண்டு மூண்டு பேர் கண் போட்டிருக்கினை எண்டு நான் தெரிஞ்சவுடனை சீனியனுக்கு சொன்னனான். அவளை பட்டணத்துச் செல்லன்ரை மோனுக்குக் கெதியாய்க் கலியாணம் கட்டிக் குடு எண்டு சொன்னன். சீனியன் அதைக் கேட்டானே?’ 

‘அண்டைக்கு சீனியன்ரை பெண்சாதியும் எங்கையோ போட்டாளாம். சீனியனும் சீவலுக்குப் போட்டான். கள்ளுக் குடிக்க வந்த ராசதுரைக் கமக்காரன் அவளைப் புடிச்சிழுத்து, அவள் குளற, ஆக்கள் ஓடிப் போய்…… ராசதுரை அவளுக்குத தேப்பனைப் போலை, தலைநரைச்சவர். அப்பிடி எண்டாலும் ஒரு வாளிர வளரிற பயிரை இப்பிடி……’ 

‘இப்பிடி வேறை ஊரிலை எங்கடை ஆக்களுக்குச் செய்தால் உடனை துண்டு துண்டாய் வெட்டிப் போடுவாங்கள் எண்டு முத்தன் சொன்னான். எங்கை யாழ்ப்பாணப் பட்டின த்திலை உப்பிடி ஒருக்காச் செய்துபாக்கட்டும்? இதெல்லாம் எங்களிலை இடங்கண்டுதானே?’ 

‘மற்ற ஊரெல்லாம் எப்பிடி முன்னேறீட்டுது. எங்கடை ஊரிலை தான் நாங்கள்…..’ 

‘எப்பனென்டாலும் எங்களை தலை எடுக்க விடுகினையே?’ 

‘செம்மூக்கன் தன்ரை மோனை இங்கிலீசுப் பள்ளிக்குப் படிக்கவிட்டிட்டான் எண்டு, அவன் குத்தகைக்குச் செய்த தோட்டத்தை மறிச்சு, அவன் ஏறின தென்னமரங்களின்ரை கள்ளுப் பாளையளை வெட்டி, அநியாயம் செய்தினை’ 

‘எங்கை பட்டணப் பக்கத்திலை, ஒருக்காப் பண்ணிப பாக்கட்டும் பாப்பம்? பட்டணத்திலை எங்கடை ஆக்களுக்கை கனபேர் படிச்சு கவுண்மேந்திலை பெரிய உத்தியோகம் பாக்கினை. கார் வைச்சிருக்கினை, கால் சட்டை தொப்பி கல்வீடு அப்பப்பா; ஆனா எங்கடை ஊரிலை தான்…..’ 

‘மேற்குப் பகுதியிலை இருக்கிற வைத்தியன் தன்ரை தாயின்ரை செத்தவீட்டுக்கு பட்டணத்திலையிருந்து பறை மோளம் கொண்டந்திட்டான் எண்டு, மேற்குப் பகுதியிலை இருக்கிற எங்கடை ஆக்களின்ரை பதினைஞ்சு இருவது வீடுகளுக்கு அண்டு ராத்திரி நெருப்பு வைச்சுக் கொழுத்திச் சுட்டு அதுகள் ஒரு மாதமாய்த் தெருவிலை நிண்டு அந்தரப் பட்டுதுகள். நாங்கள் அதுகளுக்கு உதவி செய்தாலும் எங்களையும் அவங்களைப் போலை வீட்டை எரிச்சு அடிச்சு…..’ 

குனிந்து நின்று அதிக நேரம் வேலை செய்ததால் கந்தனுடைய நாரி வெடுவெடுக்கின்றது. கால் நரம்புகள் எல்லாம் விண் என்று சுண்டி இழுக்கின்றன. தோளிலிருக்கும் மண்வெட்டியை அடிக்கடி தோள் மாற்றிக்கொண்டு நடக்கின் றான். 

அடிவாங்கி வாங்கித் தளும்பேறிய அவனுடைய இதயம் அவனுடைய ஆக்களின் இன்னல்கள் எல்லாவற்றையுமே சுமந்து சுமந்து வேதனை தாங்கமாட்டாது தவிக்கின்றது. அதில் பெரும் குமுறல்; கோபத் தீ. வெறுப்பு. 

‘ஏன் எங்கடை ஆக்கள் எண்டாப் போலை என்ன திறமே?’ 

‘இராப்பகலாய் உழைச்சு நாலு சல்லி மிச்சம் பிடிச்சு வைப்பினை.’ 

‘கமக்காறர் வந்து, “என்ன, இந்த வரியம் மேற்குப் பகுதியாற்றை பன்னிரண்டாம் திருவிழா இடி முழக்கமாம். மூண்டு சிகரங்கள் பிடிக்கிறாங்களாம். பதினைஞ்சு கூட்டம் பெரிய மேளம். எட்டுக் கூட்டம் சின்னமேளம், வாணம், இணிவிலான்ரை முத்துச் சப்பறம்…’ எண்டு சொன்ன உடனை துவங்கீடுவினை எங்கடை ஆக்களும். இப்பிடி கிழக்குப் பகுதியாருக்கும் சொல்லிப் போட்டியைத் துவக்கி விடுவினை கமக்காறார்.’ 

பிறகு கேப்பனேன்? இரண்டு பகுதியாரும் கிடந்த காசையும் சிலவழிச்சு, போதாட்டி கமக்காறரிட்டையும் கடன் பட்டுத் திருவிழா போட்டிக்குச் செய்வினை. 

‘சரி காசுதான் போகட்டும். அவங்கடை திருவிழாவை கிழக்குப் பகுதியார் குழப்புறது. எங்கடை திருவிழாவை மேற்குப் பகுதியார் குழப்பிச் சண்டை பிடிச்சு, அடிபட்டு வழக்குப் பேச கோட்டுக்குப் போய் வேம்புக்குக் கீழை குந்தியிருக்கிறது.’ 

இப்பிடித்தானே ஒவ்வொரு வரியமும். 

‘நாலு சல்லியைக் கையிலை பிடிச்சிட்டால், பிறகு தங்களை நாங்கள் மதிக்கமாட்டம் எண்டு கமக்காரர் வரியம் வரியம் திருவிழா, கூத்து எண்டு போட்டா போட்டியைக் கிளப்பி எங்கடை காசைச் சிலவழிக்கப்பண்ணினை. அதோடை எங்களுக்கை சண்டையையும்.இதால துவக்கி எங்களைப் பிரிக்கினை. 

‘கோயில், கடை எல்லாம் எங்களுக்குத் திறந்துவிட்டாச்சு எண்டு பேப்பரிலை அண்டைக்கு ஆரோ வாசிச்சுக் காட்டி ச்சினை எனக்கு.’ 

‘இதுவும் பட்டணப்பகுதியிலை தான் நடக்குது எண்டு கேள்விப்பட்டன்.’ 

‘இதாலை எங்களுக்கு என்ன சுவம்! நாங்களும் பட்டணத்திலை உள்ள எங்கடை ஆக்களைப் போலை உழைச்சு, நாலு சல்லியை மிச்சம் பிடிச்சு, எங்கடை பிள்ளை யளையும் படிப்பிச்சால்தான் நாங்களும் முன்னுக்கு வரேலும்.’ எண்டு பட்டணத்திலை கலியாணம் கட்டின கறுத்தான்ரை மோன் முத்தன் சொன்னது சரி எண்டு இப்பான் தெரியுது.’ 

ஊரின் எல்லைக் கோடியில் வந்து கொண்டிருக் கின்றான் கந்தன். 

அவனுடைய நினைவலை, உள்ளத்தின் அடியில் புதைந்து கிடந்த சம்பவங்களைப் புரட்டி அசைபோட்டுக் கொண்டிருக்கின்றது. 

‘நானும் என்ரை பிள்ளையளை இனி பெரிய பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் படிப்பிச்சு…….’ 

“ஐயோ! ஐயோ!” 

தூரத்தில் யாரோ கூக்குரலிடுவது கேட்கின்றது. 

நினைவுச் சுவட்டில் மிதந்து கொண்டிருந்த கந்தனுடைய எண்ணத்தொடர் அறுகின்றது. 

‘ஆர் குழறுகிறது?’

‘எங்கைக் குழறிக் கேக்கு?’ 

‘ஒரு வேளை எங்கடை பக்கத்திலையோ? 

அவன் வேகமாக நடக்கின்றான். 

ஏகப்பட்ட அவலக்குரல்கள்! 

ஒரே அமர்க்களம். 

அவனுடைய நடையுடன் ஓட்டமும் சேர்கின்றது. சத்தம் வர வரக் கிட்டுகின்றது. 

‘ஓ எங்கடை பக்கத்திலை தான்!’ 

அவன் ஓடுகின்றான். 

ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கூக்குரலிடுகின்றார்கள். 

“அடி! குத்து! வெட்டு!” 

“ஐயோ!” 

“கடவுளே!” 

“அடியடா!” 

“கொழுத்தடா வீடுகளை!” 

“இல்லை நயினார். எங்களை அடியாதையுங்கோ!” 

ஒரே கூக்குரல். 

அமர்க்களம். 

மக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்காக பல திக்கு களிலும் சிதறி ஓடுகின்றனர். 

சில ‘கமக்காறர்’ அந்தக் குடிசைகளுக்கு நெருப்பு கொழுத்துகின்றனர். 

ஏழு எட்டுப் பேர் எல்லோரையும் துரத்தி அடித்துக் கொண்டிருக்கின்றனர். 

“இல்லை நயினார்! ஒரு நாளுமில்லை! எங்களை அடியாதையுங்கோ!” 

“நீங்கள் சொல்லுறபடி நாங்கள் செய்யிறம்’ அடியாதை யுங்கோ!” 

“கீழ் சாதி நாயளே! உங்களுக்கு அவ்வளவு திமிரா?” 

அடியடா! உதையடா! 

“ஐயோ கடவுளே!’ 

தீ பொங்கி ஜ்வாலிக்கின்றது. குடிசைகள் எரிகின்றன. வான்முகட்டை நோக்கிப் புகை மண்டலம் கிளம்புகின்றது. 

கந்தனுக்கு ஒரு கணம் திகைப்பு, 

“அவன் அடிச்சால் நீங்கள் வாங்கமாட்டியளோ? என்ன, எங்கடை சாதியானுக்கு எதிர்த்துக் கைநீட்ட கீழ்சாதி நாய்க்கு அவ்வளவு திமிரா?” 

“அடியடா” 

“இல்லை நயினார்! உங்களைக் கும்பிடுறன். அடி யாதையுங்கோ!” 

ஒருவனை நான்கு ஐந்து பேர் போட்டு அடிக்கின்றார்கள்.  

கந்தனுடைய உள்ளம் குமுறுகின்றது. 

சிலர் பெண்களையும் குழந்தைகளையும் கலைத்து அடிக்கின்றனர். 

கந்தனுடைய ரத்தம் கொதிக்கின்றது. நரம்புகள் முறுகிப் புடைக்கின்றன. 

அவன் ஓடுகின்றான். 

ஓடுகின்ற கந்தனுடைய கரங்கள் வானத்தை நோக்கி உயர்கின்றன. 

ஓங்கிய அவனுடைய கரங்களில் மண்வெட்டி. 

அவனுடைய கரங்களுக்கு அந்த அசுர பலம் எங்கிருந்து தான் வந்ததோ? 

அடித்துக் கொண்டு நிற்பவர்களுக்குத் திகைப்பு.

அடிவாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும் திகைப்பு. 

“ஏனடா நிற்கிறியள்!” 

கந்தன் கர்ஜிக்கின்றான். 

அந்த ஓங்காரக் கர்ஜனையில் அண்ட கோளங்களும் அதிர்கின்றன. 

ஒரு கணம் மயான அமைதி. 

இவ்வளவு நேரமும் அடிவாங்கிக் கொண்டிருந்தவர்கள் தங்களைத் தாங்களே கணப்பொழுதில் உணர்ந்து கொள்கின்றார்கள். 

அவர்களுக்குத் துணிவு பிறக்கின்றது! 

குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்தது. தீப்பிழம்பின் செவ்வொளிக் கதிர்கள் ஜவாலித்து விரிகின்றன. 

காலாதி காலமாகக் குனிந்திருந்த அவர்களுடைய தலைகள் நிமிர்ந்தன. 

வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட அவர்களுடைய, உழைத்து உரமேறிய கரங்கள் ஒருங்கே சேர்ந்து உயர்ந்தன. 

அப்புறம்? 

– 1963

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *