வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு

சாமிநாதன் மாமா எழுதியிருந்தார். பாட்டிக்கு உடம்பு ரொம்பவும் முடியாம லிருக்கிறதாம். அம்மாவையும் அப்பாவையும் குழந்தைகளையும் பார்க்க விரும்புகிறாளாம். குறிப்பாக என்னைப் பற்றியும் சொல்லியிருந்தாள் பாட்டி. ‘அவனது வைராக்கியத்தை விட்டு ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போகட்டும். சாகும் முன்பு எனது ஆசை எல்லோரையும் ஒன்றாகப் பார்த்துவிடவேண்டும் என்பதுதான்.’
“கெழவிக்கு இது வேண்டாத ஆசை!” நான் சொன்னேன்.
“அப்படிச் சொல்லாதடா! பாவம் அது! கண்ணு நல்லாத் தெரியறதா இருந்தா தள்ளாடிட்டாவது இங்க வரும். ஆட்டோ இருக்கற ஊரானாலும் பரவால்ல. இந்தப் பட்டிக்காட்டுல ஒண்ணுக்கும் வழியில்ல.”
அம்மா சொல்வது போல, மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு பாட்டி வந்தபோதே கண் மங்கத் துவங்கிவிட்டது. “முன்னப் போல அல்ல மக்களே. கண்ணும் காதும் கெட்டுப் போயாச்சு. நடக்கவும் பாடு. வயசாச்சில்லையா?” என்றிருந்தாள் அவளே.
அதற்காக நான் அங்கே போவதா?
“நீங்க போங்க. அதப் பத்தி எனக்கு ஏதொரு ஆட்சேபணையுமில்ல. ஆனா, என்னைக் கூப்பிடக் கூடாது. அந்த வீட்டு வாசப்படிய ஒருநாளும் நான் மிதிக்கப் போறதில்ல.”
அம்மா மேற்கொண்டு பேசவில்லை. கடிதத்தை அப்பாவின் சானேஸ்வரக் கண்ணாடியில் தொடர்ந்து படிக்கலானாள் அவள்.
அங்கிருந்து நான் விலகினேன்.
கிழவிக்கு இந்த மாதிரி ஆசைகள் ஏன் வருகின்றன? அதையும் பெரிதாக எடுத்துக்கொண்டு அம்மா ஏதாவது நிர்பந்தித்தாலோ… அப்போதல்லவா இருக்கிறது! மரியாதை கெட்ட அந்த வீட்டுக்குள் இந்த ஜென்மத்தில் காலடி வைப்பேனென்று அம்மா கருத வேண்டாம். உங்களைப் போல நான் பழசை மறந்துவிடவில்லை. எத்தனை ஆனாலும் மறக்காது அது.
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, சக்தியண்ணன் தாத்தா வீட்டில் தங்கி சாமிநாதன் மாமாவோடு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனுக்குத் தச்சு வேலை கற்றுக் கொடுத்தது மாமாக்கள் இருவரும்தான். க்ருஷ்ணன்குட்டி மாமா இறந்த பிறகு அண்ணனும் கங்காதரன் மச்சானும் கலாதரனும் சாமிநாதன் மாமாவின் கீழ் வேலை செய்துவந்தார்கள்.
சக்தியண்ணனும் கங்காதரன் மச்சானும் மாமன் மகன், அத்தை மகன் உறவில் மட்டுமல்லாமல் சேர்ந்து பல காரியங்களும் செய்கிற நண்பர்கள். குடி, சீட்டாட்டம். பெண்கள் என்று எல்லா சகவாசமும்.
ஒரு பெண்ணின் காரணம், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கங்காதரன் மச்சான் அதை வேறு விதத்தில் வஞ்சம் தீர்க்க நினைத்துவிட்டான். அவனது போக்கு எப்போதும் சரியில்லாதது. அச் சமயம் அவனுக்கு எதிரான அங்குள்ள ஒரு சிலர் அவனை இரவில் மறைவிடமாக அடித்துக் காயப்படுத்திவிட்டனர். அதை சக்தியண்ணன் ஆள் வைத்து அடிக்கச் செய்ததாகப் பழி சுமத்தினான் கங்காதரன் மச்சான். சக்தியண்ணனின் நண்பர்கள், இனி இங்கிருந்தால் ஆபத்தென்று அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
இதை முன்னிட்டு சாமிநாதன் மாமாவும் பெரியத்தையும் தலாதரனும் எங்கள் விட்டுக்கு வந்து சண்டையிட்டுப் போனார்கள். பிறகு எங்கள் வீட்டிலிருந்து அப்பா, அம்மா, கோவிந்தண்ணன், குடும்ப நண்பர்கள் இருவர் எனச் சிலர் அங்கேயும். அப்போது எங்கள் குடும்பம் கடுமையான ஏச்சுக்கு ஆளாகியது. கலாதரன் பேசத் தகாதவற்றைப் பேசி அவமதித்தும்விட்டான்.
அதனால் உறவு துண்டுபட்டது.
பிற்பாடு சாமிநாதன் மாமாவுக்கு கங்காதரன் மச்சானின் பித்தலாட்டம் தெரியவே செய்தது. தாத்தா – பாட்டிக்கும்தான். அதை எண்ணி அவர்கள் வருந்தினார்கள். சாமிநாதன் மாமாவும் பாட்டியும் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவதாயிற்று. க்ருஷ்ணன்குட்டி மாமா குடும்பத்தாரோடு மனஸ்தாபம் தீரவில்லை. பின்பு பரஸ்பரம் குடும்ப விசேஷங்களுக்கு சம்பிரதாயத்துக்காக அழைப்பதும் அதே விதமாக பங்கேற்பதுமாய் மாறிவிட்ட நிலைமை. எனினும் எங்கள் வீட்டிலிருந்து மற்றவர்கள்தான் அங்கே போவார்கள். பட்ட அவமானம் என் மனதில் ஆறாமல் தகிப்பதுண்டு. அதனால் நான் போவதில்லை.
மாமாவின் கடிதத்தை முழுதும் வாசித்த பிறகு அம்மா கலங்கினாள். ”இனி அது எவ்வளவு நாளைக்கு இருக்கும்னு தெரியாது. உயிரோட உள்ளபோதே ஒரு தடவை பாத்துட்டு வந்தா, போற உயிருக்கும் நிம்மதி. நமக்கும் ஆறுதலா இருக்கும்…”
பாட்டிக்கு உடம்பு சுகமில்லை என அறிந்ததும் எங்கள் வீட்டினர் ஏற்கெனவே போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். கோாவிந்தண்ணனும் சக்தியண்ணனும் உட்பட. நான் மட்டும் போகவில்லை.
ஷீஜாக்கா, விலாஸினியக்கா கல்யாணங்களுக்கும், தாத்தாவின் இறப்புக்கும் நான் போயிருக்கவில்லை. என்னைத் தவிர எல்லோரும் போனபோது நான் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கியிருந்தேன். அது என் விடலைக் காலங்களில் நிகழ்ந்தது. இப்போது தோன்றுகிறது, சுக
காரியங்களில் புங்கேற்காவிட்டாலும் துக்க காரியங்களில் பங்கேற்க வேண்டும் என்று. தாத்தாவின் இறப்புக்குப் போகாததாவது பரவாயில்லை. இப்போது பாட்டி ஆசைப்பட்டு, பார்க்க முடியாமல் சாக நான் காரணமாகக் கூடாது.
அந்த எண்ணத்தாலும் அம்மாவின் வற்புறுத்தலாலும் பாட்டியைப் பார்க்கச் செல்வதற்கு நான் முன்வந்தேன். ஆனால் ஒரு விஷயம். அந்த வீட்டுப் படியை மிதிக்க மாட்டேன். ஹரியின் வீட்டில் இருந்துகொண்டு, பாட்டியை அங்கே அழைத்துவந்தால் பார்க்கலாம். எனது நிபந்தனை ஒப்புக் கொள்ளப்பட்டது.
அப்பாவும் அம்மாவும் நானும் மஞ்சுவுமாகப் புறப்பட்டோம்.
பஸ்ஸில் போகும்போது, நான் வடக்கந்தறய்க்குப் போய் பதினொரு வருடங்கள் ஆயிற்று என்பதைக் கணக்கிட்டுக்கொண்டேன்.
என் இள வயதில் வருஷத்துக்கொருதரம், கோடை விடுமுறையில், நிச்சயமாக நானும் மஞ்சுவும் மாமா வீட்டுக்குப் போய்விடுவோம். அம்மாதான் அழைத்துப் போவது.
கிராமத்து வாழ்க்கை என்பதாலும், இரண்டு கிலோ மீட்டர் நடந்து அடுத்த ஊருக்குப் போனாலே பஸ் ஸ்டாப் என்பதாலும், குழந்தைகளான எங்களுக்கு பஸ் பிரயாணம் அதிகம் வாய்க்காது. அதனால் ஊருக்குப் போகிறோம் என்றாலே பஸ்ஸில் போகப் போகிறோம் என்பது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
ஜன்னலோரம் நான், எனக்கடுத்து மஞ்சு, அதற்கடுத்து அம்மா என்று இருக்கையில் அமர்ந்திருப்போம். ஜன்னல் வழியே பின்னுக்கு நகர்கிற வெளிப்புறக் காட்சிகள் வேடிக்கையாகும். முக்கியமான ஊர்களை மஞ்சுவுக்கு சொல்வேன். அடுத்தது எந்த ஊர் என்பதையும்.
பாலக்காடு வந்துவிட்டதற்கு திப்பு சுல்தான் கோட்டை அடையாளம். அதைக் கண்டதுமே ஊரை நெருங்கிவிட்ட குதூகலம். பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் அம்மா தின்பண்டம் வாங்குவாள். என் ஞாபகத்தில் அவள் எப்போதும் வாங்கியது ஊட்டி ரெஸ்க்கும், நேந்தர சிப்ஸும்தான். வளையம் வளையமாய் குழாய் துண்டுகள் போல வைத்துக் கட்டப்பட்ட பஸ் ஸ்டான்டின் வெளிச்சுவரைக் கடந்து, ஆட்டோ பிடித்து வடக்கந்தற போவோம். ஆட்டோவின் விட்டுவிட்டுச் சீறும் இரைச்சலும், கடந்து செல்லும் வாகனங்களின் பெட்ரோல் புகை வாசமும் எனக்கு அலாதியானவை.
ஆட்டோவில் போகும்போது என் ஓயாத பேச்சு ஓய்ந்திருக்கும். மாமா வீட்டில் ஷீஜாக்கா, விலாஸினியக்கா, கலாதரன், குட்டன், த்ரிவேணி, எதிர்வீட்டு ரமா, ப்ரீதி, அண்டை வீட்டு ஹரி இவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பேன். அவர்களைப் பார்க்கப் போகிற களிப்பின் படபடப்பு, வீடு நெருங்க நெருங்க அதிகரிக்கும். வீட்டுக்குச் சற்று தூரத்தில்
நியூ வாட்டர் டேங்க். அதன் அருகாமையிலிருக்கிற சத்தார் கடை தெரிந்ததுமே இறங்கி இவர்களுக்கும் முன்பாக ஓடிப் போய்விடத் தோன்றும்.
வீட்டுக்கு முன்பாக ஆட்டோ நின்றதும் நானும் மஞ்சுவும் போட்டியாக ஓடுவோம்.
பரம்பரை வீடு அது. ஒலவக்கோட்டுச் சுருள் ஓடுகள் வேய்ந்தது. சின்னச் சின்னதாக நிறைய அறைகள். நீண்ட எடங்ஙாழியில் சுவர் ஓரம் உரலின் குழி போல குழியிட்டிருக்கும். வீட்டுக்குள்ளேயே தானியங்களைக் குத்த முன்பு உபயோகித்திருக்கலாம். எங்களுக்கு கோலி உருட்டி விளையாடப் பயன்பட்டது அது. கோலாயிலிருந்து எடங்ஙாழிக்குள்ள கதவின் கீழே இரண்டரை அடிக்கு பலகை ஒன்று நிலையாயிருக்கும். அதற்கு மேலுள்ள பாகம்தான் திறந்து மூடும் கதவு. தவழ்கிற, நடை பயில்கிற குழந்தைகள் உள்ளிருந்து கண் தப்பி வெளியே போய்விடாதிருக்க இந்த எற்பாடு. திண்ணை உயரமானது. அகலமும் கூடுதல். தாத்தா பெரும்பாலும் அதில்தான் வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார்.
நாங்கள் போவதைப் பார்த்ததும், “அடே…! இது யாரு வர்றாங்கன்னு பாரு…!” என்று பொதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சொல்வார்.
ஓடுகிற எங்களில் யாரேனும் ஒருவரை அவர் பிடித்துக்கொள்ள, மற்றவர் வீட்டுக்குள் போவோம். அல்லது அத்தைகளோ மாமாக்களோ பாட்டியோ குழந்தைகளோ வெளியே இருந்தால் அவர்களிடம்.
அங்கே போனதிலிருந்து ஒரே உற்சாகம்தான். ஒரு வருடம் பார்க்காததில் பேச நிறைய விஷயங்கள் இருக்கும். பின்னே, விளையாட்டுகளும் பாட்டும் கூத்தும். கங்காதரன் மச்சான் தினமும் கல்பாத்தி ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் செல்வான். வெள்ளிக் கிழமைகளில் ஷீஜாக்கா கண்ணகி அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போவாள். கோவிலில் காலை மாலைகளில் அறுபது கதனை வெடிப்பார்கள். நான் கோவிலுக்குப் போக விரும்புவது அதைக் காண்பதன் பொருட்டே. ஞாயிறுகளில் எப்போதாவது சினிமா போவதுண்டு. க்ருஷ்ணன்குட்டி மாமாவிடம் ஓரியாடி சம்மதம் வாங்குவது நானும் மஞ்சுவும்.
க்ருஷ்ணன்குட்டி மாமாவுக்குக் குழந்தைகளிடம் பிரியம் அதிகம். அவரது முறுக்கு மீசையும் பிராந்திச் சிவப்புக் கண்களும் எனக்கு பயம். குடித்துவிட்டு வந்து என்னோடு வம்பளப்பார்.
“டே, மாப்பிள்ளே…! உனக்கு என்னோட எந்தப் பொண்ணு வேணும்? சொல்லு. கட்டித் தர்றேன்.”
அப்போது அவருக்கு ஷீஜாக்கா, விலாஸினியக்கா, த்ரிவேணி, அஜிதா, ஸ்வப்னா என ஐந்து பெண் மக்கள். ஸ்வப்னா கைக் குழந்தை.
நான் சொல்வேன். “எனக்கு ஷீஜாக்காதான் வேணும்.”
மாமா ‘ஹோ’வென்று சிரிப்பார். ஷீஜாக்காவும் இருந்தால் இதைக் கேட்டு சிரிப்பாள். ஏனென்று புரியாவிட்டாலும் மற்ற குழந்தைகளும் சிரிக்கும். நான் சங்கடத்துடன் நெளிவேன்.
”ஓ…! அவளையே கட்டிக்கோ. அவ உனக்கு சம்பாதிச்சுத் தருவா. சோறாக்கிப் போடுவா. எங்கயாச்சும் போகணும்னா இடுப்புல தூக்கி வெச்சுட்டும் போவா…!”
மற்றவை எனக்கு சம்மதம். அவளொன்றும் என்னை இடுப்பில் தூக்கிப் போக வேண்டாம். நானென்ன சின்னக் குழந்தையா?
எனக்கு வருகிற சிரிப்பை மறைக்க ஜன்னலுக்கு வெளியே திரும்பிக்கொள்கிறேன். பஸ்ஸின் வேகத்தில் புறக் காட்சிகள் பின்னோடிக்கொண்டிருக்கின்றன.
ஆட்டோ சத்தார் கடை முக்குத் திரும்பி, வீட்டின் முன்பு நின்றது. அப்பா சார்ஜ் கொடுத்தார்.
தாத்தா வீட்டை ரோட்டில் நின்று பார்த்தேன். மூங்கில் விளாறுகளில் கட்டப்பட்ட வேலிக்கப்பால் அது மாற்றங்களோடு இருந்தது. வீட்டின் இடதுபுறம் சாரமிறக்கி, புதிய அறை. அம்மா சொல்லியிருந்ததில் அது சாமிநாதன் மாமா குடும்பத்து சமையலறை என்பது தெரியவந்தது. வேலியோரம் வாசலில் பூச்செடிகள். தனியே நீள் வட்டமாகத் திட்டு கட்டி அதிலிருந்த க்ரோட்டன்ஸ்களைக் காணோம். கல்வாழைகள் பூந்தொட்டியில் அகல இலைகளோடு நின்றன. தென்னையை அடுத்து நெல்லி மரம் பெரிதாகியிருந்தது.
திண்ணையில் குழந்தைகள், நாலைந்து வயதுகளில். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன். பெண்ணா பையனா தெரியாமல் ஜட்டி மட்டும் அணிந்த ஒரு தவழும் குழந்தை. இதில் இரண்டு ஷீஜாக்காவின் குழந்தைகளாயிருக்கும். அவள் இங்கேதான் இருக்கிறாளா? மற்றவை விலாஸினியக்காவுடையதோ?
ஆட்டோ வந்துபோன சத்தத்தில் ஒரு பெண் வீட்டுக்குள்ளிருந்து வந்து கதவோரம் எட்டிப் பார்த்தாள். ஷீஜாக்கா என்று கொஞ்சம் தாமதமாய்ப் புலப்பட்டது. அவள் கவனித்துவிட்டு வேகமாக உள்ளே போனாள். திரும்ப வரும்போது பெரியத்தையும் அவளோடு.
அப்பாவும் தங்கையும் அங்கே போனார்கள். நான் அம்மாவுடன் ஹரி வீட்டுக்குப் போனேன்.
ஹரி வீட்டில் அவனில்லை. அவனது அம்மாவும் வாழாவெட்டி அக்காவும் இருந்தனர். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அம்மா சொன்னாள். விஷயங்களையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் தன் பிறந்த வீட்டுக்குப் போனாள். ஹரியம்மாவின் விசாரிப்புகளுக்கு பதிலளித்துவிட்டு, மாமாக்களின் குடும்பங்களைப் பற்றிய அவளுடைய ஆவலாதிகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். குமாரி அக்கா சாயா கொண்டுவந்து கொடுத்தாள்.
அம்மாவும் மஞ்சுவும் பாட்டியைக் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தனர். பாட்டியை என்னருகில் அமர்த்திக்கொண்டேன்.
பாட்டி என்னை உற்றுப் பார்த்தாள். சுருக்கம் விழுந்து, ஓடுங்கிய பாத்திரம் போல உருவிழந்த முகம். பச்சை படர்ந்து வெளுத்த கண்களில் ஈரம் துளிர்த்தது. அவள் நடுங்கும் கைகளில் என் தோளைப் பற்றினாள். தளர்ந்த எலும்பு விரல்களில் எனது தலையை வருடினாள்.
”அல்ல, மகனே…! நீ ஒரேயடியா இந்தக் குடும்பத்தையே வெறுத்திட்ட, இல்லையா…?”
“பின்னே, உன்னோட பேரனுக செஞ்ச காரியத்துக்கு வேற என்ன செய்ய முடியும்? சின்ன மாமாகூட, அவனுக சொல்றதுதான் பெருசுன்னு வீடேறி நியாயம் கேக்க அங்க வந்தாரே…! என்ன, ஏதுன்னு விசாரிக்க இங்க வந்தப்போ, கேவலப்படுத்தி எறக்கிவிட்டீங்களே எல்லாரும். மறக்க முடியுமா?”
“கூடாதாயிருந்தது. இருந்தாலும், அதெல்லாம் நடந்து முடிஞ்சு இவ்வளவு தூரம் ஆன நிலைக்கு…”
அவள் அதைப் பூர்த்தியாக்கவில்லை.
இடைவெளிக்குப் பிறகு, “உனக்கு வைராக்கியம் அதிகம்தான் மகனே” என்று சொன்னாள்.
பாட்டிக்கு முன்பைவிட பார்வை மங்கல் கூடியிருப்பது அவள் உற்று உற்றுப் பார்ப்பதில் தெரிந்தது.
அம்மாவும் ஹரியின் அம்மாவும் அந்தப் பழங்கதை பற்றிப் பேசத் துவங்கினார்கள்.
பாட்டி குறுக்கிட்டாள். “போகட்டும்! முடிஞ்சுபோனதப் பேசி என்னாகப் போகுது? போனது திரும்பி வருமா; இல்ல,… நடந்ததை மாத்தி நடத்தி வெக்கத்தாள் முடியுமா?”
அது யாரால் இயலும் என்று நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே பாட்டி வேறு விஷயத்துக்குப் போய்விட்டாள்.
”ஒழுங்கா இருந்திருந்தா ஷீஜாவைக் கொடுத்த மாதிரி மத்த பொண்ணுகள்ல ரெண்டோ மூணோ, சொந்தத்துலயே கழிஞ்சிருக்கும். விலாஸியக் கூட வெளிய கொடுத்திருக்க வேண்டாம்.”
வடவனூர் பெரியம்மாவின் மகனுக்குத்தான் ஷீஜாக்காவைக் கொடுத்தது. அதன்பிறகு சொந்தத்தில் என்று அண்ணன்களும் நானும். பாட்டி அதைப் பற்றி நிராசைகளில் பெருமூச்சு விடுகிறாள். ஒருவேளை அந்தப் பிரச்சினை உண்டாகாதிருந்திருந்தால் அப்படி நடந்திருக்கலாம்தான்.
அதை எண்ணிக்கொண்டிருக்கும்போதே பாட்டி மறுபடியும் வேறு விஷயத்திற்குத் தாவி விட்டாள்.
“பின்னே,… மகன் இப்ப எங்கயாக்கும் வேலைக்குப் போறது?”
“கோயம்பத்தூருக்கு.’
”சக்தியும் கோவிந்தனுமோ?”
“அவங்க ரெண்டு பேருக்கும் கொழிஞ்ஞாம்பாறயில வேலை.”
“ஓ…! எப்படியோ எம் மக்களுக்கு ஒரு கொறையும் இல்லாமக் கழிஞ்சா சரி! எனக்கினி அவ்வளவுதான்! மகனையும் புருசனையும் சாகக் கொடுத்துட்டு, இப்ப நான் படற வேதனை போதும். இப்பப் பின்ன குடும்பம் பிரிஞ்சுமாச்சு. அவன் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா? ம்…? எந்த நேரமும் ஒரே சச்சரவுதான், சச்சரவுதான். எப்படி இருந்த வீடு. இப்ப நிம்மதியே இல்ல…!”
ஷீஜாக்காவின் கல்யாணத்தை சாமிநாதன் மாமா முன்னின்று நடத்தினார். பெரிய மாமாவின் பையன்களில் கங்காதரன் மச்சானும் கலாதரனும் சம்பாதிக்கிறவர்களாயிருந்தும், குடும்பத் தலைவர் ஸ்தானம் சாமிநாதன் மாமாவுக்காயிருந்தது. கடன் வாங்கி தனது சக்திக்கு மீறி செய்தார்.
வாங்கிய கடனை அடைக்கும்போது பெரிய மாமா பிள்ளைகள் அதில் எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்றுவிட்டனர். சித்தப்பா எங்களைக் கேட்டுச் செய்யவில்லையே என்ற அவர்களுக்குச் சொல்ல சாமிநாதன் மாமாவிடம் பதில் இல்லை.
வீட்டை அடகு வைத்து வாங்கிய கடன் அது. முப்பதாயிரம். அதற்கு ஐந்து வட்டி. அதை அடைக்க அவரால் முடியாமல் ஆனபோது வீடு ஜப்திக்கு வரும் என்றும், மாமா ஜெயிலில் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் நெருக்கடி. அப்போதும் அண்ணன் மகன்கள் உதவவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து அழுதார். இயன்ற தொகையைக் கொடுத்தோம். மேலும் தேவைப்பட்டதற்கு பணம் புரட்டி, படாத பாடுபட்டு சமாளித்துவிட்டார்.
இந்தப் பிரச்சினையில் மாமாக்களின் குடும்பங்கள் பிரிந்தன. வீட்டில் அறைகள் பகுக்கப்பட்டன. அடிக்கடி சாடைப் பேச்சுகளும் சண்டையும். மாமா இவற்றால் பாதிக்கப்பட்டு மனம் வெறுமையானார். பிரமை பிடித்தவராகச் சாப்பிடாமல், தூங்காமல் நாள் முழுக்க யோசனை. வேலைக்கும் சரிவரப் போவதில்லை. சின்ன அத்தை கோவில்களுக்கும் மாந்த்ரீகர்களிடத்தும் கணவனோடு நடந்தாள். பிறகு எப்படியோ அது குணமாயிற்று. ஆனாலும் சண்டை சச்சரவுகள் தீரவில்லை.
பாட்டி மிகவும் நொந்திருந்தாள். சொல்லித் தீராத தன் சங்கடங்களைச் சொல்லிவிட்டு, “தெய்வம் ஒண்ணு சீக்கிரம் சகாயம் பண்ணனும்” என்று சொன்னாள்.
முதுமையில் அனேகருக்கும் இது எவ்விதத்திலாவது நேர்வதுதான். மரணத்தைக் காத்திருப்பதும், விரைவில் வராதா என எதிர்பார்ப்பதும். பாட்டிக்கு அது தள்ளாமையினாலோ சுகமின்மையாலோ உண்டாகவில்லை. சந்ததிகளின் நடத்தையால்.
முடிவாக அவள் சொன்னாள். “இப்பவாவது பாட்டியைப் பாக்கணும்னு தோணி வந்தயே மகனே… திருப்தி ஆச்சு!”
ஒருபுறம் மகளும், மறுபுறம் மகளின் மகளும் தாங்கலாகப் பிடித்துக்கொள்ள அவள் அந்தப் பரம்பரை வீட்டுக்குள் போகிறாள்.
நான் கடைப் பக்கம் கிளம்பினேன்.
சத்தார் கடையில் சிகரெட் வாங்கினேன். சத்தாருக்கு என்னை யாரென்று தெரியவில்லை. அவரது நரை, பல் விழுந்த வாய் என்றிவற்றுக்கப்பாலும் எனக்கு அவரைத் தெரிந்தது. என்றாலும் என்னை அவருக்கு நினைவுபடுத்த நான் விரும்பவில்லை. ஆல மரத்தடியில் நின்றுகொண்டேன்.
இனி என்றென்றும் நான் வடக்கந்தறய்க்கு வர வேண்டியிருக்காது. பாட்டியின் மரணத்துக்குக்கூட. அவளின் ஆசைக்கு இப்போது வந்தாயிற்று. இனி எதற்கு? வடக்கந்தறய்க்கு இன்றோடு ஒரு தலை முழுகல். வீட்டில் மற்றவர்கள் வந்தாலென்ன, போனாலென்ன? அவர்களும் வருவதைக் குறைத்துக்கொள்வார்கள். பாட்டியின் பொருட்டுதான் இங்கே எப்போதாவது விசேஷமல்லாமலும் வருவது. அவள் இறந்துவிட்டால் அதுவும் போய்விடும். எண்ணமிடலில் சிகரெட் புகைக்கிற உணர்வே இன்றி புகைத்துக்கொண்டிருந்தேன்.
சிகரெட் அனேகமாக முடிகிற நேரம். இடுப்பில் குழந்தையுள்ள ஒரு பெண் என்னைக் கடந்தாள். அவளும் திரும்பவே அந்த முகம் பழக்கமுள்ளதாகப் பட்டது. அவள் போவதையே பார்த்துக்கொண்டு யோசித்தேன். சத்தார் கடையில் நின்று ஏதோ வாங்கினாள். மறுபடியும் கடைக்குப் போய் ஏதாவது வாங்குகிற சாக்கில் அவளைப் பார்க்கலாமா? வேண்டாம்! எதற்கு வீணாக?
அவள் திரும்பி அதே வழியில் வந்ததும் கவனித்தேன். என் அருகில் நின்றாள். ஒரு இயல்பான புன்னகை அவளிடமிருந்து.
”ஷாராஜேட்டனுக்கு என்னை மனசிலாகலையா?”
தாடையில் வலதுபுறம் அந்த சிறு வெட்டுத் தழும்பு ஆளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. “த்ரிவேணியல்லவா? போகும்போதே யோசிச்சேன். சின்ன
வயசுல பாத்ததல்லவா இப்ப பின்ன…” மேற்கொண்டு எனக்குத் தோன்றியதை சொல்லவில்லை.
வெளிர் சந்தன முண்டு உடுத்தியிருந்தாள். ப்ரௌன் நிறத்தில் அகலக் கரை, அதே ப்ரௌனில் ஜாக்கெட்டும். கொஞ்சம் தடியாகவே இருந்தாள். குங்குமப் பொட்டு இருந்தாலும் அதோடு கீழிருந்த சந்தனக் கீற்று அவளின் சிவந்த முகத்துக்கு எடுப்புண்டாக்கியது.
“நீங்க பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். பேசாததால அப்படியே போயிட்டேன். அண்ணன்க மேல உள்ள கோபம் இன்னும் தீரல இல்லையா. வருஷங்கள் கொஞ்சம் கழிஞ்சும். அதனாலதான் என்னோட பேசலைன்னு நெனைச்சேன்.”
“ஹே… அப்படியொண்ணும் இல்ல. அவங்க மேல சங்கடம்னா உங்கூட பேசறதுக்கென்ன?”
“பின்ன ஏன் வீட்டுக்கு வரல?”
“அது… அதாவது…”
“ஏட்டன் ஒண்ணும் சொல்ல வேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க ஒரேடியா எங்களையெல்லாம் மறந்தது போல நான் மறக்கல கேட்டீங்களா? சில சமயங்கள்ல நெனைச்சுக்கறதுண்டு, சின்ன வயசில ஒண்ணா வெளையாடினத. ஏட்டனுக்கு ஞாபகம் இருக்கா, ஒரு தடவை கொல்லையில கல்யாணம் கட்டி வெளையாடி… வீட்டில எல்லாரும் பாத்து கேலி பண்ணினது…?”
அவள் ஒரு முறை தலை குனிந்துவிட்டு சிரித்தாள்.
இன்னும் இவற்றை நினைவில் வைத்திருக்கிறாளா இவள்? நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்து வைத்தேன்.
“இது யாரோட கொழந்தை?”
“விலாஸியக்காவோடது.”
தொடர்ந்து ஒரு நீண்ட மௌனம். இனி என்ன பேசுவதென்று யோசிக்கிறாளோ? எனக்கு அவ்வித யோசனை ஏதுமில்லை.
மௌனத்தை அவளே தகர்த்தாள். “இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராததுனால எங்க பாக்கவே முடியாதோன்னு நெனச்சேன். பொரிக்கறதுக்கு அப்பளமில்லன்னு வாங்க வந்தேன். அதனால பாக்க முடிஞ்சுது. அப்போ,… நாள் வரட்டுமா?”
பேசுவதற்கு அவ்வளவுதானா விஷயங்கள்? இல்லை,… பின் வேறு எதைத்தான் பேச முடியும்?
கண்களின் ஊடே அவள் பார்த்த அந்தப் பார்வை ஜீவிதத்தில் மறக்க முடியாததாக இருந்தது.
அவள் போகிறவாக்கில் திரும்பிப் பார்ப்பாளென்று கூடுதல் எதிர்பார்த்தேன். அப்படிப் பார்க்காமல் போனதில் ஏதோ இழந்த உணர்வு. அவள் பேசியவை யாவும் எனக்குள் திடீரென ஏதேதோ கற்பனைகளையும் உருவாக்கியது. பத்து நிமிட இடைவெளிக்கு மறுபடி ஒரு சிகரெட் அபூர்வமாகத் தேவைப்பட்டது எனக்கு.
திரும்பி வந்தபோது, எதற்காகவோ வெளியே வந்த சின்ன அத்தை என்னைக் கண்டு தெருவிற்கு வந்தாள். என்னோடு பேசவும் செய்தாள். கங்காதரனும் கலாதரனும் தூரமாக வேலைக்குப் போவதால் மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவதில்லை என்பதை அவளின் மூலமாக அறிய வேண்டியதானது.
மேலும், அவர்களுக்காக அந்த வீட்டிற்கே நான் போகாதிருப்பது முறையல்ல என்றும் சொன்னாள் அவள்.
பிறகு அவளின் குடும்ப நிலவரங்கள். மாமாவின் வேலை. நான்கு பெண் மக்களும் கடைசியாகப் பிறந்த பையனும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது. பையனுக்குப் படிப்பு வரவில்லை என்கிற கவலை.
ஹரி வீட்டுக்கு நகரும்போது பாட்டி வீட்டுத் திண்ணையில் நின்று பராக்குப் பார்க்கிற சிறுமி தட்டுப்பட்டாள். மன வளர்ச்சியற்றவர்களுக்கான தோற்றத்தில் அவளை அறிவது எளிதாகியது. ஸ்வப்னா. அவள் க்ருஷ்ணன்குட்டி மாமாவின் கடைசிக் குழந்தை, அவளுக்கு மாறுகண்ணாயிருந்தது. முதுகில் கையகலமுள்ள மச்சமும். அதனால் இது அதிர்ஷ்டமுள்ள குழந்தை என்பார் மாமா. அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, அவளின் இரண்டாவது வயதிலேயே அவர் நெஞ்சுவலியால் இறந்துபோனார். இல்லாதிருந்தால் அந்த மகளின் அவலங்களைச் சகிக்க வேண்டியுள்ள துயரத்துக்கு ஆளாகியிருக்க வேண்டும்.
ஆனால், க்ருஷ்ணன்குட்டி மாமா இருந்திருந்தால் இங்கே இந்தப் பிரச்சினைகள் எதுவும் நடந்திருக்காது.
மதியம் சாப்பிடுவதற்காக உள்ளூர் வேலையிலிருந்து வந்த சாமிநாதன் மாமா, ஹரி வீட்டில் என்னைச் சந்தித்தார். நான் வீட்டுக்கு வராமல் அடுத்தவர் வீட்டில் வந்து இருந்துவிட்டுப் போவது பற்றிய வருத்தம் அவரிடத்தில். அவர் சாப்பிட்டுப் போகச் சொல்லியும், என் பொருட்டு அப்பாவும் அம்மாவும் மறுத்து வந்துவிட்டனர். மஞ்சு மட்டும் வற்புறுத்தலில் கொஞ்சம் சாப்பிட்டதாகச் சொன்னாள்.
புறப்படும்போது சின்னத்தையும் அவர்களின் மகள்களில் இருவரும் வழியனுப்பும் விதமாக வந்தனர். பெரியத்தையின் குடும்பத்துப் பெண்
முகங்கள் அந்த வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தன. அப்பா போய் ஆட்டோ பிடித்து வந்தார்.
பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ஹோட்டலில் சாப்பிட்டோம்.
எனது மனசின் போக்கு த்ரிவேணியைக் குறிப்பதாக இருந்தது. அவள் சொன்ன கல்யாண விளையாட்டு நினைவுகள் எனக்குள்ளும் இருந்தாலும் அது பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. அவள் நினைவுகூர்ந்ததும், ‘பாக்கவே முடியாதோன்னு நெனைச்சேன்’ என்றதும், ஜீவிதத்தில் மறக்க முடியாத அந்தப் பார்வையும்…
சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டான்டுக்குள் வந்தோம். காத்து நிற்கையில் புகைக்க மறைவிடத்துக்குப் போகிற வரைக்கும் எனக்கு த்ரிவேணி யோசனை இருந்தது.
பஸ்ஸில் மஞ்சு அப்பாவோடு உட்கார்ந்தாள். நான் அம்மாவுடன்.
“பெரிய மாமா வீட்ல எல்லாகும் வீட்டை பாகம் பிரிக்கச் சொல்றாங்களாம், வித்துடலாம்னு. பாட்டி உயிரோட இருக்கற வரைக்கும் வீட்டை விக்க விடமாட்டான்னு காத்திருக்கறாங்க.” அம்மா சொன்னாள்.
என்ன ஜென்மங்கள் அவர்கள்! அற்பம் காசுக்காக ஒரு மனுஷியின் மரணத்தைக் காத்துக் கொண்டிருக்கிறார்களே…!
எனக்கு பாட்டியினுடைய அந்தத் தளர்ந்த எலும்பு விரல்களின் வாஞ்சையான ஸ்பரிஸம் மனதில் நெருடியது.
”த்ரிவேணி கல்யாணம் வரைக்கும் பாட்டி இருக்கும்னுதான் தோணுது எனக்கு.”
அம்மாவை ஏறிட்டுப் பார்த்தேன். ”த்ரிவேணிக்குக் கல்யாணமா? எப்போ?”
“அடுத்த வாரம் நிச்சயம். இந்த மாசத்திலயே கல்யாணத்த முடிச்சறலாம்னு இருக்கறாங்க.”
இதை ஏன் த்ரிவேணி என்னிடம் சொல்லவில்லை? அத்தனை பேசி… இல்லை, அவள் இயல்பாகப் பேசியதை வேறு விதமாக எடுத்துக்கொண்ட தவறுக்கு அவள் என்ன செய்வாள், பாவம்! மேலும், தனது திருமண விஷயத்தைத் தானே சொல்ல அவள் கூச்சப்பட்டிருக்கலாம். எங்களின் குழந்தைக் கால கல்யாண விளையாட்டை ஞாபகப் படுத்தியதுகூட இது தொடர்பானதாக இருக்கக் கூடும்.
எனக்குள் கற்பனைகள் உருவான அந்த நிமிடங்களைச் சபித்தேன். த்ரிவேணியின் கல்யாணம் வரைக்கும் பாட்டி தாக்குப்பிடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
பஸ் புறப்பட்டது. கண்டக்டர் ஏறி டிக்கெட் கொடுத்தார். அப்பாவே டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, எங்களிடம் திரும்பி, என்னை வாங்க வேண்டாமென்றார். நான் இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.
“வீடு பாகம் பிரிக்கும்போது நாலாப் பங்கணும்னு நான் சாமிநாதன்கிட்ட சொல்லியிருக்கறேன். பத்தோ ஆயிரமோ கையில கொடுத்து சகோதரிகளோட கணக்கத் தீக்கலாம்னு அவங்க நெனைச்சிறக் கூடாதில்லையா? பெரியம்மாவுக்கும் இதப் பத்தி எழுதணும்…” அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.
நான் திகைத்தேன். ‘நீயும் அப்படித்தானாம்மா? கேவலம் பணத்துக்காக…’
இப்போது நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.
உடனே எழுந்து, அருகில் நின்றுகொண்டிருந்த பெண்மணிக்கு இடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றுகொண்டேன். அந்தப் பரம்பரை வீடு, பாட்டி, மாமாக்கள், அவர்களின் குடும்பங்கள், த்ரிவேணி, அம்மா… எல்லாமாக எனக்குள் குழப்பம் உண்டானது.
“ஏன்டா?” நான் எழுந்துவிட்டதற்கு அம்மா காரணம் கேட்டாள்.
“ஒண்ணுமில்லம்மா’ என்றேன், எல்லாவற்றுக்குமாக.
– புதிய பார்வை, 1-15 ஜூன் 1994.
குறிப்பு: இக் கதை மாதாந்திர இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.