ரிடர்ன் கிஃப்ட்!





இரண்டு வயது மகளின் பிறந்த நாள் வருகிறது. கொஞ்சம் கிராண்டாக கொண்டாடலாம்னு முடிவுபண்ணின துளசியும் அவள் கணவனும் என்ன ‘ரிடர்ன் கிஃப்ட்’ கொடுப்பது என்று யோசித்தார்கள்.

‘கல்யாணத்துல கொடுக்கிற ‘தாம்பூலப் பை’மாதிரி கலாச்சாரம் சார்ந்ததா தரலாமா?’ என்றாள் துளசி. கணவன் ரமணி ‘வேண்டாம்!’ என்றான். ‘ஏனென்றாள்’ அவள். ‘தாம்பூலப் பையில சாத்துக்குடி வெற்றிலை, பாக்கு ஒரு சாக்லெட் இதுதான் சம்பிரதாயம். சாத்துக்குடியின் சாறைக்குடித்தால், உடம்புக்கு நல்லதுன்னுதான் அதைக் கொடுப்பது சம்பிரதாயம். ஆனால், சாத்துக்குடியிலிருக்கிற சாறையெல்லாம் காத்துக்குடிச்சு அது சப்பிப்போய் அதுவே சீக்காளியாட்டம் இருக்கும்!’
‘பின்ன என்னதான் கொடுப்பதாம்? …. ஸ்வீட்ஸ் தரலாமா..?’
‘ஊகும்! வயது அறுபது தாண்டும்முன் சுகர் இருநூறைத் தாண்டீடுதே?!’
‘அப்ப என்ன தரலாம்?’
‘சின்ன பைனாகுலர், கலைடாஸ்கோப், கைல வாட்ச் மாதிரி ஒட்டிக்கற ஸ்கேல் ஏபிசிடி ஆல்ஃபாபெட் ஸ்டிக்கர் சார்ட் இதையெல்லாம் கொடுத்தா படிக்கிற பிள்ளைகளுக்கு யூசாகும்.’ என்றான் அவன்.
‘கரெக்ட்!’ ஆனால், அதை வாங்கும் பெரியவங்க என்ன பண்ணுவாங்க?’ என்றாள் அவள்.
‘தானா யாருக்கும் எதையும் கொடுக்காதவங்க கூட இந்த கிஃப்ட்டை பக்கத்துவீட்டுக்கார குழந்தைங்களுக்கு தானமாத் தரலாம்ல? கொடுப்பதை நாமதான் கொடுக்கணும்னு இல்லே..! யாரையாவது தானம் தர வைப்பது நாம உருவாக்குகிற பழக்கமா ஏன் ரிடர்ன் கிஃப்டா இருக்கட்டுமே!’ என்றதும், இருவரும் இணங்கினார்கள்.