ரங்கோன் ராதா






அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
“ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய ‘கெட்டகாலம்’ அவளை இப்படியாக்கிவிட்டது!” – இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.
என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

“நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?” என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். “இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் ‘சபாஷ்’ என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து ‘பேஷ்’ என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி” என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். “அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்” என்று நான் கேட்டேன். “கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி” என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். “போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்” என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான ‘ஆசை’ பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு ‘மோகித்தால்’ நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.
ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை – என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் – ராதாரமணா என்ற பஜனை – ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி – ராதாபாய் என்ற நடிகையின் பெயர் – என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.
காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் – வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.
“விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே” என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் ‘பிகு’வை விட்டுவிடலாமா? “சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்” என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, “எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!” என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், “சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?” என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. ‘சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது’ என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.
ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் “அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்” என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. “ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்” என்றான். “சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?” என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “நீ அவளைக் காதலிக்கிறாயா?” என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு “என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்” என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, “நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்” என்றான் சோகக் குரலில்.
என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், ‘சகஜம்’ என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. “என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?” என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.
நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். “சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு…” என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, “ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை” என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “உனக்குத் தங்கை ஏது?” என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, “நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது ‘ராதா என் தங்கை’ என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்” என்று கேட்டேன்.
நண்பனின் கண்களிலே தீ கொப்புளித்தது. ஆத்திரத்துடன் பேசினான். “ஆறு மாதத்துக்கு முன்பு நீ பெருந்துறைக்குப் புறப்பட்டாயே, அப்போது நான் எங்கே போகிறாய் என்று கேட்டேனல்லவா?” என்றான். “ஆமாம்” என்றேன் நான். பெருந்துறைப் பிரயாணத்துக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டு, “பெருந்துறைக்குப் போகிறேன் என்று ஏன் என்னிடம் உண்மையைச் சொல்லவில்லை? ஏன் உன் நண்பனிடத்திலேயே உண்மையை மறைத்தாய்?” என்று கேட்டான். “போடா பிரமாதமான தவறு கண்டுபிடித்துவிட்டாய்! நீயோ, இளகிய மனதுள்ளவன். எனக்கு இரண்டொரு மாதங்களாக இருமலாக இருந்தது; சில டாக்டர்கள் அது எலும்புருக்கியோ என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். பெருந்துறை சென்று பரீட்சித்துக் கொண்டு வருவோம் என்று கிளம்பினேன். உன்னிடம் அதைச் சொன்னால் நீ உண்மையிலேயே எனக்கு எலும்புருக்கி நோய் கண்டுவிட்டது என்று எண்ணிக் கஷ்டப்படுவாய் எனப் பயந்து, பெருந்துறை போவதைச் சொல்லவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டேன்.
“அதே போலத்தான் இதுவும். உனக்கொரு சந்தேகம் நோயைப்பற்றி. என்னிடம் சொன்னால் நான் உனக்கு நோயே இருப்பதாக எண்ணிக்கொள்வேன் என்று பயந்து உண்மையை மறைத்தாய். அதுபோலவே, நான் ராதாவைப் பற்றி உண்மையைக் கூறப் பயப்படுகிறேன். நீ அவளைப் பற்றி தாழ்வாக மதிப்பிட்டு விடுவாயோ, என்னையும் கேவலமாக எண்ணிக் கொள்வாயோ என்று. அவளைப் பற்றி நான் கண்டறிந்த விஷயம் இருக்கிறதே, அதை நான் மறைக்க வேண்டியவனாக இருக்கிறேன். அந்த விஷயமும், எலும்புருக்கி நோய் போன்றதுதான்” என்றான் நாகசுந்தரம். “பைத்தியக்காரா! நான் பெருந்துறைக்குப் போன பிறகு எனக்குச் சாதாரண இருமலே தவிர எலும்புருக்கி அல்ல என்று தீர்மானமாகிவிட்டது. தெரிந்ததல்லவா? இதோ காளை போல இருக்கிறேன்!” என்று நான் சொன்னேன். “அதைப்போலத் தான், காதல் சிகிச்சை சாலையில் ராதா பரிசோதிக்கப்பட்ட பிறகுதான், அவள் மாசற்றவள் என்று தீர்மானிக்க முடியும். அதற்காகத்தான் உன்னைக் கேட்டேன். நீ ராதாவைக் காதலிக்கிறாயா என்று. இப்போது சொல்லு, அவளைப்பற்றிய முழு உண்மையைக் கூறுகிறேன்” என்றான்.
“இப்படியும் ஒரு நிபந்தனை உண்டா? கட்டுக் கதைகளிலே வருமே, ராஜகுமாரன் தூங்கிக் கொண்டிருந்தான்; ஒரு மாயாவி அவனை அப்படியே கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், ஒரு ராஜகுமாரி வீட்டிலே கொண்டு போய்ச் சேர்த்து இருவருக்கும் கலியாணம் செய்து வைத்தான் என்று, அதுபோல இருக்கிறதே உன் கலியாண ஏற்பாடு” என்று நான் கேட்டேன்.
அவ்வளவு சோகத்துக்கிடையிலும் கொஞ்சம் சிரிப்பு வந்தது நாகசுந்தரத்துக்கு.
“நண்பா! நான் நம்பிக்கையில்லாமல் சொல்லவில்லை. ராதாவை நீ கண்டால், கட்டாயம் காதலிப்பாய்!” என்றான். “அதை எப்படி நீ கண்டுபிடித்தாய்?” என்று நான் கேட்டேன்.
“ஏன் முடியாது. நீ அடிக்கடி, உன் இலட்சிய மங்கையைத் தான் எனக்குக் காட்டி இருக்கிறாயே! வயது இருபது இருக்கவேண்டும் என்பாய். ஒரு வயது ஏறத்தாழ இருக்கும் ராதாவுக்கு. அடக்கம் இருக்கவேண்டும், ஆனால் அசடாக இருக்கக்கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது. அழகு இருக்கவேண்டும், ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக்கூடாது. படிப்பு இருக்கவேண்டும், ஆனால் படாடோ பம் இருக்கக்கூடாது, சகஜமாகப் பழகவேண்டும், ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது என்று கூறுவாயே கவனமிருக்கிறதல்லவா?” என்று கேட்டான். உண்மை தான். நான் அடிக்கடி இப்படிப்பட்டவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொல்லுவது உண்டு. இந்த இலட்சியப் பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசினதற்குக் காரணம், நான் பல தடவை கேட்ட ‘வாழ்க்கை ஒப்பந்த’த்தைப் பற்றிய பிரசங்கங்களல்ல; என் மாமன் மகள் வதனா, இந்த இலட்சணத்துக்கு நேர்மாறாக இருந்தாள். அவளை எனக்கு மனைவியாக்குவதற்கு இரு குடும்பத்திலும் விசேஷமான முயற்சி. அந்தக் கோபத்திலே நான் தீட்டிய இலட்சிய மங்கையை, நாகசுந்தரம் எனக்குக் கவனமூட்டினான்.
“ஆமாம்! அப்படிப்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன். கேலியா உனக்கு? நீ வேண்டுமானால் பாரேன்” என்று நான் வீரமாகப் பேசினேன். “கேலியல்ல, பரந்தாமா! நீ குறிப்பிடும் அந்த இலட்சணம் அவ்வளவும் பொருந்தியவள் ராதா. அதனால்தான் நான் தைரியமாகச் சொன்னேன், அவளைக் கண்டால் நீ காதலிப்பாய் என்று. ராதா பத்தாவது தேறியிருக்கிறாள். இப்போது கல்லூரியில் படிக்கிறாள். கல்லூரிப் படிப்பு, கால் கூந்தலும், காலில் அலங்காரப் பூட்சும், காமினியா ஸ்நோவும் இல்லாமல் கூட வரும் என்பதை ராதா கல்லூரிப் பெண்களுக்குக் காட்டுவதற்குப் போயிருக்கிறாள்” என்று நாகசுந்தரம் சொன்னான்.
“ஆஹா! நீ மட்டும், இந்த 56 தேசத்து அரசர்கள் இருந்த காலத்திலே வாழ்ந்திருந்தால், தூது போகும் வேலையில் வேறு யாரும் உனக்கு நிகர் இல்லை என்றாகியிருக்கும்” என்று நான் கேலி செய்தேன்.
“பரமா! உன் மனதிலே இவ்வளவு காலமாக உலவிக் கொண்டிருந்த இலட்சியப் பெண், ராதாதான். நீ கூற மறந்த குணங்களைக்கூட அவளிடம் காண்பாய். அவளுடைய முகத்திலே இருக்கும் லாவண்யம், உன் கற்பனைக்கு எட்டாதது. கண்டால் நிச்சயமாக என் காலடி வீழ்வாய்” என்றான் நாகு.
“அவளைக் கண்டால் உன் காலடி வீழ்வானேன்? என்னடா நாகு! ஒன்றுக்கொன்று பொருத்தமே இல்லாமல் பேசுகிறாயே!” என்று நான் கேட்டேன், என் நண்பனின் போக்கு மேலும் மேலும் விசித்திரமாவது கண்டு. “தங்கையைக் கலியாணம் செய்து கொள்ள, அண்ணனின் தயவு வேண்டாமோ?” என்று கேட்டான் நாகசுந்தரம். “அண்ணனா! ராதாவுக்கு நீ எப்போது அண்ணனானாய்?” என்று நான் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி கேட்டேன்.
“பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு!” என்றான் அவன்.
“டே! நாகு, வீணாக என்னைக் குழப்பாதே, ராதா யார்?” என்று கேட்டேன்.
“என் தங்கை” என்று பெருமூச்சுடன் கூறினான். என் திகைப்பைக் கண்டு, மெள்ள, சிரமப்பட்டு பேசலானான்.
“நண்பா, அந்தப் பெரிய கதையைச் சொல்லவும் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், சொல்லாவிட்டாலோ, மனத்திலுள்ள பாரம் நீங்காது. ராதா, என் தங்கைதான். திடுக்கிடாதே! ராதாவுக்கு இவ்விஷயம் தெரிந்தபோது ஆச்சரியப்பட்டாள். பூராக் கதையையும் கேள்விப்பட்டால் நீயும் ஆச்சரியப்படுவாய். ஆனால், முதலிலே நீ அவளைச் சந்திக்க வேண்டும். பழக வேண்டும். உனக்கு ராதையிடம் பிரேமை பிறந்தால், நான் முழு விவரத்தையும் கூறுகிறேன். இல்லையானால் மௌனமாகத்தான் இருக்க வேண்டும். யார், ராதாவை உள்ளன்போடு நேசிக்கிறானோ, எவனொருவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறானோ, அவனிடமே ராதாவின் பரிதாப வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். ராதா, என் தங்கை என்று தெரிந்த உடனே, நான் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்குக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டேன். ஹாஸ்டலில் இருக்கிறாள். பண வசதி செய்து விட்டேன். மிக அடக்கம், நல்ல குணம், படிப்பு, பழக மிக மேன்மையானவள்; என்றாலும், உலகின் முன், ராதா என் தங்கைதான் என்று பெருமையுடன், பூரிப்புடன் கூறிக் கொள்ள முடியாது. கண்ணாடியிலே தெரியும் பொருளைக் கையால் தொட முடியுமா? காலத் திரை எனக்கும் என் தங்கைக்கும் இடையே நிற்கிறது. அதைக் கிழித்தெறியும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால், என் தங்கையின் எதிர்கால வாழ்வு கௌரவமானதாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கும்படி செய்ய வேண்டியது என் பொறுப்பு. ராதா என் தங்கை – உலகம் அதை ஒப்ப மறுக்கும்; என் உள்ளமோ, அந்தக் கருத்தைத் தழுவிப் பூரித்தது” என்றான். அவனுடைய மொழியிலே, அவன் உள்ளத்தை ஏதோ இரகசியம், மென்று தின்று கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.
அத்தியாயம்-2
“ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன் கட்சி?” என்று நான் கேட்டேன். “ஆமாம். இன்னும் ஒரு நிபந்தனை” என்று நாகசுந்தரம் சொன்னான். “கதையை யாரிடமும் சொல்லக்கூடாது” என்றான். “மேலும் மேலும் விந்தையாக இருக்கிறது” என்றேன் நான். “விசித்திரம்! விந்தை! விபரீதம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லு. எனக்குக் கவலை எல்லாம் ராதா சுகப்பட வேண்டும்; என் தங்கையைக் கண்ணியம் தெரிந்த காதலனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்” என்றான். “என்னடா நாகு! திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே! ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது! கேட்டால் கூட சிரிப்பார்கள்!” என்றேன். நாகசுந்தரம் என் தோள்மீது கை வைத்துக் கொண்டு, துயரத்துடன் சொன்னான். “உன்னைத் தவிர வேறு யாரிடம் பரந்தாமா நான் உண்மையைச் சொல்வேன். நீ ஊரிலே உலாவும் பல இளைஞர்கள் போலப் பழைய நம்பிக்கைக்காரனல்ல. ஜாதி குலபேதத்தை அடியோடு மறுப்பவன். உனக்குக் குடும்பத்திலேயும் தொல்லை கிடையாது. உன் தகப்பனார் அறிவாளி, முற்போக்கான கொள்கை உடையவர். ஆகையால் ராதாவை மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் ஏற்படாது. உனக்குச் சம்மதமாகிவிட்டால், பிறகு எல்லாம் இனிமையாகவே முடியும். ஒன்று மட்டும் முன்னதாகவே சொல்கிறேன். ராதா என் தங்கை! அதை உலகம் ஏற்காது! என் தங்கை ராதா என்று தெரிந்ததும், நான் ராதாவுக்காக எதையும் செய்யும் துணிவு பெற்றேன். உண்மையை மறைப்பானேன். பரந்தாமா! ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா! ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ! அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை!” என்று கூறினான். அதுவரை கட்டுக்கு எப்படியோ அடங்கி இருந்த கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்பி என் நண்பனின் கன்னத்தில் வழியலாயிற்று. எனக்கு ஏற்பட்ட திகைப்பிலே என்ன செய்வதென்றே தோன்றவில்லை.
“உன் தாய்…?” என்று நான், ஏதோ கேட்க ஆரம்பித்தேன், வாய் மூடிக் கொண்டிருக்க முடியாத நிலையில்.
“இறந்து இருபது ஆண்டுகளாகின்றன. அப்படித்தான் அப்பா சொன்னார். சின்னம்மாவும் சொன்னது அதுதான். ஆனால் என் தாய் சாகவில்லை, தாயின் கௌரவம் செத்து விட்டது. உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் உலகின் முன்பு, ‘என் தாய்’ என்று நான் அவர்களைக் கூற முடியாது. ‘மகனே!’ என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது! ‘அண்ணா!’ என்று ராதாவும், ‘ராதா!’ என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா! நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள்! இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி! ராமசாமி நாயுடுவின் வைப்பு! ராதா, ஒரு கதம்பகுலப் பெண்! விபசாரியின் மகள்!” என்று கூறிவிட்டுக் கதறினான் என் நண்பன்.
நாகசுந்தரம், சொன்னது கேட்டு என் தலை சுழன்றது – ஊர் முழுவதும், அவன் தாயார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவளுடையே தங்கையையே அவர் கலியாணம் செய்துகொண்டதாகவும் நம்பி இருந்தது. நானும் அப்படித்தான். நண்பன் நாகசுந்தரம், திடீரென்றுதான், தன் தாயார் இறந்து போகவில்லை, வழுக்கி விட்டார்கள் என்ற பயங்கரச் செய்தியைக் கேள்விப் பட்டான் என்பது தெரிந்தது. எப்படித் தெரிந்து கொண்டான். ஊரார் அறியாத அந்த உண்மையைக் கூறியது யார்? என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். நண்பனோ, புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தான்.
உன் தாயார் எப்படி விபசாரியானார்கள்? ஏன் விபசாரியானார்கள்? என்று கேட்கும் துணிவு, எப்படி ஏற்பட முடியும்? எவ்வளவு வேதனை தரும் கேள்விகள் அவை. நான், நாகசுந்தரத்தின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இருவரும் நெடுநேரம் பேசாமல் இருந்தோம். உலகிலே சகலமும் இருண்டுபோய், ஜீவராசிகள் யாவும் இறந்துபோய், சகல சப்தமும் அடங்கிப் போன நிலையில், நானும் அவனும் மட்டும் வீற்றிருப்பது போன்று எனக்குத் தோன்றிற்று. எங்கு நோக்கினாலும் ஒரே சூன்யமாக இருந்தது. விநாடிக்கு விநாடி, என் உள்ளத்திலே யாரோ சூட்டுக் கோலிடுவது போலிருக்கும். திரும்பிப் பார்ப்பேன், என் நண்பனை. அவனோ விம்மிக் கொண்டிருப்பான். அணைத்துக் கொண்டேன், ஏதும் பேசாமல், என்ன சொல்லி அவனுக்கு ஆறுதலை உண்டாக்க முடியும்? சாந்தி தரக்கூடிய விதத்தில் என்ன பேசுவது? என் தாய் விபசாரி என்று மகன் கூறிக் கதறும் போது, யாரால் தான் சமாதானம் கூற முடியும்! இந்த வேதனையான நிலைமை ஏன் ஏற்பட்டது, என்று எண்ணினேன். வேளாளர் குடிப்பிறந்து, தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டு, தங்கரூபன் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த ரங்கம், விபசாரியாக வேண்டிய அவசியம் என்ன? ரங்கம் கிழவனுக்கல்ல வாழ்க்கைப்பட்டது. குடித்துவிட்டு வீதியில் புரளும் கோணல் சேட்டைக்காரனல்ல அவள் கணவன். குடிசையில் அல்ல அவள் வாழ்ந்தது. கண்டவர் மெச்சும் தனவான். பொருத்தமற்ற மணம் என்று, அந்தத் திருமணத்தைக் கூறிவிட முடியாது. ஏழ்மையால் வாட்டப்பட்டு, புருஷனால் கைவிடப்பட்டு, புலம்பித் தவிக்கும் பெண், பிறரின் போகப் பொருளானாள் என்று கேள்விப்படும்போதாவது, ஒரு சமயமில்லாவிட்டால் மற்றோர் சமயம், “ஆமாம் பாவம், அவள் என்ன செய்வாள்” என்று ஒருவர் இருவராவது கூற முடியும். அவள் வஞ்சிக்கொடி, அவனோ நெஞ்சில் ஈளைகட்டிய கிழவன். பணத்தாசையால் அவனை மணந்தாள், வாலிபப் பருவத்தின் சேட்டையால் வேறொருவனை நாடினாள், என்ற நிலையும் அல்ல, ரங்கம்மாளுக்கு ஏற்பட்டது. இப்போதுங்கூட அவர், ரங்கம்மாளுக்கு ஈடு அல்ல என்று கூற முடியாது. என்றாலும், ரங்கம்மாள் விபசாரியானாள்! ஏன்? எப்படி? என் மனதிலே, இவ்வெண்ணங்கள் புகுந்து குடைந்தன.
சரி, எப்படியோ ஒன்று விபசாரியாகிவிட்டாள். அந்தக் கள்ளிக்காகக் கண்ணீர் விடுவதா! காறித் துப்ப வேண்டும். கழுத்தை நெரிக்க வேண்டும் என்றல்லவா தோன்றும், யாருக்கும்? அதிலும், இப்படிப்பட்ட தாயால் எப்படிப்பட்ட இழிவும், பழியும் ஏற்படும் ஒரு மகனுக்கு; அவமானத்தையே அளிக்கும், அந்தத் தூர்த்தைக்காக அழுவதற்கு, எப்படி ஒரு மகனுக்கு மணம் வரும்? ஆனால், நாகசுந்தரம், தேம்பித் தேம்பி அழுகிறானே!! ஏன்? சோரம்போன மாதுக்காக ஏன், நாகசுந்தரம் இவ்வளவு உருகவேண்டும்? என்ற கேள்விகள், கிளம்பி என்னைக் கொட்டியபடி இருந்தன.
“உன் தாயாரைப் பார்த்தாயா?”
“ஆமாம்! என் தாய்! அந்த ராமசாமி நாயுடு! ராதா! அந்த மூவரையும் பார்த்தேன்.”
“எங்கே? எப்போது?”
மேற்கொண்டு நான் கேள்விகள் போடவில்லை. நாகசுந்தரமே பேசலானான்.
“பரந்தாமா! எங்கள் பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த குடும்பம், குண்டு வீச்சுக்குப் பயந்து, ரங்கோனிலிருந்து வந்தது என்பது எனக்குத் தெரிந்ததும், நான் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆவலுடன், பர்மா சேதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்து, வந்தவர்கள் யாரார் என்று விசாரித்தேன்; தோட்டக்காரன் தகவல் சொன்னான்.
“அழகான பெண்! அடக்கமான தாயார்! குடிகாரக் கணவன்!” – இது அந்தக் குடும்பத்தினரைப் பற்றி அவன் எனக்குச் சொன்னது. பர்மா தகவலை விட, இந்தக் குடும்பத்தின் தகவலை விசாரிக்க வேண்டுமென்றே ஆவல் பிறந்தது.
“என்ன வயது இருக்கும்?” என்று நான் தோட்டக்காரனைக் கேட்டேன். அவன் “இருபது இருக்கும். இரதிதான் அழகில்” என்றான். நான் கேட்டது, அந்தக் குடிகாரக் கணவனைப் பற்றி.
“அவனுக்கு 40-க்கு மேலிருக்கும். சாயந்தரமானால் சாராயக் கடையில் தவறாமல் அவனைப் பார்க்கலாம். குடி வெறியில் வீண் சண்டைக்கு நிற்கிறான். யாரையும் மதிப்பதில்லை – அடி விழுகிறவரையில். அடித்தால் திருப்பி அடிக்கும் திறமையும் தைரியமும் கிடையாது. போலீஸ் கம்பெளையிண்ட் கொடுக்கிறேன், பிராது கொடுக்கிறேன் என்று மிரட்டுவான். அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறான் சட்டைக்காரன் போல. சாராயக் கடைக்கு கோட்டு ஹாட்டுடன் வருகிறவனே அவன் ஒருவன் தான். போஸ்டாபீஸ் சூபரிண்டாக இருந்தவனாம், ரங்கோனில். “சண்டை முடிந்ததும் போய்விடுவேன். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் எவன் இருப்பான். அங்கே தங்கம் விளைகிறது என்று பேசுகிறான்” என்று தோட்டக்காரன் சொன்னான்.
“பாவம்! அந்த அம்மா இருக்கிறார்களே, இலட்சுமி தேவிதான்! இந்தக் குரங்கு செய்கிற சேஷ்டையை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. அவ்வளவு அடக்கம். இவன் குடித்துவிட்டுக் கூத்தாடிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அந்த அம்மாள் பாவம் தலை தலை என்று அடித்துக் கொள்கிறார்கள். அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். அந்தப் பெண் ராதா அழகி. சதா புத்தகமும் கையுமாக இருக்கிறது. பத்தாவதுவரை படித்திருக்கிறதாம். முகத்திலே எப்போதும் புன்னகை. யாரிடமும் அன்போடு பேசுகிறாள். அந்தக் குடிகாரனும் பொறுமையையே பூஷணமாகக் கொண்ட அந்த அம்மையாரும் சண்டை போட்டால்கூட, ராதா தன் படிப்பு உண்டு தான் உண்டு என்று இருந்துவிடுகிறாள். பாவம் இருக்கிற நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவு செய்கிறான் அந்தக் குடியன். என்றைய தினம் ‘இதுகளை’ நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விடுகிறானோ தெரியவில்லை” என்று தோட்டக்காரன் எனக்குக் கூறினான். அவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன் மட்டுமல்ல, பக்கத்து வீட்டு வேலைக்காரிக்குத் தெரிந்தவன். ஆகவே, அங்கே நடப்பது பூராவும் இவனுக்குத் தெரியும்.
ரங்கோன் ராதாவின் குடும்பச் செய்தியைக் கேட்டது முதல், எனக்கு அவர்களைக் கண்டு பேசவேண்டும் என்ற ஆசை பிறந்தது; சமயம் வாய்க்கவில்லை.
என் அப்பாவும் சிற்றன்னையும், காசி யாத்திரை போயிருக்கிறார்கள் அல்லவா? காசித் தீர்த்தம் அனுப்பி இருந்தார் அன்று. அதையே சாக்காக வைத்துக்கொண்டு நான் அடுத்த வீட்டுக்குள் படை எடுத்தேன்.
“பர்மா நாயுடுவுக்கும் கொஞ்சம் கொடுங்கள்” என்று வீட்டுக்காரராகச் சொன்னார். அந்த வீட்டின் பின்புறமிருந்த ஒரு அறையில்தான் அவர்கள் குடியிருந்தார்கள். சமையலுக்கு, மாட்டுக் கொட்டகைக்குப் பக்கமாக இருந்த தாழ்வாரத்தையே உபயோகித்துக் கொண்டார்கள். நான், பின்புறம் சென்று மிக மரியாதையுடனும், கொஞ்சம் கூச்சத்துடனும், “சார்!” என்று கூப்பிட்டேன்.
“யாரது” என்று கேட்டுக்கொண்டே ராதா தன் எதிரே வந்து நின்றாள். “அவர்…” என்று நான் தடுமாறினேன்.
“அப்பாவும் அம்மாவும் ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்” என்று ராதா பதில் சொன்னாள்.
“நான் அடுத்த வீடு. என் அப்பா காசி யாத்திரை போயிருக்கிறார். காசித் தீர்த்தம் கொண்டு வந்திருக்கிறேன். தரலாம் என்று வந்தேன்” என்று நான் கூறிக்கொண்டே ஒரு சிறு செம்பைக் கொடுத்தேன். ராதா அதை மரியாதையாக வாங்கிக் கொண்டாள். ஒரு விநாடி மௌனமாக நின்றேன். ராதா, “அடுத்த வீடா தாங்கள்?” என்று கேட்டாள். “ஆமாம்! நாகசுந்தரம் என்று பெயர்” என்று கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். பிறகு, அவர்களைச் சந்திக்கச் சமயமில்லை. உன்னிடம் ராதாவைப் பற்றி, ஒருநாள் மாலை சொன்னேனல்லவா, அன்று கூட எனக்குத் தெரியாது, நான் பேசியது என் தங்கையிடம் என்ற விஷயம். உன்னிடம் ராதாவைப் பற்றிப் பேசிவிட்டு வீடு திரும்பினேன். இரவு மணி பத்து இருக்கும் வீட்டுக்குள் நுழையும்போது.
“ஐயோ! அடபாவி! பாதகா!” என்று அழுகுரல் கேட்டது.
“அப்பா! அப்பா! ஐயோ!” என்று ராதாவின் குரலும் கேட்டது.
“கொன்றுவிடுவேன்; கொன்று போடுவேன்! ராஸ்கல்!” என்று மிரட்டும் குரல் கேட்டது.
தோட்டக்காரனை நோக்கினேன்.
“அதான், குடித்துவிட்டுக் கலாட்டா செய்கிறான் பர்மா நாயுடு” என்றான். இதற்குள் அழுகுரல் பலமாகிவிட்டது. வேகமாக ஓடினேன். அடுத்த வீட்டிற்குள். தன் கைத்தடியால் அந்தக் குடிகாரன் அந்த அம்மையை அடித்துக் கொண்டிருந்தான். ஒழுகும் இரத்தத்தையும் துடைக்க நேரமின்றி, அந்த அம்மையார் அலறிக் கொண்டிருந்தார்கள். ராதா இடையே நின்று தவித்தாள்.
“ஐயா! ஐயா! இது என்ன அக்ரமம்! ஒரு ஸ்திரீயை இப்படி இம்சை செய்கிறீரே, தகுமா” என்று கேட்டுக் கொண்டே பர்மா நாயுடு கையில் இருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டேன். அவன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். ஆனால் உடனே தைரியமடைந்து, என்னைப் பார்த்து, “இவள் என் சம்சாரம், நீ யார் இங்கே நுழைய? உன் வேலையைப் பார், இடியட்” என்றான்.
“உன் சம்சாரம் என்றால் அதற்காகச் சித்திரவதை செய்வதா?”
“நீ என்ன இந்த ஊருக்கு ராஜாவா? நியாயம் கேட்க வந்துவிட்டாயே! போடா மடையா! பெண்டாட்டி என்றால் பயப்பட்டுச் சாகும் பேடியல்லடா நான், கொடு தடியை, போ வெளியே.”
“ஐயா! நியாயம் கேட்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.”
“உரிமையாவது எருமையாவது, போடா வெளியே.”
என்னை அடிக்கக் கையை ஓங்கினான் பர்மா நாயுடு. ராதா, “அப்பா! அவர் நம்ம பக்கத்து வீடு. ஒன்றும் செய்யாதீர்” என்று கூவினாள். அவனோ என் கழுத்தைத் தாவிப் பிடித்தான். குடிவெறியில் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று திகில் உண்டாயிற்று. உண்டாகவே, எட்டி ஒரு உதை கொடுத்தேன், அவன் கீழே விழுந்தான்.
அத்தியாயம்-3
“குடிவெறியால் கூத்தாடியவன், என்னிடம் என்ன செய்வது! கீழே வீழ்ந்தான். உடனே எழுந்திருந்தால் மேலும் அடி விழும் என்ற பயம், அவனுக்கு. எனக்கு அவன் நிலையைக் கண்டு சிரிப்புக்கூட வந்தது. எவ்வளவு ஆர்ப்பரித்தான், அடி விழுகிற வரையில். அடி கொடுத்ததும் எவ்வளவு அடக்கம்!
“இதுதான் உங்க ஊர் வேலையோ? ஏன், சார்! என் சம்சாரத்துடன் நான் ஏதோ சண்டை போட்டா, வீடு புகுந்து அடிக்கச் சொல்லித்தான் இந்த ஊர்ச்சட்டம் சொல்லுதோ” – என்று கேட்டான், அழுகுரலில். அதைக் கண்டு நான் திடுக்கிடவில்லை; ராதாவைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். ராதா, என்னைப் பார்த்த பார்வை, ‘சீ! நீயும் ஒரு முரட்டுப் பயல்தான். இவன், அம்மாவை அடித்துத் துன்புறுத்தினான். நீ, குடித்து விட்டு நிலைகுலைந்திருப்பவனைத் துன்புறுத்துகிறாய்” என்று கூறுவது போலிருந்தது. கொஞ்ச வெட்கமடைந்து, “என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன், ராதாவை நோக்கி.
நான் அவனிடம் பேசுவதாக எண்ணிக்கொண்ட குடியன், “இடியட்! உன்னையா? பார், நான் என்ன செய்கிறேன் என்று. பர்மாவிலிருந்து வந்திருக்கும் என்னைக் கொள்ளையடிக்கவும், என் பெண்ணைக் கைப்பிடித்திழுக்கவும் நீ துராக்கிரமமாக வீட்டுக்குள் நுழைந்து கலகம் செய்ததாகப் போலீசில் பிராது கொடுக்கிறேன். என்ன நடக்கிறது பார்” என்று மிரட்டினான்.
ராதா, “அப்பா! போதும் உங்கள் பிரதாபம், போய்ப் படுங்கள்” என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னாள். இதற்குள், ரங்கம்மாள், “அப்பா! நீ யார் பெத்த மகனோ, என்னைக் காப்பாற்றினாய். இந்தப் பாவி குடிவெறி ஏறிப் போனால், இப்படித்தான் அடித்துத் துன்புறுத்துவான்” என்று என்னிடம் கூறிவிட்டு, ராதாவுக்கு ஜாடை காட்ட, ராதா, பர்மாக்காரனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள் உள்ளே படுக்க வைக்க.
“அம்மா! நான் அவரை அடிக்க வேண்டும் என்று எண்ணி இங்கு வரவில்லை. என்னவோ அலறல் சத்தம் கேட்கவே இங்கு வந்தேன். நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் என் மீது பாய்ந்தார். அதனால்தான்…” என்று நான் சமாதானம் கூறினேன்.
“நல்ல பிள்ளையாண்டானப்பா நீ. பக்கத்து வீடா நீ இருப்பது.”
“ஆமாம்.”
“என்ன வகுப்பு?”
“முதலியார் வகுப்பு.”
ரங்கம்மாள் பெருமூச்செறிந்துவிட்டுச் சில விநாடி மௌனமாக இருந்தது கண்டு, நானாகவே என் வரலாற்றைக் கூறலானேன். என் தகப்பனாரின் பெயரைக் கூறினதுதான் தாமதம் ரங்கம்மாள் என்னை விறைக்க விறைக்கப் பார்த்து,
“யாருடைய மகன்? யார் மகன் நீ?” என்று கேட்டு என்னைப் பயப்படுத்தியே விட்டார்கள். “ஏன்? ஏன், பதைக்கிறீர்கள்? என் தகப்பனார் பெயர் தருமலிங்க முதலியார்” என்று நான் கூறினேன். “கோட்டையூரா?” என்று கேட்டார்கள். “ஆமாம்” என்றேன். உடனே ரங்கம்மாள், “அட! மகனே!!” என்று பெரிய கூச்சலிட்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“மகனே! என் கண்ணே! உன்னையா நான் காண்கிறேன்? கோட்டையூரார் மகனா?” என்று கேட்டுக்கொண்டே, என் இடது காதுக்கு அடிப்புறத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் “என் மகனே தான்!” என்று ஆவேசம் வந்ததுபோல் அலறினார்கள். கண்களிலே இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது.
“அம்மா! இது என்ன?”
“அம்மா! கண்ணா! நீ என்னை அம்மாவென்று அழைக்கவும் நான் கேட்கவும் கொடுத்து வைத்தவளானேன்.”
“யார் தாங்கள்?”
“நானா? என்ன விபரீதமான கேள்வியடா கண்ணே! ஆனால் உன்மேலே என்ன தப்பு! எல்லாம் இந்தப் பாவியால் ஏற்பட்டதுதானே.”
“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் கோட்டையூர் தருமலிங்க முதலியார் மகன். தாங்களோ பர்மா…”
“பர்மாவிலிருந்து வந்திருக்கும் பராரி! ஆனால், அப்பா நான் தான் உன் தாய்.”
அதற்கு மேல் ரங்கம்மாவால் எதுவும் பேச முடியவில்லை மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டார்கள்.
கூச்சலைக் கேட்டு ஓடி வந்த ராதா, முகத்தில் தண்ணீர் தெளித்து ரங்கம்மாவைத் தெளியவைத்தாள். கண்களைத் திறந்து என்னை வாஞ்சையோடு பார்த்துவிட்டு, “அப்பா சுகமாக இரு! தங்கம் சௌக்கியமா? உன் அப்பா எங்கே?” என்று கேட்டார்கள்.
“இதென்னமா பெரிய விந்தையாக இருக்கிறது. என் தாயார் இறந்து இருபது வருஷமாகிறது…”
“ஆமாம், நீ அப்போது ஒரு வயசுக் குழந்தை…”
“அப்படியானால் தாங்கள்?”
“செத்தவள் பிழைத்து வந்திருக்கிறேன், சீர்கெட்டுப் பேர்கெட்டு, சிரமப்பட்டு, ஊர்விட்டு ஊர் ஓடி, உன் முகத்தில் விழிக்கவும் இலாயக்கற்று.”
ராதா என்னைப் போலவே திடுக்கிட்டு நின்றாள்.
ரங்கம்மாள் ராதாவை அருகே அழைத்து, என்னைக் காட்டி, “ராதா, உன் அண்ணன்; என் மூத்த மகன்” என்றார்கள். பிறகு என்னைப் பார்த்து, “மகனே! மனத்திலே இருக்கும் பாரத்தைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், பிராண வேதனையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன்; என்னை நம்பு. நான் தான் உன் தாய். ஊரும் உலகும் நீ ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, நான் இறந்து விட்டதாகவே சொல்லும். உன் அப்பாவும் சித்தியும் அதேதான் சொல்வார்கள். ஆனால், உண்மை வேறு. நான் சாகவில்லை, ஓடிவிட்டேன். உன் தகப்பனைவிட்டு” என்று கூறினார்கள்.
நான் என்ன நினைப்பது? செத்துப் போனதாகக் கூறப்பட்ட என் தாய் உயிருடன் என் எதிரே உட்கார்ந்திருப்பது கண்டு ஆச்சரியமடைவதா? ஆனால், பர்மாவிலிருந்து ராமசாமி நாயுடு என்பவனுடல்லவா வந்திருக்கிறார்கள். விபசாரி! என் தாய், இந்தக் கதியில் – என் எதிரில் – இருபது வருஷங்களுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு தாய் இருக்கும் விஷயம் தெரியவேண்டுமா? என்னால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. “அம்மா!” என்று வார்த்தை இருதயத்திலிருந்து கிளம்பி, தொண்டைக் குழிவரை வரும்; உடனே ஒரு திகைப்பு, சத்தம் ஒடுங்கிவிடும்! நான் அந்தச் சமயம் பட்ட ‘இம்சை’யின் தன்மையை விவரிக்கவே முடியாது. கண்கள் நீரைப் பொழிந்தன. உடம்பு காற்றில் கொடியென ஆடிற்று. இடையே, ராதா, “அண்ணாவா? ஏனம்மா, முன்பு சொன்னாயே, ரங்கோனில், அந்த அண்ணனா?” என்று வேறு கேட்டாள், ரங்கம்மாளைப் பார்த்து. “ஆமாம் கண்ணே! என் செல்வக் குழந்தைதான்” என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து,
“மகனே! உன்னைப் பார்க்கும் போது நான் பூரிப்பு அடைவதுபோல, நீ அடைய முடியாது. நீ எதிர்பாராத சம்பவம் இது. செத்துச் சாம்பலாகிவிட்டாள் தாய் என்று நம்பிக்கொண்டிருக்கும் உனக்கு என்னைக் கண்டதும், உண்மையில் கனவா, நனவா, நிஜமா, கட்டுக்கதையா என்றுகூடத் தோன்றும். ஆனால், நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, உன்னைப் பார்த்தேனே அதுபோதும் எனக்கு. ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, ஓர் இரவு நீ என்னை ஒட்டிக் கொண்டது போலப் படுத்திருந்த சமயம், பாவி நான், உன்னைவிட்டுப் பிரிந்தவள், கெட்டு அலைந்து இந்தக் கதியானேன். குடும்ப கௌரவத்தை நாசமாக்கினேன். மகனே! நான் செத்துவிட்டதாகவே நீ நம்பி விடுவது நல்லது. நான் உயிருடன் இருப்பது உலகுக்குத் தெரிவதுகூட, நல்லதல்ல. மகனுக்குத் தலையிறக்கத்தைத் தரும் மகா பாவி நான்” என்று கூறி விம்மினார்கள். இப்படியும் இருக்க முடியுமா? என் தகப்பனார் திட்டமாகச் சொன்னாரே, இறந்து விட்டாள் உன் தாய் என்று. எப்படி இந்தக் கதை உண்மையாக இருக்கமுடியும் என்று கேள்விகள் என் மனதில் தோன்றி என்னைத் துடிதுடிக்கச் செய்தன முதலில். ஆனால் ரங்கம்மாள் என் தாய்தான் உண்மையில், என்று அந்தக் குரலிலே இழைந்து வந்த பாசமும், உருக்கமும் எனக்குக் காட்டிவிட்டன. நம்பமுடியாதது போலக் காணப்படும் பல உண்மைகள் உலகில் உண்டு. அதில் இது ஒன்று என்று தீர்மானித்தேன். என் தாயிடம்தான் நான் பேசுகிறேன் என்று, என் உள்ளம் உரைத்தது. கோபத்துக்குப் பதில், கண்ணீர் கொப்புளித்ததற்குக் காரணம் வேறு என்னவாக இருக்கமுடியும்? “அம்மா! அம்மா! என் தாயார்! நீங்கள்? ராதா என் தங்கை!” என்று நான் மெல்லக் கூறினேன். என் காதிலே அந்தச் சொற்கள் விழுந்தபோது, எனக்கே சற்றுத் தூக்கிவாரிப் போட்டது, என் கஷ்டமான நிலையைத் தெரிந்து கொண்ட என் தாயார்,
“அப்பா! நான், என் மகனைக் கண்டேனே தவிர, நீ உன் தாயாரைப் பார்க்கவில்லை – இன்று நடப்பது அவ்வளவும் ஏதோ ஒரு கனவிலே நடந்தது என்று எண்ணிக்கொள். உன் வாழ்க்கைக்கு நான் சனியனாகமாட்டேன். கோட்டையூரார் குடும்பத்தின் பெருமையை நான் குலைக்கமாட்டேன். பயப்படாதே. நான் தான் உன் தாயார் என்பதை உலகம் அறியும்படி நான் செய்யமாட்டேன். நாளைக்கே, நாங்கள் இங்கிருந்து கிளம்பி, எங்காவது நெடுந்தூரம் சென்றுவிடுகிறோம். உனக்கு அவமானம் வருவதை நான் சகிக்கமாட்டேனடா கண்ணே! என் புத்திக் குறைவினாலும், உன் அப்பாவின் கிராதகத்தாலும், நான் இக்கதியானேன். நான் செத்துவிட்டேன் என்று ஊரார் நம்புவதால், இப்போது, உன்மீது மாசுமறுவு இல்லை. உண்மையாக நான் உயிருடன் இருக்கிறேன். விபசாரியாகி விட்டேன் என்பது தெரிந்தால் உன்னை உலகம் கேவலமாகப் பேசும். அதைக் காண நான் சகிக்க மாட்டேன். ஆகவே, என்னால் எங்கே உனக்கு அவமானம் நேரிட்டு விடுகிறதோ என்று அஞ்சாதே. நான் இருபது வருஷங்களாக இரவு பகலாக உன்னை எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறேன். நீ தத்தி நடந்ததை, கொஞ்சிப் பேசியதை, ஓடி ஆடியதை, நான் பார்க்கவில்லை. மகனே! உன் பெயர் என்னடா! நான் உன்னை அழகேசா என்றே அழைத்து வந்தேன், ஒரு வருஷகாலம்; உன்னை வளர்க்கும் பாக்கியம் இருந்தவரையில்” என்று ரங்கம்மாள் கூறினபோது, நான் கோவெனக் கதறியே விட்டேன். “அம்மா! என் பெயர் நாகசுந்தரம்; எவ்வளவு விசித்திரமான நிலைமையம்மா இது. தாயார், தன் மகனின் பெயரை, மகனையே கூறும்படி கேட்பது” என்று சொல்லி அழுதேன்.
“அழவேண்டியவள் நானடா நாகு! நீ ஏண்டா ராஜா அழவேண்டும்? நான் பாவி, துஷ்டை, உன்னை என் மகனென்று ஊரார் முன் கூறிக்கொள்ள முடியாத கேவலநிலை அடைந்தேன். உனக்கு ஏன் கவலை? நான் செத்துவிட்டவள் செத்துவிட்டவள் தான்… அப்படியே நினைத்துக் கொள். உன் கனவில் ஒருநாள் நான் தோன்றி, ‘மகனே! என்னை மன்னித்துவிடு, என்று கெஞ்சினேனென்று நினைத்துக்கொள்” என்றார்கள்.
“அம்மா! அப்படி எல்லாம் பேசாதீர்கள். எனக்கு உண்மை வேண்டும், விவரம் வேண்டும், விளக்கம் வேண்டும், என் வேதனையைப் போக்க வேண்டும்” என்று கேட்டேன். “நாகு! நான் இனிக் கூறப்போவது அவ்வளவும் சத்தியமான பேச்சு. இன்று கேவலமான நிலையை அடைந்திருக்கிறேன் என்ற காரணத்தால், என் வார்த்தையைச் சந்தேகிக்காதே. நான் உன் தாயார். அதைக் கூறிக் கொண்டு, நான் மறுபடியும் அந்த ஸ்தானத்தை அடைய முடியாது. உன்னை யார் என்று தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி, மட்டற்றது என்ற போதிலும், மருட்சியுடன் கூடியதுதான். உன்னை நான், ‘என் மகனே’ என்று மனதிற்குள்ளாகத்தான் சொல்லி ஆனந்தப்பட முடியுமே தவிர, வெளியே சொல்ல முடியாது. எந்த மகனும் பொறுத்துக்கொள்ள முடியாத இழிவான காரியத்தில் இறங்கினேன். அப்பா நாகு! நீ புத்திசாலி, கருணை உள்ளவன். என் கதை முழுவதையும் கேட்டால், இழிவான நிலைமைக்கு நானாகப் போகவில்லை, உன் அப்பாவே தான் தள்ளினார் என்பதைத் தெரிந்து கொள்வாய். இவ்வளவு கூறுவதும் என்னை மன்னித்துவிடு, மாதா என்று ஏற்றுக்கொள் என்று உன்னைக் கேட்க அல்ல. நீயாக ஒருவேளை அவ்விதமான எண்ணம் கொண்டால்கூட, நான் திட்டமாக மறுத்துவிடுவேன். கேள், என் பரிதாபத்துக்குரிய கதையை! உன் தாய், விபசாரியான கதையை.”
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை, கோட்டையூர் மக்களெல்லாம் குமுறினார்கள்; ‘மகராஜி! புண்யவதி! போய்விட்டாள். பச்சைக் குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டாள்!” என்று கூறினர். அன்றுதான் நான் இறந்து விட்டேன்! வெள்ளிக்கிழமையன்று, பூவோடும் மஞ்சள் குங்குமத்தோடும் புண்யவதி போகிறாள் பார். பாவம், குழந்தைதான் பிழைக்குமோ என்னவோ தெரியவில்லை என்று, மயான ஊர்வலத்தைக் கண்டு மக்கள் பேசிக் கொண்டனர். உன் அப்பா முக்காடிட்டுக் கொண்டு சென்றார். உன் தாத்தா வேளாள சங்கத் தலைவர் வீரராகவ முதலியார், தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்து சென்றார். இரவு மணி பத்தாகிவிட்டது. பிணத்துக்குத் தீயிட! தீ வெகு வேகமாகப் பிடித்துக்கொண்டது.”
– தொடரும்…
– திராவிடநாடு, 1947.
– ரங்கோன் ராதா (நாவல்), முதற் பதிப்பு: 2002, பூம்புகார் பதிப்பகம், சென்னை.