முடிவிலிருந்து ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 329 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா!…”

“என்னடா மோனை?” 

“நேரம் போட்டுது. நான் போவேணும்.” 

சட்டையை அவசர அவசரமாக அணிந்து கொண்டே அவன் கூறினான். 

“எங்கையடா மோனை பேர்ப்போறாய்?”

வியப்புடன் தாய் அவனை ஏறிடுகின்றாள். 

“இண்டைக்கு சிம்மாசனப் பிரசங்கம் நடக்கப் போகுது. எங்கடை மந்திரிமார் எல்லாரும் வாறார்கள். நான் சுதந்திர சதுக்கத்துக்குப் போவேணும்.” 

உரிமையுடன் கூறினான் அவன். 

அவனுடைய குரலில் தற்பெருமை. 

“இப்ப இரண்டு மூண்டு மாதமாய் உனக்கு ஒரே வேலைதான். ஏன் இப்படி அலையிறாய் எண்டு எனக்குத் தெரியேல்லை. இதாலை கண்ட பலன்தான் என்ன? வீண் உலைச்சல்தானே. உன்னைப் போலைதான் உன்ரை அப்பரும் இராப்பகலாய் வேலை செய்தார். நானும் உங்களைப் பேரலை ஒரு காலத்திலை உலைஞ்சு களைச்சனான்தான். ஆனால் கண்டதென்ன?” 

சலித்துக்கொண்டே அவனுடைய தாய் கூறினாள். 

“என்ன, ஒரு பலனுமில்லையா? ஏன், எங்கடை மக்கள் அரசாங்கம் வந்திட்டுதுதானே. இதுக்காகத்தானே நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தம் ” 

“எந்த அரசாங்கம் வந்தால்தான் என்ன? எங்களுக்கு எப்பவும் கஷ்டம்தானே.” 

வேதனை நிறைந்த விரக்தி அவளுடைய குரலில் தொனிக்கின்றது. 

“அப்படிச் சொல்லாதையணை அம்மா, எங்கடை அரசாங்கத்திலை எங்களைப் போன்ற ஏழையள் எல்லாரு க்கும் கட்டாயம் வேலை கிடைக்கும். எங்கடை கஷ்ட மெல்லாம் கெதியாய்த் தீர்ந்துபோம்.” 

துன்பத் தீயில் வரண்டுவிட்ட தன் தாயின் வேதனை நிறைந்த முகத்தைப் பார்த்தபடியே எதிர்கால நம்பிக்கையை ஊட்டுகின்றான் அவன். 

“சரி வாறது வரட்டும். எல்லாத்தையும் நாம் தானே சுமக்க வேண்டும். அது கிடக்கட்டும். இப்ப பசியோடை என்னெண்டு போப்போறாய்?” 

“ஏன் பத்து மணிக்குத்தானே பாண் திண்டனான். எனக்குப் பசிக்கேல்லை.” 

“நல்லாய்ச் சாப்பிடுற வயதிலை நீங்கள் இப்பிடிக் கிடந்து காயிறதைப் பார்க்க வேணுமெண்டு என்ரை தலை விதி.” 

அவள் விட்ட பெருமூச்சு அவளுடைய இதயச் சுமை யைத் தாங்கிக் கொண்டு வெளிவந்தது. 

அவனுடைய கண்கள் கலங்குகின்றன. 

அவனை அவள் மிகவும் நம்பிக்கையோடு படிக்க வைத்தாள். சொத்துச் சுகம் யாவையும் இழந்தும், பட்டினி கிடந்து மகனின் படிப்பொன்றையே தன் லட்சியமாகக் கொண்டு அவள் வாழ்ந்ததும், கடைசியில் என்ன ஆயிற்று? 

மகன் மிகவும் கவனமாகவும் திறமையாகவும் படித்து முன்னுக்குத் திகழ்ந்தாலும், சமூக வாழ்விலே, பணம் படைத்தவர்களுக்குப் பின்னுக்கு, மிகக் கடைசியில், மிகவும் மிகவும் கடைசியில் நிற்பதை அவள் கடந்த காலத்தில் அனுபவபூர்வமாக அறிந்து மனம் சலித்துப் போயிருந்தாள். 

அவன்தான் எத்தனை நேர்முகப் பரீட்சைகளுக்குப் போய் ஏமாற்றத்தையே தாங்கொணாத வேதனைகளோடு சுமந்து வந்தான். 

அவையெல்லாம் பழைய கதைகள். இன்றோ ஒரு புதிய வரலாறு தொடங்குகிறது என்று அவனே சொல் கின்றானே….! 

“அம்மா நான் போட்டு வாறன்.’ 

சிந்தனையிலிருந்து தாய் மீள்கின்றாள். 

“பஸ்சுக்குக் காசு கிடக்கே?” 

சட்டைப் பைக்குள் கையை விடுகின்றான். 

இருபத்தைந்து சதம் தட்டுப்படுகின்றது. 

“ஓ…காலமை பாண் வாங்கிப் போட்டு மிச்சக் காசு கிடக்கு.” 

‘போய்ச் சேந்திட்டால் காணும். திரும்பி வர என்ரை சினேகிதரிட்டை வாங்கலாம்.’ 

போவதற்கு அவன் அவசரப்படுகின்றான். 

செயலெல்லாம் துரிதம். 

“இருபத்தைஞ்சு சதம்தானே கிடக்கு. உதுக்காணுமே?” 

“ஓ, இது காணுமணை” 

காணாவிட்டாலும் அவளால் என்னதான் செய்ய முடியும்? 

“தங்கச்சியாக்கள் நெசவுசாலையிலிருந்து வரப்போகினை. நீ கஞ்சியை வையணை. நான் போட்டுவாறன்.” 

அவன் அவசரமாகச் செல்கின்றான். 

சென்று கொண்டிருக்கும் அவனுடைய முதுகுப் புறத்தைப் பார்த்தபடியே அவள் நிற்கின்றாள். 

“இதே மாதிரித்தான், இவனைப் போலைதான் அண்டை க்கு அவரும்…..” 

அவளுடைய கணவனின் உருவம் அவள் கண்முன் நிழலாடுகின்றது. 

அவளுடைய கண்கள் குளமாகின்றன. 

“இந்த வேகத்திலைதான் அண்டைக்கு அவரும்….”

மீண்டும் ஒரு பெருமூச்சு. இது எத்தனையோ நாட்களின் தொடர்ச்சி. 

தன்னுடைய கணவனோடு அவளும் இதே வேகத்தில் பல ஊர்வலங்களில் சென்றிருக்கின்றாள். கூட்டங்களில் பங்குபற்றியிருக்கின்றாள். அப்போது அவள் கணவனும் இதே பூரிப்போடுதான் கதைத்திருக்கிறான். ஆனால் இன்று அவள் கணவன்? 

திரும்பி வராத அவள் கணவன் அன்று சென்று கொண்டிருந்த அதே வேகத்தில் இன்று அவளுடைய மகன் சென்று கொண்டிருக்கின்றான். 

அவனுடைய தந்தை ஒரு பஸ் தொழிலாளி. 

கஷ்டப்பட்டு அவனை சர்வகலாசாலைப் படிப்பு வரை படிப்பித்து விட்டு, அவன் பரீட்சை முடிவுவெளியாகுமுன் ஒரு வருடத்திற்கு முன் தந்தை அகால மரணமடைந்தார். 

வயோதிபத் தாயையும் மூன்று சகோதரிகளையும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று. 

படிப்பு முடிந்ததும் அவன் வேலை தேடி அலைந்தான். அலைச்சலா அது? அதுவே மாபெரும் வேதனையான அனுபவம். 

வேலை கிடைக்கவில்லை. 

“அலுவல் பாத்தால்தான்” வேலை கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். 

பணமுள்ளவர்களெல்லாம் “அலுவல் பார்த்து” உத்தி யோகம் பெற்றனர். 

அவன்? 

சில இடங்களில் பாடம் சொல்லிக்கொடுத்தான். கிடைத்த அற்ப தொகையைக் கொண்டு கஞ்சியும் தண்ணியுமாக அவர்கள் காலத்தைக் கடத்தி வந்தார்கள். 

இப்பொழுது அவனுடைய மூன்று சகோதரிகளும் நெசவுசாலைக்குச் செல்லத் தொடங்கி ஒரு வருடமாகின்றது. 

அவர்களுடைய வாழ்க்கை மேடு பள்ளங்களினூடாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

பிரதான வீதிக்கு அவன் வந்து விட்டான். 

வீதியெல்லாம் இரு நிறக் கொடிகள் பொலிந்திருக்கின்றன. 

பஸ் நிலையத்தில் நின்று போவோர் வருவோரை அவன் பார்த்தபடியே நின்றான். 

எல்லோரிலும் பரபரப்புத் தெரிவதை அவன் உணர்கின்றான். 

அவர்கள் மத்தியில் ஒரு புதுப் பொலிவு. பஸ் வருகின்றது. 

அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்ட கட்சிகளின் இரு வர்ணக் கொடிகள் பஸ்ஸின் முன்புறத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. 

தாவி ஏறி பஸ்ஸின் மேல் தட்டில் போய் அவன் உட்காருகின்றான். 

பஸ் தொழிலாளி அவனை நெருங்குகின்றான். 

அந்தத் தொழிலாளியின் முகத்தில் வெற்றிப் பெருமிதம். 

அவனுக்கும் திருப்தி. 

பஸ் ஓடத் தொடங்குகின்றது. 

பெரும் பெரும் அந்நியக் கம்பெனிக் கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும் அவனுடைய கண்களில்படுகின்றன. 

“உதெல்லாம் நாளைக்கு எங்கடை கையிலைதானே வரப்போகின்றன. அந்நிய முதலாளியள் இனி மூட்டை கட்ட வேண்டியதுதான். ஏன் எங்கடை நாட்டிலையுள்ள முதலாளி யள் தப்பிவிடுவினையே?’ 

அவனுடைய உள்ளம் கிளர்ச்சியடைகின்றது. 

அவனை வஞ்சித்த சக்திகளெல்லாம், அவன் போன்றோா ஆக்கிய அரசால் வஞ்சித்து அழிக்கப்படப் போகின்றன என்ற நினைப்பு அவனுக்கு. 

பஸ் கொழும்பு நகரசபைக் கட்டடத்தை நெருங்குகின்றது. 

சகல வாகனங்களும் பொலீசாரால் நிற்பாட்டப்படுகின்றன. 

சுதந்திர சதுக்கத்தை நோக்கிச் செல்கின்ற சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரள் திரளாக அணியிட்டு நிற்கின் றார்கள். நீலநிறச் சட்டைகளைப் பலர் அணிந்திருக்கின்றனர். 

நீலத்துடன் சங்கமித்துவிட்ட சிவப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. 

அவன் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றான். 

தன் நிழல் தன் காலடியின் கீழ் கிடந்து மிதிபடும் நேரம். 

நெருப்பை நெஞ்சுடன் கட்டியணைத்துக் கொண்டிருக்கும வானம் கனலை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது. 

தார் றோட்டு உருகிக் கசிந்து கொண்டிருக்கின்றது. அவன் மக்களுடன் சங்கமிக்கின்றான். 

மக்கள் மத்தியில் பரபரப்பு; பெருமகிழ்ச்சி! புதுமையைக் காணுவதற்கான தவிப்பு. 

தங்களுடைய அரசாங்கத்தின் மந்திரிமாரைப் பார்ப்ப தற்கு அவர்கள் ஆவலுடன் நிற்கின்றார்கள். 

நெருப்பாய் எரியும் வெயிலைக்கூட அவர்கள் பொருட் படுத்தவில்லை. 

அவனுடைய வயிற்றில் பசித் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கின்றது. சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றை யொன்று விழுங்கிக் கொண்டிருந்தாலும் இந்தப் பசி அவனுக்குப் பழகிப் போய்விட்டது. 

அதை மறப்பதற்கு அவன் மக்களைப் பார்க்கின்றான். 

புதிய எழுச்சியில் மக்கள் தங்களை மறந்த மோன நிலையிலிருக்கின்றார்கள். 

சாலையின் இருபுறங்களிலும் சாதாரண பொலீஸ்காரர் கள் நிற்கின்றார்கள். அவர்கள் மக்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டு நிற்கின்றார்கள். 

இப்பொழுது அவர்கள் ‘மக்கள் பொலீஸ்’ அல்லவா? 

மணிச் சத்த அலறலுடன் ஒரு பொலீஸ் மோட்டார் சீறியபடியே வேகமாக வருகின்றது. 

சந்தியில் அந்த மோட்டார் திடீரென நிற்கின்றது. மோட்டாரிலிருந்து ஒரு பொலீஸ் அதிகாரி இறங்குகின்றான். 

அடர்ந்த கறுத்த கொம்பு மீசை. தடித்த உதடுகள், கண் இமையிலிருக்கும் அந்த வெட்டுப்பட்ட வடு, அவனுடைய முகத்திற்கு மேலும் விகாரமூட்டுகின்றது. 

நாலுபுறமும் பார்வையைச் சுழற்றுகின்றான். கண்கள் கனல் கக்குகின்றன. 

அவனுடைய கையில் அகே பழைய குண்டாந்தடி. இடுப்பில் கைத்துப்பாக்கி. 

“அவன்!” 

மக்களுடைய விழிகள் வியப்பில் விரிகின்றன. உதடுகள அசைகின்றன. 

“அவன்தான்! அந்தப் பழைய கொலைகாரனேதான்!”

மக்கள் மத்தியிலிருந்து யாரோ ஒருவன் கூறுகின்றான்.

புஞ்சிபொரளையின் சம்பவம் அவர்களுடைய கண்முன் தோன்றுகின்றது. 

“ஏய்! இஞ்சை வா….!” 

அந்த இடத்தில் நின்றுகொண்ட அவன் கர்ச்சிக்கின்றான். 

மக்களுக்குத் திகைப்பு! 

வீதியோரத்தில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கின்ற ஒரு பொலீஸ்காரன் அந்த அதிகாரியைப் பார்க்கின்றான். 

“உன்னைத்தான்……வா இஞ்சை.” 

எதிர்பாராத அழைப்பு. 

பொலீஸ்காரனுடைய முகம் வெளுறுகின்றது. தயங்கியபடியே பொலீஸ் அதிகாரியை நோக்கிச் செல்கின்றான். 

அவனுடைய கை ‘சலூட்’ அடிக்க உயருகின்றது.

“ஏய்! அந்தப் பண்டியளை பின்னுக்குத் தள்ளிவிடு.” 

மக்கள் மத்தியில் சலசலப்பு; வெறுப்பு. 

சிலருக்குக் கோபம் பொங்குகின்றது.

“இப்பவும் இவன்…..” 

கூட்டத்திலிருந்து ஒருவர் தொடங்குகின்றார். 

சாவி கொடுத்துவிட்ட பொம்மைகளைப் போல் பொலீஸ்காரர்கள் மக்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். 

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

மெலிந்த அவன் உடலில் திடீரென ஏதோ குறைந்து விட்டது போன்ற உணர்வு. 

அதிகாரி மோட்டாரில் ஏறினான். 

மோட்டார் திரும்பி வேகமாகச் செல்கின்றது. 

மக்கள் கொதிக்கின்றார்கள். 

பொலீஸ்காரர்கள் மக்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே நிற்கின்றார்கள். 

கண்களை ஒடுக்கிப் பார்த்தபடி நிற்கும் அவனுடைய மனம் தூரதிசையை நோக்கிச் செல்கின்றது. 

மே இருபத்தேழாந் திகதிக்கு முன் 

கடந்த முதலாளித்துவ ஆட்சியில், 

பொலீஸ் பாதுகாப்பிலிருந்த பொழுது தொடம்பே முதலாளி கொலையுண்டார். 

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் வேலை நிறுத்தத்தின் போது காட்டுமிராண்டித்தனமாக மாணவர் களைத் தாக்கினார்கள் பொலீஸார். 

இ.போ.ச. வேலைநிறுத்தத்தின் போது தனது தந்தை பொலீஸ்காரரால் கொடூரமாக அடிக்கப்பட்டு ஒரு கிழமை யால் இறந்தார். 

மே மாதம் இருபத்தேழின் பின் . 

“மக்கள் அரசாங்கம்” உதித்த மறுநாள் 

மக்கள் விரோத நடவடிக்கையிலீடுபட்ட ஏரிவீட்டுப் பத்திரிகைக் காரியாலயத்தின் முன், தேர்தல் முடிந்த பின்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபொழுது பொலீஸாரால் அவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். 

புஞ்சிபொரளையில் சோமபால என்ற இளைஞன் பொலீஸ் வெறியாட்டத்துக்கு இரையாகிச் செத்தான். 

நிலமற்ற மக்கள், தேர்தல் வெற்றியின் பின், மொரட்டு வையிலும், பொலன்னறுவையிலும் வெற்றாக இருந்த நிலத்தில் குடியேறியபொழுது பொலீஸ் அந்த மக்களை ஈவிரக்கமின்றித் தாக்கியது. 

இவைகள் எல்லாம் தற்செயலாக நடந்தவை என அவன் முன்னர் நினைத்தான். 

ஆனால் தொடர்ந்து நடக்கும் எல்லாச் சம்பவங்களும் தற்செயலானவைகளா? 

முன்பும் இப்போதும் ஒரே கதையா? 

முந்திய கதையின் மிகுதிக் கதையா இப்பொழுது தொடர்கின்றது? 

பல சம்பவங்கள் அவனுடைய மனத்திரையில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. 

அவனுடைய ரத்தம் கொதிக்கின்றது. பற்களை நெருடுகின்றான். 

மே இருபத்தேழுடன் முதலாளித்துவப் பொலீஸ் பேயாட்சி முடிந்துவிட்டது என்று தான் நினைத்தது தவறு என்ற உணர்வு அவனுடைய இதய ஆழத்தில் சுடர் விடத் தொடங் குகின்றது. 

பொலீஸ் மோட்டாரின் மணி மீண்டும் அலறுகின்றது. மக்கள் பேராவலுடன் மோட்டார் வரும் திசையைப் பார்க்கின்றார்கள். 

“மக்கள் அரசாங்க” மந்திரிமார்களின் மோட்டார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

அந்தப் பொலீஸ் அதிகாரி தனது சகாக்களுடன மந்திரிமார்களுக்குப் பாதுகாப்பாகப் பெருமிதத்துடன் வந்து கொண்டிருக்கின்றான். 

அவனுடைய பார்வையில் மிடுக்கு. 

இப்பொழுதும் எங்கடை ஆட்சிதான் நடக்கின்றது என்பதை அவனுடைய அகங்காரமும் அதிகார வெறியும் நிறைந்த பார்வை எடுத்துக் காட்டுகின்றது. 

மந்திரிமார்களின் மோட்டார்களின் பின்னால்- 

பெரும் பெரும் அந்நிய முதலாளிகள், வர்த்தக முதலைகள், பழைய அரசாங்கத்தின் அதிகாரத் திமிர்பிடித்த அதே உயர் அதிகாரிகள் எல்லோரும் பெருமிதத்துடன் மோட்டார்களில் வந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவனுடைய தொண்டைக்குள் ஏதோ உருண்டு பிரள்கின்றது. 

“மகனே, தொழிலாளியளின்ரை இழிந்த வாழ்வின் விதியை, அவர்களைச் சுறண்டி வாழுகின்ற முதலாளி வர்க்கம் மாத்தி அமைக்க விரும்புமெண்டு நீ நம்பிறியா? பாலுக்குப் பூனை காவலிருக்குமெண்டு நீ நம்பிறியா? எனக்கு வாழ்க்கையிலை நிறைய அனுபவமிருக்கு. நான் சொல்லிறன். தொழிலாளியளாலைதான் தொழிலாளியளின்ரை கஷ்டத்தை உணர முடியும், அவையள் தான் தங்கடை தலைவிதியைத் தாங்களே மாத்தி அமைக்க வேணும். தன்னை மிதிச்சு நசுக்கிறவனை தொழிலாளியள் அழிக்காமல் ஒரு நாளும் அவையளின்ரை துன்பம் தீராது. அவையள் சுகமாய் வாழேலாது.” 

இப்படி அவனுடைய தாய் அவனுக்குப் பலமுறை சொல்லியிருக்கின்றாள். அனுபவத்தில் அவள் நிறையப் படித்துவிட்டாள். தனது தலைமுறைக்குள் அவள் நேரடி வாழ்வில் மக்களுக்கு அரசாங்கங்கள் செய்தனவற்றை யெல்லாம் உணர்ந்திருந்தாள். 

இதே கட்சிகளுக்காக அவளுடைய கணவன் தன்னை மறந்தே உழைத்தான். அவன் ஊர்வலங்களுக்கும் கூட்டங் களுக்கும் போனபோதெல்லாம் அவளும் கூடப் போயிருக்கின்றாள். 

அன்று அவள் பக்கத்திலே போன தலைவர்கள் எல்லாம், இன்று பென்ஸ் கார்களில் பவனி வருவதை அவள் கண்டு மனம் விம்மியிருக்கின்றாள். 

அவளுடைய ரத்தம் மகனிலும் ஓடுகின்றது. 

அந்த ஒல்லியான, அடர்ந்து சுருண்ட மயிர் நெற்றியில் புரளும், சிரிப்பற்ற மகனின் வாழ்வு அனுபவங்களும் அவளு டைய கசப்பான அனுபவங்களைப் போலவே மாறுபாடின்றி அமைந்திருந்தன. 

ஒரே கதையின் மறுபக்கமா இதுவும்! 

பிரித்தானிய ஏகாதிபத்திய யுத்தத்தின் ஞாபகச் சின்னம், “மக்கள் அரசாங்க” மந்திரிமாரை வரவேற்க வந்திருந்த மக்களுக்கு சவால் விடுவது போல நாற்சந்தியில் தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது. 

அந்த ஏகாதிபத்திய சின்னத்தை அவன் தலை குனி வோடு பார்க்கின்றான். 

அவன் மெதுவாகத் திரும்பி, கவிழ்ந்த தலையுடன் நடந்து கொண்டிருக்கின்றான். 

“தொழிலாளியள் பாராளுமன்றத் தேர்தல் மூலம் அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தேலும் எண்டது ஒரு நாளும் நடக்காத காரியம். உது உலகத்திலை எந்த நாட்டிலையும் முந்தியும் நடக்கேல்லை. இனிமேலும் நடக் காது. உதிலை ஏன் வீணாய் உலையிறாய்? உதை விட்டிட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி காட்டுகின்ற புரட்சிகர வழிக்கு கட்டாயம் கூடிய கெதியிலை நீ வருவாய்.” 

தேர்தலின் முன்பு தனது நண்பன் சோமபாலா கூறியது அவனுடைய நினைவலையில் உதிக்கின்றது. 

‘இதை என்ரை நண்பன் எவ்வளவு உதாரணங்களோடு நம்பிக்கை மேலிடக் கூறினான்.’ 

அவன் விழிப்படைகின்றான். 

விழிப்படைந்த அவன் அந்த நண்பனைச் சந்திப்பதற்கு விரைவாகச் செல்கின்றான். 

‘அவனை – என்ரை நண்பனை எவ்வளவு கவனியாது நடந்துவிட்டேன்!’ 

சிந்தனை அழுக்குகள் அகன்றுவிட்ட நெஞ்சம். 

புதிய பாதையில் அவன் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றான். 

இப்போது அவனுடைய இதயத்தில் சுமையில்லை. 

அவனுடைய நடையில் உறுதி. 

– 1970 

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *