கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 15,243 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

மோகினிக்கு மாதவன் மீது ஆத்திரமாய் வந்தது. இளம் பெண்ணிடம் குழந்தைப்பேறு பற்றியெல்லாம் செய்திகள் சொல்லி, குழந்தையின் மனத்தைக் கெடுக்கிறானே, இவன் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருக்க மாட்டான் குழந்தையிடம் என்ற ஐயமும் ஏற்பட்டது. மோகினி சுற்று முற்றும் நோக்கினாள். மறைவிலிருந்து மாதவன் தலையை நீட்டினான்.

மோகினி மாதவனிடம் கோபத்துடன், “என்ன மாதவா! குழந்தையிடம் என்ன பேசறதுன்னு உனக்குத் தெரிய வேண்டாம்? குழந்தையோட பிஞ்சு மனசைக் கெடுத்திடுவே போலிருக்கே!” என்று கடிந்து கொண்டாள்.

“டீச்சரம்மா! நான் என்னங்க செய்யறது? குழந்தை தொண தொண என்று ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்குங்க. நான் இனிமேல் அது கிட்டே ஒண்ணும் பேசமாட்டேங்க. குழந்தை இங்கே விளையாடறது, ஓடறதையெல்லாம் கூட அம்மாவுக்குச் சொல்லாம மூடி வச்சிருக்கேனுங்க,” என்று மாதவன் பதில் சொல்லி மோகினியைத் திருப்திப் படுத்த முயன்றான்.

குழந்தை கௌரிக்கு மாதவன் சொன்னது பொய் என்று அவன் டீச்சரிடம் உளறியதிலிருந்து தெரிந்து விட்டது.

கௌரி, தன் பிறப்பின் காரணம் என்னவாக இருக்கும், நாம் பிறந்ததற்கும், தாய் கால் இழந்ததற்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்விகளுக்கு ஏதோ ஒரு விடை இருக்கிறது, ஆனால் அதைப் பெரியவர்கள் சொல்ல மாட்டார்கள். அது மர்மமாகவே இருக்கும் என்றெல்லாம் நினைக்கலானாள். ஏன் சில விஷயங்களைப் பெரியவர்கள் மூடி வைக்கிறார்கள் என்று அவள் உள்ளத்துக்குப் புரியவில்லை.

அன்று மாலை வரையிலும் கௌரி வகுப்பில் அமைதியாக இருந்தாள். அவள் முகம் சிந்தனையில் தோய்ந்து களை இழந்து இருந்தது.

பள்ளி முடிந்ததும் கௌரி வீடு திரும்பும் போது மோகினி கௌரியிடம் சிரித்தபடி பேச்சுக் கொடுத்தாள். ஆனால் கௌரி ‘உம்’ என்று இருந்தாள்.

“என்ன கௌரி? வழக்கம்போள் சந்தோஷமா இல்லாமல் ஒரு மாதிரியா இருக்கியே?” என்று கேட்டாள் மோகினி.

அதற்கு கௌரி, “இல்லை டீச்சர். நீங்களாவது உண்மை சொல்வீங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்களும் அப்பா அம்மா மாதிரியே ஒண்ணும் சொல்லாமல் மூடி வைக்கிறீங்க,” என்று வருத்தத்தோடு சொன்னாள்.

சிறுமியின் செல்லக் கோபத்தைக் கண்டு மோகினிக்குச் சிரிப்பு வந்தது.

டீச்சரின் சிரிப்பைக் கண்டதும் கௌரிக்கு இன்னும் வருத்தமாக இருந்தது. “ஏன் டீச்சர், என்னைப் பார்த்துச் சிரிக்கறீங்க? வகுப்பிலே உண்மையே பேசணும்னு எவ்வளவு முறை நீங்க சொல்லியிருக்கீங்க? ஆனா எங்கிட்டே மட்டும் உண்மையைச் சொல்ல மாட்டேங்கிறீங்களே! எங்கம்மாவுக்குக் கால் போனதுக்குக் காரணம் நான்தானான்னு எனக்குத் தெரிய வேண்டாமா டீச்சர்?’ என்று உணர்ச்சியோடு கெளரி சொன்னதும் மோகினியின் மனம் உருகியது.

கௌரியை அணைத்தபடி பெஞ்சியில் உட்கார்ந்தாள்.

அவள் தலையை அன்போடு கோதியபடியே, “கௌரி! உன்னைப் போல ஒரு நல்ல குழந்தை யாலே ஒரு அம்மாவுக்குக் கால் போக முடியுமா? உங்கம்மாவின் கஷ்டத்துக்குக் காரணம் நீ இல்லவே இல்லே. அப்படின்னு யார் சொன்னாலும் அதை நம்பாதே.” என்று சொன்னாள்.

கௌரிக்கு அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. “நிஜமாவா? என்னாலே எங்கம்மா தொண்டி ஆகல்லியா?” என்று கேட்டாள்.

“நிஜமாத்தான் கௌரி.”

“ஒருவேளை எங்கப்பாவாலே அம்மா நொண்டி ஆகியிருப்பாங்களா?”

“அதுவுமில்லே கௌரி. உங்கம்மாவின் கஷ்டத்துக்குக் காரணம் நீயும் இல்லே. உங்கப்பாவும் இல்லே. அது விதிதான்.”

“விதின்னா என்ன டீச்சர்?”

“விதின்னா.. விதின்னா..அது விளக்க முடியாத ஒரு சக்தி.. ஒரு அமைப்பு. அது உனக்கு இப்போ புரியாது. நீ பெரியவளானதும் தானாப் புரியும்”, என்று ஒருவாறு பதில் சொல்லி முடித்தாள்.

கௌரிக்கு மோகினியின் பதில்கள் பூராவும் திருப்தி தரவில்லை என்றாலும், தாயின் கஷ்டத்துக்குத் தான் காரணம் இல்லை என்பதில் ஒருவிதத் திருப்தி ஏற்பட்டது.

திடீரென்று அவளுக்கு மறுநாள், தனது பிறந்த நாள் என்பது நினைவுக்கு வந்தது.

உடனே மோகினி டீச்சரைப் பங்களாவுக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றியது.

“டீச்சர்! நாளைக்கு எனக்குப் பிறந்த நாள். நீங்க எங்க வீட்டுக்குச் சாப்பிட வர்ரீங்களா?” என்று விகல்பமில்லாமல் கேட்டாள்.

அதற்கு மோகினி, “ஓ! அப்படியா! வந்துட்டா போகுது,” என்று கௌரியின் திருப்திக்காகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அப்போது கௌரி, “டீச்சர்! நாளைக்கு உங்க வீட்டுக்கு நான் கார் அனுப்பறேன். நீங்க வந்துடுங்க,” என்றாள்.

“நிச்சயமா வர்ரேன்,” என்று சொல்லித் தன் அழகு வாயைத் திறந்து மோகினி புன்னகையை உதிர்த்தாள்.

பிறகு, கௌரி தனது காரில் வீடு திரும்பினள்.

மாதவன் கௌரியிடம் “என்ன பாப்பா! நீ பாட்டுக்கு மாஸ்டர் அம்மாவை வீட்டுக்குச் சாப்பிட வரச் சொல்லிட்டே. அம்மா ஒப்புக்கமாட்டாங்களே?” என்று சொன்னான்.

“ஏன் ஒப்புக்க மாட்டாங்க?” என்று கௌரி கேட்டாள்.

“மாஸ்டரம்மா போலச் சாதாரண அந்தஸ்துள்ளவங்களை, நம்ம பங்களாவுக்கு விருந்துக்குக் கூப்பிடறதில்லேம்மா”, என்று மாதவன் சொன்னதும் கௌரியின் முகம் சுருங்கியது.

அன்று இரவு கௌரி சாப்பிடும்போது, தன் தாயிடம் மெள்ளப் பேச்செடுத்தாள்.

விஜயா அன்று மாலையிலிருந்து தலைவலியால் தவிப்பதை உணராமல் குழந்தை பேச ஆரம்பித்தாள். “அம்மா, நாளைக்கு என் பிறந்த நாள் விருந்துக்கு எங்க டீச்சரம்மாவைக் கூப்பிட்டா என்னம்மா?” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“டீச்சரம்மாவைக் கூப்பிடறதா? நாளைக்கு யாரையுமே நான் அழைக்கப் போறதில்லே?” என்று தாய் சொன்னதும், கௌரி, “யாரையுமே கூப்பிடாட்டி, அதை ஏம்மா விருந்துண்ணு சொல்லணும்?” என்று கேட்டாள்.

அதைக் கேட்ட விஜயா, “வர வர நீ அதிகமாப் பேச ஆரம்பிச்சுட்டே. அந்த டீச்சரம்மா உன்னைக் கெடுத்திட்டா,” என்று கடுகடுப்போடு கூறியதும் கௌரிக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல இருந்தது.

ஆனால் தாயின் சுளித்த முகத்தைப் பார்த்ததும், ஏதாவது சொன்னால் தாய் கூச்சலிடுவாள் என்ற பயமும் இருந்தது.

பிறகு மெதுவாகச் சமாளித்தபடி, “நாளைக்கு டீச்சருக்குக் கார் அனுப்பறதாச் சொல்லிட்டேம்மா,” என்று இழுத்தாள்.

இதைக் கேட்டதும் விஜயாவுக்கு அந்த டீச்சர் மீது சந்தேகம் வந்தது. “கௌரி! உங்க டீச்சர் கெட்டிக்காரியா இருப்பா போலிருக்கே! பெரிய இடத்திலே எப்படியாவது ஒட்டிக்கணும்னு ஆசை போல் இருக்கு. அதுதான் உன்னைக் காக்கா பிடிக்கறா. அம்மாவைக் கேட்காம நீ யாரையும் நம்ம வீட்டுக்கு அழைக்கக் கூடாது,” என்று சொல்லி விட்டு கௌரியைச் சலிப்போடு முறைத்துப் பார்த்தாள்.

அதற்கு மேல் கௌரிக்குப் பேச்சு எழவில்லை.

அன்றிரவு கௌரிக்குத் தூக்கமே வர வில்லை. “டீச்சரிடம் கார் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு வந்தோமே, அனுப்ப முடியாது போலிருக்கிறதே.” என்று நினைத்து நினைத்து மிகவும் வருந்தினாள்.

மறுநாள் பிறந்த நாள் என்ற காரணத்துக்காகப் பள்ளிக்குப் போக வேண்டாம். அதற்கு மறுநாள் பள்ளி சென்ற பிறகு, டீச்சர் முகத்தில் எப்படி விழிப்பது என்று கவலைப்பட்டாள்.

மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, புது ஆடை அணிந்து, தந்தையோடு குருவாயூர் கோவிலுக்குக் காரில் சென்றுவிட்டுத் திரும்பினாள்.

அவளுக்கு மாலை நேரம் வரவே, ‘நாளைக்கு வகுப்புக்குச் செல்ல வேண்டுமே, டீச்சரை எப்படிச் சந்திப்பது; சாப்பிட அழைத்துவிட்டு வந்தோமே, டீச்சர் காருக்காகக் காத்திருந்து ஏமாந்து போயிருப்பாங்களே. அந்த வருத்தத்தினாலே நாளைக்குப் பள்ளிக்குப் போகும்போது சிரித்துப் பேச மாட்டாங்களே, டீச்சரின் அன்பை இழந்து எப்படி வாழ்வது?’ என்று விதவிதமாகக் கவலை யோடு சிந்தித்தபடி இருந்தாள்.

இரவு சாப்பாடே கௌரிக்குப் பிடிக்கவில்லை. தன் தாயிடம் விளக்க முடியாத ஒருவிதக் கசப்பு ஏற்பட்டது. அன்றிரவு தாய் அவளைத் தன்னருகிலே படுக்கச் சொன்னபோது கௌரிக்குக் கோபம் வந்து மறுத்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அடக்கிக் கொண்டாள். மனத்திற்குள் குழந்தை படும் வேதனையை ராஜுவோ விஜயாவோ உணர்ந்ததாகத் தெரிய வில்லை.

மறுநாள் விடிந்ததும் கௌரி பள்ளிக்கே போகாமல் இருந்துவிடலாமா என்றுகூட நினைத்தாள்.

வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவும் பிடிக்க வில்லை.

தாய் தந்தையின் அன்பைவிட மோகினி டீச்சரின் கோபமே மேல் என்று தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டாள்.

காரில் பள்ளியில் நுழையும் வரையில் டீச்சர் ஏன் கார் அனுப்பவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது என்று என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

மாதவனோடு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பள்ளியில் வந்து இறங்கியதும் நேரே வகுப்புக்குச் சென்றாள். அங்கு மற்றக் குழந்தைகள் தான் இருந்தார்கள்.

பாருக்குட்டி அம்மாளும் இதர உபாத்தியாயினிகளும் நடு ஹாலில் இருந்தனர்.

மோகினி டீச்சர் வரவில்லையே என்று நினைத்தாள் கெளரி.

பள்ளி மணி அடித்து வகுப்புக்கள் தொடங்கும் நேரத்துக்கு மோகினி ஒரு கையில் பையையும், மறு கையில் புஸ்தகங்களையும் தூக்கியபடி பள்ளியில் நுழைந்தாள்.

நேரம் கழித்து வந்ததால் மோகினி நேரே வகுப்புக்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தாள்.

கௌரிக்கு டீச்சரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படவே இல்லை.

அது ஒரு வகையில் கௌரிக்குப் பெரிய நிம்மதியாகவே இருந்தது.

அன்று நடுப்பகல் உணவருந்தும் போது, கௌரி பயந்துகொண்டே டீச்சரை நெருங்கினாள்.

ஆனால் மோகினி முதல்நாள் கார் அனுப்பாததைப் பற்றிப் பேசவே இல்லை.

வழக்கம் போலவே கெளரியோடு சிரித்துப் பேசினாள் மோகினி. தன்னுடைய டிபன் பாக்ஸில் இருந்து இலை அடையை எடுத்து வைத்து கௌரியைச் சாப்பிடச் சொன்னாள்.

திடீரென்று ஞாபகம் வந்தவளாய் மோகினி, “கௌரி! நேத்திக்கு உனக்குப் பிறந்த நாள் இல்லை? கோவிலுக்குப் போனியா?” என்று கேட்டாள்.

“போனேன் டீச்சர். அப்பாவோட நான் குருவாயூர் போய் இருந்தேன்,” என்றாள் கௌரி.

”அப்படியா! குருவாயூருக்கா? நான் உன்னைவிடச் சின்னக் குழந்தையா இருந்தப்போ குருவாயூர்லேதான் இருந்தேன். அப்புறம் அங்கே போகணும்னு ரொம்ப ஆசை. ஆனால் முடியல்லே. கோவில் கூடச் சரியா ஞாபகம் இல்லே கௌரி. ஏதோ கனவிலே கண்ட மாதிரி இருக்கு”, என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள்.

தன்னைக் கார் அனுப்பிக் கூப்பிடாதது பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்க வில்லையே என்று ஆச்சரியத்தோடு இருந்தாள் கௌரி.

சாப்பிட்டு முடிந்ததும் மோகினி கௌரிக்குக் கை கழுவி விட்டு, கைக் குட்டையில் கையைத் துடைத்துக் கொண்டு தான் கொண்டு வந்த பையை எடுத்தாள்.

கௌரியைப் பார்த்துச் சிரித்தபடி, “கௌரி, கண்ணை மூடிக்கோ. கண்ணைத் திறன்னு நான் சொன்னவுடனே தான் திறக்கணும். அதுவரையும் நீ திறக்கக்கூடாது. தெரியுமா?” என்று கூறினாள்.

கெளரி விஷயம் புரியாமல் டீச்சரைப் பார்த்தபடி நின்றாள். “கண்ணை மூடிக்கோ,” என்று கட்டளையிட்டாள் மோகினி.

கௌரி உடனே கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

மோகினி, “ஒன், டூ, த்ரீ – கண்ணைத் திற,” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

கௌரி கண்ணைத் திறந்தாள். திறந்ததும் டீச்சரின் கைகளில் உள்ள அழகான சில்க் கெளனைப் பார்த்துத் திகைத்தாள். “கௌன் நல்லா இருக்கா? நானே துணி வாங்கி, வெட்டித் தைத்தேன்.”

“ரொம்ப நல்லா இருக்கு டீச்சர். சில்க் கெளனா?”

“ஆமாம் கௌரி. ஷோரனூர் போய் நானே சில்க் வாங்கி வந்தேன். உனக்குக் கொடுக்கணும்னுதான் வாங்கித் தைத்துக்கிட்டிருந்தேன். நல்ல வேளையா உன் பிறந்த நாளும் சமயத்துக்கு வந்துச்சு. பிறந்த நாள் பரிசாவே கொடுத்துடலாம்னு நினைச்சேன்”, என்று சொல்லி கெளனை கௌரியிடம் கொடுத்தாள்.

கௌரி கண்களில் நீர் தளும்ப கௌனைப் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் நின்றாள்.

அதைக்கண்டு ஆச்சரியமடைந்த மோகினி, “ஏன், உனக்குக் கௌன் பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

“அதில்லே டீச்சர்…அதில்லே டீச்சர்,” என்று கூறிவிட்டு மேலே ஒன்றும் பேச முடியாமல் குழப்பத்தோடு நின்றாள். மோகினிக்குக் கௌரியின் மனத்தில் கொந்தளித்து எழும் உணர்ச்சிகள் புரியவில்லை.

“ஏன் கௌரி கண்கலங்கி நிக்கறே? பிறந்த நாளன்னிக்கிக் கொடுக்காமல், ஒரு நாள் தள்ளி, இந்தப் பரிசைக் கொடுக்கிறேன்னு நினைக்கிறியா? நேத்திக்கு நீ பள்ளிக்கு வந்திருந்தா, நேத்திக்கே கொடுத்திருப்பேன். ஆனால் நீதான் வல்லியே,” என்று சொல்லி விட்டு கௌரியை அன்போடு பார்த்தாள்.

கௌரியால் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்வளவு ஆசை வைத்திருக்கும் டீச்சரைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு புறம். டீச்சரிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டும்; அதுதான் சரி என்ற எண்ணம் மறுபுறம் கௌரியை வாட்டியது. உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் கண்ணீர் மளமளவென்று வழிந்தது.

“ஏம்மா அழறே! நான் உன்னை ஒன்றும் சொல்லலியே!” என்று மோகினி கூறினாள்.

அதற்கு கௌரி, “இல்லே டீச்சர். உங்களை நேத்து வீட்டுக்குக் கூப்பிடணும்னுதான் நினைச்சேன். ஆனால் அம்மாதான் வேண்டாம்னுட்டாங்க. உங்களைப் பத்திப் பேசினாலே அம்மா எரிஞ்சி விழறாங்க. எனக்கு எங்கம்மாவை நினைச்சாலே வெறுப்பா இருக்கு டீச்சர்”, என்று சொல்லி நிறுத்தினாள்.

மோகினி குழந்தையை ஆச்சரியத் தோடு பார்த்தாள். “கௌரி! நீ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. பெத்த அம்மாவை வெறுக்கிறேன்னு சொல்லக்கூடாது. நீ என்னை வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டபோதே எனக்குத் தெரியும், உங்கம்மா ஒப்புக்க மாட்டாங்கன்னு. அதனாலே எனக்கு வருத்தமில்லே கெளரி. பாவம், உங்கம்மா. கால் இல்லாம வீட்டிலேயே கிடக்காங்க. அவுங்களுக்கு எவ்வளவு வேதனையோ கஷ்டமோ! அதனாலே அம்மா ஏதாவது சொன்னாலும் நீ பொறுத்துக்கணும். அம்மாவை வெறுக்கக்கூடாது. அப்போதான் நீ நல்ல பொண்ணு!” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

கௌரி வீடு திரும்பியபோது டீச்சரைப் பற்றியே நினைத்தபடி இருந்தாள். ‘அம்மாவோ டீச்சரைத் திட்டறாங்க. ஆனால் டீச்சரோ அம்மாவைப் பத்தி நல்லாவே சொல்றாங்க. டீச்சருக்குக் கோபமே வரல்லியே’ என்று நினைத்த படியே நடந்தாள்.

கெளரிக்கு மோகினியின் மீது அன்பும், மதிப்பும் இன்னும் அதிகமாயிற்று. டீச்சர் கொடுத்த கௌனை அன்போடு பார்த்தாள். அதை உடனே அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

வீட்டில் நுழைந்தவுடனே வீட்டு மாடிப்புறத்திலிருந்து இரைச்சல் கேட் டது. வீட்டு வேலைக்காரியான காத்யாயனி என்ற கேரளப் பெண்ணை அவள் தாய் திட்டிக் கொண்டிருந்தாள். அவளை வேலையை விட்டு விலகிக் கொள்ளும்படி சொன்னாள்.

காத்யாயனி அழுதுகொண்டே படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

கௌரிக்குக் காத்யாயனியிடம் பிரியம் உண்டு. காரணம், சூதுவாதில்லாத பெண் அவள். எப்போதும் கௌரிக்குப் பிடித்தமான பலகாரம் தயார் செய்து கொடுத்தபடி இருப்பாள்.

காத்யாயனி கௌரியைப் பார்த்ததும், “குழந்தை! நான் இனிமேல் இங்ஙனே இல்லே. நிண்ட அம்மைக்கு என்னைக் கண்டா பிடிக்கல்லே. என்னைத் திருடின்னு சொல்றாங்க. நான் திருடறவளா? சொல்லு கௌரி, ” என்று அழுதபடி தன்னுடைய ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

விஜயா, காத்யாயனியை நடத்திய விதம், குழந்தை கௌரியின் மனத்தில் வருத்தத்தைக் கொடுத்தது. தாய், ஏன் எல்லோரையும் இப்படிக் கொடுமையாக நடத்துகிறாள் என்று சிந்தித்தாள்.

மாதவன் வந்து அழைக்கவே, கௌரி குளிக்கும் அறைக்குச் சென்று வெந்நீரில் குளித்துவிட்டு வந்தாள்.

டீச்சர் மோகினி கொடுத்த கௌனை எடுத்து அணிந்து கொண்டாள்.

தாயும் தந்தையும் இதுவரை வாங்கிக் கொடுத்த ஆடையைவிட இதுதான் கௌரிக்கு மிகவும் அழகாகத் தோன்றியது. கௌனின் முன்புறத்தில் பட்டு நூலால் பின்னப்பட்டிருந்த ரோஜாப்பூ மிகவும் அழகாகத் தெரிந்தது. அந்த ரோஜாப் பூவைப் பார்க்கும்போதெல்லாம், கௌரிக்கு மோகினியின் சிவப்பு உதடுகளே ஞாபகத்துக்கு வந்தன. டீச்சர் அளித்த கௌனை அணித்து கொண்டு கௌரி மாடிக்குப் போனாள். மாடி அறையில் ஜன்னல் அருகில் ‘டி.எச். லாரன்ஸ்’ எழுதிய ‘லேடி சாட்டர்லிஸ் லவர்’ என்ற புத்தகதைப் படித்தபடி உட்கார்ந்திருந்தான் ராஜு.

விஜயா சலிப்போடு படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.

அறையில் நுழைந்த கௌரியை விஜயா பார்த்தாள்.

விஜயா செல்வ நிலையிலிருந்து பார்க்கும்போது, அந்த கௌன் மட்டமான சில்க் கௌனாகத் தோன்றியது.

தன்னுடைய ஒரே பெண் அணியத் தகுந்ததாகத் தெரியவில்லை. மோகினி தன் மாதச் சம்பளத்தின் வள்ளிசான ஒரு பகுதியைக் கொடுத்து அந்த சில்க் துணியைத் தன்னுடைய அபிமான மாணவிக்கு வாங்கியிருந்தாள் என்பதைப் பற்றி விஜயாவுக்கு என்ன தெரியும்?

ஆத்திரத்தோடு விஜயா, “ஏதுடி இந்தப் புது கௌன்? பார்க்கச் சகிக்கல்லியே?” என்று படபடவென்று கேட்டாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு கௌரி அதிர்ச்சி அடைந்து நின்றாள். புத்தகத்தைப் படித்தபடி இருந்த ராஜு, தலையைத் தூக்கிக் குழந்தையைப் பார்த்தான்.

கீழுதட்டைப் பற்களால் கடித்தபடி குழந்தை கெளரி நின்றாள்.

அத்தியாயம்-20

கௌரி தாயின் முகத்தை முறைத்துப் பார்த்தபடியே பற்களால் உதட்டைக் கடித்து நின்றாள். இதுவரையில் ஏற்படாத ஓர் உணர்ச்சி கௌரியின் மனத்தைப் பற்றிக் கொண்டது.

அது பய உணர்ச்சி அல்ல, கோப உணர்ச்சியல்ல; வெறுப்பு உணர்ச்சி மட்டுமல்ல. ஆனால் அதை ஒருவித நீதி உணர்ச்சி என்றே சொல்ல வேண்டும். தன் தாய் பெரும் அநீதி இழைக்கிறாள் என்ற உணர்வுதான் அது. எப்போதும் தன் தாய்க்குப் பரிந்து பேசும் டீச்சரை அம்மா திட்டுவது பெரும் அநீதியாகப் பட்டது. காத்யாயனியைக் காரணமில்லாமல் வேலையை விட்டு நீக்குகிறாள். தந்தையைக் காரணமில்லாமல் அடிக்கடி கடிந்து கொள்கிறாள். ஒருமுறை கண்களால் கூடப் பார்த்து அறியாத மோகினி டீச்சரைக் காரணமில்லாமல் தாக்கிப் பேசுகிறாள். பிறந்த நாள் விருந்துக்குக் கார் அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டு அனுப்பாமல் இருந்த பின்பும் டீச்சர் கோபம் காட்டாமல் அன்போடு கொடுத்த கெளனை, ‘பார்க்க சகிக்கல்லே’ என்று தாய் சொல்கிறாளே என்று ஆத்திரம் வந்தது கெளரிக்கு.

“அம்மா, எனக்கு இந்த கௌன் பிடிச்சிருக்கு”, என்று உதட்டைப் பிதுக்கித் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள்.

“யார் கொடுத்தாங்க என்று கேட்டால் ஏதேதோ பதில் சொல்றே. தலையணை உறைமாதிரி கௌன் இருக்கிற லட்சணத்துக்கு ரோஜாப்பூ ஒன்றுதான் குறைச்சல்.”

“எங்க டீச்சர் ஆசையாகக் கொடுத்த கெளனம்மா. அதை ஒன்றும் சொல்லாதே,” என்று தன்னையும் மறந்தபடி குரலை எழுப்பிச் சொன்னாள் கௌரி.

“எந்த டீச்சர் அது?… பிறந்த நாள் விருந்துக்குக் கார் அனுப்பச்சொல்லி உன்னைத் தூண்டி விட்டாளே அந்த டீச்சரா கொடுத்தாள்? கௌரி! உடனே அந்த கௌனைக் கழற்றி எறி!” என்று உத்தரவிட்டாள் விஜயா. ஆனால் கௌரி அப்படியே முறைத்துப் பார்த்தபடி நின்றாள்.

“கெளனைக் கழட்டப் போறியா, இல்லையா?”

கௌரிக்குக் கௌனைக் கழற்றுவது டீச்சருக்குத் துரோகம் புரிவது போல் தோன்றியது. என்ன நேர்ந்தாலும் சரி, கௌனைக் கழற்றுவது இல்லை என்று உறுதியோடு நின்றாள். பேசாமல் முறைத்து நிற்கும் மகளைப் பார்த்ததும் விஜயாவுக்குக் கோபம் அதிகமாயிற்று. கைகளால் சக்கர நாற்காலியைச் சுற்றிக் கொண்டு கௌரியை நோக்கி நெருங்கினாள். கௌரி அசையாமல் நின்றாள். அநீதியை எதிர்த்து நிற்கும் கர்ம வீரனைப்போல் அலட்சியமாக நின்றாள்.

“அந்த கௌளை எடுத்து எறியப் போறியா. இல்லையா?”

“முடியாதும்மா.”

தாய்க்கும் மகளுக்குமிடையே நிகழ இருந்த உணர்ச்சிப் புயலைக் கவனித்தபடி கலவரத்தோடு ராஜு தன் இருக்கையை விட்டு மெள்ள எழுந்தான். “விஜயா, குழந்தைகிட்டே போய் ஏன் கோபிக்கிறாய்? இஷ்டப்பட்டால் ஒரு நாள் அந்தக் கௌனைத்தான் அணிந்து கொள்ளட்டுமே,” என்றான்.

குழந்தையின் சார்பில் அவன் பேசுவது விஜயாவின் கோபத் தீக்கு நெய் போல் அமைந்தது.

“என் பெண் என்ன பிச்சைக்காரியா வக்கில்லாத வாத்தியாரம்மாகிட்டே யெல்லாம் கௌன் வாங்கிக்கொள்ள? அந்தக் கௌனை இப்பவே கழட்டியாகணும்,” என்றாள்.

கௌரி அசையாமல் நின்றாள். ‘வக்கில்லாத வாத்தியாரம்மா’ என்ற பதத்துக்குச் சரியான பொருள் விளங்க வில்லையானாலும் அது ஒரு வசை மொழி என்று மட்டும் அவளுக்கு நன்றாக விளங்கியது. ராஜு மனைவியின் கோபத்தைத் தணிக்க முடியாது என்று புரிந்ததும் குழந்தையின் பிடிவாதத்தையாவது மாற்றலாம் என்று நோக்கத்தோடு “அம்மாவுக்குப் பிடிக்கலைன்னா கெளனை எடுத்துடும்மா, கௌரி. நீ சமர்த்து இல்லையா?” என்று கௌரியிடம் நயந்து கேட்டான்.

“நான் சமர்த்தில்லேப்பா. எதுக்கெடுத்தாலும் அம்மா சொல்றபடி நான் ஏன் கேட்கணும்?” என்று பதில் கூறிவிட்டு, அடுத்த வினடி தன் துணிவைக் கண்டு அவளே ஆச்சரியப்பட்டாள்.

“முந்தியெல்லாம் இப்படிப் பேசமாட்டியே கௌரி?. இப்போ உனக்கு என்ன வந்தது?” என்று ராஜு கேட்டான்.

அழுகையும் கோபமும் பொங்கிவரும் நிலையில் கௌரி பதில் சொன்னாள்:

“முந்தியெல்லாம் அம்மாவுக்குக் கால் போனதுக்குக் காரணம் நானுன்னு நெனைச்சிக் கிட்டிருந்தேன். அதான் அம்மா என்ன சொன்னாலும் பொறுத்திட்டிருந்தேன். மோகினி டீச்சர் எனக்குச் சொல்லிட்டாங்க, அம்மாவுக்குக் கால் போனதுக்குக் காரணம் நான் இல்லை என்று. அம்மா தலைவிதிதான் அதுன்னு..” என்று கௌரி சொல்லி முடிப் பதற்குள் விஜயா கைகளை ஓங்கிக் கௌரியை அடிக்கத் தயாரானாள்.

கெளரி லாகவமாக விலகிக் கொண்டாள்.

“அம்மா, என்னை அடிக்காதே! என்னை அடிக்காதே! அடிச்சா அப்புறம் உன் கையும் போயிடும்.” என்றாள் கௌரி

விஜயாவின் கோபம் எல்லை மீறி, அழுகையாக மாறியது. உடனே ராஜுவிடம் திரும்பினாள்.

“பாருங்க,பாருங்க. என் குழந்தையே எனக்குச் சத்துரு வாயிட்டுது. இவள் கிட்டே அந்த மோகினி டீச்சர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து இவள் மனசையே குட்டிச் சுவராக்கி விட்டாள். பாடம் சொல்லிக் கொடுக்கிறவளுக்கு நம் குடும்பத்தைப் பற்றி என்ன பேச்சு வேண்டியிருக்கு? உடனே பாருகுட்டி அம்மாளுக்கு லெட்டர் எழுதி மோகினி டீச்சரை வேலையை விட்டு நிறுத்தச் சொல்லுங்க,” என்று கட்டளையிட்டாள்.

இதைக் கேட்ட கௌரிக்குப் பயம் வந்தது. தந்தையிடம் ஓடிப்போய், “அப்பா! டீச்சர் நல்லவங்கப்பா. டீச்சர் இல்லாட்டி நாள் ஸ்கூலுக்குப் போகமாட்டேம்பா…டீச்சர் ஸ்கூல்லேயே இருக்கட்டும்ப்பா,” என்று மன்றாடினாள். ராஜுவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அர்த்தமில்லாத கௌனைப் பற்றிய சிறு விஷயம், பெரிய உணர்ச்சிப் போராட்டத்தின் மையமாகி விட்டதே என்று வருந்தினான். ”கௌரி, நீ கீழே போம்மா. இது பெரியவங்க விஷயம்,” என்று சொல்லி, கௌரியைக் கீழே செல்லும்படி வேண்டிக்கொண்டான்.

கௌரியும் தந்தையின் அன்பு நிறைந்த வேண்டுகோளுக்கு இணங்கி மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள். அம்மாவின் கோபத்தினால் நாம் நிரந்தரமாக டீச்சரைப் பிரியும்படி நேர்ந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு எழுந்தது. எப்படியாவது தன்னுடைய தாய் தந்தையின் மனத்தை மோகினி டீச்சருக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதைப் பொறுத்துச் செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை கௌரிக்கு. இறங்கி வந்த படிக்கட்டுகளில் மறுபடியும் வேகமாக மேலே வந்தாள். ராஜுவும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கும் அறைக்குள் ஓடினாள். தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “அம்மா, அப்பா! என்னைப் பாருங்க,” என்றாள்.

ராஜுவும் விஜயாவும் திடீரென்று மறுபடி நுழைந்த மகளை தோக்கித் திரும்பினர். ஒன்றும் சொல்லாமல் கௌரி கயிறு வைத்துக் கொண்டு ஸ்கிப்பிங் செய்வது போல் எம்பி எம்பிக் குதிக்க ஆரம்பித்தாள். ‘ஒன்று, ரெண்டு, மூன்று’ என்று எண்ணியவாறு குதித்தபடியே இருந்தாள்.

கௌரி குதிப்பதைப் பார்த்து விஜயாவும் ராஜுவும் கலங்கிவிட்டனர். “கௌரி! கௌரி! நிறுத்து!” என்று விஜயா கூச்சலிட்டாள். ராஜு ஓடி வந்து கௌரியைத் தடுத்தான். “கௌரி, உனக்கு இருதயம் சரியில்லே, ஓடக்கூடாது, குதிக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அது உனக்குத் தெரியுமில்லே?”

”அப்பா! எனக்கு ஒன்றுமில்லேப்பா. டாக்டருங்க சும்மாச் சொல்றாங்க. நான் தினமும் ஸ்கூல்லே விளையாடறேன். படிக்கட்டிலே விடுவீடுன்னு வேகமாக ஏறுகிறேன். எனக்கு ஒண்ணும் ஏற்படலேப்பா. மோகினி டீச்சர் தான் எனக்கு சொன்னாங்கப்பா, ஒண்ணுமில்லேன்னு எனக்குத் தைரியம் கொடுத்து விளையாடச் சொன்னாங்க. பாதி வியாதி மனசிலேதான்னு டீச்சர் சொல்றாங்கப்பா. அம்மாவை மட்டும் டீச்சர் பார்த்தாங்கன்னா அம்மாவைச் சரி செய்துவிடுவாங்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் கௌரி.

ராஜுவும் விஜயாவும் ஆச்சரியத்தோடு கௌரியைப் பார்த்தனர். இவ்வளவு நேரம் குதித்த பின்பும் சற்றும் பெருமூச்சு விடாமல் நிற்கும் மகளைப் பார்த்து ராஜுவுக்குத் திருப்தியே ஏற்பட்டது. சமீப காலமாக அவள் முகத்தில் ஒரு தெளிவும் பொலிவும் இருப்பதைக் கண்டு அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. ராஜு சற்று மகிழ்ச்சியுடன் விஜயாவிடம் திரும்பி, ”விஜயா! கொஞ்ச நாளாகவே கௌரியின் உடல் நிலையிலே ஒரு முன்னேற்றம் இருக்கு. ஒருவேளை ஷோரனூர், திருச்சூர் டாக்டர்களின் அபிப்பிராயம் தப்பா இருக்குமோ என்னவோ. டாக்டர் சொல்றது என்ன வேதவாக்கா?” என்று ராஜு சொல்லி முடிக்குமுன்னே விஜயா இடைமறித்தாள்.

“நீங்களும் குழந்தைபோலப் பேசறீங்களே? கௌரி பிறந்தவுடனே கோயமுத்தூர் டாக்டர் சொன்னார். இங்கே வந்தப்புறம் ஷோரனூர் டாக்டர் சொன்னார். திருச்சூர் டாக்டரும் அதைத் தான் சொன்னார். படித்த மூன்று பேர் சொன்னதும் தவறாகி, யாரோ ஒரு வாத்தியாரம்மா சொன்னது சரியாகி விடுமா? அவள் இந்த மாதிரி தப்புத் தைரியம் கொடுத்துக் குழந்தையை ஓடியாடச் செய்து கொலை செய்துடப் போறா. அவளைக் குழந்தைகளோட பழகவிடறதே தப்பு. குழந்தைகளுக்கு எமனாய் வந்திருக்கிறாள் அந்த மோகினி. கௌரி, நீ போய்ச் சாப்பிடு. நான் அப்பாவோடு கொஞ்சம் பேசணும்,” என்று கௌரிக்குக் கட்டளையிட்டாள்.

டீச்சரின் சாமர்த்தியத்தையும் உபயோகத்தையும் பற்றித் தாய் தந்தையின் மனத்தில் நல்ல எண்ணம் உண்டாக்க வேண்டுமென்று நினைத்து வந்த கௌரிக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றுவிட்டாள்.


மறுநாள் பொழுது விடிந்தது.

நாராயணி அம்மாளின் சிறு வீட்டில் சங்கரன்குட்டியைப் பற்றிய பிரசினை, நாராயணி அம்மாளை உறுத்திக் கொண்டிருந்தது. இதுவரையில் அறிவில்லாமல் வளர்ந்து நெடுமரமாக நின்ற சங்கரன் குட்டியின் நடவடிக்கைகளில் இப்போது ஒரு மாறுதல் தென்பட்டிருந்தது. இரவு வேளைகளில் அவன் திடீரென்று எழுந்து காணாமல் போப் விடுவான். விடியும் சமயத்தில்தான் வீடு திரும்புவான். திடீரென்று எழுந்து சென்று கொல்லைப்புறத்து வாழைத் தோட்டத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டி ஒவ்வொரு காயையும் துண்டம் துண்ட வெட்டிப் போடுவான். இல்லையென்றால், காரணமில்லாமல் வீட்டில் உள்ள பாத்திரங்களையெல்லாம் உருட்டி உடைப்பான். ஆனால் மோகினி வீட்டில் இருக்கும் போது மட்டும் ஒழுங்காகப் பயந்து நடுங்கி இருப்பான். மோகினி அவனிடம், “நான் இருக்கிறப்போ பெட்டிப் பாம்பாக இருக்கிறாய், நான் இல்லாதப்போ அம்மாவைத் தொந்தரவு பண்ணுகிறாயாமே? அது தப்பு இல்லையா?” என்று கேட்பாள்.

“அம்மா அடிக்கமாட்டாள். நீ தோப்பிலே ஒருநாள் சாயபுவையே கழியாலே அடிச்சுட்டியே? அதான் உன் கிட்டே எனக்குப் பயமா இருக்கு”, என்பான் சங்கரன்குட்டி.

ஒரு வாரத்துக்கு முன் ஒரு வீட்டில் நடந்த கல்யாணத்தில் சாப்பிடச் சென்றிருந்தவன், வீடு திரும்பியதிலிருந்து, ”எனக்குக் கல்யாணம் செய்து வையம்மா. எனக்கும் ஒரு பாரியாள் வேணும்,” என்று நச்சரிக்க ஆரம்பித்தான். இந்தக் கல்யாண ஆசை அவனுக்குத் திடீரென்று ஏற்பட்டு விட்டது.

சங்கரன்குட்டியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதல்களினால் மிரண்டு போன நாராயணி அம்மாள், ஷோரனூரில் உள்ள ஓர் ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலுள்ள வைத்தியரிடம் சங்கரன்குட்டியைக் கொண்டு போய்க் காட்டினாள்.

அவர், “சில மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே அவனை வைத்திருந்து மருந்து கொடுக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் அவனுக்குத் தைல தாரை செய்து குணப்படுத்தவேண்டும்”, என்று சொன்னார். விலையுயர்ந்த ‘கிருதங்கள்’, ‘அரிஷ்டங்கள்’, ‘தைலங்கள்’ தயார் செய்ய வேண்டியிருப்பதால் குறைந்தது 500 ரூபாயாவது செலவாகும் என்றும் சொல்லிவிட்டார்.

ஐந்து நூறுகள் மொத்தமாகக் கொடுப்பதா! அப்படிக் கொடுத்து வைத்தியம் செய்தும் பலன் நிச்சயமாகச் சொல்ல முடியாதாமே? நாராயணி அம்மாள் வைத்தியத் திட்டத்தையே அடியோடு மறக்க நினைத்தாள். ஆனால் மோகினி, தன் மாதச் சம்பளத்தில் சேர்த்து வைத்திருந்த தொகை முன்னூறையும் வைத்தியருக்கு முன் பணமாகக் கொடுத்து, சங்கரன்குட்டியின் வைத்தியத்தைத் தொடங்கும்படி வற்புறுத்தினாள்.

“மோகினி, நாளைக்கு உனக்குக் கல்யாணம் ஏற்பாடாச்சுன்னா, ஒரு நகை, புடவைக்குப் பணத்துக்கு எங்கே போறது? உன் சேமிப்புப் பணத்தைத் தொடக்கூடாது,” என்றாள் நாராயணி.

”அம்மா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்மா. நான் இப்படியே சுதந்திரமாய்த்தான் இருக்கப்போறேன். அதனாலே என் சேமிப்புப் பணம் வழிந்தால் பரவாயில்லை. மறுபடியும் சேர்த்துக்கலாம்.” என்று சொன்னாள் மோகினி.

“நீ காய்கறித் தோட்டத்திலே, வயலிலே பாடுபட்டுச் சேர்த்த இரண்டாயிரம் ரூபாயையும் கொண்டு போய் நிலத்திலே போட்டு, துண்டு நிலம் வாங்கியாச்சு. இப்படி ஒவ்வொருமுறை சேர்த்து வைக்கிறதையும் செலவு பண்ணிட்டால், உன் கல்யாணத்தின் போது வெறுங்கையோடு தான் நிற்கணும். நான் ஒத்துக்கொள்ள முடியாது”, என்று மறுத்துவிட்டாள் நாராயணி அம்மாள்.

அதனால், நாராயணி அம்மாளுக்குத் தெரியாமலே ஷோரனூர் ஆஸ்பத்திரியில் பணத்தைக் கொடுத்து வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்துவிடலாம் என்று திட்டமிட்டாள் மோகினி.

முதல்நாள் மாலை, ஷோரனூர் சென்று அந்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி நிர்வாகியிடம் 300 ரூபாய் கொடுத்து விட்டு வந்தாள். மிகுதி 200 ரூபாயும் வேலை செய்யும் பள்ளியில் கடனாகப் பெற்று, மாதச் சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி பாருக்குட்டி அம்மாளிடம் கேட்கத் திட்டம் வகுத்திருந்தாள். பாருகுட்டி அம்மாளுக்கு அவளிடமிருந்த நன்மதிப்பு 200 ரூபாய்க்கும் மேல் பெறும் என்பது மோகினியின் நம்பிக்கை.

அவள் பள்ளி கிளம்பும்போது நாராயணி அம்மாள் பெட்டியைத் திறந்ததும் அதில் 300 ரூபாய் இல்லாமல் இருப்பது கண்டு பதறினாள். மோகினி விஷயத்தை விளக்கினாள். நாராயணிக்கு ஆத்திரம் வந்தது. “அசட்டுப் பெண்ணே, இத்தனை நாள் எனக்கும் என் பைத்தியக்காரப் பிள்ளைக்கும் உழைத்து வீணானது போதாதா? உன் கல்யாணத்துக்குன்னு சேர்த்து வைத்த பணத்தையும் செலவழிக்கணுமா?” என்றாள்.

“உழைச்சு உழைச்சு வீணாய்ப் போகல்லேம்மா. உடம்பு உப்பித்தான் போயிருக்கு,” என்று சொல்லி, தன்னுடைய வளமான உடலைக் காட்டிப் புன்முறுல் செய்தாள் மோகினி.

“போதும் உன் வேடிக்கை! என் மகனுக்கு வைத்தியத்துக்கு என்னைக் கேட்காமல் யாரடி உன்னை ஏற்பாடு பண்ணச் சொன்னாங்க? பாக்கி இருநூறு ரூபாய்க்கு எங்கே போய்க் கேட்கிறது? யார்கிட்டே போய்க் கேட்கிறது?”

“நான் வேலை செய்கிற பள்ளிக் கூடத்தில் கடனாக வாங்கிக்கிறேன். என்ணம்மா சொல்றீங்க. உங்க மகன் வைத்தியத்துக்கு, பணம் கொடுத்து உதவ உங்க மகளுக்கு உரிமையில்லையா? ஏன் என்னை அன்னியப் பெண்ணா வச்சுப் பொசுக்கிறீங்கம்மா…” என்று வாதாடினாள் மோகினி. அதற்கு மேல் நாராயணி அம்மாள் ஒன்றும் பேச வில்லை. சங்கரன்குட்டியை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஷோரனூர் ஆஸ்பத்திரியில் விட்டு வருவதாக ஒப்புக் கொண்டாள்.

மோகினி பள்ளிக்குப் புறப்பட்டாள். அவள் மனத்தில் அன்று ஒரு நிறைவு இருந்தது. அமைதி இருந்தது. பள்ளியில் நுழைந்ததும் தலைமை உபாத்தியாயினி பாருக்குட்டியம்மாளைப் பார்த்து, 200 ரூபாய் கடன் விஷயத்தை முடித்து விடவேண்டுமென்று நினைத்தாள். வைத்தியம் ஆரம்பித்த இரண்டு நாட்களில் மிகுதித் தொகையையும் கொடுப்பதாக ஆஸ்பத்திரி மானேஜருக்கு வாக்களித்திருந்தது தான் அவள் அவசரத்துக்குக் காரணம்.

ஆனால் பள்ளியில் நுழையும்போதே முதல் மணி அடித்துவிட்டது. வகுப்புக்குச் சென்று வேலையைச் செய்யாமல் கடன் கேட்கப் பள்ளித் தலைவியிடம் செல்வது முறையல்ல வென்று தீர்மானித்து நேரே வகுப்புக்குச் சென்றாள். பிற்பகல் இடைவேளையின் போது கடனைப் பற்றிக் கேட்டுக் கொள்வோம் என்று முடிவு செய்தாள்.

வகுப்பில் நுழைந்ததும் அங்கு கௌரி இல்லாமல் இருப்பது ஆச்சரியமாயிருந்தது. ஒருவேளை குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையோ என்று நினைத்தாள். அடுத்த நிமிடமே பாருகுட்டி அம்மாளின் அறைச் சேவகன் “பெரியம்மா உங்களை ஆபீசுக்கு வரச் சொன்னாங்க,” என்று கூறி அழைத்தான்.

இம்மாதிரி பாருகுட்டி அம்மாள் அடிக்கடி அழைப்பு அனுப்புவதுண்டு. உடனே எழுந்து பள்ளித் தலைவியின் அறைக்குச் சென்றாள் மோகினி. பாருகுட்டி அம்மாள் அங்கு வைக்கப்பட் டிருந்த ஸ்டீல் பீரோவின் முன் நின்று கொண்டு, பீரோவிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முதுகுப்புறம்தான் மோகினியின் பார்வையில் தெரிந்தது. தான் வந்திருப்பதை அறிவிக்க மோகினி கனைத்துக் கொண்டாள்.

கனைப்புச் சத்தம் கேட்டதும் பாருகுட்டி அம்மாளின் கரங்கள் அப்படியே நின்றன. மெள்ள, சாவதானமாகத் திரும்பினாள். அவள் முகம் வெளுத்திருந்தது. மோகினி அவளுக்கே உரித்தான தெய்வீகப் புன்னகையோடு, ”குட் மார்னிங் மேடம்,” என்று சிரிப்பில் தன் அன்பையும் அன்யோன்பத்தையும் சிரம் தாழ்த்துவதில் தலைமைப்பீடத்துக்குச் செலுத்த வேண்டிய மரியாதையையும் செலுத்தினாள்.

ஆனால் பாருகுட்டி அம்மாள் பதிலுக்குச் சிரிக்கவில்லை. பெருமூச்சு விட்டபடி தன் ஆசனத்தில் வந்து உட்கார்ந்தாள். கையிலிருந்த ஒரு பேப்பர் கவரை எடுத்து மோகினியிடம் நீட்டினாள்.

மோகினி திகைப்போடு கவரைப் பிரித்துப் பார்த்தாள். அதில் பத்து ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பணம் கடனாகக் கேட்க வந்தவள்தான் மோகினி. ஆனால் கேட்கு முன்பே பணம் கொடுக்கப்பட்டது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு.

“மோகினி, உனக்குச் சேர வேண்டிய சம்பளத் தொகை கொடுத்தாகி விட்டது. நீ இன்றோடு வேலையிலிருந்து விலகிக் கொள். உன் நடவடிக்கை பள்ளி ஸ்தாபகர் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை,” என்று சொல்லி நிறுத்தி விட்டு, பாருகுட்டி அம்மாள் தன் கண்களைத் துடைத்தபடி எழுந்து அறையை விட்டு வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்.

மோகினி அப்படியே அசைவற்று நின்றாள். அவள் மனம் சில வினாடிகளுக்கு வேலை செய்ய மறுத்தது.

அத்தியாயம்-21

நாற்பது மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ரயில் வண்டியிலிருந்து திடீரென்று தரையில் இறங்கியது போல் இருந்தது மோகினிக்கு. பள்ளியிலிருந்து விலகிக் கொள்வதா? ஏன் விலகிக் கொள்ள வேண்டும்? என்ன தவறு செய்தோம்? ஒன்றுமே புரியாமல் விழித்தாள்.

அவள் குழந்தைப் பருவத்தில் படித்த பள்ளி. அவளுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் உணர்ந்து அதற்குச் சாட்சியாக நின்ற பள்ளி அது. அதன் சுவர்களில் எங்கு எந்தக் கறை இருக்கும். எந்த இடத்தில் பொக்கை விழுத்திருக்கும், பள்ளியின் வெளிப்புறத்திலுள்ள எந்த வேப்பமரத்தை எப்போது வெட்டினார்கள். எந்த மாமரத்தை எப்போது நட்டார்கள். மழை பெய்தால் எந்த அறையில் எங்கு நீர் கொட்டும் என்பது எல்லாமே மோகினிக்கு மனப்பாடம்.

இருபத்துநான்கு மணி நேரங்களில் எட்டு மணி நேரம் தூக்கம்; ஆறு ஏழு மணிநேரம் நாராயணி அம்மாள் வீட்டில் இருப்பாள். மற்றப் பொழுதெல்லாம், பள்ளிக்கே உரிமையாக்கி வந்திருக்கிறாள். இன்று நேற்று வந்த உறவல்லவே! அறியாப் பருவத்திலிருந்து அறிந்த பருவம் வரை தொடர்ந்து வந்த உறவல்லவா? இதே பள்ளியில் மாணவியாகப் பாடம் கற்றுக் கொண்டாள். பிறகு அங்கு ஆசிரியையாகப் பாடம் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறாள். அவளுக்குக் காதல், குழந்தை என்ற கடமைகள் இருந்தததில்லை. எல்லா உடைமைகளும் பள்ளியிலேயே இருந்தன. தனி உயிர் மூச்சான அதேப் பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளவேண்டுமென்று எங்கிருந்தே யாரிடமிருந்தோ ஓர் உத்திரவு!

ஸ்தாபகர் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். அந்த ஸ்தாபகர் குடும்பதிலுள்ளவர்கள் இந்தப் பள்ளி அக்கறையோடு திரும்பிப் பார்த்திருக்கிறர்களா? ஆனால் அவர்கள் உத்திரவு இடவும், தான் அதற்குக் கட்டுப்படவும் வேண்டியிருக்கிறதே! உழைப்பாள் உருவாகிறது உலகம். ஆனால் உழைபாளிகளுக்கு அதில் இடமில்லை. ஆசையோடு வீடு கட்டி உழைப்பவர்கள் எல்லாம் அந்த வீட்டில் வசிக்கிறார்களா? மலை மலையாய்த் துணி தைத்துக் குவிப்பவர்கள், ஆடையில்லாமல் இருப்பதில்லையா? இப்படி பலவாறான சிந்தனைகள் மோகினியின் உள்ளத்தில் குமுறி, அவள் கண்கள் நீர்க் குளமாக்கின. தாயிறந்தபோது அவளுக்குப் பிஞ்சுப் பருவம், அழத்தெரியவேயில்லை. ஆனால் ஒரு தாயி மார்பில் படுத்துப் பால் அருந்தும் குழந்தையை எடுத்து விசிறி எறிந்ததுபோது அழுதாள்.

“பள்ளியை விட்டுட்டு எங்கே போவேன் டீச்சர்?” என்று நாக்குழ பாருக்குட்டி அம்மாளிடம் கதறினாள்.

“பாவாடை சட்டையோடு என்னிடம் மாணவியாக வந்தவள். இப்போ என்னோட சேர்த்து நீ வேலை பார்க்கிறது எனக்கு எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா? நான் எவ்வளவோ ராஜு அவர்களிடம் சொல்லி விட்டேன். கௌரியின் அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லையாம், மோகினி. கவலைப்படாதே மோகினி, உனக்கு எவ்வளவோ நல்ல வேலை கிடைக்கும். ஆனால் எனக்குத்தான் உன் மாதிரி டீச்சர் கிடைக்கமாட்டா,” என்று சொல்லிவிட்டு அங்கு நிற்கப் பிடிக்காமல் பாருக்குட்டி அம்மாள் நகர்ந்தாள்.

மோகினி சில வினடிகள் சிந்தித்தபடி நின்றாள். அப்புறம் தன்னையும் மறந்து மெள்ள நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று ஞாபகம் வரவே நின்று கொண்டாள். மோகினியின் வகுப்பில் சரஸ்வதி என்ற டீச்சர் பாடம் சொல்லிக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டாள். சட்டப்படி இப்படி திடீரென்று ஒருவரை நிறுத்த முடியாது என்பது மோகினிக்குத் தெரியும். அவள் விவகிக்கொள்ள டயம் கேட்கலாம். ஆனால் சட்டத்தின் வலுவிலோ, சம்பளத்தின் ஆசைக்காக மட்டுமோ அவள் அங்கு வேலை செய்து வரவில்லையே! அவள் அங்கு தேவையில்லை என்று முடிவு ஆன பின்பு அங்கு ஏன் நிற்க வேண்டும்?

இந்தச் செய்தியை அறிந்தபின் மோகினி வகுப்பில் குழந்தைகள் முன்னால் போய் நிற்க விரும்பமாட்டாள் என்பதை உணர்ந்த பாருக்குட்டி அம்மாள் கருணையோடுதான் ஸ்ரஸ்வதியை நம் வகுப்புக்கு அனுப்பியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட மோகினி, வேகமாக வெளிப்புறம் வந்தாள்.

வராந்தாவில் நடுப்பகல் மோகினியும் கௌரியும் உணவருந்தும் பெஞ்சு கிடந்தது. அதைப் பார்க்கவும் மோகினிக்கு வேதனையாக இருந்தது. குழந்தைக்கு மனத்திலுள்ள அன்பை மூடிவைக்கத் தெரியாமல் வீட்டில் ஏதாவது டீச்சரைப் பற்றிப் பேசியிருப்பாள். அது விபரீதத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது என்பதை மோகினி ஊகித்துக் கொண்டாள்.

கௌரி அன்று பள்ளிக்கு வராதது அதை ஊர்ஜிதம் செய்வதாயிருந்தது. ராஜு என்பவர் இவ்வளவு அவசரமாகவும் – இரக்கமில்லாமலும் முடிவு செய்தார் என்று நினைக்கவும் மோகினிக்கு அவர் மீது கோபம், ஆத்திரம், ஆக்கிரோஷம் எல்லாம் ஏற்பட்டது. வேகமாக நடந்து படிகளில் இறங்கி வீடு நோக்கிப் போக அடி எடுத்து வைத்தாள்.

திடீரென்று மோகினிக்கு ஞாபகம் வந்தது. மறுபடியும் உள்புறம் சென்றாள். பள்ளியின் நடுவில் உள்ள தொழுகை நடக்கும் ஹாலில் நுழைந்தாள் அங்கு மதத் தலைவர்கள் படங்களின் இடையே மாட்டியிருக்கும் குழந்தைச்சாமியின் படத்தின்முன் பாரு குட்டி அம்மாள் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தாள். மோகினி அப்படியே ஒரு வினாடி குழந்தைச்சாமியின் கருணை நிறைந்த முகத்தைப் பார்த்தாள், மளமள வென்று மோகினியின் கண்களில் நீர் நிறைந்தது. பாருக்குட்டி அம்மாள் மோகினியின் உணர்ச்சிகளை உணர்ந்து கொண்டாள்.

“மோகினி, எல்லாருமே குழந்தைச்சாமி மாதிரி இருக்கமாட்டாங்க, இனி மேல் எங்கே போனாலும் பணக்கார வீட்டுக் குழந்தைகளிடம் ஜாக்கிரதையாகப் பழகு,” என்றாள்.

மோகினி பதில் சொல்லாமல் குழந்தைச்சாமியின் படத்தையே பார்த்தபடி நின்றாள். பிறகு குனிந்து படத்துக்கு வணங்கிவிட்டு, பாருக்குட்டி அம் மாள் பக்கம் திரும்பினாள்.

“டீச்சர்..” என்று கூறிவிட்டு நின்றாள்.

“என்ன மோகினி என்ன சொல்ல விரும்பறே?”

“தப்பா நினைக்காதீங்க டீச்சரம்மா! எனக்கு எவ்வளவோ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள படிப்பைக் கொடுத்து என்னை உருப்படியாக்கினது சாமிதான். ஆனால் நான் அவருக்கு ஒன்றுமே காணிக்கை கொடுக்கல்லே. அவரை இனி எப்பவாவது பார்ப்பேனோ அதுவும் தெரிய வில்லை. இந்த நூறு ரூபாயும் சாமி பேரிலே ஆரம்பிக்கப்போற வாசக சாலைக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்ததாக இருக்கட்டும்”, என்று உணர்ச்சி ததும்பக் கூறிவிட்டு மோகினி பணத்தை எடுத்துச் சாமியின் படத்தடியில் வைத்தாள். பிறகு வேகமாக வெளியேறினாள்.

மோகினி பள்ளியைவிட்டு வெளியே வத்ததும் அவளைப் பிரசினைகள் சூழ்ந்து கொண்டன. வீட்டுக்கு எப்படிச் செல்வது? விஷயம் தெரிந்தால் நாராயணி அம்மாள் எவ்வளவு அதிர்ச்சி அடைவாள்! சங்கரன்குட்டி வைத்தியத்துக்காக முன்னூறு ரூபாயையும் கொடுத்து அவனை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டாள். வேலையை விட்டு விலகும் போது கிடைத்த நூறு ரூபாயையும் குழந்தைச்சாமியின் ஞாபகார்த்த வாசக சாலைக்காகக் கொடுத்துவிட்டாள். இரண்டு மூன்று நாட்கள் அல்லது அதிகம் போனால் ஒரு வாரத்திலாவது இருநூறு ரூபாய் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டியாக வேண்டும். வேறு இடத்தில் வேலை தேடியாக வேண்டும்.

பாலக்காடு சென்று வேலை தேடுவதா? இல்லை, கோயமூத்தூர் செல்வதா? வேலை உடனே கிடைத்துவிடாது. அதுவரை வழிச் செலவுக்குப் பணம் தேவை. வீட்டுச் செலவுக்கும் பணம் தேவை. பணம்! பணம்! பணம்! அது எவ்வளவு இன்றியமையாத பொருள் என்ற உண்மை, அது இல்லாமல் இருக்கும் போதுதானே புரிகிறது!

சிந்தித்தபடி வீடு நோக்கி நடந்தாள். ஆனால் மோகினிக்கு வீட்டுக்குப் போகத் துணிவில்லை. வேலை போய்விட்டது என்ற செய்தியை நாராயணி அம்மாளிடம் சொல்லப் பயந்தாள். மோகினிக்கு ஜலதோஷம். ஜுரம் என்றலே பதறிப் போய்விடும் அந்த வளர்ப்புத் தாய்க்கு இந்தச் செய்தியை எப்படிக் கூறுவது? இது மெள்ள மெள்ளச் சொல்ல வேண்டிய செய்தி என்று நினைத்தாள். மாலைவரை வீடு செல்ல முடியாது. அதுவரையில் எங்கு செல்வது என்று புரியவில்லை. அருகில் இருந்த குளத்தின் அருகில் உட்கார்ந்தாள்.

குளத்தின் சலனமில்லா நீரைப் பார்க்கும்போது குழந்தை கௌரியின் நினைவு உடனே எழுந்தது. இனிமேல் அந்தக் குழந்தையைப் பார்க்கவே முடியாது. கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அவள் குரலைக் கேட்க முடியாது. கோபத்தால் சுருங்கும் அவள் முகத்தையும், அடுத்த வினாடியே கெஞ்சம் விழியோடு மன்னிப்புக்காகக் காத்திருக்கும் அவள் முகத்தையும் இனிமேல் காணமுடியாது. மோகினிக்கு எதிர்காலத்தின் ஒரு பகுதி சூனியமாகிவிட்டது போல் தோன்றியது. அந்தக் குழந்தையோடு ஒரு பிணைப்பை ஆண்டவன் ஏன் ஏற்படுத்தினான்? பிணைப்புக்கள் ஏற்படுவதும் திடீரென்றும் அவை முறிவதுமே வாழ்க்கையின் பாதி துக்கத்துக்குக் காரணமல்லவா? கெளரியின் முகத்தை மறக்க முடியவில்லையே!

பகல் இரண்டு மணி வரையில் குளத்தடியில் சிறு கற்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பசி எடுத்தது போல் இருந்தது. கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸைத் திறந்து பலகாரத்தை எடுத்துத் தின்றாள். தினமும் தடுப்பகல் குழந்தை கௌரிக்குப் பலகாரம் கொடுத்துவிட்டுச் சாப்பிடும் பழக்கம் இருந்ததால், தனிமையில் அன்று சாப்பிடுவது அவளுக்கு வேதனையாக இருந்தது. மரத்திலிருந்த காகங்கள் கூச்சலிட்டுத் தங்கள் பசியை மோகினிக்குத் தெரிவித்தன. பலகாரத்தில் ஒரு பகுதியைச் காகங்களுக்கு அளித்துவிட்டு இனிமேல் மாலை ஐந்து மணிவரை எங்கு செல்வது, என்ன செய்வது என்ற சித்தனையில் ஆழ்ந்தாள்.

திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஷோரானூரில் உள்ள ஆஸ்பத்திரிக்குச் சென்று வைத்தியரையாவது பார்த்துவிட்டு வருவோம் என்று தீர்மானித்தாள். மெள்ள நடந்து ஷோரனூர் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் நுழையும் போது மணி நான்காகிவிட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகி, பிரதம வைத்தியர் யாரும் இல்லை. அதுவும் ஒரு அங்கு ஏமாற்றமாக இருந்தது. விசாரித்ததில் அவர்கள் காலை 11 மணிக்கே ராஜு பங்களாவுக்குச் சென்று விட்டதாகவும் அவர் மனைவி திடீரென்று குளிக்கும்போது மயக்க மடைந்து விழுந்துவிட்டதாகவும் காரில் ஆள் வந்து ஆயுர்வேத சமாஜ வைத்தியரையும் ஷோரனூரில் உள்ள ஆங்கில வைத்திய ஆஸ்பத்திரி டாக்டரையும் அழைத்துச் சென்றதாகவும் தெரிந்தது. நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதால்தான் வைத்தியர் இன்னும் திரும்பவில்லை என்று ஆஸ்பத்திரி சிப்பந்தி ஒருவன் தெரிவித்தான்.

தன்னை வேலையைவிட்டு நீக்கிய குடும்பத்தினருக்கு உடனே கைமேல் கூலி கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி யடையவில்லை மோகினி. ராஜுவையும் அவன் மனைவி விஜயாவையும் இரக்கமில்லாமல், தனக்குத் தாய் போலிருந்த பள்ளியிலிருந்து தன்னைப் பிரித்த காரணத்துக்காகக் காலையில் வெறுத்தாள் என்பது உண்மை.

ஆனால் இப்போது கௌரியின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்ததும், பாவம் குழந்தை கௌரி, எப்படிப் பயந்து போயிருப்பாள் என்ற கவலையே மோகினிக்கு ஏற்பட்டது. அவளுக்கு அருகிலிருந்து ஆறுதல் கூடச் சொல்ல முடியவில்லையே என்று வருந்தினாள். கௌரியைப் பற்றி நினைக்க ஆரம்பித்ததும் மோகினி தன்னுடைய கவலையை மறந்தாள். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியும் ஓரளவு மறந்தாள்.


வெங்கடபதியின் பங்களாவில் விஜயா படுக்கையில் மயங்கிக் கிடந்தாள். அவள் தலைமீது ரப்பர் பையில் ஐஸ் வைக்கப்பட்டிருந்தது. விஜயாவின் கண்கள் மூடியபடி கிடந்தன. அருகில் ராஜு, அவன் உயிரே கண்களில் நின்று ஊசலாட விஜயாவின் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

கௌரிக்கு ஒன்றுமே புரியவில்லை. தாய் குளிக்கும் அறைக்குள் சக்கர நாற்காலியோடு சென்றதும் சிறிது நேரத்தில் அறையிலிருந்து தாயின் அலறல் சத்தம் கேட்டதும்தான் கௌரிக்குத் தெரியும். உடனே ஓடிப்போய்த் தந்தையை அழைத்தாள். தந்தை வந்து குளிக்கும் அறைக் கதவை நெட்டித் தள்ளி உதைத்து உள்ளே சென்றபோது தான் தாய் தரையில் கிடப்பதையும் தாயின் மூச்சு பலமாக வந்து கொண்டிருப்பதையும் கவனித்தாள்.

ராஜு, “விஜயா, விஜயா,” என்று அழைத்தான்.

பதில் இல்லை, உடனே அவளை வாரித் தூக்கி எடுத்து வந்து படுக்கையில் போட்டுவிட்டு வைத்தியருக்குச் சொல்லி அனுப்பினான். வழக்கமாகக் காத்யாயினி தான் விஜயா குளிக்கும்போது அருகில் துணைக்கிருப்பாள். ஆடை உடுத்து விடுவாள். அவளை வேலையை விட்டு நீக்கியதும் விஜயாதானே? தன் அடிப்படைத் தேவைகளைச் சிரமப்பட்டாவது பூர்த்தி செய்து கொள்வது என்று நினைத்தாள். மற்றவர் கையை நம்பி வாழக்கூடாது என்று தீர்மானித்தாள். அன்று காலையில் எழுந்தவுடன் கணவனோடு பெரும் வாக்குவாதம் நடந்தது. உடனே கடிதம் எழுதி மோகினியை வேலையிலிருந்து நீக்கும் படி கேட்டுக் கொண்டாள். ராஜு விஜயாவின் மனத்திலிருந்த வெறுப்பை மாற்ற முயன்று பார்த்தான். “யாரோ பாவம், ஏழைப் பெண் அந்த மோகினி டீச்சர். இந்த வேலையையே நம்பி வாழ்பவள், அவள் என்ன தவறு செய்து விட்டாள்? நம் குழந்தைக்கு ஆசையோடு ஒரு கௌன் வாங்கிக் கொடுத்ததற்காக அவளை வேலையிலிருந்து நீக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

“அற்ப கௌனுக்காக மட்டும் சொல்ல வில்லை, அவள், என் மகள் என்னை வெறுக்கும்படி செய்துவிட்டாள். என் மகளின் மனத்தைக் கவர்ந்து ஆக்கிரமித்துவிட்டாள். அவளை உடனே நீக்கவேண்டும். அப்போதுதான் எனக்குத் திருப்தியாயிருக்கும்.”

“கொஞ்சம் யோசித்துப் பாரு விஜயா! ஒரு ஏழை வயிற்றிலே அடிக்கலாமா? வேணும்னா நாம் நம்ம குழந்தையைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவோம். வீட்டிலேயே வேறே டீச்சர் போட்டுச் சொல்லிக் கொடுப்போம்.”

“அவளைப்பத்தி உங்களுக்கென்ன இவ்வளவு அக்கறை? கௌரியை மயக்கின மாதிரி உங்களையும் மயக்கிட்டாளா?” என்று ஆத்திரம் தொனிக்கக் கேட்டாள் விஜயா.

ராஜுவால், இந்த நேர்முகத் தாக்குதலுக்குப் பின் அதிகம் பேசப் பிடிக்க பிடிக்கவில்லை. விரும்பாமலே தன் மனைவியின் கட்டளைப்படி ஒரு கடிதம் எழுதி, பாருக்குட்டி அம்மாளுக்கு அனுப்பினான்.

கடிதம் எழுதிய அரை மணி நேரத்துக்குப் பின்புதான் விஜயா குளிக்கும் அறைக்குச் சென்றாள், பாசி நிறைந்த தரையில் வழுக்கி விழுந்து மயக்கம் அடைத்தாளா அல்லது நாற்காலியில் இருக்கும் போதே படபடப்பின் காரணமாக வலிப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்தாளா? ஒன்றும் புரியவில்லை. டாக்டர்களுக்கும் விளங்களில்லை. ஷோரனூர் ஆங்கில டாக்டர் உடனே விஜயாவை வசதி நிறைந்த கோவை ஆஸ்பத்திரிக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னார். விஜயாவின் ரத்த அழுத்தமும், அவள் இருதயத்தின் நிலையும் உடனே கவனிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

ஆயுர்வேத ஆஸ்பத்திரி கேரள வைத்தியர் மெழுகு தடவி ஒத்தடம் கொடுத்துச் சரி செய்துவிடலாம் என்று அடித்துச் சொன்னதில் ராஜுவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த வீட்டில்தான் தந்தை இறந்தார். இந்த நிலையில் விஜயாவை இங்கு வைத்திருப்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்தான். உடனே பங்களாவில் உள்ள ஷெவர் லெட் வேனில் பல படுக்கைகளை அடுக்கி இருபுறமும் திண்டுகளைப் போட்டு அதிர்ச்சி இல்லாமல் விஜயாவைக் கோயமுத்தூர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான்.

தந்தையின் கவலை படிந்த முகம், டாக்டர்கள் கிசுகிசுவென்று பேசுவது, தாய் கண் திறவாமல் கிடப்பது இவற்றைப் பார்த்த கௌரிக்கு விஷயம் ஏதோ விபரீதம் என்று மட்டும் புரிந்தது. யாரும் அவளுடன் எதையும் விளக்கிப் பேசுவதாயில்லை. மேலே மாடியில் இருந்த ஆங்கில டாக்டர் கிட்டே போகவே பயமாயிருந்தது. ஹாலில் கூடியிருந்த கேரள வைத்தியர்கள் ஆங்கில வைத்தியனின் தவறான அபிபிப்ராயத்தைப் பற்றிச் சர்ச்சை செய்தபடி இருந்தனர்.

கௌரி அவர்களிடம் சென்று கவலையோடு, “அம்மாவுக்கு என்ன! ஏன் கண்ணே திறக்கல்லே? எப்போ எழுந்து உட்காருவாங்க?” என்று கேட்டாள்.

கேரள வைத்தியருக்கு ஆங்கில டாக்டரிடம் இருந்த ஆத்திரத்தில், “மேலே காதிலே குழாய் வைச்சுட்டு இருக்கானே ஒரு டாக்டர், அவனைப் போய்க் கேளு. அவன் சொல்வான் குழந்தை”, என்று சலிப்போடு கூறினார்.

ஒன்றும் புரியாத கௌரி மாதவனிடம் ஓடினாள். மாதவன் கௌரியைப் பார்த்ததும், “குஞ்சு குஞ்சு!” என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான்.

“என்ன மாதவா, அம்மாவுக்கு என்ன?”

“ஒன்றும் புரியல்லே”, என்றான்.

“மோகிவி டீச்சரைக் கூட்டிட்டு வா. அவுங்களுக்கு எல்லாம் புரியும் மாதவா” என்றாள்.

“கௌரி, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டீச்சரைக் கண்டா பிடிக்கல்லே. அம்மா சொல்லி அப்பா டீச்சரை வேலையை விட்டுத் தள்ளிட்டாங்க. நான் தான் காலையிலே பாருக்குட்டி அம்மாளுக்கு லெட்டர் எடுத்திட்டுப் போனேன். டீச்சரைப் பத்தி அம்மா கிட்டே பேசினதுனாலே தான் டீச்சருக்கு வேலை போயிடுச்சு,” என்றான்.

கௌரியின் பிஞ்சு மனம், தாயின் நிலைக்கு வருந்துவதா, தன்னால் மோகினி டீச்சருக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் பற்றி வருத்தப்படுவதா என்று தெரியாமல் தவித்தது. கௌரி எதைப் பற்றியும் சிந்திக்க இடமேயில்லை. அவகாசமும் இல்லை.

தாயை வேலையாட்கள் படிக்கட்டில் தூக்கி வருவதைப் பார்த்தவுடன் கௌரியின் மனம் பதைத்தது. தாயைக் கொண்டுபோய்க் காரில் வைத்ததும் ராஜு கெளரியைத் தூக்கிக் கொண்டான். “கௌரி, நாம் கோயமுத்தூர் போகப் போறேம். இனிமேல் அங்கே தான் இருக்கப் போறோம்,” என்று சொல்லி, கெளரியோடு காருக்குச் சென்றான்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிந்திக்க இடமில்லாமல் நிகழ்ந்தபடி இருந்தன. கார் நகர்ந்த பின்புதான் கௌரி, தான் இன்னும் மோகினி டீச்சர் கொடுத்த ஒரே கௌனோடு புறப்பட்டுக் கோயமுத்தூர் போகிறோம் என்பதை உணர்ந்தாள். அவள் பாவாடை துணிகளை எடுத்து வைக்கக்கூட யாரும் கவனிக்கவில்லை.

ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலிருந்து களைப்போடு திரும்பி வந்து கொண்டிருந்த மோகினி எதிரே மாலைக் கதிரவன் ஒளியில் மின்னியபடி வரும் ஷெவர்லட் வேனைப் பார்த்து ஒதுங்கிக்கொண்டாள்.

ஷெவர்லட் வண்டி மோகினியைக் கடந்து செல்லும்போது, வண்டியில் டிரைவர் அருகில் குழந்தை கெளரி வேறுபுறம் பார்த்தபடி உட்கார்ந்திருப்பதையும், அந்த வண்டியின் பின் புறத்தில் படுக்கையில் படுத்தபடி ஒரு பெண் கிடப்பதையும் பார்த்தாள்.

கார் புழுதி மண்டலத்தில் மறைந்தது. மோகினி அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து நின்றாள்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *