கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 7,220 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 40-41 | அத்தியாயம் 42-44

அத்தியாயம்-42

ரயில் வண்டி எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குழந்தைச் சாமியார் தாம் மோகினியைத் தேடி வந்ததன் நோக்கத்தை விளக்கினார். மோகினி சென்றதிலிருந்து குழந்தை கௌரி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள் என்பதை விளக்கினார். மோகினி எப்படியாவது கோயம்புத்தூர் திரும்ப வேண்டும் என்று மோகினியிடம் கேட்டார்.

“சாமி. நீங்க சொல்லி நான் தட்ட முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதீர்கள். அந்த வீட்டுக்கு நான் வர விரும்ப வில்லை, அங்கே நாள் இருக்கிறதே தவறாகப் படுகிறது, கெளரி சில நாட்களில் என்னை மறந்து விடுவாள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும், என்னை மறுபடியும் கோயம்புத்தூர் வரும்படி வற்புறுத்தாதீர்கள்,” என்று வேண்டிக் கொண்டாள்.

குழந்தைச்சாமிக்கு அவளிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை, மோகினி அவரிடம் உத்வேகத்தோடு மறுத்துப் பேசியது இதுதான் முதல் தடவை. இந்த உரையாடல் நிகழும்போது ராஜு குறுக்கிடவே இல்லை.

ரயில் வண்டியில் நுழைந்தது முதல் அவன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவன் மோகினியின் திசையில் கூடப் பாராமல் ரயில் ஜன்னல் புறம் பார்த்தபடி இருந்தான்.

அவன் அப்படி இருந்தது பணக்காரன் என்ற அகம்பாவத்தால் அல்ல என்பது மோகினிக்குத் தெரியும். ராஜுவுக்கு இயற்கையிலேயே அகம்பாவம் என்ற குறை கிடையாது.

ஏற்கனவே சிவப்பான மேனி. பொசுக்கும் வெய்யிலில் காரில் பிரயாணம் செய்ததனால் அப்படிக் குங்குமம் போல் குழம்பிச் சிவந்ததா, இல்லை. மோகினியைப் பார்த்தபின் ஏற்பட்ட மனக் குழப்பத்தினால் அப்படிச் சிவந்ததா என்று மோகினியால் நிர்ணயிக்க முடியலில்லை. அவள் அதை நிர்ணயிக்கவும் விரும்பவில்லை.

தன்னால் ஒரு லட்சாதிபதியின் வேண்டுகோளை நிராகரித்து மறுக்க முடிந்ததே என்பதில் மோகினிக்கு ஒரு திருப்தி.

ராஜுவை மனம் நோகச் செய்வதில் ஒரு புரியாத இன்பம் அவளுக்கு இருந்தது.

சாமியார், மோகினி கோயம்புத்தூர் வருவதைப் பற்றி அப்புறம் பேசவில்லை.

எர்ணகுளத்தில் எங்கு தங்கப் போகிறாள், என்ன சம்பளம் என்பது பற்றியெல்லாம் விசாரித்தார்.

“எங்கு தங்கப் போகிறேன் என்று எனக்கே புரியவில்லை. என்ன சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லே” என்று உண்மையைச் சொல்லிவிட்டுச் சாமியைப் பார்த்தாள்.

“சங்கரன் குட்டியையும் அழைத்துக் கொண்டு தங்க இடம் இல்லாமல் சம்பளத்தையும் நிர்ணயிக்காமல் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் குழந்தைச்சாமி.

மோகினி அப்போதுதான் தான் ஒரு திட்டமில்லாமல் எதிர்காலத்தில் இறங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தாள்.

அவள் பரிதாப நிலையைக் காரணமாக்கிக் கோயம்புத்தூர் வரும்படி சாமி தூண்டுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்தது.

“யாருக்கோ பிறந்தேன். எப்படியோ நாராயணி அம்மாள் வீட்டுக்கு எரியும் பஸ்ஸில் வந்து சேர்ந்தேன். பிறகு உங்கள் ஆதரவால் படித்து முன்னுக்கு வந்தேன், எந்தக் கடவுள் என்னை இதுவரை காப்பாற்றினாரோ அவர் என்னைத் தொடர்ந்து காப்பாற்றுவார்.” மோகினியின் டம்பமான பேச்சு சாமியாருக்குச் சிரிப்பை மூட்டியது.

“என் வேண்டுகோள், என் அந்தக் கடவுளின் குரலாக இருக்கக்கூடாது?” என்று சாமியார் சொன்னதும் மோகினி தலை குனிந்தாள். சாமியார் தொடர்ந்து பேசினார். “ஒரு சமயம் மோகினி என்ற சிறுமியின் வாழ்வுக்காக ஊர் சுற்ற வேண்டியவன், நான் ஷோரனூரிலேயே தங்கினேன். இன்று, கௌரி என்ற சிறுமியின் வாழ்வு மலர வேண்டும் என்று விரும்புகிறேன். மோகினிக்கு வளர்ப்புத் தாய் இருந்தாள். அது மட்டுமல்ல. மோகினியின் பண்பை வளர்க்கத் தரித்திரச் சூழ்நிலை இருந்தது. ஆனால். கௌரிக்குத் தாயின் துணையுமில்லை, அவளைத் தவறான வழியில் வளர்த்து அழிக்கத் திரண்ட சொத்தும், பண்பில்லாத பந்துக்களும் வேலையாட்களும் இருக்கின்றனர்.” என்று சொல்லி விட்டு மோகினியைப் பார்த்தார். சாமியார் தன்னையும் கௌரியையும் ஒப்பிட்டுப் பேசியது மோகினியின் இதயத்தைத் தொட்டது.

”சாமி, நாள் கோயம்புத்தூர் வருகிறேன். ஆனால் அங்கு வேலையாக இருக்கும் வரையில், எனக்குச் சம்பளம் தரக்கூடாது. இரண்டாவது, சங்கரன் குட்டியும் அந்த வீட்டில் இருக்க வேண்டும். அவனை எங்கும் தனியே விட முடியாது” என்றாள்.

சாமி சிறிது யோசித்தார். பிறகு, “சரி. உன் இஷ்டம், மோகினி,” என்றார்.

எர்ணாகுளம் வந்ததும் ராஜுவின் கார் எர்ணாகுளம் ஸ்டேஷன் வெளிப்புறம் காத்திருத்தது. அதில் சாமான்களை ஏற்றினாள் மோகினி. சங்கரன் குட்டி, அவ்வளவு பெரிய காரில் சவாரி செய்யப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் குழந்தை போல் குதித்தான், “மோகினி, இந்தக் காரிலேயா போகப் போகிறோம்? கோயம்புத்தூருக்கா போகப் போகிறோம்? அங்கே பெரிய ‘பயாஸ்கோப்’ இருக்காமே? என்னை பயாஸ்கோப்புக்குக் கூட்டிட்டுப் போவியா மோகினி?” என்று கேட்டான்.

ராஜு ஆஜாபானுவாக வளர்ந்து இருக்கும் குட்டியைப் பார்த்தான். பிறகு அவனை முன் சீட்டில் உட்காரச் சொல்லித் தானும் அமர்ந்து கொண்டான். காரின் பின் சீட்டில் மோகினியும் சாமியாரும் அமர்ந்து கொண்டனர்.

மாலை ஆறு மணிக்கே எல்லோரும் கோயம்புத்தூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

மோகினி மறுபடியும் அவள் உள்ளத்தை மாற்றிய அந்தப் பயங்கர வீட்டில் நுழைந்தாள். அவளுக்கு அந்த ஹாலில் நுழையும் போதே சுருக்கென்று பயம் பிடித்துக் கொண்டது. தோட்டத்திலிருந்து குழந்தை கௌரி, வயல்வெளியில் மேய்ந்து விட்டுத் திரும்பும் தாய்ப் பசுவைப் பார்த்ததும் கன்று ஓடிவருவது போல் ஓடி வந்தாள்.

அப்படியே மோகினியை அணைத்துக் கொண்டாள். “இனிமேல் என்னை ஏமாத்திட்டு ஊருக்குப் போக மாட்டீங்களே?” என்று சொல்லிக் கண்ணீரோடு நின்றாள்.

மோகினி, “இனிமேல் நீயே போன்னு சொல்கிற வரையிலும் நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்,” என்று சொன்னாள்.

சங்கரன்குட்டி அவ்வளவு பெரிய வீட்டையும் அங்குள்ள விளக்குகளையும் பார்த்துத் திகைப்படைந்தான்.

ராஜு சங்கரன்குட்டியிடம் பட்சமாக நடந்து கொண்டான். சங்கரன் குட்டியிடம் உள்ள கோளாறு என்ன வென்றால், தன்னிடம் யார் கோபிக்காமல் பட்சமாக நடக்கிறார்களோ, அவர்களை அர்த்தமில்லாத கேள்விகளைக் கேட்டுத் துளைத்து விடுவான்.

அதேபோல் ராஜுவைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டபடி இருந்தான், ராஜு அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

வீட்டின் நிர்வாகப் பொறுப்பு களெல்லாம் மோகினியிடம் இருந்தது. என்றாலும் மோகினி அங்கு ஒரு வேலைக்காரி போலலே இருந்து வந்தாள். சம்பளம் வாங்காத வேலைக்காரியாக இருந்தாள். ஆடை அலங்காரம் எதிலுமே அவளுக்குப் பிரியம் இல்லை. ஓர் ஆசிரமத்துத் துறவியைப் போல் இருந்தாள்.

அதை ராஜு கவனியாமல் இல்லை. ஒவ்வொரு இரவும் கௌரி, “நான் உங்களோடு படுத்துக் கொள்கிறேன் டீச்சர்” என்றால் மோகினி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள்.

“கௌரி, அப்பாவோடு மாடி அறையில் படுத்துக் கொள்ள வேண்டும். நீ அப்பாவிடம் பிரியமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவாள்.

மோகினி ராஜுவின் எதிரே உணவருந்தும் போது கூட வருவதில்லை. ராஜு மாடியில் இருக்கும்போது மாடிப் பக்கம் கூடப் போக மாட்டாள்.

வெகு சீக்கிரம் கௌரிக்குத் தன்னை பிரிந்திருக்கும் பழக்கத்தை விட்டு ஏற்படுத்திவிட்டு, அந்த வீட்டை விட்டு நகரத் திட்டமிட்டாள். கௌரிக்கு மோகினியின் நடத்தையில் இருந்த மாறுதலின் காரணம் புரியவில்லை.

”ஏன் டீச்சர் மாறிவிட்டீங்க? முந்தி மாதிரி இல்லையே நீங்க?” என்று கௌரி கேட்டாள்.

“கௌரி, நீ என்னை அம்மா மாதிரி நினைக்கலாம். ஆனால் நீ பணக்கார வீட்டுப் பெண். நான் ஒரு வேலைக்காரி. இதை மறந்து நாம் இரண்டு பேரும் கனவு காணக்கூடாது” என்று பளிச் சென்று சொன்னாள்.

இதைக் கேட்டுக்கொண்டே வந்த ராஜு அப்படியே நின்றான்.

ராஜுவைப் பார்த்ததும் மோகினிக்குச் சுருக்கென்றது. ஹாலிலிருந்து தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

சாமியார் அந்த வீட்டிலேயே இருப்பதுபோல் இருந்தாலும் அவர் அடிக்கடி வெளியூர்கள் சென்று திரும்பியபடி இருந்தார்.

ஒரு வெள்ளிக்கிழமை மோகினி குளித்துவிட்டு அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டாள். கௌரியும் சங்கரன் குட்டியும் சினிமாவுக்குப் போயிருந்தனர், கோயம்புத்தூர் வந்ததிலிருந்து சங்கரன்குட்டி ராஜுவோடு நெருங்கிப் பழகி வந்தான்.

ஒரு வாரத்தில் இரண்டு மூன்று முறை குட்டி, ராஜுவின் காசில் சினிமாவுக்குச் சென்றுவிடுவான்.

வீட்டில் வேலைக்காரர்களும் ராஜுவும் மட்டுமே இருந்தனர். மோகினி கோவிலுக்குச் சென்று திரும்புகையில் நடு வழியில் ராஜு வந்து கொண்டிருந்தான். காரில் டிரைவர் இல்லை. ராஜுவே ஓட்டி வந்தான்.

ராஜு மோகினியைப் பார்த்ததும் காரை நிறுத்தினான். “மோகினி, வீட்டுக்குத்தானே போறே? காரிலேயே போய்விடலாம்.” என்றான்.

மோகினி, “இல்லை, நான் நடந்தே வீட்டுக்குப் போறேன்,” என்று சொல்லி ராஜுவின் பதிலுக்குக் காத்திராமல் நடக்க ஆரம்பித்தாள்.

ராஜுவுக்குக் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. ஒன்றும் சொல்லாமல் காரிலே ஏறிக்கொண்டு வீடு சென்றான்.

15 நிமிடங்களில் மோகினி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் ராஜு ஒட்டி வந்த கார், ஷெட்டில் விடப்படாமல் நின்று கொண்டிருந்தது. மோகினி உள்ளே சென்றாள். சமையல் காரனிடம், “எஜமான் எங்கே?” என்று கேட்டாள். “மாடியில் இருக்காங்கம்மா,” என்றான்.

“இந்தப் பிரசாதத்தை அவரிடம் கொடு,” என்று குங்குமப் பொட்டலத்தைக் கொடுத்தனுப்பினாள்.

சமையல்காரன் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் கொடுத்தான்.

மோகினி வழியில் சந்தித்தபோது அவனிடம் அந்தக் குங்குமப் பிரசாதத்தைக் கொடுத்திருக்கலாம்.அதைச் செய்யாமல் வீடு வந்தபின் சமையல்காரனிடம் கொடுத்தனுப்பினாள். ராஜு அவளோடு தனிமையில் பேசுவதை அவள் விரும்பவில்லை என்பதைக் கண்ணியமான முறையில் தெரிவிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

அறையில் மாட்டியிருந்த விஜயாவின் படத்தை ஒரு முறை பார்த்தான். அவன் கண்களில் நீர் நிறைந்தது.

அன்றிலிருந்து ராஜு வீட்டிலே அதிகமாகத் தங்குவதில்லை. சங்கரன் குட்டியோடு காரில் பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தான்.

துப்பாக்கியோடு யானைமலைக் காடுகளுக்கு வேட்டையாடச் சென்று விடுவான்.

சங்கரன்குட்டி மற்ற விஷயங்களில் சிதறிய கவனத்தோடு இருந்தாலும் துப்பாக்கி சுடுவதில் நல்ல கவனத்தோடு கற்றுக்கொண்டான்.

சிறிதுகூடக் கை நடுக்கமில்லாது குறி தவறாமல் சுடக் கற்றுக் கொண்டான்.

அவனுக்குத் துப்பாக்கிப் பயிற்சியில் அலாதியான அக்கறை ஏற்பட்டது.

துப்பாக்கிகளுக்கு எண்ணெய் போட்டுச் சுத்தம் செய்வதே பொழுது போக்காக இருந்தது.

சாமியாருக்கு இது விஷயம் தெரிந்ததும் ராஜுவைக் கண்டித்தார்.

“சங்கரன்குட்டி சித்தம் தெளிவு இல்லாதவன். ராஜு, அவனுக்கு நீ இந்த மாதிரி ஆதான ஆயுதங்களில் பயிற்சி கொடுப்பது சரியில்லை,” என்று சொன்னார்.

ராஜு அதைப் பெரிதாகப் பாராட்டவில்லை. அவன் மனம் இருந்த நிலையில் சங்கரன்குட்டியின் தோழமை கூட அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

வேட்டையிலேயே அவன் பொழுது சென்றது. வீட்டு விஷயங்களை மோகினியின் பொறுப்பில் விட்டான்.

மில் கடைகள், எஸ்டேட்டுகள் தாமாக இயங்கி அவைகளை நிர்வாகம் செய்த மானேஜர்களுக்குச் சொந்த லாபத்தைக் கொடுத்தன.

ராஜுவிடம் குழந்தைச்சாமியார் இது விஷயமாகப் பேசினார்.

ராஜு, “என்ன சித்தப்பா, பணத்தைப் பற்றி, பிஸினஸைப் பற்றிப் பேசாதவங்க பேசறீங்களே?” என்றான்.

”ஆமாம்பா. நீ என் அண்ணன் போலப் பேராசைக்காரனுமில்லை; என்னைப் போலத் தீர்மானமான துறவியுமாகளில்லை. இரண்டும் கெட்டானாக உள் வாழ்வு பாழாகுதே. செல்வம் சேர்ந்தா அத்தோட பொறுப் பும் இருக்கணும். பொறுப்பில்லாத இடத்துச் செல்வம் பேராபத்தை விளைவிக்கும்,” என்றார்.

ராஜு, “சித்தப்பா, இவ்வளவு சொத்து இருந்தும் நான் நரக வேதனைப் படறேன். அதை மறக்கத்தான் நான் வேட்டைக்குப் போறேன்.” என்று பதில் சொன்னான்.

“எருமைகளையும் மான்களையும் கொல்வது உன் வேதனையைக் குறைக்கும் என்று நினைக்கிறாயா? அது இன்னும் உன் வேதனைகளை அதிகப்படுத்தும்,” என்று சொன்னார்.

அப்போது ‘டுமீல்’ என்று ஒரு வெடிச் சத்தம் கேட்டது. சங்கரன் குட்டி பிஸ்டலை வெடித்துவிட்டுச் சிரித்தபடி வந்தான், “ராஜு, அவனைக் கண்டித்து வை. அறிவில்லாதவன் கையில் ஆயுதத்தைக் கொடுத்துவிட்டாய்,” என்று சாமியார் எச்சரித்தார்.

அத்தியாயம்-43

விளையாட்டுப்போல் சங்கரன்குட்டி துப்பாக்கியால் சுடுவது தவறு, ஆபத்து என்பதை, குழந்தைச்சாமி குட்டிக்கு விளக்கிப் பார்த்தார்; முடியவில்லை. ராஜுவின் ஆதரவு குட்டிக்கு ஒரு விதமமதையைக் கொடுத்து அவன் பயத்தை போக்கிவிட்டது என்பதைச் சாமியார் ராஜுவிடம் விளக்கினார். “ராஜு, டிரைவர் இல்லாது ஓடும் கார் மாதிரி இந்தக் குட்டி. துப்பாக்கிப் பழக்கத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்ததே தவறு. இனிமேல் அவனை வேட்டைக்கு அழைத்துச் செல்லாதே.” என்று சொன்னார்.

ராஜு அன்றிலிருந்து வேட்டைக்குச் செல்வதை நிறுத்திச் கொண்டான். வீட்டிலேயே இருந்தபடி பொழுது போக்கினான். மறுபடியும் பழைய ஆசைகள் அவனை ஆளத் தொடங்கின. மோகினியைப் பார்க்கும்போது அவன் மனம் படபடப்புடன் விபரீதக் கலவையான எண்ணங்களைக் கொடுத்தது.

விஜயா இறந்து ஒரு வருஷமாகி, திதியும் கொடுத்தாகி விட்டது. சாமியாரின் ஏற்பாட்டின்படி காலில்லாப் பெண் பிச்சைக்காரிகளுக்குப் புடவையும் 100 ரூபாயும் தானம் கொடுக்கச் செய்தான் ராஜு. இந்தத் தானத்தால் ஆயிரக் கணக்கான ரூபாய்கள் கரைந்தன. மகிழ்ச்சியோடு அவர்கள் செல்லும் காட்சியை ராஜு பார்த்துக் கொண்டே இருக்கும்போது சாமியார் ராஜுவிடம், “இவ்வளவு பேர் ஆசிர்வாதம் வீண் போகாது. உன் வாழ்வில் ஒரு அமைதி ஏற்படும். பிடிப்பு ஏற்படும்,” என்றார்.

அன்று பழனியிலிருந்த அஞ்சலையை வரவழைத்து அவளை ராஜுவுக்கு அறிமுகம் செய்வித்தார். அவளுக்குக் கோயம்புத்தூரில் ஒரு சிறு வீடும் தோட்டமும் கொடுக்கும்படி சொன்னார். அஞ்சலையின் சகோதரனுக்கும் அஞ்சலைக்கும் சாமியார் ஏன் இந்தச் சலுகை காட்டுகிறார் என்பது ராஜுவுக்குப் புரியவில்லை. அவரை அவன் கேட்கவும் இல்லை.

சாமியார் இரவு சாப்பிட்டானதும் ராஜுவிடம் பேச்சுக் கொடுத்தார். “ராஜு, யாரோ பழனியிலுள்ள பிச்சைக்காரனுக்கும் அவன் சகோதரிக்கும் மாதா மாதம் பணம் அனுப்பச் சொன்னேன். அப்போதும் நீ ஏன், என்ன என்று கேட்கவில்லை. இப்போது வீடும் தோட்டமும் கொடுக்கச் சொல்கிறேன். அதற்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லையே?” என்று கேட்டு விட்டு ராஜுவின் முகத்தைப் பார்த்தார்.

ராஜு தலை கவிழ்த்துப் பேசாமல் இருந்தான், பிறகு, “அப்பா உயிரோடு இருக்கும்போது இந்த சொத்தில் ஒரு பகுதியாவது உங்களைச் சேர வேண்டும் என்று விரும்பினார். நீங்கள் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஷோரனூர் மடம், ஷோரனூர் பள்ளி இரண்டுக்கும் பணம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டீர்கள். எப்போதுமே நீங்கள் மற்றவர்களுக்காகக் கேட்கிறீர்களே அல்லாமல், உங்களுக்காக ஒன்றுமே கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது கொடுக்கும் இன்பத்தையும் நான் தடை செய்யலாமா?” என்றான்.

“ஆனால் இந்தப் பிச்சைக்காரிக்கு வசதி செய்யுமாறு கேட்கும் போது நான் சுயநலத்தோடு தான் பேசுகிறேன்,” என்று சொன்னார் குழந்தைச்சாமி.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ராஜுவின் முகம் மாறியது. பிச்சைக்காரிக்கும் கொடுப்பதில் சாமியாருக்கு என்ன சுயநலம்? ஒருவேளை அவர் அந்தக் காலத்தில் இந்த ஏழையுடன் ஏதாவது தொடர்பு….

நினைக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

ராஜு மனத்தால் நினைப்பதை அவன் முகம் காட்டிவிட்டது. அவன் மனத்தில் அவள் மோகினியிடம் பழகிய விதம்தான் ஞாபகம் வந்தது. அவனும் ஒரு நாள் அவளை தொட்டான். அதுவே அவன் மனைவிக்கு இழைத்த குற்றமாக நினைத்தான். மோகினியிடம் எழுந்த ஆசை குற்றமற்றது என்று அவனும் எண்ண முடியவில்லை. மோகினியை வீட்டை விட்டு அனுப்பும் போது அவளுக்குப் பணம் கொடுப்பதால் அந்தக் குற்றத்தையும் குறைத்து விடலாம் என்ற நைப்பாசையால் துடித்தான். ஆனால் அதே மோகினி மறுபடியும் வீடு திரும்பியுள்ளாள். மோகினியை விரும்புவதை உண்மையில் அவன் ஆத்மா குற்றமாக நினைத்தால், மறுபடி மோகினியைப் பார்க்கும் போது அவனுடைய மனத்தில் ஆசை எழலாமா? அவள் தோற்றம் ஏன் இன்றும் அவன் மனத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறது?

மோகினி வந்ததிலிருந்து வீட்டில் ஒரு நாற்கோணக் காந்த வலை பிணைக்கப்பட்டு இருந்தது. அந்த வலையின் ஒரு மூலை விஜயா. அவள் மறைந்து விட்டாள். இப்போது அந்தக் காந்த சக்தி இயங்கியபடியே இருப்பதை வலை முக்கோண வலையாக இருந்தது. மோகினி, கௌரி ராஜு என்று மூன்று மூலைகளிடையே அதன் காந்த சக்தி இயங்கியபடியே இருப்பதை அவன் உணராமல் இல்லை, ஆகையால் சாமியார் சுயநலம் என்றவுடனே, ‘தனக்கும் மோகினிக்கும் இருந்த கவர்ச்சி போன்ற ஒரு கவர்ச்சி சாமியாருக்கும் அஞ்சலையிடம் இருந்திருக்கலாமோ’ என்று எண்ணத் தூண்டியது.

அவன் எண்ணியதை உடனே புரித்து கொண்டார் சாமியார். புன்முறுவலோடு ராஜுவைப் பார்த்த படி “நீ நினைப்பது போல் அல்ல ராஜு” என்று சொன்னார்.

ராஜு திடுகிட்டான். “நான் நினைத்ததை அவரிடம் சொல்லவில்லையே? அவர் எப்படி என் சிந்தனையைப் புரிந்து கொண்டிருக்க முடியும்?” என்று ஆச்சரியப் பட்டான்.

“ராஜு, நீ நல்லவன். ஆனால் அனுபவம் முதிர்ந்த, புடம் போட்ட நல்லவன் அல்ல. நீ ஒரு குற்றத்தை பற்றிச் சதா உருகுகிறாய், சர்வகாலம் நினைத்து அதனால் நீ இன்னும் பல குற்றங்கள் புரிகிறாய்,” என்று சொன்ன சாமியார், திடீரென்று பின்வரும் வாக்கியத்தைக் கூறினார்; “ராஜு, அஞ்சலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, நான் அவளைத் தலை நிமிர்ந்து பார்க்க முடியும். என் மனத்திலுள்ள குற்ற உணர்ச்சியைப் போக்குவதற்காக அவளுக்கு உதவி செய்யச் சொல்லவில்லை,” என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்ட ராஜு வுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. மோகினிக்கும் தனக்கும் உள்ள குழப்பத்தைச் சாமியார் புரிந்து கொண்டு அப்படி சொல்கிறாரோ? ‘அப்படியிருந்தால், அவர் மோகினியைக் கோயம்புத்தருக்கு அழைத்து வர வேண்டுமென்று என்னிடம் வற்புறுத்துவாரா?” என்றும் நினைத்தான்.

“நம் குடும்பம் அஞ்சலையிடம் கடன் பட்டிருக்கிறது. அந்தக் கடனை விஜயா ஒருவாறு வேதனையாலும் மரணத்தாலும் கட்டி விட்டாள்,” என்றார் சாமியார்.

“என்ன சொல்கிறீர்கள் சித்தப்பா?” என்று புரியாமல் விழித்தான் ராஜு.

“ராஜு ஒரு சொத்தைச் சீக்கிரத்தில் அடையும்போது பலருடைய சுகம் பலியாக வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஒரு யாகம். அந்த யாகத்தில் சுகம், இளமை இவற்றைப் பலியாக்க வேண்டும். அந்த வெற்றியை எப்படியாவது அடைய வேண்டும் என்னும் போது, யாகத் தீயில் தர்மம், நீதி, பச்சாதாபம், பலருடைய வாழ்வு ஆகியவற்றைப் பலியாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. திரண்ட சொத்துக்களை அடையும் அந்த யாகத்தில், உன் அப்பா விலை கொடுக்காமல் சிலருடைய வாழ்வுகளைப் பலியாக்கி விட்டார். அஞ்சலையின் கணவன் விலையில்லாமல் உயிரைக் கொடுத்தான். அஞ்சலை தன் கால்களைக் கொடுத்தாள்,” என்று சொல்லிலிட்டு நிறுத்தினார்.

“நீங்கள் அந்த யாகத்துக்கு என்ன கொடுத்தீர்கள் சித்தப்பா?” என்று கேட்டான் ராஜு.

சாமியார் சிரித்தார், “நான் என் நல்ல பெயரையும் இளமையையும் கொடுத்தேன். அதற்குப் பதிலாக, சிறையில் இருந்தபோது சித்தித்துச் சிந்தித்துப் பேரின்ப வாயிலின் திறவு கோலையும் பெற்றுக் கொண்டேன். நான் கொடுத்தது தினையளவு ராஜு, ஆனால் பெற்றுக் கொண்டது ல்மலையளவு. காலுக்குக் கால், உயிருக்கு உயிர் என்று விஜயாவும் தன் கணக்கை ஒருவாறு தீர்த்துவிட்டாள்.”

ராஜு சிந்தித்தபடி இருந்தான். சாமியார், குறைந்த வாக்கியங்களில், வெங்கடபதி நாகப்பட்டணத்தின் நடத்திய நாடகத்தை விளக்கினார். “இவற்றை யெல்லாம் நான் விஜயா உயிரோடு இருக்கும் வரையில் சொல்ல விரும்பவில்லை. உனக்கு ஒரு பக்குவம் ஏற்பட வேண்டும் என்று இருந்தேன்,” என்றார்.

ராஜு அதிர்ச்சியில் ஒன்றும் போசல்லை. இப்போதுதான் அவனுக்குத் தன் தந்தை வெங்கடபதி இறுதிக் காலத்தில் சித்தப்பாவிடம் செலுத்திய மரியாதையின் காரணம், தனிமையில் அவர் வாழ விரும்பியதன் நோக்கம் எல்லாமே புரிந்தன, “உன் அப்பாவைச் பற்றித் தவறாக நினைக்காதே ராஜு, வெங்கடபதிக்கு வெற்றி ஜுரம் ஏற்பட்டதற்குக் காரணம் தன் சந்ததிகள் செல்வத்தோடு வாழ வேண்டும் என்பதுதான். தந்தையின் செல்வம் மட்டும் மகனைச் சேருவதில்லை. அவன் கர்மாக்களும் மகனைத் தொடருகின்கின்றன. நீ காரணமறியாமல் எவ்ளவோ அனுபவித்து விட்டாய்.” என்று சொல்லிவிட்டு வெராந்தாவுக்குப் போய்விட்டார்.

அன்றிரவு ராஜுவுக்கு உறக்கமே கொள்ளவில்லை, மறுநாள் பூராவும் தன் தந்தையைப் பற்றியே நினைத்தபடி இருந்தான். சாமியாரின் விளக்கம் அவனுக்கு ஆத்திரத்தையே கொடுத்தது. தன் தந்தை செய்த தவற்றுக்கு விஜயா ஏன் அனுபவிக்க வேண்டும்? சித்தப்பா ஏன் சிறை செல்லவேண்டும்? தன் இல்லற வாழ்வு ஏன் நிறைவு பெறாமல் இருக்க வேண்டும்? எல்லாமே சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத்தான் தோன்றியது ராஜுவுக்கு.

சங்கரன்குட்டி இதை ஏதும் அறியாமல், ராஜுவிடம் வந்து, “வெளியே போய்விட்டு வரலாமா?” என்று கேட்டான்.

ராஜுவுக்கு அவன் மீது கோபம் வந்தது. “நீ போய்ப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு உன் அறையில் தூங்கு.” என்றான்.

குட்டிக்கு ராஜுவின் திடீர்க்கோபம் அதிர்ச்சியைக் கொடுத்தது. பேசாமல் பலகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு அறையில் போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் வரவில்லை. சாமியார் ஒரு நண்பர் வீட்டில் ஏதோ காலட்சேபம் கேட்கப் போய்விட்டார். வானம் இருண்டு, வரப்போகும் மழையின் அறிகுறிக்கான இடியும் குளிர்ந்த காற்றும் வீசியது.

இந்த அறிகுறிகளைப் பார்த்ததுமே மோகினிக்கு விஜயா இறந்த தினம் தான் நினைவுக்கு வந்தது. குழந்தை கௌரியைத் தந்தையுடன் மாடிக்கு அனுப்பிவிட்டு, தன் அறையில் வந்து படுத்துக் கொண்டாள். படுத்தவுடன் துங்கிவிட்டாள். ஆனால் மாடியில் படுத்திருந்த ராஜுவுக்குத் தூக்கம் வரவில்லை. சங்கரன் குட்டிக்கோ, இடியும் மழையும் சேர்ந்து வரவே பயம் பிடித்துக் கொண்டது. அவனது தெளிவில்லாத சித்தத்தில், பயத்தோடு ஒரு விதத் துணிவும் எழுந்தது. கடந்த கால நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான் சங்கரன் குட்டி.

ஒரு நாள் வீட்டருகில் இருந்த குளத்தில் அவன் மோகினியிடம் சென்று வம்பு செய்த போது மோகினி அவனை அடித்து விரட்டியது நினைவுக்கு வந்தது. அதே சமயத்தில் அவன் தேகத்தில் ரத்தம் துடிப்போடு செல்வதை உணர்ந்தான். திரும்பத் திரும்ப சங்கரன்குட்டி மோகினியையே நினைத்து நினைத்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் உதடுகள் துடித்து, ரத்த நாளங்கள் புடைத்து, ஜுரம் வந்தவன் போல் ஆகிவிட்டான்.

வெளியே பேரிரைச்சலோடு மழை பெய்து கொண்டிருந்தது. இடி இடிப்பதற்கு முன் மின்னும்போதெல்லாம். குட்டி எழுந்து உட்காருவான். அவன் உடல் அவன் மனத்துக்குக் கட்டுப் படாமல் சொந்தமாக ஏதேதோ செய்யத் துடித்தது. ‘சமையலறைக்குச் சென்று தீப்பெட்டியை எடுத்து வந்து வீட்டையே கொளுத்திவிட்டால், அது எவ்வளவு பெரிய வெளிச்சமாக இருக்கும்!’ என்று திடீரென ஓர் ஆசை எழுந்தது. அடுத்த வினாடி அவன் மனத்தில் மோகினியின் நினைவு எழுந்தது. வீட்டுக்குத் தீவைக்க வேண்டும் என்ற ஆசை, மோகினியின் மீது ஆசை இப்படி மாறி மாழி ஆசைகள் சங்கரன்குட்டியைத் தாக்கின.

பளீர் என்று ஒரு மின்னல் ஒளி வீசி மறைந்தது. அடுந்த வினாடி தலை மீது பாறை விழுவது போன்ற பேரிரைச்சல் கேட்டது. அந்தப் பெரும் சத்தத்தில் வீட்டில் எல்லோருமே விழித்துக் கொண்டனர். ராஜு பயந்து போய்ப் படுத்திருத்த குழந்தையை அணைத்துக் கொண்டான்.

சங்கரன்குட்டி மெல்லப் படிக்கட்டுகளில் இறங்கிச் சமையலறைக்குச் சென்றான். அங்குள்ள அலமாரியில் வரிசையாகப் பாட்டில்களும் டப்பாக்களும் இருந்தன. தீப்பெட்டியைக் காணோம். குட்டியின் கைகள் தினவு எடுத்தன. எதையாவது கொளுத்த வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

தீப்பெட்டியைக் காணாமல் ஏமாற்றமடைந்து வெளியே வந்தான். ஹாலுக்கு வந்ததும் மோகினியின் அறைதான் அவன் கண்களில் பட்டது. மெல்ல நடந்து மோகினியின் அறையை நோக்கிச் சென்றான். தப் தப் என்று அவன் காதுகளில் ஒரு இரைச்சல் கேட்டது. முகத்தில் வியர்வையுடன் குட்டி மோகினியின் அறைக்குள் நுழைந்தான். மோகிவி ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கியபடி படுத்திருந்தாள். வெண்மையான தந்தம் போன்றிருந்தன அந்தக் கால்கள், ஒரு கரம் தலையணையில் தலையின் பின்புறம் கிடந்தது. குட்டி கண்கொட்டாமல் அவரையே பார்த்தபடி நின்றான், அவன் மூச்சு வேகமாக வந்து சென்றது. மெல்லக் குனிந்தான்.

தூங்கும் மோகினி, திடீரென்று ஒரு ஸ்பரிசம் பட்டதும் விழித்தாள். குட்டியைப் பார்த்ததும் அலறினாள். அவனைத் தள்ள முயன்றாள்.

குட்டி பைத்தியச் சிரிப்புச் சிரித்தபடி, “மோகினி! இன்னிக்கு உன்னை விடமாட்டேன்!” என்றான். அவன் முகத்தில் அறைந்தாள் மோகினி. முரட்டுப் பலத்தோடு அவன் மோகினியைப் பிடித்தான், மோகினி உருண்டு தப்பப் பார்த்தாள். குட்டியும் அவளோடு சேர்ந்து உருண்டான். இனி சமாளிக்க முடியாது என்ற நிலையிலே, “அம்மா! அம்மா!” என்று அலறினாள், குட்டி, ஒரு குரங்கு போல் அவளுடைய ஆடைகளைக் கிழித்ததும், மோகினி கலவரத்தின் உச்ச நிலையை அடைந்தாள். “ராஜு! ராஜு!” என்று அலறினாள். ராஜு வின் பெயரைச் சொல்லிக் கூவியது இதுதான் முதல் தடவை.

“ராஜுவைக் கூப்பிட்டால் உன்னை விட்டுடுவேன்னு நினைக்கிறியா?” என்று சொல்லி மோகினியை இறுக்கிப் பிடித்தான் குட்டி.

அடுத்த வினடி, குட்டியின் முதுகை ஒரு கை வந்து பிடித்தது. குட்டியை இழுத்துத் தள்ளினான் ராஜு.

குட்டி வெறியோடு ராஜுவின் மீது பாய்ந்தான். ராஜு ஒரு வேங்கை போல் அவன் மீது பாய்ந்து அவனை ஆத்திரம் தீர அடித்தான். இரண்டு பலம் நிறைந்த ஆடவர்கள் வெறியோடு போரிடுவதைப் பார்த்தபடி திகைத்து நின்றாள் மோகினி. ராஜுவின் பலத்தை அன்றுதான் அவள் கண்கூடாகப் பார்த்தாள். ராஜுவின் கோபத்தையும் அன்றுதான் பார்த்தாள். சங்கரன்குட்டியை ராஜு அப்படியே ஒரு மூட்டையைத் தூக்குவது போல் தூக்கி வெளியே எறிந்தான்.

எறிபட்ட குட்டி மாடியை நோக்கி ஓடினான். ராஜு மோகினியிடம் திரும்பினான். ஆடைகள் கிழிக்கப்பட்டு, உடல் தெரிய நின்றாள் அவள்.

“குட்டி ஒரு பைத்தியம், அவன் தன் நிலை இழந்ததில் ஆச்சரியமில்லை. நான் மட்டும் என்ன? நானும் ஒரு நாள் உன்னிடம் என் புத்தியை இழந்து உனக்குத் தீங்கிழைக்க நினைத்தவன் தானே?” என்று சொல்லிவிட்டு மாடியை நோக்கித் திரும்பினான் ராஜு.

மாடிப் படிக்கட்டில் குட்டி துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தான்!

“ராஜு! மோகினியின் முன்னாலே என்னை அடித்துவிட்டாய். உன்னைக் சும்மா விடமாட்டேன். நான் சுட்டு விடப் போறேன்!” என்று சொல்லி இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்.

ராஜு அப்படியே ஸ்தம்பித்து நின்றான். மோகினி, “குட்டி!” என்று அலறினாள்.

குட்டி, “மோகினி! பயப்படாதோ உன்னைச் சுடமாட்டேன்! இந்த ராஜுவைத்தான் சுடப் போறேன்!” என்றான். அவன் உதடுகள் துடித்தன. ஆனால் அவன் கையில் துப்பாக்கி சிறிதும் ஆடாமல் ராஜுவைக் குறி பார்த்தபடி இருந்தது.

அத்தியாயம்-44

கையிலே துப்பாக்கியோடு ராஜுவை விறைத்துப் பார்த்தபடி நின்ற சங்கரன் குட்டியைப் பார்த்த மோகினிக்கு என்றுமே ஏற்படாத ஒரு திகில் ஏற்பட்டது.

வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவள் துன்பத்தை அடைத்திருக்கிறாள். வீண் பழிக்குப் பலியாகி இருக்கிறாள். முரட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி, மானத்தை இழக்க வேண்டிய பயங்கர முனைக்குச் சென்றிருக்கிறாள். அப்போதெல்லாம். பயம். என்ற உணர்ச்சி எழுந்திருக்கிறது. ஆனால் இன்றுதான் அவள் முழுப் பயத்தை உணர்ந்தாள்.

நா வறண்டு, முகம் வெளுத்து, உடல் வியர்த்து நின்றாள். பேச்சு வரவில்லை, வார்த்தைகளை உச்சரிக்க முயன்றாள். வார்த்தைகள் மனத்தில் பிறந்து, உதடுகள் வரை வந்து உருப்பெறாமலே குறை கர்ப்பக் குழந்தைகள் போல் மடிந்தன. சிரமப்பட்டு, “குட்டி! துப்பாக்கியைக் கீழே போடு,” என்று கட்டளையிட்டாள்.

குட்டி சிரித்தான். “மோகினி, இன்னிக்குக் குட்டி உன் பேச்சைக் கேட்க மாட்டான். ராஜுவைக் கொல்லாமல் விடமாட்டான்.” என்று சொல்லிவிட்டு ஓர் அடி எடுத்து வைத்துப் படிக்கட்டில் இறங்கினான்.

ராஜு எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் நின்றான். ஆனால் அவன் கண்கள் மட்டும் குட்டியின் கைகளைப் பார்த்தபடி இருந்தன. எப்போது குட்டியின் விரல்கள் துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தும் என்று காத்திருப்பவன் போல் நின்றான். பார்வையைத் திருப்பாமல் “மோகினி! நீ நகர்ந்து கொள்,” என்று ராஜு பதட்டத்தோடு சொன்னான், மோகினிக்குக் குண்டு வீச்சினால் ஆபத்து வரக்கூடாது என்ற அக்கறை தொனிக்க.

மோகினி ராஜுவைப் பார்த்தாள். அவ்வளவு அழகான, வலிமையான உடலை நோக்கித் துப்பாக்கி இருப்பதைப் பார்த்தாள். அவன் உயிரே அவள் கண்களுக்கு வந்து நின்றது. அந்தக் கண்கள் துப்பாக்கியில் லயித்தன. வெளியே இடி இடிப்பதுகூட மோகினியின் காதில் விழவில்லை. வெளிப்புறத்திலிருந்து ஹால் கதவைத் திறந்து கொண்டு குழந்தைச்சாமி நுழைவதையும் கவனிக்கவில்லை. அந்த ஹாலில் தொங்கிய மின்சார தீபங்கள் மழைய காற்றில் ஒளியையும் நிழலையும் மாறி மாறி ஹால் முழுவதும் வீசுவதையும் கவனிக்கவில்லை.

திடீரென்று ஒரு மின்னல் மின்னியது, இதுதான் மோகினியின் வாழ்வில் கடைசி மின்னலோ என்று அச்சமுறும் படியான மின்னல் அதைத் தொடர்ந்து வந்த இடி சப்தம், இரண்டு ரயில்கள் மோதியது போன்ற ஓசையைக் கொடுத்தது. மின்னலும், மழையும் பெரும் பரிமாணத்துக்கு நிகழும்போதெல்லாம் மோகினியின் வாழ்வுப் பாதையில் ஒரு மைல் கல் நாட்டப்படுவது வழக்கம். “இன்று மழை மின்னல் என் வாழ்வில் என்ன திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறதோ!” என்று நினைத்தும் நினைகாமலும் இருந்தாள் மோகினி.

குழந்தைச்சாமி ஒரு நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். எந்தவித சப்தம் செய்தாலும் அது வெறி பிடித்த சங்கரன் குட்டியைச் சுடச் செய்யும், அது நிகழக் கூடாது என்று கட்டுண்ட நாகம் போல் நின்றார்.

கை நடுங்காமல் துப்பாக்கியை நீட்டி, சங்கரன்குட்டி ராஜுவின் மார்புக்குக் குறி பார்த்தான், அந்த நிமிஷத்தில் தான் எவ்வளவு ஆழமாக ராஜுவை நேசிக்கிறோம் என்பதை உணர்ந்தாள் மோகினி. அவள் பார்வை சங்கரன் குட்டியின் கையில் உள்ள ஆள்காட்டி விரலிலேயே இருந்தது. அந்த விரல்தானே துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தப் போகும் விரல்!

அந்த விரல் மடங்கி டிரிக்கரை அழுத்தப் போவதைப் பார்த்தாள். பார்த்த வினாடியே பாய்ந்தாள். பாய்வதும் குண்டு வெடிப்பதம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. அடுத்த வினாடி தரையில் சாய்ந்தாள்.

என்ன நிகழ்ந்தது என்று குட்டிக்குப் புரியவில்லை, ராஜுவுக்கும் புரியவில்லை. ஆனால் குழந்தைச்சாமிக்குப் புரிந்து விட்டது. தான் வளர்த்த பெண் தன் அண்ணன் மகனைக் காப்பாற்றிவிட்டு, குண்டைத் தன் மீது வாங்கிக் கொண்டாள் என்பதை உணர்ந்தார். தான் முற்றும் துறந்த சன்னியாசி என்பதை மறந்தார். மோகினியைத் தாயே என்று அழைத்து அழைத்துப் பழக்கப் பட்ட குழந்தைச்சாமியின் உதடுகள், ”என் குழந்தே! என் மகளே!” என்று அலறியது. ஓடி மோகினியைத் தூக்கினார்.

இந்த இடைவெளியில் ராஜு திகைத்து நின்ற குட்டியின் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கிவிட்டான்.

குட்டியை அழைத்துச் சென்று அருகில் உள்ள அறையில் தள்ளிப்பூட்டினான். குழந்தைச்சாமி மோகினி கீழே விழுந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

ராஜு ஓடிவந்து அவளை ஒரு குழந்தையைப் போல் தன் பலம் நிறைந்த கைகளால் தூக்கினான்.

“சித்தப்பா, உடனே போய் டாக்டரை அழைச்சிட்டு வாங்க சித்தப்பா,” என்று பதற்றத்துடன் சொன்னான்.

மோகினியின் கண்கள் சுழன்றன. ஆனால் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் நிறைவும் இருந்தது. ராஜு அவளை தூக்கிக் கொண்டு மாடியை நோக்கிச் சென்றான்.

மோகினியின் பார்வை அவன் முகத்தின் மீதே லயித்து நின்றது. அதில் ஓர் அன்பும் ஆசையும் இருந்தன. மோகினி ஏதோ வெற்றியடைத்தவள் போல் திருப்தியுடன் காணப்பட்டாள்.

விஜயா படுத்திருந்த அதே கட்டிலில் மோகினியைப் படுக்க வைத்தான் ராஜு, அவன் கண்களில் மருட்சி இருந்தது. அவன் உதடுகள் பேச மறுத்தன.

மோகினி ராஜுவின் கையைப் பிடித்தாள், குண்டு அவள் தோளில் பாய்ந்திருந்தது. ராஜு தன் வேஷ்டியைக் கிழித்து, கசியும் ரத்தத்தைத் துடைத்தான். “எனக்கு எந்தச் சிகிச்சையும் பலனளிக்காது. தயவு செய்து காலத்தை வினாக்காமல் நான் சொல்வதைக் கேளுங்கள்.” என்று சொல்வதற்குள் மூச்சு முட்டியது. பேச்சை நிறுத்தினாள். ராஜுவை ஒருமுறை பார்த்தாள். “இதுநாள் வரை நான் உங்களிடமிருந்து ஒரு உண்மையை மறைத்து விட்டேன். அதைச் சொல்லாமல் இறக்க விரும்பவில்லை. உங்கள் மனைவி விஜயா சாகும் போது நான் உங்களை…உங்களை…நேசிப்பதை உணர்ந்து கொண்டாள்.” என்று கூறி விட்டு ராஜுவைப் பார்த்தாள்.

“அப்படியானால், விஜயா நான் அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டேன் என்ற எண்ணத்தோடு தான் இறந்தாளா?” என்று கேட்டான் ராஜு.

“இல்லை. விஜயா மகிழ்ச்சியோடு தான் இறந்தாள். நான் உங்களை விரும்புவதை மட்டும்தான் கூறினேன். இந்த விட்டில் நுழைந்த நாள் முதல் நாள் உங்களை நேசிப்பதைத்தான் கூறினேன். உங்கள் மீது விஜயாவுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படும்படி நான் ஒன்றும் பேசவில்லை. நீங்கள்.. நீங்கள்… என்னை மணந்து கொண்டு வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள், விஜயா உங்களுக்கு அளிக்காத இன்பத்தை யெல்லாம் நான் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கௌரிக்கு என்னைவிடச் சிறந்த அன்னை கிடைக்க மாட்டாள் என்ற பூர்ண நம்பிக்கையோடு இறந்தார்கள்.”

“அதை ஏன் அப்போதே என்னிடம் சொல்லவில்லை மோகினி?”

“சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். பணத்துக்காக, சொத்துக்காகச் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள். இனிமேல் நான் வாழப்போவதில்லை, மரணத்தின் பிடியில் இருக்கும் நான் சொல்வதை – நான் கூறுவதை இப்போது நம்புவீர்களல்லவா? உங்கள் மீது பாய வேண்டிய குண்டை என உடலில் வாங்கிக் கொண்ட நிலையில் தான், எனக்குத் தகுதி ஏற்பட்டது – உங்களிடம் உண்மையைக் கூறத் தகுதி ஏற்பட்டது. நான் என்றுமே உங்கள் பணத்தை விரும்பவில்லை. உங்களையும் குழத்தை கௌரியையும் தான் விரும்பினேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.” என்று சொல்வதற்குள் அவள் கண் மூடிவிட்டது. வாய் போசுதை நிறுத்திக் கொண்டது.

ராஜு, “மோகினி! மோகினி!” என்றழைத்துப் பார்த்தான்.

பதில் இல்ல. மோகினியின் உதடுகள் மட்டும் இன்னும் ஏதோ கூறத் துடிக்கிறாள் என்பதைத் தெளிவு படுத்தின. ஆனால் சப்தம் வரவில்லை.

டாக்டரும் குழந்தைச்சாமியும் அப்போது உள்ளே வந்தார்கள். டாக்டர் பரிசோதித்தார்.

ராஜு, “என்ன டாக்டர்? எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

டாக்டர், “என்ன செய்வது ராஜு? குண்டு சுவாசப் பையின் ஓரத்தைச் சேதப்படுத்தியிருக்கிறது.பிழைப்பது துர்லபம், எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார்.

ராஜு அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்து விட்டான்.

குழந்தைச்சாமி, “எனக்கு நம்பிக்கையிருக்கிறது டாக்டர். ஏதாவது செய்து எப்படியாவது என் குழந்தையைப் பிழைக்க வையுங்கள் டாக்டர்! இது ஆண்டவன் தோட்டத்தில் பூத்த அரு மலர்! இது இன்னும் மலரவில்லை. மணம் வீசவில்லை; அதற்குள் ஆண்டவன் இம்மலரைப் பறிக்கத் துணிய மாட்டான்,” என்றார்.

“சாமி! நம்பிக்கையினால் மட்டும் உயிர் கொடுக்க முடியாது. உடலில் பாய்ந்த குண்டை எடுத்து விடுகிறேன். தக்க சிகிச்சை செய்கிறேன். ஆனால் அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வைத்தியக் கலைக்கே அந்த நம்பிக்கை இருக்க முடியாது,” என்று சொல்லிவிட்டுச் சிகிச்சை செய்யத் தொடங்கினார்.

அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கௌரி விழித்துக் கொண்டு ஓடிவந்தாள். மோகினி படுத்திருப்பதையும், அருகில் குழந்தைச்சாமியும் ராஜுவும் இருப்பதையும் பார்த்தாள், தன் தாய் இறந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. “அப்பா! டீச்சருக்கு என்னப்பா? டீச்சரும் செத்துப் போயிடுவாங்களா?” என்று கேட்டாள். படுக்கையை நெருங்கி ஓடிவந்து, “டீச்சர்! டீச்சர்! நீங்களும் அம்மா மாதிரி போயிடாதிங்க டீச்சர்!” என்று அழத் தொடங்கினாள்.

குழந்தைச்சாமி குழந்தை கௌரியை எடுத்துக்கொண்டு வெளிவராந்தாவுக்கு வந்தார். ராஜு அப்படியே மோகினியைப் பார்த்தபடி இருந்தான்.

டாக்டர் தன் வேலையைக் கவனித்த படி இருந்தார். ஆனால் சிறிது சிறிதாக மோகினியின் நாடி விழத் தொடங்தியது. கால்கள் ஜில்லென்று ஆகி விட்டன. ராஜுவால் அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை.

டாக்டர், “மிஸ்டர் ராஜு! நிச்சயமான ஒரு விஷயத்தை மாற்ற முடியாது. இந்தச் சிகிச்சையினாலே சில வினாடிகளிலே போகிற உயிர் சில மணி நேரம் கழித்துப் போகும். அவ்வளவு தான்”, என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

கௌரி, “டாக்டர் சொல்றதை நம்பாதீங்கப்பா, டீச்சர் எனக்கொரு பாட்டுச் சொல்லிக் கொடுத்தாங்க. அது பாரதியார் பாடின பராசக்தி பாட்டு, அதைப் பாடினா, கேட்டதெல்லாம் கிடைக்கும்ணு சொன்னாங்க. டீச்சர் ஷோரனூர் போனப்பறம் நான் அந்தப் பாட்டைத்தான் பாடினேன். உடனே டீச்சர் வந்துட்டாங்க. அதே பாட்டை நான் மறுபடியும் பாடினா, டீச்சர் பிழைச்சிடுவாங்கப்பா,” என்று கூறிவிட்டு, மோகினிபடுத்திருக்கும் கட்டிலருகில் போய்ப் பாட ஆரம்பித்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் ராஜு அறைக்குள் வந்து பார்த்தான். மோகினியின் கால் விரல்கள் ஜில்லென்று இருந்தன. உதடுகள் சோர்த்து இறுதி சுவாஸம் வரத் தொடங்கியது. அதைச் சாமியாரும் கவனித்தார். அவர் முகத்திலும் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

ராஜுவுக்கு ஆத்திரம் வந்தது. “சித்தப்பா! இதற்கென்ன சித்தப்பா சொல்றீங்க? விஜயா என்னை உயிருக்கு மேலாக நேசித்தாள். அவள் பல வருஷம் நொண்டியாயிருந்து இறக்க வேண்டியிருந்தது. அதுக்கு என்னமோ எங்கப்பாவின் பாபம் என்று கதை சொன்னீங்க. விஜயாவாவது என் பணத்திலே – செல்வத்திலே பங்கெடுத்துக் கொண்டாள்! மோகினி என்ன தவறு செய்தாள் சித்தப்பா? என்னை விரும்பினாள் என்னும் காரணத்துக்காக அவளும். சாகணுமா? இதிலே அர்த்தமே இல்லை சித்தப்பா, நியாயம், தர்மம், பக்தி, கடவுள். இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லே, சித்தப்பா! வெறும் கட்டுக் கதை! மோகினி இறந்த மறு நிமிஷமே நான் வாழப்போறதில்லை சித்தப்பா! எனக்கு வாழ்க்கையே திகட்டிப் போச்சு. இந்தப் பணம், சொத்து எல்லாம் நீங்களே ஏதாவது மடம், கோயிலுக்கு எழுதி வச்சிடுங்க,” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வெளியேறினான்.

குழந்தைச்சாமி அப்படியே அரை மனிதராகிவிட்டார். அவர் நம்பிய தெல்லாம் பொய்யா! அவர் வாழ்ந்த வாழ்வெல்லாம் வீண் வாழ்வா? “வெங்கடபதி! நீ உன் தவறுகளால் என்னைப் பக்தி வழிக்கு அனுப்பினாய். மோகினி, என்னை மறுபடியும் நாத்திகத்துக்கு அனுப்பிவிடாதே அம்மா, நீ வாழ வேண்டும்! மோகினி, நீ பிழைக்க வேண்டும்! இல்லாவிட்டால் எல்லாம் பொய்யாகி விடும்!” என்று அலறியபடி அப்படியே தரையில் சாய்ந்தார்.

குழந்தை கெளரி தன் பிஞ்சு நம்பிக்கையோடு பெரியவர்களின் பெரிய பிரசினையைச் சிறிதும் பாராட்டாமல் கண்ணை மூடியபடி டீச்சர் சொல்லிக் கொடுத்த அந்தப் பாட்டை அசையாத நம்பிக்கையோடு பாடிக் கொண்டிருந்தாள். ஆனால் மோகினியின் உயிர், முதிர்ந்த சாமியாரின் வேதனையையோ குழந்தை கௌரியின் நம்பிக்கையையோ பொருட்படுத்தாமல் மோகினியின் உடலை விட்டு வெளியேறுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது. மோகினியின் உதடுகளின் ஆட்டமும் நின்றது. சாவின் அமைதி அவள் முகத்தில் படர்ந்தது.

வராந்தாவில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த டாக்டர், சிகரெட்டை எறிந்துவிட்டு அறையில் நுழைந்தார். அவர் பார்வையில் சலனமில்லாமல் கிடக்கும் மோகினியின் உருவம் தெரிந்தது. கதை முடிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டார். “சாமி! இனிமேல் ஆக வேண்டியதைப் பாருங்க, எல்லாம் முடிஞ்சு போச்சு,” என்று சொன்னார்.

குழந்தைச் சாமி பதில் பேசாமல் எழுந்திருந்தார். “எல்லாம். முடிஞ்சு போச்சா?” என்று விரக்தியுடன் கூறிய படி தன் காவி மேல் வேட்டியைக் கிழித்து எறிந்துவிட்டு கண்ணீரோடு மோகினியை நெருங்கினார். “குழந்தை! நான் உன்னைச் சந்தித்திருக்கவே கூடாது அம்மா! உன் வாழ்க்கையில் நான் குறுக்கிட்டிருக்கவே கூடாதம்மா!” என்று மோகினியின் கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அழுதார்.

அப்படியே அழுது கொண்டிருந்தவரின் முகம் அதிர்ச்சியோடு காணப்பட்டது. அவர் மோகினியின் மணிக்கட்டைப் பிடித்ததும், “டாக்டர்! டாக்டர்! இங்கே வந்து பாருங்க டாக்டர்! கையிலே நாடி பேசுது,” என்றார்.

டாக்டர், நாடியைப் பார்த்தார். அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. “என்னங்க, மூச்சு நின்று போயிருக்கு. ஆனால் கையிலே நாடி பேசுது!” என்று ஸ்டெதாஸ்கோப்பால் இருதயத்தைப் பரிசோதித்தார்! மறுபடியும் நாடியைப் பரிசோதித்தார். உடனே அதையின் மூலையில் வைத்திருந்த தன்னுடைய தோல் பையிலிருந்து ஒரு மருந்தை எடுத்து ஊசியால் இன்ஜெக்ஸன் செய்தார்.

அப்போது அறையில் நுழைந்த ராஜு, “என்ன டாக்டர்?” என்று கேட்டான்.

“ராஜு! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மூச்சு நின்று போனப்புறம் இருதயம் துடிச்சிட்டிருக்கு. இது பெரிய ஆச்சரியமா இருக்கு.” என்று டாக்டர் சொல்லி முடிப்பதற்குள் மோகினியின் நாசிகள் வழியாக மூச்சு வருவது தெரிந்தது. மறுபடியும் மார்பு விம்மியது.

இந்தக் கலாட்டாவில் எந்தவிதப் பங்கும் எடுத்துக் கொள்ளாமல் குழந்தை கௌரி அப்படியே நாற்காலியில் சாய்ந்து கிடந்தாள்.

டாக்டர். “ராஜு! மோகினி பிழைத்து விடுவாள். இது மறுபிறப்பு என்றே சொல்ல வேண்டும்! ஆனால் இன்னும் அரை மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அவளை எடுத்துச் செல்ல வேண்டும்!” என்று சொன்னார்.

ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. மோகினியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

ராஜு ஒருவாரம் மோசினியின் அருகிலேயே இருந்தான். சாமியார் சங்கரன் குட்டியை ஒரு நர்ஸிங்ஹோமில் வைத்தார். குட்டிக்கு ஆத்திரம் மறைந்ததும் ஆஸ்பத்திரியில் மோகினியைப் பார்க்க வேண்டும் என்று கூறி அழுதான். குட்டியே சாமியாரிடம், “சாமி! என்னைத் தனியே எங்காவது வைத்துவிடுங்கள்,” என்று வேண்டிக் கொண்டான்.

மோகினிக்குச் சரியான ஞாபகம் வந்ததும் ராஜு ஆஸ்பத்திரிக்கு வருவதை நிறுத்திவிட்டான். அவளைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது.

இருபது நாள் சுழித்துக் குழந்தைச்சாமி ஆஸ்பத்திரியிலிருந்து மோகினியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மோகினி வெளுத்து இளைத்திருந்தாள். அவள் தன் அறையில் படுக்கையில் வந்து உட்கார்த்தாள். ராஜு அறையில் நுழைந்ததும் மோகினி படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள்.

ராஜு, “பரிலாயில்லை மோகினி! நீ எழுந்திருக்க வேண்டாம்!” என்று சொல்லி அவளைப் படுக்கையில் அமர்த்தினான். ராஜுலின் கை பட்டதும் மோகினியின் உடல் சிலிர்த்தது. “மோகினி! நானும், சித்தப்பாவும், டாக்டரும் நம்பிக்கையிழந்த போது கூட, கௌரி நம்பிக்கை இழக்கவில்லை. குழந்தையின் நம்பிக்கை பலத்தால் தான் நீ உயிர் பெற்றாய்! அந்தக் குழந்தைக்கு நீ தாயாக வேண்டும்”, என்று சொல்லி விட்டு நிறுத்தினான்.

மோகினி சற்று நேரம் தரையைப் பார்த்தபடி இருந்தாள். பிறகு, “கெளரிக்குத் தாயாகும் பாக்கியத்தை விடச் சிறந்தது வேறு எனக்கு இருக்க முடியாது. ஆனால் உங்கள் சொத்துத் தான் அதற்குப் பெரிய தடையாக இருக்கிறது. ஷோரனுரிலிருந்து வந்த ஏழை டீச்சராகவே இருக்க நான் ஆசைப்படுகிறேன்.”

“என் சொத்தா! அப்படி ஒன்றும் இல்லை மோகினி! சொத்து என்னுடையதல்ல. பாதி தர்மத்துக்கு, பாதி கௌரிக்கு என்று எழுதியாகிலிட்டது. இனிமேல் நான் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும்”.

மோகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அடுத்த வினாடி அவன் பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்தாள். ராஜு அவளை எடுத்து அணைத்துக் கொண்டான்.

“இது சித்தப்பாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் மோகினி.

“அவருக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தெரிந்திருக்கிறது. இருந்தும் தெரியாதவர் போல் இருந்திருக்கிறார். தர்ம சொத்துக்கும் கௌரியின் சொத்துக்கும் அவர்தான் கார்டியன். சொத்தை விட்டு ஓடுகிறார். ஆனால் அது அவரை விடாமல் தொடருகிறது,” என்று சொல்லி விட்டு, துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்திலுள்ள வடுவைத் தொட்டான் ராஜா.

அவன் கண்களில் நிறைந்த நீர் அந்த வடுவில் விழுந்தது! மோகினி அவன் கண்களைத் துடைத்தாள். பிறகு சிரித்தாள். அந்தச் சிரிப்பிலே ராஜு தன் ஒளிமயமான எதிர்காலத்தைக் கண்டான். “நாளை நாட்கள் நமதே!” என்று சொல்லி அவள் கன்னத்தைத் தொட்டான்.

(முற்றிற்று)

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *