மருமகள் அல்ல மகள்!




ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்த பார்வதியின் கண்கள் அடிக்கடி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் இருந்தன. மனதுக்குள் படபடப்பு உடலில் பதற்றம் இரண்டும் சேர்ந்து கொள்ள நிலை கொள்ளாமல் தவித்தாள்.

ஒன்றரை மணி நேரம் முன்னால் பார்வதியின் மகள் மீனா கையில் சூட்கேசுடன் கண்களில் கண்ணீரோடு வந்து நின்றது அதிர்ந்து போன பார்வதி என்ன ஏது என்று விசாரிக்கும்முன்னால் ” அம்மா ப்ளீஸ் இப்போ எதுவும் கேட்காதே. “ஐ நீட் ரிலாக்ஸேஷன். ஒன் அவர் கழிச்சு நானே சொல்றேன்.” எனக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டது இவையெல்லாம் பார்வதி நெஞ்சில் அடிக்கடி வந்து முட்டி மோதிய வண்ணம் இருந்தன.
இதற்கு முன்னால் மீனா இப்படி இருந்தது இல்லை. முகம் கொள்ளாச் சிரிப்போடும் களிப்போடும் தன் புருஷனோடு வந்து காலை முதல் மாலை வரை தங்கிச் செல்வாள். சில சமயம் அம்மாவின் வற்புறுத்தல் பேரில் மறுநாள் காலையிலும் போக நேரிடும்.
ஆனால் இன்று அவள் தனியாக அதுவும் கண்ணீருடன் வந்திருப்பது ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணரவைத்தது பார்வதித்கு. பிரச்னை பெரிசாக இருக்குமோ என்ற பீதியும் ஏற்பட்டது.
பார்வதியும் அவள் சம்பந்தியும் ஆஸ்தி அந்தஸ்து இவற்றில் உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால் இருவருடைய குடும்பத் தலைவர்களும் உயிரோடு இல்லை.
ஐந்து வருஷம் முன்னால் ஒரு சுபயோக தினத்தன்று எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு ஒரு எம்.என். சியில் வேலை யில் இருந்த கோபால் இ பி. . படித்த மீனா கழுத்தில் தாலியைக் கட்டினான். திருமணம் அமோகமாக நடந்தது. சீர் செனத்தி விருந்து எல்லாம் பிரமாதமாக இருந்தன.
வந்திருந்த உறவினர்களும் சுற்றத்தாரும் கல்யாணம் பற்றி புகழ்ந்து சிலாகித்துப் பேசினர்.
முதலில் தேனிலவுக்கு கோபாலும் மீனாவும் ஸ்விஸ் சென்றனர். அடுத்தவருஷம் கொடைக்கானல் என்று ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஊருக்கு கோபால் அவளைக் கூட்டிச் சென்றான்.
திகட்ட திகட்ட சந்தோஷத்தில் திளைத்தார்கள்.
தான் பணக்காரி படித்தவள் என்ற தலைக்கனமோ அல்லது கர்வமோ கொஞ்சம்கூட இல்லாமல் புகுந்த வீட்டில் பழகினாள் மீனா.
வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் மாமியாருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை தானே முன் நின்று செய்தாள் .
அதனால் மாமியாரிடம் நல்ல பெயர் ! புருஷனையும் நன்றாக கவனித்துக் கொண்டதால் அவனிடமும் நல்ல பெயர் வாங்கினாள் மீனா.
இந்தச் சூழ்நிலையில் திடீரென கோபால் ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட இந்தப் பிரச்னையால்தான் மீனா இங்கு வந்திருக் கிறாள் என்று பார்வதிக்குத் தெரியாது.
நேரம் கழிந்தது. பொறுமை எல்லை மீறிட எழுந்து போய் மகளைக் கேட்கலாம் என பார்வதி நினைத்தாள். அப்போது மெல்ல அறையில் இருந்து வெளிப்பட்டாள் மீனா. அழுத கண்களோடு தன் அம்மா பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
அவள் இன்னும் அழுதுகொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டவள் ” ஏய் என்னாச்சு? நானும் வந்ததிலேர்ந்து பார்க்குறேன். நீ பாட்டுக்கு அழுதுக்கிட்டிருக்கே . அப்படி என்னதான் பிரச்னை?”
தன் விழிகளை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்ட மீனா “பிரச்னைதாம்மா.” என்றவள் “எனக்கு திருமண மாகி அஞ்சு வருஷம் ஆயிடிச்சு இல்லையா?” எனக் கேட்டாள்.
“ஆமாம்..”
“நான் இன்னும் ஒரு குழந்தையைப் பெற்று தரல்லேன்னு உன் மாப்பிள்ளைக்குக் கோபம். அதனால் என்னைத் தலை முழுகப் போறதாகப் பேச்சு!”
அதிர்ச்சியுற்றாள் பார்வதி. என்ன அநியாயம் இது ! கல்யாணமாகி ஐந்து வருடம்தான் ஆகிறது. இது ஒரு கெடுவே இல்லை. எத்தனையோப் பேருக்கு காலம் தாழ்த்தி குழந்தை பிறந்திருக்கு. அதற்குள் இப்படியொரு அவசர முடிவா?
கொதித்துப் போனாள் பார்வதி ” உன் மாமியார் என்ன சொல்றாங்க மீனா ?”
“அவங்க நல்லவங்கம்மா. விஷயம் அறிந்ததும் அவரை நல்லா காய்ச்சி யெடுத்துட்டாங்க. மனுஷன் கப் சிப்புன்னு அடங்கிட்டார்….”
“ம்.” பெருமூச்சொன்று விட்ட பார்வதி ” மாமியாரின் சப்போர்ட் உனக்கு இருக்கற வரை நீ கவலைப்பட வேண்டாம் மீனா .” ஆயாசத்துடன் சொன்னாள் பார்வதி.
“நீ சொல்றது சரிதாம்மா. என்னைத் தனியாக கூட்டிக்கிட்டு போய் ‘ இதோ பார் மீனா. அவன் கிடக்கிறான். நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன் …நீ வேணா உங்கம்மா வீட்டுக்குப் போய் ரெண்டுநாள் இருந்துவிட்டு வா ‘ அப்படின்னு சொன்னாங்க. அதனால் தான் இங்கு வந்தேன். ”
“இது உன் வீடு மீனா! உன் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும் பட்சத்தில் நீ எத்தனை நாள் வேணும்னாலும் தங்கலாம். ” என்ற பார்வதி தொடர்ந்தாள்.
“இதோபார்.. தற்சமயம் எதையெ ல்லாமோ நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே. நம்ம எதிர்வீட்டு நந்தினி இதே பிரச்சனையதான் ஃபேஸ் பண்ணினா. கடைசியில் நடந்தது என்ன நியாபகம் இருக்கா ?”
“ஆமாம்மா. நல்லா நியாபகம் இருக்கு.”
“ஒன்பது வருஷம் உண்டாகாமல் இருந்த நந்தினியை புருஷனும் மாமியாரும் சேர்ந்து மலடி மலடி ன்னு கரிச்சுக் கொட்டி கூடவே ரொம்பவே இல்ட்ரீட்டும் பண்ணிணாங்க. கடைசியில் அவளை விவாகரத்து செய்யற அளவுக்குக் கூட போனாங்கன்னா பார்த்துக்கோயேன்.
“இம்சை தாளாமல் நந்தினி கண்ணைக் கசக்கிக்கிட்டு பிறந்த வீட்டுக்கு வந்த நாட்கள் கணக்கிலடங்கா. தங்கள் பெண்ணின் நிலைமையைப் பார்த்து அவளோட பெற்றோரும் கண்ணீர் விடுவாங்க.
“கடைசியில் ஒரு வழியாக ஆண்டவன் கண்ணைத் திறந்தார். அவளும் உண்டாகி செக்கச் செவேல்னு ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தாள். நந்தினியைக் கரிச்சுக் கொட்டிய அவள் புருஷனும் மாமியாரும் அவளை தங்கள் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடினாங்க. இப்போ ஒண்ணுக்குள் ஒண்ணாயிட்டாங்க. ”
“அம்மா அந்த நந்தினி அக்காவுக்கு குழந்தை பிறக்காமல் போயிருந்தா…பாவம் அவங்க கதி என்னவாக ஆகியிருக்கும்.? நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு.”
“கரெக்ட். அவளுக்கு ஒன்பது வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது. ஆனால்இ உன் விஷயத்தில் அஞ்சு வருஷம்தான் ஆகுறது. இது பெரிய டிலேவே கிடையாது மீனா. உனக்கு இப்போ 29 வயசு நடக்கிறது. 32 வயசு இல்லை அதுக்கு மேல கொஞ்சநாள் வரைகூட காத்திருக்கலாம்.
“அதுக்கப்புறம் ஒண்ணும் நடக்கல்லேன்னா டாக்டர் கிட்டே கன்ஸல்ட் பண்ணலாம். ”
படபடப்புடன் குறுக்கிட்டாள் மீனா. “ஒரு வேளை குறை என்னிடம் இருக்குன்னு வச்சுக்குவோம். அப்போ சொன்ன மாதிரி அவர் என்னை தலை மூழ்கினால் என்னம்மா செய்றது?”
“பைத்தியம். ஏன் நெகடிவா திங்க் பண்றே ? நல்லதையே நினை. நல்லதே நடக்கும்.”
பார்வதி ஒரு ஆப்டிமிஸ்ட் . எதையும் பாஸிடிவா எடுத்துக்கொண்டு செயல் படுவாள்.
அப்படி எதிர்பார்த்தது நடக்காமல் போனாலும் வருத்தப்பட மாட்டாள். ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வாள். அவள்சுபாவம் அது! இப்போது அவள் சொன்ன வார்த்தைகள் மீனா மனசுக்கு இதமாக இருந்தது .
கையில் வைத்திருந்த அலைபேசி ஒலிக்க மீனா எடுத்துப் பார்த்தாள். டிஸ்ப்ளேயில் மாமியார் என்று இருந்தது.
“அம்மா ஃபோன்ல மாமியார்..” மென்மையாகக் கூறியவள் அலைபே சியைக் காதுக்குக் கொண்டுபோனாள். ” ஹலோ சொல்லுங்க அத்தை.”
“மீனா நீ அங்க போனதிலிருந்து உன் புருஷன் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டு உம் முனு இருக்கான். சாப்பிட மாட்டேங்கு றான். கொஞ்ச நேரம் கூட உன்னோடப் பிரிவை அவனால் தாங்க முடியல்லே. இவனா உன்னைத் தலை முழுகப் போறான்?”
மாமியாரின் வார்த்தைகள் மீனா மனதில் சந்தோஷப் பூக்களை மலர வைத்தன. உடலில் புது இரத்தம் பாய்ந்தாற்போல் கிளு கிளுப்பை ஏற்படுத்தியது. ” சரிங்க அத்தை! நான் வேணா உடனே புறப்பட்டு வரவா ?” என்றாள் படபடப்போடு.
“உடனே வேண்டாம். நாளைக்கு காலை கிளம்பி வா…அப்புறம் உங்கம்மா இருக்காங்களா?”
“இதோ பக்கத்திலேயே இருக்காங்க.பேசுங்க.” அலைபேசியை பார்வதியிடம் கொடுத்தவள் “மாமியார் உன்கிட்டேப் பேசணுங்கு றாங்க.” என்றுவிட்டு முகம் மகிழ்ச்சியில் மின்னிட துள்ளி எழுந்து ஓட்டமும் நடையுமாக டாய்லெட்டுக்கு விரைந்தாள் மீனா. மகளிடம் தென்பட்ட திடீர் மாற்றம் மாமியாரிடம் இருந்து ஏதோ நல்ல செய்தி வந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது பார்வதிக்கு.
அலைபேசியில் பார்வதி “எப்படி இருக்கீங்க சம்பந்தி?” என்றாள்.
பார்வதியின் விசாரிப்புக்கு நலமாக இருப்பதாகச் சொன்ன கோபால் அம்மா “அப்புறம் சம்பந்தி…முக்கியமான விஷயம் ஒண்ணு பேசணும். மீனா பக்கத்துல இருக்காளா?”
“டாய்லெட் போயிருக்கா. சும்மாச் சொல்லுங்க.”
“இங்க நடந்தது என்னங்குறத நீங்க கேள்விப் பட்டுருப்பீங்க!”
“ம்.. மீனா கண்ணீரோட விஷயத்தைச் சொன்னாள். எனக்கு வேதனையாயிருந்தது சம்பந்தி. ஆனாலும் மாப்பிள்ளை ரொம்பவே அவசரப்படறார். எவ்வளவோ நேரம் இருக்கு. வெயிட் பண்ணிப் பார்க்கலாம் இல்லையா? அதை விட்டு ஒரேயடியாக தலை முழுகறதாகச் சொன்னது கொஞ்சம் அதிகமான பேச்சுதான் சம்பந்தி! பொறுக்க முடியாமல் இன்னும் அழுதுகிட்டிருக்கா மீனா.”
“ஸாரி சம்பந்தி. ஆனால் கோபால் தான் அவசரப்பட்டு அப்படி மீனாவைத் திட்டினதுக்காக இப்போ ரொம்ப ஃபீல் பண்றான். வேதனைப்படறான். இனிமேல் கோபால் அப்படி நடந்துக்க மாட்டான். அதுக்கு நான் உறுதி!
“அப்புறம்…நீங்க தப்பா எடுத்துக்கல்லேன்னா குழந்தை விஷயமா நான் ஒரு சஜஷன் சொல்லட்டுமா?”
“சொல்லுங்க.”
“நாள் கணக்குல வெயிட் பண்ணிப் பார்ப்போம். ஒரு வேளை அவங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படலேன்னு வச்சுக்குவோம். மேற்கொண்டு டாக்டர் கிட்டப் போய் உடம்பை செக் பண்ற வேலையெல்லாம் வேணாம். ஏன்னா குறை இன்னாரிடம்தான் இருக்குன்னு தெரியவரும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் பாவம் மனசொடிந்து போவர். அந்தக் குறை வாழ்நாளெல்லாம் அவங்க மனசில் உறுத்திக்கிட்டே இருக்கும்.”
சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள் கோபாலின் அம்மா.
“அதனால நான் என்ன சொல்ல வரேன்னா…குழந்தைக் காப்பகத்திலேர்ந்து ஏதாவது ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிடலாம். இதுல தப்பு ஒண்ணுமில்லேங்குறது என்னோட அபிப்ராயம்! நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி?”
குழந்தை விஷயத்தில் கோபால் அம்மா மகள் மீது கொண்டிருக்கும் கரிசனமும் பரிவும் கண்டு பார்வதிக்குப் பூரிப்பாக இருந்தது.
ஏற்கனவே மாமியார் தன்னை மருமகளாக நினைக்காமல் மகளைப் போல் எண்ணி அன்பையும் பாசத்தையும் அள்ளி வழங்குவதாக மீனா பார்வதியிடம் கூறியிருக்கிறாள்.
மேலும் புகுந்த வீட்டில் மீனா காலடி எடுத்து வைத்து ஐந்து வருடங்களில் ஒருநாளும் மாமியார் தன்னிடம் முகம் சுழித்தது கிடையாது. தன்னை எடுத்தெரிந்தும் பேசியதில்லை என்று கூட சொல்லியுமிருக்கிறாள்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்பொழுது எந்த சந்தர்ப்பத்திலும் மாமியார் தன் மருமகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என திடமாக தம்பினாள் பார்வதி.
சிறிது நேரம் யோசனை செய்த பார்வதிக்கு ‘ எது எப்படி நடக்குமோ அது அப்படியே நடக்கும் ‘ என்ற கீதையின் சொற்கள் மனதில் எதிரொலித்தது. பிரச்னை தீர்ப்பதில் சம்பந்தியின் அணுகுமுறையும் பிடித்திருந்தது.
“என்ன சம்பந்தி பதில் ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?”
பார்வதி பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். மகள் இன்னும் டாய்லெட்டில் இருந்து வெளிப்படவில்லை என்பது தெரிந்தது.
குரலைத் தாழ்த்தி “சம்பந்தி ஏன் கவலைப்படறீங்க? நிறைய நேரம் இருக்கு. நாம எதிர்பார்க்கிறது நிச்சயம் நடக்கும்ங்குற நம்பிக்கை எனக்கிருக்கு. ஒருவேளை அப்படி நடக்காத பட்சத்தில் நீங்க சொல்றபடி செய்யலாம்.” என பேச்சை முடித்தாள் பார்வதி.
கூடவே ‘நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் அந்தக் காலத்தில் செய்ததை இப்போ நம் பிள்ளைங்க ரிப்பீட் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அப்படி செய்துதானே ஆகவேண்டும் சம்பந்தி’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள் பார்வதி.