பொறாமை நெஞ்சம்




(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முகிலரசனுக்கு அந்த இரவு ஓடிப்போனதே தெரியவில்லை. தூக்கம் வராமல் படுக்கையில் புழுவாய் நெளிந்து கிடந்தே இரவை விரட்டியவர். விடிந்த பின்னும் அடித்துப் போட்டது போல் படுக்கையிலே கிடந்தார். வானொலி 96.8 தன் சேவையை ஆரம்பித்து நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சன்னலை மூடியிருந்த திரைத் துணியை விலக்கி வெளியே பார்க்கிறார். ஞாயிற்றுக் கிழமைதான் என்பதை வெறிச்சோடிக் கிடந்த வீதிகள் உறுதிப்படுத்தின. வானத்தைப் பார்த்தால் அதுவும் அவர் மனத்தைப் போலவே அழுந்திக் கிடந்தது. ஆதவனை அறவே காணவில்லை.
நீண்ட பெருமூச்சுக்குப் பின் கையில் துண்டுடன் குளியலறைக்குள் நுழைந்து ஷவரைத் திறக்கின்றார். மூடிய கண்களுக்குள் சங்கரன் தெரிகிறார். உடம்பு சிலிர்த்துக் கொள்கிறது. குழாயிலிருந்து விழும் இதமான சுடுநீரில் உடம்பு நிதானமடைகிறது. மைசூர் சந்தன சோப்பை நீரில் நனைத்து உடம்பில் நுரைவழியத் தேய்க்கிறார். வெளியே வரும்போது உடம்பும் மனமும் உற்சாகமாய் இருந்தன. கையிலிருந்த துண்டால் தலையைத் துவட்டியபோது சங்கரனின் குரல் காதில் ஒலிக்கிறது.
ச்சே…மறுபடியும் மறுபடியும் அதே விஷயம்தானா..! மறக்க முயன்றும் முடியாத விஷயம் அது. முன் இரவு அவரைத் தேடிவந்த சங்கரன் அவரது தெளிந்த மனத்தைக் குழப்பிவிட்டுப் போன விஷயம்.
“முகிலரசன் சொந்தமாய்ச் சிந்தித்து எழுதத் தெரியாதவர்… காப்பியடித்து இலக்கியம் படைப்பவர்…” என்று யாரோ சொன்னார்கள் என்று அவரிடம் சங்கரன் சொல்லிச் சென்றபின் அவரின் சிந்தனை ஸ்தம்பித்துப் போய்.. மனம் உடைந்து போய், எதையுமே செய்யவும் சொல்லவும் முடியாமல் படுக்கையில் கிடந்தார். விடிந்த பின்னும் மனம் அமைதி பெறவில்லை.
“நெஞ்சு பொறுக்குதில்லையே… இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்” ஒலிக் களஞ்சியம் 96.8 இல் சி.எஸ். ஜெயராமன் பாடச் சட்டென்று மனம் கொஞ்சம் தெளிவுபெறக் கட்டிலில் அப்படியே அமர்கிறார். இரு கைகளையும் இருபுறம் ஊன்றியவராய்ச் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
படுக்கையில் விரிந்து கிடந்த… புத்தகங்கள்தாம் அவருக்கு மனைவி மக்கள் என்ற சொந்தங்கள்! களைத்துப் போய்ப் படுத்தால் கைகால் பிடித்து ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேச மனைவியோ, சொந்தங்களோ, சோர்ந்து கிடக்கும் மனத்துக்கு உற்சாகத்தைத் தரும் வார்த்தை களை, விளையாட்டுகளைக் காட்ட பிள்ளைகளோ இல்லாத தனி மனிதர் அவர்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர், என்ற பரந்த மனத்துக்குச் சொந்தக்காரர். வேலை நேரம் போக மற்ற நேரங்கள் அவருக்குப் போவதெல்லாம் இந்தப் புத்தகங் களோடுதான். அவரின் தலைமாட்டில் வரிசை பிடித்து நிற்கும் புத்தகங்களில் அல்லாஹ்வும் இயேசுவும் சிவனும் புத்தனும் இருப்பார்கள். படுக்கையில் புரண்டு விழுந்தால் வள்ளுவனும் பாரதியும் இன்னும் பல அறிஞர் பெருமக்கள் கண்ணில் தெரிவார்கள்.
வாழ்க்கையில் தான் கண்ட சோகங்களையே சுகமாக்கிக் கொண்டு ஒரு வேள்விப் பயணம் மேற் கொண்டுள்ள இவருக்கு அவரின் வெள்ளை மனமும் பிள்ளைக் குணமும் தேடித் தந்த உறவுகள் ஏராளம்.. ஏராளம்..! அந்த ஏராளமான உறவுகளின் ஓர் உறவுதான் முள்ளாய் மாறி அவர் மனத்தைக் கீறி ரணமாக்கியிருந்தது.
ரணம் என்றாலும் அது சாதாரண ரணமல்ல… நினைக்கும் போதே உடம்பில் குருதி வடியும் வேதனையைத் தரும் ரணம். போர்க்களத்திலே மறைந்திருந்து முதுகில் குத்திய பேடியைப் போல் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன் அப்படி ஒரு காரியத்தை அவருக்குச் செய்திருந்தான்.
தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் தலை யிடுவதும், அவசியமின்றிப் பிறரை விமர்சனம் செய்வதும் சங்கரனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு, அதனாலேயே அவனை மற்றவர்கள் ஒதுக்கி வைத்தார்கள். வெகுளியான முகிலரசனுக்கு அவனால் நிச்சயம் பாதிப்பு வரும் என்பது அவரின் நண்பர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் முகிலரசன் அதை உணரவில்லை. “பாம்பின் சிநேகம், பல்பட்ட பின்பே புரியும்” என்பதுபோல் அடிபட்ட பின்பே வலிக்க ஆரம்பித்திருந்தது அவனுக்கு!
“கொஞ்ச நேரம் அலுவலகத்திற்கு வந்துட்டுப் போங்க ஸா…உங்களோட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு” என்று தொலைபேசியில் நல்லசிவம் அழைத்ததும் மனத்துக்குள் எழுந்த வியப்புடனேயே அந்த அச்சகத்திற்குள் நுழைகிறார் முகிலரசன். அவருக்காகவே காத்திருந்தார் நல்லசிவம். முகிலரசனைக் கண்டதும் அகமும் முகமும் மலர வரவேற்றார். பையனிடம் காபி கொண்டுவரச் சொல்லிவிட்டுப் பொது விஷயங்களைப் பேச ஆரம்பித்தார். முகிலரசனுக்கோ அவர் ஏன் அழைத்தார் என்பதிலேயே மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. பையன் இரண்டு காபியுடன் வந்தான். அவருக்கு ஒன்றும் தன் முதலாளிக்கு ஒன்றும் வைத்துவிட்டுப் போனான்,
“ரொம்ப நாளா பப்ளிக் சர்வீஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன். உங்களோட சர்வீஸ்ல பலதரப்பட்ட அனுபவம் கெடைச்சிருக்கும். பலவிதமான மனுஷங்கள பார்த்திருப்பீங்க.”
நல்லசிவம் தான் பேச்சைத் தொடங்கினார். அவரது கேள்வி முகிலரசனுக்கு உற்சாகத்தை வரவழைத்தது. ஆர்வமாய்ப் பேசத் தொடங்கினார்.
“ஆமாங்க… பொதுத் தொண்டுன்னா எனக்கு உயிருங்க… என்னை மாதிரி தனிக்கட்டைகளுக்கு ஆறுதலும் ஆத்ம திருப்தியும் அதுதானே…”
“உண்மைதாங்க… உங்களுக்கு மட்டுமில்லே… இந்த வயசுக்கு மேல நமக்கெல்லாம் அப்படி ஒரு பழக்கம் இல்லேன்னா வாழ்க்கையே உப்புச் சப்பில்லாம போயிடும். அடுத்தவுங்களுக்காக நம்ம நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து அவுங்க சந்தோஷத்தைப் பார்க்கறப்ப அது நமக்கு இன்னும் கொஞ்சகாலம் வாழணும்கிற ஆசையை உண்டாக்குதே…
என்னோட காலத்தில நான் பார்த்த மனுஷங்கள்ல நீங்க வித்தியாசமானவரா இருக்கீங்க முகிலரசன்… உங்களோட சேவை எனக்கு வியப்பாகவும் சில நேரம் பொறாமையாகவும் இருக்கு…சாதாரண மனுஷனா இருக்கிற நீங்க செய்கிற சேவை என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப ரொம்ப அதிகம்..”
மனம் திறந்து பாராட்டினார் நல்லசிவம். முகிலரசனுக்கு அது துச்சமாய் இருந்தது.
“நான் என்னங்க பெரிசா செய்துட்டேன்… ஏதோ என்னால முடிஞ்சதைச் செய்யறேன். இதைக்கூட நான் செய்யலேன்னா இறைவன் என்னை இந்த மண்ணுக்கு அனுப்பி வெச்சதுக்கே அர்த்தமில்லாம போயிடுமே!
“வந்தவரைக்கும் வாழரவரைக்கும் அடுத்தவங் களுக்குப் பயன்படற மாதிரி வாழ்ந்துட்டுப் போறதுதாங்க மனுஷத்தனம்!”
அடக்கமாய்ச் சொல்லும் அவரைப் பார்க்கும்போது நல்லசிவத்துக்கு ஒருபுறம் பெருமையாகவும்… மறுபுறம் கவலையாகவும் இருந்தது.
“உங்களோட வார்த்தைகளை நான் ஏத்துக்கிறேன் முகிலரசன்… ஆனா, நீங்க உங்களுக்கே தெரியாம ஒரு மாபெரும் தவற்றைச் செய்திருக்கீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க வளர்த்த ஆட்டுக்குட்டி இப்ப கொம்பு முளைச்சிப் போயி உங்க முதுகையே பதம் பார்க்கத் துணிஞ்சிருக்குன்னு உங்களுக்குப் புரியுமா?
நல்லசிவம் பேசிக்கொண்டே காபியைக் குடித்து முடித்தார். அரைகுறையாய்த் தன் கையில் இருந்ததை மேசையில் வைத்துவிட்டு அவரது முகத்தை உற்று நோக்குகிறார் முகிலரசன். எவ்விதச் சலனமும் இல்லாது தெளிந்த நீரோடைபோல் காணப்படும் அவர் முகத்தில் ஆழ்ந்த அன்பு ஒன்றைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால். இருவரிடையிலும் நிலவிய அமைதி சில நிமிடங்களைத் தனதாக்கிக் கொள்ள நல்லசிவம் பேசத் தொடங்கினார்.
நீங்க என்கிட்டே கொடுத்த அந்தத் திருக்குறள் தொகுப்பை நான் படிச்சதுமே எனக்கு உங்க மேல ஒருவித பொறாமைதான் ஏற்பட்டுச்சி! தனியா இருந்துக்கிட் இவ்வளவு வேலைகளையும் பார்த்துக்கிட்டே இவ்வளவு அழகான ஒரு நூலையும் உங்களால எழுத முடிஞ் சிருக்குதுன்னா அது உங்களோட தனித் திறமையைத்தான் காட்டுதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். ஒரு தடவைக்குப் பலதடவை படிச்சப்ப உங்களோட மொழி ஆர்வம், மொழிப்பற்று எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி… நம்ம நாட்டு தமிழ் இலக்கியங்களை மற்ற நாட்டு மொழிக்கு மாத்தி மற்ற சனங்களுக்குக் கொடுக்கிறது சாதாரண விஷயமில்லே.. உங்களோட இந்தப் பணிக்கு என்னாலான உதவியைச் செய்ய நினைக்கிறப்பதான் உங்க தவறு உங்களுக்கே வினையா முடிஞ்சிருக்குங்கிற விஷயமும் தெரியவந்துச்சி”
“என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலியே… அப்படி எந்தத் தவற்றையும் செய்திருக்கிறதா எனக்கு தெரிலியே..”கவலையுடன் சொன்ன முகிலரசனைப் பார்த்து நிதானமாய்ச் சிரித்தார் நல்லசிவம்.
“தெரிஞ்சிருந்தா இந்தத் தப்பு நடந்திருக்க முடியாதே..”
கையில் இருந்த இரண்டு கடிதங்களை எடுத்து அவர் முன்பு வைத்தார் நல்லசிவம். எல்லாமே உங்க அருமை நண்பர் சங்கரன் செய்திருக்கிற வேலை. உங்களோட புத்தகத்தை நான் செய்து கொடுக்கக் கூடாதுன்னு கட்டாயமா கேட்டிருக்காரு. அதுமட்டுமில்லே… செய்து தந்தா எனக்கு வீணான பழி வந்து சேருமுன்னு மிரட்டியும் வெச்சிருக்கிறாரு…!
“காரணம்…” அதிர்ச்சியுடன் கேட்டார் முகிலரசன்.
“நீங்க காப்பியடிச்சி எழுதறீங்களாம்…! புத்தகம் வெளியே வந்தால் எனக்குப் பேரு கெட்டுப் போகுமாம்…” அமைதியாய்ச் சொன்னார் நல்லசிவம்.
குபீரென்று சிரித்தார் முகிலரசன். “இதுல பொய் சொல்ல என்ன ஸார் இருக்கு.. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களை நம்ம மொழியில இருந்தா அதை அடுத்த மொழியிலே கொண்டு வரணும்னு இப்ப நீங்க தானே சொன்னீங்க. பாரதியார் கூட இதைத்தானே படிச்சுப் படிச்சு சொன்னாரு.
“நான் படிச்சதை எனக்குப் பயன்பட்டதை நான் மற்ற சனங்களுக்கு எனக்குத் தெரிந்த வகையிலே எடுத்து வைக்கிறேன். இதிலே என்ன தப்பு..”
அழுத்தமாய்க் கேட்டார் முகிலரசன். “யாரு சொன்னா இதுல தப்பு இருக்குதுன்னு… தப்பு உங்க இலக்கியப் பணியில இல்லே… உங்க பழக்க வழக்கத்திலே இருக்குன்னு சொல்ல வர்றேன்… முதல்ல அதை நீங்க புரிஞ்சுக்குங்க. நாம யாரோட பழக நினைச்சாலும் அவுங்க தகுதி என்னன்னு தெரிஞ்சுகிட்டுதான் பழகணும்கிற விவரம் உங்களுக்குப் புரியாதா என்ன? வெளுத்ததெல்லாம் பால்தான்னு நம்பி நடக்கிற காலம் இது இல்லையே”
நல்லசிவத்தின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, அப்போது அவரிட மிருந்து விடைபெற்று வந்தவர்தாம். இந்த இரண்டு நாள் களாய் மேகத்துக்குள் புதைந்து கிடந்த சூரியனைப்போல் அறைக்குள்ளேயே செயலற்றுப் போய் அடங்கிக் கிடந்தார்.
ஏதோ நாலு எழுத்துப் படித்தவர் என்ற நிலையில் தன் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ளவும், தனது ஓய்வு நேரத்தில் சில கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளவும் சங்கரனைத் தன் வீடுவரை அழைத்து வந்து அளவளாவி – ஒரு சகோதரனைப் போல் பழகி அவ்வப்போது வேண்டிய உதவிகளையும் செய்து தனது குட்டி நூல் நிலையத்தில் உள்ள நூல்களை அவருக்கும் கொடுத்து…
நினைத்தாலே மனம் வலிக்க ஆரம்பித்தது. எப்படி இப்படிப்பட்ட காரியத்தை ஒரு படித்த மனிதனால் செய்ய முடிந்தது? கடந்துபோன நேரத்தில் மனத்தை ஓட விட்டதிலேயே சில மணித்துளிகள் கரைந்துபோக ஈரமான துண்டுகூட உலர்ந்து போயிருந்தது. எழுந்து உடையணிந்து கொண்டு தனது மேசையில் இருந்த டைரியையும் பேனாவையும் எடுக்கிறார். டைரியின் உள்ளிருந்த சிறு நாள்காட்டி அட்டை நழுவித் தரையில் விழுகிறது. குனிந்து எடுக்கிறார். காவியுடையணிந்து கம்பீரமாய் நிற்கும் விவேகானந்தரின் வண்ணப்படம் அது. அதில் காணப்படும் அவரது பொன்மொழிகளில் விழிகள் பதிகின்றன.
எழுமின்! விழிமின்… கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்! உணர்மின்!
உடம்பு ஒருமுறை சிலிர்த்து அடங்கிற்று. உள்ளத்தில் புத்துணர்வு பொங்குகின்றது. சிறு புன்னகையோடு வெளியே வருகிறார். மேகமூட்டம் கலைந்து கதிரவன் வந்து கொண்டிருந்தான்.
எதுவந்த போதிலும் யார் எதைச் சொன்ன போதிலும் முன் வைத்த காலைப் பின் வைக்காது எடுத்த காரியத்தை நடத்தி முடிப்பவனே மனிதன்! என்ற குரல் எங்கிருந்தோ உசுப்பிவிடத் தனது நீல வண்ண “பைக்”கை எடுக்கிறார். பசிவந்த பறவை இறையைத் தேடிப் பறப்பது போல் அவரின் பயணம் தேசிய நூலகத்தைத் தேடித் தொடர்ந்தது.
– சிங்கப்பூர் வானொலியில் ஒலியேறியது 13-7-1996
– ஒளிக்களஞ்சியம் 96.8 FM வானொலியில் இடம்பெற்ற கதை.
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.