புதைந்ததும் புனைந்ததும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 20, 2025
பார்வையிட்டோர்: 4,298 
 
 

அது ஒரு சாதாரண நாளாகத் துவங்கியது. சாந்தினிக்கு ஐம்பது வயது ஆகிறது. அவளுடைய அம்மா இறந்து போய் இரண்டு மாதங்களாகின்றன. வழக்கம் போல, விழித்துக் கொண்டதும் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே முற்றத்துக்கு வந்தாள். அம்மா இருக்கும் வரை ஆங்கில தமிழ் நாளிதழ்கள் முன்வாசல் இரும்புக் கதவில் சொருகப்பட்டிருப்பது இங்கிருந்து பார்த்தாலே தெரிந்தது. இனி இங்கே யாரும் இருக்கப் போவதில்லை. முற்றத்தின் இடது புறம் பெரிய நீல நிற மாருதி கார் நின்று கொண்டிருந்தது. அம்மா இருக்கும் வரை அடிக்கடி அதில் எங்காவது கிளம்பிவிடுவாள். சாவதற்கு நான்கு மாதங்கள் வரை அது அவளது தோழியாக, தோழனாக இருந்தது. அப்பா இருக்கும் வரை அப்பா காரை ஓட்டினார். அவருக்குப் பின் டிரைவர் வைத்துக் கொண்டாள்.

முற்றத்தின் வலது புறம் வரிசையாக அவள் வைத்து வளர்த்த ரோஜாச் செடிகள். அவற்றில் இரண்டு பெரிய மஞ்சள் ரோஜாக்கள், மூன்று கருப்பு ரோஜாக்கள், ஒரு சிவப்பு ரோஜா, மூன்று ‘ரோஸ்’கலர் ரோஜாக்கள்.! அப்படியே முன்னால் சிமெண்ட் பிளாக்குகள் பதித்த நான்கடி அகல நடைபாதையில் நடந்து காம்பவுண்ட் சுவருடன் இருந்த இரும்பு கேட்டைத் திறந்து தெருவுக்கு வந்து நின்று பார்த்தாள். காய்ந்த புங்கை மர இலைகள் வீட்டின் முற்றத்திலும் வீட்டுக்கு முன்னால் தெருவிலும் பரந்து நிறைந்து கிடந்தன. முற்றத்திற்குள் இருந்த புங்கை மரத்தை நிமிர்ந்து பார்த்தாள். பாதிக்கு மேல் இலைகள் உதிர்ந்துவிட்டன. இன்னும் கொஞ்சம் உதிர்ந்தால் மரம் மொட்டையாகிவிடும். அதற்கு இன்னும் நாளாகும். ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான். கொஞ்சம் புதிய இலைகள் மரத்தில் அங்கங்கே தளிர் விட்டிருந்தன. எல்லாப் பழுத்த இலைகளும் விழுந்தபின் இளம் பச்சை நிறத் தளிர்கள் மரத்தை முழுதாக விரித்து, அணைத்துக் கிளைகளையும் மூடிக் கொள்ளும். அதுவரை இந்த வீட்டில் இருக்க வேண்டும். அதற்குள் இதைத் துடைத்துத் தூத்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள யாரையாவது ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகுதான் சென்னைக்குப் போவதைப் பற்றி யோசிக்க வேண்டும். வீட்டைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிக்க வேண்டும். அவசரத்தில் நம்பிக்கையான ஆள்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. வீட்டை விற்றுவிட முடியாது.

தெருவில் நின்றபடியே திரும்பி வீட்டைப் பார்த்தாள். கேட்டின் வலது புறம் சுவரில் இருந்த பலகையில், ஆங்கிலத்தில் புரொ.மீரா, எம்.ஏ., எம்.பில்., பிஹெச்.டி, என்று வெள்ளைப் பெயிண்டில் எழுதியிருந்த அம்மாவின் பெயரைப் பார்த்ததும் பெருமையாக இருந்தது. உடனே அதை எடுத்துவிடத் தோன்றவில்லை. அம்மா இல்லாத போதும் அது வீட்டின் அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டிருந்தது. அம்மா இல்லாத வீட்டில் அம்மாதான் இருப்பாள். அதில் கூடை கூடையாக அனுபவங்கள் இந்தப் புங்கை இலைகளைப் போலவே கொட்டிக் கிடந்தன. மீண்டும் புதிய இலைகளைப் போல ஞாபகங்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்த வீட்டு வாசலில் அழகிய கோலம் வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. வளைந்து நெளிந்த அதன் கோடுகள் நடனமாடும் விரல்களைப் போல அசைந்து கொண்டிருந்தன. அம்மாவும் நன்றாகக் கோலமிடுவாள். ஆனால் அதைத் தினசரிப் பணியாகச் செய்ய அவளால் முடியாது. அவளுக்கு விருப்பமிருந்தால் சில் நாள்களில் கோலம் போடுவாள். ‘அவள் கடன் – வீட்டின் – பணி செய்து கிடப்பது’ அல்ல.

ஆனால் ‘வரலாறு’ அவள் இருக்கும் இடமெல்லாம் அவள் சூட்டிக் கொள்ளும் மல்லிகை மலரின் வாசனைபோல் படர்ந்திருக்கும். அவள் ஒரு அபூர்வமான பூ. பேசத் தொடங்கினால், வரலாறு இவ்வளவு சுவையாக இருக்குமா என்று வியப்படைய வைப்பாள். புதிய புதிய தகவல்கள், செய்திகள் பார்வைகள் தொடர்ந்து மல்லிகை வாசனையுடன் பரவிக் கொண்டேயிருக்கும். அவளையறியாமல் சாந்தினியின் கண்கள் கலங்கின. அவளுக்கு ஐம்பது வயதாகிவிட்டது. சென்னையில் அரசு அதிகாரியாக இருக்கிறாள். பள்ளி கல்லூரிக் காலங்களில் ‘வரலாறு’ சாந்தினிக்கு ஒரு பாடமாகவே தோன்றியதில்லை. எம்.எஸ்ஸி வேதியியல் படித்தாள். ஆனால் வயதான பின், அம்மா மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அதில் மிகப்பெரிய ஆர்வம் வந்த அம்மாவின் அந்திமக்காலத்தில், அம்மாவின் உடல் உபாதைகள் காரணமாக அவளிடம் அதிகம் பேச முடியவில்லை. வரலாற்று ஆர்வம் முற்றிலுமாக இப்போது தொற்றிக் கொண்டுவிட்டது. அம்மா நலமாக இருந்த போது இன்னும் அவளிடம் பேசியிருக்கலாம். அது இனிமேல் முடியாது. அவள் எழுதிய புத்தகங்களையாவது படிக்க வேண்டும். அம்மா வரலாற்றை அவளது நினைவாக சாந்தினியிடம் விட்டுச் சென்றுவிட்டாள். கோலம் போடுவோமா என்று ஒரு நொடி யோசித்தாள். இறப்பு நிகழ்ந்த வீட்டில் போடக்கூடாதோ என்ற சந்தேகம் எழுந்தது. அம்மா இதையெல்லாம் யோசித்திருக்கமாட்டாள். வீட்டுக்குள் திரும்பினாள்.

சாந்தினியின் கணவர் மேகநாதன் சென்னைக்குப் போய்விட்டார். அவருக்கு லீவு முடிந்துவிட்டது. அடுத்த வாரம் அவர் வரக் கூடும். வீட்டின் உள் கூடத்துக்கு வந்து அம்மாவின் மூன்று புத்தக அலமாரிகளைப் பார்த்தாள். அவளது படுக்கையறையிலும் இரண்டு அலமாரிகளில் புத்தகங்கள் இருந்தன. அவள் ரிடையரான பின்னால் இறப்பதற்கு ஒருவருடம் முன்பு வரை கூட பல இடங்களில் புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அவற்றிற்கு உயிர் இருந்தது போல், நேராகவோ தலைகீழாகவோ படுத்துக் கிடக்கும். பாதி படித்தவை குப்புறப் படுத்திருக்கும் குழந்தை போல அப்படியே விரித்தபடி கிடக்கும். சில புத்தகங்கள் சிறகை விரித்த பறவைகளைப் போலிருக்கும். சில புத்தகங்களிலிருந்து விவரக் குறிப்புகள் எழுதிய தாள்கள், ரெஃபரன்ஸ் அட்டைகள் கைகளை நீட்டிக் கொண்டிருக்கும். அப்போதெல்லாம் புத்தகங்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. சாந்தினி கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை வேலைக்காரியை வைத்துத் தூசி தட்டி அலமாரிகளுக்குள் அடுக்கி வைத்துவிட்டாள். வேலைக்காரி முந்தாநாள் சொன்னாள் ‘அம்மா இருக்கும் போது சுத்தம் பண்ணவே கஷ்டமாக இருக்கும். அங்கங்க படிச்சிட்டு வச்சிருப்பாங்க. புத்தகங்கள் இங்க அங்க இடம் மாத்தியும் வைக்க விட மாட்டாங்க. இப்ப எல்லாம் பாக்க அழகா இருக்கு’. உயிரோடு உலவிய புத்தகங்கள் பிணப்பெட்டிக்குள் முடங்கிவிட்டன என்று சாந்தினிக்குத் தோன்றியது.

அம்மா எவ்வளவு படித்திருக்கிறாள்! கடைசிவரை படித்தாள். வரலாறு மட்டுமல்ல… எல்லா சப்ஜெட்டுகளையும் படித்தாள். இதோ இப்போது கூட ‘ஸ்டோரி ஆஃப் பென்சிலின்’ கண்ணில் பட்டது. சாந்தினி படித்திருக்க வேண்டிய புத்தகம். அப்பாவும் அம்மாவும் இருந்த ஒரே டேபிள்-டாப் கழுத்தளவு புகைப்படம் படுக்கையறை மேஜையில் இருந்தது. அம்மா அந்த மேஜையில் அமர்ந்து படிப்பாள், எழுதுவாள். மற்றப் புகைப்படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும். அவற்றைக் கற்பனையில் முன்னும் பின்னும் நீடித்துப் பெரியதாக்கிப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு அலமாரியைத் திறந்து பார்த்தாள். அந்த நேரத்தில் செல்ஃபோன் மணியடித்தது. அலமாரியை மூடிவிட்டு போனை எடுக்க டிராயிங் ரூமுக்கு வந்தாள்.

மீண்டும் அலமாரியை ஒதுங்க வைக்க வேண்டும் என்று அம்மாவின் படுக்கை அறையில் நுழைந்த போது நாலு மணி ஆகிவிட்டது. இரண்டாவது அலமாரியைத் திறந்ததும் பல போட்டோ ஆல்பங்கள் தொபு தொபுவென அவள் மீது சரிந்து, தரையில் ‘தொப்பென்று’ விழுந்தன. பத்துப் பன்னிரெண்டு இருக்கும். அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தம்பியாக இருக்கலாம். எடுத்துப் பார்த்துவிட்டு, கவனமில்லாமல் வைத்துவிட்டுப் போய்விட்டான். அப்படியே தரையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினாள்.

அம்மா வேலைபார்த்த கல்லூரி சம்பந்தப்பட்ட போட்டோக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, குடும்ப ஆல்பங்களை எடுத்தாள். சாந்தினியின் சிறுவயதுப் படங்கள் கவனத்தை ஈர்த்தன. அவள் சிறு சைகிளில் இருப்பது போன்ற படம் அவளுக்குப் பிடிக்கும். அம்மாவைப் போல் நாற்காலியில் உட்கார்ந்து, வயதுக்கு மீறிய கண்ணாடி போட்டுக்கொண்டு புத்தகம் படிக்கிற மாதிரி எடுத்த இரண்டு வயது போட்டோவும் பிடிக்கும். அந்த ஆல்பத்திலிருந்து அந்த போட்டோ வெளியில் விழுந்தது. அம்மாவின் நண்பர், நாகராஜன். இளவயதுப் போட்டோ. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது பஸ் விபத்தில் இறந்தார். அம்மாவுக்கு நெருங்கிய நண்பர். ‘நெருங்கிய’ நண்பர் குறித்த சில தகவல்கள் அவள் காதுகளுக்கும் வந்திருக்கின்றன. சாந்தினி அவற்றைப் பொருட்படுத்தியதில்லை. பெண்களுடன் பெண்கள்தான் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவள் அம்மா. எல்லோருடனும் வேறுபாடு இல்லாமல் பழகுவார். அதனால், அப்பாவும் கூட புறணிகளைக் கவனிக்கமாட்டார். ‘பர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்’. வீட்டு வேலைகளில் உதவத் தயங்கமாட்டார்.

அம்மாவுக்கு வீட்டு வேலைகள் செய்வதே பிடிக்காது. வேண்டா வெறுப்பாகச் செய்வார். புத்தகம் படிப்பதும், எழுதுவதும், அவற்றைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பதும் அவளுக்குப் பிடித்த விஷயங்கள். அப்பா சிறுவயதிலிருந்தே நன்றாகப் படித்தவர். படிப்பது வேலைக்காக அல்லது பணம் சம்பாதிப்பதற்காக என்று நம்புகிறவர். ‘ஒருவேளை பள்ளிக் கல்லூரிக் காலங்களில் பாடப்படிப்புகளுக்கு மிக அதிக நேரம் செலவிட்டதால், புத்தகங்களைக் கண்டாலே பிடிக்காமல் போயிருக்கலாம் என்று சாந்தினி யூகிக்கத்தான் முடிந்தது. சமையல் செய்வார், பாத்திரம் தேய்ப்பார். ஆனால்

புத்தகங்களின் பக்கம் போக மாட்டார். அம்மாவுட்ன பேசுவதற்கு நாகராஜன் பொருத்தமானவராகத் தோன்றும். தம்பியின் முகம் அவர் முகம்போல் இருப்பதாக சிலர் பேசும் புறணிகள் அவள் காதிலும் விழுந்திருக்கின்றன.

‘படிப்பதன் மூலம், அதை விவாதிப்பதன் மூலம் மனிதர்களின் கருத்துகள் மாறுகின்றன… மெல்ல மெல்ல அது சமூகத்தில் பரவி சமூகமும் கருத்தை மாற்றிக் கொள்கிறது. மெல்ல மெல்ல வரும் மாற்றங்களே நிலையானவை. திடீர்ப்புரட்சிகள் வெடித்தால், அவை சில காலங்கள் கழித்து திடீர்-எதிர்ப்புரட்சிகளால் சிதைந்துவிடும்’ என்பது அம்மாவின் நம்பிக்கை. அப்பா மாறான பார்வை கொண்டவர். ‘எல்லாம் நடக்கிற காலத்தில் நடக்கும். காலம் மாறும் போது கருத்துக்களும் மாறூம். நம்மால் செய்யக் கூடுவது ஒன்றும் இல்லை’. சாந்தினி இருவரின் வாதங்களையும் கேட்டுக் கொண்டிருப்பாள். அவள் இருவரது கருத்துக்களுடன் உடன்படவும் இல்லை. வேறுபடவும் இல்லை.

ஆனால் நாகராஜனின் போட்டோ இன்று அவளை மிகவும் தொந்தரவு படுத்தியது. இன்று அதனாலேயே ஒரு அசாதாரண நாளாகிவிட்டது. தலை கனத்தது, நெஞ்சம் இறுகியது. இதுவரை சொல்லப்பட்டது எது பொய் எது உண்மை என்று மனம் சஞ்சலப்பட்டது. மீண்டும் தம்பியின் முகத்தையும் நாகராஜனின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளுக்கு எந்த ஒற்றுமையும் தோன்றவில்லை. சாந்தினி அப்பாவின் சாயலில் இருந்தாள். சாந்தினிக்குத் தெரிந்த சிலர் அவளிடம் அம்மாவைப் போலவே இருக்கிறாள் என்று சொன்னதுண்டு.

அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் காகிதம் கிடைத்தது. அம்மாவின் கைப்பட சாந்தினிக்கு எழுதிய கடிதம். இன்றுதான் பார்க்கிறாள். தான் இறந்த பிறகுதான் படிக்க வேண்டும் என்று நினைத்தாளா? இது தம்பியின் கையில் அல்லது வேறு யார் கையிலாவது கிடைத்திருந்தால்? அவளுக்கு மனம் இருளத் தொடங்கியது. அதிர்ச்சியில் எழுந்து அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். அழத் தொடங்கினாள். உண்மைகளைக் காலம்கடந்து ஏற்றுக் கொள்வது எவ்வளவு கடினமானது? அவள் நாகராஜனின் மகள். இதை நம்ப முடியவில்லை. இந்தச் சில வாக்கியங்கள் அவளது ஐம்பது வருட வாழ்க்கையின் நினைவுகளையெல்லாம் குலைத்துச் சிதறடித்து, துயரமாக வெடித்தன. இன்றைய வாழ்வையும் குலைத்துப் போட்டுவிடுமா? பயம் அவளை முழுவதுமாக இறுக்கி அழுத்தி அணைத்துக் கொண்டது. அவளால் முச்சுவிடுவது கூடக் கஷ்டமாக இருந்தது. இரண்டு மூன்று என்று பல முறை படித்தாள். நம்பாமலும் இருக்க முடியவில்லை. இதில் சம்பந்தப்பட்ட மூவர் இறந்துவிட்ட பிறகு இது ஏன் அவள் கையில் கிடைத்தது? கிடைக்காமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே தெரிந்திருக்காதே! ‘இதையேன் எழுதிவைத்தாள். என்னிடம் சொல்லத் தைரியம் இல்லையா? உண்மை அவளை உறுத்தியிருக்க வேண்டும். நாற்பத்தி எட்டு வருடத் தாம்பத்தியம் இந்த ஒரு காகிதத்தின் வார்த்தைகளால் சிதைந்துவிடுமா?’ நாகராஜனின் சாடையைத் தம்பியிடம் தேடிக்கொண்டிருந்த அவள் தனக்கு நேர்ந்ததை எண்ணி வெட்கப்பட்டாள். மற்றவர்களைப் பற்றிய வதந்திகளை எளிதாக நம்பத் தயாராகிவிடுகிறோம். நம்மைப் பற்றிய உண்மைகளை நம்புவது கடினமாக இருக்கிறது. எது நாகரீகம்? இந்த உண்மையை குடும்பத்தினரிடம் சொல்வதா? தம்பியைக் குறித்து வெட்கப்பட்டதை நினைத்து வருத்தப்படுவதா?

உண்மையைச் சாந்தினி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதினாளாம். ஐம்பது வருடங்களாக நந்தகுமார் என்ற அம்மாவின் கணவரை அப்பா என்று கொண்டாடி வாழ்ந்து தீர்த்த பிறகு, அப்பாவும் அம்மாவும் நாகராஜனும் மறைந்த பிறகு, சாந்தினி அதைத் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது? இவ்வளவு பெரிய ஆகிருதியாக நினைத்திருந்த அம்மா இப்படிப் பண்ணிவிட்டாளே என்று கலங்கினாள். இன்றைக்கு ஒரு பிரயோஜனமில்லாத ஒரு உண்மையைத் தெரிந்துகொண்டால், கடந்த கால வாழ்க்கை நிஜமானதல்லவா?

உயிரணுவைத் தந்துவிட்டதால் மட்டும் ஒருவன் தந்தையாகிவிட முடியுமா? இத்தனை வருடங்களாக சிறுவயதிலிருந்து என்னைக் கொஞ்சிக் குலவிச் சீராட்டி, அருகில் படுத்திருந்து, நெஞ்சில் சுமந்து கதை சொல்லி, பள்ளிக்குக் கொண்டுவிட்டு, படிக்கவைத்து ஆளாக்கி, திருமணம் செய்துவைத்து இத்தனை ஆண்டுகள் இன்ப துன்பங்களில் துணையாய் இருந்து அன்பைப் பொழுந்தவர், ஒரு சிறுதுளியைத் தரவில்லை என்பதனால் மட்டுமே தந்தை என்ற இடத்தை இழந்துவிடுவாரா?

சாந்தினி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். உள்ளம் தெளிவடைந்தது போலிருந்தது. அவள் பிறந்ததிலிருந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்பா இறக்கும் வரை, அப்பா அவளை நேசித்தார். அவள் அப்பாவை நேசித்தாள். தந்தைக்கும் மகளுக்கும் வேறென்ன உறவு வேண்டும்?

அப்பா மீது நடுநடுவில் கோபம் வந்தது. ஏன் இப்படி நடந்தது? சொல்வதற்கு அம்மா இல்லை. திடீரென்று நேர்மாறாக யோசித்துப் பார்த்தாள். ‘அதனால் என்ன? அம்மா என்னைக் கடைசிவரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அவளை அவதூறு செய்ய எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான், அவள் தந்த வரம். அவள் தனது தவறை நினைத்து கடைசிவரை துயரப்பட்டிருக்கலாம். அதிலிருந்து மீட்சி பெற எனக்கு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கலாம்’. ‘கவலைப்படாதே அம்மா, நான் உன்னைத் தவறாக நினைக்கவில்லை’ ‘இதைச் சாந்தினி தெரிந்து கொள்வதால் எந்தக் கறையும் இல்லை, வாழ்வின் எந்த நிலையும் மாறிவிடப் போவதில்லை. இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சாந்தினிக்கு உண்டு’ என்று நினைத்து உண்மையை சொல்ல நினைத்திருக்கலாம்.

உறவுகள் வளர்வதற்கான இடம் தான் குடும்பம். ஒவ்வொருவரும் அன்பில் நனைந்து தலைசாய்த்துக் கொள்ளும் ஓய்விடம். கண்ணீரைத் துடைத்துவிட்டு பெரு மூச்சுவிட்டுக் கொண்டே எழுந்தாள். தேநீர் அருந்தினால் அவளுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும். அடுக்களைக்குப் போனாள். அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள். இன்று இந்தக் காகிதம் இருக்கத் தகுதியற்றது. அது உண்மையோ பொய்யோ, இன்று பொருட்படுத்தத் தக்கதல்ல. உறவுகள் நம்பிக்கையில் முகிழ்ப்பவை. அது இருக்கும் வரை உறவுகள், வாழ்க்கைகள் இனிமையாக இருக்கும்.

ஜீன்களின் ஆராய்ச்சி செய்தவர்கள் கண்டுபிடித்த உண்மையொன்றைப் படித்தது ஞாபகம் வந்தது. ‘இந்தியாவில் ஒரே மாதிரியான ஜீன்கள் மிக அதிகம் கொண்ட ஒவ்வொரு குழுவிலும்/குடும்பங்களிலும் ஏதோ ஒரு ஆணினுடைய ஜீன் நிறையப் பேரிடம் இருக்கிறது’. விஞ்ஞான உண்மையை விட உறவுகளின் அரவணைப்பு மேலானது.

சாந்தினி அந்தக் காகிதத்தைக் கிழித்து, டீ பாத்திரத்துக்குக் கீழ் எரிந்து கொண்டிருக்கும் தீயில் கருக்கினாள். சாதாரண நாளாகத் துவங்கிய அந்த நாள், முடியும் போது ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவந்த உணர்வை அவளுக்குத் தந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *