புகழ் என்றால் இதுவன்றோ புகழ்!




பல்யாகசாலை முகுகுடுமிப் பெருவழுதியைப் பாடினார் காரிகிழார். அது, புகழ்ப்பாட்டு. அதன் பொருள் இதோ ….
“வடக்கே, பனி குளிக்கும் இமயம்; தெற்கே, திரைகொண்டு கரை மோதும் குமரி;
கிழக்கே, பண்டு சகரரால் தோண்டப் பட்ட கீழ்க் கடல் ;
மேற்கே, முத்து முதிர்ந்த மேற்கடல்! இந் நான்கு எல்லைகளுள்ளும் அடங்காத உன்புகழ் இரு கூறாய் பிரிந்தது;
ஒரு கூறு, மண் பிளந்து கீழ் சென்றது. மற்றொன்று, விண் பிளந்து மேற் சென்றது.
இவ்வாறு வளர்ந்த உன் புகழ்க்குக் காரணம் ஆற்றல்! அது, கோணாது, கொள்கை பிறழாது, வெற்றிக் கொடி போல் விண்ணுயர்ந்த ஆற்றல்!
உன் ஆற்றல் அறியாது, பகைவர் போருக்கு வரின் அவர் அரண்வென்று, முறியடித்துப் பொருட்களை பரிசிலர்க்கு வழங்குக!
உன் கொற்றக் குடை. வாழ்க; அது முக்கணான் கோயில் முன் தாழ்க!
அந்தணர் உன்னை வாழ்த்த, அவர்க்கு உன் சென்னி வணங்குக!
உனது மாலை, பகைவர் நாட்டிற் புகுந்த தீப் புகையால் வாடுக!
உன் சினம், முத்தாரம் தவழ, முறுவல் ஒளிர நிற்கும் உன் மனையாள் முன் தணிக!
குளிர் மதி போன்றும், கொடுங் கதிர் போன்றும், நாட்டார்க்குத் தண்மையும், ஒட்டார்க்கு வெம்மையும் வழங்கி உன் திறம் ஓங்குக!
முதுகுடுமிப் பெருவழுதியே, சாலை தோறும் புகழப்படும் நின் பெயர், காலையிற் கதிர், மாலையில் மதி!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்