பாவப்பட்ட விஜிதா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 4,479 
 
 

குயில்கள் கூவிட காகங்கள் கரைந்திட இனிமையான இசைகளோடு கிழக்கு வானில் சூரியன் அழகாய் உதித்து, இருள் நீக்கி ஒளிபரப்பிட பலர் பலவகையான நல்லெண்ணங்களுடன் விடியலை வரவேற்றிட விஜிதா மாத்திரம் இந்த சுகமான காலைப் பொழுதை இரசித்து எழுந்து காலைக் கடன்களைக் கூட முடித்திட சக்தியற்றவளாய் வேண்டா வெறுப்புடன் எழுந்தவள் தன்னையும் மீறி கண்களில் வடிந்த கண்ணீர் துளிகளை யாரும் கண்டிடாத வண்ணம் சீக்கிரமே சீலை தலைப்பால் துடைத்தாள்,.

இரவெல்லாம் அவள் சரியாக தூங்கவில்லை. சிந்தனை வயப்பட்டவளாய் தன் தவறுகளை நினைத்து நினைத்து மனம் வருந்தினாள். அதன் காரணமாய் இன்றைய விடிவு தேவையற்ற ஒன்றாகத் தான் இருந்தது. படுக்கையை சீர் செய்திட எழுந்தவள் என்ன நினைத்தாளோத் தெரியவில்லை மீண்டும் படுக்கையில் சாய்ந்து விட்டாள்.

கடந்த கால நினைவுகள் அவள் கண் முன்னே தோன்றி அவளை வாட்டி வதைத்தன.

விஜிதா தியாகராஜா குடும்பத்தில் மூத்தப் பெண்ணாய் பிறந்தவள். ஓரளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்தவள்.

கல்யாண வயதை எட்டிய வேளை தன் தந்தையார் தரகர் மூலமாய் வரன் தேடிய போதுதான் குகன் என்னும் அழகான வாலிபன் கண்ணில் பட்டான்

குகன் ரொம்ப ரொம்ப அழகாய் வாட்ட சாட்டமாய் கோர்ட்டும் சூட்டும் அணிந்து, கூலிங் கிளாஸ் கண்களை மறைக்க பள பளக்கும் சப்பாத்துச் சோடி சத்தங்கள் எழுப்ப விஜிதாவின் வீட்டுக்குள் நுழைந்தவன் ஒரே நிமிடத்தில் அவள் மனதைத் தொட்டான்.

நாள் பார்த்து, நேரம் பார்த்து நட்சத்திரங்கள் கணித்து கல்யாண மேளம் கொட்டிட மங்கள நாண் கட்டி தங்கக் குணம் படைத்த தாரகையை தாரமாய் ஏற்று மனம் ஒத்த, உடம்பொத்த ஜோடியாய் மனை புகுந்து மணவாழ்க்கையை தொடர்ந்தார்கள்.

இனிமையான இல்லறத்துக்கு உதாரணமாய் முகுந்தினி புத்திரியாய் பிறந்தாள்.

இந்த வேளை வரையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருவரிடையே எழுந்த வண்ணம் தானிருந்தன.

ஒரு நாள் விஜிதாவின் சகோதரனும், அனபு கலந்த உறவாய் விருந்தாய் வந்தமர்ந்திருந்தான்.

குகன் நல்ல குடிபோதையில் வீட்டை வந்தவன், மனைவியுடன் பிரச்சினையை ஏற்படுத்திட இதைக் கண்ட சகோதரன் அந்த பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்திட, விளைவு பாசத்தின் பேரில் சகோதரன் வீட்டிற்குக் கூப்பிட்டிட இவளும் குழந்தையை தூக்கிக் கொண்டு பிறந்தகம் வந்து சேர்ந்து விட்டாள்.

அவள் படி தாண்டி கணவனை உதறிவிட்டு வந்ததன் விளைவு அவள் பட்ட படுகின்ற துன்பங்களும் வேதனைகளும் எழுத்தில் வடித்திட முடியாதவை. அவள் மட்டுமா துன்பத்தை அனுபவிக்கின்றாள், இல்லையே! பச்சிளம் பாலகியும் அல்லவா கொடுமைகளை ஜீரணிக்க முடியாமல் வெதும்பித் தரணியில் தான் பிறந்ததே பாவம் என வேதனைப் படுகின்றாள்.

ஆமாம்….கணவனைப் பிரிந்து, வந்த தன் மகளை எந்த புத்திமதியுமே கூறிடாது தெய்வானை அம்மாள் சேர்த்துக் கொண்டாள்

விஜிதாவும், வாழ்க்கையில் பிரச்சனைகள் சகஜம், எதையும் சமாளித்து அடுத்தவருக்கு பாரமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்க மறந்து போனாள். அதாவது சிறு பிள்ளைத் தனமாய் சகோதரன் அழைத்து வந்து விட்டானே என்று உணர்ந்திட அவளது சிறிய மூளை இடம் கொடுக்க, மறுத்து விட்டது. எல்லா பிள்ளைகளுக்கும் நல் வழி காட்ட வேண்டிய தாயார் தன் பிள்ளைக்கு, நல்லதைத் தெளிவுப் படுத்திட மறந்து விட்டாள். விஜிதாவின் சகோதரன் சில வருடத்தில் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டான்.

அவன் மனைவிக்கு விஜிதா வேலைக் காரியாகவும், முகுந்தினி எடு பிடி பிள்ளையாகவும், இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டார்கள்.

நாத்தனார் கொடுமையந்த வீட்டுக்குள் தலை தூக்கி நின்றிட தாயும் பிள்ளையும் விழிபிதுங்கிப் போகும் வழி தெரியாது திகைத்துப் போய் திசை மாறிய சிந்தனையில் அசந்து போனார்கள்

இப்படி பலவகையான சந்தர்ப்பங்களில் அந்த வீட்டிற்குள் மாடாய் உழைக்க வேண்டியவளாய் மாறிப் போனாள். பெற்ற தாய் கூட சில வேளைகளில் கணவனை விட்டு விட்டு, ஓடி வந்து வாழா வெட்டியாய் வந்து எல்லாருக்கும்; பாரமாய் இருப்பவள் தானே நீ; என திட்டி விடுவாள்.

முகுந்தினியை தொட்டதுக்கும், பட்டதுக்கும் கொஞ்சம் கூட அன்பே இல்லாது அடித்து உதைத்து தலையில் குட்டி வேலை வாங்குவார்கள்.

இதை எல்லாம் விஜிதா கண்ணில் படும் படி தான் செய்வார்கள். இருந்தும் அவளால் அதைத் தட்டிக் கேட்டிட முடியவில்லை. மூன்று நேர உணவு வேளை இந்த தாய்க்கும் பிள்ளைக்கும் இரண்டு வேளை உணவாக சுருங்கிப் போயிருந்தது

இப்போதெல்லாம் அவள் கண்களில் நீர் ததும்பிட எத்தனையோ நியாயங்களை நினைக்கின்றாள். ஒரு நாள் அடுத்த வீட்டு ஆச்சி கூறிய கதை நினைவுக்கு வந்தது~~ ஒரு பெண்ணுக்கு எத்தனை தேவைகள் இருந்தாலும் கூட படி தாண்டா பத்தினிக்கு இருக்கும் பெருமை இருக்குகின்றதே அதைப் போல ஒரு சிறந்த பாக்கியம் வேறில்லை .மங்கை ஒருத்தி ஒருத்தனுக்கு மனைவியாய் அமைந்து விட்டால் பிறந்தகத்தை தூரத்தள்ளிய உறவாக வைத்துக் கொண்டு தீபாவளி புதுவருடம் ,போன்ற விசேஷ தினங்களுக்கு வாங்கிக் கொளுத்தும் பட்டாசுகளைப் போன்று ,அன்றையத் தினங்களில் வந்து பிறந்தகத்தாரிடம் சந்தோசமாய் இருந்து விட்டுப் போக வேண்டும்.

அடித்தாலும் உதைத்தாலும் அன்போடு அனைத்து சுமையாய் நினைக்காது கஞ்சி ஊத்தும் ஒரே உறவு தாலி கட்டியவனாய் தான் இருக்க முடியும். அவன் வாரிசை ஒரு நாளும் துன்புறுத்த மாட்டான் .அதுகளின் நல் வாழ்வுக்காக ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிந்தனைகளைப் புகுத்தி சிறந்திடச் செய்வான். கட்டியவளை கை விட்டு ஓட நினைக்க மாட்டான் .

அவன் ஓட நினைத்தாலும் மனசாட்சி இடம் கொடுக்க மாட்டாது. அதே போன்று தான் ஒரு பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் வாழ்ந்திடும் திறமை இருக்க வேண்டும். ஒரு பெண் விருந்தாளியாய் பிறந்தகத்துக்குப் போகும் நிலைக்கும், வாழா வெட்டியாய் பிறந்தகத்துக்குள் நுழையும் நிலைக்கும் நிறைய வேறு பாடுயிறுக்கின்றது. அவளுக்கு அங்கே அன்பு செலுத்த யாரும் இருக்க மாட்டார்கள். ஆறுதல் கூறிடவோ, ஆசையாய் வா வா என்று அழைத்திடவோ, பாசம் காட்டும் சகோதரர்கள் சுமையை தூக்கிடவோ யாரும் முன் வர துணிய மாட்டார்கள். உயிருடன் இருக்கும் கட்டியவனோடு வாழ்ந்திடாதவளை உறவுகள் மதிக்காது. ஊரார் கண்டு கொள்ள மாட்டார்கள். சமூகம் தூற்றும்.

பெண் ஒருத்திப் படும் வேதனையில் பச்சிளம் மழலைகளும் வேதனைப் படுவார்கள். இது எல்லாவற்றையும் விட கூழோ கஞ்சோ குடித்துக் கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாய் குழந்தைகளுடன் சந்தோசமாய் குடும்பத்தோடு வாழ்ந்து முடிப்பதில் தான் ஒரு பெண்ணின் பெருமையே நிலைக்கும||;.

இப்படி அந்த ஆச்சியான வாழ்ந்து அனுபவித்த அனுபவ சாலி கூறியது நினைவில் வந்து தன் புத்தியைக் கடன் கொடுத்ததன் விலைவாய் இன்று படும் துன்பம் எத்தனை உண்மையானது.

கடவுளே! பெண் புத்தி பின் புத்தி என்பது சரிதானா? நான் கொஞ்ச நேரம் படைத்தவனை நினைத்து மனதைத் திடப்படுத்தியப் பின் ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அவர் என்னை திட்டிய வேளையில் அந்த இடத்தை விட்டு சிறிது காதுக்குக் கேட்காத தூரத்தில் ஒதுங்கி இருந்திருக்கலாம்.

அவர் செய்த நல்லவைகளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கலாம். விடியும் வரை பொறுத்திருந்து கணவரோடு பேசி பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டு அந்த குடி போதையின் விளைவைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கலாம்.

ஒரு பெண் நினைத்தால் எதையும் எப்படியும் செய்து முடித்திருக்கலாம். என்ற உண்மையை அவருக்கு உணர்த்தியிருக்கலாம். இதை எல்லாம் விட்டு விட்டு சகோதர பாசத்தை நம்பி வந்து இரண்டும் கெட்ட நிலையில் சங்கடப் பட்டு நிற்பதை நினைக்கையில் இதயமே வெடித்து விடும் போலிருந்தது.

விஜிதாவிற்கு எல்லா நினைவுகளையும் கிழித்துக் கொண்டு ~~ அம்மா|| என்ற சத்தம் அவளது காதுகளைத் துளைத்திட தான் இன்னும் படுக்கையில் தானிருக்கின்றேன் என்ற சுய நினைவுக்கு வந்தவள் போர்வையை உதறித் தள்ளிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடியவள் ஏழே வயதாகிய தன் மகளின் நிலை கண்டு துடித்துப் போனாள்.

முகுந்தினி அழகாகத் தூசி துடைத்து பொருட்களை அடுக்கி வைத்து வீட்டை கூட்டிட வில்லை என்று சுகந்தி அடித்த அடியின் வேகம் பாலகியின் கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்திட வலி தாங்காது தாயை கூப்பிட்ட சத்தம் தான் அது..

தாயைக் கண்டவள் எனக்கு இனியும் இங்கே இருக்க முடியாதம்மா, வாங்கம்மா நாங்க எங்க வீட்டுக்குப் போயிடுவோம் என்று தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள். விஜிதாவும் கட்டி அணைத்து கண்ணீர் மல்க சிலையாக நின்றாள்.

சிறு பிள்ளைத் தனமாய் கணவனைப் பிரிந்து வந்தவள் ,வாழ்க்கையின் பக்குவத்தைப் புரிந்து கொண்டாள்.

விளைவு யாரையும் குற்றம் சாட்டிட ஆசைப் பட வில்லை. யாரும் உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அடிமையாகத் தானிருக்க வேண்டும். வேண்டாத உறவுகளை ஆதரிப்பவர்கள் அவர்களின் அடிமைகளாய் வைத்திருக்கத்தானே தத்தெடுப்பார்கள்.

அந்த வகையில் சகோதரனை குறைக் கூறிட துணியவில்லை. அவன் குடும்பத்தைக் கட்டிக் காத்திட வேண்டும். அந்த உறவை சுகந்தி இறுக்கிப் பிடித்து நிலை நாட்டிட வேண்டும். இந்தக் காரணங்கள் இப்படி இருக்க விஜிதாவின் தாயும் புத்தி கூறமறந்துபோனாள். எல்லா குற்றங்களையும் தானே ஏற்றுக் கொண்டு மகளின் கையிலிருந்த தும்புத் தடியை வாங்கிக் கூட்டி முடித்து, துணிகளைக் கழுவிட ஆயத்தமானாள் விஜிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *