கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 9,197 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேதிரிஸ் அப்புஹாமி ஒட்டிக்கொண்டு போன லொறி (பெரிய பென்ஸ்) அந்த மலைப்பாதையை விட்டு விலகி ஒரு விபத்துக்குள்ளானபோது, அதிகாலை இரண்டரை அல்லது மூன்று மணியிருக்கும். இது நடந்தபோதுதான் அவருக்கு முழு உணர்வும் திரும்பி வந்தது. மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங் களிலிருந்து கொழும்பு, திருகோணமலைத் துறைமுகங்களுக்குத் தேயிலைப் பெட்டிகளைக் கொண்டுபோய்க் கொண்டு போய் இப்போது அந்த லொறியின் மைலோமீட்டர் காட்டுகிற 89,478 மூன்றாம் முறையானது. பேதிரிசுக்கு என்ன மீட்டர்?

அவர் லொறி லைசென்ஸ் வாங்கினது 1941ஆம் ஆண்டில். அப்போ இந்த மாதிரி பெரிய டீசல் லொறிகள் இல்லை. அந்தக் காலத்துச் செவலட், போட், கொமர் ஏன் கொஞ்சம் பிறகு வந்த மொறிஸ் கொமர்ஷல் தானும் ஒன்று, இரண்டு தொன்னுக்கு மேல் பாரம் இழுத்ததில்லை. அந்நாட்களில் தேயிலைப் பெட்டிகளை நேரே கொண்டு போய் கொழும்பில் இறக்குவதுமில்லை. தோட்டங்களில் சேர்த்து ரெயில்வே ஸ்டேஷன் குட்ஸ் ஷெட்டில் தட்டி விடுவார்கள். டீசல் லொறி கள் புழக்கத்திற்கு வந்து கொழும்புக்குத் தேயிலைப் பெட் டிகளை நேரே கொண்டுபோகத் தொடங்கியபோது, முதன் முதலில் கம்பெனி லொறியை ஓட்டிக்கொண்டு போன பெருமை பேதிரிசைச் சாரும். அது ஒஸ்டீன் டீசல் லொறி. இப்போது அதைச் சிறு தூரங்களுக்கான சவாரிகட்கு மட்டும் உபயோகிக்கிறார்கள். ஆனால், இப்போது கொழும்பென்ன, திருகோணமலைத் துறைமுகத்துக்குப் போய்வரும் சவாரி களுக்குக்கூட பேதிரிசை அமர்த்திவிடுகிறார்களே!

கிளீனர் மாணிக்கத்துக்கு இவைகளெல்லாம் பாடம்.

இதுதான் பேதிரிசுக்கு முதல் விபத்து அல்ல என்றாலும், இதுதான் அவர் பிழைவிட்ட முதல் விபத்து. இது எப்படி நடந்தது?

கொழும்புக்குத் தேயிலைப் பெட்டிகளைக் கொண்டு போகும் போது ஒரு கால் போத்தல் சாராயம் இரண்டு பகுதிகளாய்ப் பிரித்து – முதலில் லொறியில் ஏறும் போதும், பிறகு நடுவில் அவிசாவளையிலும் – கட்டாயம் உள்ளே போக வேண்டும். திரும்பிக் கொழும்பிலிருந்து வரும்போது வசதியான இடத்தில் கித்துள் கள்ளு இரண்டு போத்தல்களுக்குக் குறையாமல் மண்டுவது உண்டு. இந்த விபத்துக்குக் காரணம் இந்தக் கள்ளுக்கு மேலாய்ச் சாராயம் கொஞ்சம் உள்ளே போனதுதான் என்று சொல்வீர்களானால், அது எவ்வளவு பிழையான காரியம்! கொழும்பிலிருந்து மலைநாட்டிற்குத் திரும்பும் பாதை முழுக்க ஏற்றந்தான். வழக்கமாகத் திரும்பும் போது உரம் அல்லது வேறு பாரமான சாமான்கள் இருக்கும். இந்தமுறை கொஞ்சம் டயர்கள் மட்டுமே ஏற்றப்பட்டிருந்தது, ஒருவிதத்தில் நன்மையாகவும் இன்னொரு விதத்தில் தீமையாகவும் அமைந்துபோய்விட்டது. கொழும்பில் டயர்கள் ஏற்றி முடிய மாலை ஆறு மணியிருக்கும். பாரமில்லைத்தானே? சாவகாசமாக வந்து கொண்டிருந்தபோது – அவிசாவளை தாண்டிய பின்னர் – கித்துள் கள்ளு இடந்தேடி, வழக்கமான அளவு உள்ளே போனபின்னர் – கொஞ்சம் இடியப்பம் சாப்பிட்டார். அதற்குப் பிறகு குணசேனாவைக் காண நேர்ந்தது. குணசேனா ஒரு முக்கிய, அபிமான சிஷ்யன் – இப்போது மாணிக்கம் மாதிரி – இன்றைக்கு அவனும் ஒரு லொரி ட்ரைவர். அவன் பேதிரிசை விடவில்லை. சந்திப்பின் விளைவாய் ஒரு கால் போத்தல் சாராயம், இரண்டு போத்தல் கள்ளுக்கும் இடியப்பத்திற்கும் இடையில் கலக்கத் தொடங்கியது. ஏற்றம் வர பேதிரிசின் கண்கள் சிவப்பாகிக்கொண்டு வந்தன. லயனலின் ஞாபகமும் வரத் தொடங்கியது. ஓர் இடஞ்சுழி வளைவு. கொஞ்சம் வலப்புறமாகச் சென்று சுழற்றித் திருப்ப வேண்டும். பாதைக்கு வலப்புறமாகப் போகும் போதே நிதானம் தவறுவது ஓரளவு தெரிந்தது. அந்தக் கணத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பொத்… அதைத் தொடர்ந்து இன்னும் சப்தங்கள். ஒரு பதினைந்து அடிப் பள்ளத்தில் தாய் சேயை அணைத்துக் கொள்வதைப் போல் இரண்டு சவுக்கு மரங்களால் தாங்கப் பட்டிருக்காவிட்டால், லொறி இன்னும் கீழே ஐநூறு அடி போயிருந்திருக்கும். பேதிரிஸ், மாணிக்கம் இவர்களின் உயிர்க ளென்ன – ஒரு வகையில் – பேதிரிசுக்கு லயனலின் தற்கொலை யில் ஒரு புதிய பரிமாணம் தெரியவந்ததும் இந்த சவுக்கு மரங்களின் – இல்லை பேதிரிசும் மாணிக்கமும் நினைத்துக் கொண்டதைப் போல அந்தக் கதிர்காமக் கடவுளின் – அரவணைப்பினால் தான்.

பள்ளத்தில் சாய்கிறபோது மாணிக்கம் சடுதியாகத் தன் குருவைப் பிடித்துக்கொண்டான். முன் விண்ட் ஸ்கிரீனில் மண்டை அடிபட்டுப் பேதிரிசுக்கும் காயம். பலமானதில்லை . மாணிக்கமும் பேதிரிசும் அறுபது பாகை சாய்விலிருந்த லொறி யிலிருந்து வெளியே குதித்தபோது, தாக்கியிருந்த இடப்பக்கத்து முன்சில்லு சுழன்று கொண்டிருந்தது. மாணிக்கம் திரும்ப ஏறி, எரிந்து கொண்டிருந்த இடப்பக்கத்து லைட்டை நிற்பாட்டினான். டாஷ் போர்ட்டிலிருந்து டோச் லைட்டை எடுத்துக்கொண்டான்.

பேதிரிஸ் அதிர்ந்துபோயிருந்தார். நிற்பதற்குக்கூட கஷ் டமாக இருந்தது – மாணிக்கம் தன் தலைப்பாகைத் துண் டைக் கிழித்து அவர் தலையிலும் கையிலும் கட்டுகள் போட்டான். அவனுக்கு ஒரு காயமுமில்லை. பேதிரிசுக்கு நடக்கக் கஷ்டமாக இருந்தது. அந்தக் குளிர்ந்த மெல்லிய பனிப்புகையூடே பேதிரிசை அங்கே அமர்த்தலாம் என்று பார்த்தான். வேறு வாகனம் ஒன்றும் பாதையில் காணவில்லை.

மாணிக்கம் பேதிரிசை தாத்தே’ (அப்பா!) என்றுதான் அழைப்பான். பேதிரிசும் மாணிக்கத்தை ‘புத்தே’ (மகனே!) என்று கூப்பிடுவார். சிங்களத்தில் தான் பேசிக்கொள்வார்கள்.

“தாத்தே கொஞ்சம் நிற்கிறீர்களா? பக்கத்தில் படுத்திருக்க இடம் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.”

“நானும் வருகிறேன்.” பேதிரிசுக்கு நிற்கப் பொறுமை யில்லை; மாணிக்கத்துடன் புறப்பட்டார். இரண்டு பேருமாக, அந்த லொறி தாண்ட முயற்சித்த வளைவைத் தாண்டிய வுடன், தேயிலைக் கொழுந்தை நிறுத்து பக்டரிக்கு ஏற்றும் ஒரு சிறிய கொட்டகையைக் கண்டு, பேதிரிஸ் அங்கே ஆசு வாசப்படும் வரைக்கும் பாதையில் வேறு வாகனமும் வரவில்லை . மாணிக்கம் திரும்ப லொறி சரிந்திருந்த இடத்திற்குப் போனான். பேதிரிசுக்குப் பனி குளிர்ந்தது. இன்னும் கொஞ்சம் சாராயம் இருந்தால்… அந்த நினைவே சூட்டைக் கிளப்பியது. மெல்லிய பனிப்படலங்களுக்குக்கூடாக நட்சத்திரக் கூட்டங்கள் மின்னுவது தெரிந்தது. ‘நல்ல காலமாக மழையில்லை …. என்ன நல்ல காலம்? நல்ல காலமென்றால் லயனல் சாவானா? வெறும் மொட்டையாக , என் சாவிற்கு நானே காரணம். யார்மீதும் எனக்கு வெறுப்போ கோபமோ கிடையாது. என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்’ என்று எழுதி வைத்துவிட்டுப் போனானே! அது என்ன? என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்.’ இந்த நாசமாய்ப்போன முதலாளி நேரத்துக்கு வேலை கொடுத்திருந்தால் அவன் சாவானா? எவ்வளவு நாட்களாய் வேலை தேடுகிறது? ச்சா…. இன்னும் கொஞ்சம் சாராயம் இருந்தால்…. அதெல்லாம் கிடக்க மாணிக்கத்திடம் சொல்ல வேண்டும். ரகசியமாக இந்த ரை ரொட் நட்டை (Tie Rod Nut) லூஸ் பண்ணும்படி. வரட்டும்…’

பல நினைவுகளும் பேதிரிசை வருத்துவதில் பிழையில்லை. இந்த லயனல் என்ற லயனல் அப்புஹாமி, அவர் மகன். கேகாலை என்ற ரவுனுக்குப் பக்கத்திலிருந்த அவர்களுடைய கிராமத்து வித்தியாலயத்தில் பத்தாவது படித்து சித்தி அடைந்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தான். பேதிரிசுக்கு பத்தாவது என்பது முழுப் படிப்பு என்கிற யோசனை இருந்தது. அது எப்படி இவ்வளவு படித்தவனுக்கு வேலையில்லாமல் போகும்’ என்கிற வியப்பும் வந்து சேர்ந்தது. லொறிக் கம்பெனி முதலாளி யிடம் கூட்டிக்கொண்டு போனதைக் கசப்புடன் மீட்டுக் கொண்டார். அந்த முதலாளி, ‘பார்ப்போம், பார்ப்போம்’ என்று எவ்வளவு நாட்களாகச் சொல்லிக்கொண்டிருந்தான்?

‘சிலவேளை லயனல் உயிரோடு இருந்திருந்தால் தந்திருப்பான். என்ன தந்திருப்பான்? அவனுக்குத் தெரியும் இப்படி லயனல் வேலையில்லாமல், தேடித்தேடிக் கடைசியாய் வழியில் லாமல் தற்கொலை பண்ணிக்கொண்டது. மகன் செத்துப் போனான் என்று செய்தி வர ஒரு நூறு ரூபாயை விட்டெ றிந்து தன் பாவத்தைக் கழுவிக்கொண்டான். இவன் வேலை தந்திருந்தால் அவன் சாவானா?” யோசனைகள் முடிவில்லா மல் வந்து கொண்டிருந்தன.

மாணிக்கம் திரும்பி வந்தான். அவன் கொண்டுவந்த சாக்கையும் கம்பளியையும் அவனே விரித்துத் தன் குருவை அமர்த்துவதற்குள், குரு கெஞ்சினார்.

“புத்தே (மகனே!) கொஞ்சமாவது உன்னிடம் இல்லையா?” எது என்பது மாணிக்கத்திற்குத் தெரியும்.

“இல்லை தாத்தே (அப்பா!). பொலிஸ் வந்தால் என்ன சொல்வார்கள்? அதெல்லாம் வேண்டாம். கஷ்டம்.”

“இல்லாவிட்டால் போகிறது. புத்தே இங்கே வா!” குரலைக் குறைத்தார்.

“டை ரொட்டை லூஸ் பண்ணு…”

மாணிக்கம் பவ்யமாகச் சிரித்தான். “லூஸ் பண்ணி விட்டேன்.”

“ஹொந்தாய் புத்தே (நல்லது மகனே!).” பேதிரிஸ் ஒரு வகை நிம்மதி அடைந்து தூங்க முயற்சித்தார். மாணிக்கம், அவரிடம் லொறிக் கம்பெனிக்குச் சொல்லி அனுப்புவதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அவர் தூக்கத்தை ஏன் கலைப்பானென்று மெல்ல நடந்து லொறியின் சீட்டுக்கு அடியில் உண்மையில் இருந்த கொஞ்ச அலுப்பு மருந்தை மிடறிக்கொண்டான்.

பேதிரிசின் நினைவு மூன்று மாதங்களுக்கு முன் செத்துப் போன லயனலில் லயித்தது. தூக்கம் வந்தால் கனவிலும் அவனே. ஒரு பெரிய சிம்மாசனத்தில் லயனல் நல்ல கோட்டு சூட்டுடன் இருக்கிறான். அக்கம்பக்கம் பெரிய மனிதர்கள் கைகட்டியபடி நின்றுகொண்டிருக்கிறார்கள். வழுவழுப்பான தரை மேல் உலகம். இந்தக் கூட்டத்துக்குள் பேதிரிஸ் நடக்கிறார்.

“அப்பா, பார்த்தீர்களா? இதுதான் சொன்னேன், என் வாழ்வு முற்றாக வேண்டுமென்று. அது சரி, எங்கே அம்மா, குசுமா , சோமபால, மருமகன்? தனியாகத்தானா வந்தீர்கள்? அவர்கள் வர நாளாகுமா? நான் நினைத்தால் அவர்களைக் கூப்பிட முடியும். கூப்பிடட்டுமா?” லயனல் கையைத் தட்டு கிறான். வெள்ளை வெளேரென்று கோட்டு சூட்டுடன் நிற்கும் இரண்டு பேர் சேவகர்கள் வருகிறார்கள். பேதிரிஸ் அலறு கிறார். “லயனல்! வேண்டாம் வேண்டாம்…” இந்தக் கட்டத்தில் விழிப்பு வந்துவிட்டது. இன்னும் சரியாக விடிந்தபாடில்லை. திரும்பவும் படுத்தார். கிராமத்தின் பசுமையும், சின்ன வீடாக இருந்தாலும், அதைச் சுற்றியிருக்கும் சிறிய தோட்டத்தின் அழகும் நினைவான கனவில் வந்தன. அதன் பசுமை பல ஆண்டுகட்குப் பிறகு இப்போது அவரைக் கிளர்ந்திருக்கிறது.

II

லயனல் கதை கொஞ்சம் விசித்திரமானது. ஒருவன் கதையை முற்றாக ஒருவராலும் சொல்ல முடியாது. சாணக்கியனைப் புல் தடுக்கின மாதிரி எத்தனை நடந்திருக்கும்? தெரிந்த வரையிலுந்தான் சொல்ல முடியும்.

லயனல் அப்போது பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அவன் வகுப்புக்கு ஒரு சரித்திர ஆசிரியர் புத்தம் புதிதாகப் பட்டம் பெற்றுக்கொண்டு வந்திருந்தார். மற்றப் பட்டதாரி ஆசிரியர்கள் போல் கால் சட்டை கிடையாது. வெள்ளை வெளே ரென்று வேஷ்டியும் அதற்குமேல் அதே வெள்ளையில் ஒரு நஷனல் சட்டையும் தான். மெலிந்த மனிதர். கண்ணாடிக் குள்ளால் பிரகாசம் பெற்ற இரண்டு பெரிய கண்கள். இவர் வகுப்புக்கு நேரக் கட்டுப்பாடுகள் கிடையாது. பத்தாவது மாணவர்களுக்குச் சரித்திரம் கடைசி வகுப்பு. அநேகமாக, ஒரு மணித்தியாலம் பிந்தியே மாணவர்களுக்கு விடுதலை கிடைக்கும். சிலபேர் கொட்டாவி விடுவார்கள். வெகு சில பேர் அவர் சொல்வதைக் கேட்பார்கள். கேட்பது சிலவேளைகளில், ஏன் பலவேளைகளில் விளங்குவது போலிருக்கும்; விளங்கவும் மாட்டாது. இந்தத் தன்மையே லயனலுக்குப் பிடித்துப் போயிருந்தது. அவர் கையே பல விஷயங்களையும் சொல்ல முயற்சிப்பது போல இருக்கும். அவர் வாயால் வசனங்கள் கொட்டக்கொட்ட, அதற்கு இசைவாக அவர் கை வெளியில் இப்படியும் அப்படியும் அலை பாயும். இவற்றையெல்லாம் லயனல் ரசனையுடன் பார்ப்பான்.

ஒருநாள் உலக சரித்திரம் படிப்பித்துக்கொண்டிருந்தவர், ஹிட்லரின் கதையைச் சொல்ல வேண்டியதாயிற்று.

“…ஹிட்லர் கடைசியாகத் தற்கொலை செய்துகொண் டான். எப்படிச் செய்து கொண்டான் என்பது முக்கியமான விஷயமல்ல; ஏன் செய்து கொண்டான் என்பது தான்….”

இந்தக் கட்டத்தில் மணி அடித்துவிட்டது. “…முக்கியம்” சிலபேர் புத்தகத்தை அடுக்கத் தொடங்கினார்கள். அடுக்கி வைத்திருந்தவர்கள் எழும்பவும் ஆயத்தப்படுத்தினார்கள்.

ஒரு பிரகிருதி , “ஏன் சேர் , அவன் தற்கொலை செய்து கொண்டான்?” என்று கேட்டது. அவனைப் பார்த்துப் பின் வரிசைகள் முறைத்தன. அவன் கேட்டதுவும் அதற்காகத்தானே?

“கொஞ்ச நேரம் தந்தால் தான் அவைகளைப் பற்றிச் சொல்ல முடியும்….”

இருப்பீர்களா?’ என்ற தொனியில் ஆசிரியர் கேட்டார். முன்வரிசை “ஆம்” என்று ஒன்று சேர்ந்து அலறியது. பின் வரிசைகளுக்குக் கடும் கோபம். ஆசிரியர் தன் கண்ணாடிகளுக்கூடாகத் தொலைவை அவர் பாணியில் நோக்க, பின் 136 வரிசைகளுக்கு அன்று லேசில் போக முடியாதென்பது தெரிந்து போய்விட்டது. லயனல் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“தற்கொலை, ஹிட்லர் செய்தாலென்ன? யார் செய்தா லென்ன? ‘தற்கொலை ஏன் செய்து கொள்கிறான்’ என்பது தான் கேள்வி. வாழ்க்கையில் பிரயோசனம் இல்லை என்று யோசிக்கிறவனும், வாழ்க்கையை எதிர்நோக்கமுடியாத கோழைகளுந்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விஷயம் அவ்வளவு எளிதானது அல்ல. அதில் இன்னும் அநேக விஷயங்கள்… வாழ்க்கையின் தனிப்பட்ட அர்த்தமே இந்தத் தற்கொலையை ஆராய்வதில்தான் காண முடியும். தன்னைத் தானே சாகடித் துக்கொள்கிறவனுக்கு….”

“ஆ, ஆ….” என்று பின்வரிசையில் இருந்து ஒரு நீண்ட கொட்டாவியின் பெரிய சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பல கிளுகிளுப்புகள். ஆசிரியர் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்து முடிவதற்குள், கசமுச கசமுச வென்று சப்தம் கிளம்பிவிட்டது. பொடியன்களுக்கு இதில் சுவாரசியமில்லை என்ற நிலையை அவரால் சீரணிக்க முடிய வில்லை. கொஞ்ச நாட்களாக அவர்கள் பொறுமையில்லாமல் சத்தம் போடத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டவர்,

“கொஞ்சம் பொறுங்கள்… தயவு செய்து. நீங்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு நான் சொல்கிற இந்த அறிவாளிகள் இது விஷயம் பற்றி எழுதின நூல்களைப் படியுங்கள்…” என்றார். மாணவர்கள் விடுவதாக இல்லை. அவரும் தொடர்ந்தார்.

“அல்பேட் கமு , ஷொபனோர், நீட்ஷே”

“சேர், மிச்சம் நாளைக்கு சேர்…நேரமாகுது சேர்…”

“கழுதைகளே! போய்ச் சேருங்கள்!” வாத்தியார், புத்தம் புது வாத்தியார் என்றுமில்லா வழக்கமாகச் சபித்தார். எல்லோரும் பாய்ந்தார்கள் வெளியே. லயனல் மற்றவர்களுடன் போகவில்லை. நின்று கொண்டான். “சேர்…”

ஆசிரியர் தன் புத்தகங்களைச் சீராக்குவதினின்று நிமிர்ந்தார்.

“ஏன் சேர், ஒருத்தன் தற்கொலை செய்து கொள்கிறான்?”

“ஓ! சுருக்கமாகச் சொல்லப்போனால்” நிறுத்தினார்…..

“சொன்னால் விளங்குமா?”

“தெண்டிக்கிறேன் சேர்!”

“வாழ்க்கையின் அர்த்தம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா…”

‘தெரியாது’ என்று சொல்ல லயனல் நினைத்தான். அவர் விடவில்லை. தொடர்ந்தார்… “ஒருத்தனுக்கும் தெரியாது. அடுத்தது என்னவென்றால் தனக்குத் தெரியாதென்றும் தெரியாது. ‘தனக்குத் தெரியாது’ என்று உண்மையாகத் தெரியவருகிறவன் மெத்த அவதிப்படுவான்.” …. அவர் கை இந்தக் கணத்தில் சுட்டுவிரலை நீட்டிய பாங்கில் ஒரு சிறு வட்டத்தை வரைந்தது.

“அந்த அவதி தாங்கமுடியாமல் தன் உயிரைப் போக்கிக் கொள்வான்.”

லயனலுக்கு அந்தக் கை அப்படிச் சுழன்றதுவும், அத் தோடு மனதில் சுவடேறிய ‘தனக்குத் தெரியாதென்றும் தெரியாதும் நன்றாகப் பிடித்துப்போய்விட்டது.

அவன் தாய் அன்று மாலை அவன் கையில் தேநீரைக் கொடுத்தபோது, அவன் சந்தோஷத்துடன் இருந்தான். தமக்கை குசுமாவைக் கூப்பிட்டான்.

“ஏய்! உனக்கு வாழ்க்கையின் அர்த்தம் என்றால் என்ன என்று தெரியுமா?”

அடுப்பில் வேலையாயிருந்த அவன் அம்மாவுக்கு இது கேட்டது.

“டேய், அதென்னடா அது?” அப்புறம் அவள் பின்பக்கம் போய்விட்டாள். குசுமா, கையில் ஏதோ தையல் வேலையாக இருந்தவள் தைத்துக்கொண்டே வந்தாள். டக் கென்று சொன்னாள் :

“பஞ்சசீலங்களையும் கடைப்பிடிக்கிறதுதான்.” குசுமா ‘தர்மதேசனா’ (புத்த தரும் போதனை) கேட்க ஒழுங்காகப் போவாள். லயனல் இப்படி ‘டக்’ கென்று ஒரு மறுமொழி யையும் எதிர்பார்க்கவில்லை. இதை ஆசிரியரிடம் சொல்லிப் பார்த்திருக்கலாமென்று ஒரு கணம் யோசித்தான்.

“இல்லை ” என்றான் அதே விரைவுடன். அவனுக்கு அது ஏன் இல்லை என்று அந்தக் கணம் தெரியாது.

குசுமா, “நீதான் பெரிய படிப்புப் படிக்கிறாய். சொல்லேன்” என்றாள்.

“சொல்ல மாட்டேன்” என்று எழுந்தான்.

“தெரிந்தால் சொல்லாமல் போவியா?” என்றாள் குசுமா.

“லேசில் சொல்ல முடியாது. அடுத்தது என்னவென்றால், உனக்குத் தெரியாதென்றும் உனக்குத் தெரியாது.” இப்படிச் சொல்கையில் சுட்டுவிரலை நீட்டி, முழங்கை நிலையாக இருக்கத்தக்கதாகக் கையை மட்டும் ஒரு சுழற்றுச் சுழற்றினான். மிகுந்த திருப்தியுடன் வெளியே போனான்.

“உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று குசுமா பற்களால் நூலைக் கடித்தாள்.

வெளியே தோட்டத்திற்குப் போனவனுக்குக் கொஞ்ச நேரத்தில் கவலை வந்துவிட்டது.

(இந்த சம்பவத்தை எவ்வளவு நாட்கள் தாயும் மகளும் பின்னர் நினைவுகூர வேண்டியதாய்ப் போயிற்று. லயனல் இறந்த பின்னர் பேதிரிஸ் வீட்டுக்கு ஒருமுறை வந்தபோது அவரிடம் இதைச் சொல்லி அழுதார்கள். பேதிரிசுக்கு விளங் காமலிருந்தது, என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்’ என்பதுதான்.)

இந்த சம்பவத்துக்கு அடுத்த நாள் காலையில் நேரத்துக்கு முன்னரே ஓடோடிப் போய் ஆசிரியரைப் பிடித்துக்கொண்டான்.

“சேர், வாழ்க்கையின் அர்த்தம் என்றால் என்ன என்று எனக்கு இப்போது தெரியும்.”

“சொல்லேன்” என்றார் அவர்.

“பஞ்சசீலங்களையும் கடைப்பிடிக்கிறதுதான்.”

ஆசிரியர் பெரியதாகச் சிரிக்கத் தொடங்கினார். சற்றே சிரிப்பை நிறுத்திக் கேட்டார்.

“யார் சொன்னார்கள்?”

‘என் தமக்கை’ என்று சொல்லக் கூச்சமாக இருந்தது. “என் அம்மா” என்றான்.

ஆசிரியரின் சுட்டுவிரல், என்ஜினை நிற்பாட்டும் போது, ‘கியர் லிவர்’ ஆடுகிற மாதிரி ஆடியது.

“என்னைப் பொறுத்தமட்டில் பஞ்சசீலங்களைக் கடைப் பிடித்து வாழ்கிறவனுக்கும் கடைப்பிடியாமல் வாழ்கிறவனுக்கும் வித்தியாசமில்லை . மனிதனுக்கு ஒரு பரிணாமம் இருந்து தானே இருக்கிறது? ஆதிகாலத்தில் மனிதன் பஞ்சசீலத்தோடா இருந்தான்? மனிதன் பரிணாமமடைய அடைய சீலங்கள் மாற வேண்டுமே? சீலங்கள் தேவையுமில்லாமல் போகக்கூடும். என்றைக்கு மனிதன் இப்படிச் சீலங்களுடன் இருந்தான்? இருக்கிறவனுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்துவிடுமா?

நீ ஓர் அர்த்தத்தைத் தேடிப்போனால்….. அந்த அர்த்தத்தின் உண்மை நிலையைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டே போனால், வெங்காயத் தோலுரித்த கதைதான். அது சரி, பஞ்சசீலம் என்கிறார்களே, இந்த பஞ்சசீலங்கள் என்னவென்று சொல்லு பார்ப்போம்?”

அவைகள் லயனலுக்கு ஞாபகமில்லை . அவனும் தரும் போதனைகளுக்குப் போயிருந்திருக்கிறான். சமயபாடத்திற்குப் படித்ததும் ஞாபகத்துக்கு வரமாட்டேனென்றது.

“ஓ – ஞாபகமில்லையா? தெண்டிக்க வேண்டாம். எதுவும் தன்படியே வாழ்வதுதான் உண்மைக்கு இசைவானது. வாழ் வது நீ; மற்றவன் சொல்கிறபடி நீ ஏன் வாழ வேண்டும்? உனக்குத் தெரியாது போனால், உன் நியதிப்படி வாழ்வது சீலம்…” கொஞ்சம் நிறுத்தித் தொடர்ந்தார்…. “கிரேக்க புராணத்தில் ஒருத்தனுடைய கதையைக் கொஞ்சம் கேள். அது ஒரு பெரிய கதை. அதன் முடிவைப் பற்றி மட்டும் தான் சொல்ல முடியும்.” ஒரு கை சட்டைப்பைக்குள்ளும், மற்றக் கை பல உருவங்களை வெளியில் வரைவதுமாக இருந்தன.

“… இந்த சிசிபஸ்சின் நடவடிக்கைகள் கடவுளுக்கும் பிடிக்காமற் போய்விட்டதால் சபித்துவிட்டார். அவனுக்குக் கீழுலகத்தில் இருந்த சாபம் என்ன தெரியுமா? ஒரு பெரிய பாறாங்கல்லை ஒரு பள்ளத்திலிருந்து உருட்டி, மேலே ஒரு மலையின் உச்சிக்குக் கொண்டுபோய் நிறுத்திவிட வேண்டும். அவன் வேர்த்து விறுவிறுத்து அந்தப் பெரிய கல்லைத் தன் தோள்களால் நெட்டித் தள்ளிக்கொண்டு போய் விட, அது கடகடவென்று உருண்டு திரும்பிப் பள்ளத்துக்கு வந்துவிடும். அவன் திரும்ப அதை உருட்டி மேலே கொண்டுபோய் விட வேண்டும். திரும்பத்திரும்ப, இதே பெரிய கல்லை நாட்கணக்காய், மாதக்கணக்காய், வருஷக்கணக்காய், யுகக்கணக்காய் முடி வில்லாமல் இதையே செய்ய வேண்டும்….!”

சிலவேளைகளில் லீவு நாட்களில் லயனல் தகப்பனுடன் லொறியில் போவது உண்டு. ஏற்றத்தில் முழுநிறையுடன் போகிற லொறியின் ம்ம்ம்…. ம்ம்ம்… என்கிற அவல இயந்திர ஓலம் அவனுக்கு அப்போது கேட்டது. கியரை மூன்றாவதிலிருந்து இரண்டாவதுக்கு, ஏன், சிலவேளைகளில் முதலாவதுக்கே மாற்ற வேண்டிய ஏற்றங்களும் வரும். அப்போது ம்ம்ம்… ம்ம்ம்….’ என்று இயந்திரம் தன் கதியைவிடக் கூட அலறிவிட்டுத் திரும்ப ‘ம்ம்…’ என்று தன் ஸ்தாயியைக் கூட்டிக்கொண்டு அலறும். பேதிரிஸ் இப்படி ‘கிளச்’சை இரண்டு தரம் மிதித்து கியரை மாற்றும்போது இயந்திரத்தின் துடிப்பைத் தானும் ஏற்பது போலவும், லொறியின் சுமையைத் தானே தன்னந்தனியனாய்ச் சுமப்பது போலவும் லயனலுக்குத் தோன்றும்.

ஆசிரியர் பேசிக்கொண்டு போக அதை நினைவுகூர்ந்து கொண்டான். “நாட்கணக்காய், மாதக்கணக்காய், வருஷக் கணக்காய்…” என்று சொல்லும் போது உயர்ந்து கொண்டுபோன ஆசிரியரின் கை, “முடிவில்லாமல் இதையே செய்ய வேண்டும்” என்று முடிந்த போது பொத்தென்று விழுந்தது. தொடர்ந்தார்.

“இந்தக் கதை என்னத்தைச் சொல்கிறதென்றால், எங்கள் வாழ்க்கையெல்லாம் இப்படியான …. இப்படியான …. ஓர் அர்த்தமில்லாத…. எங்களுக்குத் தெரிந்த அர்த்தமில்லாத… அவசரந்தான். அல்பேட் கமு என்ன சொல்கிறானென்றால், கல்லை மலைக்குக் கொண்டு போனவுடன் கீழே உருளத் தொடங்க, அந்த உருண்டு போகிற கல்லைப் பார்த்துக்கொண்டு இருக்கிற அந்த சொற்ப கணத்தில் தான் சிசிபஸ்சினுடைய பிரக்ஞையே இருக்கிறதாம். ஏன்…?” புருவம் உயர்ந்தது.

“… அவனுக்கு அந்தக் கணத்தில் அவன் சாபத்திலிருந்தும் விடுதலை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பிரயாணப்பட்டு, நெட்டிக் கல்லைத் தூக்கிக் கஷ்டப்படுகிறவன் கல்தான். அவனுக்கு இடப்பட்ட சாபம் அந்த கஷ்டந்தானே! அதிலிருந்து அவனுக்கு ஒரு கணம் விடுதலை கிடைக்கிறது…”

ஆசிரியர் சிரித்தார்…. அவன் விதியிலிருந்து அந்தக் கணத்தில் விடுபட்டுக்கொள்கிறான். அதை அப்புறம் பார்ப்போம். இந்த சிசிபஸ் சாதிக்கிறது என்ன? கல்லை மேலே உருட்டிக்கொண்டு போய் விட, அது திரும்பவும் கீழே வந்துவிடுகிறது. அவன் பிரயத்தனம் முழுக்க வீணாகப் பிரயோசனமில்லாமல் போகிறது. எங்கள் வாழ்க்கையெல்லாம் இப்படித்தான். இதை உணர்ந்த வனுக்கு … ஆழமாக உணர்ந்தவனுக்குத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தோன்றும். நான் இதைத் திருப்பிச் சொல்ல வேண்டும். வாழ்க்கை …. மனித வாழ்க்கை நெருக்குவாரமானது, அபத்தமானது… பிரயோசனமில்லாதது.”

ஆசிரியரின் கை முறுகி உயர்ந்து தொய்ந்தது. இந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது. ஆனால், ஆசிரியர் தொடர்ந்தார்.

“இது அல்பேட் கமுவின் கொள்கை. நான் இதைப் பற்றி வேறுவிதமாக யோசித்திருக்கிறேன்…”

“சேர், மணி அடித்துவிட்டது….” என்று லயனல் சொன்னான். உண்மையில் அவன் கொஞ்சம் பயந்துபோயிருந்தான்.

இந்த ஆசிரியர் இவனோடு பேசுவதைப் பலர் கண்டார்கள். இதெல்லாம் பல வருஷங்களுக்குப் பிறகு மெத்த விவாதத்துக் குள்ளாகிவிட்டது.

அன்றைய வகுப்பில், முதல் நாளின் மிச்சசொச்சம் கடுமை யான கிண்டல் விமரிசனத்துக்குள்ளாகிக் கொண்டிருந்த வேளை யில் லயனல் நுழைந்தான். முதல் வகுப்பு ஆசிரியர் வரச் சத்தம் அடங்கிவிட்டது. லயனலுக்கு ஆசிரியர் படிப்பித்தது காதில் விழவேயில்லை. அவன் யோசனையில் ஆழ்ந்தான்.

“வாழ்க்கை நெருக்குவாரமானது…அபத்தமானது… பிரயோசனமில்லாதது…” என்று தனக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டான். அவன் கை தன்பாட்டில் முறுகி, உயர்ந்து, தொய்ந்தது. பலரின் கருத்துகளின் படி இதுவே லயனலை ஒரு மாதிரி ஆக்கியிருக்க வேண்டும். அவன் நண்பர்களுடன் சேர்ந்து குதித்துக்கும்மாளமடிக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வரத் தொடங்கியது. அவனுக்குப் பிடித்தவைகளை ஆழமாக வெறித்து அவதானிக்கும் பழக்கம் அவனைப் பிடித்துக் கொண்டது. வீட்டுத் தோட்டத்தில் ஒரு தென்னைமரம் அவன் முதுகு பட்டுப்பட்டு வழவழப்பாகத் தொடங்கியது.

அவன் தாய், அவர்கள் வீட்டைச் சுற்றியிருக்கிற தோட்டத்தில் விளைவதை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போவதைப் பார்த்தபோது, அதை அவள் நெடுங்காலமாக (“நாட்கணக்காய்… மாதக்கணக்காய்…. வருடக்கணக்காய்….”) செய்து கொண்டுவருவது அவனுக்கு உறைத்தது. குசுமா துள்ளித் திரிவாள். அவளுக்குப் பத்மா என்றொரு ‘கழுதை’ – அப்படித்தான் லயனல் சொல்வான் – சிநேகிதம். இரண்டு பேரும் சேர்ந்தால் லயனலைப் பைத்தியமாக்கிவிடுவார்கள். குசுமாவும் பத்மாவும் துள்ளித் திரிவதைப் பார்க்க லயனலுக்கு எரிச்சலாக இருக்கும். பாறாங்கல்லைத் தூக்கி இவர்கள் தலையில் போட வேண்டும் என்று சிலவேளைகளில் சபித்துக்கொண்டான். இவர்கள் குடங்களில் தண்ணீர் எடுக்கப் போனாலும், அதன் பாரத்தை மறந்து சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு வருகிறார்கள்! லயனலின் தாய் இவன் இப்படி வரவர மௌனமாகிக்கொண்டு வருவதைப் பற்றிப் பெருமையடித்துக்கொண்டாள். “இவன் இப்போ நிறையப் படிக்கிறானே, அதனால் தான்.” இதை லயனல் ஒருமுறை கேட்க நேர்ந்த பின்னர் உண்மையில் படிக்க ஆரம்பித்தான்.

போதிரிஸ் வீட்டுக்கு வரும்போது ஓடிப்போய்ப் பார்ப் பான். கையில் ஒரு பெரிய பையுடன் விறுவிறுக்கென்று நடந்து வருவதில், மாதம் ஒருமுறை இப்படி வந்து போகிறதில் ‘நெருக்குவாரம்’ இருக்கிறது என்று அவனுக்குப் பட்டது.

இதெல்லாமிருக்க, அவனுக்கு – கவனித்துக்கொள்ளுங்கள், அவனுக்கு – பத்மாவிடம் காதல் தொடங்கியதையும் கட்டாயம் சொல்ல வேண்டும். காதல் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

சந்தடியில்லாத தோப்புப் பாதையினூடே அவன் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருந்தபோது, பின்னால் “லயனல் ஐயே! (அண்ணா!), லயனல் ஐயே!” என்று அவள் கூப்பிடுவது கேட்டாலும் கேட்காத மாதிரி நடந்தான். திரும்பவும் கூப்பிட்டுக் கொண்டே ஓடிவந்தாள். இவள் கூப்பாட்டை நிற்பாட்ட முடியாது’ என்று சபித்துக்கொண்டு திரும்பவேண்டியதாய்ப் போயிற்று. “என்ன?” என்று அவன் திரும்பியபோது, ஓடிவந்த அவளின் நெற்றியில் வியர்வையும், அவளின் சிறிய மார்பகங்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்குவதையும், தலைமயிர் முன்னால் வந்திருப்பதையும் அவன் கண்டான். அவள் சிரிக்க முயன்றாள். இலேசாகவே வெளிப்பட்டது. இது வழக்கமாக ஹஹ்ஹா’ என்று தலையைப் பின்பக்கம் நிமிர்த்திச் சிரிக்கும் சிரிப்பல்ல.

“குசுமா அக்காவிடம் சொல்லுங்கள்…’ என்று மூச்சிரைத் தாள். அவனுக்கு அது ஒன்றும் கேட்கவில்லை. அவள் இரை வதையே பார்த்துக்கொண்டு நின்றான். “நீ அழகாக இருக்கிறாய்” என்றான்.

“இதை அக்காவிடம் சொல்லுங்கள் என்றால்..” என்று கோபித்தாள்.

“எதை? நீ அழகாக இருக்கிறாய் என்பதையா?” என்றான்.

“உங்களிடம் சொல்லிச் சரிவராது” என்று அவளே விறுவிறுக்கென்று நடக்க ஆரம்பித்தாள். “ஏ பத்மா ! ஏ பத்மா!” என்று லயனல் கூப்பிட்டுப் பார்த்தான். அவள் கோபத்துடன் போய்விட்டாள்.

அவள் இரைத்ததுவும் கோபித்ததுவும், விறுக்கென்று நடந்ததுவும் அவன் மனதில் நன்றாகப் பதிந்து போய்விட்டன.

அவனுக்கு எரிச்சல் வரத் தொடங்கியவைகளையும் சொல்ல வேண்டும்.

பத்மா, குசுமாக் கூட்டம் முழுவதும் நாற்று நடவுக்குப் போகும். அதை முந்தியும் பார்த்திருக்கிறான். ஆனால், இப்போதெல்லாம் வேறுவித உணர்வுகள் வருகின்றனவே! தலைகளில் துண்டு கட்டிக் குனிந்தும் நிமிர்ந்தும் சேற்றின் பசுமையான பசுமையில் கால் புதைத்து சிரித்துக் கதைகள் பேசி… (இந்தக் குமர்க் கூட்டங்கள் தான் சிரிக்கிறார்கள் என்றால் கிழவிக் கூட்டங்களைப் பார்!) “நாட்கணக்காய்….. மாதக்கணக்காய்… வருஷக்கணக்காய்… இதையே செய்து வாழ்கிறீர்களே! கழுதைகளே சிரிக்கிறீர்களே ! சவங்களே!” என்று திட்டிக்கொண்டான்.

பேதிரிஸ் ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது, தானும் லொறி ஓட்டலாமா என்று கேட்டான். பேதிரிசுக்குக் கோபம் வந்து விட்டது.

“என்னத்துக்கு? இரவிரவாய் நித்திரை முழிக்கவா? மனேஜர் முதல் கொண்டு பொலிஸ்காரன் வரை பேச்சு வாங்கவா…?” இப்படி வரிசையாய் அடுக்கிக்கொண்டுபோய், “இல்லை, அக்ஸிடெண்ட் படவா?” என்று முடித்தார். “பேசாமல் படி. நீ நன்றாகத்தானே படிக்கிறாய் என்று எல்லோரும் சொல் கிறார்கள்” என்றும் சொன்னார். ‘ட்ரைவரானால் சாராயம் மனிதனை முடித்துவிடும்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

இதுவும் லயனலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவன் எவ்வளவோ நம்பியிருந்தான். ஏற்றத்தில் ஒரு பெரிய லொறியை ஓட்டிக்கொண்டு போவதைப் போலக் கனவு கண்டிருக்கிறான்.

பத்தாவது வகுப்புப் பரீட்சை நெருங்க எல்லோரும் விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தார்கள். லயனலோ வயல் வரப்புகளிலும் தென்னம் தோப்புகளிலும் திரிய ஆரம்பித்தான். சிலவேளைகளில் தான் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படித்திருந்தாலும், ‘வருஷாவருஷம் பரீட்சை’ என்று குறைப் பட்டிருந்தாலும், நன்றாகவே தேறியிருந்தான். ஆசிரியர்கள் அவனை கேகாலை ரவுனில் போய் மேலே படிக்கச் சொன் னார்கள். அதற்கு அவனிடம் வசதியேது? இந்த சரித்திர ஆசிரியர் இந்தக் கணத்தில் முன்வந்தார்.

“மேலே படிப்பதில் உண்மையில் எதுவித பிரயோசனமும் இல்லை. அறிவைத் தேட வேண்டும் என்றால் அது வழியில்லை. உத்தியோகம் என்பதற்கு மட்டுமே அது ஒரு வழி. ஆனால், உத்தியோகத்தில் என்ன இருக்கிறது? ஓ…. அதுகளெல்லாம் பிறகுதான் உனக்கு விளங்கும். எதற்கும் நீ முதலில் படி, நான் உதவி செய்கிறேன்” என்றார். லயனலுக்கு மேலே படிக்கக் கொஞ்சம்கூட இஷ்டமில்லை. அதை அவரிடம் எப்படிச் சொல்கிறது?

‘நல்ல காலமாக இந்தக் கட்டத்தில் அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். அவர், அவனுக்கு இது சம்பந்தமாக லெட்டரும் போட்டிருந்தார். லயனல் பதில் எழுதவில்லை .

அவனுடைய உத்தியோகம் தேடுபடலம் தொடங்கியது.

அதை ஏன் கேட்பான்? அவன் தாயும் தமக்கையும் அவனுக்கிருந்த ஒரே ஒரு வெள்ளைக் காற்சட்டையையும் சட்டையையும் துவைத்து மடித்துக் கொடுத்து அவற்றை உடுத்திக் கொண்டு அவன் நேர்முகப் பரீட்சைகளுக்காய் பஸ்சில் ஏறிப்போவதை வீட்டு வாசலில் நின்று பார்ப்பார்கள். அதைப் பார்க்க லயனலுக்கு ஒருமாதிரியாக இருக்கும். ஒரு வேதனையும் மனதில் தொடரும். இப்படி அவன் உத்தியோகம் தேடிக் கொண்டிருந்தபோது, பேதிரிசுக்கு இரண்டு விபத்துகள் நடந்தன. முதலாவதைப் பற்றித்தான் எனக்குத் தெரியும். (இரண்டாவது பற்றிச் சரியாகத் தெரியாது.)

பேதிரிஸ் ஓட்டிக்கொண்டு போன லொறி கொழும்பில் ஒரு சைக்கிள்காரனை மோதி, சைக்கிள்காரன் ஸ்தலத்திலேயே சரி. பேதிரிசைக் கொஞ்ச நாட்கள் ரிமாண்டில் வைத்திருந்தார் கள். இவைகளைப் பற்றி பேதிரிஸ் வீட்டுக்கு வந்து சொன்ன வரையிலும் அவர் வீட்டில் ஒருத்தருக்கும் தெரியாது. பெரிய முதலாளி பெரிய சத்தம் போட்டுப் பேதிரிசைப் பேசினார். லொறிக்கு வேலை மினக்கெட்டுப் போச்சுதாம். “எவ்வளவு நஷ்டம் எனக்கு , தெரியுமா?” பிறகு வழக்கில் பேதிரிசை விடுதலை செய்துவிட்டார்கள்.

பேதிரிஸ் என்ன விபத்து நடந்தாலும் பதறமாட்டார். வெற்றிலையைக் குதப்பியபடி, பெல்ட்டைச் சரிபண்ணிக் கொண்டு, மீசையை முறுக்கியபடி லொறியிலிருந்து அவர் இறங்குவது ஒரு காட்சி. இவைகளைப் பற்றி நீங்கள் மாணிக் கத்திடம் கேட்க வேண்டும்! பேதிரிசைக் கேட்டால் “எத்தனை அக்சிடென்டை நான் கண்டிருக்கிறேன் தெரியுமா? ஒன்றிலா வது நான் பிழை என்று ஒரு நீதிபதியாவது தீர்ப்புக் கொடுக்க வில்லை. எப்படிக் கொடுக்கிறது? நான் பிழை விட்டால் தானே? 1941இல் லைசென்ஸ் வாங்கினேன். அப்போ ..” என்று தொடங்குவார். மாணிக்கம் ஆவலுடன் முழுவதையும் கேட் பான். உண்மையில் பேதிரிஸ் நல்ல ட்ரைவர்தான். இல்லா விட்டால் அந்த முதலாளி அவனை வைத்திருப்பானா?

பேதிரிஸ் வீட்டுக்கு வந்து இந்த விபத்துப் பற்றிச் சொன்ன போது, லயனல் வெகு கவனமாகக் கேட்டான்

“அது எப்படி நடந்தது, அப்பா ?”

பேதிரிசுக்கு எரிச்சலாக இருந்தது.

“லொறிக்குக் குறுக்கே அவன் சடாரென்று திரும்பினதுதான், வேறென்ன?”

அப்பா சொல்கிற மாதிரியைப் பார்த்தால் தற்கொலை மாதிரியும் தெரிகிறது என்று யோசித்துக்கொண்டவன், அது பற்றி அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை.

பேதிரிஸ் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவன் கடைசி 144 யாகப் போன நேர்முகப் பரீட்சை பற்றி விசாரிப்பார்.

“லஞ்சம் வாங்காமல் எவன் வேலை கொடுக்கிறான்?” என்று சிலவேளைகளில் பெலத்தே மகனிடம் குறைப்பட்டிருக் கிறார். வேலை கிடைக்காமல் போகப்போகிறதா?’ என்ற நம்பிக்கை அளவுக்கதிகமாகவே பேதிரிசிடம் இருந்தது.

III

திருமதி பேதிரிசுக்கு லயனலின் ஒரு சிநேகிதனான சோமபால ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது குசுமாவைப் பார்த்த பார்வையின் தீட்சண்யம் தலைக்குள் போய் ஒரு சுழற்காற்றைக் கிளப்பிவிட்டுவிட்டது. பேதிரிசின் அதற்கடுத்த மாதாந்தர விஜயத்தின் போது, ‘குசுமா கல்யாணம்’ என்று பிரஸ்தாபிக்க, பேதிரிஸ், “முதலில் மகனுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். பிறகு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டார். இதையே சொல்லிக்கொண்டு கொஞ்சக்காலம் கடத்தினார். இதற்கிடையில் சோமபாலவின் விஜயம் அடிக்கடி நடக்கத் தொடங்கியது. முதலில் திருமதி பேதிரிஸ்தான் அவனுக்குக் ‘கவும்’ (பலகாரங்கள்) செய்து கொடுத்தாள். பிறகு, மகளே தலைப்பட்டு இனிப்புப் போதுமா என்று தானே பார்த்துச் செய்ய ஆரம்பித்தாள்.

சோமபால குசுமாவைத்தான் பார்க்க வந்தேன் என்று வர முடியுமா? “லயனல் இருக்கிறானோ?” என்று, லயனல் இல்லாத நேரம் பார்த்து வந்தான். இதனாலேதான் லய னலுக்கு இந்த விவகாரம் பற்றி முதலில் அவ்வளவு சரியாகத் தெரியாது போய்விட்டது. இது முற்றி, சோமபாலவே, போதிரிஸ் ஒரு முறை வீட்டுக்கு வந்த நேரம் தரகர்மாரை அனுப்பி மடக்கிவிட்டான். லயனல் இவைகளைப் பற்றி அக்கறையில்லாமல் இருந்தான். சோமபால குசுமாவைப் பெண் பார்க்க வந்தபோது (இது பேதிரிசுக்காக நடந்தது) லயனலுக்கு நேர்முகப் பரீட்சை இருந்தது. அவன் கொழும்புக் குப் போய்விட்டான். சோமபால இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருந்தான்; அவ்வளவுதான். தனியானவன், வயதான தாயுடன் நிலத்தை ஒட்டிய சிறு வீட்டில் இருந்தான். பேதி ரிசுக்கு யோசனையாக இருந்தாலும் சம்மதித்துவிட்டார். சோமபால – குசுமாவின் கல்யாணத்தின்போது, லயனல் அதே தாமரை இலைத் தண்ணீர்த்தனத்துடன் இருந்தான். அவனுக்கு, எல்லோரும் கல்யாணத்தன்று இப்படி உடுத்தி வந்த தும் சாப்பிட்டதும் குடித்ததும் வெறித்ததும் ஏதோ கனவில் வருவதைப் போல இருந்தது. பேதிரிசுக்கோ அன்று நிறை வெறி. லயனலுக்கும் வார்த்துக் கொடுக்கக் கிளம்பினார்.

“எனக்கு வேண்டாம், அப்பா” என்றான். பேதிரிசுக்கு கோபம் வந்துவிட்டது.

“நாளைக்கு உத்தியோகமாகிப் போய் என்ன செய்யப் போகிறாய்? யாரென் கொடுத்தால் குடிக்கத் தெரியாதென்றா சொல்லப்போகிறாய்….?” லயனல் அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டான். பாட்டும் பைலா நடனமும் தொடங்கிவிட்டது. லயனலுக்கு இந்தக் கூத்துகள் பிடிக்கவில்லை. ஆடிக்கொண்டிருந்தவர்கள் அவனை இழுக்க அவன் ஒதுங்கிக்கொண்டான்.

சோமபாலவும் குசுமாவும் சில நாட்கள் இங்கே இருப் பார்கள்; சில நாட்கள் சோமபாலவின் வீட்டில் இருப்பார்கள். குசுமா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள். போயா தினங்களில் கணவனையும் இழுத்துக்கொண்டு விஹாரைக்குப் போய் விடுவாள். அந்தி வேளையில் வெள்ளையுடை அணிந்து கையில் நிறைய மலர்களுடன் போவாள். “ஏ லயனல், நீயும் வாயேன்?” என்று கூப்பிடாத நாளில்லை. சிலவேளைகளில் சோமபாலவும் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறான். லயனல், “நான் பிறகு வருகிறேன்” என்பான். இருந்தாலும் குசுமா அவனுக்கும் சேர்த்தே பிரார்த்தித்துக்கொண்டு வந்தாள்.

குசுமா வயிறு ஊதிக்கொண்டு வர, அவள் தாய் அவளில் மிகுந்த கவனமெடுக்க ஆரம்பித்தாள். அவள் புருஷனை அவள் அதிகாரம் செய்வது கூடிக்கொண்டு வந்தது. சோமபால இதுக்கென்றே பிறந்தவன் போல் நடந்தான். அந்நாட்களில் தாயின் கவனத்திற்காகத் தாய் வீட்டில் குசுமா இருந்தாள். ஒருநாள் மாலை அவளுக்கு வலியெடுத்து அவள் முனகுவதையும் வேதனைப்படுவதையும் லயனல் ஊன்றியே கவனித்தான். அவளைக் கிராம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட, லயனல் மட்டும் வீட்டில் தனியே , ஒரு குழந்தை தாய் வயிற்றிலிருந்து எப்படி வெளியே வரும்’ என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டு கிடந்தான். அதற்கடுத்த நாள் மத்தியானம் இரண்டு மணிக்குத்தான் தாய் வந்தாள். மிகவும் களைத்துப் போயிருந்தாலும் அவசரமாகவே வந்தாள். லயனல் எதுவும் கேட்பதற்கு முன்னதாக அவளே சொன்னாள், “ஆண் குழந்தை”

“…ம்ம் நான் அதைப் பார்க்க வேண்டும்.”

அன்று மாலை திரும்பவும் தாய் ஆஸ்பத்திரிக்குப் போன போது அவனும் கூடப்போனான்.

குசுமா துவண்டு கிடந்தாள். நெற்றியில் அவள் கை கிடந்தது. குழந்தையோ செக்கச்சிவக்க அவளருகில் நித்திரையில் ஆழ்ந் திருந்தது. அவள் குழந்தையின் பக்கமாகச் சரிந்தபடி குழந்தையைப் பார்த்தபடி இருந்தாள்.

லயனல், குசுமா துவண்டு கிடப்பதைப் பார்த்தான்.

“… யோசித்துப் பார், உடலை வருத்திக்கொண்டு போன கல் கடகடவென்று ஒரு கணத்தில் பள்ளத்துக்குப் போய்விடும். அது இப்படி உருண்டு போகிறதை சிசிபஸ் பார்ப்பான்…” லயனல் கை சரித்திர ஆசிரியரின் கை மாதிரி மடங்கியது. அந்தக் கணத்தில் குசுமாவை மிகவும் நேசித்தான். “குசுமா அக்கா!” என்று மெல்லியதாகக் கூப்பிட்டான். குசுமா திரும்பினாள். “வா” என்றாள். குழந்தையைக் காட்டினாள். லயனல் அதை தொட்டுப்பார்த்தான். தாயும் மகளும் இதற் கிடையில் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். லயனல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவர்கள் சம்பாஷணையைப் பற்றிய உணர்வெதுமில்லாமல்,

“இந்தக் குழந்தைக்கு லயனல் என்று பெயர் வைத்தால் என்ன?” என்று மெல்லியதாகச் சொன்னான். அது அப்போது அவர்களுக்குக் கேட்கவில்லை . குசுமாதான் திரும்பி, “என்ன?” என்றாள். திரும்பவும் தாயும் மகளும் தொடர்ந்து பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

குசுமாவும் குழந்தையும் கொஞ்ச நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இந்தக் குழந்தை நேரகாலம் தெரியாமல் அழும். “… தோ தோ…” என்று குசுமா அதைத் தாலாட்டித் தூங்கப் பண்ணுவாள். அது அழும்போது லயனல் என்ன நடுஇரவாயிருந்தாலும் விழித்துக் கேட்பான்.

“க்குவா… க்குவா….” என்று கைகளையும் கால்களையும் உதைத்துத் தனக்கு இந்த வாழ்வே வேண்டாம் என்று தன்னைச் சுற்றியிருக்கிறவர்களிடம் அது குறைப்படுகிறது என்று லயனலுக்குச் சிலவேளைகளில் தோன்றியது.

IV

குசுமா , குழந்தை பிறந்து மூன்று, நான்கு மாதங்கள் வரை தொடர்ச்சியாகத் தாய் வீட்டில் தான் இருந்தாள், தாயின் ஆலோசனைகளுக்காகவும் உதவிகளுக்காகவும். அந்தக் கழுதை பத்மா குசுமாவைப் பார்க்க வந்துகொண்டிருந்தாள். உண்மையில் பத்மா ஊர்க்கதைகளைக் கொண்டுவந்து குசுமாவிடம் கொட்டி அலசிக்கொண்டு போவாள். அவள் வந்தால் சிரிப்பொலி ஒரு நூறு யாருக்குக் கேட்கும். இது சிலவேளைகளில் லயனலுக்குக் கோபத்தைக் கிளப்பிவிட்டுவிடும்.

“கொஞ்சம் மெல்லச் சிரிக்கக்கூடதா?” என்று கோபிப்பான் தன் கோபத்தைக் காரணப்படுத்தியும் கொள்வான்.

“ஊரில் யாரென் எப்படிப் போனால் என்ன?”

“இது பெண்கள் கதை. இதற்குள் நீங்கள் வரத் தேவை யில்லை” என்று பத்மா துடுக்காகச் சொல்லிவிடுவாள். கதை முடிந்து போகும்போது ஏதாவது சொல்லி லயனலைச் சீண்டி விட்டுப் போவாள். லயனல் குசுமாவிடம் குறைப்படுவான்.

“இவள் ஒரு மோசமான பெட்டை .”

“சீ அப்படிச் சொல்லாதே அவள் தங்கமானவள். அவளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்பாள்.

பத்மா, லயனல் மனதில் இன்னும் ஆழ இறங்கிய சம்ப வத்தை விட்டுவிட முடியாது.

ஒரு காலை.

லயனல் தன் தென்னை மரத்தில் சாய்ந்தபடி தூரத்தில் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தபோது, அவள் உடுத்தி யிருந்த சாரம் (லுங்கி) தடுக்கியபடி இரைக்க இரைக்க ஓடி வந்துகொண்டிருந்தாள்.

“லயனல் ஐயே…. !”

லயனல் அவள் தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டான்.

“சந்திரே….. வீட்டுக் கூரையிலிருந்து விழுந்துவிட்டான். அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக வேண்டும். ரத்தம் பெருவாரியாகப் போய்விட்டது.” பத்மாவுக்கு அழுகை வரும் போல் இருந்தது. இந்தச் சந்திரே என்ற சந்திரபால பத்மாவின் தம்பி. பத்து வயதுதான் இருக்கும். அவன் செய்யாத துடுக்குத் தனம் இல்லை. பத்மாவை உற்றுப் பார்த்தவனுக்கு, அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அவள் ஓலத்தைக் கேட்டு அவன் தாயும் தமக்கையும் உள்ளேயிருந்து வெளியே வருவதற்குள் பத்மாவும் லயனலும் போகத் தொடங்கி விட்டிருந்தார்கள். தாய் குசுமாவை, “நீ இரு” என்று சொல்லி விட்டு அவர்களுக்குப் பின்னால் புறப்பட்டுவிட்டாள்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பத்மாவின் தகப்பன் ஊரில் இல்லை. அவள் இரண்டு தமையன்களும் வேற்றூரில். சின்னத் தங்கையும், இந்த விழுந்த பையனுந்தான் வீட்டில். உதவிக்கு வேறு யார் இருந்தார்கள்? துவண்டு கிடந்த பையன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். கரத்தையை (மாட்டு வண்டியை ) தகப்பன் கொண்டு போய்விட்டார். லயனல் அவனைத் தன் கையாலேயே தூக்கிக்கொண்டுபோய், அயல் வீட்டாரிடம் ஒரு கரத்தையை இரவல் வாங்கி, அதில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனான். புறப்படும் கணத்தில் பத்மாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் வேதனை கொடியாகப் படர்ந்திருந்தது; தலைமயிர் முன்னால் முகத்தில் விழுந்து முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது.

“ஓ பத்மா” என்று லயனல் மனதுள் சொல்லிக்கொண் டான். அவளின் பார்வை , அவள் நிலை, அவள் சோகம், அவன் மனதில் நிலைத்துவிட்டது. சந்திரேயை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவனைக் கவனித்தது முழுக்க லயனல் தான். சந்திரே கட்டிலில் கிடந்து, அவன் சூழலை மருவிப் பார்த்தது லயனலுக்கு வருத்தமாக இருக்கும். பத்மா சாப்பாடு செய்து கொடுக்கச் சந்திரேக்கு அவன்தான் சைக்கிளில் சாப்பாடு கொண்டு போவான். பத்மா அந்த நாட்களிலெல்லாம் அமைதியாகத்தான் இருந்தாள். சந்திரே குணமாகி வீட்டுக்கு வந்த பின்னர் அவள் கலகலப்புத் தொடங்கிவிட்டது. லயனலோடும் சீண்டலுக்கு வரத் தொடங்கினாள்.

பத்மாவைப் பற்றிக் குசுமாவுக்கும் அவள் தாய்க்கும் ஒரு முடிவிருந்தது.

“… லயனலுக்கு உத்தியோகம் கிடைக்கட்டும்….”

அதை அவர்களால் சொல்ல முடியாமலிருந்தது. பத்மா வீட்டுக்கு வந்தால் அவளும் குசுமாவும் பேசுவதைக் கேட்க லயனல் வந்துவிடுவான். கொஞ்ச நேரந்தான் கேட்க முடியும்; பிறகு அவர்கள் சிரிப்பைப் பொறுக்க முடியாமல் போய் விடுவான்.

V

இதற்கிடையில் போதிரிஸ் தான் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே மகனுக்கு வேலை தேடுவோம் என்று ஒருநாள், அதே வெள்ளைக்காரன் சட்டை, சப்பாத்து அலங்காரங்களுடன் மகனைத் தன் கம்பெனிக்குக் கூட்டிக்கொண்டு போனார்.

முதலாளியின் வீடு, காரியாலயம், லொறிகள் விடும் ஷெட், கராஜ் சாமான்களைத் தற்காலிகமாக அடைக்கும் ஸ்டோர் எல்லாம் ஒன்றுக்கொன்று பக்கத்தில் தான் இருந்தன. அந்த முதலாளி காலை சரியாக எட்டு மணிக்குத் தன் கோட்டை மாட்டிக்கொண்டு தன் வீட்டிலிருந்து நடந்தே காரியாலயத்துக்குப் போவான்.

பேதிரிஸ் தன் புத்திரசிகாமணியுடன் போன அன்றும் அதே வழக்கத்துடன் புறப்பட்டு வர, “ஆயு போவன் மஹாத்தயா” (வணக்கம் ஐயா) சொன்னார்கள். முதலாளி தலையசைத்துக் கொண்டு சட்டைப் பொத்தான்களை மாட்டிக்கொள்வதில் கவனமெடுத்துவிட்டுப் பேசாமல் நடக்க ஆரம்பித்தான். புறத்தே பேதிரிசிம் மகனும் நடந்தார்கள்.

“மஹாத்தயா (ஐயா!) இவன்தான் என் மகன்…” “மம்ம்” என்று முதலாளி, மகனை ஒரு பார்வை பார்த்தான். “நான் சொன்னேனே படித்துவிட்டு இருக்கிறானென்று…”

“ம்ம் அது கிடக்க பொடி சிங்கோவைக் கூப்பிடு ” என்றான். பேதிரிஸ் மெக்கானிக் பொடி சிங்கோவைக் கூப்பிட ஓடினார். அவர் ஓடுவதை லயனல் பார்த்தான். வீட்டில் எவ்வளவு கம்பீரமாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் தன் தகப்பன் எப்படி ஓடுகிறார்? மனதில் பெரிய பாரம் ஏறி அமத்துவதுபோல் அவனுக்குத் தோற்றியது.

“பத்தாவதில் எத்தனை பாடங்களில் கிரெடிற் எடுத்திருக் கிறாய்?” முதலாளி கேட்டான்.

“ஏழு” என்றான் லயனல், முதலாளியைப் பார்க்காமலே. “ஓ” என்றான் முதலாளி. வேறெதுக்காகவுமல்ல; அவன் பிள்ளைகள் ஒன்றிரண்டுக்கு மேல் ஒருநாளும் எடுத்ததில்லை.

பொடி சிங்கோவும் பேதிரிசும் இதற்கிடையில் வந்தார்கள்.

“பொடி சிங்கோ , இந்தப் பதினாறாம் நம்பர் லொறி இன்னும் ரிப்பேர் பண்ணி முடியவில்லை. எப்ப முடிந்து, எப்ப லொறி ஓடுகிறது? எத்தனை தேயிலைப் பெட்டி முடங்குது பார்த்தியா? சீக்கிரம் பார்….. இரண்டு மணிக்குள் எப்படியும் இன்றைக்கு லொறி ஓட வேண்டும். இரைந்தான் முதலாளி. “சரி, மஹாத்தயா” என்று பொடி சிங்கோ லயனலையும் ஒருகணம் பார்த்துவிட்டுப் போனான்.

முதலாளியின் இரைச்சலின் ஆவி அவனைச் சூடாக்கிய அந்தக் கணத்தில் பொடி சிங்கோவின் பரிதாபமான பார்வை யும் சேர்ந்து அவனை வருத்தியது.

“இந்த கம்பெனி வேலைகளெல்லாம் தெரிந்தால் தானே இங்கே வேலை பார்க்கலாம். அதுக்கள் எல்லாம் தெரிய வேணுமே? என்றான் முதலாளி நடந்து கொண்டே.

“அதுகளைக் கொஞ்சம் பழகினால் பிடித்துக்கொள்வான்” என்று பேதிரிசே சொன்னான், எங்கே லயனல் என்னத்தையேனும் பிழையாகச் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில். லயனலுக்கு உடம்பெல்லாம் எரிந்தது.

“சரி, கொஞ்ச நாளைக்குப் பிறகு பார்ப்போம்…” என்று முதலாளி அவன் அறைக்குள் போய்விட்டான். அதைத் தொடர்ந்து கட்டளைகளும் பேச்சும் இரைச்சலும்!

அதற்குப் பிறகு ஒரு கால் மணி நேரத்திற்குள் அந்த இடத்தில் எத்தனை மாற்றம். கராஜில் லொறிகள் திருத்தப்படுவதும், தேயிலைப் பெட்டிகள் ‘டக்டக் கென்று லொறிகளில் ஏற்றப்படுவதும், காரியாலயத்தில் ரைப்பிங் விரைவாக நடப் பதுவும்!

லயனல் சிறுவனாக இருந்தபோது தகப்பனுடன் ஓரிருமுறை வந்திருக்கிறான். அப்போதெல்லாம் பொடி சிங்கோ லொறி இயந்திரங்களைத் திருத்துவதை ஆவலுடன் பார்ப்பான்.

அன்று பொடி சிங்கோ லொறி போனட்டைத் திறந்து குடைந்து கொண்டிருந்தான்.

“புத்தே ! எப்படியிருக்கிறாய்?” பொடி சிங்கோ வெற்றி லையை வாயில் குதப்பியபடி கேட்டான்.

“பரவாயில்லை ” என்றான் லயனல்.

லொறிக்குக் கீழே இரண்டு உதவிப் பையன்கள், கிரீஸ் ஒயில் அப்பிய சட்டைகளுடன் இருந்தார்கள். பொடி சிங்கோ தானும் வேலை செய்து கொண்டு இடைக்கிடை அவர்களை ஏவிக்கொண்டும் வெற்றிலை குதப்பியபடியே,

” … இதை இரண்டு மணிக்குள் முடிக்கட்டாம். எப்படி முடிக்கிறது? எஞ்சின் ஹெட்டைக் கழற்ற வேண்டும்” என்று முணுமுணுத்தான். கொஞ்ச நேரத்தில் பொடிசிங்கோவும் சிஷ்யகோடிகளும் எஞ்சின் ஹெட்டைக் கழற்றிவிட்டார்கள். கழற்றியதை வெளியில் எடுத்து வைக்க வேண்டுமே ! பொடி சிங்கோ ஒரு பக்கம், இன்னும் இரண்டு பேர் மற்றப் பக்கம் பிடித்து, மெல்ல அதைக் கழற்றி மேலே தூக்கிச் சிரமப்பட்டு ஒரு தூணுக்கருகில் ஓர் இரும்பு மேசைக்கருகில் கொண்டு போய்க்கொண்டிருந்த கணத்தில் முதலாளி வந்தான். முதலாளி மௌனமாகவே இவைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

“ஹெமின் ஹெமின் …” மெல்ல மெல்ல) என்று பொடி சிங்கோ சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டு, அதை இறக்கி விட்டுத் திரும்பி முதலாளியைப் பார்த்தான். லயனல் மண்டையில்:

“யோசித்துப் பார்! உடலை வருத்தித் தன்னையே இழந்து 150 மேலே உருட்டிக்கொண்டு போன கல் கடகடவென்று ஒரு கணத்தில் பள்ளத்துக்குப் போய்விடும். அது அப்படி உருண்டு போகிறதை சிசிபஸ் பார்ப்பான்” என்பது ரீங்காரமிட்டது.

சிசிபஸ் இப்படித்தான் பார்ப்பான்!

முதலாளி லயனலையும், லயனல் நடப்பவைகளைப் பார்ப்பதையும் ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விட்டான்.

“…. அவன் விதியிலிருந்து அந்தக் கணம் விடுபட்டுக் கொள்கிறான்.”

“ஸ்பானரைக் கொண்டுவாடா” என்ற பொடி சிங்கோ வின் சத்தத்தில் லயனல் தன் சிந்தனைத் தொடரிலிருந்து விடுபட்டுக்கொண்டு, தேயிலைப் பெட்டிகளை ஸ்டோரிலிருந்து லொறியில் ஏற்றுவதைப் பார்க்கப் போய்விட்டான்.

மூன்று பேர் முதுகில் கொண்டு போக, லொறியில் அதை வாங்கி ஒருத்தன் அடுக்குகிறான். இயந்திரகதியில் தொடர்ச்சியாக அடுக்கிக்கொண்டே இருந்தார்கள். லயனல் வெகு கவனமாகப் பார்த்தான். லொறியில் பெட்டியை ஏற்றிவிட்டு வெறுமனே திரும்பும் போது அவர்கள் முகத்தில் எந்தவித மாற்றமுமில்லை. ஆனால், அப்போதுதான் ஒருவருக்கொருவர் பேசிக்கொண் டார்கள்.

“அவன் விதியிலிருந்து அந்தக் கணம் விடுபட்டுக்கொள் கிறான்!” லயனலுக்குக் கை விறுவிறுத்தது. இப்படி லொறியில் தேயிலைப் பெட்டிகள் ஏற்றப்படுவதை நெடுநேரம் பார்க்க முடியாமலுமிருந்தது.

திரும்பிப் பின்னர் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் நெடுநாள் வரை இவையெல்லாம் (விசேஷமாகப் பொடி சிங்கோவின் கஷ்டம் ) மனதில் திரும்பத்திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தன. இதற்குப் பிறகு பேதிரிஸ் வீட்டுக்கு வந்த போது வேலை கிடைப்பதைப் பற்றி அவன் ஒன்றும் கேட்க வில்லை. அவராகத்தான் சொன்னார்.

“இன்னும் இரண்டு மாதங்கள் போகட்டுமாம்.”

லயனல், பொடி சிங்கோவைப் பற்றி விசாரித்தான். பேதிரிஸ் அவனை வர்ணித்தார் :

“அவன் ஒரு கெட்டிக்கார மெக்கானிக். அவன் போய் விட்டானென்றால் லொறிகள் கட்டைமேலே ஏறிவிடும். அது முதலாளிக்கே தெரியும்….”

“அது தெரியுமென்றால், ஏன் முதலாளி அவன் மேல் போய்ப் பாய்கிறான்?”

“வேலை வாங்கத்தானே?” குரல் எழும்பிப் பின் குறைந்தது.

“அவனாலும் என்ன செய்ய முடியும்? சம்பளம் முதலாளி யிடம்தானே வாங்க வேண்டியிருக்கு?”

லயனலின் யோசனைகள் வானத்தில் மிதப்பது போல் மிதக்கத் தொடங்கின.

“சிசிபஸ் பாவம் ” என்று முணுமுணுத்தான். “யார்?” என்றார் பேதிரிஸ்.

“பொடி சிங்கோ பாவம்.” தன்னைத் திருத்திக்கொண்டான். பேதிரிசுக்கு இது அவ்வளவு பிடிக்கவில்லை .

“ஏன்? கம்பெனியில் வேலை பார்க்கிற மற்றவர்கள் பாவமில்லையா” என்று ஓரளவு சூடாகக் கேட்டுவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டார். பிறகு, ஒவ்வொரு முறையும் வரும்போதும் அவராகத்தான் இந்த வேலை விவகாரத்தைப் பற்றி ஏதாவது சொல்லுவார். லயனல் ஒரு நாளாவது கேட்டது கிடையாது,

“அவன் எப்படிக் கேட்கிறது?” என்று போதிரிஸ் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்வார்.

இவன், இந்த லயனல் வேலை தேடின கதையும் ஒருத் தருக்கும் சரியாகத் தெரியாது. வரவர அவன் கசெட்டையும் (Government Gazette) பத்திரிகைகளையும் தேடுவது குறைந்து கொண்டு வந்தது. ஒருமுறை ஒரு வேலைக்காக அவன் எழுதியது இவ்வளவுதான்: நீங்கள் விளம்பரப்படுத்திய மேற்படி வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

கீழே ஒரு புரியாத கையெழுத்தில் இருந்தது. ஊன்றிப் பார்த்திருந்தால் தெரியும்.

“சிசிபஸ்”

பலர் இன்னும் அதைத்தான் நம்புகிறார்கள். பத்மாவுக்குக் கூடச் சிலவேளைகளில் அந்த ஐயம் தோன்றும். ஆனால், அவள் அதை முழுக்க நம்பத் தயாராக இல்லை. “எனக்குத் தெரியுந்தானே?” என்று தனக்குள் சொல்லிக்கொள்வாள். இந்த லயனலின் தற்கொலைக்குக் காரணம் பத்மாவை, அவள் தகப்பன் அந்தக் கடைக்கார முதலாளியின் மகன் ஜயத்திலகவிற்குக் கட்டிக்கொடுத்ததுதானாம். குசுமாவுக்கும் அவள் தாய்க்கும் இதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை . பேதிரிசிடம் இவைகளைச் சொல்ல முடியாது.

இந்தப் பேச்சு – கல்யாணப் பேச்சு – அடிப்பட்ட போதும் சரி , கல்யாண வீட்டின் போதும் அதே தாமரை இலைத் தண்ணீர்த்தனத்துடன் இருந்தான். பத்மா என்றவுடன், அவன் நினைவில் சந்திரேயை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போன அன்று அவள் நின்ற நிலைதான் எழும். குசுமா, இந்தக் கல்யாணப் பேச்சு அடிபட்டபோது பத்மாவை நேரே கேட்டாள்.

“உனக்கு இதில் விருப்பமா?”

பத்மா அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தில் தன் 152 பார்வையை விழுத்தி வெறுமனே சிரித்ததில் குசுமாவுக்கு மேலே எதுவும் கேட்க முடியாமல் போய்விட்டது. பத்மாவின் கல்யாண வீட்டு வரவேற்பில் நீங்கள் லயனலைப் பார்த்திருக்க வேண்டும். அன்றைக்கு நிறையக் குடித்துவிட்டு அவன் ஆடிய பைலா நடனத்தைப் பற்றி இன்றும் பேசிக்கொள்வார்கள், அவன் நண்பர்கள். எல்லாம் முடிந்து இரவு இரண்டு மணி போல் கதவைத் தட்டினான். வீட்டில் இருந்த சோமபால கதவைத் திறந்தான். லயனல் அவனையும் கட்டிப்பிடித்துப் பெரிய வசனங்களை ராகமிழுத்துப் பாடத் தொடங்கினான்.

“டேய் மச்சான்! எல்லோரும் கல்யாணம் கட்டிப்… பிள்ளைகள் பெத்து ….”

‘பிள்ளைகள் பெத்து’ இடத்தை இரண்டு, மூன்று முறை திரும்பத்திரும்பப் பாடியதில் தாயும் குசுமாவும் எழும்பி விட்டார்கள். குழந்தையும் குவா…. என்று அலறத் தொடங்கி விட்டது. சோமபால அவனைச் சமாதானப்படுத்திப் படுக்க வைத்தான்.

லயனல் அன்று இரவு புலம்பியபடியே நெடுநேரம் படுத்திருந்தான். குசுமாவுக்குக் கவலையாகப் போய்விட்டது. தாய்க்கு அன்று இரவு பூராவும் நித்திரை வரவில்லை.

அடுத்த நாள் காலை வெகுநேரம்வரை லயனல் எழும்ப வில்லை. எழும்பியபோது குசுமாவும் தாயும் கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார்கள். ஒன்றும் பேசவும் முடியவில்லை . அவனுக்கு முதல் நாள் நடந்தது கொஞ்சந்தான் ஞாபகமிருந்தது. வழக்கம் போல அவனுடைய தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டு தன் சூழல் முழுவதையும் பார்த்துக்கொண்டு நின்ற போது சந்திரேயை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனபோது பத்மா நின்ற தோற்றம் முன்வந்தது. அந்தத் தோற்றம் முன்வந்தது மனதில் எழுந்து கொஞ்ச நேரத்தின் பின்னரே, பத்மா’ என்ற உணர்வு உறைத்தது.

அவளும் பிள்ளை பெறுவாள் ‘ என்று யோசித்துச் சிரித்துக் கொண்டான். பத்மாவும் அவள் புருஷன் ஜயத்திலகவும் சோடிகளாகச் சிரித்துக் கைகோர்த்துப் போவதைத் தன் வீட்டின் யன்னலுக்கூடாகப் பார்த்திருக்கிறான். குசுமாவும் சோமபாலாவும் அவர்களுக்கு விருந்து கொடுத்தார்கள். குசுமாவுக்கு லயனலையும் கூப்பிடுவதா என்பது யோசனையாகிப்போய் லயனலைக் கடைசியாகக் கூப்பிடவில்லை. புருஷன் சோமபால வீட்டில் தானே கொடுத்தது? விருந்தின் போது பத்மா கேட்டாள். “எங்கே லயனல்?”

“அவனுக்கு வேலை இன்னும் கிடைக்கவில்லையா?” ஜயத்திலக கேட்டான்.

“இல்லை.” குசுமாவின் குரலில் கவலை சிந்தியது.

“அது சீக்கிரம் கிடைக்கும்” என்றாள் பத்மா.

இந்த விருந்து விஷயத்தை லயனலுக்குச் சொல்ல வேண் டாம் என்று சோமபாலாவைப் பயமுறுத்தியிருந்தாள் குசுமா . சோமபால இதே கவனமாக இருந்து, லயனலுக்கு ஒருநாள் வாய்தவறிச் சொல்லியே விட்டான். (அவனுக்கு இப்படி ரகசியங்களை மனதில் வைத்திருந்து பழக்கமில்லை .) லயனல் இதைப் பற்றிப் பொருட்படுத்தினவனாகத் தெரியவில்லை.

“ஆ….” என்றான் அசிரத்தையுடன்.

சோமபால, குசுமா நிற்கிறாளோ என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

VI

பத்மாவின் வயிறு ஊதிக்கொண்டு வரத் தொடங்கியது! லயனல் கண்ணில் இது முதல் பட்டபோது, திருப்தியுடன் சிரித்துக்கொண்டான். ” இந்தப் பெண்கள் எல்லாக் கும்மாள மும் அடித்துக் கடைசியாகக் கண்டதென்ன? இப்படி வயிற்றை ஊதுவித்துக்கொண்டதுதானே?” என்று சிலநேரங்களில் யோசித்துக்கொள்வான். பத்மாவின் நடையின் வேகம் குறைந்து குறைந்து வருவதை யன்னலூடாகவும் தோட்டத்திலிருந்தும் பார்த்துக்கொண்டு வந்தான்.

பழைய பத்மாவாகவே அவள் இன்னும் தோற்றினாள். அவளும் ஒரு குழந்தையைப் பெற்றுத் துவண்டு படுத்திருப் பதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது. பத்மா வெளியே நடக்கமுடியாமல் வீட்டிற்குள்ளேயே உலாவிக்கொள்ள வேண் டிய நாட்களும் வந்தன!

இதெல்லாம் பின்னணியாய் அமையத்தக்கதாய், அந்தக் கிராமத்தவர்களால் அமைதியான, நல்ல பையன் என்று பெயரெடுத்திருந்த லயனல் அந்தக் கிராமத்தையே உலுக்கும் வண்ணம், அவன் அறையின் உத்தரத்தில் தொங்கித் தற்கொலை செய்து கொண்ட ஒருநாள் வந்து சேர்ந்தது. அன்று காலை வழக்கமான, மிக வழக்கமான அலுவல்களைத்தான் அவன் செய்தான். தாய், காலைச் சந்தைக்குப் போய்த் திரும்பிய பின்னரோ இல்லை அதற்கு முன்னரோ அவனில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்றுதான் சொல்லிப் பிறகு புலம்பினாள். அவள், வழக்கமாகத் திரும்பும் நேரத்தைவிடப் பிந்தித்தான் வந்திருந்தாள். தபாற்காரன் வரவும் அவள் வரவும் சரியாக இருக்கும் – அதற்கும் ஒரு மணித்தியாலம் பிந்திவிட்டது.

“தபாற்காரன் வந்தானா?” என்று அவள் கேட்டிருக்க லாம். ஆனால், கேட்கவில்லை. அதை விட்டுவிட்டு, இவன் தற்கொலைக்கும் பத்மா பிள்ளைப்பெறப் போனதுக்கும் சம்மந்தம் இருக்கிறது என்று கடுமையாக ஐயப்பட்டாள் – அதை விடுவோம். அன்று வழக்கம்போல் மத்தியானம் சாப்பிட்டான். அப்போது ஒருமாதிரியாக இருந்தானா இல்லையா என்பது பற்றித் தாய்க்குத் தெரியவில்லை .

“அவன் வேலை தேடின மூன்று வருஷமாக இப்படித் தானே இருக்கிறான், நான் என்னத்தைக் கண்டேன்” என்று ஒப்பாரி .

மத்தியானம் இரண்டு மணிக்கு அவள் பத்மாவுக்கு இடுப்பு வலி என்று ஆள் வந்ததன்பேரில் அவள் உதவிக்குப் போனாள். போகும் போது, “புத்தே ! இரவு சாப்பிட குசுமா வீட்டிற்குப் போ. சில நேரம் நான் வர நேரமாகும்” என்று ஓடினாள். அந்த ஆள் வந்து பத்மாவுக்கு இடுப்பு வலி என்றபோது லயனலும் கேட்டுக்கொண்டிருந்தான்.

தாய் போனபின் தன் மேசையிலிருந்து எதையோ – ஒரு கடிதம் மாதிரித்தான் அது இருந்தது – எடுத்து வாசித்து விட்டுத்தான் காற்சட்டைப் பைக்குள் அதைத் திணித்தான். நெடுநேரம், இருட்டு மட்டும் வெறுமனே படுத்திருந்தான். நித்திரை கொள்ளவில்லை. தாயையும் காணோம். குழந்தையொன்று கையையும் காலையும் உதைத்து, விதிர்த்து “க்குவா… க்குவா…” என்கிற காட்சி மனத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.

திடீரென்று துள்ளியெழும்பினான். புறப்பட்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு தமக்கை குசுமாவைக் காணப் போனான்.

“எனக்குப் பசிக்கிறது.”

குசுமாவுக்கு அவன் தொனியில் இருந்த வித்தியாசம் புலப்படவேயில்லை.

“ஆ, இந்தா கொண்டுவருகிறேன். அம்மா சொல்லிவிட் டுத்தான் போனாள். இன்னும் வரவில்லையா? என்ன குழந்தை, ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ? சுகப்பிரசவம் ஆக வேண்டுமே.” என்று தன்பாட்டில் சொல்லிக்கொண்டு போனாள். சாப்பிட்டு முடிந்தவுடன்,

“அக்கா, போய் வருகிறேன்.”

அப்போதும் அவள் மரமண்டையில் இதன் தொனி ஏற வில்லை. என்றாலும், “இன்று இங்கேயே படு” என்றாள்.

“வீட்டுக்குக் காவல் வேண்டாமா? நான் போய் வருகிறேன்.” அவள் ‘ம்’ என்பதற்குள் அவன் போய்விட்டிருந்தான்.

நேரே போய் நண்பன் விஜேசிங்கவிடம் சைக்கிள் இரவல் வாங்கினான்.

விஜே அழுத்தமில்லாமல் தான் கேட்டான், “எங்கே போவதற்கு?”

“அம்மா ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள். அவளை இன்னும் காணவில்லை. அதுதான் போய்ப் பார்த்துவிட்டு…”

“ஆ…. ஆ… இரவு நேரம் கவனமாகப் போய் வா” என்றான். அவ்வளவுதான் ஊராருக்குத் தெரியும். ஆனால், அவர்களால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நேரே நான்கு மைல் தொலைவிலிருந்த கிராம ஆஸ்பத் திரிக்குப் போய்ச் சேர்ந்தான். சைக்கிளைச் சாத்திவைத்துவிட்டு, கனத்த மனத்துடன் லேபர் வோர்டை’ நோக்கிக் கனவில் நடப்பவனைப் போல நடந்தான். அவன் கனவையும் நினைவையும் இருதயத்தையும் கிழித்துக்கொண்டு, “ஆ!” என்ற பிரசவ அலறல் கேட்டது. அது பத்மாவின் குரல்!

அது அவனுக்கு நன்றாகத் தெரியும். ‘டக்’கென்று நின் றான். திரும்பி ஓடிவந்து சைக்கிளில் ஏறி மிதித்துக்கொண்டு வேகமாக வந்து சேர்ந்தான். சைக்கிளைத் திருப்பிக் கொடுக்கும் போது விஜேசிங்கவைக் காணவில்லை. அவன் தம்பிதான் நின்றான்.

வசதியாகப் போயிற்று. நேரம் இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கும். வீட்டுக்கு ஓடிவந்து விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுத ஆரம்பித்தான்.

“என் சாவிற்கு நானே காரணம்… (அப்படித்தானே எல்லோரும் எழுதுகிறார்கள்?) யார்மீதும் எனக்கு வெறுப்போ கோபமோ கிடையாது. என் குடும்பத்தாரை இப்படித் திடுக்கிட வைப்பது எனக்கு… (எனக்கு) கசக்கிறது. ஆனால், என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்.

இப்படிக்கு..”

இவ்வளவையும் கிறுகிறுவென்று எழுதியவன், கையெழுத்து இடத்தில் யோசித்தான். அந்தக் கடிதத்தைக் கிழிப்பதற்கும் கைபோனது. திடீரென்று கையெழுத்து வைத்தான்.

“லயனல் அப்புஹாமி”

தோட்டத்துக்குப் போய்க் கயிற்றை எடுத்துக்கொண்டான்; கடிதத்தை மேசைமேல் வைத்து, அதற்கு மேல் ஒரு கல்லையும் வைத்தான். கதவுகளை வெறுமனே மூடி….

முதலில் பார்த்தவள் குசுமாதான். “அம்மே!” ஓலம் வானை எட்டியது.

ஆஸ்பத்திரியிலிருந்து தாய் வந்து… கொஞ்சமாக ஊரே வந்து … ஒப்பாரி .

“என் தெய்வமே!”

பேதிரிஸ் வந்து இடிந்து போனான். பேதிரிஸ் அழுவதை ஊரார் அன்றுதான் கண்டார்கள்.

“ஏன் இவன் இப்படிச் செய்தான்?”

அவன் செய்தது, செய்யாதது எல்லாவற்றையும் நினைவு கூர முயற்சித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் நினைவு நெடுநாள் வரை அவர்கள் மனதில் இருந்தது.

இதையும் நான் சொல்ல வேண்டும்.

லயனல் போன இரவு, பத்மாவுக்குக் குழந்தை பிறக்க வில்லை . அடுத்த நாள் தான் பிறந்தது ! லயனல் இறந்துபோன செய்தியைக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அவளிடம் சொன்னார்கள்!

“ஐயோ பாவமே!” என்றாள் பத்மா.

VII

பேதிரிசின் ஆழ்ந்த நித்திரையிலிருந்து மாணிக்கம் தட்டி எழுப்பினான். “தாத்தே! அல்பேட்டின் லொறி வந்திருக்குது. கம்பெனிக்குத்தான் போகிறதாம். நீங்கள் போய் மனேஜரிடம் சொல்லுங்கள். நான் லொறிக்குக் காவல் நிற்கிறேன்.”

அல்பேட் அதே கம்பெனியைச் சேர்ந்த லொறி டிரைவர். பேதிரிஸ் ஒருவாறு எழுந்து, அல்பேட்டின் லொறியில் முன்னால் ஏறிக்கொண்ரர். அல்பேட் பேதிரிசைவிடப் பத்து வயது இளையவன். பேதிரிசின் ட்ரைவிங் அனுபவம் பற்றி அந்தக் கம்பெனியிலேயே ஒருவருக்கும் ஐயம் இல்லை. இதனாலே மெத்த மரியாதையாய்த்தான் அல்பேட் கேட்டான்.

“தாத்தே! என்ன நடந்தது?”

“லொறி கவிழ்ந்து போய்விட்டது, அவ்வளவுதான்” என்று பதில் வந்த சூட்டில் அல்பேட் மௌனமானான்.

பேதிரிசுக்கு இனம்புரியாத கோபம் உள்ளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. முதலாளி விபத்தைப் பற்றிக் கேள்விப்பட் டதும் சாமியாடினான். “லொறி விலை, வேலை நட்டம், இன்ஷூரன்ஸ்” என்று என்னென்னவோ சொன்னான். பேதிரிஸ் பெல்ட்டை சாவகாசமாக இறுக்கி, மீசையை முறுக்கி, தன் ப்ரொவிடன்ட் பண்டைத் தந்து அனுப்பச் சொல்லிக் கேட்டான்.

“ஆ… ஆ… சந்தோஷமாகத் தரலாம் போ போ ….” என்றான் முதலாளி.

“நான் வேலை செய்த இந்த இருபத்தைந்து வருஷத்துக்கு மேலே இன்னும் ஐந்து வருஷம் கூட உங்களிடம் வேலை செய்தால், அடித்தே விரட்டுவீர்கள். நான் வருகிறேன்.”

பேதிரிஸ் கிளம்பிவிட்டான். முதலாளி விக்கித்துப் போனான். “உனக்கென்ன நடந்தது?”

பேதிரிஸ் தன் வீட்டுக்கு போய் இறங்கினார். கோட்டைக் கழற்றி, பெல்ட்டையும் கழற்றி எறிந்தார்.

மனைவி கதவருகில் மௌனமாக நின்றாள்.

“நான் வேலையிலிருந்து பென்ஷன் ஆகிவிட்டேன்” என்றார். அவளுக்கு அது சந்தோஷம்தான்.

அவர் எறிந்த பெல்ட் லயனலின் பெட்டிக்கு மேலே விழுந்தது. அந்தப் பெட்டியின் மேல் லயனல் நேர்முகப் பரீட்சைகளுக்குப் போட்டுக்கொண்டு போகிற காற்சட்டை இருந்தது. எறிந்த வீச்சில் பெல்ட் , காற்சட்டையையும் இழுத் துக்கொண்டு விழுந்தது. காற்சட்டையைத்தான் போதிரிஸ் எடுத்தார். அதைத் தடவிக்கொடுத்தார், பல நினைவுகளுடன். அதன் பைக்குள் கடிதம் மாதிரி ஏதோ கசங்கி இருந்தது. அதை ஆவலுடன் எடுத்து வெளியே கொண்டுபோய் வெளிச் சத்தில் வாசித்தார்.

“ஏ! இதைப் பாரேன்!” என்றார். மனைவி ஓடிவந்தாள்.

“என்ன?”

“லயனலுக்குக் கடைசியாக வேலை கிடைத்துத்தான் இருந்திருக்கிறது.”

வாசித்தார்.

“தாங்கள் எழுதுவினைஞர் தரம் III பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்…”

“என்னது?”

பேதிரிஸ் ஸ்தம்பித்து நின்றார். “அவன் அப்போ ஏன் இப்படிச் செய்தான்?”

குசுமா குழந்தையுடன் வரும் சப்தம் வெளியில் கேட்டது. இந்தப் புதினத்தைக் குசுமாவிடம் சொல்ல ஓடினாள் தாய்.

குசுமா, தாய் சொல்வதைக் கேட்டுக்கொண்டே தகப்பனைப் பார்த்தாள்.

மரம் போல் பேதிரிஸ் நின்றுகொண்டிருந்தார்.

– கணையாழி, அக்டோபர் – நவம்பர் 1977

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *