நாளைய உலகின் நாயகர்கள்!





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் அந்தக் கல்லூரிக்கு அதிபராகப் போகப் போகிறேன் என்று எங்கள் பாராளுமன்ற உறுப்பினரை ‘வால்’ பிடித்தவன் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கல்லூரியில் என்ன பதவியில் இருந்தாலும் ஒன்றுதான் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். எங்கேயும் மனம் வைத்தால் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்றும் எனக்குள் மரணித்துப் போய்விடவில்லை.
ஆனால் அந்தக் கல்லூரியின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர்தான் முழு மூச்சாய் நின்று யார் யாரின் காலையோ கையையோ பிடித்து இந்த இடமாற்றத்தைச் செய்வித்திருக்கிறார் என்று அறிந்தபோது நான் அதை மறுக்கவுமில்லை. தானாக என்னைத் தேடி வருகின்ற ஒரு பதவி உயர்வு, மறுப்புச் சொல்வதற்கு எனக்கு என்ன பைத்தியமா? மனதில் ஒரு சுகாநுபவமான உணர்வு தலைதூக்கிற்று அப்போது.
“பழைய பிரின்சிப்பல் சொந்த ஊருக்கு ரான்ஸ்பர் எடுத்துக் கொண்டு போறார். நீங்கள் அங்கே பிரின்சிப்பலாய் வரவேண்டும்” என்று அந்த அபிவிருத்திச் சங்கச் செயலாளர் என்னிடம் வந்தபோது இதற்கு ஏதும் பிரச்சினையான பின்னணி இருக்குமென்று நான் கற்பனை செய்யவுமில்லை.
அடுத்தநாள் நான் புதிய கல்லூரியில் அதிபராகப் பெறுப்பேற்க வேண்டும். முதல்நாள் மாலையில்தான் ‘ஏதோ பிரச்சினை’ என்று நான் அறிந்தேன். அப்போதும் எனக்கு விடயம் சரியாகப் புரியவில்லை.
ஒருநாளும் தளவாடியில் முகம் பார்த்தறியாத நான் அன்று காலையில் கல்லூரிக்குப் புறப்படமுன் தளவாடியில் முகம் பார்த்தேன். ஒரு கல்லூரியை ஆள்வதற்குரிய ‘ஆளுமை’ என்னிடம் இருக்கிறதா? என்று உள்ளத்தில் ஒரு மூலையில் தோன்றிய சந்தேகக் கீற்றின் பிரதிபலிப்பே அந்தச் செயல்.
அக்கல்லூரியின் பழைய அதிபரை எனக்குத் தெரியும். அவருடைய தோற்றத்தை ஒருமுறை மனக்கண்ணில் இழுத்து வைத்து நிறுத்திப் பார்த்தேன்.
சிவப்பு நிறத்தில் கட்டை மனிதர். பத்துப்பேர் அவர் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டாலும் கண்டித்து இறக்கத் தெரியாத அப்பாவி மனிதர். அவரே இக்கல்லூரியை இதுநாள்வரை நடத்தி விட்டாராம். என்னால் முடியாதா? மனதில் ஒரு நம்பிக்கை துளிர்க்கச் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அந்தப் புதிய ‘ஏசியா பைக் எனது உற்சாகத்திற்கு ஏற்ப லாவகமாயும் வேகமாயும் பறந்தது.
இதுவரை இன்னொருவருக்குக் கீழே ‘உப அதிபர்’ என்று இருந்து வந்த நான் இன்றுமுதல் ‘அதிபர்’. போய்ச் சேர்ந்தவுடன் எல்லா மாணவர்களையும் ஹாலுக்கு அழைத்து ஒரு ‘அசெம்பிளி’ வைக்க வேண்டும். அப்போதே எனது நிர்வாகத்தில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் பற்றிக் கண்டிப்பாய்ச் சொல்லிவிட வேண்டும். இரண்டு மூன்று நாள் விட்டுக் கொடுத்துத் தளரவிட்டால் பின்னர் உயர் வகுப்பு மாணவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. மாலையில் ‘ஸ்ராவ் மீற்றிங்’ போட்டு ஆசிரியர் ஒழுக்கக்கோவை ஒன்று தயாரிக்க வேண்டும். அதேவேளையில் ‘ஸ்ராவுக்கு’ என் செலவில் இன்று ரீ தரவேண்டும். ஏதேதோ சிந்தனைகளில் மனம் பறக்கச், சைக்கிளின் வேகம் அதை முந்திக்கொண்டு கல்லூரிக்கு அண்மையில் வந்துவிட்டது.
அப்போதுதான் அந்தக் காட்சியை நான் திடுமென்று தரிசித்தேன். இரண்டு மூன்று சிறு குழந்தைகள் – முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புப் படிக்கக்கூடிய பாலகர்கள். பின்னே திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணம் நான் போய்க்கொண்டிருந்த திசைக்கு எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தார்கள். நான் ‘ஏசியா பைக்கை’ பிறேக் பிடித்துக் கீழே இறங்கி,
“ஏன் திரும்பி வாறீங்கள் பிள்ளையள்?” என்று மெதுவாகக் கேட்டேன். நான் புதியவன் என்பதாலோ என்னவோ மிகவும் சாதுபோல் தோன்றிய ஒரு பிள்ளை என்னைப் பார்த்துத் ‘திருதிரு’வென்று விழித்தது. கொஞ்சம் ‘துறுதுறு’வென்று இருந்த மற்றக் குழந்தை.
“இண்டைக்கு பள்ளிக்குடமில்லையாம்” என்றது.
“யார் சொன்னது?” என்று கேட்டேன். கல்லூரிப் பக்கம் பார்த்துத் திரும்பி நின்றுகொண்டு, தன் பிஞ்சுக்கையை அந்தத் திசையில் சுட்டி,
“அங்கை அதிலை நிக்கிற அண்ணையவை சொன்னவை” என்று தீர்க்கமாகச் சொன்னது குழந்தை. அத்திசையில் நோட்டமிட்டேன் நான்.
பதினொராம், பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கக்கூடிய மாணவர் குழாம் ஒன்று நடுத்தெருவில் படை எடுத்து நிற்பது இப்போது எனக்கும் தெரிந்தது. ஏதோ நடக்கிறது என்று புரிந்தது. ஆனால் எதற்கு, ஏன் என்று ஒன்றுமாய்ப் புரியவில்லை. அந்தப் பாலகர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்துச் செல்லலாம்தான். ஆனால் என்ன பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ளாமல் செயலில் இறங்கினால், ஒருவேளை நானே பிரச்சினையை வலுப்படுத்தியதாய் ஆகிவிடும் என்ற நினைவுடன் அவர்களைப் போக விட்டுவிட்டு முன்னேறிச் சென்றேன். மழை வேறு சன்னதமாகத் தூற்றலடித்துக்கொண்டு என் மன உளைச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.
தெருவின் ஓரத்தில் இருந்த அழகிய வீடொன்றின் முன்னால் நின்றுகொண்டு தெருவில் போகிற வருகிற எல்லாருக்கும் ‘நோட்டீஸ்’ விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு மாணவன் என்னை நிறுத்தி எனக்கும் ஒன்று தந்தான். நான்தான் புதிய அதிபர் என்பது அவனுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தபோது அவனிடம் அநுதாபமாக இருந்தது.
“பழைய அதிபரே இங்கு தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.”
“வேறு புதிய அதிபர் யாரும் எமக்குத் தேவையில்லை.”
“புதியவர்கள் இங்கு வந்தால் நாம் வகுப்புகளைப் பகிஷ்கரிப்போம்.”
“சரியான தீர்வு காணப்படாவிட்டால் உண்ணாவிரதம் ஆரம்பிப்போம்.”
அந்தத் துண்டுப்பிரசுரத்தின் சில வசனங்களை உன்னிப்பாய்ப் பார்த்துவிட்டுக் கவனமாய் மடித்துப் பொக்கட்டில் வைத்துக்கொண்டு ‘ஏசியா பைக்’கைத் தொடர்ந்து செலுத்தினேன்.
எல்லாம் சரிதான். ஆனால் இவர்களுடைய பகிஷ்கரிப்புக்கான காரணம் இன்னமுந்தான் எனக்குள் தெளிவாகவில்லை. அந்த அதிபர்தானே விரும்பிச் சொந்த ஊருக்கு மாற்றலாகிப் போகிறார். ஆகவே இது அவருடைய தூண்டுதலாகவும் இருக்க முடியாது. இவர்கள் என்னதான் கேட்கிறார்கள்?
கல்லூரி வாசலுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் என்னை இனம்கண்டு கொண்டிருக்க வேண்டும். அவர்களில் மிடுக்கான ஒரு மாணவன் “பழைய அதிபரை…” என்று சுருதி சேர்த்துத் தொடங்க மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து அதே சுருதியில் “மாற்ற வேண்டாம்…” என்று கோஷமிட்டு முடித்தனர். தொடர்ந்து,
“புதிய அதிபர்” … “தேவையில்லை”
“வகுப்புகளை” …. “பகிஷ்கரிப்போம்’
“உண்ணாவிரதம்” … “ஆரம்பிப்போம்”
“பழைய அதிபரை” … “மாற்ற வேண்டாம்”
போன்ற கோஷங்கள் நான் அவர்களைத் தாண்டிக் கல்லூரிக்குள் போகும்வரை ஒலித்துக்கொண்டிருந்தன. அந்த இரைச்சலிலும் அவர்கள் காண்பித்த ஓசை நயம் கோயிலில் காவடி எடுப்பவர்களுக்கு, “வேல் வேல்”…. “வெற்றி வேல்” கோஷம் போட்டு நன்றாகப் பழக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டியது. அந்த லயத்தின் அழகில் ஒரு கணம் மயங்கி லயித்தாலும் மறுகணம் என் மனதில் போராட்டம் தொடர்ந்தது. இவர்கள் எதற்காக என்னை வெறுக்கிறார்கள்? என்னுடன் ஒருநாள் கூடப் பழகாமல்… நெஞ்சிலே ஒரு சிலிர்ப்பு இருந்தாலும் என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டு மீண்டும் வீதியின் தொலைவை நோக்கினேன்.
புத்தகங்களும் கையுமாக வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த பல மாணவர்கள்… அவர்கள் எல்லாம் ஒழுங்காகப் பாடசாலைக்குப் படிக்க வந்தவர்கள் என்பதும், இந்த இருபது மாணவர்களே அவர்களைத் திருப்பி அனுப்பி உள்ளனர் என்பதும், ஆக இருபது மாணவர்களே உண்மையில் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க மிகுதிப்பேர் ஆட்டு மந்தைகளாக அவர்களைத் தொடர்கிறார்கள் என்பதும் எனக்குத் தெளிவாயின.
நான் உள்ளே போய்விட்டேன். நல்ல காலம், அவர்கள் யாருமே என்னை உள்ளே போகவிடாது தடுத்து நிறுத்தவில்லை. தட்டினால் ஒடிந்துவிடும் என்பதுபோல் ஒல்லியாக இருக்கும் நான் நிச்சயமாக அவர்களுடன் ‘கராட்டி போட்டு வென்றிருக்க மாட்டேன். உள்ளே ஆசிரியர்களிடமிருந்துகூட எனக்கு ஆவேசமான வரவேற்பு எதுவும் இருக்கவில்லை என்பது உண்மைதான். அதிகமான ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாய் இருந்து ‘நிலைமையை’ ஆராய்ந்து கொண்டிருந்தனர். ஓர் இளம் ஆசிரியர் மாத்திரம் மிக அவசரமாக என்னிடம் ஓடி வந்தார்.
“வாங்கோ சேர், இந்தக் காலத்துப் பெடியளை அடக்கேலாது, பள்ளிக்கூடத்துக்குள்ளை நிண்ட பிள்ளையளையும் கலைச்சுப் போட்டாங்கள். நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டன், அவங்கள் கேட்கமாட்டேனெங்கிறாங்கள்.”
வலிந்து என்னைத் தேடிவந்து எனக்கு ‘ஐஸ்’ வைத்த பாணியில் அவர்தான் இம் மாணவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்திருப்பாரோ என்ற ஐயம் இயல்பாக என் மனதில் எழுந்தது. கண்களில் ஒரு தீட்சண்யமான பார்வையைப் பதியவிட்டபடி,
“பரவாயில்லை மாஸ்டர், அவங்களும் தங்கடை ‘ஒபினியனைத் தெரிவிக்கத்தானே வேணும்” என்று என் மனதின் போராட்டங்கள் வெளியே தொனிக்காத ஒரு குரலில் பதில் தந்தேன் நான். தொடர்ந்து ஓர் அமைதியான நிலையில் இருப்பதான பாவனையுடன் ஆசிரியர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினேன். அங்கே.
“மாணவர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் ஒரு சில மாணவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை மிகுதி மாணவர்கள் மீது திணிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. பெரும் பான்மையான மாணவர்கள் இன்று வழமை போலப் பாடசாலைக்கு வந்துள்ளனர். அவர்களை இந்தச் சிறுபான்மையினர் தமது இஷ்டப்படி நடத்துவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் இதைப்பற்றி பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடு கொடுத்துப் பாடசாலைக்கு வர விரும்புகிற மாணவர்களை யாரும் தடுத்து நிறுத்தாதபடி கண்காணிக்க வேண்டும்” என்று நான் உரையாற்றியபோது எனக்கு ‘ஐஸ்’ வைத்த அதே ஆசிரியர்தான் திடுமென்று எழுந்தார்.
“பொலிசுக்கு முறைப்பாடு கொடுப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும். சிறிய விஷயத்தை நீங்கள் பெரிது படுத்தக்கூடாது.” என்று எனக்கு ஆலோசனை தந்தார். மாணவர்களில் சிலராவது வந்துவிட்டால் பொலிஸ் பாதுகாப்பிலாவது பாடசாலை நடந்துவிடுமே என்று அந்த இளம் ஆசிரியர் பயப்படுவது எனக்கு விளங்கியது. இந்த ஆசிரியருக்கும் அந்த மாணவருக்கும் என்ன கோளாறு? இவர்களின் போராட்டத்தை உதாசீனம் செய்யவும் முடியாமலிருக்கிறதே! கூட்டத்தை நிறைவு செய்து ஆசிரியர்களை அனுப்பிவிட்டு உப அதிபரை மட்டும் அழைத்து அந்த ஆசிரியர் பற்றிய விபரங்களைக் கேட்டேன். உப அதிபர் தந்த தகவல்களிலிருந்து அவர் ஜீ.சீ.ஈ. சாதாரண தரம்கூடச் சரியாகச் சித்திபெறாத ஒரு தராதரப் பத்திரத்தைச் சமர்ப்பித்து எண்ணாயிரம் ரூபா நோட்டுக்களின் உதவியுடன் ஆசிரிய நியமனம் பெற்றவர் என்பதும், இடாப்பு வேலைகளைக்கூடச் சரியாகச் செய்யத் தெரியாதவர் என்பதும், வகுப்பிலேயும் இதுநாள்வரை எதையுமே கற்பித்ததில்லை என்பதும் தெளிவாயின. இப்போது துப்பு மெதுவாகத் துலங்குவது போலிருந்தது எனக்கு. இவர் இதுநாள்வரை சம்பளம் எடுத்திருக்கிறார் ‘சும்மா இருந்து! ‘சும்மா’ இருந்து, சம்பளம் எடுக்க அந்த அப்பாவி அதிபர் உதவியிருக்கிறார். என்னிடம் அந்தப் ‘பாச்சா’ பலிக்காமல் போகலாம் என்ற ஒரு சுய பயம் இந்த இளைஞரிடம் ஏற்பட்டிருக்கிறது. பாவம்
என்னுடைய ஊகம் சரியானதுதானா என்று அறிந்துகொள்ள, “அவர் வழக்கமா எத்தினை மணிக்கு ஸ்கூலுக்கு வாறவர்? பிரின்சிப்பல் என்ன ரைமுக்கு றெட் லைன் போடுறவர்?” என்று கேட்டேன். பெரிதான ஒரு சிரிப்பை உதிர்த்த உப அதிபர்,
“ஒம்பதரை மணிக்கு முதல் வந்த நாளும் கிடையாது. மூன்று மணிக்குப்பின் தங்கிய சரித்திரமும் கிடையாது. பிரின்சிப்பல் எல்லாரும் வந்த பிறகுதான் லைன் போடுறவர். பாவம் நல்ல மனுசன்…” என்றார். அப்பாவி மனிதர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள்தான். அந்த நல்ல மனிதர்களை இந்த வீரர்கள் தவறாக அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்! எந்தப் பரிமாணத்தின்படி பார்த்தாலும் ஆசிரியராக இருக்கத் தகுதியற்ற ஆசிரியர்கள்! இவர்களால் மாணவர்களும் அவ்வாறு பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்!
விரும்பிய நேரம் கல்லூரிக்கு வந்து விரும்பிய நேரம் வெளியே போய் விரும்பிய நாளெல்லாம் வீட்டில் நின்று விரும்பியதெல்லாம் செய்து பழகிய மாணவர்கள் ஓர் எல்லைக் கோட்டிற்குள் வந்து கட்டுப்பட விரும்பவில்லை. ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவுவதை விரும்பாத ஒரு சிலர் பலரையும் தம் வழியில் இழுத்துக்கொண்டு போராட… பெரும்பான்மையினரின் வேண்டுகோளுக்கு அதிகாரிகள் பணிய… வக்கரித்து உளுத்துப்போன சமுதாயம்!
நாளைக்கு இவர்கள்தான் அதிபர்களாக வரப்போகிறவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டை ஆளப்போகிறவர்கள். நாட்டின் நிலை எப்படிப் போனால் என்ன. சும்மா இருந்து சம்பளம் பெற ஒரு வேலை தேடித் தருகிற அபேட்சகருக்கே வாக்குப் பண்ணப் போகிறவர்கள்… சோம்பலையும் சுயநலத்தையும் வளர்த்துக்கொண்டு தம் வழியில் மற்றவர்களையும் இழுத்துச் செல்லப் போகிறவர்கள்.
நாளைய உலகின் சில நாயகர்களின் ஊடாக நாளைய உலகம் என் கண்களில் தெரிகிறது. ‘கல்லூரி எப்படியும் நடந்தேயாக வேண்டும். ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்ற வீம்புடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் ‘ஒன்றும் தெரியாத மாணவர்களை மீள அழைத்து வருவதற்காக நான் இன்னும் சில ஆசிரியர்களுடன் இணைந்து எனது ‘ஏசியா பைக்’கில் நேர்த்தியாகப் பறக்கிறேன்.
– இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் நடத்திய போட்டியில் பரிசு பெற்று 1982இல் அவர்கள் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.