நான் என்பது நானல்ல!
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,797
மன்னன் ஒருவன் இருந்தான். ஆணவம் மிக்கவன். அமைச்சரை அழைத்து, “”அமைச்சரே, நான் இறைவனைக் காண வேண்டும். அதற்கு என்ன வழி?” என்று கேட்டான்.
“”நம் நாட்டு எல்லையில் ஒரு மாமுனிவர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் இறைவனைக் காண வழி சொல்லுவார்” என்றார் அமைச்சர்.
அரசனும் தனது பரிவாரங்களுடன் புறப்பட்டு, முனிவர் இருந்த இடத்தை அடைந்தான்.
முனிவரும் வந்திருப்பது அரசன் என்று அறிந்தும், அறியாதது போல “”மகனே, நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?” எனப் பரிவுடன் கேட்டார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது. “”என்னைப் பார்த்தா யார் என்று கேட்கிறார்” என நினைத்தான்.
எனினும் கோபத்தை அடக்கிக் கொண்டு, “”நான் இந்நாட்டு அரசன். இறைவனைக் காண எனக்கு வழி சொல்லுங்கள்” என்று ஆணவம் கலந்த தொனியில் கேட்டான்.
“”இறைவனைக் காண வேண்டுமா? நான் செத்த பிறகு வா” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் முனிவர்.
மன்னனுக்குக் கோபம் வந்தது. “”நீங்கள் செத்த பிறகு எப்படி வர முடியும்? எப்படி என்னோடு பேசுவீர்கள்?” என்று கேட்டான்.
“”நான் என்பது நானல்ல! உன்னுள் இருக்கும் “நான்’ என்ற ஆணவம். அந்த ஆணவம் முதலில் சாக வேண்டும். அதனால்தான் நான் செத்த பிறகு வா, என்றேன். அதுவரை நீ இறைவனைக் காணும் வழியை அறிய முடியாது” என்றார் முனிவர்.
மன்னன் யோசிக்க ஆரம்பித்தான்.
நம்மை நாமே அறியாமல் இருப்பதுதான் இந்த நான் என்ற ஆணவம். நாம் எவ்வளவு சிறியவர்கள், கடவுள் எவ்வளவு பெரியவர் என்பதை உணராத அறியாமையால் ஏற்படுவதே இந்த நான் என்ற இறுமாப்பு. இந்த ஆணவம் அழிந்தால்தான் இறைவனை, ஆனந்தத்தை அடைய முடியும்!
– ஆ.ம.செந்தில் ஆறுமுகம், சாத்தான்குளம்.(செப்டம்பர் 2012)
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026