கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2025
பார்வையிட்டோர்: 1,008 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரொம்ப நாள் கழித்து, திடீரென்று ஊர்ப்பக்கம் போகவேண்டிய காரியம் ஒன்று வந்து சேர்ந்தது. அப்படியே ஊருக்கும் போவோம் என்று போனேன். 

கோவில்பட்டி போய் இறங்கியதும் நம்மூராள் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று கவனித்துக்கொண்டே போனேன். 

பலகாரக்கடையில் வைத்து மொட்டையக் கவுண்டர் பார்த்து விட்டார். “வாருமய்யா, எப்படி வந்தீர்?” என்று விசாரித்தார். பதில் சென்னேன். 

“மளெ தண்ணி உண்டா; எல்லாரும் சவுக்யமா இருக்காகளா?” என்று கேட்டேன். 

ஒரே மழைதான் என்றும் துணை. மழை இல்லை என்றும் சொல்லிவிட்டு, “என்னா சவுக்கியம்; வளக்கம்போலதாம்”, என்றார். அப்புறம் திடீரென்று ஞாபகம் வந்தவராய், ஞாபகம் வந்த மகிழ்ச்சியில் “யோவ், ஒம்ம ‘புள்ளிக்காரி’ மண்டையப் போட்டுட்டா”, என்றார். 

யாரைச் சொல்லுகிறார்? 

“யாரு காமுவா?”

“ஆமாம்”. 

செய்திகேட்ட எனக்கு வருத்தமாக இருந்தது என்று சொல்ல முடியாது. 

இதே மொட்டையக் கவுண்டர் என்னைப்போல் வெளியூரில் இருந்து வந்திருந்தாலும் நானும் அவரைப் பார்த்து இதேபோலத்தான் சொல்லியிருப்பேன். 

காமம்மா என்ற பெயருடைய அந்தப் “புள்ளிக்காரி” யாருக்கும் சொந்தமில்லை; அதே சமயத்தில் எல்லாருக்குமெ ஊரில் ஒருவகையில் – அது எந்தவகையிலானாலும் சரியே – நெருக்கமானவள்தான். 

“என்ன செஞ்சது?” 

“வயசாச்சில்லியா?” என்றார், முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு. அவர் சொல்லுகிற வயசுக் கணக்குப்படி பார்த்தால், அவரும் நானுமே எப்பவோ மண்டையைப் போட்டிருக்க வேணும்! 

அவர் சொன்னது வேற. 

அவள் கடைசியில் யாருக்குமெ வேண்டாதவளாகிவிட்டாள்; தனக்குக்கூடவே. 

அடடா; எப்பேர்க்கொத்த மகராசி அவள்! 

அப்படியும் ஒரு பெண்ணுக்கு இரக்க சித்தம் இருக்குமா? 

நினைத்துப் பார்க்கவே முடியாது யாராலும். 

பசி என்று போனால் போதும்; வயிறு ரொம்பித்தான் அங்கிருந்து திரும்பமுடியும். வயித்துப் பசியை எந்த இரக்கமுள்ள பெண்ணும் போக்கிவிட முடியும். ‘மற்ற’ அந்தப் பசியை யாரால் தீர்க்க இயலும்? அதையும் தீர்த்துவைக்க எப்பேர்க்கொத்த இரக்க சித்தம் வேணும். அது எவ்வளவு பெரிய்ய தொண்டு. 

அந்தவகையில் ஊரிலுள்ள இளவட்டுகள் மட்டுமென்ன, புகல் கிடைக்காத வயசாளிகள்வரை காமுவுக்கு கடமைப்பட்டவர்கள்தான். இதற்காக அவளை வேசி என்று யாராலும் சொல்லமுடியாது. பலனை எதிர்பாராத பரோபகாரமாகத்தான் அவள் நடந்துகொண்டாள். வயிறு குளிர்ந்ததுபோலவே மனசும் குளிர்ந்து அவளிடமிருந்து திரும்பு வார்கள். திபுதிபு என்று விரகத்தால் எரிந்துகொண்டு போனவன் உடல் குளிர்ந்து திரும்புகிறான் என்றால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம்! 

ஆனால்- 

யார் அப்படி நினைத்தார்கள்? யாருமே இல்லை! 

அவளை ஒரு பைத்தியக்காரி என்றும் பொகல்கெட்டவள் என்றும்தான் நினைத்தார்கள். 

ஒருவேளை அவள் காசு வாங்கியிருந்தால் அப்படி நினைக்க மாட்டார்களோ? செல்லையனாசாரி சொல்லுவார்: ‘அந்தப் பட்டறையில் படிக்காத நம்மூர்ப் பிள்ளைகள் யார்?’ என்று. 

இளவெட்டுகளுக்கு அவள் புத்தி சொல்லுவாள்: 

“சரி; தம்பியாபுள்ள, போ. போயி காலாகாலத்துல ஒரு கலியாணத்த முடி; இப்பிடி அலையாதெ. பெரிய குடும்பத்துப் பிள்ளைக்கு இது அளகில்ல. கிளம்பு”, என்பாள் கராலாக. 

ராமதுரை ஒருநாள் கேட்டான் அவளிடம்: “அந்தக் கிழட்டுப் பய என்னத்துக்கு வாராம் இங்க?” 

“சி; வாய மூடு. ஒனக்கு அவரு சித்தப்பா. பாவம். சம்சாரம் தவறிப் போயிட்டது; என்ன பண்ணுவாரு?”

ஊர்ப்பெண்டுகள் இவளை மோசமாகத்தான் பேசினார்கள். முகத் துக்கு எதிரே மட்டும் மரியாதை தந்ததுக்குக் காரணம் காமம்மாவின் கையில் பசை இருந்தது. 

ஊரில் எந்த வீட்டு விசேஷமானாலும் காமம்மா முதல் ஆளாக நிற்பாள். அங்கே உள்ள கடினமான வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு மாடாய் உழைப்பாள். அவர்களும் அவளிடம் செழும்பற வேலை வாங்கிக்கொண்டு முகஸ்துதியுடன் விடைகொடுத் தனுப்பிவிட்டு, அவள் தலை மறைந்தவுடன் குந்தக்கேடாகப் பேசி மகிழ்வார்கள். மோசமாகத் திட்டுவார்கள். “படுக்காளிச் சிறுக்கி; இவ வல்லைன்னு இங்க யாரு அழுதா?” என்பார்கள். 

சாவு வீடுகளில் வீட்டுச் சொந்தக்காரர்களைவிட, காமம்மாவின் அழுகுரல்தான் சத்தமாகக் கேட்கும். ஒப்புசொல்லிக் கேவிக்கேவி அப்படி மனம்விட்டு அழுவாள். எதெதெற்கோ யாராருக்கோ அவள் கதறி அழுததை நான் பலமுறை பாத்திருக்கிறேன். 

சமூகம் தன்னை வித்தியாசமாகப் பார்க்கிறது, தன் முதுகுக்குப் பின்னால் பொறணி பேசுகிறது என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். 

இளந்த மனசுடையவள்; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சுபாவமுள்ள காமம்மாவுக்கு ஊர் கொடுத்த பட்டப்பெயர் புள்ளிக்காரி. 


பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் யாராவது ஊர்க்காரர்கள் தட்டுப் படுகிறார்களா என்று பார்த்தேன். மொட்டைக் கவுண்டரோடு வேறு சிலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பார்த்ததும் என்னை விசாரித் தார்கள்; நானும் அவர்களை விசாரித்தேன். அவரவர் கவலை அவரவர்க்கு! 

பஸ் புறப்பட்டு ஓடத் தொடங்கியது. ஊரை நெருங்க நெருங்க, காமம்மாவின் நினைப்பே முழுசாக ஆக்கிரமித்தது. கரிசலின் வெக்கை. முள்மரங்களின் காட்சி. வறண்ட பூமி. இப்படியான இந்த ஊருக்குக் காமம்மா வந்து சேர்ந்ததே வித்தியாசமான கதை. 

அவள் பிறந்து வளர்ந்தது கரிசல் அல்ல; செழுமையான மண். நஞ்சையும் தோப்பும் துரவும் அரணித்த பூமி. அந்த மண்ணில் பிறந்ததனாலோ என்னவோ, அவளிடம் அப்படி ஒரு தயாள குணம். மற்றவர்க்கு ஈந்து அவர்களையும் மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்தாள். பார்த்ததுமே தெரியும்; அவளின் நிறமும் அழகும் ஜாடையும் அவள் இந்த மண்காரி இல்லை என்று. 

விதிதான் – வேற எப்படிச் சொல்ல? – அவளை இங்கே கொண்டு வந்து – உருட்டிவிட்டு விட்டது. 

பொண்ணு வண்டியிலிருந்து முதல்முதலில் அவள் இந்தத் தரையில் காலடி எடுத்து வைத்தபோது எங்கள் மதினியார்தான் அவளுடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தது. 

பிறகு மதினி சொன்னது: 

“காமம்மாவோட உள்ளங்கையில ஈரம் இருக்கு!” என்று. பெண் களுக்கு அப்படி இருப்பதில் ஏதேனும் விசேஷம் உண்டா என்று நான் மதினியாரிடம் கேட்டதுக்கு – 

“உன்னிடம் நாஞ் சொல்லமாட்டேன்; அது பொம்பளை விசயம்.” அப்படிச் சொன்னதனாலேயே அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாயிற்று. 

பின்னர்தான் தெரிந்தது; அது ஒரு பாலியல் சமாச்சாரம் என்று! காமம்மாவின் புருசனோட பெயரைச் சொல்லி மதினியார் அப்போது, “அவங் கொடுத்து வச்சவந்தாம்”, என்றும் குறிப்பிட்டது பிறகு ஞாபகத்துக்கு வந்தது. 

ஆனால், அவனுக்குக் கொடுத்துவைக்கவே இல்லை; குளத்தில் ‘கால்’கழுவப் போனவன், காக்காவலிப்பு வந்து தண்ணீரில் விழுந்தவன், செத்தே போனான். 

பதினாறாம் நாள் ‘விசேஷ’த்தின்போது காமம்மா புரட்சிக்கொடி உயர்த்தினாள்; ஊரே திகைத்தது. கண்டாங்கிச் சேலைதான் உடுத்துவேன்; வெள்ளைச்சேலையை உடுத்தவே மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்! ஊரே கலங்கியது. 

நாங்கள் சிலபேர்கள் மட்டுந்தான் காமம்மா சொல்லுவது சரிதான் என்றோம். பெண்டுகளில் வயசானவர்கள் தவிர, இளம் விதவைகள் உட்பட மற்றவர்கள் யார் பக்கமும் சேராமல் நடுநிலைமை வகித்தார்கள். பிரச்சினையைத் தீர்க்கமுடியாமல் கம்மாய்க்கரையில் ரொம்பநேரம் திணறினார்கள். வீடு திரும்பத் தாமதப்பட்டது. காகங் களுக்கு இன்னும் சோறு வைக்கப்படவில்லை. கர்ப்பிணிகளும் குழந்தைகளும் பசியோடு இருக்கிறார்கள் என்று காமம்மாவிடம் சொல்லப்பட்டது. 

ஒரு நிபந்தனையின்பேரில் காமம்மா விட்டுக்கொடுத்தாள். கரையில் இன்றுமட்டும் வெள்ளை உடுத்துகிறேன் என்றாள். 

அதன்பிறகு அவள் வெள்ளைச்சீலை உடுத்தவே இல்லை.

பின்னாட்களில், நண்பர்களோடு இவள் பேச்சு வரும் போதெல்லாம் நாங்கள் சொல்வது, “காமம்மா ஓரடி எடுத்து முன் வைத்தாள். சரிதான்; இன்னொரு அடியும் முன்னெடுத்து வைத்து, அவள் மறுமணமும் செய்துகொண்டிருக்க வேண்டும்.” 

இப்படியான விசயங்கள்பற்றி வெறும் விவாதங்கள் செய்யத்தான் இந்த ஜென்மங்களுக்குப் பொழுது இருந்ததே தவிர காரியார்த்தம் என்பது இல்லை. யாரு முன்னே வந்து, “நாங் கட்டிகிடுறேன் அவள”, என்று சொல்லி, அவள் மறுத்தாள்? 

ஈ கடிக்காமல் தேன் எடுக்கவே விரும்பினார்கள் அனைவருமே. 


வாழ்க்கை வண்டி ஒரே சீராக ஓடிக்கொண்டிருப்பதில்லை. 

மழை பொய்த்து மகசூல் வராதபோதெல்லாம் கரிசல் அல்லோல கல்லோலமாகிவிடும். இந்நிலை பல வருசங்கள் சில சமயம் தொடர்ந்து நீடிக்கும். ‘சிட்டுக்குருவி போல’ சேர்த்து வைத்திருந்த தெல்லாம் இதில் கரைந்துவிடும். 

காமம்மாவின் நிலையும் இப்படி ஆயிற்று. 

தன்னைச் சமாளித்துக்கொள்ள அவள் ஒரு சிறிய காப்பிக்கடை ஆரம்பித்தாள். 

அப்போது இரண்டாம் உலகப் பெரும்போர் நடந்துகொண்டிருந்த நேரம். 

இந்திய சுதந்திரப் போராட்டம் கடுமையாகச் சூடுபிடித்த காலம்.

அப்போதைய வெள்ளை அரசு, நாட்டை நிர்வகிக்கவும் போருக்கு ஒத்துழைக்கும்படியும் தலைவர்களையும் மக்களையும் கேட்டுக் கொண்டபோது இவர்கள் மறுத்துவிட்டதோடு, எந்தவிதத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்பதோடு நிற்காமல் மக்களிடம் போர் எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்தது அவனுக்கு மூக்குமுட்டக் கோபம் ஏற்பட்டிருந்தது. இதனால் அரசியல் அல்லாத சாதாரணக் கிரிமினல் குற்றங்களைக்கூடக் கண்மண் தெரியாமல் பயங்கரமாக ஒடுக்கி அடக்கி வந்தது. 

கிராமங்களில் எங்காவது எப்பவாவது அபூர்வமாக ஒரு கொலை விழும். குற்றத்தைக் கண்டுபிடிப்பதையோ கொலையாளியைத் தேடு வதையோ விட்டுவிட்டு, ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டுவந்து ஊரையே வளைத்துக்கொண்டு கண்ணில் தட்டுப்படுகிறவர்களை யெல்லாம் லத்தியால் அடிப்பார்கள். வீட்டைச் சேதனை செய்கிறேன் என்கிற சாக்கில் குலுக்கையிலுள்ள தானியத்தை எடுத்துக் கொட்டிக் கலந்து நாசம் பண்ணுவார்கள். பெண்டுகளை மானபங்கப்படுத்து வார்கள். கொலையாளி அவனாக வந்து சரண் அடையும்வரை அல்லது அகப்படும்வரை அந்த ஊரில் இந்தப் போலீஸ் படை வாரக் கணக்கில் தங்கியிருப்பதோடு அங்குள்ள கோழிகள் ஆடுகள் யாவும் பட்சணமாகிவிடும். முக்கியமாக, காங்கிரஸ் கட்சி எந்தக் கிராமத்தில் வேர் ஊன்றியிருக்கிறதோ கதர் கொடி எந்தக் கிராமத்தில் பறந்து கொண்டிருக்கிறதோ – அந்தக் கிராமத்தை, உண்டு இல்லை என்று ஆக்கிச் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்துவதில் போலீஸுக்குப் பரம சந்தோஷம். 

எங்கள் ஊரில் அப்போது காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருந்தது. (காங்கிரஸ் கட்சி என்றுதான் கண்ணில்படுமே தவிர அதனுள் பல கட்சிகள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ராயிஸ்டுகள் இப்படி கூட்டணி கொண்டிருந்தது இப்போது பலருக்குத் தெரியாது.) 

அந்தச் சமயத்தில்தான் எங்கள் ஊரில் அந்தக் கொலை விழுந்தது.

கொலையுண்டவன் பெரிய போக்கிரி. சமூகக் குற்றவாளி. பல தடவைகள் சிறைக்குச் சென்று வந்தவன். அவனாலும் அவனுடைய குடும்பத்தாலும் கிராமத்துக்கும் சம்சாரித்தனத்துக்கும் ஏற்பட்ட அழிவுக்கு எல்லையே கிடையாது. அவன் இப்படி இறந்ததை, ஞாயப் படி அரசே விழா எடுத்து மக்களோடு சேர்ந்து கொண்டாடியிருக்க வேண்டும். 

இவனை – இந்தத் தேட்டாள புத்திரனை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை. அது எங்களுக்கு மர்மமாக இருந்தது. அவனு டைய பகையாளிகள் யாராவது அவனைக் கொன்று இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டுப் போயிருப்பார்களா என்றும் தெரியவில்லை. 

காலையில் எழுந்திருந்து பார்த்தபோது கரைமரத்தடியில் ரத்தக் காயங்களோடு குப்புற விழுந்து செத்துக்கிடந்தான். 

நாட்டாமைக்காரர், முக்கியமானவர்களைக் கூப்பிட்டுக் கலந்தார். “என்னப்பா இது, எவஞ் செஞ்ச வேலைன்னுட்டுத் தெரியலையே. இப்ப கொஞ்சநேரத்துல ரிசர்வ் போலீஸ் பட்டாளம் வந்து சகட்டு மேனிக்கு அடிச்சு நொறுக்கி எடுத்துருவானே, இப்ப என்னப்பா செய்ய….?” என்று கேட்டார். 

பக்கத்து ஊரில் அந்தச் சமயத்தில் ஒரு கொலை விழுந்தபோது தற்செயலாக அந்த ஊருக்குப் போயிருந்த நாட்டாமைக்குப் போலீஸ் கொடுத்த ‘ஒத்தடம்’பற்றியும் அவர் சொன்னார். 

மாவட்டப் போலீஸ் அதிகாரியாக அப்போது ஓர் ஆங்கிலோ இந்தியன் இருந்தான். மக்களை வம்படியாக அடித்து நொறுக்குவதில் அப்படி ஒரு இன்பம் அவனுக்கு. 

நாட்டாமையும் மற்ற முக்கியஸ்தர்களும் அவசரமாக எடுத்த முடிவின்படி, பெண்டுகளையும் குழந்தைகளையும் தெற்கே குண்டூறணிக் காட்டுக்கு உடனே அனுப்பிவிடுவது அங்கேதான் தாகத்துக்குக் குடிக்க ஒரு மடக்காவது தண்ணீர் கிடைக்கும் என்று தீர்மானித்து, அதுக்கான ஏதுகாரங்களைச் செய்யச் சொன்னார்கள். 

பெண்டுகள் பேசிக்கொண்டே நின்றார்களே தவிர, புறப்படு வதாகக் காணோம். புறப்பட்டதும் பல சந்தேகங்கள். எண்ணங்களில் அல்லாடிக்கொண்டிருந்தபோது நேரம் ரொம்ப ஆகிவிட்டது. இவர் களைத் திட்டி, திரட்டி கூறுபண்ணி நடத்திக்கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் பாடு திண்டாடிப்போய் விட்டது. இவர்கள் இப்போதைக்குள் புறப்பட மாட்டார்கள்போலத் தெரிந்தது. அதுக்குள் தகவலும் தெரிந்துவிட்டது, போலீஸ் லாரி வந்து கொண்டிருக்கிறது என்று. கப்சிப் ஆகிவிட்டார்கள்; பேச்சு மூச்சில்லை. ஒருத்தி அழவும், அதைப் பார்த்தபிறகுதான் மற்றவர்க்கும் அழ வேண்டும் என்ற உணர்வே வந்தது. 

கம்மாக்கரை பிள்ளையார் கோயில் அரசமரத்தின் உச்சியில் ஆடு மேய்க்கும் சின்னான் ஏறி இருந்துகொண்டு, போலீஸ் லாரி வருதா என்று கவனிக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். 

மேலே இருந்துகொண்டு அவன் சொன்னது கேட்டது: “இப்பதான் அந்த லாரி ரோட்டைவிட்டு இறங்கி நம்ம ஊரெப் பாத்து வந்துக் கிட்டிருக்கு. வேகமாத்தாம் வருது. இப்ப கொஞ்சநேரத்துக்குள்ளார வந்துரும்.” நாட்டாமைக்கும் முக்கியஸ்தர்களுக்கும் இதைக் கேட்டதும் கையும் ஓடலை, காலும் ஓடலை. அந்த நேரத்தில் பொன்னையா பிள்ளையின் மூளை வேகமாக வேலை செய்தது. நாட்டாமையைத் தனியாகக் கூப்பிட்டார். காதில் ஏதோ சொல்லி, “இப்படிச் செஞ்சா என்ன?” என்று கேட்டார். 

நாட்டாமை அதிசயமாகப் பார்த்தார்; பிள்ளைவாள் மூளையே தனி என்பதுபோல். இது சரியா வருமா என்பதுபோலக் கொஞ்சம் திகைத்தார். 

“ஒரு யோசனையும் பண்ண வேண்டாம்ன்னேன். நாஞ் சொல்ற படி பண்ணுங்க; போங்க,” என்று உத்தரவு போடும் தோரணையில் சொன்னார் பிள்ளை. 

காமம்மாவின் காப்பிக்கடையைப் பார்த்து ஓடாத குறையாக அவ்வளவு வேகமாகப் போனார் நாட்டாமை. 

“வாங்க சின்னையா.” 

“ஆமாம்”. 

“காப்பி சாப்புடுங்க.” 

“அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லம்ம; ஓங்கிட்ட அவசரமா ஒரு காரியத்துக்காக ஒடியாந்தேன்,” என்று விசயத்தைச் சொல்லிவிட்டு, “இந்தப் பொம்பளைப் புள்ளெகளையும் கொழந்தைகளையும் வெளியே காட்டுக்கு கொண்டுபோயிச் சேர்க்கந்தண்டியும் நீதான் அவனு களத் தாயக் காட்டணும். என்ன செய்வியோ ஏது செய்வியோ, எனக்குத் தெரியாது. ஊருக்குச் செய்யிற ஒவகாரமா இத நீதாஞ் செய்யணுந் தாயீ”, என்றார். 

அந்த வினாடியில் காமம்மாவுக்கு, தான் ஒரு தேவதையின் சிலையாக உயர்ந்து நிற்பதாகப் பட்டது. 

ஒரு வினாடி யோசித்தாள். 

“சரி, சித்தப்பா கவலைய விடுங்க. நானாச்சி இதுக்கு. நம்ம ஊருக்காக நா இதுகூடச் செய்யலைன்னா இருந்துதாம் என்னத்துக்கு,” என்றாள் உணர்ச்சியுடன். 


பஸ்ஸை விட்டிறங்கி, நடந்து ஊருக்குள் நான் நுழையும்போது நேரம் செங்கமங்கலாகி விட்டது. 

காமம்மாவின் வீட்டுக்கு முன்பாகத்தான் நான் கடந்து போக வேண்டும். 

அந்த வீட்டை எட்டிப் பார்க்கிறேன். 

வீட்டின் முன்தாழ்வாரக் கூரை இடிந்து சரிந்து, வாசலையே மூடியிருக்கிறது. அந்த வீட்டுக்கு இந்த ஊரைப் பார்க்கவே இஷ்டமில்லை என்பதுபோல் இருந்தது அது. 

– அக்டோபர் 1991, குமுதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *