தமிழ்க் குலம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,692 
 
 

ஒரு பழைய மலை. அதன் புதர்காட்டில் ஒரு நெல்லி மரம். அது, பல்லாண்டுகளுக்கு ஒரு முறையே பழுக்கும். அதன் கனியைத் தின்பார், காயகற்பம் உண்பவர் போன்று நீண்ட நாள் வாழ்வர்.

அத்தகைய நெல்லிக்கனி அதியமானுக்குக் கிடைத்தது. அதனைச் சாப்பிடலாம் என்று கருதி ஆசையோடு வைத்திருந்தான் அதியமான்.

அப்போது, ஒளவை அவனைக் காண வந்தாள். ஒளவையைக் கண்டதும் அதியமானுக்கு நெல்லிக்கனியின் நினைவு வந்து விட்டது!

தான் வைத்திருந்த நெல்லிக்கனியை அதியமான் ஒளவையிடம் கொடுத்தான். ஒளவை அதனை வாங்கி உண்டாள்….

“என்ன இனிமை, அமுதம் அமுதம்” என்றாள்.

”நான் மலையினின்று கொண்டு வந்தேன். அமுதம் போன்றது. அதனை உண்டால் நீண்ட நாட்கள் வாழ்வர்” என்றான் அதியமான்.

ஒளவை, வியப்பால் அதியமான் முகத்தைப் பார்த்தாள் . அமுதம் உண்ட களை, அவன் முகத்தில் தெறித்தது.

“அரசே, அதனை நீ உண்டு நீண்ட நாட்கள் வாழின் இரவலர் வாழ்வரே” என்றாள் ஒளவை.

தமிழை வாழ்விக்கும் புலவரே நீண்ட நாள் வாழ்தற்கு உரியர். நான் அரசன் ஆயினும் எளியன்” என்றான் அதியமான்.

ஒளவை பேச முயன்றாள். நா, தழுதழுத்தது…. கண்களில் நீர் திரையிட்டது…..

“தமிழ்க் குலம், தமிழ்க் குலம்” என்றாள்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *