ஜோசியர் வாக்கு





இன்றுடன் தன் மகன் செந்திலுக்கு ஜோசியர் சொன்ன பரிகாரம் முடிகிறது என்கிற சந்தோசத்தில் பத்மா.

பதினைந்து நாட்கள் ஜோசியர் சொன்ன பரிகாரம் செய்து விட்டு, இன்று போய் ஜோசியரை சந்திக்க வேண்டிய நாள்.
மகன் செந்தில் நன்கு படித்து வேலை கிடைக்காமல் இருந்து வருகிறான்.
பரிகாரம் செய்த அந்த பதினைந்து நாட்களில் இரு வேறு பெரிய நிறுவனத்திடம் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தும் , அதனை ஏற்க்கவில்லை செந்தில்.
காரணம் ஜோசியர் அந்த பதினைந்து நாளுக்குள் வேலை அமைந்தாலும் நீடிக்காது என்று கூறி இருந்தார்.
“செந்தில் சீக்கிரம் கிளம்பு. ஜோசியரை பார்த்து அவர் கையால ஆசிர்வாதம் வாங்கிட்டு குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வரணும். ஜோசியர்ட்ட ஆசிர்வாதமும் , அவர் தர்ற பிரசாதமம் தான் இன்னைக்கு முதல்ல நீ சாப்பிடனும். அதோட உன் கெட்டது போய் நல்லது நடக்க ஆரம்பிச்சிரும்” என்று அம்மா பத்மா கூற ,
“ஏன்டா , செந்தில் உன் அம்மாதான் ஏதோ பைத்தியகாரி மாதிரி சொல்றான்னா, நீயும் அவ சொல்றத கேட்டு சுத்துறியே. நீ படிச்ச முட்டாளா இருக்கிற. போன வாரம் வந்த வேலைக்கு போயிருக்கிலாம் , நல்ல சம்பளம் எதிர் வீட்டு பையன் சதீஷ் சேர்ந்துட்டான்.
நீ என்னடான்னா ஜோசியர் சொன்னார்னு இப்படி வந்த வேலைய விட்டு வீட்ல ரெண்டு வாரமா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிட்டு இருக்க. ஜோசியம் நம்ப கூடாதுன்னு சொல்லல. முயற்சி செய்தால் எந்த விசயத்திலும் பலன் கிடைக்கும்?” என்று செந்திலின் அப்பா ராகவன் தலையில் அடித்தபடி கூறினார்.
“வாய மூடுங்க. ஜோசியர் சொன்ன படி நடக்கும் அப்ப வாய பொளந்துட்டு பார்பீங்க” என்று ராகவனை திட்டும் விதமாக பேசினாள் பத்மா.
“செந்தில் நீ கிளம்பு. உன் அப்பா பேச்சை கேக்காத. நான் சொல்றத கேளு. அந்த ஜோசியர் நமக்கு நல்லதுக்கு தான் சொன்னார். நாம முதல்ல போயி அவர்ட்ட ஆசிர்வாதமும் , பிரசாதம் வாங்கணும். அத வாங்கிட்டு குலதெய்வ கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டா தான் உன் பரிகாரம் முடியும். வா நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புவோம்” என்று பத்மா கூறினாள்.
அம்மாவின் பேச்சை கேட்ட படி , அப்பா ராகவனை பார்த்து நக்கலாக “அப்பா இனிமே என் வாழ்க்கை மாறபோகுது. ஜோசியர்ட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து உன்ட ஆசிர்வாதம் வாங்குறேன். வர வா. வீட்ட பார்த்துகோங்க. அம்மா அவர் வீட்டு வாசலில் உள்ள சாமிக்கு ஒரு மாலை போட சொன்னார். போகும் போது மாலை ஒன்னு வாங்கிட்டு போயிருவோம்” என்று செந்தில் கூறினான்.
“ஆமா , செந்தில் , அம்மா மறந்துட்டேன். மாலை ஒன்னு வாங்கி அவர் வீட்டு வாசலில் உள்ள சாமிக்கு போட சொன்னத மறந்துட்டேன் , பார்த்தியா. நல்ல வேலை ஞாபக படுத்திட்ட” என்று பத்மா கூறினாள்.
இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினர்.
ஜோசியர் வீடு அங்கிருந்து இருபது நிமிடம் பயணம்.
ஜோசியர் வீட்டை நெருங்கினர்.
ஜோசியர் வீட்டின் முன் கூட்டம் அதிகமா தெரிந்தது.
“பார்த்தியா செந்தில் , ஜோசியர் வீட்டு முன்னாடி கூட்டம் , இத தெரியாம உங்க அப்பா வாய்சவடால் பேசுறார். ஜோசியர் பேச்சை கேக்கதிங்கன்னு நக்கல் அடிக்கிறார்” என்று பத்மா கூறினாள்.
அதற்க்கு செந்திலும் சிரித்தபடி ஆம் என்று பதில் அளித்தான்.
கையில் மாலையுடன் அவர் வீட்டு முன் சென்றால் அதிர்ச்சி.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் அந்த ஜோசியர் மாரடைப்பால் இறந்திருக்கிறார்.
“ஜோசியர் இறந்து இப்ப தான் எங்களுக்கு தகவல் தெரியும். அதுக்குள்ள உங்களுக்கு தெரிந்து மாலையோடு வந்து இருக்கிறிங்க பரவாயில்லை. போங்க போய் அந்த மனுசன பாருங்க “ என்று பக்கத்தில் இருந்த ஒரு நபர் கூறினார்.
அதனை கேட்டு பத்மா, செந்தில் இருவருக்கும் அதிர்ச்சி.
ஆசீர்வாதம் தராம போய்ட்டாரே என்ற கவலை பத்மாவுக்கு. பரிகாரம் முழுசா முடிகாம போய்ட்டாரே என்ற கவலையும் சேர்ந்து இருந்தது.
சாமிக்கு என்று கொண்ட வந்த மாலை வேறு வழி இன்றி , ஜோசியர் கழுத்தில் விழுந்தது.
செந்தில் மனதில் “என்னுடைய பிரச்சனைக்கு பரிகாரம் சொன்னீர்களே , உங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரிந்து அதற்க்கு ஒரு பரிகாரம் செய்திருக்கலாமே!” என்று நினைத்து கொண்டு இருந்தான்.
அம்மாவும் மகனும் முழித்த படி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்த போது , செந்திலின் செல்போன் சிணுங்கியது.
அப்பா ராகவன் அழைப்பு. “அப்பா ரொம்ப பேசுவாரு அம்மா” என்று பத்மாவிடம் கூறி, அவரின் அழைப்பை துண்டித்தான்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.