‘ஜேட்’ வளையல்
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐம்பது வெள்ளிக்கு மேல் பல சரக்கு வாங்குவோருக்கு முருகன் தள்ளு வண்டியில் அவர்களின் வீட்டிற்கே சென்று கொடுப்பதாலேயே, சில வாடிக்கைகள் இன்னமும் விடாமல் தொடர்ந்தன. அப்படியொரு சமயம் சாலையைக் கடந்து மறுபுறமிருந்த புதிய ப்ளோக் 51ல் வசித்த டாக்டர் லிம்மின் சாமான்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் கடைக்கு அடுத்திருந்த பழைய ப்ளோக் 4லில் வசித்த ‘யிங்க் ஆயி படிகளில் உருண்டு விழந்து இடுப்பை உடைத்துக் கொண்டு ஆம்புலஸில் ஏற்றப் படுவதைக் காணவென்று நின்ற கூட்டத்தைப் பார்க்க நேர்ந்தது. ஐந்து நிமிடத்திற்கு முன் வரை பெய்து தீர்த்த பேய் மழையின் சுவடு மறைந்து மாலை வெயில் முகத்தில் அடித்தது. முருகன் அருகில் வந்தது கூடத் தெரியாமல் வலி தாங்காமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள். கந்தலாகக் கிடந்த அவளின் வலக்கரம் ஸ்ட்ரெச்சரிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதில் அன்று வாங்கிய புதுப் பொலிவோடு ஜேட் வளையல்.
கிழவிக்குக் குறைந்தது எண்பத்திரண்டு வயதிருக்கும். அதே வட்டாரத்தில் வசித்து வந்த வாண்டுகள் முதல் அவளை விடப் பெரியவர்கள் வரை வயது பாகு பாடின்றி எல்லோருக்குமே ‘ஆயி’ என்றே விளித்தனர். வலியில் துடித்து விட்டாள் பாவம். பத்துப் பன்னிரண்டு படிகள் உருண்டு விழுந்து பிழைத்ததே பேரதிசயம். பத்துப் பன்னிரண்டு படிகள் உருண்டு விழுந்து பிழைத்ததே பேரதிசயம். ஈனசுரத்தில் கதறியது இன்றும் கூட அவ்விடத்தைக் கடந்து கடந்து செல்கையில் நினைவில் மோதிமறையும். இரண்டு நாட்களுக்கு முன் கடைக்கு வந்து, “நேத்தி நடுராத்திரி பன்னெண்டு மணியோட ‘யூலன் ஜேய் முடிஞ்சு ஆவியையெல்லாம் மேலுலகத்துக்கு அனுப்பியாச்சு மிருகா”, என்று கூறிய போது ஒரு மாதம் படுக்கையில் விழப் போகிறாள் என்று யார் தான் நினைத்திருப்பர். “சாங்கி ஏர்போர்ட் போய் ஏத்தி விட்டீங்களாக்கும்?”,என்று கேலி செய்ததும் இன்று நடந்ததைப் போல நினைவில்.
வருடா வருடம் ஆவிகள் அனுபவிக்கும் ஒரு மாதக் கொண்டாட்டம் தனக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப் பட்டு வருவத்தைப் போலக் கிழவி அவ்வப்போது புலம்பி வந்தாள். சிறு குழந்தையின் ஏமாற்றமே குரலில் இருக்கும். பூவுலகில் இருப்பது அலுத்து மேலுலகத்துக்கு ஏங்கியபடியிருந்தாள். முருகனுக்கு ‘ஹொக்கெய்ன்’ சரளமாகத் தெரியுமென்ற காரணத்தால் மட்டுமில்லாமல் அவர்பால் வளர்த்துக் கொண்ட பாசத்தாலும் கிழவி அவரிடம் மட்டும் அரட்டையடிப்பாள். சொந்த இனத்தாரிடம் கூட அவளுக்கு ஏனோ ஒட்டவேயில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருமாதமும் முருகனைத் தவிர வேறு யாரும் அவளைக் காண வந்ததாகத் தெரியவில்லை. சொந்தமென்று சிலர் இருந்தும் தொடர்பில்லாமல் வருடக்கணக்கில் வாழ்ந்து விட்டிருந்தாள். சிகிச்சையின் போது வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்தாள். இரண்டு நாட்களுக்கு முருகன் கடையை மூடி விட்டு கூடவேயிருந்தார். மூன்றாம் நாள் வலி மட்டுப் பட்டதும் தான் கடையை அரை நாளுக்குத் திறந்து வைத்திருந்தார்.
வலி குறையவும் கிழவிக்குப் பேச்சு கூடியது. ” நீ யாரோ, நா யாரோ, ஆனா எனக்கிருக்கறது நீ ஒருத்தன் தான்”, என்று உணர்ச்சிக் குழம்பில் குளித்தாள். “சரி, சரி. எதுக்கதெல்லாம் இப்போ,.. நீங்க இப்ப ஓய்வெடுங்க. பேச்செல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ஆயி”, என்றவரைப் பொருட்படுத்தாமல்,” இல்ல, சொல்ல வேண்டியதச் சொல்லக் கூட முடியாமப் போயிடும் போலயிருக்கு,.. நீ சும்மாயிரு. என்னோட கொஞ்ச நேரம் பேசிட்டுப் போ”, என்றாள். “இல்ல. ஆயி, நா நாளைக்கி வரேன். இன்னிக்கு, அரிசி வருது. தவிர இன்னும் சில சரக்கெல்லாம் எறக்கறாங்க. நா நாளைக்கி வரேனே. உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க எடுத்துட்டு வரேன்,..”, என்றதும் சின்னக் குழந்தையைப் போல, எனக்கு ஒண்ணும் வேணாம்”, என்றபடி மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் மறக்காமல் அவளுக்குப் பிடித்த சோயா பாலும் உப்பு பிஸ்கட்டும் கொண்டு வர வேண்டுமென்று நினைத்த படி சிரித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் முருகன். மறுநாள் அவரைப் பார்த்ததுமே முதலில் மெய்லியைப் பற்றித்தான் விசாரித்தாள். “அவங்க யாரும் வரல்லயே ஆயி, அவங்களயெல்லாம் பாத்தே ஒரு ரெண்டு வாரமிருக்கும்,..”, என்றதும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டே ஒருக்களித்துப் படுத்த படியே உப்பு பிஸ்கட்டைப் பிரித்து ஒன்றைக் கடித்தாள்.
மருத்துவர் லிம்மின் பேத்தி மெய்லியின் மீது கிழவிக்குக் கொள்ளைப் பிரியம். லிம்மின் மகனுக்கும் மருமகளுக்கும் கிழவி தீண்டத் தகாதவள். முகத்தைச் சுளித்து சிறுமியை இழுத்துக் கொண்டு ஓடி விடவே துடிப்பர். சிறுமியைப் பார்த்ததுமே கிழவியின் இருபது வயது பூவின் உலர்ந்த இதழ்களாய் உதிர்ந்து விடும். வயதும் அனுபவமும் சுருக்கங்களாக எழுதப் பட்டிருக்கும் அவளின் முகம் மகிழ்ச்சியில் மலரும். சிரிப்பு சுருக்கங்களை மேலும் விரிக்கும். சீரில்லாமல் வளைந்தும் நெளிந்துமிருக்கும் விரல்களைக் கொண்ட கையை நீட்டிக் கூப்பிடும் கிழவி கூப்பிடுவாள். தோல் போர்த்திய எலும்புக்கையில் பொருத்தமே யில்லாத ‘ஜேட் வளையல் தான் நான்கு வயது நிரம்பியிருந்த சிறுமியின் கண்ணில் படும். கிழவி குமரியாக இருந்த காலம் முதல் கையோடு போட்டுக் கொண்டிருக்கிறாளாம். விரல் மூட்டுக் களைத் தாண்டி வரவே வராது. ஆகவே கழற்றுவதேயில்லை. சின்னக் குழந்தையாக முகம் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து மெய்லி அதையே தான் பார்ப்பாள். சில வேளைகளின் இழுத்தும் தொட்டும் கூட ரசிப்பாள்.
தாத்தாவோடு பேத்தி வரும் போது குழந்தையைத் தன் நடுங்கும் கையில் வாங்கிக் கொஞ்சி விடவும் செய்திருக்கிறாள். ஒரு வயது மெய்லி ஒரு முறை கிழவியின் நெல்லியளவுக் கொண்டையைத் தன் குட்டிக் கைகளால் பிய்த்து இழுத்து விட்டாள். பஞ்சாய் மாறியிருந்த சொற்ப முடியைப் பின்னிச் சுற்றிக் கொண்டையாகப் போட்டு அதற்குத் துளியும் சம்பந்தமேயில்லாத கருப்பு வலையை வேறு சுற்றியிருப்பாள். இது போன்ற தொட்டில் பழக்கக்கங்களை விட முடியவில்லை அவளால். மெய்லி கையில் கிடைத்த வலையைப் பூச்சியென்று பயந்து கீழே போட்டு விட்டு அழத் தொடங்கினாள். அப்போதும் கூடக் கிழவியின் கை வளையையே பார்த்துக் கொண்டு தான் அழுதாள். குழந்தைக்காகத் தன் வளையலைக் கழற்ற அப்போதெல்லாம் முயல்வாள். முயற்சி தோல்வியில் முடிய குழந்தையின் கைக்கு எட்டும் படி தன் கையையே நீட்டுவாள். ஒவ்வொரு முறையும் அவள் வாய், “உனக்குத் தான் எனக்கப் புறமா இது உனக்குத் தான் செல்லம்”, என்று கூற அலுத்ததேயில்லை.
தீபாவளி வந்து விட்டால் ஒரு டின் முறுக்கையும் ஒரே வாரத்தில் தின்று தீர்ப்பாள். கடிக்கப் பல்லில் வலுவில்லை என்பது ஒரு தடையாகவேயில்லை. பிட்டுப் பிட்டு வாயில் அதக்கி ஊற வைத்துத் தின்பாள். முருகன் அவளுக்காகவே ‘கேலாங்க் சிவன் கோவிலில் முன்பணம் செலுத்திப் பலகாரங்கள் வாங்கிக் கொடுப்பார். முன்பெல்லாம் அவரோடு கிழவியும் தீபாவளியன்று கோவிலுக்குப் போவாள். கேள்வி தொக்கி நின்ற பார்வைகளைக் கடுகளவும் பொருட்படுத்தாமல் சிவனையும் பௌத்த ஆலயத்தில் தொழும் முறையிலேயே தொழுவாள். பிறகு, அடுத்திருக்கும் புத்தராலயத்திற்கும் இருவரும் சென்று திரும்பிவிடுவர்.
ஒரு வருடமாகப் புதிதாகத் திறக்கப் பட்டிருந்த ‘நியாய விலைக் கடையில் புக்கித்மேரா வாசிகள் குவியத் தொடங்கியதி லிருந்தே கடையில் வியாபாரம் மந்தம் தான். ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்களில் பலர் பழக்கத்தை விடாமல் முருகனின் கடையிலேயே பொருட்களை வாங்கினர். சிலருக்குப் பொருட்கள் வாங்குவதை விட முருகனுடன் பேசுவதில் அதிக ஆர்வம். தவிரவும், ‘முருகன் ஸ்டோர் செய்த சில்லரை விற்பனைச் சேவை மற்ற அலங்கார அங்காடிகளில் கிடைக்கவில்லையே. அதுமட்டுமா, அங்கு வந்த வழக்கமான வாடிக்கையாளர்களில் சிலர் வருடக்கணக்காக முருகனிடம் தங்கள் தேவைகளுக்கு வந்து கொண்டிருந்தவர்கள். அதில் சிலர் பொருளை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டி விடுவர். பிறகு ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ பணத்தைக் கொடுப்பர். முருகன் நினைவில் வைத்துக் கேட்டு வாங்க வேண்டியவர்களும் சிலருண்டு.
முழு வாடகையைச் சமாளிக்க முடியாமல், சில மாதங்களுக்கு முன் தான் கடையைப் பிரித்து ஒரு பாதியைத் தான் வைத்துக் கொண்டு மறு பாதியை அட்னனுக்கு முடித் திருத்தகம் வைக்கவென்று உள் வாடகைக்கு விட்டு விட்டார் முருகன். இது தவிர விடியற்காலையிலேயே எழுந்து நபீஸா ‘பசியாற வென்று தயாரித்துக் கொண்டு வந்த பலகாரங்களை கடைக்கு முன்பு மேசையில் பரப்பி விற்கவும் ‘பிழைத்துக் கொள்ளட்டும்’ என்று விட்டு விட்டார். இப்போதெல்லாம் பலசரக்குச் சாமான்களை விட அந்தப் பலகாரங்களுக்குத் தான் காலை நேரப்பரபரப்பிலும் வட்டார மக்கள் முண்டினர். பெரும்பாலும் நபீஸாவின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்தே வந்தது. கணவன் இறந்து விட பாவம் அவள் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க பகலில் தையல் வேலையும் செய்து வந்தாள்.
முருகனுக்குக் கடையில் அன்று வேலை வழக்கத்தை விடக் குறைவாகவேயிருந்தது. “அங்கிள், யிங்க் ஆயி உங்களக் கூப்பிட்டாங்க”, என்று மைதானத்தில் விளையாடி வியர்த்திருந்த வாண்டு சொல்லி விட்டு, சொன்ன வேகத்திலேயே விளையாட்டைத் தொடர விரைந்தது. கிழவிக்கு ஒரு வருடமாகவே நேரம் சரியில்லை. ஒரு மாதம் படுத்த படுக்கையாக மருத்துவமனை வாசம் முடித்ததிலிருந்து நடக்கவே சிரமம். வீட்டிற்குள்ளேயே மெள்ள நடந்து கழிப்பறை வரை போய் வர மட்டும் முடிந்தது. ரொட்டியும் கஞ்சியும் சமூக சேவை அமைப்புக்கள் தயவில் வயிற்றுப் பாட்டை நிறைவேற்றியது. வேலையும் இல்லாமல் சேமிப்பும் இல்லாமல் அரசாங்கத்தில் சொற்ப உதவித் தொகை கொண்டு காலத்தைக் கழித்தாள். ஆனால், சுயமரியாதைக் கொன்றும் குறைச்சலேயில்லை. எப்போதாவது முருகன் கடைச் சாமானிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னால் தலையைத் தலையை ஆட்டி மறுத்து விட்டு விடுவிடுவென்று குச்சியை ஊன்றிக் கொண்டு நகர்ந்து விடுவாள்.
“ஏன் ஆயி, நீ எம்பிள்ள மாதிரி. எனக்கும் யாருமில்ல, நீதான் என்னோட காரியமெல்லாம் பார்த்துச் செய்யணும், ஒவ்வொரு வருஷமும் ‘யூலன் ஜேய் கொண்டாட்டத்துக்கு நீதான் எனக்குப் பிடிச்சதப் படைக்கணும்னெல்லாம் சொல்றீங்கள்ள, ஆனா, நா ஏதும் கொடுத்தா மட்டும் பிடிவாதமா மறுத்துடறீங்க” என்று முருகன் கேட்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே, ஏதேதோ வேறு கதைகள் பேசிப் பேச்சை மாற்றி விடுவாள்.
கீழேயிறங்கிக் கடைக்கு வர முடியவில்லை. அதில் அவளுக்குக் கழுத்து வரை குறை. அவளுக்கென்றே போடப் பட்டிருந்தது போன்ற முக்காலி ஒன்று முருகனின் கடையிலுண்டு. அது உட்கார ஆளில்லாமல் கிடந்தது. முன்பெல்லாம், அதில் உட்கார்ந்து கொண்டு,” இன்னிக்கு வியாபாரம் எப்பிடி?”, என்று ஆரம்பித்து “அந்த மூணாவது கட்டடத்துல புதுசா யாரோ நாய் வாங்கியிருக்காங்க… குட்டி போலயிருக்கு, ஒரேயடியா குரைச்சு கிட்டே இருந்துச்சி ராத்திரி முச்சூடும் “, என்றும் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பதுண்டு. இத அங்க வை, அதை இங்க வை என்றெல்லாம் அனுபவத்தினால் தான் கற்றவற்றையும் முருகனுக்குச் சொல்லிக் கொடுப்பாள்.
“ராத்திரி துரியான் சாப்புட்டேனா, ஒரே சூடாயிடுச்சு,..”, என்றுவேறு முறையிடுவாள். “பிடிச்சதையெல்லாம் வாரி வளச்சித் திங்கற வயசா உங்களுக்கு, வாயக் கட்டுங்க ஆயி”, என்றாலோ சிரித்து முழுப்புவாள். ஊர்ந்து ஊர்ந்து தடியை ஊன்றிக் கொண்டாவது, ‘மிருகா, மிருகா’, என்று கூப்பிட்டுக் கொண்டே வந்து குசலம் விசாரித்து விட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து போவோர் வருவோரையும் ஊர்வம்பையும் கண்ணையிடுக்கிக் கொண்டு பார்த்தும் கேட்டும் விட்டு இருட்டுவதற்கு முன்பு தான் வீட்டிற்குக் கிளம்புவாள்.
“நாந்தான் எங்கம்மாவுக்காகவே அம்பத்தி மூணு வயசு வரைக்கும் கல்யாணத்தப் பத்தி நெனைக்காமா இருந்துட்டு, இப்ப நாதியத்திருக்கேன். உனக்கு என்ன பிடிவாதம் ம்? நாப்பதிருக்குமா உனக்கு இப்ப வயசு? ஏய் மிருகா, நீ சீக்கிரமே ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணத்தப் பண்ணிக்கோயேன். போறதுக்கு முன்ன நானும் பாத்துட்டே போறேன். எப்படியும் அடுத்த ‘யூலன் ஜேய் க்கு நா ஆவியாத் தான் இங்க வருவேன். இது எனக்குத் தோணிக் கிட்டே தான் இருக்கு,” இப்படிச் சொல்லிச் சொல்லியே ஐந்தாறு வருடங்கள் கடந்து விட்டன.
முன்பு போல எடுபிடிக்குக் கடையில் பையனும் இல்லை. அட்னனிடம் கடையைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு கிழவி வீட்டிற்குப் படியில் ஏறினார். இருபத்திநான்கு மணிநேரமும் வீடு திறந்தேயிருக்கும். கையில் கிடந்த வெளிர் பச்சை வளையலைத் தவிர ஒன்றுமே திருடனுக்குக் கிடைக்காது என்று சிரித்துக் கொண்டே எப்போதும் சொல்வாள். மெள்ள கதவைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தார். “யாரு?” படுக்கையிலிருந்து முனகலாய் வெளிப் பட்டது கேள்வி. அறையிருட்டில் தும்பைப் பூவாய் கிழவியின் கட்டப் படாத முடி தலையணையில் தாறு மாறாகக் கிடந்தது.
“நாந்தான் முருகன்?”, என்றதுமே, “வந்துட்டயா? எனக்கு சோயாப் பால் வேணும். அங்கயிருக்கு பாரு பெரிய பெட்டி, அதுக்குள்ள செவப்பு கலர்ல சின்னப் பெட்டியில தான் காசு வச்சிருக்கேன். எடுத்துக்கோ, யாரு கிட்டையாவது கொடுத்துவிடு”, என்றாள். “காசெல்லாம் வேணா ‘ஆயி., கஞ்சி சாப்புட்டீங்களா ?”, என்றதுமே வழக்கமான புலம்பல் ஆரம்பித்து விட்டது.
“நா ஏந்தா உயிரோட இருக்கணும்”, “என்னக் கொண்டு போக மாட்டேங்கறானே”, என்று ஒரே புலம்பல். “மிருகா, தீமிதி முடிஞ்சுடுச்சா? மாரியம்மன் கோவிலுக்குப் போவணுமில்ல,..”, என்று சம்பந்தமேயில்லாமல் திடீரென்று கிழவி கேட்டாள்.
“தீமிதியா? இப்பவா? தீபாவளிக்கு முன்னாடித் தானே ஆயி வரும். இப்பத் தானே சீனப் புத்தாண்டு முடிஞ்சு ‘ஹரிராயாவே’ முடிஞ்சிருக்கு. இன்னும் ‘யூலன் ஜேய் முடியணும், அதுக்கப்பால தானே தீமிதி, தீபாவளியெல்லாம் வரும். அதெல்லாம் இருக்கட்டும். நீங்க படுத்து ஓய்வெடுங்க”, என்ற முருகனைக் கையாலேயே நிறுத்தி, “முருகா, இந்த ‘யூலன் ஜேய்’கு நான் இருக்க மாட்டேன்,. எம்மூச்சு நின்னதும்”, சிரித்துக் கொண்டே நடுவில் பேச நினைத்த வரை மறுபடியும் தடுத்து விட்டுத் தொடர்ந்தாள். “உடனேயே நீ அந்த பேங்க்குக்குப் போய் மேலதிகாரியைப் பாரு. போதும் ஒன்னோட கேலிச் சிரிப்பு,.. போயி பாப்பியா?”, என்று கட்டளை போடுவதைப் போலச் சொன்னதும் முருகன் அவளது திருப்திக்காக தலையைத் தலையை ஆட்டி வைத்தார்.
“அப்பறம் இதோ, இந்த வளையல் இத்தன வருஷம் எங் கையிலயிருந்து கழற்ற முடியாம இருந்துச்சில்ல,. இன்னிக்கு பாரேன்,.. தானா இடது கடையில் கடையில சிக்கிக் கழண்டுடுச்சு. இத ஒங்கிட்ட வச்சிக்கோ. மெய்லிக்கு கொடுத்துடு,..” என்றாள். கிழவிக்கு அரைத் துக்கமா, இல்லை நிஜமாகவே நேரம் நெருங்கி விட்டதாவென்று தெரியவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டதைப் பார்த்து குழம்பித் தான் போனார். ஆனால், கழலாத வளையல் கழன்றிருந்தது.
முன்பு மெய்லியிடம் விளையாட்டுக்குச் சொன்னதாய் அனைவரும் நம்பிய வார்த்தைகள் உள்ளத்து வார்த்தைகள்! அவளுக்காக வளையலை தன்னிடம் கொடுத்ததும் கிழவி தெளிவாய் இருப்பதையே அவருக்கு உணர்த்தியது. எந்தச் சித்ரவதையுமில்லாமல் அலுங்காமல் வளையல் கழன்றதைப் போல் உயிரும் கழன்றால் போதுமே என்று நினைத்துக் கொண்டார்.
குழந்தையைத் தட்டுவதைப் போல அவளது தோளில் சில நிமிடங்கள் தட்டிக் கொண்டிருந்தார். கிழவி உறங்கியதும், அங்கு தாறுமாறாகக் கிடந்த இரண்டு துண்டுகளையும் ஒரு உடையையும் பொருக்கி கூடைக்குள் போட்டார். அடுப்பு அணைக்கப் படாமல் எரிகிறதாவென்று வழக்கமாகச் சோதிப்பதைச் செய்து விட்டு மெதுவாக கதவைச் சாத்திக் கொண்டே வெளியேறினார். கடையில் கை தன் போக்கில் வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும் மனம் ஏனோ அடி வயிற்றிலிருந்து பிசைந்த படியிருந்தது. வயதானவள் தான், போக வேண்டியவள் தான்.
தன் தாய் இறந்த போது எப்படி உணர்ந்தார் என்று முப்பதேழு வருடம் கழித்து துளியும் நினைவில்லை என்று முதன் முறையாக உணர்ந்தார். நான்கு வயதுச் சிறுவனாய் இழப்பை அறியாமல் விளையாடிக் கொண்டு தானிருந்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டார். ‘இழப்பை உணர விதி செய்து கொடுக்கும் வழியோ! மேல் சட்டைப் பையில் கிழவியின் வளையல் இடது புறம் உறுத்தியது. தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
பிறக்கு முன்பே தந்தையை இழந்து நான்கு வயதில் ஒரே உறவான தாயையும் இழந்து ‘பார்ட்லி சாலையில் இருக்கும் இராமகிருஷ்ணா மடத்தின் ஆதரவில் வாழ்ந்து, தொழில் கல்வி பயின்று கப்பல் பட்டறையில் வேலை செய்த போது தான், ஏறக்குறைய இருபதோராண்டுகளுக்கு முன் முதலில் யிங்க் ஆயியைச் சந்தித்தார். துப்புரவுத் தொழிலாளியாகவிருந்தவளுக்கு அப்போதே தன் தாய்க் கிழவியைக் கவனிக்கும் பொறுப்பிருந்தது. முருகன் வேலையில் நாட்டம் குறைந்த போது, சேமிப்பையும் வங்கிக் கடனையும் கொண்டு மளிகைக் கடை வைத்தார். சுய தொழிலின் சுவை கண்டதும் அதையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நியாயமான முறையில் வியாபாரம் செய்தார்.
பின் மாலையில் வழக்கத்தை விட சீக்கிரமே கடையைப் பூட்டி விட்டு மாடியேறாமல், சாலையைக் கடந்து டாக்டர் லிம்மின் வீட்டிற்குச் சென்றார். நல்ல வேளை மகனும் மருமகளும் வீடு திரும்பியிருக்கவில்லை. வெளிர் பச்சை வளையலை எடுத்து நீட்டியதுமே அவர் முகத்தில் குழப்பம். “இல்லல்ல,. இப்பத் தான் சாயந்தரம் தான் ஆயி கொடுத்தாங்க, மெய்லிக்குன்னு மனசுல ரெண்டு மூணு வருஷமாவே நெனச்சி கிட்டுத் தான் இருக்காங்க”, என்றார் முருகன். திரு.லிம் தயக்கம் காட்டவே, “தயங்காதீங்க. பாப்பா மேல கெழவிக்கு ரொம்பப் பாசம். அதான்,.. மறுக்காம வாங்கிக்கங்க,” என்றதும் வாங்கிக் கொண்டார். நன்றி கூறி விடை பெற்று வீடு திரும்பும் போது மறு படியும் கிழவியைப் பார்ப்போமா என்று தோன்றியது. தூங்கட்டும் என்று மனதை மாற்றிக் கொண்டு மாடியேறிப் போய்ப் படுத்தார். காலையில் வழக்கத்திற்கு விரோதமாய் வாசற்கதவு தட்டப்பட,..
அட்னன் தான் செய்தி கொண்டு வந்தான். யிங்க் ஆயியின் மூச்சு தூக்கத்திலேயே நின்று விட்டது. வழக்கமாகக் கிழவிக்கு ரொட்டிக் கொண்டு வரும் இளம் பெண் தான் முதலில் பார்த்தாளாம். முந்தைய இரவே ஓரளவிற்கு எதிர் பார்த்திருந்ததாலோ என்னவோ முருகனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை. உடனே ஆக வேண்டியதைப் பார்க்கும் பரபரப்பே தொற்றிக் கொண்டது. உடனே வீட்டைப் பூட்டிக் கொண்டு அடுத்த கட்டடத்தை அடைந்தார். ஆயி தூங்குவதைப் போலவேயிருந்தாள். அக்கம் பக்கத்து முதியவர்கள் சிலர் கூடிவிட்டிருந்தனர். மருத்துவரை தொலைபேசியில் அழைக்கும் பொறுப்பை அட்னன் ஏற்றுக் கொண்டான். கொஞ்ச நேரத்திலேயே மருத்துவ வண்டிவந்து கிழவியைத் தூக்கிக் கொண்டு சென்றது. கடையைத் திறக்க மனமில்லாமல் வீட்டிலேயே பசியாறாமலேயே படுத்திருந்தார் முருகன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே கிழவி இறந்திருக்க வேண்டியது. ஆனால், விதி வேறு மாதிரியிருக்கவே பிழைத்துக் கொண்டாள். தனிமையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையென்று அவ்வப்போது பிதற்றினாள். ஒருநாள் குச்சியை ஊன்றிய படியே வேகவேகமாக கடைக்கு வந்து, “மிருகா, ‘ ப்ளீச் ஒரு போத்தல் குடேன்”, என்று கேட்டுக் காசை எண்ணிக் கொடுத்து விட்டு விறுவிறுவென்று போய் விட்டாள்.
முருகன் மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் மும்முரத்தில் கிழவிக்கு எதற்கு ‘ப்ளீச்’ என்று யோசிக்கவில்லை. கொஞ்ச நேரம் சென்று யோசிக்கும் போது தான் கழிப்பறையைக் கழுவப் போகிறாளோ, எங்கேயாவது விழுந்து வைக்கப் போகிறாளே என்று பயந்து கொண்டே பதற்றத்துடன் அவளின் வீட்டிற்குப் போனார். நான்காவது மாடிக்கு ஏறும் போதே கிழவியின் அலறல் கேட்டது. பதறியடித்துக் கொண்டு போனால், “மிருகா, எரியுது, அய்யோ எரியுது,. ச்சூமிங்.”, என்று விநோதமான ஒரு மிருக அழுகை. என்னவென்று விசாரித்தால், ப்ளீச்சைக் குடித்தால் உயிர் போய் விடும் என்று குடித்தாளாம். உடனேயே மருத்த வண்டி வந்து, வாரிக் கொண்டு போய் சிகிச்சைக்குப் பிறகு பிழைத்தாள். சில மாதங்களிலேயே மணிக் கட்டைக் கத்தியால் அறுத்து மறுபடியும் முயன்றாள். மீண்டும் தோற்றாள்.
மதியம் ‘சிவம் கேஸ்கெட்ஸ்’ ஸிலிருந்து தொலைபேசியில் அழைத்தனர். வங்கி ஊழியருக்குத் தகவல் கிடைத்து அவர் தான் தெரிவித்தாராம். உடனே முருகனுக்கு வங்கி அதிகாரியைப் போய் பார்க்கச் சொன்னது நினைவுக்கு வந்தது. போவோமென்று வீட்டைப் பூட்டும் போது அவரே வந்து விட்டார். பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட ‘சிவம் கேஸ்கெட்ஸ்’ நம்பர் கொடுத்து வச்சிருக்காங்க, போன் பண்ண வேண்டி ஏழெட்டு வருஷமா, ஒருவேள மட்டும் சாப்பிட்டுக் கொண்டு சிறுகச் சிறுக சேர்த்து ரெண்டு தொகையாப் போட்டு வச்சிருக்காங்க மூதாட்டி. ஒண்ணு அவங்க காரியத்துக்குன்னு. அத கேஸ்கெட்ஸ்காரங்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. இன்னொரு தொகை உங்களுக்கு. வருஷா வருஷம் நீங்க அவங்களுக்குப் படையல் போடறதுக்கான செலவுன்னு சொல்லியிருக்காங்க,.. இப்பக் காரியம் நீங்க தான் செய்யணும். செய்வீங்கன்னுதான், உங்களுக்கு சிரமமில்லாம உங்க வழக்கப் படி செய்யணும்னு ‘சிவம்’ கேஸ்கெட்ஸ் சர்விஸுக்குச் சொல்லியிருக்காங்க.”, என்று சொல்லி விட்டு கையில் ஏதேதோ காகிதங்களைத் திணித்து விட்டுப் போய் விட்டார். முருகனுக்கு அவர் தொடர்ந்து சொன்ன சொற்கள் அர்த்தமில்லாச் சத்தங்களாயின. நினைவு தெரிந்து முதல் முதலாக அவர் கன்னங்கள் நனைந்திருந்தன. தன் மேல் கிழவி வைத்திருந்த நம்பிக்கை பாசம் எல்லாவற்றை புதிதாக உணர்வதைப் போல மலைத்து நின்றார் முருகன். அவர் கையால் கிடைத்த கொள்ளியோடு தமிழர் வழக்கப் படியே கிழவியின் இறுதி யாத்திரை முடிந்தது.
மெய்லியின் அம்மாவுக்கு கிழவியின் வளையலை ஏற்றுக் கொள்ள விருப்பமேயில்லை. அதை விட அழகான வளையலைத் தானே வாங்கித் தருவதாய் மகளிடமும் குடும்பத்தாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். பலரும் பல விதமாக எடுத்துக் கூறிய பின் தன் மகளின் கையில் மாட்டி விட்டாள். ஆவியுருவிலிருக்கும் கிழவியின் கோபத்திற்குப் பயந்தே சம்மதித்திருக்கிறாள். திரு. லிம்மிடமிருந்து வளையல் மெய்லியின் கரத்தில் ஏறுவதற்குள் குடும்பத்தில் ஏகப் பட்ட வாக்கு வாதங்களாம். கடைக்கு வந்திருந்த மெய்லியின் அப்பா முருகனிடம் விவரித்தார்.
சந்திர வருடத்தின் ஏழாம் மாதமும் வந்தது. முருகன் கிழவிக்குப் பிடித்த சோயாப் பால், உப்புபிஸ்கெட் மற்றும் துரியான் பழச்சுளைகளைப் படைத்தார். கொஞ்சம் தள்ளி குத்த வைத்து மெய்லியும் தனக்குப் பிடித்ததையெல்லாம் ஆயிக்கு வைத்துக் கொண்டிருந்தாள். ஊதுவத்தியோடு, ஏற்றி வைத்திருந்த இரண்டு மெழுகுவத்திகளும் ஆடாமல் எரிந்தன. அடுத்து எரிக்கவென்று கட்டு ‘ஆவியுலக பணம் வேறு அவளருகில் தயாராய் இருந்தது. பரவாயில்லை, கிழவிக்கு ஏழை மகனொருவனும் பணக்காரப் பேத்தியொருத்தியும் கிடைத்து விட்டார்களே. கோணல் சிரிப்போடு பார்த்துக் கொண்டு தானிருப்பாள் எங்கிருந்தாவது அருவமாய். எழுந்து நின்று மெய்லி முருகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கையசைத்தாள். அம்மா கையை இடதுகையால் பிடித்துக் கொண்டு ஆட்டிய அவளின் வலது கையில் அளவில் பெரிதாய் லொடலொடவென்று முன்னும் பின்னும் ஆடியது பச்சைப் பவழவளையல்.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.